Wednesday, December 11, 2013

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 59

சில மாதங்கள் சூரிய மூலையில் இருந்து பிரசங்கங்களையும் பாடங்களையும் நடத்திக் கொண்டிருந்தார் உ.வே.சா. அங்கிருக்கும் போது தனது நிலையை விவரித்து ஆசிரியருக்கு கடிதம் எழுதுகின்றார். பின்னர் சூரிய மூலையில் ஓரளவு பணிகள் முடிந்து பொருளும் கிடைத்து அப்போதைய கடன் சுமையையும் அடைத்து விட்டு செங்கணம் புறப்படுவதற்கு முன்னரும் ஆசிரியருக்கு மீண்டும் தன் நிலையை விவரித்துக் கடிதம் எழுதுகின்றார். அவர் மனம் முழுக்க அப்போது ஆசிரியர் என்ன பாடம் நடத்திக் கொண்டிருப்பார்? என்ன நூலை இயற்றிக் கொண்டிருப்பார்? நாம் இங்கே என்ன செய்து கொண்டிருக்கின்றோம் என்ற தவிப்பு கலந்த நிலை.

தாம் கல்வி மேல் ஆசை இழந்து பொருள் நாட்டம் கொண்டு சென்று விட்டோமோ என ஆசிரியர் நினைத்து விடுவாரோ என்ற சஞ்சலமும் அவர் மனதில் வந்து அமர்ந்து கொண்டது. அதுவரை ஆசிரியருக்கு இவர் எழுதிய கடிதங்களுக்கு ஆசிரியரிடமிருந்து பதிலேதும் வரவும் இல்லை. தன் மேல் ஆசிரியருக்கு அன்பு குறைந்திருக்குமோ? இனி தாம் அவரிடம் பாடல் கேட்கவே செல்லமாட்டோம் என ஆசிரியர் நின்னைத்து விட்டாரோ?  என்ற அச்சமும் மனதில் வியாபித்திருந்தது. ஆரம்ப காலத்தில் தாம் மாணவராகச் சேர தன் தந்தையுடன் சென்ற சமயத்தில் .. 'பலரும் வந்து சேர்கின்றார்கள். ஆனால் இறுதி வரை இருப்பதில்லை' என மன வறுத்ததோடு கூறிய ஆசிரியரின் சொற்களும் காதில் வந்து ஒலித்து அவரை இம்சை செய்து கொண்டிருந்தன.

நம் மனம் தான் விசித்திரமான ஒன்றாயிற்றே. பல நேரங்களில் நம் மனமே நமக்கு எதிரியாகிப் போய்விடுவதுண்டு. ஆறுதல் கூற வேண்டிய நம் மனம் அச்சத்தால் நடுங்கி சந்தேகத்தால் குழம்பி வாடி நம்மை நிலை குலைய செய்து விடும் தன்மை படைத்தது. பயம் வந்தால் சிறிய விஷயம் கூட் பூதாகாரமாகி நம் கண்களுக்கும் மனதிற்கும் அவ்விஷயம் காட்சியளிக்கும். இப்படி இருக்குமோ .. அப்படி இருக்குமோ என சந்தேகமும் சஞ்சலமும் வந்து நம்மை ஆட்டிப் படைக்கும். உண்மை நிலையை உணரும் வரை தவித்து தத்தளித்துப் போகும் மனதை ஆற்றுப் படுத்த யாரால் முடியும் ?

தன் மனதின் ஓட்டத்தை இப்படி வடிக்கின்றார் தன் சரிதத்தில்.

என்ன இருந்து என்ன! ஆசிரியர் அன்பு இல்லாத இடம் சொர்க்கலோகமாக இருந்தால்தான் என்ன? ஆசிரியர் பிரிவாகிய வெப்பம் அந்த இடத்தைப் பாலைவனமாக்கி விட்டது. நூற்றுக்கணக்கானவர்கள் அன்பு, வைத்துப் பழகினாலும் அந்த ஒருவர் இல்லாத குறையே பெரிதாக இருந்தது. எல்லோருக்கும் முன்னே உயர்ந்த ஸ்தானத்தில் இருந்து பிரசங்கம் செய்த போதிலும் என் ஆசிரியருக்குப் பின்னே ஏடும் எழுத்தாணியுமாக நின்று அவர் ஏவல் கேட்டு ஒழுகுவதில் இருந்த இன்பத்தைக் காட்டிலும் அது பெரிதாகத் தோற்றவில்லை.

இந்த எண்ணம் வந்துவிட்ட பிறகு செங்கணத்தில் இருக்க முடியாத நிலை உ.வே.சாவிற்கு. தன் தந்தையிடம் தன் மன நிலையைக் கூறினால் அதற்கு ஏற்ற வகை பதிலோ  தந்தையிடமிருந்து கிடைக்கவில்லை. ஆனாலும் தன் முடிவில் மாற்றம் செய்யாமல் ஆசிரியரைக் காணப் புறப்படுகின்றார் உ.வே.சா. அவரது அப்போதைய நிலையை விவரிக்கும் பகுதி அச்சமயத்தில் அவரது தவிப்பை வாசிப்போர் நன்கு உணரும் வகை செய்கின்றது.

என்றைக்குப் புறப்பட்டேன், எப்படி நடந்தேன் முதலியவைகளில் எதுவும் ஞாபகத்தில் இல்லை. ஆவேசம் வந்தவனைப் போல காரையில் புறப்பட்டவன் திருவாவடுதுறைக்குச் சென்று நின்றேன். திருவாவடுதுறை எல்லையை மிதித்தபோது தான் என் இயல்பான உணர்வு எனக்கு வந்தது.

இவரை 10 மாதங்கள் காணாதிருந்த திருவாவடுதுறை மடத்து அன்பர்களும் தம்பிரான்களும் இவரது உடல் நலத்தை விசாரிக்கின்றனர். இவருக்கோ பதில் சொல்ல மனமில்லை. ஆசிரியர் எங்கே எங்கே என்றே மனமும் கண்களும் கால்களும் ஓட தேடுகின்றார். மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் ஒரு வாரத்திற்கு முன்னர் தான் திரு அம்பர் புராணம் இயற்ற அத்தலத்திற்குச் சென்றார் என்ற செய்தி கிட்டுகின்றது. இது என்ன சோதனை என சற்றே மனம் சோர்கின்றார். ஆனால் தளரவில்லை. அங்கேயிருந்து அம்பரை நோக்கி புறப்பட்டு விடுகின்றார்.

அம்பர் திருவாவடுதுறைக்கு அருகிலேயே இருக்கும் ஒரு ஊர் என்றே நினைக்கின்றேன். காலையில் புறப்பட்டு மதியமே வந்து சேர்ந்து விடுகின்றார். பிள்ளையவரகளை வரவழைத்து ஆதரித்து அம்பர் புராணம் இயற்ற ஆதரித்த செல்வந்தர் வேலுப்பிள்ளை அவர்களைத் தற்செயலாக வழியில் சந்திக்க, பிள்ளையவர்கள் இருக்கும் இடம் பற்றி தெரிய வருகின்றது. சொர்க்கபுர மண்டபத்தில் பிள்ளை இருக்கின்றார் என தெரிந்ததும் அங்கே செல்கின்றார. அது வரை உணவும் உண்ணவில்லை. ஆசிரியரைப் பார்த்த பின்னர் எல்லாம் ஆகட்டும் என்ற எண்ணம். வேலுப்பிள்ளை ஆகாரத்திற்கு ஏற்பாடு செய்யச் சொல்ல அதில் ஆர்வம் காட்டாது தூங்கிக் கொண்டிருக்கும் ஆசிரியர் அருகில் செல்கின்றார் உ.வே.சா.

இப்போது நடக்கும் உரையாடல் ஒரு அன்பின் பிரதிபலிப்பு. இதனை உ.வே.சாவின் எழுத்துக்களாலேயே வாசிப்பதே அவர்கள் இருவரின் மனதின் ஓட்டத்தையும் அன்பின் ஆழத்தையும் வாசிப்போர் புரிந்து கொள்ள உதவும் என்பதால் அப்பகுதி இதோ.


அவருடைய குளிர்ந்த அன்புப் பார்வை என் மேல் விழுந்தது.

“சாமிநாதையரா?”

“ஆம்.”

அப்பால் சில நிமிஷங்கள் இருவரும் ஒன்றும் பேசவில்லை; பேச முடியவில்லை. கண்கள் பேசிக் கொண்டன. என் கண்களில் நீர்த்துளிகள் மிதந்து பார்வையை மறைத்தன.

“சௌக்கியமா?” என்று ஆசிரியர் கேட்டார்.

“சௌக்கியம்” என்றேன். நான் ஒரு குற்றவாளியைப் போலத் தீனமான குரலில் பதில் சொன்னேன்.

“போய் அதிக நாள் இருந்து விட்டீரே!” என்று ஆசிரியர் சொன்னார்.

அதற்கு நான் என்ன பதில் சொல்வேன்! குடும்பக் கஷ்டத்தால் அவ்வாறு செய்ய நேர்ந்ததென்றும், ஒவ்வொரு நாளும் அவரை நினைந்து நினைந்து வருந்தினேனென்றும் சொன்னேன்.

“இவர் இன்னும் சாப்பிடவில்லை” என்று காரியஸ்தர் இடையே தெரிவித்தார். நான் சாப்பிடவில்லையென்பது அப்போதுதான் எனக்கு ஞாபகம் வந்தது.

“சாப்பிடவில்லையா! முன்பே சொல்லக் கூடாதா? முதலிலே போய்ச் சாப்பிட்டு வாரும்” என்று ஆசிரியர் கட்டளையிட்டார். போய் விரைவில் போஜனத்தை முடித்துக் கொண்டு வந்தேன்.

பிறகு இருவரும் பேசிக் கொண்டே இருந்தோம். பத்து மாதங்களாக அடக்கி வைத்திருந்த அன்பு கரை புரண்டு பொங்கி வழிந்தது. என் உள்ளத்தே இருந்த பசி ஒருவாறு அடங்கியது. ஆசிரியர் கடன் தொல்லையிலிருந்து நீங்கவில்லை என்று நான் தெரிந்து கொண்டேன். அம்பர்ப் புராணம் அரங்கேற்ற வந்ததற்கு அங்கே பொருளுதவி பெறலாமென்ற எண்ணமே காரணம் என்று ஊகித்து உணர்ந்தேன்.

உறவுகளுக்கிடையே தான் ஆழ்ந்த அன்பைப் பகிர்ந்து கொள்ளவும் பரிமாறிக் கொள்ளவும் முடியும் என்ற நிலை கடந்து, கருத்து ஒருமித்து மனம் லயித்துப் போன  ஜீவன்களுக்கிடையே நடக்கும் அன்பின் சம்பாஷணையாகவே இப்பகுதி என் மனதின் உணர்வுகளுக்குத் தென்படுகின்றது.

தொடரும்

சுபா
குறிப்பு : அத்தியாயம் 60 லிருந்து குறிப்புக்கள் இப்பதிவில் பயன்படுத்தப்பட்டுள்ளன.

Sunday, December 8, 2013

Robert Langdon is back..! - Battle of Marciano 13

இன்று இன்ஃபெர்னோவில் குறிப்பிடப்படும் மேலும் ஒரு ஓவியத்தைப் பற்றி விவரிக்கலாம் என நினைக்கின்றேன்.

Battle of Marciano

ப்ளோரன்ஸில் பாலாஸியோ வெச்சியோவில் உள்ள The Hall of Five Hundred  பகுதிக்குள்ளே ஒளிந்து கொண்டே தடையங்களைத் தேடிக் கொண்டிருக்கும் ரோபெர்ட், சியென்னா இருவரும் இந்த ஓவியத்தைப் பார்ப்பது போல ஒரு பகுதி அமைத்து இந்த மார்சியானோ போர் பற்றிய தகவல்களை இணைத்திருக்கின்றார் ப்ரவுன்.

ஒரு குறிப்பிட்ட பகுதியில் இருக்கும் அனைத்து ஓவியங்களுமே வஸாரியினுடையது. அதில் தனித்துவம் வாய்ந்த ஒன்றாக குறிப்பிட்டு தான் தேடிக் கொண்டு வந்த தகவல் ஒரு குறிப்பிட்ட ஓவியத்தில் இருப்பதாகச் சொல்லி சியன்னாவிடம் இந்த ஓவியத்தைக் காட்டுகின்றார். 35வது அத்தியாயத்தில் இது தொடர்பாக வாசிக்கலாம்.


courtesy: http://en.wikipedia.org/wiki/File:Scannagallo_Vasari.jpg

இத்தாலியின் டஸ்கனியில் 1554ல் நடைபெற்ற ஒரு போர்.  இப்போரில் சியென்னா அரசு ப்ளோரன்ஸ் அரசிடம் தோற்றது. இப்போரின் முடிவாக சியன்னா டஸ்கனியின் ஒரு பகுதியாகவே ஆனது. இன்று வரை அது தொடர்கின்றது.

கோஸிமோ மெடிஸி அப்போதைய பேரரசர் 5ம் சார்ல்ஸின் உதவியை நாடி இந்தப் போரில் ப்ளோரன்ஸ் அரசுக்குச் சாதகமாக உதவச் செய்து சியென்னாவை போரில் முறியடித்தார்.

இந்த ஓவியத்தில் குறிப்பாக ரோபெர்ட் தேடிக்கண்டுபிடிப்பது அந்த ஓவியத்தின் மேல் எழுதப்பட்டிருக்கும் லத்தின் எழுத்துக்கள் - Cerca Trova  என்பதே அது.

சியென்னா போர் வீரர்களின் கொடி பச்சை நிறமானது. அதில் இந்த லத்தீன் சொற்கள் பொறிக்கப்பட்டிருக்கும் வகையில் வஸாரி ஓவியத்தை உருவாக்கியிருக்கின்றார். Cerca Trova  என்ற சொல் டாண்டேயின் டிவைன் கோமிடியில் வருகின்ற ஒரு பயன்பாடு. இது மிஅக் நுணுக்கமாக சிறிய எழுத்தில் பொறிக்கப்பட்டிருக்கின்றது இவ்வோவியத்தில்.

சியென்னா படைகள்  தமது சுதந்திரத்திற்காகப் போராடுவதை வெளிப்படுத்தும் வண்ணமாக இது அமைக்கப்பட்டிருக்கின்றது. ஆனால் போரிலோ நடந்தது வேறு. சுதந்திரத்தைத் தேடுவதாகக் கொடியேந்தி போறிட்ட சியென்னா வீரர்கள் போரிலே தோல்வியைத் தழுவினர்.

கோஸிமோ மெடிஸி, தனது வெற்றியை வெளிப்படுத்தும் வகையில் வஸாரியைக் கொண்டு இந்த ஓவியத்தை உருவாக்கும் பணியை அளித்தார். அதில் தோற்றுப்போன சியென்னா படைகள் சுதந்திரம் வேண்டும் என ஏந்திய கொடிகளோடு உலவுவதைப் போல செய்வித்து அதனை கேலிக்குறியதாக ஆக்கும் வகையிலான நோக்கத்திலேயே செய்வித்தார்.

டான் ப்ரவுன் Cerca Trova வை நூலில் பயன்படுத்தியிருக்கும் வகை சுவாரஸியமானது. தோற்றுப்போனால் இறப்புதான் முடிவு. கதாநாயகன் ரோபெர்ட்டிற்கு இது தான் தோர்றுப்போனால் நடக்கும் என்னும் விஷயத்தை மறைமுகமாகச் சொல்லும் ஒரு சித்திரமாகவே இது நாவலில் காட்டப்பட்டிருக்கின்றது.

ஓவியப் பார்வை தொடரும்..

சுபா

Friday, November 15, 2013

Robert Langdon is back..- Dante! - 12

இன்ஃபெர்னோவில் வருகின்ற ஓவியங்களைப் பற்றியும் அவற்றை உருவாக்கிய கலைஞர்களைப் பற்றியும் பேசலாமே என்ற சிந்தனையில் சென்ற பதிவினை வெளியிட்டேன். இன்ஃபெர்னோ துப்பறியும் நாவலாக அமைந்த போதிலும் ரெனைஸான்ஸ் மற்றங்களில் தம்மை ஆழ ஈடுபடுத்திக் கொண்ட கலைஞர்களைப் பற்றியும் அவர்களின் படைப்புக்களைப் பற்றியும் நன்கு அறிமுகப்படுத்துகின்றது. இவ்வோவியங்களுக்கு மீண்டும் உயிர் வந்தது போல டான் ப்ரவுனின் விளக்கக் குறிப்புக்கள் அமைந்து விடுவதால் அவற்றை தேடிக் காணும் ஆர்வமும் அக்கால சூழலைப் பற்றி அறிந்து கொள்ளும் ஆர்வமும் என்னை தொற்றிக் கொண்டு விட்டன.  சென்ற பதிவில் நான் பதிந்திருந்த ஓவியத்தை நேரிலேயே ப்ளோரன்ஸ் டோமில் பார்த்திரிக்கின்றேன். டாண்டெ பற்றி அறியாது இந்த ஓவியத்தை பார்த்த போது இந்த ஓவியம் எந்த உணர்வுகளையும்  என்னுள் ஏற்படுத்தவில்லை. ஆனால் இப்போது இன்ஃபெர்னோ வாசித்து டாண்டெ பற்றி ஓரளவு அறிந்து இந்த ஓவியத்தைப் பார்க்கும் போது அக்காட்சி எனக்கு வேறு விதமாகத் தான் அமைகின்றது.

இந்த ஓவியத்தை நன்கு நுணுக்கமாக பார்த்து புரிந்து  கொள்ள விரும்புபவர்கள் இந்த வலைப்பக்கம் நிச்சயம் செல்ல வேண்டும். http://www.worldofdante.org/ The World of Dante  என்ற சிறப்பு பக்கம்  divine comedy யை அறிந்து கொள்ள விரும்புவோருக்கு சுருக்கமான விளக்கத்தை அளிப்பதாக இருக்கின்றது.  அதில் Maps & Charts  பகுதியில் நரகத்தின் படிகள் என விளக்கம் விசித்திரமாக அதே வேளே வியப்படைய வைக்கும் வகையில் நம் சிந்தனையை இட்டுச் செல்வதாக அமைந்திருக்கின்றது.

டான் ப்ரவுனின் இன்ஃபெர்னோ மீண்டும் டாண்டெயின் பெயருக்கு  ஒரு புத்துணர்ச்சியைக் கொடுத்திருக்கின்றது என்பதில் மறுப்பில்லை. Inferno Revealed என்ற தலைப்பில் ஒரு புதிய நூல் வெளிவந்திருக்கின்றது.   அது டான் ப்ரவுன் குறிப்பிடாமல் விட்ட டாண்டெ பற்றிய தகவ்ல்களை ஆராய்வதாக அமைந்திருப்பதை இதே பக்கத்தில் வாசித்து தெரிந்து கொண்டேன்.

இன்று மேலும் ஒரு ஓவியம். .. டாண்டெ!
ப்ளோரன்ஸ் டோமில் இருக்கும் அவரது ஒரு சித்திரம்


டாண்டெ!
போட்டிசெல்லி (Sandro Botticelli)  வரைந்த ஓவியம் இது. 

சுபா

Wednesday, November 13, 2013

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 58

திருப்பெருந்துறை புராணம் உருவாகிக் கொண்டிருந்த வேளையில் உடல் நலம் குன்றி உ.வே.சா அவர்கள் தமது சொந்த ஊரான உத்தமதானபுரத்திற்குச் சென்றார்கள் என்பதனையும் அறங்கேற்றத்தின் போதும் உடன் இருக்க முடியாத நிலையே அமைந்தது என்பதனையும் முந்தைய பதிவுகளில் குறிப்பிட்டிருந்தேன்.

திருப்பெருந்துறையில் தங்கியிருந்து பிள்ளையவர்கள் புராணத்தை இயற்றிக் கொண்டிருந்த வேளையில் தனக்கு உடல் நிலை மிகவும் மோசமான நிலையை அடையும் வரையிலும் செய்யுள்களை ஆசிரியர் சொல்லச் சொல்ல சுவடிகளில் எழுதி வந்தவர் உ.வே.சா தான். ஜுரம் அதிகமாகி உடல் வருத்தம் அதிகரித்து விட்ட வேளையில் தம்மால் ஆசிரியருக்கும் ஏனையோருக்கும் சிரமம் ஏற்பட்டு விடக்கூடாதே என்று உ.வே.சாவின் மனம் கலங்குகின்றது. மாணவரின் மனக்கலக்கம் ஆசிரியரையும் வாட்டுகின்றது. உ.வே.சா இந்த நிகழ்வை என் சரித்திரத்தில் இப்படிக் குறிப்பிடுகின்றார்.

இனி அங்கே இருந்தால் எல்லோருக்கும் அசௌகரிய மாயிருக்குமென்பதை உணர்ந்த நான் ஆசிரியரிடம், “என் ஊருக்குப் போய் மருந்து சாப்பிட்டுக் குணமானவுடன் திரும்பி வருகிறேன்” என்று சொன்னேன்.

அதைக் கேட்டவுடன் அவருக்குத் துக்கம் பொங்கியது. “பரமசிவம் நம்மை மிகவும் சோதனை செய்கிறார் நீர் சௌக்கியமாக இருக்கும்போது இங்கே இருந்து உதவி செய்கிறீர். இப்போது அசௌக்கியம் வந்ததென்று ஊருக்கு அனுப்புகிறோம். அசௌக்கியத்தை மாற்றுவதற்கு நம்மால் முடியவில்லை. உம்முடைய தாய் தந்தையர் என்ன நினைப்பார்களோ!” என்றார்.

ஆசிரியரிடம் திருப்பெருந்துறையில் விடைபெற்றுக் கொண்ட உ.வே.சா சில நாட்கள் பெற்றோருடன் தங்கியிருந்து உடல் நிலை சரியான பின்னர் உடனே பிள்ளையவர்களிடம் திரும்பவில்லை. குடும்ப சூழ்நிலை காரணமாக அவர் தொழில் புரிந்து பொருள் ஈட்ட வேண்டிய கட்டாயத்தில்  சில காலங்கள் புராணப் பிரசங்கம் செய்து பொருள் ஈட்ட முடிவு செய்தார். தம் தந்தையாருக்கு நன்கு அறிமுகமான செங்கணம் சென்று அங்கே  அறிந்தோர் உதவியுடன் சில காலம் புராணப்பிரசங்கம் செய்து பொருள் ஈட்டுவது குடும்ப சூழ் நிலையை சமாளிக்க உதவும்; அத்தோடு தமது திருமணத்திற்காக வாங்கிய கடனையும் தீர்த்தது போலாகும் என்று அவர் மனதில் சிந்தனை ஓடிக் கொண்டிருந்தது. கடமை ஒரு புறம் அழைத்தாலும் பொருளீட்டச் சென்று விட்டால் பிள்ளையவர்களிடம் கற்று வந்த கல்வியில் தடையேற்படுமே என்ற வருத்தமும் மனதை வாட்டாமல் இருக்கவில்லை.

நம்மில் பலருக்கும் வாழ்வில் கடந்து வந்த ஒரு அனுபவம் தான் இது. கல்வியைத் தடையின்றி தொடர்வதா? அல்லது குடும்பத்தின் பொருளாதார நிலையை கவனத்தில் கொண்டு குடும்ப பொறுப்பை எடுத்துக் கொண்டு அதனை நிறைவேற்றுவது உசிதமா? என்பது நம்மில் பலரை அவ்வப்போது வந்து தாக்கிச் செல்லும் கேள்விகளாகவே அமைந்து விடுகின்றன.  உ.வே.சாவும் இத்தகைய சூழ்நிலையில் மாட்டிக் கொண்டார். தமது அப்போதைய இந்த இக்கட்டான மன நிலையை அவர் இப்படி விவரிக்கின்றார்.

எல்லாம் உண்மைதான். ஆனால், என் தமிழ்க் கல்வி அதனோடு நின்றுவிட வேண்டியதுதானா? கிடைத்தற்கரிய பாக்கியமாகப் பிள்ளையவர்களுடைய அன்பையும் அவர் மூலமாகத் திருவாவடுதுறை யாதீனப் பழக்கத்தையும் பெற்ற பின் அவற்றை மறந்து ஊர் ஊராய் அலைந்து வாழ்வது நன்றா? இறைவன் இந்த நிலையிலே விட்டு விடுவானா?

தமிழ்ச்சேவையே தன் உயிர்மூச்சு என நினைக்கும் உ.வே.சாவை இறைவன் கைவிடுவாரா?

செங்கணம் சென்று அங்கே திருவிளையாடற்புராணத்தை பிரசங்கம் செய்வது என முடிவெடுத்து பெற்றோருடன் செங்கணம் புறப்படுகின்றார் உ.வே.சா. அத்திட்டம் அங்கே நிறைவேறவில்லையெனினும் செங்கணத்திலிருந்து புறப்பட்டு காரை எனும் ஊர் சென்று அங்கு திருவிளையாடற்புராணம் பிரசங்கம் செய்து வந்தார். காரை செல்லும் முன் செங்கணத்தில் இருக்கும் போது  தனக்கும் தன் தந்தையாருக்கும்  முன்னர் அறிமுகமான தமிழறிஞர்கள், பண்டிதர்கள் பெரியோர்கள் பலரை சந்திக்கும்படியாகின்றது. அவர்கள் எல்லோருமே இப்போது உ.வே.சா பிள்ளையவர்களின் மாணவர் என்பதை அறிந்திருந்தனர். முன்னர் அனுபவித்திராத வரவேற்பும், மதிப்பும், அன்பும், உபசரிப்பும் இப்போது மிக அதிகமாகவே கிடைக்கின்றது இவருக்கும் இவர்கள் குடும்பத்தினருக்கும். அடிப்படையிலேயே தமிழின் மேல் ஆராத பற்று கொண்டவர்கள் இம்மனிதர்கள். மீனாட்சி சுந்தரம் பிள்ளயவ்ர்களின் தமிழ்ப்புலமையும் பெருமையும் அறிந்து வியந்து போற்றி வருபவர்கள். அப்படிப்பட்ட இம்மனிதர்கள் அவரது மாணவர் ஒருவர், அதிலும் தங்கள் ஊரிலே நன்கு அறிமுகமான  ஒருவரின் குமாரன் தங்கள் ஊரிலே வந்து தங்கியிருக்கின்றார்  என்பதனை அறியும் போது அவருடன் உரையாடிய தருணங்களை இறைவன் தமக்களித்த நல்ல தருணங்களாகவே நினைத்து மகிழ்கின்றார்கள்.

நான் பிள்ளையவர்களிடம் பாடங்கேட்டவனென்பது எனக்கு ஒரு தனி மதிப்பை உண்டாக்கியது. பிள்ளையவர்களுடைய கல்விப் பெருமை, கவித்துவம் முதலியவற்றைப் பற்றி யாவரும் கதை கதையாகப் பேசினார்கள். அவரிடத்தில் தங்களுக்குத் தெரிந்த ஒருவர் மாணாக்கராக இருக்கிறாரென்பதில் அவர்கள் ஒரு திருப்தியையும் பெருமையையும் அடைந்தார்கள். ......

புக்ககம் போய் நல்ல பெயர் வாங்கிய ஒரு பெண் பிறந்த வீட்டுக்கு வந்தால் அங்குள்ளவர்கள் எவ்வளவு அன்போடும் பெருமையோடும் உபசரிப்பார்களோ அவ்வளவு உபசாரம் எனக்கு நடந்தது. நான் பிள்ளையவர்களுடைய பெருமையை எடுத்துச் சொல்லும்போதெல்லாம் திறந்தவாய் மூடாமல் அங்கேயுள்ளவர்கள் கேட்பார்கள். பிள்ளையவர்கள் இயற்றிய நூல்களிலிருந்து அரிய பாடல்களைச் சொல்லிப் பொருள் கூறும்போது என் ஆசிரியரது புலமையையும் நான் அவராற் பெற்ற பயனையும் உணர்ந்து உணர்ந்து ஆனந்தமடைந்தார்கள்.

தொடரும்...
சுபா

Monday, October 21, 2013

இலை உதிர்ந்தாலும் ..

வசந்த காலமும் கோடை காலமும் கொடுக்கும் இயற்கை அழகு மனதைக் கொள்ளைக் கொள்வது என்றாலும் இலையுதிர் காலத்தின் அழகு தனித்துவம் வாய்ந்தது.

2 வாரங்களில் மாயம் செய்தது போல பச்சை நிறத்து பசுமை வனங்கள் இந்த இலையுதிர் காலத்தில் நிறம் மாறி இலைகளை உதிர்த்து மொட்டையாகி புதுக் கோலம் தரித்துக் கொள்கின்றன. இக்காட்சியைப் பார்ப்பவர்களுக்கு அவரவர் மன நிலைக்கு ஏற்ப கற்பனை சிறகடிக்கும்.

நேற்று லியோன்பெர்க்கில் (என் வீட்டிற்கு அருகே)  சிறிய நடைப்பயணம் சென்ற போது செல்போனில் பதிந்த படங்கள் சில.. இயற்கை விரும்பிகளுக்காக !










Friday, October 18, 2013

Robert Langdon is back..- Dante Illuminating Florence with his Poem - 11

டான் ப்ரௌனின் இன்பெஃர்னோவில் ரோபெர்ட் சியென்னா இருவரும் செல்வதாக காட்டப்படும் இத்தாலியின் ப்ளோரன்ச், வெனிஸ் நகரங்களின் கட்டிடங்களையும் துருக்கிய இஸ்தான்புல் கட்டிடம் பற்றியும் முந்தைய பதிவுகளில் சில குறிப்புக்கள் கொடுத்திருந்தேன்.

இனி வரும் பதிவுகளில் இந்த நூலில் குறிப்பிடப்படும் சில முக்கிய ஓவியங்களைப் பற்றி எழுத ஆவல் எழுந்தமையால் அவ்வப்போது சில தகவல்கள் பகிர்ந்து கொள்கின்றேன்.

நூலின் இக்கால கதாநாயகன் ரோபர்ட் லாங்டென் என்றாலும் நூலினை ஆக்கிரமித்திருக்கும் முக்கிய பாத்திரம் டாண்டெ அலெக்ரி (Dante Alighieri) தான்.


Courtesy: http://mubi.com/lists/kenjis-gallery-of-great-paintings

இங்கு இணைக்கப்பட்டுள்ள சித்திரம் ப்ளோரன்ஸ் டோம் Cathedral  (Duomo) உள் சுவற்றில் இருப்பது. இந்த டோம் பற்றி முன்னர் பதிவில் குறிப்பிட்டிருக்கின்றேன்.

இப்படத்தில் டாண்டெ தன் ஒரு கையில் தனது divine comedy  நூலை  வைத்திருப்பது போலவும் நரகத்தின் வாசலுக்கு அருகில் நிற்பது போலவும் காட்டப்பட்டுள்ளது.  அவருக்குப் பின்னே ப்ளோரன்ஸ் நகரத்தில் ஏழு அடுக்குகளில் ப்ருகேட்டரி மலை இருப்பதைக் காணலாம்.

இந்த ஓவியத்தை வரைந்தவர் டோமெனிக்கோ டி மிஷெலினோ (Domenico di Michelino). இத்தாலியின் ப்ளோரன்ஸ் நகரிலேயே பிறந்து வாழ்ந்து மறைந்தவர். இவருக்குப் ப்ளோரன்ஸ் டோம் உள்ளே இந்த சித்திரத்தை ஒரு ப்ரெஸ்கோ சித்திரமாக வரையும் வாய்ப்பு அமைந்தது. இதே கத்திட்ரெலில் இன்னும் 2 படங்களையும் இக்கலைஞர் வரைந்திருக்கின்றார். அவற்றைப் பற்றி அடுத்த பதிவில் தகவல் தருகின்றேன்.

சுபா

Thursday, October 3, 2013

ஜெர்மானிய சமையல்... எப்படியிருக்கும்..? - மூஸ்லி

 4 பேருக்குத் தேவையான அளவில் மூஸ்லி தயாரிப்பு. இது காலை உணவு வகையில் அடங்கும்.


தேவையான பொருட்கள்:

  1. பால் - 1 க்ளாஸ் சூடாக்காத குளிர்ந்த பால்
  2. தேன் - விரும்பும் அளவு
  3. ஜேம் - 8 தேக்கரண்டி சிவப்பு/ கருஞ்சிவப்பு நிறத்தில் கிடைக்கும் ஸ்ட்ராபெர்ரி, ப்ளாக்பெர்ரி பழ ஜேம்
  4. தயிர் - கெட்டியான தயிர்.
  5. பழம் - உங்களுக்குப் பிடித்த ஏதாவது ஒரு பழம் - ஸ்ட்ராபெர்ரி, மாம்பழம் வாழை என எதுவானாலும் பரவாயில்லை.
  6. மூஸ்லி பாக்கெட் 300க்ராம். - மூஸ்லி கிடைக்கும் என்றே நினைக்கின்றேன். அப்படி கிடைக்கவில்லையென்றால் ஓட்ஸ், கோர்ன்ப்ஃளெக்ஸ், பாதாம், உலர்ந்த பழங்கள் ஆகியவற்றை கலந்தால் மூஸ்லி தயார். 


செய்முறை

  • கண்ணாடி பாத்திரம் அல்லது க்ளாஸ் எடுத்துக் கொள்ளுங்கள். அப்போதுதான் வர்ணங்களின் அழகு நன்கு தெரியும்.
  • முதலில் ஒரு தனி பாத்திரத்தில்  8 தேக்கரண்டி ஜேமை எடுத்து தனியாக வையுங்கள். அதனை நன்கு மசித்துக் கொள்ளுங்கள். மசித்த இந்த ஜேமை நான்கு க்ள்ஸ்களுக்குள்ளும் மெதுவாக அளவாக முதலில் இடுங்கள்.
  • மற்றொரு பாத்திரத்தில் 300க்ராம் மூஸ்லியை கொட்டி அதில் 1 க்ளாஸ் பாலை சேர்த்து 200க்ராம் தயிரைசேர்த்து கலந்து வையுங்கள். இது ஓரளவு கெட்டியாக இருக்கும் படி பார்த்துக் கொள்ளுங்கள். உங்கள் தயிர் மிக மெல்லியதாக இருந்தால் பால் சேர்க்க வேண்டாம். இங்கு கெட்டித் தயிர் கிடைப்பதால் நான் பாலும் சேர்க்கின்றேன்.
  • இப்போது ஒரு கரண்டியால் இந்த மூஸ்லிக் கலவையை ஏற்கனவே ஜேம் விட்ட க்ளாஸ்களில் மெதுவாகச் சேருங்கள். க்ளாஸில் பாதிவரும் வரை சேருங்கள்.
  • பின்னர் அதன்மேல் ஒரு கரண்டி கெட்டித்தயிரை விடுங்கள்.
  • அதன்மேல் உங்களுக்கு பிடித்த அளவு தேனை மெலிதாக ஊற்றுங்கள்.
  • அதன்மேல் உங்களுக்குப் பிடித்த ஏதாகினும் ஒரு பழத்துண்டு வைத்து விடுங்கள்.


அவ்வளவே!

செய்து 30 நிமிடங்கள் வைத்து விட்டு பின்னர் சாப்பிட்டால் சுவை மிக நன்றாக இருக்கும்.

சுபா

Thursday, September 26, 2013

Robert Langdon is back..- Church of Dante - 10

நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ரோபர்ட் லாங்டன் ஞாபகத்திற்கு வர இன்று மேலும் ஒரு பதிவு.

போபோலி கார்டனைப் பற்றி முந்தைய பதிவில் குறிப்பிட்டிருந்தேன். இன்று ஒரு தேவாலயத்தைப் பற்றியதாக இப்பதிவு.

இன்பெர்னோ கதாநாயகன் டாண்டேவின் வாழ்வில் இடம்பெற்ற முக்கிய நிகவுகளில் அவரது காதலியுடனான முதல் சந்திப்பு அவர் மனதை விட்டு அகலாத ஒன்றாகப் பதிந்து அந்த காதல்  நினைவுடனேயே இறந்தார் எனவே குறிப்புக்கள் சொல்கின்றன.. டாண்டேவின் காதலி பியாட்ரிஸ்!

டாண்டே-பியாட்ரிஸ் காதல் நிறைவேறவில்லை. டாண்டேவின் இறுதி காலம் வரை அவர் மனதை விட்டு அகலாமல் மனதில் குடிகொண்டிருந்தவர் பியாட்ரிஸ். இதனை தனது இலக்கியமான  The Devine Cemedy யிலே வெளிப்படுத்துகின்றார் டாண்டே. டாண்டேவைப் போலவே பியாட்ரிஸ் நிலையும் அதுவாகத்தான் இருக்கும் என்பதை நம்மால் ஊகிக்கத்தான் முடியும்.

பியாட்ரிஸ்

இந்தக் காதலர் முதலில் சந்தித்த நேர்ந்த இடம் ஒரு தேவாலயம். The church of Santa Margherita dei Cerchi என்பதே அது. ப்ளோரன்ஸ் நகரின் மைய வர்த்தகப் பகுதியைக் கடந்து ரயில் நிலையம் நோக்கிச் செல்ல முற்படும் போது தென்படும் ஒரு சிறு சாலையில் கட்டிடங்களுக்கிடையே அமைந்திருக்கும் ஒரு தேவாலயம் இது. டாண்டேவின் முக்கியத்துவம் அறியாமலேயே நான் சென்று பார்த்து வந்த இடம் இது எனும் போது ஒரு ஏமாற்றம் மனதில் தோன்றுகின்றது. டாண்டேவின் பின்னனியை அறிந்து கொண்டு இந்த தேவாலயத்தை பார்க்கும் போது இந்த தேவாலயத்தின் ஒவ்வொரு பகுதியும் எனக்கு ஒரு தனி கதை சொல்லும் என்பது உறுதி.

The church of Santa Margherita dei Cerchi  என அழைக்கப்பட்டாலும் Church of Dante  என்றே பரவலாக அறியப்படுவது இது.

பியாட்ரிஸ் -டாண்டே முதல் சந்திப்பு


இந்த தேவாலயம் செர்ச்சி, டோனாட்டி, அடிமாரி ஆகிய குடும்பத்தினருக்குச் சொந்தமான ஒரு தேவாலயம். இதனுள் டோனாட்டி குடும்பத்தினர் சிலரது கல்லறைகளும் உள்ளன.    டாண்டேவின் காதலி பியாட்ரிஸ் போர்ட்டினரி குடும்பத்தைச் சேர்ந்தவர். டாண்டே ஒரு குடும்ப நிகழ்வில் தான் முதல் முதலாக பியாட்ரிஸை இந்த தேவாலயத்தில் காண்கின்றார். முதல் பார்வையே காதலாக மலர்ந்ததாம். ஆனால் அவர் மணந்ததோ கெம்மா டொனாட்டி என்ற பெண்ணை. பியாட்ரிஸின் தந்தை போல்கோ போர்ட்டினரியின் கல்லறையும் இந்த தேவாலயத்தினுள்ளே இருக்கின்றது.


தேவாலயம்

1032ம் ஆண்டில் கட்டப்பட்டதாக இந்த தேவாலயம் அறியப்படுகின்றது. ஆனாலும் கட்டப்பட்டு 400 ஆண்டுகளுக்குப் பிறகு இங்கு நடைபெறும் நிகழ்வுகளும் அதற்கு மூல காரணமாக இருக்கும் டாண்டேவின் பெயரைச் சொல்லும் ஒரு சிறப்பிடமாக இந்த தேவாலயம் விளங்குவதே ஒரு தனிச்சிறப்பு.

இந்த தேவாலயத்திற்கு மேலும் ஒரு சிறப்பு உண்டு. காதலித்துக் கொண்டிருப்பவர்கள் தங்கள் காதல் நிறைவேற விரும்பி ஒரு கடிதம் எழுதி பியாட்ரிஸுக்கு தெரிவிப்பது என்பது இங்கு ஐதீகமாக இருக்கின்றது. டாண்டே-பியாட்ரிஸ் காதல் நிறைவேறாவிட்டாலும் பியாட்ரிஸ் பிறரது காதல் நிறைவேற ஆசிர்வதித்து உதவுகிறார் என்பது இங்கு நம்பிக்கையாக இருக்கின்றது.


பியட்ரிஸுக்கு காதலர்கள் அனுப்பும் வேண்டுதல் கடிதங்கள்

இன்பர்னோவில் நூலாசிரியர் ப்ரவுன், ரோபெர்ட்டும் சியன்னாவும் இங்கே சில நிமிடங்கள் செலவிடுவதைக் குறிப்பிடுகின்றார். ஐந்து நிமிடங்களே என்றாலும் அந்த 5 நிமிடங்களுக்கு அவர் தரும் விளக்கமும் இந்த தேவாலயம், டாண்டேவின் வரலாற்றுப் பின்னனி என எல்லாமுமே நம்மை இந்த தேவாலயத்தின் பால் ஓர் ஈர்ப்பைத் தரத் தவறுவதில்லை. சரி நண்பர்களே.. வாசித்து விட்டீர்களா .. இன்பெர்னோவை..??

சுபா
குறிப்பு - படங்கள் இணையத்தில் எடுக்கப்பட்டவை.

Sunday, September 22, 2013

என் வீட்டுத் தோட்டத்தில்...!

தோட்டத்திலிருந்து....

பெகோனியா மலர்..

இன்றைய நாள் இனிய நாளாக நல்வாழ்த்துக்கள்..!



சுபா

மண்ணில் விளைந்த மலர்ச்சி 
விண்ணின் கண்ணுக்கு விருந்தாகும் 
எண்ணில் திளைத்த மகிழ்ச்சி 
கண்ணில் அரும்பி மலராகும். 

*** Mohanarangan V Srirangam

Friday, September 20, 2013

என் வீட்டுத் தோட்டத்தில்...!

டாலியா மலர்கள் மலர்ந்து எழில் கொடுக்கும் காலம் இது. என் வீட்டுத் தொட்டிகளில் நட்டுவைத்தவற்றில் இரண்டு வகை டாலியாக்கள் மலர்ந்திருக்கின்றன. அதில் ஒரு செடியின் மலர்களின் படங்கள் இன்று மலர் விரும்பிகள் உங்களுக்காக..!






இன்றைய நாள் அனைவருக்கும் இனிய நாளாக மலரட்டும்.

சுபா

Tuesday, September 17, 2013

என் வீட்டுத் தோட்டத்தில்...!

அழையாத விருந்தாளிகளில் மேலும் ஒருவர்..

வண்ணத்துப்பூச்சி போல காட்சியளித்தாலும் இது வேறொரு வகை.  பறவை போல வேகமாகச் சிறகடித்து வந்து தேன் உண்ண வரும் இந்தப் பூச்சியை படம் எடுக்க செய்த முயற்சியில்  ஓரளவு வெற்றியே கிடைத்தது.

சென்ற வார இறுதியில் எடுத்த 2 படங்கள்..




சுபா

வண்ணத்தை தேர்ந்தெடுத்து

தீட்டிவைத்தவன் யார்?

அந்த தீற்றலில் உயிர் கொஞ்சம்

ஊற்றி வைத்தவன் யார்?



பச்சை நிறம் அழகு என்று

படித்து வந்தானா?

அதில் இளம்பச்சை

சேர்க்க என்று ரசித்து சென்றானா?



அதற்கென்று  சோடி நிறம்

தேர்ந்தெடுத்தானா?

மலர் மையத்தில் பொட்டு வைத்து

அதிசயித்தானா?



விருந்துண்ணா பட்டாம்புச்சிக்கு

அழைப்பு விட்டானா?

விருந்தோம்பல் செய்யவென்று

அருகில் நின்றானா?



தேடுகிறேன் அவ்விடத்தில்

அவன் இல்லையே...!

என் தேகக் கண்பார்வையிலே

படவில்லையே...!



கண்மூடும் போது

உடல் படும் காற்றானான்

கண் திறந்த போது

பதுங்கும் மழலையானான்



நேசத்தை பதுக்கி வைத்தேன்

அவன் மீதினிலே...!

அதை உணர்ந்த அவன்

அருகில் நின்றான் மனத்தேரினிலே...!



உருவம் எங்கே என்று

கேள்வி கேட்டு வைத்தேன்

அதன் இயக்கம் நானே


என்று பதில் நகை புரிந்தான்.

Thamil Selvi 

Friday, September 13, 2013

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 57

திருப்பெருந்துறை புராணம் அரங்கேற்றம் செய்யப்பட்ட இறுதி நாட்களில் உ.வே.சா மீனாட்சி சுந்தரம்பிள்ளையவர்களுடன் உடன் இருக்க வில்லை. திருப்பெருந்துறையில் ஆசிரியருடனும் ஏனைய மாணவர்களுடனும் தங்கியிருந்து ஒவ்வொரு நாளும் அரங்கேற்றம் செய்து வரும் வேளையில் இடையே உடல் நலக் குறைவு ஏற்பட திருப்பெருந்துறையில் இருந்து தேக ஆரோக்கியத்தைச் சரி செய்வதற்கும் உதவிக்கு ஏற்ற துணை இல்லாத நிலையில் ஆசிரியரிடம் விடைபெற்றுக் கொண்டு அங்கிருந்து தனது உத்தமதானபுரத்தில் பெற்றோர் இல்லத்திற்கு உ.வே.சா அவர்கள் திரும்பி விடுகின்றார்கள். அறங்கேற்றத்தின் இறுதி நாட்களில் அங்கிலாது போன நாட்கள் அவர் மனதில் பதிந்து ஆழமான வருத்ததை ஏற்படுத்தியிருக்கின்றது. உடல் நலம் தேறி ஓரளவு சரியான பிறகு உடனே அவர் ஆசிரியரிடம் திரும்பவில்லை. வீட்டில் குடும்பத்தில் ஏற்பட்ட கடன் தொல்லைகளை உடனே சீர் செய்ய வேண்டிய நிலையில் பெரம்பலூர் (இந்த நகரம் முன்னர் பெரும்புலியூர்  என அழைக்கப்பட்டது) தாலுகாவிலுள்ள காரை என்ற ஓர் ஊரில் சின்னப்பண்ணை கிருஷ்ணசாமி ரெட்டியார் மற்றும் அவர் நண்பர்களின் விருப்பத்தின்படி தங்கியிருந்து திருவிளையாடற் புராணத்தை பாடம் நடத்தி பொருளீட்டிக் கொண்டிருந்தார். பாடம் நடந்து கொண்டிருக்கும் வேளையில் ஆசிரியை மீண்டும் காணும் ஆவலில் ஓரிருமுறை திருவாவடுதுறைக்குச் சென்றும் வந்திருக்கின்றார்.

இன்றும் கூட கல்வி கற்கும் வேளையிலேயே மாணவர்கள் உழைத்து தமது தேவைகளுக்கும் குடும்பத்தார் தேவைகளுக்கும் பொருளீட்டும் நிலையைக் காண்கின்றோம். இவ்வகை முயற்சிகள் மாணவ்ர்களுக்கு நல்ல வாழ்க்கை பாடத்தையும் அளிக்கக் கூடியது என்பதை அனுபவத்தில் நானும் உணர்ந்திருக்கின்றேன். மாணவர்கள் ஏதாகிலும் ஒரு வகையில் கல்வியைக் கைவிடாது பொருளீட்டுதலையும் மேற்கொள்ளும் போது சம்பாதிக்கும் பணத்தின் அருமையை உணர்ந்தவர்களாக நிச்சயமாக இருப்போம். ஒவ்வொரு சிறு தொகையும் எத்தகைய கடின உழைப்பின் அடிப்படையில் நமக்குக் கிடைத்தது என்பதை நினைக்கும் போது அது நமக்குத் தரும் சுய நம்பிக்கைக்கு ஈடு இணை இல்லை.

திருப்பெருந்துறைப் புராணத்தின் இறுதி நாள் அரங்கேற்றம் ஒரு சுபதினத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றிருக்கின்றது. இக்குறிப்புக்களை ஸ்ரீ மீனாட்சி சுந்தரம்பிள்ளையவர்கள் வரலாறு முதலாம் பாகத்தில் விரிவாகக் காணமுடிகின்றது.  இந்த அறங்கேற்ற நிகழ்வுக்காகப் பட்டுக்கோட்டைத் தாலூகாவிலிருந்த பாலைவனம், நகரம் ஆகிய ஜமீன்களிலிருந்து பிரதிநிதிகளும், பல உத்தியோகஸ்தர்களும், நாட்டுக் கோட்டைத் தனவைசியப்பிரபுக்கள் பலரும், ஏனைய பொது மக்களும் கலந்து சிறப்பித்திருக்கின்றனர்.

புராண நூலை ஒரு தேரில் வைத்து ஊர்வலமாகக் கொண்டுவர சுப்பிரமணியத்தம்பிரான் ஏற்பாடு செய்திருந்த செய்தியையும் அறிகின்றோம். இந்தத் தேர் ஊர்வலம் ஒரு அரச குடும்பத்து திருமண வைபவம் போன்று நடைபெற்றதாம். அக்கால கட்டத்தில் ஒரு நூலுக்கு எத்தகைய மதிப்பு இருந்தது என அறிய வரும் போது அக்கால கல்விகற்றோரின் சிந்தனையை ஓரளவுக்குப் புரிந்து கொள்ள முடிகின்றது.

இந்த நூல் பூர்த்தியாகியமையால் முன்னர் வாக்குறுதி அளித்திருந்தபடியே சுப்பிரமணியத் தம்பிரான் அவர்களும் ரூபாய் இரண்டாயிரத்தைப் பிள்ளையவர்களுக்குக் கொடுத்திருக்கின்றார்கள். அத்துடன் இருந்து விடாமல் பிள்ளையவர்களின்  மாணாக்கர்கள் ஒவ்வொருவருக்கும் தனிச் சன்மானமும் மரியாதையும் செய்து அனுப்பி வைத்திருக்கின்றார். இந்தப் பணம் அனைத்தும் தம்பிரானின் சொந்தச் சம்பளத்திலிருந்து கொடுக்கப்பட்ட தொகை என்பதையும் உ.வே.சா குறிப்பிடுகின்றார்.

இவ்வளவு அன்பும் பரிவும் காட்டிய சுப்பிரமணிய தம்பிரான் அரங்கேற்றத்திற்கு முன்னர் பிள்ளையவர்களுடன் ஒரு சிறிய விஷயத்திற்காகப் பிணக்குடன் இருந்திருக்கின்றார். அதனைப் பற்றியும் கொஞ்சம் தெரிந்து கொள்வோமே!

நாள்தோறும் பகல் மூன்று தொடங்கி ஐந்து வரை அரங்கேற்றம் நடைபெறுமாம். ஒரு நாள் அப்படி இருக்கையிலே தம்பிரான் வந்து காத்திருக்க வேறு ஒரு சிலர் இன்னும் வராது இருப்பதைப் பார்த்த பிள்ளையவர்கள் அவர்களும் வந்து விடட்டுமே. சற்று பொறுத்து தொடங்கலாம் எனச் சொல்ல இது தம்பிரானை வறுத்தப் படுத்தி விட்டதாம். அதனால் அடுத்த நாட்கள் அரங்கேற்றத்திற்கு வராமல் இருந்திருக்கின்றார். எல்லோரும் வந்து காத்திருக்க தம்பிரான் வரவில்லையென்றால் தொடங்க முடியாதல்லவா? ஆக தம்பிரனைத் தேடிக் கொண்டு பிள்ளையவர்களும் உ.வே.சாவும் சென்றிருக்கின்றார்கள்.

தோட்டத்தில் பின்புறத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்த திருப்பணிகளைக் கவனித்துக் கொண்டிருந்த  தம்பிரானிடம் சென்ற இவர்களை அவர் ஏறெடுத்தும் பார்க்காமல் வேறொரு இடத்திற்குச் சென்று விட்டாராம். இதனால் மனம் உடைந்து போன பிள்ளையவர்கள் அங்கிருந்து நகர மனமில்லாமல் அங்கேயே நின்று விட்டார்களாம். ஆசிரியரின் மன நிலையை அறிந்த உ.வே.சா தம்பிரானிடம் சென்று முகத்தை வாட்டத்துடன் வைத்துக் கொண்டு பேசாமல் நின்று கொண்டிருந்திருக்கின்றார். இதனைக் கண்ட தம்பிரான்,
என்ன ஐயா? உங்கள் பிள்ளைக்கு மரியாதையே தெரியவில்ல. நான் வந்து காத்திருக்கையில் யாரோ சிலபேர்கள் வரும் வரையில் பொறுத்திருமென்று சொன்னாரே. அப்படிச் சொல்லலாமா? ஊரார் என்னை என்ன நினைப்பார்கள்? என்னை மதிப்பார்களா? அவர் செய்தது என் முகத்திற் கரியைத் தீற்றியது போல இருந்தது. அவரை புராணம் பாடும்படி செய்து அரங்கேற்றத்திற்கு வருவித்து உபசரிக்கின்றவன் நானா அவர்களா? என்று சொல்லி மண்டபத்திற்கு வராமல் நின்று விட்டாரம். இதனால் அடுத்த சில நாட்கள் திருப்பெருந்துறை புராண அரங்கேற்றம்  தடைபட்டுப் போயிருக்கின்றது. அதற்குப் பின்னர் சிலர் பேசி தம்பிரானைச் சமாதானம் செய்து பின்னர் அவர் வர எல்லாம் இனிதே நடைபெற்றிருக்கின்றது.

இறுதியில் திருப்பெருந்துறையை விட்டு பிரியும் போது இந்த பிணக்குகள் எல்லாம் மறைந்து ஆரத்தழுவி பிரியமனமில்லாமல் பிள்ளையவர்கள் சுப்பிரமணியத் தம்பிரானிடமிருந்து விடைபெற்றிருக்கின்றார்கள்.

இவ்வளவு சிறப்புக்களுடன் அரங்கேற்றம் கண்ட இத்திருப்பெருந்துறை புராண அமைப்பை பற்றிய சில தகவல்கள் கிடைக்கின்றன. முதலில் கடவுள் வாழ்த்தும் அதன் பின்னர் அவையடக்கமும் அதனை அடுத்து திருநாட்டுப் படலம் என பிள்ளையவர்கள் எழுதியிருக்கின்றார்கள். உருவம், அருவம், அருவுருவமென்னும் மூவகைத் திருமேனிகளிலே சிவபெருமானே எழுந்தருளி விளங்கும் இடமாகத் திகழ்வது திருப்பெருந்துறை.  இதனை விரிவாக்கி புராணமெங்கும் பல இடங்களில் இவ்விஷயங்கள் வரும் வகையில் இப்புராணத்தை பிள்ளையவர்கள் அமைத்தார் என்பதை உ.வே.சாவின் குறிப்புக்களிலிருந்து காண்கின்றோம்.

தொடரும்...

சுபா

Saturday, September 7, 2013

என் வீட்டுத் தோட்டத்தில்

நட்டு வைத்து நீரூற்றி பாதுகாத்து வளர்க்கும் செடிகள் பூப்பூத்து எழில் தரும் போது மனம் மகிழ்கின்றோம். நட்டுவைக்காமலேயே திடீரென்று அதிசயமாக ஒரு பூ பூத்தால் எப்படி இருக்கும்..? இதுவும் ஆச்சரியம் கலந்த மகிழ்ச்சி தானே..!

தோட்டத்தில் நேற்று பார்க்கையிலே ஒரு பெரிய காளான் முளைத்திருந்தது. செடியே பூவாக!

தாவர பிரியர்களுக்காக அக்காளான் செடியின் படங்கள்.





Friday, September 6, 2013

என் வீட்டுத் தோட்டத்தில்

இதனை டோய்ச் மொழியில் Sonnenhut  என அழைக்கின்றோம். அதாவது சூரியதொப்பி என மொழி பெயர்க்கலாம்.:-)  வெயிலுக்குத் தலையில் தொப்பி போட்டுக் கொள்கின்றோமே அது போல இது இருக்கின்றதாம். நடுப்பகுதியைப் பாருங்கள். தொப்பி போல இருக்கும். இது மிக விரிவாகப் பரவக்கூடிய ஒரு வகை தாவரம். ஒரு சிறு கொத்தாக ஐந்தாறு செடிகள் மாமனார் வீட்டிலிருந்து கொண்டு வந்து நட்டு வைத்ததேன்.  இப்போது அப்பகுதி முழுமையையும் வியாபித்துக் கொண்டு விட்டது.  இணையத்தில் பார்த்ததில் இதனை (Echinacea )டெய்சி என்றே வகைப்படுத்துகின்றனர். இதில் இளம் சிவப்பு, வெள்ளை ஆகிய வர்ணங்களும் உண்டு.


Tuesday, August 27, 2013

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 56

திருப்பெருந்துறை புராணத்தை மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் எழுதி அதனை திருப்பெருந்துறையிலேயே அறங்கேற்றம் செய்த அந்த நாட்கள் பிள்ளையவர்கள் வாழ்க்கையில் பகலும் இருளும் போலமைந்தவை. ஒரு நாள் சந்தோஷத்தைக் கொடுக்கும் ஒரு நிகழ்வு நடந்தால் மறு நாள் ஏதாகினும் ஒரு பிரச்சனையோ வருத்தம் ஏற்படுத்தும் நிகழ்வோ ஏற்பட்டு விடும். அந்த மாறி மாறி வருகின்ற சூழலிலும் செய்யுள் தொடர்ந்து இயற்றி சுப்பிரமணியத்தம்பிரானுக்குக் கொடுத்த வாக்கை நிறைவேற்றினார் பிள்ளையவர்கள். அக்கால கட்டத்தே நடந்த நிகழ்வுகள் விரிவாக என் சரித்திரம் நூலில் இல்லையென்றாலும் கூட ஸ்ரீ மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் சரித்திரம் பாகம் 2ல் இவை விரிவாகச் சொல்லப்படுகின்றன.  இப்பகுதிகளை வாசிக்கும் போது ஏதோ நூல் தானே என நினைத்து வாசித்துச் செல்ல முடியவில்லை. அவரது அக்காலத்து சோகங்களும், கஷ்டங்களும் படிக்கின்ற வாசகர்களைத் தாக்கிச் செல்வதை மறுக்க முடியவில்லை.


மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் திருவாவடுதுறை மடத்தில் இணைந்த சமயத்தில் மடத்தின் ஆதீனகர்த்தராக இருந்தவர் ஸ்ரீ அம்பலவாண தேசிகர். இவரைப் பற்றி பிள்ளையவர்கள் ஸ்ரீ அம்பலவாண தேசிகர் பிள்ளைத்தமிழ் என்ற நூல் ஒன்றினை இயற்றி இருந்தமை பற்றி முன்னர் கூறியிருந்தேன். இந்த நூலும் நமது த.ம.அ மின்னூல்கள் சேகரத்தில் இடம்பெறும் ஒன்று. அந்த நூலையும் அது பற்றிய விவரங்களையும்  இங்கே காணலாம்.  http://tamilheritagefoundation.blogspot.com.es/2013/07/thf-announcement-ebooks-update.html.

இந்த நூலை பிள்ளையவர்கள் இயற்றி தேசிகர் முன்னிலையில் அறங்கேற்றிய வேளையில் அவருக்குத்  திருவாவடுதுறை மடத்திலிருந்து ஏறுமுகத்தில் அமைந்த தங்கத்தினாலான உருத்திராட்ஷ கண்டி ஒன்று பரிசாக அளிக்கப்பட்டது. இந்தக் கண்டிதான் எப்போதெல்லாம் பொருளாதாரப் பிரச்சனைகள் பிள்ளைவர்கள் வாழ்க்கையில்  குறிக்குடுமோ அப்போதெல்லாம் பணச் சிரமம் போக்கி காத்து வந்திருக்கின்றது. பணத்திற்கு தட்டுப்பாடு வரும் போதெல்லாம் இந்த கண்டி அடமாணம் வைக்கப்படுமாம்.  ஏதாகினும் ஒரு நூல் இயற்றி பொருள் ஈட்டியபின் வட்டியும் முதலுமாகக் கொடுத்து இந்தக் கண்டியைப்  பிள்ளையவர்கள் மீட்டுக் கொள்வாராம்.

திருப்பெருந்துறைப் புராண அறங்கேற்றத்திற்குச் செல்லும் ஆசிரியர் அவ்வேளையில் அடமானம் வைக்கப்பட்டிருந்த இந்தக் கண்டியை தரித்துக் கொண்டு செல்ல வேண்டும் என மாணவர்கள் விரும்பியிருக்கின்றனர். மாணவர் விருப்பத்தை நிறைவேற்ற ஆசிரியருக்கும் ஆசை தான்; ஆனால் பணம் இல்லையென்ற நிலை. தமக்குத் தெரிந்தவரான் சோழன்மாளிகை இரத்தினம்பிள்ளையென்பாரிடம் உ.வே.சா வை அனுப்பி விவரத்தைத் தெரிவித்து கடன் கேட்டு அப்பணத்தை வட்டியுடன் தாம் சமர்ப்பித்து விடுவதாக வாக்குறுதி அளித்து பணம் வாங்கி வந்து பின்னர் அந்த கண்டியைப் பெற்று மாணவர் மனம் குளிர அதனை அணிந்து கொண்டு திருப்பெருந்துறைக்குச் சென்றிருக்கின்றார் பிள்ளையவர்கள்.

இவருக்குப் பணம் கொடுத்து உதவிய அந்த நல்ல மனம் படைத்த இரத்தினம் பிள்ளை என்பவர் `இத்தொகையைப் பிள்ளையவர்கள் திருப்பித் தரவேண்டியதில்லை. நெடுநாட்களாக  ஏதாவது ஒரு வகையில் பிள்ளையவர்களைக் கௌரவிக்க வேண்டும்` என்ற எண்ணம் இருந்தமையைத் தெரிவித்து இச்சமயத்தில் உதவ முடிந்ததில் பெரு மகிழ்ச்சியே என பிள்ளையவர்களுக்குத் தெரிவிக்குமாறு உ.வே.சாவிடம் சொல்லியனுப்பியிருக்கின்றார். அந்த நல்லுள்ளம் படைத்தவரின் அன்பில் மகிழ்ந்து பிள்ளையவர்கள் அவருக்காக ஒரு செய்யுள் இயற்றினாராம். இது பிள்ளையவர்கள் சரித்திரத்தில் பக்கம் 192ல் காணப்படுகின்றது.

ஒரு நூல் அரங்கேற்றத்திற்கு முன் நூலின் எல்லா பாடல்களையும் எழுதி முடித்து விட்டுத்தான் அறங்கேற்றத்திற்குச் செல்லவேண்டும் என்ற நிலை முன்பு இருக்கவில்லை என்றே தெரிகின்றது. நூல் ஓரளவு தயாரானதும் நூல் அறங்கேற்றம் காண உள்ள ஊரிலேயே தங்கியிருந்து ஒவ்வொரு நாளும் பாடல் இயற்றி அதனைத் தொடர்ந்து அறங்கேற்றம் செய்து வருவது வழக்கமாக இருந்திருக்கின்றது அக்காலத்தில். அந்த நிலையில் தான் திருப்பெருந்துறை புராண அறங்கேற்றமும் நடைபெற்றிருக்கின்றது.

1873ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் திருவாவடுதுறை ஆதீன கர்த்தர் ஸ்ரீசுப்பிரமணிய தேசிகரிடம் சென்று நூல் அறங்கேற்றத்திற்குச் செல்லும் முன் ஆசிபெற்றுக் கொண்டு திருப்பெருந்துறை  புறப்பட்டிருக்கின்றார் பிள்ளையவர்கள். அப்பயணத்தின் போது பிள்ளையவர்களுடன் உ.வே.சா, பழனிக்குமாரத்தம்பிரான், அரித்துவாரமங்கலம் சோமசுந்தரதேசிகர், சுப்பையாபண்டாரம், கும்பகோணம் பெரியண்ண பிள்ளை, சவேரிநாதப்பிள்ளை, தில்லை விடங்கன் வேலுசாமி பிள்ளை ஆகியோரும் உடன் சென்றிருக்கின்றனர் என்பன போன்ற விவரங்களை உ.வே.சாவின் குறிப்புக்களிலிருந்து அறிய முடிகின்றது.


தொடரும்..

சுபா

Wednesday, August 21, 2013

Robert Langdon is back..- Boboli Garden! - 9

பிட்டி மாளிகையைப் பற்றி கடந்த இழை ஒன்றில் குறிப்பிட்டிருந்தேன். இந்த மாளிகையின் பின் புறத்தின் வழியே நடக்கத் தொடங்கினால் பசுமை நிறைந்த பூங்கா ஒன்றிற்கு வந்து விடுவோம். இந்த பூங்கா ப்ளோரன்ஸ் நகரின் பெருமைகளுக்குச் சிகரம் சேர்க்கும் அமைப்புக்களில் ஒன்றாக விளங்கும் போபோலி தோட்டம் (Boboli Gardens).


அம்ஃபிதியேட்டருக்கு முன்னர் அமைந்துள்ள ஒபிலிஸ்க்குடன் காட்சியளிக்கும் போபோலி தோட்டத்தின் முன்பகுதி

ஐரோப்பாவின் எல்லா பெரிய நகரங்களிலும் ஏதாவது ஒரு இடத்தில் எகிப்தின் பண்டைய நாகரிகத்தைக் குறிக்கும் ஒபிலிஸ்க் கட்டாயம் இருக்கும். அது பாரிஸாகட்டும், மட்ரிட்டாகட்டும், பெர்லினாகட்டும் இப்படி பல நகரங்களிலும் ஒரு சிறப்பான இடத்தில் ஒபிலிஸ்க்கை வைத்து அதனைப் பார்த்து மகிழ்வதை ஐரோப்பியக் கலாச்சாரம் விடாமல் தொடர்ந்து வருகின்றது. இத்தாலியில் பல ஊர்களில் ஆங்காங்கே ஒபிலிஸ்க் வடிவங்கள் இருக்கின்றன. இவற்றில் பல எகிப்திலிருந்து கொண்டு வரப்படவில்லை என்ற போதிலும் உள்ளூர் பளிங்கிலேயே செய்யப்பட்ட ஒபிலிஸ்க் வகைகள். போபோலி தோட்டத்தின் ஆரம்பப் பகுதியிலும் ஒரு ஒபிலிஸ்க் அலங்கரிக்கின்றது. ஆனால் இங்கிருப்பதோ ரோம் நகரிலிருந்து மெடிசி குடும்பத்தினரின் மாளிகையில் வைக்கப்பட்டிருந்த எகிப்தில் செய்யப்பட்ட ஒபிலிஸ்க் ஆகும். ரெனைஸான்ஸ் மாற்றங்களுக்கு அடிப்படையாக அமைந்த மெடிசி குடும்பத்தினரின் கலைப்படைப்பு இந்த போபோலி தோட்டம். அவர்கள் இங்கேயும் ஒபிலிஸ்கை வைத்திருப்பதற்கானக் காரணம் எகிப்திய பண்டைய நாகரிகம் அளித்த சிந்தனைப் பின்புலத்தின் தேடல் தொடர்ச்சி என்பதாகத்தான் நான் காண்கின்றேன்.

பிட்டி மாளிகையின் பின்புறத்து குன்றிலிருந்து கீழிறங்கும் நிலப்பகுதியை வாங்கிய கோசிமோ எல் டி மெடிசியும் துணைவியார் எலியோனாரா டி டொலேடோவும் (Cosimo I de´ Medici, Eleonora di Toledo) இந்தப் பகுதியை மிக விரிவாக்கி இதனை போபோலி தோட்டமாக மிகப் பெரிதாக உருவாக்கினர்.


கிரேக்க கடவுள் நெப்டியூன்

இது வெறும் பூக்கள் நிறைந்த ஒரு பூந்தோட்டம் மட்டும் அன்று. மாறாக இங்குள்ள சிற்பங்களையும் மாடங்களையும், கூடங்களையும் நோக்கினால் இது ஒரு கலைக்கூடம் என்பது புரியும். அதுமட்டுமல்லாமல் இந்தக் கலைச் சிற்பத்தின் ஊடாக மெடிசி குடும்பத்தினரும் இந்தப் பூங்காவை வடிவமைத்து கட்டியமைத்த சிற்பிகளின் மனதின் வெளிப்பாடும் பண்பாட்டு மாற்றத்தைச் செய்து அதில் புரட்சி ஏற்படுத்த வேண்டும் என்னும் அவர்களின் உள்ளக்கிடக்கையும் வெளிப்படும்.

இந்தப் பூங்காவை வடிவமைத்த சிற்பிகளின் பட்டியலில் இடம் பெறுபவர்கள் ரெனைஸான்ஸ் பண்பாட்டு மாற்றத்தின் முக்கிய சிற்பிகளில் சிலரான நிக்கோலா ட்ரிபொலோ, வசாரி, பர்தலொமொ அம்மானாட்டி மற்றும் பெர்னார்டோ புவாண்டலண்டி  போன்றோர் (Niccolo Tribolo, Giorgio Vasari, Bartolomeo Ammannati, Bernardo Buontalenti ).


தோட்டத்தின் ஒரு பகுதி

இன்பெர்னோவின் ஆரம்பத்திலேயே வசாரியின் பெயரிலேயே (அது மறைமுகமாகக் குறிப்பிடப்பட்டாலும் ) தான் நூலின் முதல் பகுதியே தொடங்குகின்றது.வசாரியின் கலைப்படைப்பை பற்றி டான் ப்ரவுன் நூல் முழுக்க விவரித்துக் கொண்டே வருவதை வாசகர்கள் கவனிக்கலாம். அந்த வகையில் மிகச் சிறப்பு மிக்க புகழ்பெற்ற கலைஞரான வசாரியின் கைவண்ணத்தில் உருவாக்கப்பட்ட சிறந்த படைப்புக்களில் இந்தப் பூங்காவும் இந்தக் கலைக்கூடமும் அடங்கும் என்பது இந்த போபோலி தோட்டத்தின் சிறப்பை விளக்க பயன்படும்.

போபோலி தோட்டத்தின் அமைப்புப் பணிகள் 1550ல் தொடங்கப்பட்டன. முதல் பகுதியாக ஒரு அம்ஃபிதியேட்டர் (Amphitheatre) அமைக்கப்பட்டது. ஏறக்குறைய 500 ஆண்டுகளைக் கடந்த பின்னரும் அதன் எழில் குறையாமல் இன்னமும் மிக நேர்த்தியாக காட்சியளிக்கும் அம்ஃபிதியேட்டர்  இது.

நூலில் ஏறக்குறைய ஆறு பாகங்களில் தொடர்ச்சியாக சியன்னாவும், ரோபர்ட்டும் இந்த போபோலி தோட்டத்திற்குள் கடந்து சென்று தப்பிக்க முயல்வதையும் சான்றுகள் தேடுவதையும் போல ப்ரவுன் கதையை அமைத்திருக்கின்றார். இப்படி கதையைச் சொல்லிக் கொண்டே இந்த தோட்டத்திற்குள் இருக்கும் ரகசிய பாதை, குகை ஆகியன பற்றிய தகவல்களையும் எத்தகைய சந்தர்ப்பத்தில் இந்த ரகசியப் பாதை இன்னமும் பயன்படுத்தப்ப்படுகின்றது, யாரால் பயன்படுத்தப்படுகின்றது என்பதையும் தெளிவாக விளக்கிச் செல்கின்றார்.  நாவல் என்பதைக் கடந்து இந்த நூல் ஒரு தகவல் களஞ்சியம் என்ற் சிறப்பையும் பெறத்தக்க வகையில் அமைந்துள்ள பகுதிகளில் இவையும் அடங்கும்.

இச்சிறப்புக்களில் பலவற்றை அறியாமல் இந்தத் தோட்டத்தில் நடந்து சென்று பார்த்தை நினைக்கும் போது சற்றே மனம் வருத்தமாகத்தான் உள்ளது. மேலும் ஒரு முறை ப்ளோரன்ஸ் செல்ல வாய்ப்பு அமைந்தால் இந்த ரகசியப் பாதை உட்பட அனைத்தையும் இச்சிற்பிகளின் சிந்தனைகளோடு இணைந்து பார்த்து மகிழ விரும்புகின்றேன்.

சுபா

Friday, August 9, 2013

Robert Langdon is back..- Doge's Palace! - 8

இன்பெர்னோவை வாசிப்பவர்கள் ஒரு சினிமா படத்தைப் பார்த்துக் கொண்டிருப்பது போலவே உணர்வார்கள். அந்த வகையில் கதையின் அமைப்பை அமைத்திருக்கின்றார் ப்ரவுன். டாவின்சி கோட், ஏஞ்சல்ஸ் அண்ட் டீமன் போல இதுவும் சோனி நிறுவனத்தால் திரைப்படமாகக்கூடிய சாத்தியம் விரைவில் நிகழ உள்ளது. ஏனைய இரண்டு படங்களையும் இயக்கிய ரோன் ஹோவர்ட், தனது கதாநாயகனாகிய டோம் கேன்க்ஸை இன்பெர்னோவிற்காக பதிவு செய்திருப்பதாக அண்மையில் செய்தி வாசித்தேன். நல்லதொரு திரைப்படம் இக்கூட்டு முயற்சியில் நமக்குக் கிடைக்கும் என்பது உறுதி.

கதையில் இத்தாலியின் ப்ளோரன்ஸிலிருந்து பறந்து வெனிஸிற்குச் சென்று விடுகின்றார்கள் சியன்னாவும் ரோபர்ட்டும். அங்கு அவர்கள் தேடும் சில விஷயங்களினூடேயே தனக்கு வெனிஸ் நகரின் மேல் உள்ள காதலை ப்ரவுன் மறைக்காமல் விவரித்து விடுகின்றார்.

உலகின் ஏனைய பெரிய நகரங்களிலிருந்து தனித்துவம் வாய்ந்ததாக அமைந்திருக்கும் நகரம் வெனிஸ். இதன் சிறப்புக்களையும் அழகையும் வர்ணிக்கும் பல நூல்கள் வந்து விட்டன. இப்போது மட்டுமின்றி வரலாற்றில் பல ஆயிரம் ஆண்டுகளாக மிக பிஸியான நகரங்களில் ஒன்றாகத் திகழ்ந்து வருவது வெனிஸ். தற்சமயம் வெனிஸ் நகரம் ஐரொப்பாவின் 6 மிகப் பெரிய வர்த்தக நகரமாகக்கருதப்படுவது. வர்த்தகம் மட்டுமன்றி, கலாச்சர மையமாகவும் சீக்ரட் சொஸைட்டிகளின் முக்கிய சந்திப்பு நகரமாகவும், கிறிஸ்துவ மத மையமாகவும், சுற்றுலா நிமித்தமாகவும் என எப்போதுமே முக்கிய காரணங்களை மையமாக வைத்து பல நிகழ்வுகள் வருடத்தின் ஒவ்வொரு நாளும் இந்த நகரில் நிகழ்வது வழக்கம். இப்போதைய ஜேம்ஸ் பாண்ட் டேனியல் க்ரேய்க்கின் முதல் ஜேம்ஸ் பாண்ட் படமான கேசினோ ரோயல் இறுதிக் காட்சிகள் வெனிஸ் நகரில் படமாக்கப்பட்டமையை பலர் ஞாபகம் வைத்திருக்கலாம்.

வெனிஸில் கதையினூடே சில வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கட்டிடங்களைத்  தனது நாவலில் குறிப்பிடுகின்றார் ப்ரவுன். அதில் ஒன்று டோஜஸ் மாளிகை(Doge's Palace). இதனை நான் நேரில் பார்த்ததில்லை. அதனால் இணையத்தில் கிடைக்கும் தகவலை மாத்திரம் பார்த்து புரிந்து கொண்டேன். அந்த தகவல்களை உங்களுக்கும் வழங்குவதில் எனக்கு மகிழ்ச்சியே.



டோஜஸ் மாளிகை


இன்றைக்குக் காட்சியளிக்கும் இந்த மாளிகை 1340-1420ல் கட்டப்பட்டது என்றாலும் இதன் ஆரம்ப நிலை மாளிகை 810ல் ஏற்படுத்தப்பட்டது என்று அறியக்கிடைக்கின்றது. மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்ற அரசனின் மாளிகை இது. வெனெட்டியன் கோத்திக் வகை கட்டிட அமைப்பில் கலை வண்ணம் நிறைந்து காட்சியளிக்கும் வகையில் அமைக்கப்பட்டதொரு கட்டிடம். கொஞ்சம் அராபிய கட்டிடக் கலைகளின் தாக்கமிருப்பதையும் பார்க்கும் போதே உணரலாம்.



கோத்திக் வகை என்றாலே பெரிய அளவிலான வளைவுகளும் பூக்கள் போன்ற அமைப்புடைய சுவர்களும் தங்க நிறத்திலான சுவர் ஒரங்களும் மிகப் பிரமாண்டமான ஓவியங்களும் நிறைந்திருக்கும். இந்த மாளிகையிலேயே 24 காரட் தங்கத்தினாலான் மேல் கூறை சுவர் சித்திரங்கள் நிறைந்திருக்கின்றன. இக்கால மோடர்ன் வகை கட்டிட அமைப்பிற்கு  முற்றிலும் மாறுபட்டதொரு அமைப்பு கோத்திக் கட்டிட அமைப்பு எனலாம்.

இந்த டோஜஸ் மாளிகையில் தான் உலகின் மிகப் பெரிய ஓயில் பயிண்டிங் என வர்ணிக்கப்படும் டிண்டோரெட்டோஸ் எனப் பெயர் கொண்ட ஓவியர் வரைந்த பாரடைஸ் (paradise)  அமைக்கப்பட்டுள்ளது. நான் இணைத்திருக்கின்ற  யூடியூப் காணொளிகளில் ஒன்றில் இதனைக் காணலாம்.


ஓவியம்


மாளிகையின் வாசல் பகுதிகளின் படிகளில் மார்ஸ், நெப்டியூன் ஆகிய இரண்டு கடவுளர்களும் காவலுக்கு நிற்கும் வகையில் அமைத்திருக்கின்றார்கள்.  நிலம், நீர் இரண்டு வகையிலும் ஆளுமை செலுத்தி சக்தி படைத்ததொரு முக்கிய நகரமாக வெனிஸ் திகழ்கின்றது என்பதை இவை குறியீடாகக் காட்டுகின்றன.

உலகில் பார்ப்பதற்குத்தான் எத்தனை சிறப்பு அம்சங்கள் இருக்கின்றன என வியுப்புத்தான் மேலிடுகின்றது. நான் கட்டாயம் பார்க்க வேண்டிய கட்டிடங்களின் பட்டியலில் டோஜஸ் மாளிகையின் பெயரை இணைத்து விட்டேன்.

இரண்டு யூடியூப் விழியப் பதிவுகள். இவை இந்த மாளிகையின் எழிலை காட்டுவதில் துணை புரியும்.

http://www.youtube.com/watch?v=lLsGE3_kqsc
http://www.youtube.com/watch?v=Jh7lPFe12ao

நன்றி: http://en.wikipedia.org/wiki/Doge's_Palace,_Venice

Wednesday, August 7, 2013

Robert Langdon is back..Pitti Palace! -7

இடையில் சில நாட்கள் இந்த இழையை மறந்திருந்தேன். இன்று மாலை அலுவலகப் பணி முடித்து மட்ரிட் சாலையில் சற்றே நடைப்பயணம் சென்று கொண்டிருக்கும் போது பிரமாண்டமாகக் காட்சியளித்துக் கொண்டிருக்கும் அரச மாளிகையைப் பார்த்தபோது அதன் ஒரு பக்கச் சுவர் பகுதி ப்ளோரன்ஸ் நகரின் பிட்டி மாளிகையை நினைவுறுத்தியதில் இன்று இந்தப் பதிவு.

டான் ப்ரவுன் குறிப்பிடும் இன்பெர்னோவில் விவரிக்கப்படுகின்ற குறிப்பிடத்தக்க கட்டிடங்களில் பிட்டி மாளிகையும் (Pitti Palace) அடங்கும்.  மிக விரிவாக குறிப்பிட வில்லையென்றாலும் இந்த மாளிகை, அதனை அடுத்து வரும் பொண்டொ வெச்சியோ பாலம் ஆகியவை தொடர்ச்சியாக வரும் வகையில் நாவலை ப்ரவுன் அமைத்திருக்கின்றார்.

இத்தாலி ப்ளோரன்ஸ் நகரத்தின் ஆர்னோ நதிக்கரையை ஒட்டி அமைந்திருக்கும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும் இந்த மாளிகை வரலாற்றில் முக்கியத்துவம் பெறும் ஒன்றே.



ரெனைஸான்ஸ் பண்பாட்டு மாற்றத்துக்கு முக்கியமாகத் திகழும் மெடிசி குடும்பத்தினரின் மாளிகையாகவும் இது சில நூற்றாண்டுகள் இருந்தது.  18ம் நூற்றாண்டில் நெப்போலியனின் மிக முக்கிய படைத்தளங்களில் ஒன்றாக இது பாவிக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கத்து என்பதோடு அதன் பின்னர் ஒன்றினைக்கப்பட்ட புதிய இத்தாலியின் அதிகாரப்பூர்வ அரச மாளிகையாகவும்  இருந்தமை இந்த மாளிகையின் சிறப்பைக் குறிப்பிடும்.

இத்தகைய பெருமை வாய்ந்த இம்மாளிகை 1458ம் ஆண்டில் லூக்கா பிட்டி என்னும் வணிகரால்  கட்டப்பட்டது. இதனை வடிவமைத்தவர் புகழ்பெற்ற கட்டிடச் சிற்பி பிலிப்போ ப்ரூனலிச்சி.  1549ம் ஆண்டில் பிட்டி குடும்பத்தாரிடமிருந்து இந்த மாளிகையை ப்ஃளோரன்ஸ் நகர அரசியார் எலியுனோரா டி டொலேடொ  வாங்கிய பின்னர் இது மெடிசி குடும்ப சொத்துக்களில் ஒன்றாகியது.



ரெனைஸான்ஸ் பண்பாட்டு கலை உலகிl முக்கியப் பங்கு வகித்த மெடிசி குடும்பத்தார் இந்த மாளிகையில் உலகப் புகழ்பெற்ற பல கலை ஓவியங்களை சேகரித்துள்ளனர். இவை இன்று இம்மாளிகையில் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன. இந்த  மாளிகையில் உள்ள அறைகளில் 140 அறைகளில் மட்டுமே  அருங்காட்சியம் அமைக்கப்பட்டுள்ளது. 12 பெரிய அறைகள் மெடிசி குடும்பத்தாரின் பொருட்களை கொண்டுள்ளன. ஏனைய பல அறைகள் வெவ்வேறு வகை பயன்பாடுகளால் பொது மக்கள் பார்வைக்கு திபாறக்கப்படுவதில்லை.  இத்தாலியின் ப்ஃளோரன்ஸ் நகர் வருபவர்கள் தவிர்க்காமல் பார்க்க வேண்டிய கட்டிடங்களிலில் இந்த பிட்டி மாளிகையும் ஒன்று.

நாவலில் சியன்னாவும் ரோபர்ட்டும் தப்பித்துச் செல்லும் போது இந்த மாளிகையைக் கடந்து செல்வதாகக் குறிப்புக்களைத் தருகின்றார் ப்ரவுன். சுவாரசியமான பகுதிகள் இவை!

சுபா

Robert Langdon is back..- Palazzo Pitti (பிட்டி மாளிகை)

இடையில் சில நாட்கள் இந்த இழையை மறந்திருந்தேன். இன்று மாலை அலுவலகப் பணி முடித்து மட்ரிட் சாலையில் சற்றே நடைப்பயணம் சென்று கொண்டிருக்கும் போது பிரமாண்டமாகக் காட்சியளித்துக் கொண்டிருக்கும் அரச மாளிகையைப் பார்த்தபோது அதன் ஒரு பக்கச் சுவர் பகுதி ப்ளோரன்ஸ் நகரின் பிட்டி மாளிகையை நினைவுறுத்தியதில் இன்று இந்தப் பதிவு.

டான் ப்ரவுன் குறிப்பிடும் இன்பெர்னோவில் விவரிக்கப்படுகின்ற குறிப்பிடத்தக்க கட்டிடங்களில் பிட்டி மாளிகையும் (Pitti Palace) அடங்கும்.  மிக விரிவாக குறிப்பிட வில்லையென்றாலும் இந்த மாளிகை, அதனை அடுத்து வரும் பொண்டொ வெச்சியோ பாலம் ஆகியவை தொடர்ச்சியாக வரும் வகையில் நாவலை ப்ரவுன் அமைத்திருக்கின்றார்.

இத்தாலி ப்ளோரன்ஸ் நகரத்தின் ஆர்னோ நதிக்கரையை ஒட்டி அமைந்திருக்கும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும் இந்த மாளிகை வரலாற்றில் முக்கியத்துவம் பெறும் ஒன்றே.



ரெனைஸான்ஸ் பண்பாட்டு மாற்றத்துக்கு முக்கியமாகத் திகழும் மெடிசி குடும்பத்தினரின் மாளிகையாகவும் இது சில நூற்றாண்டுகள் இருந்தது.  18ம் நூற்றாண்டில் நெப்போலியனின் மிக முக்கிய படைத்தளங்களில் ஒன்றாக இது பாவிக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கத்து என்பதோடு அதன் பின்னர் ஒன்றினைக்கப்பட்ட புதிய இத்தாலியின் அதிகாரப்பூர்வ அரச மாளிகையாகவும்  இருந்தமை இந்த மாளிகையின் சிறப்பைக் குறிப்பிடும்.

இத்தகைய பெருமை வாய்ந்த இம்மாளிகை 1458ம் ஆண்டில் லூக்கா பிட்டி என்னும் வணிகரால்  கட்டப்பட்டது. இதனை வடிவமைத்தவர் புகழ்பெற்ற கட்டிடச் சிற்பி பிலிப்போ ப்ரூனலிச்சி.  1549ம் ஆண்டில் பிட்டி குடும்பத்தாரிடமிருந்து இந்த மாளிகையை ப்ஃளோரன்ஸ் நகர அரசியார் எலியுனோரா டி டொலேடொ  வாங்கிய பின்னர் இது மெடிசி குடும்ப சொத்துக்களில் ஒன்றாகியது.



ரெனைஸான்ஸ் பண்பாட்டு கலை உலகிl முக்கியப் பங்கு வகித்த மெடிசி குடும்பத்தார் இந்த மாளிகையில் உலகப் புகழ்பெற்ற பல கலை ஓவியங்களை சேகரித்துள்ளனர். இவை இன்று இம்மாளிகையில் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன. இந்த  மாளிகையில் உள்ள அறைகளில் 140 அறைகளில் மட்டுமே  அருங்காட்சியம் அமைக்கப்பட்டுள்ளது. 12 பெரிய அறைகள் மெடிசி குடும்பத்தாரின் பொருட்களை கொண்டுள்ளன. ஏனைய பல அறைகள் வெவ்வேறு வகை பயன்பாடுகளால் பொது மக்கள் பார்வைக்கு திபாறக்கப்படுவதில்லை.  இத்தாலியின் ப்ஃளோரன்ஸ் நகர் வருபவர்கள் தவிர்க்காமல் பார்க்க வேண்டிய கட்டிடங்களிலில் இந்த பிட்டி மாளிகையும் ஒன்று.

நாவலில் சியன்னாவும் ரோபர்ட்டும் தப்பித்துச் செல்லும் போது இந்த மாளிகையைக் கடந்து செல்வதாகக் குறிப்புக்களைத் தருகின்றார் ப்ரவுன். சுவாரசியமான பகுதிகள் இவை!

சுபா

Friday, August 2, 2013

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 55

ஆசிரியருக்கும் மாணவருக்கும் இடையே கண்டிப்பும் கட்டளையும் பய உணர்வும் தான் இருக்க வேண்டுமா ? என்ற கேள்விக்கு மாற்றாக தாய்மை அன்பின் வழி அமைந்த உறவாகவும் இது அமைய முடியும் என்பதற்குச் சான்றாகி நிற்கும் ஆவணம் உ.வே.சா வின் என் சரித்திரம். ஆசிரியர் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களுக்கும் மாணவர் உ.வே.சாவிற்கும் இடையிலான அன்பினை இத்தொடரின்  சில பகுதிகளில் முன்னர் குறிப்பிட்டிருக்கின்றேன். அதன் தொடர்ச்சியாக வருகின்ற ஒரு நிகழ்வே இன்றைய பதிவின் மையமாக அமைகின்றது.

திருப்பெருந்துறைப் புராணத்தைப் பிள்ளையவர்கள் எழுதத் தொடங்கிய பின்னர் திருவாவடுதுறை மடத்தில் மாணாக்கர்களுக்கும் தம்பிரான்களுக்கும் பெரிய புராணத்தைப் பாடம் சொல்ல ஆரம்பித்திருந்தார். பாடங்கள் தடங்கலின்றி நடந்து கொண்டிருந்த வேளையில் கண்ணப்ப நாயனார் புராணம் தொடங்கப்பட்ட வேளையில் உ.வே.சாவிற்கு உடல் நலம் குன்றியது. அம்மை நோய் கண்டு அது விரைவாக உடல் முழுதும் பரவி மிகச்சங்கடமான உடல் நிலைக்கு உள்ளாகியிருந்தார் உ.வே.சா. தான் தங்கியிருந்த சத்திரத்திலேயே இருந்து வந்த உ.வே.சாவை அடிக்கடி பார்க்க வந்து சென்று கொண்டிருந்தார் பிள்ளையவர்கள். மாணவரின் துயர் ஆசிரியரையும்  தாக்க பாடம் நடைபெறுவது மிகச் சிரமமாக ஆகிவிடவே இந்த நிலையை உணர்ந்த தேசிகர் பாடத்தை தற்காலிகமாக நிறுத்தும் படி கட்டளையிடவேண்டியது அவசியமாகியது.

மனம் சஞ்சலமில்லாமல், வேதனையில்லாமல் இருந்தால் கல்வியில் தெளிவு காணமுடியும். படிக்கும் பாடம் மனதில் ஆழப் பதிய உடல் நலம், மன நலம் இரண்டுமே மிக அவசியம் அல்லவா!

உடல் வேதனை உ.வே.சாவை வாட்ட, தனது கடன் சுமையயும் விட மாணாக்கரின் உடல் நலக்குறைவு ஆசிரியரை வாட்ட, பெரிய புராணப் பாடம் மடத்தில் தற்காலிகமாக நின்று போனது.

தனது பாட்டனாரின் ஊராகிய சூரியமூலைக்குச் சென்று பெற்றோரின் கவனிப்பில் சிறிது காலம் இருந்து வர விரும்பினார் உ.வே.சா. இதனை அறிந்த தேசிகர் அவரை ஒரு பல்லக்கில் ஏற்றி சூரியமூலைக்குக் கொண்டு செல்லும் படி மடத்தில் கட்டளையிட்டார்.  ஆசிரியரும் ஏனையோரும் விடையனுப்ப பல்லக்கில் சாய்ந்தபடி சூரியமூலைக்குப் புறப்படும் போது ஆசிரியர் கூறியதை தனது 80வது அகவையிலும் நினைவில் வைத்திருந்து என் சரித்திரத்தில் இப்படிக் குறிப்பிடுகின்றார் உ.வே.சா.

“சாமிநாதையர், போய் வருகிறீரா?” என்ற பேச முடியாமல் வார்த்தைகளை ஒவ்வொன்றாகத் தழுதழுத்தபடியே பொங்கி வரும் துயரத்தில் நனைத்துக் கூறினார் ஆசிரியர்.

எனக்குப் பேச வாய் வரவில்லை. குழறினேன்; அழுதேன்; காலை எட்டு மணிக்குப் பல்லக்கில் நான் சூரிய மூலையை நோக்கிப் பிரயாணப்பட்டேன். பிள்ளையவர்கள் என்னுடன் ஹரிஹரபுத்திர பிள்ளை என்ற மாணாக்கரை வழித்துணையாகச் சென்று வரும்படி அனுப்பினார். சூரிய மூலைக்குத் திருவாவடுதுறையிலிருந்து போக அப்போது வசதியான சாலையில்லை. வயல்களின் கரைவழியே போக வேண்டும். எனக்கும் பிள்ளையவர்களுக்கும் இடையிலே உள்ள தூரம் அதிகமாயிற்று. என் உள்ளத்தில், “இந்தத் தூரம் இப்படியே விரிந்து சென்று விடுமோ?” என்ற எண்ணம் சிறிது தோன்றியது; அப்போது என் வயிறு பகீரென்றது."

இதனை வாசிக்கும் போதே அந்த நிகழ்விற்கே என்னை அழைத்துச் சென்று விடுகின்றார் உ.வே.சா. நானும் அக்கதாபாத்திரங்களில் ஒன்றாகி அவர்கள் உணர்வுகளோடு கலந்து நிற்கும் போது இந்த உணர்வின், அது தரும் பயத்தின் ஆழத்தை புரிந்து கொள்ளும் நிலையில் என் மனதிலும் அந்த வேதனை உணர்வு தாக்கவே செய்கிறது.

துன்பத்திற்கு மேல் துன்பம் வரும் என்பார்களே. அது சில வேளைகளில் உண்மையாகிப் போவதுண்டு. ஒரு பிரச்சனையிலிருந்து மீள வேண்டும் என நினைத்து ஒரு வடிகால் தேடிச் செல்கின்ற போது அங்கே வேறோர் பிரச்சனை தாண்டவமாடிக் கொண்டிருக்கும். அதே நிலைதான் உ.வே.சாவிற்கு.

சூரியமூலைக்குச் சென்று பார்த்தால் அங்கே அவருக்கு அதிர்ச்சி தரும் ஒரு செய்தி நிகழ்ந்து  அவரை வேதனையின் அளவைக் கூட்ட காத்துக் கொண்டிருக்கின்றது. அம்மை நோய் கண்டிருக்கும் இவரை வீட்டிற்குக் கொண்டு செல்லாமல் தோப்பிலேயெ வைத்து அங்கேயே பார்த்துக் கொள்ளச் செய்யலாம் என உறவினர் நினைக்கின்றனர்.  அப்போது தனது வீட்டிற்குப் பலர் வந்திருப்பதை அறிகின்றார் உ.வே.சா. இவரது அம்மா வழிப் பாட்டனார், இவருக்குச் சிவதீட்ஷை செய்வித்து சிவநாமத்தைக் கற்றுக் கொடுத்த அப்பெரியவர் சிவபதம் அடைந்த செய்தி கிடைக்கின்றது.

"எனக்கு இன்னது செய்வதென்று தெரியவில்லை. அங்கே அவ்வளவு பேர்கள் கூடியிருந்ததற்குக் காரணம் இன்னதென்று தெரிந்த போது நான் இடி விழுந்தவன் போலானேன். நான் அங்கே சென்ற தினத்திற்கு முதல் நாள் என் அருமை மாதாமகரும், சிவ பக்தியை எனக்கு இளமையிலேயே புகட்டியவரும் ஆன கிருஷ்ண சாஸ்திரிகள் சிவசாயுஜ்ய பதவியை அடைந்தனர். அவருடைய இனிய வார்த்தைகளையும் சிவபூஜா விசேஷத்தையும் வேறு எங்கே காண்போமென்று இரங்கினேன்."

சடங்குகள் சம்பிரதாயங்கள் என்ற பெயரில் சில வேளைகளில் சூழ்நிலை அறியாது உயிர்களின் வேதனை அறியாது எழுதா  சட்டதிட்டங்கள் தாண்டவமாடிக்கொண்டிருக்கும் நிலை ஏற்படுவதுண்டு. அங்கும் அதே நிலை.

"இந்நிலையில் தோப்பிலே நான் பல்லக்கிற் கிடந்தபடியே வருந்துகையில் சஞ்சயனத்தை நடத்தி விட்டு என் அம்மானாகிய சிவராமையருடன் என் தந்தையாரும் பிறரும் வந்தனர். என்னை வீட்டுக்குள் செல்ல அனுமதிக்காமல் இருந்தவர்களைக் கண்டு அம்மான் கோபித்துக் கொண்டார். “நம்முடைய குழந்தை; அவன் கஷ்டப்படும்போது அவனுக்கு உதவாக வீடு வேறு எதற்கு?
நன்றாய்ப்பிச்சைக்காரன் மாதிரி தோப்பில் நிறுத்தி வைத்தீர்கள்? உங்கள் மனம் கல்லோ!” என்று சொல்லிப் பக்கத்தில் ஒருவரும் குடியில்லாமல் தனியேயிருந்த அவருடைய வேறொரு வீட்டைத் திறந்து விரைவில் என்னை அங்கே கொணர்ந்து வைக்கச் செய்தார்."

வீடு வந்து சேர்ந்த விஷயத்தை ஆசிரியரிடம் தெரிவிக்கும் படி தன்னுடன் வந்தவர்களுக்குச் சொல்லியனுப்பி சூரியமூலையிலேயே அடுத்த சில மாதங்கள் தங்கி விட்டார் உ.வே.சா. அவ்வாண்டு மார்கழி மாதம் முழுமையும் நோயால் துன்பப்பட்டு தைமாதத்தில் உடல் நலம் பெற ஆரம்பித்தது. அவரது இந்த நிலையில் அவ்வப்போது திருவாவடுதுறையிலிருந்து  சிலர் வந்து இவரது நலன் விசாரித்துச் சென்ற விஷயத்தையும் குறிப்பிடுகின்றார்.

தொடரும்..

சுபா

Sunday, July 14, 2013

Robert Langdon is back..Florence Baptistery! -6

சில நாட்களுக்கு முன்னர்  திரு.முத்துராமன் (தென் அமெரிக்கா) தனி மடலில் குறிப்பிட்டிருந்தார். எனது இந்த இழையைப் பார்த்து இன்பெர்னோ வாங்கிப் படித்துக் கொண்டிருப்பதாக. திரு.ப்ரவுனிடம் கொஞ்சம் விற்பனைக்கு கமிஷன் கேட்கலாமா ?? :-)

சரி .. இன்றைக்கு மேலும் ஒரு கட்டிடம் இன்பெர்னோவில் குறிப்பிடப்படுவது. அதனைப் பற்றிய தகவல் பதியலாம் என நினைக்கின்றேன்.

கட்டிடச் சிற்பி லோரென்ஸோ கிபெர்டி (Lorenzo Ghiberti) அமைத்த பாப்டிஸ்ட்ரி.. இது இன்பெர்னோவில் மிக முக்கிய இடம் வகிக்கும் வகையில் விளக்கப்பட்டிருக்கும் ஒரு கட்டிடம். ஒக்டகன் (Octagonal shape) வடிவாக எண்கோண வடிவத்தில் அமைக்கப்பட்டிருக்கும் ஒரு கட்டிடம் இது. இன்றைக்கு ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கட்டிடம் இத்தாலியின் ப்ளோரன்ஸ் நகரின் மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு கட்டிடம். இன்பெர்னோவின் மைய நாயகன் டாண்டே மட்டுமன்றி, ரெனைஸான்ஸ் பன்பாட்டு மாற்றத்திற்குக் காரணமாக இருந்தோர்களில் குறிப்பிடத்தக்க மெடிசி பாரம்பரியத்தினரும் இந்த வழிபாட்டு மையத்தில் தான் ஞானஸ்தானம்  பெற்றுக் கொண்டதாக தகவல்.1058 முதல் 1129 வரை ஏறக்குறைய 70 ஆண்டுகள் தேவைப்பட்டன இந்தக் கட்டிடத்தை முழுமைப் படுத்த!


கட்டிடத்தின் வடிவம். நடுவில் மோசைக்கில் வடிக்கப்பட்ட ஏசுவின் திரு உருவம்.

இந்தக் கட்டிடத்தை வடிவமைத்த கிபெர்ட்டியின் உருவம் இதே கட்டிடத்தில் சொர்க்க வாசல் கதவில் இழைக்கப்பட்டிருக்கின்றது.



உள்ளே நுழைந்தால் சித்திரக் கூடத்தைத் தான் காண்போம். எங்கும் சித்திரங்கள். பைபிள் கதைகள் பலவற்றிற்கு உருவம் கொடுத்து சுவர்கள், மேல் கோபுரப் பகுதி என எல்லா இடங்களிலும் சித்திரங்கள் நிறைந்து நம்மை வியப்பில் ஆழ்த்தும் கலை வடிவம் கொண்டது இந்த பாப்டிஸ்ட்ரி. இங்கே தான் ரோபர்ட்டும் சியன்னாவும் டாண்டேயின் முகமூடியைக் கண்டெடுப்பதாகக் கதை செல்கின்றது.

கட்டிடத்தின் ஒவ்வொரு பகுதியும் சிறப்புத்தான். எண்கோண வடிவத்தில் இருக்கும் இக்கட்டிடத்தைச் சுற்றி சுற்றி வந்து பார்த்தால் பல நூறு சிற்பங்கள், வடிவங்கள் நிறைந்திருக்கின்றன. உள்ளே சித்திரக்கூடம். உலக அதிசயங்களில் இதனையும் ஒன்றாகக் குறிப்பிடலாம். அத்தனை சிறப்புக்கள் இதற்கு உண்டு என்பதை நேரில் பாக்கும் போது உணர்வோம். இந்தச் சிறப்புக்கெல்லாம் சிகரம் வைத்தார் போல அமைவது பாப்டிஸ்டிரியின் உள்ளே மேல் கோபுரச் சுவரில் மையப்பகுதியில் அமைந்திருக்கும் பிரமாண்டமான ஏசு பெருமானின் திரு உருவம்.



இதனைப் பற்றி தனியாக ஒரு பதிவே எழுதலாம். பின்னர் பார்க்கிறேன்.

சுபா

Saturday, July 6, 2013

என் வீட்டுத் தோட்டத்தில்

என் தோட்டத்தில் இருக்கும் ரோஜா செடிகளில் ஒன்றில் கொத்து கொத்தாக மலர்கள் நிரைந்திருக்கின்றன.

மலர்கள் மலர்ந்திருந்தாலே வண்டுகள் சூழ்ந்திருப்பதும் இயற்கை தானே..!


சுபா

Friday, July 5, 2013

Robert Langdon is back..Ponte Vecchio! -5

இன்பெர்னோவில் ப்ரவுன் குறிப்பிடும் சில பிரசித்தி பெற்ற கட்டிடங்களையும் இடங்களின் அமைப்புக்களையும் பற்றி தகவல் பகிர்ந்து கொள்வதாக குறிப்பிட்டு சில பதிவுகளும் எழுதியிருந்தேன் அதன் தொடர்ச்சியாக இன்று எதைக் குறிப்பிடலாம் என யோசிப்பதற்கே இடமில்லாமல் போண்டோ வெச்சியோவிற்கு உங்களை அழைத்துச் செல்கிறேன். காரணம் ... கடந்த மூன்று நாட்களாக நடந்த அலுவல மீட்டிங் அறையில் இருந்த உலகப் பிரசித்தி பெற்ற வரைபடங்களின் ஓவியத்தில் இந்த போண்டோ வெச்சியோவின் வரபடமும் ஒரு தனி ஓவியமாக அமைந்திருந்து என்னை பலமுறை இன்பெர்னோவை ஞாபகப் படுத்திக் கொண்டிருந்தது.

சரி.. பொண்டோ வெச்சியோ பற்றி..

அடிப்படையில் இது ஒரு பாலம்.
ஃப்ளோரன்ஸ் நகரின் ஆர்னோ நதியின் இரு பகுதிகளையும் இணைக்கும் பாலங்களில் இதுவும் ஒன்று. ஆனால் மிகச் சிறப்பு வாய்ந்தது. என்ன சிறப்பு என்று யோசிக்கின்றீர்களா..?

படத்தைப் பாருங்கள்...


தூரத்திலிருந்து தெரிவது..




சற்று அருகிலிருந்து


இந்த பாலம் பற்றிய செய்திகள் கிபி 996ம் ஆண்டு பதிவாகியிருக்கின்ற போதிலும் சில முறை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு பின்னர் தற்சமயம் இருக்கும் இந்தப் பாலம் கி.பி 1345ம் ஆண்டு கட்டப்பட்டது.

இதன் தனிச்சிறப்பு -  பாலத்தின் இரண்டு பக்கங்களிலும் கடைகள். அதுவும் எல்லாமே தங்க, வெள்ளி, வைர, ப்ளாட்டின நகைகள் விற்கப்படும் இடம். மிகப் பணக்கார பாலம் இது என்று சொல்லலாம் தானே..:-) !

அதோடு நன்றாக கவனித்தால் முதல் தளம் கடைகளாகவும் மேல்தளம் அறைகளாகவும் அமைந்திருப்பதைக் காணலாம்.

ப்ரவுன் தன் இன்பெர்னோவில் இப்பாலத்தில் ரோபர்ட் லாங்டனும் சியன்னாவும் தப்பித்துச் செல்வதை விவரிக்கும் போது இப்பாலத்தின் தனிச்சிறப்பையும் குறிப்பிடுகின்றார். நாவலில் சுவாரசியமான பகுதி இது.

குறிப்பு: படங்கள் இணையத்தில் எடுத்தனை. நான் எடுத்த படங்களை வேறொருமுறை பகிர்ந்து கொள்கிறேன்.

சுபா

Monday, July 1, 2013

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 54

மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் எழுதிய திருப்பெருந்துறைப் புராணம் எனது இந்த ஆண்டு தமிழகப் பயணத்தின் போது மேற்கொண்ட தேடலில் கிடைக்கவில்லை. இது எனக்கு ஏமாற்றத்தைத்  தந்த ஒரு விஷயம்.இந்த நூல் கிடைத்தால் அதனை மின்னூலாக்கி தமிழ் மரபு அறக்கட்டளை நூலகத்தில் இணைக்க வேண்டும் என நினைத்திருந்தேன். இம்முறை அது சாத்தியப்படவில்லை. பிள்ளையவர்கள் திருவாவடுதுறை மடத்தைச் சார்ந்திருந்து எழுதிய நூல்களில் இதுவும் ஒன்று என்ற சிறப்புப் பெறும் ஒரு தலபுராணம் இது. எப்போது நம் கைகளுக்கு இது கிடைக்க வேண்டும் என்பது இறையருள் சித்தமாக இருக்கின்றதோ அப்போது இது கிட்டலாம் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது.

திருப்பெருந்துறைப் புராணம் உருவான கதை பற்றிய விரிவான விளக்கங்களை அத்தியாயம் 52ல் உ.வே.சா குறிப்பிடுகின்றார்.

திருப்பெருந்துறை ஆலயத்தை நிர்மானித்து வந்த சுப்பிரமணியத் தம்பிரான் என்பவர் திருவாவடுதுறை ஆதீனகர்த்தருக்குத் தமது மேற்பார்வையில் இருக்கும் திருப்பெருந்துறை ஆலயத்திற்கு இதுகாறும் ஒரு முழுமையானத் தலபுராணும் இல்லை என்றும் அந்தக் குறை நீங்கி மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களே இந்தத் தலத்திற்கு ஒரு தல புராணம் இயற்ற வேண்டும் என்றும் கேட்டிருந்தார். இந்த நூலை சிறப்பாக பாடி அரங்கேற்றி முடித்தால் ஆலயத்தின் சார்பாக ரூபாய் இரண்டாயிரம் வழங்க சித்தமாக இருப்பதாகவும் தெரிவித்து திருப்பெருந்துறைக்குறிய ஒரு வடமொழி நூலின் தமிழ் மொழிபெயர்ப்பையும், அந்த ஆலயத்திற்கு முன்பிருந்த இரண்டு புராணங்களையும் சேர்த்து அனுப்பியிருந்தார்.

ஆதீனகர்த்தர் சுப்பிரமணிய தேசிகருக்கும் இது நல்லதொரு வாய்ப்பாக பொருளாதார உதவியாக பிள்ளையவர்களுக்கு அமையும் என்ற எண்ணம் மனதில் தோன்றியிருந்தது. அப்போது தான்  தன் புதல்வருக்குத் திருமணம் முடித்து ஏராளமானச் செலவும் அவருக்கு ஏற்பட்டிருந்தது  அது தேசிகருக்கும் தெரியும். பிள்ளையவர்களின் அந்தக் கடன் சுமைகளை ஏதாகினும் ஒரு வகையில் குறைக்க இது உதவலாமே என்ற எண்ணம் தேசிகருக்கு மனதில் இருந்தது.

இதனை நினைத்து உ.வே.சாவை அழைத்து மாயூரத்தில் இருக்கும் பிள்ளையவர்களைப் பார்த்து இந்த நல்ல செய்தியைச் சொல்லி பணியைத் தொடங்கக் கேட்டுக்கொள்ளச் சொல்லி வருமாறு கூறி அனுப்பி வைத்தார்.

இந்தப் பணியைக் கேள்விப்பட்டதுமே  பிள்ளையவர்களுக்கு மிகுந்த ஆர்வம் தோன்ற அடுத்த நாட்களிலேயே திருவாவடுதுறை மடத்திற்குப் புறப்பட்டு விட்டார். உ.வே.சாவும் இது வரை இக்கோயிலைப் பார்த்ததில்லை. ஆக நூல் அரங்கேற்றம் நிகழும் போது ஆலயத்தைக் காணும் வாய்ப்பு வருமே என்ற மகிழ்ச்சி உ.வே.சா அவர்களுக்கு உண்டாயிற்று. இதனை இப்படி உ.வே. சா குறிப்பிடுகின்றார்.

“சந்நிதானத்தின் திருவுள்ளப்படி நடப்பதுதான் எனக்கு இன்பம். நீர் திருப்பெருந்துறை பார்த்ததில்லையே?”

“இல்லை; மாணிக்கவாசகர் திருவருள் பெற்ற ஸ்தலமென்று ஐயா அவர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன்.”

“ஆமாம்; அது நல்ல ஸ்தலந்தான். ஆவுடையார் கோவிலென்று இப்போது எல்லோரும் சொல்லுவார்கள். இறைவன் திருவருளால் புராணம் அரங்கேற்ற நேர்ந்தால் எல்லாவற்றையும் நீர் பார்க்கலாம்.”

திருப்பெருந்துறையைப் பார்க்க வேண்டுமென்ற விருப்பம் எனக்குத் தோன்றியது; என் ஆசிரியர் அந்த ஸ்தல புராணத்தைப் பாட நான் அதனை எழுத வேண்டுமென்ற ஆசை அதற்குமுன் எழுந்தது.


திருவாவடுதுறை ஆதினத்திற்கு வந்தடைந்த சில நாட்களில் திருப்பெருந்துறைப் புராணம் உருவாக ஆரம்பித்தது. இத்தலத்தின் வெயிலுவந்த விநாயகனை நினைத்து முதல் பாடல் பாடி ஒரு செய்யுளமைக்க,  நூல் வடிவம் பெற ஆரம்பித்தது. பிள்ளையவர்கள் செய்யுளைச் சொல்ல சொல்ல உ.வே.சா அதனை ஓலைச் சுவடியில் எழுதி வரலானார்.

சுப்பிரமணியத் தம்பிரான் கொடுத்திருந்த இரண்டு புராண நூல்களோ ஸ்தல வரலாறுகளை வெளிப்படுத்தும் வகையில் மட்டுமே அமைந்தவையாக இருந்தன. பிள்ளையவர்கள் தான் இயற்ற ஆரம்பித்த நூலின் பொருளை மேலும் விரிவாக்கி நாட்டுச் சிறப்பு, நகரச் சிறப்பு என இணைத்து அதனை வளம் மிக்க படைப்பாக உருவாக்கி வந்தார்.

திருப்பெருந்துறைப் புராணம் இயற்றிக் கொண்டிருக்கும் போதே பிள்ளையவர்களுக்குக் கடன் சுமை அதிகரிக்க ஆரம்பித்திருந்தது. நூலை முழுமையாக எழுதி அதனை அரங்கேற்றம் செய்தால் தான் 2000 ரூபாய் கிடைக்க வாய்ப்பு என்னும் நிலை. ஆனால் திருமணத்திற்குக் கடன் கொடுத்தவர்களோ அடிக்கடி வந்து கடனைக் கேட்க ஆரம்பிக்கையிலே பிள்ளையவர்களின் மனம் மிகுந்த சஞ்சலமமும் வருத்தமும் கொண்டது. பொருளாதாரம் திடமாக இருக்க வேண்டியதும் கவனம் வைத்து செலவுகளைச் செய்ய வேண்டியதும் எவ்வளவுக்கெவ்வளவு அவசியமான ஒன்றாகின்றது என்றும் பிள்ளையவர்கள் நினைத்து நினைத்து வாடிய சமயங்கள் இவை. திருமணத்திற்கு வாங்கிய கடன் சுமையால் ஏற்பட்ட துன்பங்களும் மனக் கஷ்டங்களும் இந்தச் சமயத்தில் அவரை வாட்டத்தொடங்கியிருந்தன.

தொடரும்...

சுபா

Saturday, June 29, 2013

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 53

நம் சமூகத்தில் திருமணங்கள் பல்வேறு விதங்களில் நடைபெறுவதைப் பற்றி கேள்விப்பட்டிருப்போம். இதே தொடரிலேயே உ.வே.சா அவர்களின் திருமணத்தின் போது நிகழ்ந்த விஷயங்களைப் பற்றி முன்னர் நான் விவரித்திருக்கின்றேன். என் சரித்திரம் நூலில் இரண்டாவதாக மற்றுமொரு திருமணம் பற்றிய செய்தியும் ஓரளவு விளக்கப்படுகின்றது. அது மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் புதல்வன் சிதம்பரம் பிள்ளையவர்களின் திருமணம் பற்றிய செய்திகளே. இத்தகவல்கள் அத்தியாயம் 51ல் கிடைக்கின்றன.

சிதம்பரம்பிள்ளைக்குத் திருமணம் மாயூரத்திலேயே மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் இல்லத்திலேயே நிகழ்ந்தது. இவருக்கு சீகாழி நகரிலிருந்த  குருசாமி பிள்ளை என்பவருடைய பெண்ணை திருமணம் செய்து வைத்தார்கள். திருமண வைபவம் ஒரு ஜமீந்தார் வீட்டுத் திருமணம் போல அவ்வளவு ஆடம்பரமாகவும் சிறப்பாகவும் நடைபெற்ற தகவல்களை உ.வே.சாவின் குறிப்புக்களின் வழி அறிகின்றோம். மாணவர் கல்வி, திருமடத்தின் சார்பு என திருவாவடுதுறை மடத்திலேயும் மாணவர்களுடனும் தன் பெரும்பாலான வாழ்க்கையின் பகுதியை மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் கழித்தார்கள் என்பதை அறிந்து கொள்ளும் நாம் தம் குடும்பத்தார் நலனையும் சிறிதும் மறக்காது தனது தகுதிக்கேற்ற வகையில் குடும்பத்தார் மனமகிழ தேவையான விஷயங்களையும் நலமே செய்திருக்கின்றார் என்பதை இக்குறிப்புக்களின் வழியாகக் காணமுடிகின்றது.

இத்திருமணத்திற்குத் திருவாவடுதுறை மடத்தின் ஆதீன கர்த்தர், மடத்தின் தம்பிரான்கள், மற்றும் பிள்ளையவர்கள் மேல் மதிப்பு கொண்டிருந்த பொருள் படைத்தோர் சிலரும் பொருளுதவி செய்திருக்கின்றனர். உ.வே.சா, சாவேரிநாதப் பிள்ளையும்  சேர்த்து மாணவர்கள் சிலரும் பிள்ளையவர்களுடன் உதவிக்காக இத்திருமணத்தின் போது மாயூரம் சென்று தங்கியிருந்து திருமணம் முடியும் வரை உடனிருந்து உதவி செய்து வந்திருக்கின்றனர். ஆசிரியரின் குடும்பத்தில் இந்த மாணவர்கள் எல்லோரும் தங்களைப் பிணைத்துக் கொண்டனர் என்பதை இதனால் அறிய முடிகின்றது.

இப்போதெல்லாம் விதம் விதமான வகைகளில் திருமணப் பத்திரிக்கைகளை அச்சகங்கள் தயாரிக்கின்றன. இம்முறை தமிழகம் சென்ற போது காரைக்குடியில் இருக்கும் ஒரு நண்பரது அச்சகத்தில் வரவேற்பு அறையில் இருக்கும் திருமண அழைப்பு பத்திரிக்கைகளின் வகைகளையும் விதங்களையும் கண்டு நான் ஆச்சரியப்பட்டுப் போனேன். பல வடிவங்கள். அளவில் சிறியவை பெரியவை எனவும் பூவேலைப்பாடுகளுடனும் பல வர்ணங்களில் பாரம்பரிய ஓவியங்களுடனும் சில மேல்நாட்டு ஒவியங்களுடனும் என வெவேறு வகைகளில் இவை தற்சமயம் மக்கள் விருப்பத்திற்கேற்ற வகையில் அமைகின்றன. அக்காலத்திலும் திருமண அழைப்பிதழ்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் இருந்திருக்கின்றது. பிள்ளையவர்கள் வீட்டுத் திருமண பத்திரிக்கைக்கு ஒரு கூடுதல் விஷேஷமும் இருந்திருக்கின்றது.

அதாவது உள்ளூரில் உள்ளவர்களுக்கு வீடு தேடிச் சென்று அழைப்பு செய்வார்கள். வெளியூரில் இருப்பவர்களுக்குப் பத்திரிக்கையுடன் கடிதமும் சேர்த்து அனுப்பினாராம் பிள்ளையவர்கள். அதில் ஒவ்வொருவருக்கும் அனுப்பப்படும் தனித்தனிக் கடிதத்திலும் ஒரு பாடலை இணைத்தே கடிதம் தயாராகுமாம். இந்தக் கடிதத்தை எழுதும் பணி உ.வே.சாவிற்கு அமைந்தது. பிள்ளையவர்கள் ஒவ்வொரு மனிதருக்கும் அவரவர் குணத்தை மதிப்பிடும் வகையில் இக்கடிதங்களையும் பாடல்களையும் உருவாக்கிச் சொல்ல அவற்றை உ.வே.சா எழுதியிருக்கின்றார்.
சிறப்பு விருந்தினர் ஒவ்வொருவருக்கும் ஒரு பாடல் என்ற நிலையில் ஒருவருக்கு மட்டும் பிரத்தியேகமாகப் பிள்ளையவர்கள் ஐந்து பாடல்களைச் சொல்ல உ.வே.சா அந்தக் கடிதத்தையும் எழுதினாராம்.

இந்தச் சிறப்புக்குறியவர் கல்லிடைக்குறிச்சியில் இருந்த திருவாவடுதுறை மடத்தின் ஆதீனத்தில் சின்னப் பண்டார சன்னிதியாக இருந்த ஸ்ரீநமச்சிவாய தேசிகர் தான்.

பிள்ளையவர்களுக்கு இவர்பால் தனி அன்பும் மரியாதையும் இருந்திருக்கின்றது. இந்தத் தேசிகர் சிறந்த கல்வி ஞானம் உடையவர் என்றும் , தமிழ் வடமொழி ஆகிய இரண்டிலும் நல்ல தேர்ச்சி பெற்றவர் என்றும், கல்லிடைக்குறிச்சியில் இருந்து கொண்டு பல சீர்திருத்தங்களைச் செய்திருக்கின்றார் என்றும் மிகுந்த திறமை உள்ளவர் என்றும் பிள்ளையவர்கள் விவரித்துக் கூறுவதை இந்த அத்தியாயத்தில் காண்கின்றோம். இந்தத் தேசிகர் திருநெல்வேலி நகரில் ஆதீனத்திற்குச் சொந்தமாக இருந்த பல கிராமங்களையும் கல்லிடைக் குறிச்சி அதனைச் சுற்றி இருந்த ஆதீனத்திற்குச் சொந்தமான கிராமங்களையும் நன்கு பராமரித்து வந்தவர் என்பதனையும் தெரிந்து கொள்ள முடிகின்றது. கல்லிடைக் குறிச்சியில் ஆதீனத்திற்குச் சொந்தமான ஒரு மடமும் அதனை ஒட்டிய கோயில்களும் இருப்பதாகவும், ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகர் ஆதீன கர்த்தராகப் பட்டம் பெறுவதற்கு முன்னர் சில காலங்கள் அங்கே சிறிய பட்டமாக இருந்து நிர்வாகித்து வந்தவர் என்ற குறிப்பையும் கூட அறிந்து கொள்ள முடிகின்றது. இதே நிலையில் ஆதினத்திற்குச் சொந்தமான கிராமங்கள் இன்னமும் இப்பகுதிகளில் இருக்கின்றனவா என்பது தெளிவாகத்தெரியவில்லை. ஆனால் நிச்சயமாக பல மாற்றங்கள் நிகழ்ந்திருக்க வாய்ப்புண்டு.

திருவாவடுதுறை மடத்தின் அக்காலத்திய மதிப்பையும் ஆளுமையையும் பிள்ளையவர்கள் உ.வே.சாவிற்குக் கூறுவதாக அமையும் இப்பகுதியை வாசிப்பதே அதன் அக்காலத்து நிலையை சரியாக விளக்க உதவும்.

" ஸந்நிதானம் சின்னப் பட்டத்தில் இருந்தபோது சில வருஷங்கள் அங்கே எழுந்தருளி இருந்தது. இந்த ஆதீனத்திற்கு இராசதானி நகரம் போன்றது திருவாவடுதுறை. இளவரசர் இருத்தற்குரிய நகரம்போல விளங்குவது  கல்லிடைக்குறிச்சி, சின்னப் பட்டத்திலுள்ளவர்கள் கல்லிடைக்குறிச்சியிலிருப்பது வழக்கம். அவர்களை இளவரசென்றும் சொல்வதுண்டு.”

“திருவாவடுதுறை ஆதீனம் தமிழ்நாடு முழுவதையும் ஆட்சி புரிவது போலல்லவா இருக்கிறது?” என்று நான் ஆச்சரியத்தோடு வினவினேன்.

“மடத்தின் பெருமை உமக்கு வர வரத்தான் தெரியும் சிஷ்யர்கள் எங்கெங்கே இருக்கிறார்களோ அங்கெல்லாம் இவ்வாதீனத்தின் சம்பந்தம் இருக்கும். காசி முதல் கன்னியாகுமரி வரையில் முக்கியமான சிவஸ்தலங்களிலும் ஆதீனத்தின் சம்பந்தம் உண்டு” என்று ஆசிரியர் உரைத்தார்."

திருமணம் சிறப்பாக நடைபெற்று முகூர்த்த தினத்தின் அன்று கலை நிகழ்ச்சிகளும் ஏற்பாடாகியிருந்திருக்கின்றன. பாட்டுக் கச்சேரி, பரதநாட்டியம், விகடக் கச்சேரி, வாத்தியக் கச்சேரிகளெல்லாம் நடந்திருக்கின்றன. பரதநாட்டியத்தை ஒரு பெண்மணி ஆடிக் கொண்டிருக்கும் போது இடையிடையே அப்பெண்ணிற்கு அங்கு வந்திருந்த பொருள் படைத்த கணவான்கள் பணம் கொடுத்தனராம். இதனை நின்று கொண்டு வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்திருக்கின்றார். உ.வே.சா. ஆசிரியர் கண்களிலிருந்து இது தப்புமா? :-)

இதனைக் கவனித்துக் கொண்டிருந்த ஆசிரியர் என்ன செய்தார் என்பதை உ.வே.சா அவர்களே சொல்கின்றார்.

" பரத நாட்டியம் ஆடிய பெண்பாலுக்குச் சபையில் உள்ள கனவான்கள் இடையிடையே பணம் கொடுத்தனர். அப்போது பிள்ளையவர்கள் என்னை அழைத்து அருகில் இருக்கச் செய்து என் கையில் ஒரு ரூபாயைக் கொடுத்து அப்பெண்ணிடம் அளிக்கச் சொன்னார். எனக்கு மிகவும் சங்கோஜமாக இருந்தது; ஆனாலும், ஆசிரியருடைய கட்டளையை மறுத்தற்கு அஞ்சி அப்படியே கொடுத்தேன். அங்கிருந்த யாவரும் என்பால் பிள்ளையவர்களுக்கு இருந்த அன்பை இதனாலும் அறிந்து கொண்டார்கள்."

உ.வே.சா இப்பகுதியில் பரதநாட்டியம் ஆடிய பெண்ணை பெண்பால் என விளிக்கின்றார். அக்காலத்து எழுத்து முறையில் பெண்களைப் பெண்பால் எனக் குறிப்பிடுவது தான் வழக்கமாக இருந்தது போலும்!

தொடரும்...
சுபா

Friday, June 21, 2013

Robert Langdon is back..The Gates of Paradise! - 4

வாசித்து முடித்து 2 வாரங்களாகி விட்ட பின்னரும் கூட இன்பெர்னோவின் ரோபர்ட் லாங்டனும் சியன்னாவும்என் மனதிலேயே சுற்றி வந்து கொண்டிருக்கின்றார்கள். 

இன்பெர்னோவில் குறிப்பிடப்படும் மேலும் ஒரு பிரமாண்டமான ஒரு கட்டிடத்தின் ஒரு பகுதி  பற்றி குறிப்பிடலாம் என நினைக்கின்றேன்.  இந்தக் கதவு  இத்தாலியின் ப்ளோரன்ஸ் நகரில் தற்சமயம்  ஓப்பரா டி சந்தா மரியா டெல் பியோரே அருங்காட்சியகத்தில் (Museo dell'Opera di Santa Maria del Fiore) பாதுகாக்கபடுகின்றது.



27 ஆண்டுகள் கிபெர்ட்டி  (Lorenzo Ghiberti) எனப் பெயர்கொண்ட இத்தாலிய கலைஞன் உருவாக்கிய ஒரு மாபெரும் கலைப்படைப்பு. பழைய  ஏற்பாட்டில் (Old Testament) குறிப்பிடப்படும் 10 கதைகளுக்கு உருவம் கொடுக்க எடுத்த முயற்சியில் உருவான ஒரு கலைப்படைப்பு. இதைப்பார்த்து  மைக்கல் ஆஞ்சலோ இதுதான் சுவர்க்கத்துக்கான வாசலோ (The Gates of Paradise ) எனக் குறிப்பிட்டதால் அதுவே பெயராக அமைந்ததது. 

இந்தக் கதவு ப்ளோரன்ஸ் நகரத்தில் உள்ள பாப்டிஸ்டிரியின் ஒரு வாசல் கதவாக அமைக்கப்பட்டது. பாப்டிஸ்டிரியின் ஒரு வாசலில் இதனைப் பார்த்து இதுதான் அந்த உண்மையான சுவர்க்க வாசலோ என நினைத்து ஏமாந்து போய் விடக் கூடாது. ஏனென்றால் அங்கே தற்சமயம் இருப்பது  அசல் அல்ல. சீதோஷ்ண மாறுதல்களால் சேதப்படுவதிலிருந்து தடுப்பதற்காக உண்மையில் பாப்டிஸ்டிரியில் பொருத்தி வைக்கப்பட்டிருந்த கதவை பெயர்த்து எடுத்து தற்சமயம் ஓப்பரா டி சந்தா மரியா டெல் பியோரே அருங்காட்சியகத்தில் வைத்திருக்கின்றனர். பாடிஸ்டிரியின் வாசலில் இருப்பது அசலைப் போல செய்யப்பட்ட ஒரு வடிவமே.

http://www.youtube.com/watch?v=C6AbLI4QBAU

இன்பெர்னோவில் இந்த சுவர்க்க வாசலைச் சுற்றியும் ப்ரவுன் கதையை அமைத்திருக்கின்றார். 

பாப்டிஸ்டிரி ப்ளோரன்ஸ் நகருக்கு மட்டுமல்ல - இத்தாலி முழுமைக்குமே சிறப்பு சேர்க்கும் கலைப்பாடு நிறைந்த  கட்டிடங்களில் இடம் பிடிக்கும் ஒன்று என்பதில் சந்தேகம் இல்லை. இதன் அழகை வர்ணிப்பது எனக்கு இயலாத  ஒரு காரியம். இந்தக் கட்டிடத்தின் ஒவ்வொரு மூலையிலும் நின்று பார்த்து புகைப்படங்கள் பல எடுத்தேன். 

http://www.youtube.com/watch?v=HzWu4tJoG5A

இக்கலைஞன் லோரென்ஸோ கிபெர்ட்டி பற்றி அறிந்து கொள்ள http://en.wikipedia.org/wiki/Lorenzo_Ghiberti

சுபா

Thursday, June 13, 2013

Robert Langdon is back..Hagia Sophia! - 3

இன்பெர்னோ வாசித்து முடித்ததும் மனதை முழுமையாக ஆக்ரமித்திருப்பது இந்த நூலில் வழங்கப்பட்டிருக்கும் உலகின் பிரமாண்டமான சில கட்டிட அமைப்புக்கள் (grand architecture) பற்றிய விவரணைகள் தான். இதனை பற்றியும் சில விஷயங்கள் பகிர்ந்து கொள்ளலாமே என நினைக்கின்றேன்.

முதலில் இப்படி கட்டிடங்களை நேசித்து அதன் ஒவ்வொரு பகுதியையும் சரித்திர விவரங்களோடு வழங்கியிருப்பதற்காகவே டான் ப்ரவ்னின் எழுத்து நம்மைக் கவர்கின்றது. நானும் ஒரு கட்டிடங்களின் பிரியை என்பதால்:-))

வரலாற்று விஷயங்களைச் சேகரிப்பதற்காக நேரில் சென்றும் ஒவ்வொரு பகுதியையும் உன்னிப்பாக கவனித்தும் அதற்கான சான்றுகளை இண்டெர்னெட்டிலும் கிறிஸ்துவ மத பழம் நூல்களிலும் டாண்டேவின் டிவைன் கோமெடியிலும் தேடி எடுத்து தொடர்பு படுத்தி மிக அழகாக நூலை எடுத்துச் சென்றிருக்கின்றார்  ப்ரவுன்.   முன்பு சொன்னது போல நூல் விமர்சனம் இப்போது இல்லை. :-)

ஆனால் இந்த நூலில் குறிப்பிடப்படுகின்ற சில அரிய பிரமாண்ட கட்டிடங்களைப் பற்றி தகவல் பகிர்ந்து கொள்வதில் எனக்கும் மகிழ்ச்சி. வாசித்து முடித்ததும் ஓடிப் போய் யூடியூபில் தேடிப் பார்த்து ரசித்தசில விஷயங்களைக் கொஞ்சம் கொஞ்சமாக இதில் பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கின்றேன்.

முதலில் மனதில் உடன் தோன்றுவது டான் ப்ரவுன் குறிப்புக்களில் இருக்கும் இஸ்தான்பூல் நகரின் வரலாற்றுப் பெருமை மிக்க ஹாஃகியா சோபியா.



5ம் நூற்றாண்டு ஆர்த்தடொக்ஸ் சமயக் கோயிலாக இருந்து பின்னர் 13ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் ரோமன் கத்தோலிக்க தேவாலயமாக மாறி பின்னர் 15ம் நூற்றாண்டின் மத்தியில் இஸ்லாமிய தொழுகைக்காகப் பயன்படுத்தப்பட்டு சென்ற நூற்றாண்டின் மத்தியில் அருங்காட்சியமாக உருவம் கொண்ட ஒரு மாபெரும் கட்டிடம் இது. பொன்னால் இழைக்கப்பட்ட வடிவங்கள், பிரமாண்ட வடிவங்கள், மதங்களின் சங்கமங்கள் என இதற்கு மாபெரும் சிறப்பு இருக்கின்றது.

யூடியூப் வழங்கியிருப்பும் வாய்ப்புக்கள் நமக்கு இருந்த இடத்திலேயே இத்தகைய பிரமாண்டங்களைக் கண்டு ரசிக்கும் படி உதவுகின்றன.

http://www.youtube.com/watch?v=-QD-sQAOv8E - பகுதி 1

http://www.youtube.com/watch?v=YRPvK2Ihuc8 - பகுதி 2

http://www.youtube.com/watch?v=GEicxpfXI_Q - பகுதி 3

http://www.youtube.com/watch?v=AvlHE8znRIM - பகுதி 4

ஒவ்வொன்றும் 14-15 நிமிட வீடியோக்கள் தாம். ரசித்துப் பார்க்கலாம்.

சுபா

Saturday, June 8, 2013

என் வீட்டுத் தோட்டத்தில்

இன்று மேலும் ஒரு புது வகை மலர்.

இது ரோடடெண்ட்ரோன் (Rhododendron) என அழைக்கப்படுவது. இப்பெயர் பழங்கால க்ரேக்க மொழிச் சொல்.


இந்த வகைச் செடியில் 1000க்கும் மேற்பட்ட வகைகள் உண்டென்று விக்கியில் தகவல் உள்ளது. பல வர்ணங்களில் இவை ஐரோப்பாவின் பல நகரங்களில் காணக்கிடைக்கும் ஒரு செடி. வெயில் அதிகம் இருக்கும் கிழக்கு தெற்கு ஐரோப்பிய நாடுகளிலும் கெனரி தீவுகளிலும் இதனை 2 அடி உயரத்திற்கும் மேற்பட்ட வடிவில் காணலாம். என் வீட்டில் இருக்கும் வகை 1 அடி உயரம் மட்டுமே உள்ளது.


மொட்டும் மலர்ந்த பூங்கொத்துமாக

இந்தச் செடி ஏறக்குறைய 6 வருடங்களாக என் தோட்டத்தில் உள்ளது. வருடத்தில் ஒரே ஒரு முறை மட்டுமே பூக்கும். ஏப்ரல் இறுதி அல்லது மே ஆரம்பத்தில் பூக்கின்ற மலர்கள் ஜூன் மாதம் பாதி வரை இருக்கும் பின்னர் செடி மட்டும் இலைகளுடன் காட்சியளிக்கும். செடி முழுதும் மலர் வணம் போல காட்சி தரும்.


பூத்திருப்பவை அனைத்துமே ஒரே செடியில் பூத்தவை தாம்

சுபா

Sunday, June 2, 2013

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 52

பொதுவாகவே சமய நிறுவனங்களில் காலை தொடங்கி மாலை வரை நடைபெறும் நிகழ்வுகள் அனைத்தும் திட்டமிட்டபடியும் நிகழ்வுகளின் வரிசையில் ஒழுங்கு குறையாமலும் நடைபெறும் . ஹிந்து சமயம் சார்ந்த நிறுவனங்களில் மட்டும் நடைபெறுகின்ற ஒரு விஷயம் அல்ல இது. வாட்டிக்கனில் நடைபெறும் சடங்குகளாகட்டும், ஆர்த்தடோக்ஸ் மடாலயமாகட்டும் அல்லது எந்த சமய குருமார்கள் இருந்து சமயம் வளர்க்கும்  இடமாக இருக்கட்டும்.. அங்கே ஒரு நாள் முழுதும் நடைபெறும் விஷயங்கள் என்பவை எப்போதும் நேரத்திற்கு ஏற்ப ஒரு ஒழுங்குடன் நடைபெற்றுக் கொடிருப்பதைக் காண முடியும்.

எனது அனுபவத்தில் சில நாட்கள் பேரூர் சைவ மடத்தில் தங்கியிருந்திருக்கின்றேன். அதிகாலை தொடங்கி இரவு வரை மடாதிபதியும் அவரைச் சார்ந்தவர்களும்  கலந்து கொள்ளும் விஷயங்கள் அதிகாலை பூஜை அதற்குத் தொடர்பான சடங்குகள், பிற அன்றாட நடவடிக்கைகள் என பல விஷயங்கள் குறிப்பிட்ட நேரத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும்.  எனது தமிழக பயணங்களின் அனுபவத்தில்  தருமபுர ஆதீனம், கோவிலூர் மடம், குன்றக்குடி சைவ மடம், திருவாவடுதுறை சைவ மடம் என இவ்வகையான சில இடங்களுக்குச் செல்லும் வாய்ப்பு அமையும் போதெல்லாம் ஒரு குறிப்பிட்ட நேரம் மடாதிபதிகள் பார்வையாளர்களுக்கு ஒதுக்குவது என்பதையும் அறிந்திருக்கின்றேன். இப்படி ஒவ்வொரு விஷயங்களுக்கும் குறிப்பிட்ட நேரத்தை நிர்ணயித்து  அதற்கேற்றார்போல் அன்றாட விஷயங்களைக் கவனிப்பது இச்சமய நிறுவனத்தை ஒழுங்குடன் நடத்திச் செல்ல உதவுகின்றது.

திருவாவடுதுறை மடத்தின் சிறப்புக்கள் என பல விஷயங்கள் இருக்கின்றன. அதில் ஒரு குறிப்பிடத்தக்க சிறப்பு அம்சமாக ஒரு விஷயத்தைக் கூறலாம். அதாவது, சைவ மடங்கள் ஒழுக வேண்டிய அன்றாட நடைமுறை கடமைகள் பற்றிய விஷயங்களை வரையறுத்து அதனை மடங்களுக்குள்ளே பயன்படுத்த வேண்டிய சட்டமாக்கி அறிமுகப்படுத்திய சிறப்பு இந்த மடத்திற்கு உரியதாகின்றது. இதனைப் பற்றி பின்னர் ஒருமுறை இதே தொடரில் விளக்க முயற்சிக்கின்றேன்.

குருபூஜை நிகழ்வு மட்டுமல்ல. திருவாவடுதுறை மடத்தின் சம்பிரதாயங்கள், ஆதீனகர்த்தரின் அன்றாட நடவடிக்கைகள் என பல முக்கிய விஷயங்களைப் பதிந்து வைத்துள்ள ஒரு ஆவணமாகவும் கூட  என் சரித்திரம் நூல் விளங்குகின்றது. மடத்தின் அன்றாட நிகழ்வுகளின் தன்மையில் தற்காலத்தில் சில மாற்றங்கள் காலத்தின் தேவைக்கேற்ப நடந்திருக்கலாம். ஆனால் இன்றைக்கு 180 ஆண்டுகளுக்கு முன்னர் திருவாவடுதுறை மடத்தில் ஒவ்வொரு நாளும் நிகழ்ந்த  அன்றாட நிகழ்வுகளைப் படம் பிடித்தார் போலக் காட்டும்  சில பகுதிகள்  வழி திருமடத்தின் அன்றாட விஷயங்களை அறிந்து கொள்ள வாசகர்களுக்கு இந்த நூல் உதவுகின்றது என்பதில் சந்தேகமில்லை.

அச்சமயத்தில் ஆதீனகர்த்தராக இருந்தவர் ஸ்ரீலஸ்ரீ சுப்பிரமணிய தேசிகர் அவர்கள். இவரது பொழுது போக்கு என்பதே நூல்களை வைத்துக் கொண்டு பாடம் சொல்வது தானாம். காலை முதல் இரவு தூங்கச் செல்லும் வரை  பெரும்பாலும் தம்பிரான்களுக்கும் பாடம் கேட்க வருவோருக்கும் பாடம் சொல்வதிலேயே இவரது பொழுதுகள் செல்லுமாம்.

சுப்பிரமணிய தேசிகரது  அன்றாட செயல்பாடுகள் என்பவை ஒரு வழக்கமான சம்பிரதாயமாக இருந்து வந்திருக்கின்றது. அதிகாலை ஐந்து மணிக்கு முன்னரே  எழுந்து விடுவாராம். மடத்திலிருந்து ஏறக்குறைய அரை மைல் தூரத்திலிருக்கும் காவிரிக்கரைக்கு நடந்தேதான் செல்வாராம். இவர் செல்லும் போது இவருடன் தவசிப் பிள்ளைகள் உதவியாக ஆசனப் பலகை, மடி வஸ்திரப் பெட்டி, மற்றும் தேவையான பொருட்களுடன் செல்வார்களாம். காவிரிக்கரைக்குச் சென்று வரும் வழிப்பாதயில் மருத மரங்கள் இரு பகுதிகளிலும் நிறைந்திருக்குமாம். அச்சாலையில் தேசிகர் ஸ்நானம் செய்து முடித்து வரும் போது அவர் உடன் பேசிக் கொண்டு வருவதற்காகவே சிலர் சாலைகளில் காத்திருப்பராம்.

வரும் வழியிலேயே சமாதித் தோப்பு உள்ளது. இங்கு மடத்தின் முன்னாளையை தலைவர்களாக இருந்தவர்களின் சமாதிக் கோயில்கள் உள்ளன. இவற்றை நான் திருவாவடுதுறை மடம் சென்ற போது நேரில் சென்று பார்த்தேன். சமாதிக் கோயில்களில் வழிபட்டு விட்டு மாசிலாமணீஸ்வரர்  ஆலயம் வந்து சுவாமி தரிசனம் முடித்து பின்னர் மடத்திற்குச் செல்வாராம். இப்படிச் செல்கையில் ஆலயத்தின் கிழக்குப் பகுதியில் உள்ள துணைவந்த விநாயகருக் குசம்பிரதாயமாக சிதர் தேங்காய் உடைப்பார்களாம். இக்காட்சியை  இக்குறிப்புக்களைக் கொண்டு உருவகம் செய்து பார்க்கும் போது இதுவே ஒரு சிறிய விழா போலத் தோன்றுகின்றது. காலை  வேளையிலேயே உடலுக்கு ஆரோக்கியம் தரும் வகையில் நடைப்பழக்கமும் தேசிகருக்கு அமைந்திருந்தது என்பதையும்  இக்குறிப்புக்களால் அறிய முடிகின்றது.

இந்தச் சடங்குகள் முடிந்து மடத்திற்கு வந்ததும் முதலில் திருமாளிகைத்தேவர் தரிசனம், பின்னர் ஓதுவார்கள் குருமுதல்வர் நமச்சிவாய மூர்த்தி சுவாமிகள் அருளிய ஸ்ரீ பஞ்சாட்சர தேசிகர் மாலையிலிருந்து பத்துப் பாடல்களை ஓத ஸ்ரீ நமச்சிவாய மூர்த்தி சுவாமிகள் சன்னிதியில் தரிசனமும்  நடைபெறுமாம். ஒவ்வொரு பாடல்கள் சொல்லி முடிந்ததும் தேசிகர் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்குவாராம், இப்படி பத்து பாடல்களுக்கும் 10 முறை என இச்சடங்கு நடைபெறுமாம். இதன் பின்னர் மடத்திலிருப்போர் அனைவருக்கும் தேசிகரே விபூதி வழங்கிவிட்டு தனது ஆசனமான ஒடுக்கத்திற்கு வந்து அமர்வாராம். இப்படி அவர் வந்து அமரும் போது காலை மணி எட்டாகிவிடும் என்ற குறிப்பையும் காண முடிகின்றது.

ஒடுக்கத்தில் வந்து அமர்ந்ததும் வந்திருக்கும் யாசகர்களுக்கு சன்மானம் அளித்து அனுப்பி வைப்பதும் தேசிகருக்கு ஒரு கடமையாக இருந்திருக்கின்றது. அன்றைய பொழுதில் யாரேனும் யாசித்து வரவில்லையென்றால் சற்று வருத்தமும் அவருக்கு ஏற்படுமாம். இவர் காலையில் உணவு உட்கொள்வதுமில்லை. யாசகர்களை அனுப்பி விட்ட பிறகு பாடம் சொல்லுதலை ஆரம்பித்து விடுவார்களாம்.

இடையில் பாடம் நடந்து கொண்டிருக்கும் போதே யாரேனும் வித்துவான்கள் தேசிகரைப் பார்க்க வந்திருந்தால் அவர்களைத் தேசிகரைச் சந்திக்க அனுமதித்து வந்திருந்தவர் எந்த  விஷயத்தில் வல்லமை உள்ளவரோ அந்த விஷயத்தைப்பற்றி பேசச்சொல்லியோ, பாடச் சொல்லியோ கேட்டு தானும் சம்பாஷித்து மகிழ்வாராம் தேசிகர்.அப்படி வருபவர்கள் கலை ஞானமோ கல்வி ஞானமோ உள்ளவர்களாக இருந்தால் மடத்திலேயே  சில காலங்கள் தங்கியிருந்து செல்ல வேண்டும் என்ற அன்பு வேண்டுகோளையும் மனமாரச் சொல்வாரம். இப்படிப் பல வித்துவான்களைப் பாராட்டி ஆதரித்து கலையும், இலக்கியமும், சைவமும், தமிழும் வளர சுப்பிரமணிய தேசிகர் ஆதரவளித்திருக்கின்றார் என்ற விஷயங்களை என் சரித்திரம் வழியாக அறிந்து கொள்ள முடிகின்றது. இத்தகைய புரவலர்கள் பலரது ஆதரவினால் பல கல்வி மான்கள் உருவாகும் நிலையும், கல்வியும் ஞானமும் நிலைத்து செழித்தும் வளரும் நிலையும் அமைந்திருந்தது என்பதையும் கூட நன்கு உணர முடிகின்றது.


ஸ்ரீலஸ்ரீ சுப்பிரமணிய தேசிகர்

தொடரும்...

சுபா