Thursday, November 26, 2020

கல்முகவடிவங்கள் கண்டுபிடிப்பு - துருக்கி

 சுபாஷிணி

நீண்டகால மனித குல நாகரித்தின் சான்றுகளைக் கொண்டிருக்கும் நாடுகளில் துருக்கி சிறப்பு முக்கியத்துவம் பெரும் ஒரு நாடு. பண்டைய தொல் நகரமான Stratonikeia, Muğla பகுதியில் தொடர்ந்து நிகழ்த்தப்பட்ட தொல்லியல் அகழாய்வுகளில் இங்கு கல்முகவடிவங்கள் கிடைத்திருக்கின்றன. 3000 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த நகரில் ஏறக்குறைய 2200 ஆண்டுகள் பழமை என அறியப்படுகின்ற இந்த கல்முகவடிவங்கள் பண்டைய தெய்வ வடிவங்கள், விலங்குகள் ஆகியவற்றை சார்ந்து வடிவமைக்கப்பட்டுள்ளன.



இப்பகுதியில் நிகழ்த்தப்பட்ட தேடுதலில் இதுவரை இத்தகைய 43 கல்முக வடிவங்கள் கிடைத்துள்ளன.

பமுக்காலே பல்கலைக்கழகத்தின் முயற்சியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக நிகழ்த்தப்பட்டுவரும் இந்த ஆய்வு ஒரு திறந்தவெளி அரங்கப் பகுதியில் (Amphitheatre) நிகழ்த்தப்பட்டு வருகின்றது. இந்த முகமூடிகள் இக்கலைக்கூடத்தின் வாயில் பகுதி தொடங்கி அமைக்கப்பட வகையில் உள்ளன. மிகப் பிரமாண்டமான முறையில் இந்த கல்முகவடிவங்கள் திகழ்கின்றன. முழுமையான செய்தி: https://www.dailysabah.com/arts/mythological-masks-unearthed-in-turkeys-ancient-city-of-stratonikeia/news?fbclid=IwAR3He9Zngri58Kd69XoVL4JOENzcEsKnJ5Tbjbl75e-4Cro22OjhNPb2kRE



Wednesday, November 11, 2020

டைம்லர் ரைட்வாகன்



இன்று மிகச் சர்வ சாதாரணமாக உலக நாடுகளில் சாலையின் எல்லா பக்கங்களிலும் மோட்டார் சைக்கிள் வாகனங்கள் செல்வதைப் பார்க்கின்றோம். இது எப்போது உருவாக்கப்பட்டது..? எப்போதிலிருந்து பொது மக்கள் புழக்கத்திற்கு மோட்டார் சைக்கிள்கள் வரத் தொடங்கின என்பதை அறிந்து கொள்வோமா?

அதிகாரப்பூர்வமாக மோட்டார் சைக்கிள் உருவாக்கப்பட்டது 1885 ஆம் ஆண்டு இதே நாளில் தான் (11.11.1885). இதனை உருவாக்கியவர் ஜெர்மனியைச் சார்ந்த கோட்லிப் டைம்லர் மற்றும் விஹெல்ம் மைபாஹ் ஆகிய இருவரும் தான். இந்த மோட்டார் சைக்கிளுக்கு இவர்கள் வைத்த பெயர் டைம்லர் ரைட்வாகன் ( Daimler Reitwagen). இச்சொல்லைத் தமிழில் மொழிபெயர்க்கும் போது டைம்லரின் ஓடக்கூடிய அல்லது இயங்கக்கூடிய வாகனம் எனப் பொருள் கொள்ளலாம்.

இந்த மோட்டார் சைக்கிள் உருவாக்கப்பட்டது ஜெர்மனியின் பாடன் ஊர்ட்டெம்பெர்க் மாநிலத்தின் பாட் கான்ஸ்டாட் என்ற நகரில். நான் இருக்கின்ற லியோன்பெர்க் நகரிலிருந்து ஏறக்குறைய 20 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள நகரம் இது. இங்குதான் டைம்லர் பென்ஸ் தொழிற்கூடங்களும், ஆய்வு நிலையங்களும், தொழிற்சாலைகளும், அருங்காட்சியகமும் இன்று இருக்கின்றன.

இதற்கு முன்னர் மோட்டார் சைக்கிள் இருந்தது தானே என சிலர் கூற முயற்சிக்கலாம். ஆனாலும் எரிபொருள் பயன்படுத்தி இயங்கும் எஞ்சினுடன் அதாவது, இயந்திரத்துடன் உருவாக்கப்பட்ட முதல் மோட்டார் சைக்கிள் இதுவே. இந்த முதல் மோட்டார் சைக்கிளை ஓட்டி பார்த்தவர் டைம்லரின் மகனான பவுல். இவர்தான் இந்த மோட்டார் சைக்கிளை முதன்முதலில் ஓட்டி சோதனைச் செய்தவர்.

இந்த மோட்டார் இயந்திரம் அடிப்படையில் மரத்தால் செய்யப்பட்டது. ஒரு சிலிண்டர் இயந்திரம் மட்டும் இணைக்கப்பட்ட வகையில் இயங்கும் வகையில் இது உருவாக்கப்பட்டிருந்தது. டைம்லர் ரைட்வாகன் உருவாக்கப்பட்ட பின்னர் அதற்கு அடுத்த ஆண்டு இதன் உற்பத்தி தொடங்கப்பட்டது.

வாகனங்களின் உற்பத்தி ஐரோப்பாவில் தொழிற்பரட்சிக்குப் பக்கபலமாக அமைந்தது. பொது மக்களின் பொதுப் போக்குவரத்தை துரிதப்படுத்தியதில் மோட்டார் சைக்கிளின் பங்கு அளப்பரியது. மக்கள் இயல்பாகப் பல இடங்களுக்குச் செல்வதை எளிமைப்படுத்தியது மோட்டார் சைக்கிள் கண்டுபிடிப்பு. இன்று பல்வேறு வடிவமைப்புகளில் கிடைக்கின்ற மோட்டார் சைக்கிள் வண்டிகளுக்கு முன்னோடியானது இந்த டைம்ளரின் ரைட்வாகன். -சுபா

Monday, November 9, 2020

வேட்டைச்சமூகத்தில் பெண்களின் நிலை - தொல்லியல் சான்றுகள்

 

An artist’s depiction of a female hunter 9000 years ago in the Andean highlands of Peru

 
MATTHEW VERDOLIVO/UC DAVIS IET ACADEMIC TECHNOLOGY SERVICES

பண்டைய சமுதாயத்தில் ஆண்கள் வேட்டையாடி உணவுப் பொருளைக் கொண்டு வருவார்கள் என்றும், பெண்கள் ஒரு இடத்தில் தங்கியிருந்து உணவைச் சமைத்து கொடுப்பார்கள் என்றும் பொதுவாகச் சொல்லப்படுகின்றது. இந்தப் பொது சிந்தனையை மாற்றி அமைக்கும் வகையில் அண்மைய ஒரு தொல்லியல் கண்டுபிடிப்பு திகழ்கிறது.

பெரு நாட்டின் ஆண்டியன் மலைப்பகுதியில் நிகழ்த்தப்பட்ட ஒரு அகழாய்வில் 9000 ஆண்டுகள் பழமையானது என அறியபப்ட்ட ஒரு எலும்புக்கூட்டினை ஆய்வாளர்கள் கண்டெடுத்தனர். ஒரு வேட்டைக்காரருக்கு உருவாக்கப்பட்ட ஒரு ஈமக்கிரியை பகுதி அது. அந்த எலும்புக்கூட்டின் அருகில் இருந்த வேட்டைக்கருவிகளை ஆராய்ந்த போது இது மிகத் திறமை வாய்ந்த ஒரு வேட்டைக்க்காரரது உடமையாக இருக்கும் என்று கருதினர். வேட்டைக்கருவியோடு இணைந்து கிடைத்த 20 கருவிகளும் ஒரு தேர்ந்த வேட்டைக்காரரின் படைப்பு என்று கருதினர். நிச்சயமாக இந்த வேட்டைக்காரர் ஒரு முக்கிய வேட்டைக்குழுவின் தலைவனாக இருக்க வேண்டும் என்றும் கருதினர்.

அதன் பின்னர் எலும்புக்கூட்டின் மேல் அரிசோனா பல்கலைக்கழக ஆய்வாளர்களால் நிகழ்த்தப்பட்ட வேதியல் சோதனைகளில் இந்த வேட்டைக்காரர் ஒரு பெண் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் தற்சமயம் அந்த வேட்டைக்காரர் ஒரு பெண்தான் என்பதை உறுதி செய்திருக்கின்றனர். இதுவரை வேட்டையாடி சமூகம் என்பது ஆண்களே என்ற பொதுச் சிந்தனையை இந்தக் கண்டுபிடிப்பு மாற்றியிருக்கின்றது.

இந்தக் கண்டுபிடிப்பின் அடிப்படையில் ஆய்வாளர்கள் தென்னமெரிக்காவில் வெவ்வேறு பகுதிகளில் நடத்தப்பட்ட ஆய்வுகளில் அவர்கள் மேலும் 10 பெண் வேட்டைக்காரர்களின் எலும்புக்கூடுகளைக் கண்டுபிடித்திருக்கின்றனர். அவர்களது அருகாமையிலேயே அவர்களது வேட்டைக்கருவிகளும் மரியாதை நிமித்தம் வைத்து புதைக்கப்பட்ட செய்தியையும் இந்தக் கண்டுபிடிப்பு வெளிப்படுத்தியுள்ளது.

இது பற்றி கருத்து கூறும் போது, இதன் வழி பண்டைய காலத்தில், பெண்கள் வேட்டையாடிகளாக தொன்று தொட்டே இருந்திருக்கின்றனர் என்பதையும் உறுதி செய்யலாம் என ஒக்லஹாமா பல்கலைக்கழக தொல்லியல் அறிஞர் போனி பிட்பிளாடோ தெரிவிக்கின்றார்.

பெரு நாட்டின் ஆண்டிஸ் மலைப்பகுதியில் 13,000 அடி உயரத்தில் இந்த வேட்டையாடி மக்கள் வாழ்ந்திருக்கின்றனர். ஆண்களும் பெண்களும் இணைந்தே தங்கள் உணவைத் தேடும் முயற்சியில் ஈடுபட்டிருக்கலாம். அவர்களில் ஒரு பெண் அக்குழுவின் தலைவியாகவும் இருந்திருக்கலாம். பல பெண் வேட்டைக்குழு தலைவர்களும் இருந்திருக்கலாம். இப்படி பல ஊகங்களுக்கும் தொடர் ஆய்வுகளுக்கும் இட்டுச் செல்லும் கண்டுபிடிப்பாகவே இது அமைகிறது.

மேலதிக செய்திகளுக்கு: https://www.sciencemag.org/news/2020/11/woman-hunter-ancient-andean-remains-challenge-old-ideas-who-speared-big-game?fbclid=IwAR1vDCJG-edq4XZbOz3aB_y00xJ4p90gCa62iQkdboPmv95Kq1xudDNok7c
-சுபா