Tuesday, August 23, 2016

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 100




என் சரித்திரம் நூலோடு எனது உலா இன்றுடன் 100வது பதிவை எட்டுகின்றது. இத்தொடரில் என்னுடைய,  அதாவது 2012ம் ஆண்டு ஜூலை மாதம் வெளிவந்த முதல் பதிவில்,   நான் குறிப்பிட்டிருப்பது போல என் சரித்திரம் நூலை நான் எனது இளம் பிராயத்தில் முதலில் வாசித்திருக்கின்றேன். பின்னர் மீண்டும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு 2012ம் ஆண்டு லா பால்மா தீவிற்குச் சென்றிருந்தபோது, அந்த ஒரு வார விடுமுறை காலத்தில் மீண்டும் வாசித்தேன். 

முன்னர்  எனது பதின்ம வயதில் படித்ததற்கும் இப்போது மீண்டும் வாசிப்பதற்கும் புரிதலில் எத்தனையோ வேறுபாடுகளை நான் உணர்ந்தேன்.  உ.வே.சாவின் இந்த நூலை வாசிப்பது என்பது வேறு. அதில் அவரது ஒவ்வொரு சொல்லுக்கும் வாக்கியங்களுக்கும் பின் உள்ள பொருளுடன் இணைந்து பயணிப்பது என்பது வேறு. முதல் வாசிப்பில் எனது அனுபவம் என்பது சொல்லுக்குச் சொல், வாக்கியத்துக்குப் பின் வாக்கியத்தின் பொருள் என்ற அளவில் அமைந்தது. எனது அடுத்த வாசிப்பிலோ அனுபவம் மாறுபட்டது. இந்த மாறுபட்ட அனுபவத்திற்கு மிக முக்கிய காரணமாக இருப்பது தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னாக்கப்பணிகளில் எனது ஈடுபாடும் அதில் எனது செயல்பாடுகளும். 

எனது கடந்த 17 ஆண்டுகால தமிழ் மரபு அறக்கட்டளை களப்பணி அனுபவத்தில், தமிழ் மொழி தொடர்பான பல முயற்சிகள் நிகழ்ந்துள்ளன. மின்னாக்கப்பட்டறைகள், ஆவணத் தேடல்கள், ஆவணப்  பாதுகாப்புப்பணிகள், வாசிப்புக்கள், ஆய்வுகள், சொற்பொழிவுகள்.. இப்படித் தமிழ் மொழி தொடர்பான நடவடிக்கைகள்  என் தேடலையும் அதன் வழி நிறைவேறுகின்ற ஆக்கச்செயல்களையும்  சாத்தியப்படுத்தியிருக்கின்றன. அந்த ஒவ்வொரு காரியத்தின் பின்னனியிலும்  அமைந்த உழைப்பு என்பது எளிமையான பாதைகளை மட்டுமே கொண்டதல்ல. பல நேரங்களில் ஏமாற்றங்கள். பல நேரங்களில் தோல்விகள். பல வேளைகளில் சோர்வும் அயர்வும், என முயற்சிகளின் தொடர்ச்சியை பாதிக்ககூடிய, தடைகளை உருவாக்கக் கூடிய அனுபவங்கள் பலவற்றை இந்தக்  களப்பணி அனுபவம் எனக்குக் கொடுத்திருக்கின்றது. இந்தக்  கடின முயற்சி படிப்படியான  வெற்றியையும் அளிக்கத் தவறவில்லை.  இளம் தலைமுறையினரிடையே வரலாற்றுப் பாதுகாப்பு, புராதனச் சின்னங்கள் பாதுகாப்பு என்ற சிந்தனைகளைக் கொண்டு செல்ல வேண்டும் என்ற எண்ணமும் என் மனதில் நிரைந்திருப்பதால் இப்பணிகள் தொய்வில்லாது தொடர்கின்றன.  இத்தகைய பணிகளில் இருக்கும் போது, வாழ்க்கையில் தனது தமிழ்க்கல்வித்தேடலுக்கு மிக முக்கிய இடத்தை அளித்த உ.வெ.சா எழுதிய அவரது சரித்திரம், ஒரு வகையில்  அதே போன்றதொரு ஆர்வத்தில் ஈடுபட்டிருக்கும் எனக்கும்  உந்துதலாக அமைந்து விட்டது என்பதை நான் மறுப்பதற்கில்லை.

என் சரித்திரம் நூலில் என்னை மிகக் கவர்ந்த பல செய்திகள்  இருக்கின்றன. அவை எல்லாவற்றிலும் மிக முக்கியமாக நான் காண்பது, ஒரு ஆசிரியர் தன் மாணவருக்குக் காட்டும் அன்பும், ஒரு  மாணவர் தன் ஆசிரியருக்குக் காட்டும் அன்பும். இது போலியான மரியாதை அல்ல. ஆத்மார்த்தமான நேசத்தின் விளைவால் தோன்றும் உணர்ச்சிகளின் அனுபவங்கள்.

மகாவித்வான்  மீனாட்சி சுந்தரம் பிள்ளை தன் மாணாக்கர்களிடத்தில் கல்வி போதித்தலோடு தன்  அன்பினை பகிர்ந்து கொண்ட தன்மை என்பது, ஆசிரியர்  தொழிலின்  மதிப்பை மிக உயர்த்திக் காட்டும் நல் உதாரணம். மாணவர் என்போர், கல்வியே உயிராகக் கருதி, அக்கல்வியத் தரும் ஆசானே அனைத்தும் என்று எண்ணும் எண்ணத்திற்கு உதாரணமாக உ.வே.சா திகழ்கின்றார்

கல்வியில் நாட்டம் உள்ள அனைவருக்குமே இவர்கள் இருவரும் மிகச் சிறந்த  உதாரணங்கள் எனக் கருதுகின்றேன். 

இந்த நூலில் வாசிப்போர் கண்களில் நீரை வரவழைக்கும் உணர்ச்சிகரமான பகுதிகள் சில உள்ளன. குறிப்பாக மகாவித்வானின் மறைவு. விடுமுறையில் இருக்கின்றோம், நூலை வாசிக்கின்றோம் என்பதையும்  மறந்து, இப்பகுதியை வாசித்துக் கொண்டிருக்கும் போது என் கண்களில் கண்ணீர் வழிந்ததை என்னால்  இன்றும் மறக்க இயலவில்லை. அவரது துக்கத்திற்குள் வாசிப்போரையும் அழைத்துச் சென்று  அவர் துயரை பகிர்ந்து கொண்டுள்ளார் உ.வே,சா என்றே கூறுவேன்.

என் சரித்திரம் உ.வே.சாவின் இறுதிக்காலங்களில் அவர் கைப்பட எழுதியவை. அதுமுடிவுறும் முன்னரே அவர் மறைந்தார். ஆயினும் கூட எழுதிய பக்கங்களின் எண்ணிக்கையில் ஏறக்குறைய 60% க்கும் குறையாமல் தனது ஆசிரியர் தொடர்பில் அமைந்த செய்திகளிளேயே உ.வே.சா வலம் வருகின்றார். அதன் பின்னர்  பெரும்பாலும் தனது ஆசிரியர் தொழில், தனது பதிப்புப் பணிகள் என செல்கின்றது. சீவக சிந்தாமணிப் பதிப்பு அவர் வாழ்க்கையில் ஒரு முக்கிய மைல்கல் என்பதை அவர் இந்த  நூலில் அதற்குக் கொடுத்திருக்கும் முக்கியத்துவததைக் கொண்டு உணர முடிகின்றது.

உ.வே.சா வலம் வரும் வழியே நாமும் உலா செல்வோம்.

உலா தொடரும்..!
சுபா

Sunday, August 21, 2016

ஜோக்கர் - திரைப்படம்

நேற்று மாலை ‪#‎ஜோக்கர்‬ தமிழ்த்திரைப்படம் பார்த்தேன். திரைப்படமா, நிஜ நிகழ்வா என பிரித்தரியமுடியாத படி இந்தத் திரைப்படம் இருக்கின்றது.

ஒவ்வொரு வீட்டிலும் கழிப்பறை என்பது அத்தியாவசியமான ஒன்று. இதற்கு மக்கள் போராட வேண்டியிருக்கின்றதே. அந்தப் போராட்டத்தைக் கூட சாதகமாக்கிக் கொண்டு அதில் சுய லாபம் பார்க்கும் கூட்டமாக சிலர் இருக்கின்றனரே, என்ற வேதனையை இந்தத் திரைப்படம் என்னுள்ளே ஏற்ப்படுத்தியது.

எளிய மக்கள் வாழவும் முடியாது சாகவும் முடியாது என்பது பரிதாபமானது. கழிப்பறை பல வீடுகளில் இன்றளவும் கூட இல்லை என ஒரு நிலை இருப்பது இதுவரை ஆண்டு வந்த அரசுகள் பொதுமக்களுக்கான தம் கடமைகளைச் சரியாக ஆற்றவில்லை என்பதற்கான அறிகுறிதான். சுதந்திர இந்தியாவில் இன்னமும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மக்கள் கழிப்பறை வசதி வீட்டில் இல்லாது இருக்கின்றார்கள் எனும் போது ஆடம்பரமான அரச நிகழ்வுகளுக்கு மட்டும் கோடிக்கணக்கில் பணம் செலவழிக்க மனம் வருகின்றதே என்பது வருந்த வைக்கும் ஒரு விசயம் என்பதை புறந்தள்ளி விட்டுப் போக இயலவில்லை.

இவ்வகை போராட்டங்களில் பொது மக்கள் ஒன்றிணைந்து குரல் கொடுத்தால் தான் இந்தப் பிரச்சனைகள் ஒரு பிரச்சனை என்றே பார்க்கப்படும். ஆக, பொதுமக்கள் இத்தகைய சமூகப் போராட்டங்களில் இணைந்து கொண்டு அவற்றை முன்னெடுக்கும் போராட்டங்களுக்கு ஆதரவு தரவேண்டும்.

தமிழ்த்திரைப்படம் கனவுலக தொழிற்சாலை அல்ல. நிஜத்தையும் காட்டும் படங்கள் எடுக்கலாம் என்பதற்கு உதாரணமாக இந்தத் திரைப்படம் இருக்கின்றது. படத்தின் இயக்குனருக்கும் படத்திற்ககா உழைத்த அனைவருக்கும் என் பாராட்டுதல்களோடு இத்தகைய விழிப்புணர்ச்சியை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும் என்ற சிந்தனைக்காக நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
-சுபா

Sunday, August 7, 2016

அடிமை முறையும் தமிழகமும்

அடிமை முறையும் தமிழகமும் – நூல் பற்றிய என் சிந்தனைகள் 

ஆ.சிவசுப்பிரமணியன் 


ஆ.சிவசுப்பிரமணியணின் நூற்களை இந்த ஆண்டு தான் அறிமுகம் கிடைக்கப்பெற்று நான் வாசிக்க ஆரம்பித்தேன். பாளையங்கோட்டையில் நண்பர்முனைவர்.கட்டளை கைலாசம் அவர்களுடன் பேசிக் கொண்டிருந்த போது, எனது மானுடவியல் தொடர்பான ஆர்வத்தைப் பார்த்து அவர் ஆ.சிவசுப்பிரமணியணின் நூற்களை வாசிக்க வேண்டும் என குறிப்பிட்டதும், பின்னர் முனைவர்.தொ.பரமசிவம் அவர்களுடன் பேசிக் கொண்டிருந்த போது அவரும் வலியுறுத்திப் பேசி, சில புத்தகங்களின் பெயரைச் சொல்லி உடனே வாசிப்பது நல்லது எனச் சொன்னதும் எனக்கு இவரது நூற்களை வாங்கி வாசிக்க வேண்டும் என்ற ஆர்வத்தைத் தூண்டியமையால் இவரது ஆக்கங்கள் சிலவற்றை வாசிக்கத் தொடங்கினேன். தமிழ்க்கிருத்துவம், தமிழக வரலாற்றில் தரங்கம்பாடி, ஆகியவற்றைக் கடந்த சில வாரங்களில் வாசித்து முடித்து, இன்று அடிமை முறையும் தமிழகமும் என்ற நூலை வாசித்தேன். அதிகாலை தொடங்கி மதியம் நூலை வாசித்து முடித்தாகிவிட்டது. நூலிற்குள் நான் செய்த பயணமோ சங்க காலம் தொடங்கி இக்காலம் வரை, என்றமைந்த நீண்ட பயணம்! 

நூலில் ஆசிரியர் அடிமை முறையின் தோற்றத்தை பற்றி விளக்குவதோடு தொடங்குகின்றார். உலகின் உயர்ந்த நாகரிகங்களாகப் போற்றப்படுகின்ற அனைத்து நாகரிகங்களிலும் பிரிக்கப்படமுடியாத வரலாற்று அங்கமாக அடிமை முறை இருந்தமையை இப்பகுதி விளக்குகின்றது. உலக அதிசங்களுள் இடம் பெறுகின்ற சீனப்பெருஞ் சுவரும் எகிப்தின் பிரமிடுகளும் அடிமைகளின் உழைப்பாலும் ரத்தத்தாலும் கட்டியவை தான் என வாசித்த போது உலக அதிசயங்களின் மேல் இருந்த பிரமிப்பு கரைந்து அவற்றைக் கட்டியவர்களின் வலியே மனதை நிறைத்தது. 

உலகப் பார்வையிலிருந்து சுருக்கி தமிழகத்திற்கு வருகின்றார். சங்க காலத்தில் அடிமை முறை இருந்தது. ஆம். இருந்தது எனச் சொல்லி, போரில் தோற்ற மன்னர்களின் மகளிர் „கொண்டி மகளிர்“ என இருந்தமையை பட்டினப்பாலை ஆசிரியர் குறிப்பிடுவதைச் சுட்டி விளக்குகின்றார். திருவள்ளுவரின் இரு குறள்களைச் சுட்டி, அடிமை முறை இருந்தது என்பதோடு, உள்ளூர் அடிமைகளென்பதோடு மேலை நாட்டு அடிமைகளை மன்னர்கள் வாங்கி வாயிற்காப்பாளராக வைத்திருந்தமையையும் குறிப்பிடுகின்றார். 

அடிமை முறை வளர்ச்சியுற்றதும் அதன் தன்மையில் அதிகார பலம் சார்ந்ததாகவும் வலுப்பெற்ற காலம் பிற்காலச் சோழர் காலமெனச் சொல்லி, போர்க் காலத்தில் அடிமைகள் உருவாக்கப்படுதலும் அவர்களின் உடல் உழைப்பு எவ்வகைப் பணிகளுக்கு பயன்பட்டன என்றும் விளக்குகின்றார். முக்கியமாக வீட்டடிமைகள் என்ற விளக்கம் புதுமையானது, தேவையானது. ஏனெனில், அடிமைகளாக தம்மை கோயில்களுக்குப் பெண்டிரும் சில ஆண்களும் தம்மை விரும்பி அர்ப்பணித்துக் கொண்டார்கள் என்ற சாயம் பூசப்பட்ட கூற்றுகளுக்கு மாற்றாக, பெற்றோர் பட்ட தீரா கடன் என்ற காரணத்தினாலும் குழந்தைகள் அடிமைகளாக விற்கப்பட்ட நிலையை விரிவாகக் காணமுடிகின்றது. அப்படி விற்கப்பட்டோர் அவர்களை வாங்கியவர்களுக்கு அடிமைகளாக ஆக்கப்பட்டனர். 

அந்தணர்களும், வேளாளர்களும், அரசர்களும், அரசு அதிகாரிகளும் கோயிலுக்கும், மடங்களுக்கும் அடிமைகளைத் தானமாகவோ விலைக்கோ கொடுத்த செய்திகளைக் குறிப்பிடுகின்றார். நினைத்துப் பார்க்கின்றேன். இந்தக் கொடுமையான நிலையில் அடிமைப்படுத்தப்பட்ட மக்களின் துன்பம் ஒரு பொருட்டாக யாருக்கும் படாத நிலையில் பண்டமாற்று போல இந்த மனிதர்கள் நடத்தப்பட்டிருக்கின்றனர் என்பதை அறிய முடிகின்றது. ஒரு சான்றாக கி.பி 1235ம் ஆண்டு கல்வெட்டு என அறியப்படும் திருக்கொறுக்கையில் உள்ள கோயிலில் உள்ள கல்வெட்டு 100க்கும் மேற்பட்ட ஆண் பெண் அடிமைகளின் பெயர்களைத் தாங்கி நிற்பது பற்றிய செய்தியை அறிய முடிகின்றது. 

தேவரடியார்கள் என்போர் சமூகத்தில் உயர் நிலையில் இருந்தார்கள், எனவே அவர்கள் தெய்வீக அடிமைகள், என பகட்டான சொல்லுக்குள் சொல்லிவிட முடியாது என பளிச்சென்று விளக்குகின்றார். தானே தம்மை கோயிலுக்கு அர்ப்பணித்துக் கொண்டோம் என்பதற்கும், பண்டமாற்று போல ஒரு கோயிலிருந்து மறு கோயிலுக்கு விற்பது என்பது ஒரு வகை வியாபார நிலை என்பதையும் கணக்கில் கொள்ளும் போது, கோயில் அடிமைகளின் நிலையில் வெவ்வேறு தன்மைகள் இருந்தன என்பதையும், அனைத்துத் தேவரடியார்களும் பக்தி உணர்வினால் கோயில் பணிக்கு வந்தோர் என்று கூறிவிடமுடியாது என்பதையும் தெளிவு படுத்துகின்றார். 

அடிமை முறையில் கிடைக்கும் தண்டனைகளின் துரம் தாங்காது ஓடிப்போனோரைக் கண்டு பிடித்து , தண்டித்து மீண்டும் வேலை வாங்கிய விசயம் 3ம் குலோத்துங்கன் கல்வெட்டாக திருவாலங்காட்டு கல்வெட்டில் உள்ளமையைச் சான்று தருகின்றார். 

கொடுமையிலும் கொடுமை என்னவென்றால், அடிமையானோர் தாம் மட்டும் அடிமை என்றில்லாமல் தங்கள் பரம்பரையே அடிமை என எழுதிக் கொடுத்த சான்றுகள் சில ஓலைச் சுவடிகளில் இருப்பதைக் காண்கின்றோம். 
..சந்திராதித்தர் உள்ளவரை 
..பரம்பரை பரம்பரையாக 
..வழியடினை 
..யானும் எம் வம்சத்தானும் 
..இவர்களையும் இவர்கள் வர்க்கத்தாரையும் 
..எங்களுக்கு கிரமாகதமாய் வருகின்ற 

என்ற வாக்கியங்களின் படி வழிவழியாக தன் சந்ததியினரையும் அடிமைகளாக்கிய நிலைய ஓலை நூல்களிலிருந்து அறிகின்றோம். 

பின்னர் நாயக்கர் கால ஆட்சியில் அடிமை முறை பற்றி ஆய்வு செல்கின்றது. தமிழகத்தைப் பொறுத்தவரை நாயக்கர் காலத்தில் சமூக அநீதிகள் என்பன படிப்படியாக அங்கீகாரத்துடன் வளர்த்தெடுக்கப்பட்ட கால கட்டம். 13ம் நூற்றாண்டில் இபான் பத்துடா என்ற ஆப்பிரிக்க முஸ்லீம் பயணி இரண்டு அடிமைப் பெண்களை தாம் வாங்கியது பற்றி தனது பயனக்குறிப்பில் எழுதியிருக்கின்றார். பல்வேறு வகையான அடிமை சாசனங்கள் இந்தக் காலகட்டத்தில் இருந்தமை ஓலைகளிலிருந்து காணமுடிகின்றது. உதாரணமாக ஒரு ஓலைப்பகுதி இப்படி செல்கின்றது. 
„ பறையன் பேரில் அமை சாதனம் பண்ணி குடுத்தபடி யென்னுதான பறையன் சந்தோசி மகன் ராயனை கொள்வார் கொள்ளுவார் யென்றுனான் முற்கூற கொள்வோம் கொள்வோம். 
.. 
பவுத்திர பாரம்பரையம் சந்திர சூரியாள் உள்ளமட்டும், கல்லும் காவேரியும், பில்லும் பூமியும் உள்ளமட்டும் ஆண்டு அனுபவிச்சுக் கொண்டு யெய்ப்பற்பட்ட தொழிலும்...“ 

உள்ளூரில் அடிமைகள் விற்றல் வாங்கல் என்பது மட்டுமன்றி அயல் நாடுகளுக்கு அடிமைகளாக்கப்பட்டோர் விற்கப்பட்டது பற்றியும் அறிகின்றோம். கிபி 1660ல் நடந்த ஒரு விவரம் பற்றி ஏசு சபை ஆவணம் தெரிவிக்கின்றது. அதாவது சொக்கநாத நாயக்கர் (1659-1682) காலத்தில் தமிழகத்தில் பஞ்சம் அதிகரிக்க மக்கள் உணவின்றி வாடிச் செத்தனர். ஒரு சிலரை டச்சுக்காரர்கள் உணவளித்து சற்று தேற்றிக் கப்பலேற்றி அடிமைகளாகக் கொண்டு சென்று விற்றிருக்கின்றனர். என்ன கொடுமை!! 

தொடர்ச்சியாக ஆங்கில ஆட்சிமுறை காலத்தில் கொத்தடிமைத்தனம் பற்றிய செய்திகள் வருகின்றன. பல ஆவணங்கள் அக்கால அடிமை முறை பற்றி விளக்குகின்றன. ஒரு சில மீட்புப்பணி போன்றவையும் நடந்தாலும் ஆங்கிலேய ஆட்சியாளர்களும் இந்திய சூழலில் உள்ள கொத்தடிமை முறை அங்கீகரிக்கப்பட்ட ஒரு நடைமுறை என்றே அதிகார வர்க்கத்துக்குத் துணையாக இருந்து கொண்டு அடிமைத்தனத்தை ஒழிக்க முழு மனதுடன் ஒத்துழையாத நிலையையும் காண்கின்றோம். உதாரணமாக 1800ல் தஞ்சை மாவட்ட கலெக்டர் பள்ளர் பறையர் குல அடிமைகள் அம்மாவட்டத்திலிருந்து வெளியேறிய போது நில உடமையாளர்களிடம் பணிபுரிவதை நிர்ப்பந்திக்க வேண்டும் என்று போலீசுக்கு ஆலோசனை கூறிய சான்றினைக் காண்கின்றோம். இன்னொரு உதாரணத்தில் , 1828ல் பிராமண நிலவுடமையாளரிடம் பணிபுரிந்த சில பள்ளர், குல அடிமைகள் திருச்சி மாவட்டம் வந்து விட, அவர்களைக் கண்டித்து திருச்சி கலெக்டர் ஒரு கடிதம் எழுதித் திருப்பி அனுப்பியுள்ளார். இப்படி வரிசையாக சில உதாரணங்கள் அடிமைகளாக இருந்தோர் மீள நினைத்த போதிலும் அரசாங்கமே அதற்கு முட்டுக்கட்டையாக இருந்த நிலையக் காட்டுவதாக அமைகின்றன. 

„அவர்கள் இந்த மண்ணின் அடிமைகள். அவர்கள் சார்ந்திருக்கும் பண்ணையை விட்டுச் செல்லும் உரிமையற்றவர்கள்“ என கலெக்டர் ஒருவர் எழுதிய கடிதம் அக்காலக் கொடுமைகளை நமக்குப் புலப்படுத்துவதாக உள்ளது. 

இந்தியாவில் அடிமை ஒழிப்பு சட்டம் 1843ல் நிறைவேற்றப்பட்டது. ஆனால் படியாள் முறை, பண்ணையாள் முறை என்ற வடிவில் அடிமைத்தனம் தொடராமல் இல்லை. எழுதப்படிக்கத் தெரியாத அடிமைகளை சான்றிதழ்கள் மூலம் ஏமாற்றி பண்ணை கூலியாட்களாக வைத்துக் கொள்ளும் நிலையையும் சுட்டிக் காட்டுகின்றார். 

„தமிழகத்தில் அடிமைகள் இருந்தது, விலங்குகளைப் போல அவர்களுக்குச் சூட்டுக்குறி இடப்பட்டதும், பொருள்களைப் போல விற்கப்பட்டதும், வாங்கப்பட்டதும், தானமளிக்கப்பட்டதும், சீதனமாகக் கொடுக்கப்பட்டதும், ஆள்பவர்களின் துணையுடன் அடக்கி ஒடுக்கப்பட்டதும் வரலாற்று ரீதியில் மறுக்கவோ, மறைக்கவோ முடியாத உண்மையாகும்“ என ஆசிரியர் நூலின் இறுதிப்பகுதியில் குறிப்பிடுகின்றார். 

அடிமைத்தனத்தின் இன்னொரு வகையாக ஒப்பண்டஹ்க் கூலிகள் மூரையைச் சுட்டிக் காட்டுகின்றார். இலங்கைக்கு தேயிலைத்தோட்டத்தில் உழைக்க ஒப்பண்டஹ்க் கூலிகளாகச் சென்றோர், மலேயா, சிங்கை , தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளுக்குச் சென்றோரும் அடிமை முறையில் ஒரு வகையை அனுபவித்தவர்கள் தாம். 

அடிமைகளாக மக்கள் ஆக்கப்படும் செயல்பாடுகள் சட்ட ரீதியாகத் தடை செய்யப்பட்ட போதிலும் இன்றும் வேறு வகையில் அடிமைத்தனத்தைப் பிரயோகிக்கு நடைமுறை இருக்கத்தான் செய்கின்றது. அடிமை முறை என்ற நடைமுறையைச், „சடங்கு, சம்பிரதாயம், வழி வழி ஆச்சாரம்“ என்ற அழகான சொற்களால் மூடிமறைக்கும் முயற்சிகளும் தொடர்ந்து நடந்து கொண்டுதானிருக்கின்றன. 

தான் அடிமை எனவே அடிபணிந்து போவேன், என ஒருவர் அடிமைத்தனத்திலிருந்து மீளாதிருக்கும் வகையில் மூளைச்சலவை செய்யப்பட்டிருப்பதும் நீண்ட கால சிந்தனையின் பிரதிபலிப்புத்தான். 

இந்த நிலையில், நல்ல கல்வி மட்டுமே இந்த அடிமைத்தளையிலிருந்து மனிதர்களை முற்றிலுமாக விடுவிக்கக் கூடிய பண்டோரா மாயப்பெட்டி! 

----------------------------------------
பதிப்பு - நியூ சென்சுரி புக் ஹவுஸ், சென்னை

Monday, August 1, 2016

கபாலி திரைப்படம் பற்றிய சில சிந்தனைகள்..!

திரைப்படத்தின் ஆரம்பம் முதல் முடிவு வரை கதைத்தொடர்ச்சி, அதனை படமாக்கிய விதம், காட்சிகளுக்கு ஏற்ற பின்னனி இசை என ஒவ்வொன்றும் என் மனதைக் கவர்ந்தன.
 கபாலி ஒரு பொழுது போக்கு வகையிலான ஒரு படம் என்பதையும் மீறி பல்வேறு தரப்பினரின் விமர்சனங்களையும்  இப்படத்திற்கான முயற்சி தொடங்கிய நாள் தொட்டு உருவாகி இருந்ததையும், பின்னர் படம் வெளிவந்த பின்னர் எழுத்துலக பிரபலங்கள் தொடங்கி பலரும் இப்படம் தொடர்பான  தங்கள் கருத்துக்களைப் பதிந்து வருகின்றார்கள் என்பதையும் வாசித்து வருகின்றேன்.

மலேசிய சூழலைப் பின்னனியாகக் கொண்ட படம் என்பது இப்படத்தின் மேல் எனக்குத் தனிப்பட்ட முறையில் இருந்த ஒரு ஈர்ப்பு. தமிழ்ப்பட நட்சத்திரங்களில் பலரது நடிப்பில் வந்த திரைப்படங்களைப் பார்த்து கதை பிடிக்கும் போது அதில் லயித்துப் போவேன்.
படம் முழுவதும் அனைத்து கதாபாத்திரங்களும் மிகச்சிறப்பாக நடித்திருக்கின்றனர். ஒருவரையும் குறை சொல்லமுடியவில்லை.  தனித்து நிற்கும் நாயகர்களாக ரஜினிகாந்தின் கபாலி கதாபாத்திரம் நிற்கின்றது. அதற்குப் பக்க துணையாக யோகி, குமுதவல்லி, டோனி லீ, அமீர்,  தமிழ்நேசன், வீரசேகரன், லோகா  ஆகியோரது கதாபாத்திரங்கள் என்னைக் கவர்ந்தன. ஏனைய கதாபாத்திரங்களையும் சொல்லலாம். பட்டியல் நீளும். ரஜினிகாந்திற்கு நடிப்பில் இது ஒரு திருப்புமுனை என்று கருதுகின்றேன். இதே போன்ற சமூக சிந்தனையை மையமாகக் கொண்ட படங்களில் நடிப்பதை நான் வரவேற்கின்றேன்.

மலேசிய தமிழர்களின் வரலாற்றை அதிலும் குறிப்பாக கூலித் தொழிலாளிகளாகத்  தமிழர்கள் புலம்பெயர்ந்த கதை.. தோட்டத் துண்டாடல், சீனத் தொழிளாலிகளுக்கும் இந்திய வம்சாவளி தொழிலாளர்களுக்கும் இடையிலான சம்பள வேற்றுமை, .. அதில் காட்டப்படும் பாரபட்சம் என்பன படத்தில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன. ஏனையோருக்கு இது சாதாரண ஒரு காட்சியாக மட்டும் படத்தில் தோன்றியிருக்கலாம். மலேசிய சூழலில் பிறந்தாலும் மலேசிய காலணித்துவ ஆட்சிகால வரலாற்றை அறிந்தவர்களால் மட்டும் தான் இத்தகைய சில காட்சிகளின் நூதனமான  பின்னனிகளை அறிந்து கொள்ள முடியும்.

படத்தின் தொடக்கம் என்னை மிக கவர்ந்தது. படக்காட்சியில் கவனம் வைத்ததால் நடிக நடிகையர் பெயரைக் கூட  வாசிக்க மறந்து போனேன்.  காவல் துறையின் அறையில் கபாலி பற்றி விவாதிக்கும் காட்சி, முற்றிலும் மலாய் மொழியில் வந்துள்ளது. இது பாராட்டத்தக்கது. இது மிக இயல்பான தன்மையை படத்திற்குத் தந்தது. ஆனால் கீழே அதற்கு தமிழில் மொழிமாற்றம் கொடுத்திருக்கலாம். மாறாக ஆங்கிலத்தில் மட்டுமே காட்டப்பட்ட்து. இதனை ஒரு குறையாகச் சுட்டிக் காட்ட விரும்புகின்றேன். ஏனெனில், ஆங்கிலம் தெரியாத தமிழ் வாசகருக்கு மலாய் மொழிப் பேச்சின் சரியான வாசகங்கள் சரியாகச் சென்று சேர சிரமம்  ஏற்பட்டிருக்கும். அதே போல இறுதிக் காட்சிகளில் டோனி லீ ஒரு பிறந்த நாள் நிகழ்வில் பேசும் சீன மொழிப் பேச்சிற்கும் அதே வகையில் தமிழ் வாசகத்தைக் கொடுத்திருக்கலாம்.

படத்தில் பேசப்பட்ட   பல வாசகங்கள் என்னை மிக மிகக் கவர்ந்தன. குறிப்பாகச் சில காட்சிகள்..
கபாலி சிறையிலிருந்து வெளிவரும் போது காவல் அதிகாரியிடம் பேசுவது..
கபாலி pet shop (விலங்கு பறவைகள் விற்பனை) இடத்தில் வில்லனைத்தாக்கி விட்டு நடந்து வரும் போது பேசுவது..
தோட்டத்து உதவி மேளாளரிடம் சண்டை போடும் போது கபாலி பேசும் வாசகங்கள்..
தமிழ்நேசன் கதாபாத்திரத்தின் பேச்சுக்கள்..
இறுதிக்காட்சியில் வீரசேகரன் கபாலி வசனங்கள் ..
குமுதவல்லியை 25 ஆண்டுகள் கழித்து பார்க்கும் போது குமுதவல்லி பேசும் வாசகங்கள்..
கபாலியை ஊக்கமூட்டும் வகையில் குமுதவல்லி..
..இப்படி  பல காட்சிகளில் வசனங்கள் என்னைக் கவர்ந்தன.

காட்சி அமைப்பும் அக்காட்சிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களும் மிக நுணுக்கமாக ஆய்ந்து தேர்ந்தெடுக்கப்பட்டுல்ளன என்பதைக் காண முடிந்தது.

உதாரணமாக கபாலி சிறையிலிருந்து வெளிவந்து காரில் பயணம் செய்யும் போது தமிழ்நேசனை நினைவு கூறும் காட்சி, துன் சம்பந்தன் கட்டிடத்தைக் கடக்கும் போது வருவதாகக் காட்டப்படுவது, தமிழ்நேசன் - துன் சம்பந்தன் அவர்களைப் போன்ற ஒரு கதாபாத்திரமாக, அதாவது தோட்டத்தொழிலாளர் நலனுக்காக உழைத்த மனிதராக நினைவு கூற வைக்கின்றது.  இறுதிகாட்சி படமாக்கப்பட்ட இடம், அதன் பின்னனியில் இரட்டைக் கோபுரம் ஆகியன இரண்டு ஆளுமைகளுக்கும் சிந்தனைகளுக்கும் இடையில் நடக்கும் போரின் தன்மையை விவரிக்கும் வகையில் ”மெட்டபோரிக்கலாக” அமைந்திருந்த்து.

படத்தில் பின்னனி இசை அபாரம். அதன் தாக்கத்திலிருந்து இன்னமும் நான் மீளவில்லை.
கானா பாலாவின் பாடல், அதற்கான நடனம், காட்சி இவை பிரமாண்டம். மிக ரசித்தேன்.

படத்தில் இயல்பாக மலாய் கலந்த தமிழ் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது.  மலேசியத்தமிழர்களின் தனித்துவமான தமிழிலேயே படம்.. அதே வகையான பேச்சு ஒலி..   எனக்கு இது மிகப் பிடித்தது. ” காடி, நாட்டான், சடையன், வெடப்பு,.. இப்படி பல சொற்கள்..    படம் பார்த்துக் கொண்டிருக்கும் போதே மலேசியாவில் இருந்து கொண்டு அங்கே நடக்கும் ஒரு நிகழ்வை பார்ப்பது போல என்னைத் தடுமாற வைத்து விட்டது.

இரண்டு காட்சிகள் என் கண்களில் கண்ணீரை வரவழைத்தன.
1. பல ஆண்டுகளுக்குப் பின்னர் கபாலியும் குமுதவல்லியும் சந்திக்கும் காட்சி
2. தமிழ்நேசன் கபாலியைச் சந்திக்கும் போது பேசும் காட்சி  
பென்ஸ் கார் மலேசிய மக்களின் கனவு.  இதே வகை மாடலில்   ஒன்றை வீட்டில் வைத்திருந்தோம் . அது படம் பார்க்கும் போது நினைவு வந்த்து.

தனிப்பட்ட முறையில் படத்தின் இயக்குனருக்கு என் நன்றியைச் சொல்லித்தான் ஆகவேண்டும். படத்தில் வரும் இரண்டு கதாநாயகிகளின்  நல்ல கதாபாத்திரங்கள் இப்போதுதான் சினிமா துறை பெண்களை மதிக்க ஆரம்பித்திருக்கின்றது என்ற நம்பிக்கையை எனக்குக் கொடுத்த்து. ஏனெனில் பெரிய கதாநாயகர்கள் நடிக்கும் படங்களில் வரும் கதாநாயகிகள் பெரும்பாலும் அறிவில்லாத அழகு பொம்மைகளாக, தவறு செய்து விட்டு கன்னத்தில் அறை வாங்கி மகிழ்பவர்களாக, முட்டாள்களாக என இருப்பதை விட்டு, அறிவுள்ள, வீரமிக்க, வேலை செய்யத் தயங்காத,  அதே நேரம், அன்பும் கணிவும், தன்னை அழகாகக் காட்டிக் கொள்ளும் தன்னம்பிக்கை மிகுந்த கதாபாத்திரமாக அமைத்திருந்தமை மிகச் சிறப்பு. நாகரிகமான மரியாதையான ஆடை அமைப்பும் மிகச் சிறப்பு.

கூலித்தொழிலாளியாக வந்தோர் கூலிகளாகத்தான் இருக்க வேண்டும் என்பது சட்டமல்ல.  நல்ல வகையில் உழைத்து  முன்னேறக்கூடிய திறமை வாய்ந்த அனைவருமே வாழ்க்கையில் உயர முடியும் அப்படி உயர்பவர்களுக்கு தகுந்த மரியாதையைக் கொடுக்கத்தான் வேண்டும் என்பதை கதை பார்ப்போரை கொஞ்சமாவது சிந்திக்க வைக்கும்.

மலேசிய இந்தியர்களை இப்போது பாதித்திருக்கும் மிக முக்கியச் பிரச்சனைகளாக இருப்பவை கேங்ஸ்டரிசம், போதைப்பொருள் பயன்பாடு ஆகியனதான். இதனை மையமாக வைத்து படம் செய்திருப்பது மிகுந்த பாராட்டுக் குறியது. எப்படியெல்லாம் இளம் தலைமுறயினர் வாழ்க்கையை ஒரு சிலர் சீரழிக்கின்றனர் என நான் மலேசியா செல்லும் போதெல்லாம் நண்பர்களுடன் பேசி வருந்திக் கொண்டிருப்பேன். அதே வருத்தத்தின் பிரதிபலிப்பை இப்படத்தில் எந்த வித ”கோஸ்மெட்டிக் டச்-அப்” ஏதும் இன்றி  உணர்ந்தேன்.

தமிழகத்தின் சாதிக்கொடுமைகள் மலேசியத் தமிழர்கள் மத்தியிலும் பரவி வருகின்றது. சாதியால் மக்களைப் பிரித்து வைத்து உயர் சாதியில் பிறந்தால் தான் மரியாதை உயர்வு என நினைப்போருக்கெல்லாம் சாட்டையடி கொடுப்பது போன்ற வசனங்களும் காட்சி அமைப்புக்களும் பரவலாக வந்துள்ளமை பாராட்டுக்குறியது.  இந்தப் படம் பார்த்த பிறகாவது சாதி சங்கம் வைத்து நடத்திக் கொண்டிருக்கும்  மலேசியத் தமிழர்கள் திருந்தி அவற்றைக் கலைத்து  விட்டு ஒற்றுமையாக நாம் எல்லோரும் தமிழர்கள் என வாழ ஆரம்பிப்பார்கள் என எதிர்பார்க்கின்றேன்.  இந்திய தேசத்தில் இந்தச் சாதி என்னும் தொழு நோயை, தொற்று நோயை அழிப்பது சுலபமான காரியமல்ல.  அதற்கு கபாலி போன்ற, குமுதவல்லி போன்ற அமீர், போன்ற சிந்தனை கொண்டோரும், யோகி போன்ற துடிப்புமிக்க இளைஞர்களும் தேவை.

இப்படம் மலேசியத் தமிழர்களில் கூலித்தொழிலாளியாக வந்து சொல்லொணாத் துன்பதை சந்தித்த மக்களை உலகத் தமிழர்கள் நினைத்துப் பார்க்க ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றது. இதே வரலாற்றுப் பார்வையில் இதுவரை நான்கு ஆவணப்  படங்களை நான் வெளியிட்டிருக்கின்றேன் என்பது எனது வெளியீடுகளை அறிந்தோருக்குத் தெரியும். அவற்றுடன் கபாலியும் உலகத் தமிழர்களுக்கு மலேசிய தமிழர்களின் அதிலும் குறிப்பாகத் தோட்டத் தொழிலாளர் நிலையை காட்டியிருக்கின்றது.  மலேசியத் தமிழர்களைப் பற்றி உலகத்தமிழர்களைப் பேச வைத்த ஒரு படம் என்ற ரீதியில் இயக்குனருக்கும் இதற்காக உழைத்த அனைவருக்கும் ஒரு மலேசியத் தமிழரான எனது பாராட்டுதல்களையும் நல்வாழ்த்துக்களையும் பதிவதில் மகிழ்கிறேன்.

-சுபா