Thursday, November 26, 2020

கல்முகவடிவங்கள் கண்டுபிடிப்பு - துருக்கி

 சுபாஷிணி

நீண்டகால மனித குல நாகரித்தின் சான்றுகளைக் கொண்டிருக்கும் நாடுகளில் துருக்கி சிறப்பு முக்கியத்துவம் பெரும் ஒரு நாடு. பண்டைய தொல் நகரமான Stratonikeia, Muğla பகுதியில் தொடர்ந்து நிகழ்த்தப்பட்ட தொல்லியல் அகழாய்வுகளில் இங்கு கல்முகவடிவங்கள் கிடைத்திருக்கின்றன. 3000 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த நகரில் ஏறக்குறைய 2200 ஆண்டுகள் பழமை என அறியப்படுகின்ற இந்த கல்முகவடிவங்கள் பண்டைய தெய்வ வடிவங்கள், விலங்குகள் ஆகியவற்றை சார்ந்து வடிவமைக்கப்பட்டுள்ளன.



இப்பகுதியில் நிகழ்த்தப்பட்ட தேடுதலில் இதுவரை இத்தகைய 43 கல்முக வடிவங்கள் கிடைத்துள்ளன.

பமுக்காலே பல்கலைக்கழகத்தின் முயற்சியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக நிகழ்த்தப்பட்டுவரும் இந்த ஆய்வு ஒரு திறந்தவெளி அரங்கப் பகுதியில் (Amphitheatre) நிகழ்த்தப்பட்டு வருகின்றது. இந்த முகமூடிகள் இக்கலைக்கூடத்தின் வாயில் பகுதி தொடங்கி அமைக்கப்பட வகையில் உள்ளன. மிகப் பிரமாண்டமான முறையில் இந்த கல்முகவடிவங்கள் திகழ்கின்றன. முழுமையான செய்தி: https://www.dailysabah.com/arts/mythological-masks-unearthed-in-turkeys-ancient-city-of-stratonikeia/news?fbclid=IwAR3He9Zngri58Kd69XoVL4JOENzcEsKnJ5Tbjbl75e-4Cro22OjhNPb2kRE



Wednesday, November 11, 2020

டைம்லர் ரைட்வாகன்



இன்று மிகச் சர்வ சாதாரணமாக உலக நாடுகளில் சாலையின் எல்லா பக்கங்களிலும் மோட்டார் சைக்கிள் வாகனங்கள் செல்வதைப் பார்க்கின்றோம். இது எப்போது உருவாக்கப்பட்டது..? எப்போதிலிருந்து பொது மக்கள் புழக்கத்திற்கு மோட்டார் சைக்கிள்கள் வரத் தொடங்கின என்பதை அறிந்து கொள்வோமா?

அதிகாரப்பூர்வமாக மோட்டார் சைக்கிள் உருவாக்கப்பட்டது 1885 ஆம் ஆண்டு இதே நாளில் தான் (11.11.1885). இதனை உருவாக்கியவர் ஜெர்மனியைச் சார்ந்த கோட்லிப் டைம்லர் மற்றும் விஹெல்ம் மைபாஹ் ஆகிய இருவரும் தான். இந்த மோட்டார் சைக்கிளுக்கு இவர்கள் வைத்த பெயர் டைம்லர் ரைட்வாகன் ( Daimler Reitwagen). இச்சொல்லைத் தமிழில் மொழிபெயர்க்கும் போது டைம்லரின் ஓடக்கூடிய அல்லது இயங்கக்கூடிய வாகனம் எனப் பொருள் கொள்ளலாம்.

இந்த மோட்டார் சைக்கிள் உருவாக்கப்பட்டது ஜெர்மனியின் பாடன் ஊர்ட்டெம்பெர்க் மாநிலத்தின் பாட் கான்ஸ்டாட் என்ற நகரில். நான் இருக்கின்ற லியோன்பெர்க் நகரிலிருந்து ஏறக்குறைய 20 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள நகரம் இது. இங்குதான் டைம்லர் பென்ஸ் தொழிற்கூடங்களும், ஆய்வு நிலையங்களும், தொழிற்சாலைகளும், அருங்காட்சியகமும் இன்று இருக்கின்றன.

இதற்கு முன்னர் மோட்டார் சைக்கிள் இருந்தது தானே என சிலர் கூற முயற்சிக்கலாம். ஆனாலும் எரிபொருள் பயன்படுத்தி இயங்கும் எஞ்சினுடன் அதாவது, இயந்திரத்துடன் உருவாக்கப்பட்ட முதல் மோட்டார் சைக்கிள் இதுவே. இந்த முதல் மோட்டார் சைக்கிளை ஓட்டி பார்த்தவர் டைம்லரின் மகனான பவுல். இவர்தான் இந்த மோட்டார் சைக்கிளை முதன்முதலில் ஓட்டி சோதனைச் செய்தவர்.

இந்த மோட்டார் இயந்திரம் அடிப்படையில் மரத்தால் செய்யப்பட்டது. ஒரு சிலிண்டர் இயந்திரம் மட்டும் இணைக்கப்பட்ட வகையில் இயங்கும் வகையில் இது உருவாக்கப்பட்டிருந்தது. டைம்லர் ரைட்வாகன் உருவாக்கப்பட்ட பின்னர் அதற்கு அடுத்த ஆண்டு இதன் உற்பத்தி தொடங்கப்பட்டது.

வாகனங்களின் உற்பத்தி ஐரோப்பாவில் தொழிற்பரட்சிக்குப் பக்கபலமாக அமைந்தது. பொது மக்களின் பொதுப் போக்குவரத்தை துரிதப்படுத்தியதில் மோட்டார் சைக்கிளின் பங்கு அளப்பரியது. மக்கள் இயல்பாகப் பல இடங்களுக்குச் செல்வதை எளிமைப்படுத்தியது மோட்டார் சைக்கிள் கண்டுபிடிப்பு. இன்று பல்வேறு வடிவமைப்புகளில் கிடைக்கின்ற மோட்டார் சைக்கிள் வண்டிகளுக்கு முன்னோடியானது இந்த டைம்ளரின் ரைட்வாகன். -சுபா

Monday, November 9, 2020

வேட்டைச்சமூகத்தில் பெண்களின் நிலை - தொல்லியல் சான்றுகள்

 

An artist’s depiction of a female hunter 9000 years ago in the Andean highlands of Peru

 
MATTHEW VERDOLIVO/UC DAVIS IET ACADEMIC TECHNOLOGY SERVICES

பண்டைய சமுதாயத்தில் ஆண்கள் வேட்டையாடி உணவுப் பொருளைக் கொண்டு வருவார்கள் என்றும், பெண்கள் ஒரு இடத்தில் தங்கியிருந்து உணவைச் சமைத்து கொடுப்பார்கள் என்றும் பொதுவாகச் சொல்லப்படுகின்றது. இந்தப் பொது சிந்தனையை மாற்றி அமைக்கும் வகையில் அண்மைய ஒரு தொல்லியல் கண்டுபிடிப்பு திகழ்கிறது.

பெரு நாட்டின் ஆண்டியன் மலைப்பகுதியில் நிகழ்த்தப்பட்ட ஒரு அகழாய்வில் 9000 ஆண்டுகள் பழமையானது என அறியபப்ட்ட ஒரு எலும்புக்கூட்டினை ஆய்வாளர்கள் கண்டெடுத்தனர். ஒரு வேட்டைக்காரருக்கு உருவாக்கப்பட்ட ஒரு ஈமக்கிரியை பகுதி அது. அந்த எலும்புக்கூட்டின் அருகில் இருந்த வேட்டைக்கருவிகளை ஆராய்ந்த போது இது மிகத் திறமை வாய்ந்த ஒரு வேட்டைக்க்காரரது உடமையாக இருக்கும் என்று கருதினர். வேட்டைக்கருவியோடு இணைந்து கிடைத்த 20 கருவிகளும் ஒரு தேர்ந்த வேட்டைக்காரரின் படைப்பு என்று கருதினர். நிச்சயமாக இந்த வேட்டைக்காரர் ஒரு முக்கிய வேட்டைக்குழுவின் தலைவனாக இருக்க வேண்டும் என்றும் கருதினர்.

அதன் பின்னர் எலும்புக்கூட்டின் மேல் அரிசோனா பல்கலைக்கழக ஆய்வாளர்களால் நிகழ்த்தப்பட்ட வேதியல் சோதனைகளில் இந்த வேட்டைக்காரர் ஒரு பெண் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் தற்சமயம் அந்த வேட்டைக்காரர் ஒரு பெண்தான் என்பதை உறுதி செய்திருக்கின்றனர். இதுவரை வேட்டையாடி சமூகம் என்பது ஆண்களே என்ற பொதுச் சிந்தனையை இந்தக் கண்டுபிடிப்பு மாற்றியிருக்கின்றது.

இந்தக் கண்டுபிடிப்பின் அடிப்படையில் ஆய்வாளர்கள் தென்னமெரிக்காவில் வெவ்வேறு பகுதிகளில் நடத்தப்பட்ட ஆய்வுகளில் அவர்கள் மேலும் 10 பெண் வேட்டைக்காரர்களின் எலும்புக்கூடுகளைக் கண்டுபிடித்திருக்கின்றனர். அவர்களது அருகாமையிலேயே அவர்களது வேட்டைக்கருவிகளும் மரியாதை நிமித்தம் வைத்து புதைக்கப்பட்ட செய்தியையும் இந்தக் கண்டுபிடிப்பு வெளிப்படுத்தியுள்ளது.

இது பற்றி கருத்து கூறும் போது, இதன் வழி பண்டைய காலத்தில், பெண்கள் வேட்டையாடிகளாக தொன்று தொட்டே இருந்திருக்கின்றனர் என்பதையும் உறுதி செய்யலாம் என ஒக்லஹாமா பல்கலைக்கழக தொல்லியல் அறிஞர் போனி பிட்பிளாடோ தெரிவிக்கின்றார்.

பெரு நாட்டின் ஆண்டிஸ் மலைப்பகுதியில் 13,000 அடி உயரத்தில் இந்த வேட்டையாடி மக்கள் வாழ்ந்திருக்கின்றனர். ஆண்களும் பெண்களும் இணைந்தே தங்கள் உணவைத் தேடும் முயற்சியில் ஈடுபட்டிருக்கலாம். அவர்களில் ஒரு பெண் அக்குழுவின் தலைவியாகவும் இருந்திருக்கலாம். பல பெண் வேட்டைக்குழு தலைவர்களும் இருந்திருக்கலாம். இப்படி பல ஊகங்களுக்கும் தொடர் ஆய்வுகளுக்கும் இட்டுச் செல்லும் கண்டுபிடிப்பாகவே இது அமைகிறது.

மேலதிக செய்திகளுக்கு: https://www.sciencemag.org/news/2020/11/woman-hunter-ancient-andean-remains-challenge-old-ideas-who-speared-big-game?fbclid=IwAR1vDCJG-edq4XZbOz3aB_y00xJ4p90gCa62iQkdboPmv95Kq1xudDNok7c
-சுபா

Saturday, August 29, 2020

எகிப்தில் கிடைத்திருக்கும் இந்தியக் குரங்கின் எலும்புக்கூடு

அண்மைய கால உலகளாவிய அகழ்வாய்வுகளில் சுவாரஸ்யமான ஒரு தகவல் பற்றி அண்மையில் வாசித்தேன். செங்கடல் பகுதியில் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் மிகப் பிரசித்தி பெற்ற ஒரு துறைமுக நகரமாக இன்றைய எகிப்து நாட்டில் இருக்கின்ற பெரனிஸ் என்ற துறைமுகப் பகுதியில் நிகழ்த்தப்பட்ட ஆய்வு இது.

தூங்கிக் கொண்டிருக்கின்ற குழந்தையை போல உடல் வைக்கப்பட்டு ஒரு இறந்த குரங்கின் உடல் புதைக்கப்பட்டிருக்கின்றது.

இந்தக் குரங்கின் எலும்புக்கூடு, இது ஈராயிரம் ஆண்டுகள் பழமையானது என்றும்,இது இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட குரங்கு ஒன்றின் எலும்புக்கூடு என்றும் அகழ்வாராய்ச்சி குறிப்பிடுகின்றது. இந்த எலும்புக்கூடு எகிப்தின் பண்டைய பெரனிஸ் துறைமுக நகரில் விலங்குகள் மயான பகுதியில் நிகழ்த்தப்பட்ட அகழ்வாய்வில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. 3D scan வகை ஆய்வின் வழி இது இந்தியாவிலிருந்து கொண்டு வரப்பட்ட குரங்கு என்பதைப் போலந்து அறிவியல் கழகத்தின் ஆய்வாளர் மார்த்தா அவர்கள் குறிப்பிட்டிருக்கின்றார்.

இதுவரை ஆப்பிரிக்க பகுதிகளில் இந்திய வகை குரங்குகள் அகழ்வாய்வில் கண்டெடுக்கப்பட்டவில்லை என்றும் இதுவே முதல் கண்டுபிடிப்பு என்றும் அவர் குறிப்பிடுகிறார்.
பண்டைய இந்தியாவிலிருந்து கடல் வழி பயணத்தில் தொடர்ச்சியாக பல வாரங்கள் கப்பலில் கொண்டுவரப்பட்டு, செங்கடல் பகுதியில் இளம் வயதிலேயே இந்தக் குரங்கு இறந்திருக்க வேண்டும் என்று ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. இந்தக் குரங்கு இறந்து போனதற்குக் காரணம் அதன் உணவு வகை மாற்றமாக இருக்கலாம் என்றும் அவர் குறிப்பிடுகின்றனர். இந்தக் குரங்கு படுத்துக்கொண்டிருக்கும் வகையில் இதனை புதைத்திருக்கின்றார்கள். அதன்மேல் துணி போன்ற கம்பளி மூடப்பட்டுள்ளதும் அகழாய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இதன் அருகாமையில் இந்தியப் பெருங்கடல் பகுதியில் கிடைக்கின்ற சிப்பிகள், எம்ஃபோரா பானைகளின் உடைந்த சில்லுகள், மூன்று பூனைகளின் எலும்புக்கூடுகள் ஆகியனவும் கிடைத்துள்ளன.

பண்டைய ரோமானியர்களும், எகிப்தியர்களும் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட குரங்குகளை வீட்டு விலங்குகளாக வைத்திருக்கும் பழக்கம் இருந்திருக்கலாம் என்றும், அதற்காக குரங்குகள் இறக்குமதி செய்யப்பட்டிருக்கலாம் என்றும் ஆய்வாளர் மார்த்தா கூறுகிறார்.
விலங்குகளுக்கான மயானத்தில் இந்த குரங்கின் எலும்பு கூடு புதைக்கப்பட்டுள்ளது என்று அறியும் போது இந்தப் பகுதியில் பண்டைய எகிப்திய பண்பாட்டில் ஈமக்கிரியை என்பது முக்கிய பங்கு வகிப்பதையும் மம்மிகள் உருவாக்கம், பிரமிடுகள் கட்டுமானம் என்ற சிந்தனையின் தொடர்ச்சியாக விலங்குகளுக்கும் தனிப்பட்ட மயானம் இருந்தது பற்றியும், அவை புதைக்கப்படும் போது அவற்றோடு மேலும் சில பொருட்களும் உடன் வைக்கப்பட்டு புதைக்கப்பட்ட செய்தியும் அறியக்கூடியதாக இருக்கின்றது.

இந்தியாவிற்கும் ரோமானிய பேரரசுக்கும் இடையிலான நீண்டகால வணிகமுயற்சிகள் மற்றும் அதன் பொருட்டு நிகழ்ந்த கடல்வழி பயணங்கள் ஆய்வாளர்களுக்கு மேலும் மேலும் பல புதிய செய்திகளை வழங்கிக் கொண்டே இருக்கின்றன. வரலாற்று ஆய்வில் அகழாய்வுகளுக்கான அதிகப்படியான கவனம் கடற்கரையோர நகரப் பகுதிகளில் நிகழ்த்தப்பட வேண்டியது அவசியம் என்பதை இத்தகைய கண்டுபிடிப்புகள் நமக்கு உறுதி செய்கின்றன.

https://www.thefirstnews.com/article/remains-of-2000-year-old-monkeys-buried-like-sleeping-children-reveal-romans-and-ancient-egyptians-imported-them-from-india-as-household-pets-15142

-முனைவர்.க.சுபாஷிணி 

Sunday, July 12, 2020

ஐரோப்பாவில் கொள்ளை நோய் சிறப்புத் தொடர்-10

முனைவர்.க.சுபாஷிணி 
 
2020ஆம் ஆண்டு தொடங்கி ஏழு மாதங்கள் கடந்து விட்டன. இப்போது ஜூலை மாதத்தில் இருக்கின்றோம். ஜனவரி மாதம் நாம் சற்று கூட நினைத்துப் பார்த்திருக்க மாட்டோம், இந்த அளவிற்கு உலகம் முழுவதும் ஒரு நுண்ணுயிர்க்கிருமி மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி நம் ஒவ்வொருவரது வாழ்க்கையையும் மாற்றி அமைக்கும் என்று. இன்றைய தேதிவரை உலகளாவிய அளவில் 567, 300 இறப்புகள்  உலக சுகாதார நிறுவனத்தினால்  பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. covid-19 தாக்கம் இன்றைய தேதியில் அமெரிக்கா, பிரேசில், இந்தியா ஆகிய மூன்று நாடுகளில் மிகப்பெரிய வைரஸ் தொற்று எண்ணிக்கையை பதிவு செய்திருக்கின்றது.

இவ்வாண்டு பிப்ரவரி மார்ச் மாதவாக்கில் சீனாவிலும் ஐரோப்பாவிலும் கொரோனா வைரஸ் தொற்று மிக வேகமாகப் பரவிக் கொண்டிருந்த காலத்தில் நம்மில் பலரது வாட்ஸ்அப் குழுமங்களில்  நம்மைத் தேடி வந்த பகிர்வுகள் சில  இப்போது நினைவுக்கு வருகின்றன.

உலக நாடுகளே இந்தியாவைக் கண்டு ஆச்சரியப் படுகின்றன; இந்தியாவிற்குக் கொரோனா வைரஸ் வருவதற்கு வாய்ப்பே இல்லை, ஏனெனில் இந்தியர்களின் உணவு முறை எவ்விதமான நோய்களையும் தடுத்து கொன்றுவிடும்.... இந்தியச் சூழலுக்கு கொரோனா வைரஸ் பரவலாக்கம் என்பது நடக்காது .. இப்படிப் பலரும் ஆருடம் கூறிக்கொண்டிருந்தார்கள். ஆங்காங்கே சில சாமியார்களும் ஜூன் மாதம் 21ஆம் தேதியுடன் கொரோனா கொள்ளைநோய் இந்தியாவிலிருந்து மறைந்துவிடும் என்றும் நிவர்த்திக்கு இதை செய்யலாம் அதைச் செய்யலாம் என்று ஆருடம் கூறி யூடியூப் வீடியோக்கள் பதிவு செய்து வெளியிட்டதையும் பார்த்தோம். இந்த ஆருடங்களை எல்லாம் தாண்டி இன்று அதிவேகமாக கொரோனா வைரஸ் பரவும் நாடுகளின் பட்டியலில் இந்தியா மூன்றாவது இடத்தில் இருக்கிறது. நோய் பரவலாக்கம் என்பது தகுந்த முறையான பாதுகாப்பு இல்லை என்றால் எந்த நாடாக இருந்தாலும் பாரபட்சமின்றி பரவும் என்பதைத்தான் இந்த நடப்பு நிலை நமக்குக் காட்டுகிறது.

கொரோனா வைரஸ் சீனாவின் வூகான் மாநிலத்தில் பரவத் தொடங்கிய காலத்தில் இது மனிதர்களே திட்டமிட்டு உருவாக்கி பரப்பி வைத்த வைரஸ்  தாக்குதல் என்ற மிகப்பெரிய சந்தேகமும் பரவலாக்கப்பட்டது. அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய இரண்டு நாடுகளும் ரகசியமாக செய்கின்ற பல்வேறு வகை ரசாயன ஆய்வுகள், மற்றும் அவை தொடர்பில் உலகில் மூன்றாம் உலகப் போர்  இந்த வகையில்தான் அமைகின்றது என்ற கருத்தை மையமாகக்கொண்டு பலபல கட்டுரைகளும் செய்திகளும் யூடியூப் வீடியோ காணொளி பதிவுகளும் நாம் விரும்புகிறோமோ இல்லையோ நம் கவனத்திற்கு வந்து சேர்ந்தன. ஆனால் காலம் காலமாகத் தொடர்ந்து இவ்வுலகை அவ்வப்போது தாக்கி பல்லாயிரக்கணக்கான உயிர் சேதத்தை வைரஸ் நுண்ணுயிர் கிருமிகள் உருவாக்குகின்றன என்பதை இக்கட்டுரைத் தொடரின் முந்தைய பகுதிகளில் விரிவாக விளக்கி இருந்தேன். இந்த நூற்றாண்டின் தொடக்கத்திலும் இபடி ஒரு நிகழ்வு நிகழ்ந்தது என்பதை நாம் நினைவு கூர்வது பொருந்தலாம்..  

2003ஆம் ஆண்டு Severe acute respiratory syndrome (SARS) நுண்ணுயிர் கிருமி முதலில் அடையாளம் காணப்பட்டது. முதலில் வவ்வால்களிடமிருந்து உருவாகி பின்னர் இவை பூனைகள் வழியாக மக்களுக்குப் பரவுவது நிகழ்ந்தது. இந்த வைரஸ் கிருமி முதலில் சீனாவில் தான் அடையாளப்படுத்தப்பட்டது. பின்னர் உலக நாடுகளில் 26 நாடுகளில் இதன் தாக்கம் பிரதிபலித்தது. 8096 மக்கள் இதனால் பாதிக்கப்பட்டு அதில் 774 உயிர் சேதங்கள் பதியப்பட்டன. கொரோனா வைரஸ் கிருமி இன்று உலகம் முழுவதும் ஏற்படுத்தியிருக்கும் உயிர் சேதத்தோடு ஒப்பிட்டு பார்க்கும்போது இது மிகக்குறைவான எண்ணிக்கை தான்.

ஆரம்பத்திலேயே முறையான பாதுகாப்பு நடவடிக்கைகள் சரியாக மேற்கொள்ளப்பட்டமையால் அதே ஆண்டு ஜூலை மாதம் இந்த வைரஸ் பரவல் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டு, இது பரவி உயிர் சேதம் ஏற்படாமல் தற்காப்பு நடவடிக்கைகள் வெற்றி கண்டன. இந்த நோய் பரவலாக்கத்திற்கும் சீனாதான் பொறுப்பு என்ற வகையில் பேச்சுக்கள் எழுந்தது என்பதோடு ஆரம்ப காலகட்டத்தில் இந்த நோய் பரவல் பற்றிய செய்திகளை வெளிப்படையாக சீனா வெளியிடவில்லை என்ற குற்றச்சாட்டும் அப்பொழுது எழுந்தது. இப்போதும் அதே நிலை தொடர்கிறது.

covid-19 தாக்கத்திற்கு அடிப்படையாக இருக்கும் SARS-2 நுண்ணுயிர் கிருமி SARS கிருமி வகையிலிருந்து சற்றே மாறுபட்டது என்றாலும் அடிப்படையில் அதே வகையை சார்ந்தது என்று அறியப்படுகிறது. இன்று உலகம் முழுவதும் பல நாடுகளில் இந்த நுண்ணுயிர் கிருமியை அழிப்பதற்கும் அல்லது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர வேண்டும் என்று முனைப்போடு  தொடர்ச்சியாக விஞ்ஞானிகளும் ஆராய்ச்சியாளர்களும் செயல்பட்டு வருகின்றார்கள். ஜூலை மாதத் தொடக்கத்தில் பல இடங்களில் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்துகள் பற்றிய செய்திகள் உலா வரத் தொடங்கியிருக்கின்றன. இன்றைய காலகட்டத்தில் பல நாடுகளில் சோதனை முயற்சிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.

இன்றைய காலநலையில் உலகவரலாற்றில் தொடர்ச்சியாக நுண்ணுயிர் கிருமிகள் செய்திருக்கின்ற உயிர்ச் சேதங்களைப் பற்றிதான் பெரும்பாலும் நம் கவலைகள் சூழ்ந்திருக்கின்றன. இது இயல்புதான்.. தவிர்க்கமுடியாத ஒன்றுதான் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆயினும் உலக சுற்றுச்சூழல் என்ற ரீதியில் காணும்போது குறிப்பிடத்தக்க வகையில் சுற்றுச்சூழலில் நிலை மேம்பாடு கண்டிருக்கின்றது என்பதை நாம் மறுத்துவிட முடியாது.

அதில் மிக முக்கியமானது காற்று மாசடைதல். உலகம் முழுவதும் ஒவ்வொரு நாடுகளிலும் காற்றின் தூய்மை மேம்பாடு கண்டிருக்கின்றது என்பதை சுற்றுச்சூழல் அறிக்கைகள் வெளிப்படுத்துகின்றன. ஐரோப்பாவைப் பொறுத்தவரை மிக அதிகமான விமானப் போக்குவரத்துகள், மிக அதிகமான வாகன போக்குவரத்துகள், அணு ஆலைகள் உருவாக்குகின்ற காற்றுத் தூய்மைக்கேடு எனப் பல வகையில் மாசடைந்து கிடந்த வான்வெளி என்று தூய்மை அடைந்திருக்கிறது என்பது ஒட்டுமொத்த உலகத்திற்கு நன்மை தான்.

ஐரோப்பாவின் ஒவ்வொரு நகரங்களிலும் கூட்டம் கூட்டமாக மக்கள் நிறைந்திருக்கும் பொதுப்போக்குவரத்து மெட்ரோ ரயில்கள் இப்போது கணிசமான எண்ணிக்கையில் குறைந்த பயணிகளுடன் பயணிக்கின்றன. பெரும்பாலான கணினித்துறை சார் ஊழியர்கள் வீட்டிலிருந்தவாறே அலுவலகப் பணிகளைக் கவனிப்பதால் மிகப்பெரிய அளவில் பொதுப்போக்குவரத்துச் சேவையை நம்பி இருந்த பொதுமக்களின் எண்ணிக்கை குறைந்திருக்கின்றது.

பெரும்பாலான மக்கள் வீட்டிலிருந்தபடியே தங்கள் அலுவலக பணிகளைச் செய்யக்கூடிய வகையில் தங்கள் தொழில் செயல் முறையை மாற்றி அமைத்துச் செயல்படுத்திக் கொண்டிருக்கின்றனர். வீட்டிலேயே இருக்கக்கூடிய சூழல் மன அழுத்தத்தை அதிகரிக்கின்றது என்றாலும்கூட குடும்பத்தாருடன் சேர்ந்திருக்கும் நேரத்தை இது அதிகரித்திருக்கின்றது என்பதோட சாலைகளில் பயணம் செல்வதற்காக பொதுமக்கள் எடுத்துக் கொள்கின்ற நேரத்தை மிச்சப்படுத்தி குடும்பத்தாரோடு நீண்ட நேரத்தைச் செலவிடக் கூடிய வாய்ப்பையும் இது வழங்கியிருக்கின்றது. ஜெர்மனி போன்ற நாடுகளில் மிக அதிக நேரத்தை வாகனங்களிலேயே சாலைகளில் பயணிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்த என்னைப் போன்ற பலருக்கும் இது ஒரு மிகப்பெரிய மாற்று வழியாக அமைந்திருக்கின்றது என்பதை நானும் முழுமையாக உணர்கிறேன்.

ஒவ்வொரு தனி மனிதரின் வாழ்க்கையிலும் மிகப்பெரிய அளவிலான மாற்றத்தை, அதிலும் நாம் ஒவ்வொருவரும் சற்றும் கூட எதிர்பாராத மாற்றத்தை வலிந்து திணித்து இருக்கிறது கொரோனா வைரஸ். பல நாடுகளில் முறையான வழிகாட்டுதல்கள் இல்லாமையால் மக்கள் எந்த வகையில் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளலாம் என்ற தெளிவில்லாமல் தடுமாற்றத்துடன் தங்கள் அன்றாட வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கின்றார்கள். தமிழகத்தில் நடக்கின்ற நிலவரங்களைப் பார்க்கும்பொழுது வறுமை கோட்டிற்குக் கீழ் வாழும்  மக்கள் வேலையின்றி உணவுத் தேவைக்காக மிகப்பெரிய அளவில் பாதிப்பினை எதிர்நோக்கி உள்ளனர்‌. ஐரோப்பா போன்ற நாடுகளிலும
 பல சிறிய நிறுவனங்கள் எப்படி மீண்டு எழுவது என்று யோசித்துக் கொண்டிருக்கும் அதேவேளை மிகப்பெரிய நிறுவனங்கள் மீண்டு எழுவதே சாத்தியமில்லையோ, என்ற வகையில் தடுமாறி நிற்கின்றன. ஆயினும் ஐரோப்பிய ஒன்றியத்தின் பல்வேறு பொருளாதார அவசரக் கூட்டங்கள் சிறிய பெரிய என்ற பாரபட்சமின்றி வணிகத்தை மீட்டெடுக்கும் முயற்சிக்கு வழி தேடிக் கொண்டிருக்கின்றன.

இன்றைய சூழலில் கொரோனா பாதிப்பு மேலும் ஓரிரு மாதங்கள் தொடரும் என்ற ஊகத்தின் அடிப்படையில் ஏறக்குறைய 2021 ஆம் ஆண்டு உலகம் ஓரளவு இயல்பு நிலைக்கு திரும்பலாம் என்ற எதிர்பார்ப்பை மட்டுமே முன்வைக்க முடிகின்றது.

எது எப்படியோ..
கொரோனா உலகில் அடையாளப்படுத்தப் படுவதற்கு முன்பிருந்த நம் வாழ்க்கை.. கொரோனா அடையாளப்படுத்தப்பட்ட பின்னர் நாம் அனுபவிக்கும் வாழ்க்கை, என இரண்டு வகையான வாழ்க்கை நிலையை நமது காலத்திலேயே அனுபவிக்கின்றோம் என்பது நாம் விரும்பாவிட்டாலும் ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலையில்தான் நாம் இருக்கின்றோம்.

உலகில் பல்வேறு காலகட்டங்களில் நுண்ணுயிர் கிருமிகள் கொள்ளை நோயை ஏற்படுத்தி மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தின. அத்தகைய பலப்பல தாக்கங்களில் இருந்து மீண்டு வந்தது மனிதகுலம். அதேபோல இப்போது  வந்திருக்கின்ற இந்த புதிய சவாலையும் எதிர்கொண்டு மனிதகுலம் மீண்டும் தனது நீண்ட நெடிய பயணத்தை தொடரும்.






முற்றும்

Sunday, July 5, 2020

ஐரோப்பாவில் கொள்ளை நோய் சிறப்புத் தொடர்-9

முனைவர்.க.சுபாஷிணி

கொரோனா கொள்ளை நோயின் தாக்கம் பெருமளவிற்கு மேற்கு ஐரோப்பிய நாடுகளில் குறையத் தொடங்கிவிட்டது. ஜெர்மனியிலிருந்து 15 ஐரோப்பிய நாடுகளுக்கு இந்த வாரம், அதாவது ஜூலை 1ஆம் தேதி தொடக்கம் விமானச் சேவைகள் தொடங்கிவிட்டன. நீண்டகாலம் தனது தாயாரைப் பார்க்க முடியாமல் வருந்திக் கொண்டிருந்த எனது அண்டை வீட்டுக்காரர் கடந்த வெள்ளிக்கிழமை மதியம் ஸ்டுட்கார்ட் விமான நிலையத்திலிருந்து ருமேனியா தலைநகர் புகாரெஸ்ட் புறப்பட்டுவிட்டார். ஓரளவுக்கு மக்கள் கோடைக்கால விடுமுறையைத் திட்டமிடத் தொடங்கியிருப்பதைக் காணமுடிகின்றது. ஐரோப்பாவைத் தவிர்த்து ஏனைய நாடுகள் எனும் போது சீனாவிற்கு விமானச் சேவை அனுமதி வழங்கப்பட்டிருக்கின்றது என்பது ஆச்சரியமளிக்கின்றது. அதற்கு எதிர்மாறாக ஜெர்மனியிலிருந்து அமெரிக்காவிற்கு விமானச் சேவை இப்போது சாத்தியமில்லை என்பதையே  இருநாடுகளும் உறுதி செய்திருக்கின்றன. வருகின்ற நாட்களில் கொரோனா தொற்றுப் பரவலின் எண்ணிக்கையின் அடிப்படையில் ஆசிய நாடுகள் சிலவற்றிற்கும் ஜெர்மனிக்குமான விமானச் சேவைகள் தொடங்கப்படும் என நம்பலாம்.

கொரோனா ஏற்படுத்திய அச்சத்தையும் ஒதுக்கிவிட்டுக் கடந்த சில வாரங்களாக ஐரோப்பாவில் பெருமளவிற்கு நிறவெறிக்கு எதிரான கண்டனக்குரல்களும் இனவாதத்திற்கு எதிரான எதிர்ப்புக்குரல்களும் தொடர்கின்றன. இந்த வாரம் பெல்ஜியத்தில் இனவாதத்தால் பாதிக்கப்பட்ட பெண்கள் சிலர் சட்டரீதியான முன்னெடுப்பை மேற்கொண்டுள்ள நிகழ்வு செய்தியாகப் பேசப்பட்டது.

ஆப்பிரிக்காவின் கோங்கோ நாடு பெல்ஜியத்தின் கீழ் அடிமைப்பட்டுக் கிடந்த காலகட்டத்தில் ஆண்களும் பெண்களும் அனுபவித்தஇன்னல்களுக்கு அளவில்லை. கோங்குகோ நாட்டில் வியாபாரம் செய்வதற்காகச் சென்றவர்களும் அங்குள்ள கோங்கோ நாட்டு கறுப்பின பெண்களை மணந்தோ அல்லது அவர்களுடன் பாலியல் உறவு வைத்துக் கொண்டதன் வழியாகப் பெற்ற குழந்தைகளை அப்போதைய பெல்ஜிய அரசு கத்தோலிக்க சமய நிறுவனங்களில் சேர்த்திருக்கிறது.  அப்போதைய பெல்ஜிய அரசின் கருத்துப்படி வெள்ளை நிற தந்தைக்கும் கருப்பு இன பெண்ணுக்கும் பிறந்த குழந்தை பாவத்தின் சின்னம் எனக் கருதப்பட்டதால் அத்தகைய குழந்தைகள் பாவமன்னிப்புக்காகத் தேவாலயங்களின் அனாதை ஆசிரமங்களில் பராமரிக்கப் பட்டிருக்கின்றனர். அவர்களில் பெண் குழந்தைகள் கத்தோலிக்க கன்னியாஸ்திரிகளின் பாதுகாப்பில் அப்போது விடப்பட்டனர்.
1960ஆம் ஆண்டு சுதந்திரம் கிடைத்த  பின்னர் தேவாலயத்தில் வசித்து வந்த பெண்கள்  கைவிடப்பட்ட நிலையில், கோங்கோவில் ஏற்பட்ட மிகக்கொடூரமான வன்முறை காலத்தில் அத்தகைய பெண்கள் பலர் ராணுவ வீரர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு  துன்பத்திற்குள்ளாயினர். அத்தகைய பெண்களுக்குப் பிறந்த குழந்தைகள் சிலர் இப்போது பெல்ஜியம் நாட்டில் வாழ்கின்றனர். அவர்களில் சிலர் பெல்ஜியம் அரசு தங்களுக்கும் தங்கள் பெற்றோருக்கும் இழைத்த கொடுமைகளுக்கு எதிராக சட்டப்படி தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கின்றார்கள். இதற்கு உடனடியாக பெல்ஜியம் அரசிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை என்றாலும், செப்டம்பர் 10-ஆம் தேதி இந்த வழக்கு நீதிமன்றத்திற்கு வருவதாக இதுபற்றிய அண்மைய செய்தி குறிப்பிடுகின்றது (https://www.euronews.com/2020/07/03/mixed-race-women-sue-belgian-state-over-colonial-era-kidnapping).

இது இப்படியிருக்க, கொரோனா கொள்ளை நோய் ஏற்படுத்தி இருக்கின்ற மிகப் பெரிய சவாலாக உலக நாடுகள் தற்சமயம் எதிர்நோக்குவது பொருளாதார பிரச்சனைகள் தான். இந்த இக்கட்டான காலத்தில் ஐரோப்பாவின் பொருளாதார பலம் பொருந்திய நாடுகளில் ஒன்றாகக் கருதப்படும் பிரான்சில் அரசு தலைமைப்பதிவியில் மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. நடப்பு பிரதமரான எடுவாட் ஃபிலிப்பே (Edouard Philippe) தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஒரு மாவட்டத்தின் மேயராக பதவி ஏற்றுக் கொண்டதும், பிரனேஷ் மாவட்டத்தின் மேயராக தற்சமயம் பதவி வகிக்கும் ஷோன் காடெக்ஸ் (Jean Castex) பிரான்சின் பிரதமராக இவ்வாரம் பதவி ஏற்றுக் கொண்டதும் நடந்திருக்கின்றது. புதிய பிரதமருக்கு பிரான்சின் பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்பும் மிகப்பெரிய சவால் காத்துக் கொண்டிருக்கின்றது என்பது உண்மை.

ஐரோப்பாவின் பல நாடுகளில் கோடைகால சுற்றுலா பற்றிய சிந்தனை மக்களின் சிந்தனையை ஆக்கிரமித்திருக்கிறது. ஜெர்மனியை எடுத்துக்கொண்டால் மக்கள் வெகுவாக பொது உணவகங்களுக்குச் செல்வதும், வெளியே கடைவீதிகளில் உலாவுவதும் இப்போது சர்வ சாதாரணமாகக் காட்சியளிப்பது பார்ப்பதற்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் இருக்கிறது. கொரோணா வைரஸ் தொற்றினால் மிகப்பெரிய அளவில் உயிர்ச் சேதத்தை அனுபவித்த இத்தாலி, பிரான்ஸ், ஸ்பெயின் ஆகிய நாடுகள் இயல்பு நிலைக்கு திரும்பி விட்ட இந்தச் சூழலில் கிழக்கு ஐரோப்பிய நாடுகள் கொரோனா கொள்ளை நோய் தொற்றுப் பரவலைக் கடுமையாக எதிர்கொள்ள வேண்டிய நிலை தொடங்கிவிட்டது. உதாரணமாக மொண்டெனேகிரோ, புல்காரியா ஆகிய நாடுகளில் கொரோனா நோயினால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கும் வகையில் எண்ணிக்கைகள் அமைகின்றன. ஆயினும், ஒட்டு மொத்த ஐரோப்பாவில் மேற்கு ஐரோப்பிய நாடுகள் கற்ற பாடங்களின் அடிப்படையில், ஐரோப்பிய ஒன்றியத்தின் துணையுடன் கிழக்கு ஐரோப்பிய நாடுகளும் கொரோனா கொள்ளை நோய்த் தொற்றுகளிலிருந்து தங்களைத் தற்காத்துக் கொள்ளும் வாய்ப்பு அதிகமாக இருக்கிறது என்று நம்பலாம்.
உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டிருக்கும் அண்மைய அறிக்கையின் அடிப்படையில் இன்று மிக அதிக எண்ணிக்கையில் கொரோனா வைரஸ் தொற்று பரவிக் கொண்டிருக்கும் நாடுகளாக அமெரிக்கா, பிரேசில், இந்தியா ஆகிய நாடுகள் பட்டியலில் அமைகின்றன. இந்நோய் பரவுவதிலிருந்து தடுக்கும் வகையில் தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதில் ஐரோப்பா, அமெரிக்கா சீனா ஆகிய நாடுகள் மிகத் தீவிரமாக ஈடுபட்டிருக்கின்றன. இன்றைய நிலவரப்படி கொரோனாவுக்கு எதிரான மிக அதிகமான எண்ணிக்கையில் மருத்துவ சோதனைகளை மேற்கொள்ளும் நாடுகளின் வரிசையில் சீனா, அதனையடுத்து அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி ஆகிய நாடுகள் அமைகின்றன.ஜூன் 16-ஆம் தேதி யூரோநியூஸ் பத்திரிகையின் அறிவிப்பின்படி 13 மருந்துகள் கொரோனா வைரஸ்க்கு எதிராக அதனைக் கட்டுப்படுத்தும் வகையில் அல்லது மனித உடலில் கொரோனா வைரஸ் தாக்கத்தை முற்றிலும் தடுக்கும் வகையில் மருத்துவச் சோதனைக்குத் தயாராக இருப்பதை வெளியிட்டது (https://www.who.int/docs/default-source/coronaviruse/novel-coronavirus-landscape-covid-19f65d59aff81049f5a50d37bebf0caf93.pdf?sfvrsn=394d10c9_2%26download) . இந்தப் பட்டியலில் இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் மற்றும் இங்கிலாந்து மற்றும் சுவீடன் கூட்டு முயற்சியில் செயல்படும் மருத்துவ நிறுவனமான AstraZeneca அறிவித்த மருந்துகள் பாதிக்கப்பட்டவர்களுக்கு நோயைக் குணப்படுத்தக்கூடிய ஆற்றலுடன் இருப்பதை அறிவித்தது.


கடந்த வாரத்தில் remdesivir என்ற மருந்து கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் உடலில் செலுத்துவதற்கு ஐரோப்பிய ஒன்றியத்தால் அங்கீகரிக்கப்பட்டது. இது குறிப்பாக 12 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வழங்கப்படக் கூடிய ஒரு மருந்தாகவும் அதிலும் குறிப்பாக நிமோனியா நோய் வந்த நோயாளிகள் ஆக்சிஜன் அதிக அளவில் மூச்சுவிடத் தேவைப்படும் நிலையில் இருப்பவர்களுக்கு இந்த மருந்து நல்ல பலன் அளிப்பதாகவும் கூறப்பட்டது.

மருத்துவ ஆய்வுகளுக்கு ஏராளமான பொருட் செலவு என்பது தவிர்க்கப்பட முடியாத ஒன்று என்ற சூழலில் ஐரோப்பிய ஒன்றியம் "Global Goal: Unite For Our Future" என்ற பொருளில் தன்னார்வ அமைப்புகளுடன் இணைந்த வகையில் நன்கொடை திரட்டும் ஒரு முயற்சியை மேற்கொண்டது. வெற்றிகரமாக நிகழ்ந்தேறிய இந்த நிகழ்ச்சியில் 6 பில்லியன் யூரோ பணம் சேர்க்கப்பட்டு மேலும் கூடுதலாக நன்கொடைகள் பெறப்பட்டு ஆக மொத்தம் 16 பில்லியன் யூரோ திரட்டப்பட்டது. ஐரோப்பிய ஒன்றியத்தின் கொரோனா கொள்ளை நோய்க்கு எதிரான மருந்துகள் உருவாக்கும் ஆய்வுகளுக்குப் பயன்படுத்தப்படும் என்பதை ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் உர்சுலா ஃபோன் டெர் லையன் ஜூன் மாதம் 27ஆம் தேதி தெரிவித்திருந்தார். தன் மனதை நெகிழ வைத்த இந்த செயல்பாட்டில் உதவிய அனைவருக்கும் தனது நன்றிகளையும் அவர் தொலைக்காட்சி வழியாகத் தெரிவித்துக் கொண்டார். இத்தகைய நடவடிக்கைகளின் வழி மிக அதிகமான ஆய்வுகளுக்கு, அதிலும் குறிப்பாக மருத்துவ ஆய்வுகளுக்குப் பொருளாதார பலம் கிடைப்பது கொரோனா வைரஸ் எதிர்ப்பு தொடர்பான பல்வேறு வகை ஆய்வுகளைச் சாத்தியப்படுத்த இந்தக் காலகட்டத்தில் அத்தியாவசிய தேவையாகின்றது.

ஜூலை மாதம் நம்பிக்கை அளிக்கும் வகையில் தொடங்கியிருக்கின்றது என்றே சொல்லலாம். அமெரிக்காவில் BNT162b1 vaccine என்று அழைக்கப்படும் ஆய்வின் வழி 45 நோயாளிகளுக்கு, அதிலும் குறிப்பாக 18லிருந்து 55 வயது உள்ளவர்களுக்கு வழங்கப்பட்ட தடுப்பு மருந்து நல்ல பலனைக் கொடுத்திருப்பதை அமெரிக்க மருத்துவ அமைப்பு வெளியிட்டது (https://www.pfizer.com/news/press-release/press-release-detail/pfizer-and-biontech-announce-early-positive-data-ongoing-0). இந்தச் செய்தி நம்பிக்கையளிக்கும் ஒரு செய்தியாக அமைகின்றது. இனி அடுத்தடுத்த நாட்களில் மேலும் பல கண்டுபிடிப்புகள் மற்றும் சோதனை முடிவுகள் வெளி வரலாம் என்ற நம்பிக்கை அறிகுறிகள் தென்படத் தொடங்கியிருக்கின்றன. நம்பிக்கையுடன் இருப்போம்!





தொடரும்..

Sunday, June 28, 2020

ஐரோப்பாவில் கொள்ளை நோய் சிறப்புத் தொடர்-8

இந்த வாரம் 25 ஆம் தேதி ஜூன் மாதம்  ஜெர்மனியின் சுகாதார அமைச்சர் யென்ஸ் ஸ்பான் அவர்கள்    உலக சுகாதார நிறுவனத்தின்  (WHO) தலைமையகத்திற்குச் சென்றிருந்தார். ஒட்டுமொத்தமாக உலக அளவில் கொரோனா கொள்ளை நோய்க்கு எதிரான நடவடிக்கைகளில் ஜெர்மனியின் பங்களிப்பு இருக்கும் என்பதை உறுதி செய்யும் வகையில் இவரது இந்தச் சந்திப்பு நிகழ்ந்தது. (https://www.who.int/dg/speeches/detail/who-director-general-s-opening-remarks-at-the-media-briefing-following-trilateral-meeting-between-who-france-and-germany---25-june-2020) கடந்த சில வாரங்களாகத் தொடர்ச்சியாக ஜெர்மனியில் கொரோனா கொள்ளை நோய் பாதிப்பு என்பது படிப்படியாகக் குறைந்து வருவதை அறிவிப்புகள் உறுதிப்படுத்துகின்றன. ஜூலை மாதம் ஒன்றாம் தேதி தொடக்கம் ஐரோப்பிய நாடுகளுக்கு இடையேயான விமான சேவையும் ஜெர்மனியில் தொடங்கப்பட இருக்கின்றது. எனது அண்டை வீட்டுக்காரரான  ரூமேனிய நாட்டை பூர்வீகமாகக் கொண்டவர்,  தனது தாயாரைப் பார்ப்பதற்காகக் குடும்பத்துடன் பயணம் செல்வதற்காக விமான டிக்கெட்டுகளைப் பதிவு செய்துவிட்டதை இரு தினங்களுக்கு முன்னர் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார். 

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இபோலா வைரஸ் கிருமி ஆப்பிரிக்காவின் கோங்கோ நாட்டில் பரவத் தொடங்கியுள்ளது என்ற செய்தி உலக சுகாதார நிறுவனத்தினால் இந்த வாரம் வெளியிடப்பட்டது (https://www.who.int/news-room/detail/25-06-2020-10th-ebola-outbreak-in-the-democratic-republic-of-the-congo-declared-over-vigilance-against-flare-ups-and-support-for-survivors-must-continue) . இதனால் covid-19 எதிர்ப்பு நடவடிக்கைகளோடு கோங்கோவில் இபோலா வைரஸுக்கு எதிரான நடவடிக்கைகளையும் இணைத்தே செய்ய வேண்டியுள்ளது. இந்த வைரஸ் மேலும் பரவாமல் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசரத்  தேவை  இப்போது எழுந்துள்ளது.

இந்தக் கொரோனா கொள்ளைநோய் உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கின்ற இந்த நேரத்தில் போலந்து அதிபர் டூடா அமெரிக்கா சென்று வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அவர்களைச் சந்தித்திருக்கின்றார். இரண்டாம் உலகப் போரைக் காரணம்காட்டி ஜெர்மனியில் பல்வேறு இடங்களில் அமெரிக்கா தனது ராணுவத்தைப் பல ஆண்டுகளாக நிறுத்திவைத்திருக்கின்றது. அதில் கடந்த சில ஆண்டுகளாகச் சில ராணுவ முகாம்கள் மூடப்பட்டு ராணுவ அதிகாரிகள் திருப்பி எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தனர். உதாரணமாக சில ஆண்டுகளுக்கு முன்னர் ஹைடல்பார்க் நகரிலிருந்த அமெரிக்க இராணுவ முகாம் மூடப்பட்டதை இத்தகைய உதாரணமாகக் கொள்ளலாம். 

அந்த வகையில் இப்பொழுது 10,000 ராணுவ அதிகாரிகளை ஜெர்மனியில் இருந்து வெளியேற்றி போலந்து நாட்டில் பாதுகாப்பிற்காக வைப்பதற்கு ஒப்பந்தம் செய்தல் பற்றி அமெரிக்காவும் போலந்தும் பேசியிருக்கின்றன.

ஜெர்மனியின் மீது அமெரிக்க அதிபர் ட்ரம்பிற்க்குக் கோபம் பல காரணங்களினால் இருக்கிறது. ஏதோ தங்கள் ராணுவம் இருப்பதால்தான் ஜெர்மனி பாதுகாப்பாக இருக்கிறது என்ற ஒரு போலியான கனவிலும்  ட்ரம்ப் இருக்கின்றார். அல்லது அப்படி ஒரு பார்வையை உலக நாடுகளுக்குக் கொடுக்க முயற்சிக்கிறார்.

இப்படி அமெரிக்கா சிந்திப்பதற்கு ஒரு வரலார்றுப் பின்னனி இருக்கின்றது தான். இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர்  நாட்டோ (NATO) நட்பு நாடுகள் மேற்கு ஜெர்மனியில் அதன் பலத்தையும் ஆளுமையையும் தக்க வைக்கும் நோக்கத்துடன் செயல்படத்தொடங்கின. அதன் எதிரொலியாக அமெரிக்க ராணுவத் தளங்களை ஜெர்மனியின் பல பகுதிகளில் அமெரிக்கா உருவாக்கி  ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்களை இந்த முகாம்களில் வைத்திருந்தது.  1990ம் ஆண்டில் கிழக்கு ஜெர்மனி, மேற்கு ஜெர்மனி இரண்டும் ஒன்றிணைந்த  பின்னர் பல்வேறு செயல்பாடுகளின் காரணத்தினால் மேற்கு ஜெர்மனியில் இருந்த 224 அமெரிக்க ராணுவ முகாம்கள் மூடப்பட்டன.  இன்றைய நிலவரப்படி 41 அமெரிக்க இராணுவ முகாம்களே ஜெர்மனியில் செயல்பாட்டில் இருக்கின்றன.  கடந்த சில ஆண்டுகளாகத் தொடர்ந்து ஜெர்மனி, அமெரிக்க ராணுவத்தை மீட்டு எடுத்துக் கொள்ளச் சொல்லி வலியுறுத்திக் கொண்டிருக்கின்றது என்பதும் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்று.

கடந்த மூன்று மாதங்களில் கொரோனா கொள்ளை நோய் பரவலான காலகட்டத்தில் மிக மோசமான வகையில் தனது செயல்பாடுகளைக் காட்டி தனது பெயரைக் கெடுத்துக்கொண்ட உலக நாடுகளின் தலைவர்களின் பட்டியலில் முதலிடம் பிடிப்பவர் அதிபர் ட்ரம்ப் என்பதும் அதற்கு நேர்மாறாக பிரச்சனையை முறையாகக் கையாண்டு இன்றுவரை வெளிப்படையாக எல்லா நடவடிக்கைகளையும் சீராக செய்துவரும் நாடாக ஜெர்மனி இருக்கின்றது என்பதும் எல்லோரும் அறிந்தது தானே.

ஐரோப்பாவில் கொரோனா நிலவரம்  இப்படி இருக்க, அமெரிக்காவில் ஜோர்ஜ் ஃப்ளாய்ட் (Georg Floyd) கொலையின் எதிரொலியாக கடந்த இரண்டு வாரங்களாக ஜெர்மனியில் நிறவாதம் மற்றும் இனவாதத்திற்கு எதிரான குரல்கள் செயல்வடிவம் பெறும் வகையில் கடந்த நூற்றாண்டுகளில் அடிமை வியாபாரத்தை மேற்கொண்ட சில முக்கியஸ்தரிகளின் சிலைகள் இங்கிலாந்தின் ப்ரிஸ்டல் நகரிலும் பெல்ஜியத்தின் பல பகுதிகளிலும் நீக்கப்பட்டன. அமெரிக்காவிலோ எதிர்ப்புக் குரல்கள் மேலும் வலுபெற்றிருப்பதையே இந்த வாரம் அமெரிக்காவின் பல பகுதிகளில் தொடரும் இனவாதத்திற்கு எதிரான வன்முறை சம்பவங்களும் நமக்கு வெளிப்படுத்துகின்றன. 

கடந்த சில நாட்களில் பல்வேறு இடங்களில் மக்கள் தங்கள் எதிர்ப்புக் குரலை வெளிப்படுத்தும் வகையிலும் இனவாதத்திற்கு எதிராக அரசு கலந்துரையாடல்கள் நிகழ்த்த வேண்டும் என்று மக்கள் கோரிக்கைகளை வைத்துக் கொண்டிருப்பதைக் காண்கின்றோம்.
கடந்த திங்கட்கிழமையன்று வெள்ளை மாளிகையின் முன்பகுதியில் உள்ள ஆண்ட்ரூ ஜாக்சன் சிலையைத் தகர்க்கும் வகையில் போராட்டக்காரர்கள் செயல்பட்டார்கள் என்பதை பலரும் ஊடகத்தில் பார்த்திருக்கலாம்.

ஆண்ட்ரூ ஜாக்சன் ராணுவ உடை அணிந்து குதிரையில் செல்வது போல அமைக்கப்பட்ட ஒரு பிரம்மாண்டமான சிற்பம் அது. வெள்ளை மாளிகையின் முன்புறத்தில் இருக்கின்ற இந்தச் சிற்பம் அமெரிக்காவின் புகழுக்குச் சான்றாக   இதுவரை காணப்பட்டது. ஆனால் மக்கள் இன்று இந்த சிற்பத்தை நீக்க வேண்டிய சிற்பமாகக் கருதத் தொடங்கியிருக்கின்றனர் என்பதன் வெளிப்பாடுதான் 23ஆம் தேதி வெள்ளை மாளிகையின் முன் பகுதியில் நடந்த இந்தப் போராட்டம்.

இந்த ஆண்ட்ரூ ஜாக்சன் கிபி 19ஆம் நூற்றாண்டில் பூர்வகுடிகளான அமெரிக்க இந்திய மக்களைக் கருணையின்றி அடிமைப்படுத்திய வரலாற்றுக்குச் சொந்தக்காரர். அமெரிக்காவின் ஏழாவது அதிபராக இருந்தவர். இனவாதத்தைத் தூக்கிப் பிடித்து அமெரிக்க இந்தியர்களை ஒதுக்கியவர் என்ற வரலாற்றுப் பின்னணியைக் கொண்டவர்.

அமெரிக்க தலைநகர் வாஷிங்டன் டிசியில் உள்ள வெள்ளை மாளிகையின் முன்புறத்தில் உள்ள ஆண்ட்ரூ ஜாக்சனின் பிரம்மாண்டமான சிலையின் மேல் கயிற்றை கட்டி அதனை எல்லா திசைகளிலும் போராட்டக்காரர்கள் நின்றுகொண்டு அதனை இழுத்து சிதைக்கும் முயற்சியை மேற்கொண்டனர். காவல் அதிகாரிகள் செயல்பட்டு போராட்டக்காரர்களை விரட்டிய காட்சிகளைத் தொலைக்காட்சியில் அன்று பலரும் பார்த்திருப்போம்.

அந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த பலரை தொலைக்காட்சி செய்தி நிறுவனங்கள் பேட்டி எடுத்தன. அதில் ஒருவர் கூறிய வாசகம் நம்மை யோசிக்க வைக்கின்றது.
'Why you want to celebrate history of hatred instead of building a future of love? Our plan is to put a round table for the discussion for the community.'

மக்கள் குறுகிய வட்டத்தில் இருந்து வெளிவந்து வெளிப்படையாக இனவாதத்திற்கு எதிரான கலந்துரையாடல்களை நிகழ்த்துவதற்கு தயாராகிறார்கள் என்பதே இத்தகைய மக்களின் குரல் எதிரொலிக்கிறது.

ஆனால், நமது தமிழ்ச்சூழலிலோ இன்னமும் ஆணவப் படுகொலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. சாதிப் பிரிவினை என்ற ஒன்றுக்கும் உதவாக, மனித நேயத்திற்கு எதிரான ஒரு கருதுகோளை முன் வைத்து. மனித பண்பாட்டின் நாகரிக வளர்ச்சியில் நாம் கடக்க வேண்டிய தூரம் மிக நீளம் என்பதையே இது காட்டுகிறது !

அமெரிக்காவில் கொரோனா கொள்ளை நோய் தொற்று அதிகரித்துக் கொண்டே செல்லும் இந்த வேளையிலும் மக்கள் இனவாதத்திற்கு எதிரான தங்கள் குரலை வெளிப்படுத்துவதில் சிறிதும் தயக்கம் காட்டவில்லை என்பது அவர்களது உறுதியை வெளிப்படுத்துகிறது.

இது இப்படியிருக்க ஐரோப்பாவில் ஐரோப்பாவில் இந்த வாரம் மேலும் ஒரு செய்தி பலரது கவனத்தை ஈர்த்திருக்கின்றது. 

அரசியல் களத்தில் இருப்பவர்களுக்கு குடும்பம் என்பது பெரும்பாலுமே இரண்டாம் பட்சமாகவே அமைந்து விடுவது இயல்புதான். டென்மார்க் பிரதமரின் நிலை இப்போது அப்படித்தான் நம்மை சிந்திக்க வைக்கிறது. டென்மார்க் நாட்டின் பிரதமர் Mette Frederiksen (42) தனது திருமணத்தை மூன்றாவது முறையாக நாட்டின் அரசியல் தேவைகளுக்காகத் தள்ளி வைத்திருக்கின்றார். இவரது திருமணம் வருகின்ற ஜூலை மாதம் 18ஆம் தேதி நடைபெறும் வகையில் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர்கள் சந்திக்க வேண்டிய முக்கிய கூட்டமொன்று அதே நாளில் நடைபெறுவதால் இவர் திருமணம்  தள்ளி வைக்க வேண்டிய ஒரு சூழல் ஏற்பட்டிருப்பதாகவும் இதனை அவரது வருங்கால கணவர் புரிந்துணர்வுடன் ஏற்றுக் கொண்டதையும் வெள்ளிக்கிழமை 26ம் தேதி பத்திரிகைகள் செய்தி வெளியிட்டன. ’விரைவில் நாங்கள் திருமணம் செய்துகொள்வோம். எனது வருங்கால கணவர் போ அதிர்ஷ்டவசமாகப் பொறுமை சாலியாக இருக்கிறார். வெகுவிரைவில் அவருக்கு ’யெஸ்’ சொல்வதற்குக் காத்திருக்கின்றேன்’ என்று தங்கள் திருமணம் தள்ளி வைக்கப்பட்டதைப் பற்றிய செய்தியை இவர் வெளியிட்டிருந்தார்.  

அரசியல் அதிகாரத்தில் இருக்கின்ற இவரைப் போன்றவர்களுக்கு மட்டுமல்ல, நம் அனைவருக்குமே  கொரோனா அவசர கால நிலை நமது தனிப்பட்ட வாழ்க்கையில் நாம் திட்டமிட்டிருந்த  பல  திட்டங்களையும் தள்ளிவைத்து விட்டது தான். பொறுமையுடன் இருக்க வேண்டும் என்பது மட்டுமே கொரோனா நமக்குக் கற்றுக் கொடுத்திருக்கும்  இப்போதைய முக்கியப் பாடம்!









தொடரும்..

Thursday, June 25, 2020

கொரோனா தொற்று - தற்கொலைகள்

நெல்லை இருட்டுக்கடை அல்வா கடையின் அதிபர் கொரோனா தொற்று உறுதியானதால் தற்கொலை என்ற செய்தியை வாசித்து அதிர்ச்சியடைகிறேன்.

கொரோனா தொற்று வந்து குணமடைந்து சென்றவர்கள் எண்ணிக்கை தான் அதிகம். இந்தியா மட்டுமல்ல உலக நாடுகள் அனைத்திலுமே இதுதான் உண்மை நிலை.

கொரோனா என்பது உடல் எதிர்ப்புச்சக்தியை பலமிழக்க வைக்கும் ஒரு நோய். தொற்று ஏற்பட்டவர்களுக்கு உடல் எதிர்ப்புச் சக்தியை இழக்கும் போது மரணம் ஏற்படுகின்றதே தவிர சரியான நேரத்தில் தக்க நடவடிக்கையை மேற்கொண்டவர்கள் குணமடைந்து சென்றிருக்கின்றார்கள் என்ற செய்தி பொது மக்களை சென்றடையவில்லை என்பதையே இந்த நிகழ்வு காட்டுகின்றது.

இதனை உறுதி செய்யும் வகையில் கொரோனாவினால் மரணமடைந்தோர் உடலை புதைக்கச் சிலர் செய்கின்ற நாடகங்களும் உடலை குழிகளுக்குள் தள்ளி விட்டு போவது போன்ற செயல்களும் மக்கள் பீதியில் மட்டுமே வாழ்கின்றார்கள் என்பதையும் அறிவியலையும் ஆராய்ச்சிகளையும் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் நம்பவில்லை என்பதையுமே காட்டுகிறது.

உலக நடப்புக்களையும் அறிவியல் செய்திகளையும் நம்பிக்கை தரும் செய்திகளையும் ஊடகங்கள் பொது மக்களுக்குக் கொண்டு சென்று சேர்க்க வேண்டியது இப்போதைய அவசர தேவை !

-சுபா

Sunday, June 21, 2020

ஐரோப்பாவில் கொள்ளை நோய் சிறப்புத் தொடர்-7


covid-19 உலகம் முழுதும் ஏற்படுத்தியிருக்கும் பல்வேறு வகையான அதிர்வுகளில் மிக முக்கியமான ஒன்றாக இருப்பது பொருளாதாரம் மற்றும் அது சார்ந்த எல்லாமும். ஐரோப்பாவைப் பொறுத்தவரை ஏறக்குறைய எல்லா நாடுகளும் பாதிப்பிலிருந்து தம்மைத் தற்காத்துக் கொண்டு ஓரளவு இயல்பு நிலைக்கு வரத் தொடங்கிவிட்டன. இங்கிலாந்து, ரஷ்யா, துருக்கி ஆகிய மூன்று நாடுகள் மட்டுமே இப்பொழுது மிகத்தீவிரமான பாதுகாப்பு நடவடிக்கைகளை அமல்படுத்த வேண்டிய நிர்பந்தத்தில் இருக்கின்றன, கொரோனா பாதிப்பு எண்ணிக்கையின் அடிபப்டையில். 

இன்று உலகம் முழுவதும் ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்குப் பயணம் செய்வது என்பது  கட்டுப்படுத்தப்பட்ட ஒன்றாக மாறியிருப்பதை நம்மால் நினைத்துப் பார்க்க முடியவில்லை தான். தனிப்பட்ட வகையில் இந்த நான்கு மாதங்களுக்குள் ஏறக்குறைய 10 விமான பயணங்களாவது நான் சென்றிருப்பேன், அலுவலக பயணம் அல்லது தனிப்பட்ட காரணங்களுக்காக. அவை எதுவுமே சாத்தியப்படவில்லை என்பது வியப்பாக இருக்கிறது. கண்களை மூடி நான் அறிந்த வானத்தைக் கற்பனை செய்து பார்த்தால் நீலவானில் அங்கொன்றும் இங்கொன்றுமாகப் பறந்து செல்லும் விமானங்கள் போட்ட வெள்ளைக் கோடுகள் நிறைந்திருக்கும் வானத்தில் இன்று மேகங்கள் மட்டுமே தெரிகின்றன; பறவைகள் மட்டுமே பறக்கின்றன. விமானங்கள் இல்லாத வானத்தைப் பார்க்கக்கூடிய சந்தர்ப்பம் நமது காலத்திலேயே நமக்கு அமைந்திருக்கின்றது என்று நான் வியந்து தான் பார்க்கிறேன். அந்த அளவிற்கு நமக்கு மிகப் பழகிப்போன வாழ்க்கை முறையிலிருந்து மாறுபட்ட வாழ்க்கை முறையை இந்த கொரோனா கொள்ளைநோய் காலம் நமக்கு வழங்கி இருக்கின்றது.

ஐரோப்பாவில் ஒவ்வொரு நாடுகளும் விமானச் சேவையை ஆரம்பிக்கத் தொடங்கிவிட்டன. மூன்று மாத காலம் செயல் இழந்து கிடந்த விமானச் சேவைகள். இந்தக் காலகட்டத்தில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நஷ்டத்தை ஈடு கட்டுவது என்பது விமான சேவை நிறுவனங்கள் ஒவ்வொன்றுக்கும் இருக்கின்ற மிகப்பெரிய சவால் தான்.

ஐரோப்பாவில் மிகக் குறைந்த விலையில் விமான சேவைகளை வழங்கும் நிறுவனங்களின் பட்டியலில் முதலிடம் பிடிப்பது ரைன் ஏர் (Ryanair) விமான சேவையகம். அயர்லாந்தின் டப்ளினைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கும் இது Lauda, Buzz, Malta Air என்ற மேலும் 3 துணை நிறுவனங்களையும் இணைத்துக்கொண்ட வகையில் இயக்கும் மலிவு விமானச் சேவை நிறுவனம். ஐரோப்பாவின் பல நகரங்களுக்கு இந்த விமான சேவைகள் வழங்கப்படுகின்றன.

இந்த விமானச் சேவை நிறுவனத்தில் சேவை அதிகாரிகளாகப் பணியாற்றும் ஊழியர்களுக்கு மாதச் சம்பளமாக 1200 லிருந்து 2200 யூரோ அமைகிறது. பயண முடக்கம் ஏற்பட்ட பின்னர் எந்த பயணங்களும் அனுமதிக்கப்படாத நிலையில் மூன்று மாதங்களாக வேலைக்குச் செல்லாமல் இருக்கின்ற இந்த ஊழியர்களுக்குக் குறைந்த நேரப் பணி’ என்ற அடிப்படையில் மாதச்சம்பளம் குறைக்கப்பட்டுள்ளது. 500 லிருந்து 750 யூரோ மாதச் சம்பளம், அத்துடன் கூடுதலாக 250 யூரோ சலுகை என்ற வகையில் இந்த நேரத்தில் ஊழியர்களைச் சமாளிக்கிறது இந்த நிறுவனம். சம்பளம் குறைக்கப்படுவது நிகழ்ந்தாலும் வேலை பறிபோய் விடுமோ என்ற அச்சமும் இந்த ஊழியர்களுக்கு இருப்பது அண்மையில் இது தொடர்பில் நிகழ்த்தப்பட்ட ஒரு கள ஆய்வில் தெரியவந்துள்ளது. பொதுமக்கள் அதிகமாக வெளியே செல்வது அல்லது அதனால் ஏற்படும் செலவுகள் என்பது குறைந்து போன நிலையில், குறைவான சம்பளமாக இருந்தாலும் கூட பரவாயில்லை.. வேலை பறி போய் விடக் கூடாது என்ற சிந்தனையே பெரும்பாலான மக்களின்  முடிவாகவும் அமைகின்றது. 

ஜெர்மனியைப் பொறுத்தவரை சுற்றுலா என்பது ஒவ்வொரு தனி மனிதரின் வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிக்கும் ஒரு நடவடிக்கையாக அமைந்துவிட்டது. பொதுவாகவே மார்ச் மாதம் தொடங்கி மக்கள் பல்வேறு பகுதிகளுக்கு ஒரு வாரம் அல்லது இரண்டு வாரம் அல்லது நீண்ட விடுமுறை என்ற வகையில் செல்வது மிக இயல்பு. இதற்காக ஜெர்மானியர்கள் முன்னதாகவே பயண ஏற்பாடுகளைச் செய்து ஐரோப்பாவில் இயங்கிக் கொண்டிருக்கின்ற பல்வேறு சுற்றுலா நிறுவனங்களின் விமான சேவைகளை முன்பதிவு செய்து வைத்திருப்பார்கள். இப்படிப் பட்டோர் எந்த வகையில் தாங்கள் முன்பதிவு செய்து செலுத்திய கட்டணத்தை மீண்டும் பெறுவது என்று விமான சேவை நிறுவனங்களை அணுகுகின்றனர்.  சில விமான சேவை நிறுவனங்கள் பயணிகள் கட்டிய பணத்தை திரும்பப் பெறுவதில் பொதுமக்களுக்கு உதவும் நோக்குடன் செயல்பட்டாலும் முழுமையான தொகையை அவர்களால் தர முடியாது போவதையே விமானச் சேவை நிறுவனங்கள் வழங்குகின்ற செய்திகள் தெரிவிக்கின்றன. சில சேவை நிறுவனங்கள் ஏற்கனவே பயணங்களைப் பதிந்து கொண்டு ஆனால் பயணம் தடைபட்ட நிலையில் பயணிகளுக்கு வவுச்சர் வழங்குகின்றார்கள். இதன்வழி அவர்கள் மற்றுமொரு புதிய பதிவு செய்துகொண்டு  தங்கள் பயணத்தை கொரோனா கொள்ளைநோய் பாதிப்புகள் முழுமையாகத் தீர்ந்த பின்னர் பயணம் மேற்கொள்ள உதவும் வகையில் அமைய ஒரு வாய்ப்பாக அமையும்.

ஐரோப்பா மட்டுமன்றி உலகம் முழுவதும் பல நாடுகளுக்கு விமானச் சேவை வழங்கி இயங்கிவரும்  நிறுவனங்களுள் ஒன்று லுப்தான்சா.  ஜெர்மனியின் தேசிய விமான சேவை நிறுவனமான லுப்தான்சாவை பொருளாதார நெருக்கடியிலிருந்து காப்பாற்றும் வகையில் 9 பில்லியன் யூரோ உதவித்தொகையை சான்சலர் ஏஞ்சலா மெர்கல் அவர்கள் தலைமையிலான அரசு முடிவு செய்துள்ளதை அவர் மே மாதமே அறிவித்திருந்தார். உள்நாட்டிலிருந்து உதவித்தொகை வழங்கப்படும் என்பதோடு ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்தும் ஒரு குறிப்பிட்ட பொருளாதார உதவி இந்தச் சேவை நிறுவனத்திற்குக் கிடைக்கும் வகையில் ஜெர்மனி அரசு திட்டமிட்டு செயல்பட்டு வருகின்றது.

ஜெர்மனியைப் பொறுத்தவரை தற்சமயம் விமான நிலையத்திலிருந்து உள்ளூரில் விமான சேவையும் ஐரோப்பிய நாடுகள் சிலவற்றுக்குமான விமான சேவையும் தொடங்கப்பட்டு விட்டன. ஸ்டுட்கார்ட் விமான நிலையத்திலிருந்து துருக்கி, நெதர்லாந்து, கிரேக்கம் போன்ற நாடுகளில் சில விமான நிலையங்களுக்கு ஜெர்மனியிலிருந்து விமானங்கள் பறக்கத் தொடங்கிவிட்டன. 

எப்போதும் கூட்டமும், நெரிசலும் நீண்ட வரிசையம் மட்டுமே இயல்பு என  நமது மனதில் பதிந்த காட்சிகளைக் கூட பொய்யாக்கி விட்டன கொரோனா கால நிகழ்வுகள். ஒவ்வொரு வாரமும் ஸ்டுட்கார்ட் விமான நிலையத்திலிருந்து அலுவலகப் பணிகளுக்காகப் பயணிக்கும் ஆயிரக்கணக்கான பயணிகள் காத்திருக்கும் இடங்கள் இன்றோ வெறிச்சோடிப் போய்க் கிடக்கின்றன. யாருமே நினைத்துப் பார்த்திருக்க முடியாத ஒரு காட்சி இது. 

தன் உயிரைப் பற்றி அச்ச உணர்வு தான் ஒரு மனிதருக்கு இருக்கின்ற உணர்விலேயே மிகவும் வலிமையானது. உயிரை முதலில் காப்பாற்றிக் கொள்வோம்.. வேலையோ அல்லது அது தொடர்பான பயணமோ எதுவானாலும் சரி எல்லாம் இரண்டாம்பட்சம்தான்.. அல்லது அவை முக்கியமல்ல என்ற சிந்தனையை மனிதருக்கு இந்த கொரோனா காலம் மிக அழுத்தமாக தெளிவுபடுத்தி இருக்கிறது. 

பொருளாதாரத் தேடலிலும்உலகம் நம்மை இழுத்துக்கொண்டு சென்ற பாதையிலும் நம்மை மறந்து ஓடிக்கொண்டிருந்த நாம் ஒவ்வொருவரும் நின்று நிதானித்து ன்று நம்மைப் பற்றி சிந்திக்கின்றோம்; நமது தேவைகள் பற்றி யோசிக்கிறோம்நம் உடல்நலனில் அக்கறையும் கவனமும் வைக்கின்றோம். எல்லாவற்றிற்கும் மேலாக வீட்டில் இருப்பதையே ஒரு அனாகரிக செயலாக நினைத்துக் கொண்டு வெளியில் ஓடிக்கொண்டிருந்த நம்மில் பலர் என்று வீட்டுக்குள் இருந்தே உலகத்தைப் பார்க்கும் வித்தையைக் கற்றுக் கொண்டிருக்கின்றோம். இந்த சூழ்நிலையிலும் புதியபுதிய கற்றல்கள் நமக்கு நடந்துகொண்டுதான் இருக்கின்றன. வெளியில் ஓடி ஓடிச் சென்று அனுபவத்தை தேடிக்கொண்டிருந்த நாம் என்று வீட்டுக்குள் இருந்தவாரே கணினி வழியாகவும் இணையச் சேவையின் வழியாகவும் உலக நடப்புக்களை அறிந்து கொள்கின்றோம்.

வீட்டிற்குள் முடங்கிக் கிடப்பது சுய வளர்ச்சியை முடக்கி விடாது. இந்த ஊரடங்கு காலத்திலும் இணைய தொழில்நுட்பம் வழங்கி இருக்கின்ற வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொண்டு புதிய புதிய இணையவழி சேவை நிறுவனங்கள் இப்போது காளான்கள் போல முளைத்துவிட்டன. தடைகளையும் வரமாக நினைத்து செயல்படுபவர்கள் இந்தக் காலகட்டத்தில் தங்கள் அறிவுத்திறனைப் பயன்படுத்தி புதிய தொழில் முயற்சிகளைத் தொடங்கிவிட்டார்கள். Zoom, WebEx, GoogleMeeting, GotoMeeting, StreamYard போன்ற மென்பொருட்கள் இன்று பாமர மக்களையும் சென்றடையத் தொடங்கிவிட்டன.

2020 ஒட்டு மொத்த மனித குல செயல்பாட்டில் மாற்றத்தை ஏற்படுத்திய ஒரு ஆண்டாக அமைந்து விட்டது. இந்த மாற்றங்களை ஆரோக்கியமாக ஏற்றுக்கொண்டு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை செயல்படுத்துவதே சிறப்பு.








தொடரும்...

Sunday, June 14, 2020

ஐரோப்பாவில் கொள்ளை நோய் - 6

ஐரோப்பாவில் கொள்ளை நோய் சிறப்புத் தொடர்-6

இன்றைய நிலையில் ஐரோப்பிய நாடுகளின் மொத்த கவனமும் கடும் வீழ்ச்சிகண்ட பொருளாதாரத்தை விரைவாக கட்டி எழுப்ப வேண்டும் என்பதில் இருக்கின்றது என்பதைத்தான் அண்மைய கடந்த சில நாட்களின் செய்திகள் வலியுறுத்துகின்றன.  கொரோனா கொள்ளை நோய்த் தொற்று பரவல் என்பது கட்டுப்பாட்டிற்குள் வந்து, குறைந்து வருவதை கடந்த சில தினங்களின்  அறிக்கைகள் வெளிப்படுத்துகின்றன. பெரும் உயிரிழப்பை ஏப்ரல் மாதம் அனுபவித்த ஸ்பெயினில் இப்போது தினசரி இறப்பு எண்ணிக்கை பூஜ்ஜியமாகி இருக்கிறது. ஜெர்மனியில் நூற்றுக்கு மேற்பட்டோர் ஒரு நாளில் இறந்தனர் என்ற நிலை மாறி கடந்த சில நாட்களாக எண்ணிக்கை சராசரி ஆறு என்ற வகையில் இருக்கின்றது. இதனைக் கருத்தில் கொண்டு சுற்றுலாத்துறையை ஊக்குவிக்கும் வகையில் ஐரோப்பிய நாடுகள் திட்டங்களை வெளியிட ஆரம்பித்துள்ளன.

ஜூன் 3ம் தேதி இத்தாலி சுற்றுலாத்துறையை ஆதரிக்கும் வகையில் விமானப் போக்குவரத்துச் சேவைக்கு விதித்திருந்த கட்டுப்பாடுகளைத் தளர்த்தியது. இங்கிலாந்தும் இதே போல நடவடிக்கை மேற்கொண்டது என்றாலும் வெளிநாடுகளிலிருந்து வருபவர்கள் யாராக இருந்தாலும் 14 நாட்கள் வீட்டுப் பாதுகாப்பில் இருக்க வேண்டும் என்ற கட்டுப்பாட்டை விதித்தது. இதனை ரெயின் ஏர், ஈசிஜெட், பிரிட்டிஷ் ஏர் ஆகிய விமானச் சேவை நிறுவனங்கள் கடுமையாக எதிர்த்துக் கொண்டிருக்கின்றன. இவ்வகை கட்டுப்பாடுகள் எவ்வகையிலும் தங்களின் சேவைக்கு உதவாது என்றும் இங்கிலாந்து அரசு இந்தக் கட்டுப்பாட்டை உடன் நீக்க வேண்டும் என்றும் இவை வலியுறுத்திக் கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் ஜூலை 1ம் தேதி  முதல் உலக நாடுகளுக்கானப் போக்கு வரத்து எல்லையை ஐரோப்பிய ஒன்றியம் திறக்க முடிவெடுத்துள்ளது. இது படிப்படியான நடவடிக்கையாகவே இருக்கும் என்றும், கொரொனா தொற்று பரவல் நிலையைப் பார்த்து ஒவ்வொரு ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் உறுப்பு நாடுகளும் இந்த நடவடிக்கையை முடிவெடுக்கும் என்றும் தெரிகிறது.

இந்தச் சூழ்நிலையில்  மே மாதம் 25ம் தேதி அமெரிக்காவின் மினியாப்போலிஸ் மாநிலத்தில் காவல்துறை அதிகாரி ஒருவரின் கொடுஞ்செயலினால் கொலை செய்யப்பட்ட ஜோர்ஜ் ப்ளோயிட் (George Perry Floyd Jr.) இன்று உலகம் முழுவதும் இனவாத சிந்தனைக்கு எதிரான குரல் ஓங்கி ஒலிப்பதற்குக் காரணமாகியிருக்கின்றார். அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்தில் பிறந்து வளர்ந்தவர்  ஜோர்ஜ் ப்ளோயிட்.  மினியாப்போலிஸ் நகரில் கறுப்பர் என்ற இனவாத அடிப்படையில் அவரது கொலைக்கு ஒரு காவல்துறை அதிகாரி காரணமாகியிருப்பது அமெரிக்கா முழுவதும் காவல்துறையின் செயல்பாடுகளை அவசரமாக அரசு மீளாய்வு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை மிக அழுத்தமாக முன்வைக்கக் காரணமாகியிருக்கின்றது.

உலகின் வேறொரு பகுதியில் அநீதி இழைக்கப் பட்டாலும் அதற்குக் குரல் கொடுப்போம் என்று ஜெர்மனியிலும் மக்கள் இனவாதத்திற்கு எதிரான தங்கள் குரல்களைக் கடந்த சில நாட்களாக மிகப்பெரும் அளவில் உள்நாட்டில் வெளிப்படுத்தி வருகின்றனர்.

ஜெர்மனியின் பெரு நகரங்களான பெர்லின், ஸ்டுட்கார்ட், மியூனிக், ஹாம்பர்க், லைப்சிக் போன்ற பல்வேறு நகரங்களில் வெள்ளி, சனி, ஞாயிறு  எனக் கடந்த மூன்று நாட்களும் மிகப்பெரிய அளவில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடிய அளவில் இனவாதத்திற்கு எதிரான பொதுமக்கள் பேரணி நடைபெற்றது.

கொரோனா பேரிடர் கால முடக்கம் இருக்கின்ற சூழலிலும் இந்தப் பேரணி  இனவாத சிந்தனைகளுக்கு  எதிரா மக்களின் சிந்தனையில் எழுந்துள்ள கடும் கோபத்தை வெளிப்படுத்துவது என்ற நோக்கத்துடன் செயல்படுத்தப்பட்டது.

ஜார்ஜ் ப்ளோய்டின் மரணம் ஏற்படுத்தியிருக்கும் சலனம் ஐரோப்பாவில், குறிப்பாக, ஜெர்மனியிலும் இனவாத சிந்தனை தெரிந்தும் தெரியாமலும் பல்வேறு வகையில் ஊடுருவி இருப்பதை மக்கள் வெளிப்படையாக இப்போது பேச வாய்ப்பினை உருவாக்கிக் கொடுத்துள்ளது. இந்தப் பேரணிகள் ஒட்டுமொத்த  ஐரோப்பாவிலும் வெள்ளையரது நிற அடிப்படையிலான சிந்தனைப் போக்கு பற்றிய கருத்துக்களுக்கு மீளாய்வு செய்ய ஒரு வழி அமைத்துக் கொடுத்திருக்கிறது.

ஜோர்ஜ் ப்ளோய்டின் மரணம் ஐரோப்பிய நாடுகளில் ஏற்படுத்திக் கொண்டிருக்கும் இனவாதத்திற்கு எதிரான குரலின் தொடர்ச்சியாக பெல்ஜியம் நாட்டில் கி.பி. 19ம் நூற்றாண்டில் ஆட்சி செய்த மன்னர் இரண்டாம் லியோபர்ட்டின் ( King Leopold II) சிலையைப் பொது மக்கள் அவமானப் படுத்தி நீக்கியுள்ளனர். பெல்ஜியம் வரலாற்றில் நீண்ட காலம், அதாவது 1865லிருந்து 1909 வரை ஆட்சி செய்த மாமன்னர் இவர். அண்ட்வெர்ப் நகரிலும் கெண்ட் நகரிலும் உள்ள இவரது பிரமாண்டமான சிலைகளைப் பொது மக்கள் அவமானப்படுத்தி தகர்த்து நீக்கியுள்ளனர்.

இது எனில்..?

தனது ஆட்சி காலத்தில் ஆப்பிரிக்காவின் கோங்கோ நாட்டைக் கைப்பற்றி அதன் முழு வளத்தையும் சுரண்டியதோடு கோங்கோ மக்களை அடிமைகளாக்கிக் கசக்கிப்பிழிந்து துன்புறுத்திய ஒருவன் என்று `புகழ்பெற்றவர்` இந்த மாமன்னர். இத்தனைக்கும் இந்த மன்னன் கோங்கோ நாட்டிற்கு ஒருமுறையும் நேரில் சென்றதில்லை. பெல்ஜியம் அரண்மனையில் அமர்ந்து சொகுசு வாழ்க்கையை ரசித்துக் கொண்டே ஆப்பிரிக்க நாட்டின் மக்களை வாட்டி வேலை வாங்கி அதில் பெற்ற செல்வத்தை ஐரோப்பாவிற்குக் கொண்டு வந்து தன் நாட்டை வளமாக்கிய மன்னர் இவர்.

பெல்ஜியம் நாட்டு மக்கள் இனவாதத்துக்கு எதிராக கோங்கோவில் அடக்குமுறையை வெற்றிகரபப்படுத்திய நிகழ்வுகளின் குறியீடான மன்னர்  இரண்டாம்  லியோபர்ட்டின் சிலையைத் தகர்த்ததன் வழி தங்கள் கோபத்தை வெளிப்படுத்திக்கொள்கின்ற அதே வேளை உலகிற்குத் தங்கள் இனவாத சிந்தனைக்கு எதிரான கருத்தியலைப் பதிய வைத்துள்ளனர். இதனைச் செய்தவர்கள் கோங்கோ நாட்டிலிருந்து வந்தவர்கள் அல்ல. மாறாகா பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த பொதுமக்களே தான்.
இதே போல இங்கிலாந்தின் ப்ரிஸ்டல் நகரில் அந்த நகருக்கு கடந்த சில தினங்கள் வரை முக்கியஸ்தராகக் கருதப்பட்ட (Edward Colston) சிலை தகர்த்தெரிந்து ஆற்றில் வீசப்பட்டது.

யார் இவர்?

1680ல் Royal African Company (RAC) என்ற நிறுவனத்தை உறுவாக்கி ஆப்பிரிக்காவிலிருந்து மக்களை வேற்று நாடுகளுக்குக் கொண்டு செல்லும் அடிமைத்தொழிலை மிகத் தீவிரமாகச் செய்தவர். ஏறக்குறைய 100,000 மேற்கு ஆப்பிரிக்க மக்கள் இவரால் கரீபியத் தீவுகளுக்கும் அமெரிக்காவிற்கும் அடிமைகளாக விற்கப்பட்டனர். அடிமை வாழ்க்கையின் கொடூரம் வார்த்தைகளால் எழுத முடியாதது. இன்று இந்த மனிதரின் உருவச் சிலை ப்ரிஸ்டல் நகருக்கு பெருமையல்ல என பொதுமக்களே நினைத்து உடைத்து எரிந்து விட்டார்கள். உடைத்ததும், வீசியதும் சரியா தவறா என்பது இன்று ஒரு முக்கியக் கேள்வியல்ல. மாறாக மக்கள் மனதிலிருந்து அடிமைத்தனத்தை வித்திட்டவர்கள் அகற்றப்படுவார்கள் என்பது இனவாதம் பேசுபவர்கள் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் என்பதையே இச்செயல் வெளிப்படுத்துகிறது.   
கொரோனா கொள்ளை நோய் பரவலின் தாக்கம் ஐரோப்பாவில் குறைந்து வரும் வேளையில் தங்கள் நலனையும் ஒதுக்கி வைத்து ஒட்டுமொத்த உலக மக்களின் நீதிக்காக, இனவாதம் ஒழியவேண்டும் என்ற ஒற்றைச் சிந்தனையுடன் ஐரோப்பாவில் கடந்த சில நாட்களாக எழுந்துள்ள இந்த எழுச்சி வியக்க வைக்கின்றது!

Racial profiling என்ற சொல் இப்போது ஐரோப்பிய ஊடகங்களில் அதிகம் ஒலிக்கத்தொடங்கியிருக்கின்றது. இன ரீதியாக மக்களை அடையாளப்படுத்தி `இந்த இனத்தவர்கள் இப்படிப்பட்ட குற்றம் செய்வார்கள்` என்ற சிந்தனையைப் பற்றி இன்று கேள்விகள் எழத் தொடங்கியிருக்கின்றன.

இந்திய மற்றும் தமிழ்ச்சிந்தனையுடன் சாதி உயர்வு தாழ்வு பார்த்து இனவாதம் செய்யும் நபர்கள் இதனை தங்களுக்கான ஒரு எச்சரிக்கையாகக் காணவேண்டியது அவசியம் .இந்தியச்சிந்தனையில் சாதியை வைத்து 'இந்த சாதிக்காரர்கள் இப்படித்தான் செய்வார்கள்` என்ற பொதுவார்த்தைப் பயன்பாடு இருப்பதைப் பரவலாக நாம் எல்லோருமே அறிவோம். புலம் பெயர்ந்த தமிழர்கள் சூழலிலும் கூட இந்த வார்த்தைப் பிரயோகம் வழக்கில் ஒட்டிக் கொண்டு வருவதை நான் என் நேரடி அனுபவத்தில் இங்கு ஜெர்மனியிலும் நிகழ்வதை அறிவேன். இப்படிப்பட்ட சிந்தனையைத் தான் Racial profiling என்று இன்று கூறி கண்டிக்கும் வகையில் சமூக நீதியைக் காக்க முனைபவர்களும் இனவாதத்தைக் கண்டிக்க விரும்புபவர்களும் முன்னெடுத்திருக்கின்றார்கள்.

ஜோர்ஜ் ப்ளோய்டின் (Georg Floyd ) மரணம் ஐரோப்பிய நாடுகளில் ஏற்படுத்திக் கொண்டிருக்கும் இனவாதத்திற்கு எதிரான குரலின் தொடர்ச்சியாக பெல்ஜியத்தில் மாமன்னர் இரண்டாம் லியோபர்டு அவர்களது சிலை எங்கெங்கு உள்ளதோ அவை அனைத்தையும் எவ்வளவு விரைவில் நீக்க முடியுமோ அவ்வளவு விரைவாக நீக்க வேண்டும் என்று இனவாத சிந்தனையை எதிர்க்கும் போராளிகள் இயங்கத் தொடங்கியிருக்கின்றனர். கடந்த   ஞாயிற்றுக்கிழமை பெல்ஜியத்தின் தலைநகரான பிரஸ்ஸல்ஸ் நகரில் ஏறக்குறைய 10,000 போராளிகள் இனவாதத்திற்கு எதிரான தங்கள் கருத்துக்களை முன்வைத்து பேரணியை நிகழ்த்தினர்.

பொதுமக்களில்   65,000 பேர் பெல்ஜியம் முழுதும் உள்ள மாமன்னர் இரண்டாம் லியோபர்ட்டின் சிலை நீக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையில் கையெழுத்திட்டு இருக்கின்றனர். மன்னர் இரண்டாம் லியோபர்ட்டின் சிலை மட்டுமன்றி அவரது பெயரில் அமைந்திருக்கின்ற சாலைகளின் பெயர்களை மாற்ற வேண்டுமென்றும் கோரிக்கைகளும் வைக்கப்பட்டுள்ளன.

காலனித்துவ பழமையில் (Colonial Legacy) அடிமைத்தனத்தைக் கொடூரமாக நிலைநாட்டிய வரலாற்றுச்சின்னங்களைப் பெருமைக்குரிய சின்னங்களாகப் பார்க்கக் கூடாது என்றும், இனவாதத்தை ஆதரிக்கின்ற இவ்வகையான சின்னங்கள் நீக்கப்பட வேண்டும் என்று குரல்கள் எழுந்துள்ளன.

பெல்ஜியத்தில் எழுந்துள்ள எழுச்சி போலவே இங்கிலாந்திலும் வெவ்வேறு பகுதிகளில் இனவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகள் போராட்டங்கள் என்பன நடைபெறுகின்றன. விக்டோரியா மகாராணி காலத்து நினைவுச் சின்னங்கள் சில இத்தகைய வகையில் பாதிப்புக்குள்ளாக வாய்ப்பு இருக்கலாம். லண்டனில் அடிமைத்தனத்தை வெளிப்படுத்தும் வகையிலான `அடிமைகள் அருங்காட்சியகம்` (Slavery Museum) ஒன்று அமைக்கப்பட வேண்டும் என்றும் இப்போது ஒரு கோரிக்கை வைக்கப்பட்டிருக்கின்றது. அதுமட்டுமின்றி லண்டன் நகரில் இனவாதத்தினால் கொல்லப்பட்ட பொதுமக்களுக்குச் சிலைகளும் வைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

ஒடுக்கப்பட்ட மற்றும் அடிமைகளாக்கப்பட்டவர்களின் உணர்வுகளை மதிக்கும் வகையிலும், இனி வருங்காலங்களில் இத்தகைய மனிதாபிமானமற்ற செயல்கள் நடைபெறாமல் இருக்கவும் இத்தகைய மனமாற்றமும் எதிர்ப்புக் குரல்களும் காலத்தின் தேவையே!

ஐரோப்பாவில் இனவாத சிந்தனைக்கு எதிராக எழுந்திருக்கும் இந்த எழுச்சி நிச்சயமாக காலனித்துவ ஆட்சி செய்த இங்கிலாந்து, பெல்ஜியம், பிரான்சு, போர்த்துகல் போன்ற நாடுகள் மட்டுமன்றி, ஏனைய மேற்கு மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும் எதிரொலிக்கும்.   இந்த நூற்றாண்டில் கொரோனா கொள்ளை நோய் ஏற்படுத்தியிருக்கும் வாழ்வியல் மாற்றத்தைப் போன்றதொரு சிந்தனை மாற்றத்திற்கு இது வழிவகுக்கும்!






தொடரும்..