Sunday, August 27, 2017

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 130

புறநானூற்று ஆராய்ச்சி தொடர்ந்து கொண்டிருந்தது. நூல் சங்க காலத்து நடை என்பது மட்டுமல்லாது சங்ககாலத்து வரலாற்று நிகழ்வுகளின் செய்திகளையும் உள்ளடக்கியதாக இருந்தது. உ.வே.சாவிற்குத் தமிழக வரலாறு தொடர்பான விசயங்களில் பரிச்சயம் இல்லாமலிருந்தது. ஆக, சந்தேகங்கள் ஏற்படும் இடங்களில் உள்ள செய்திகளை ஊர்ஜிதப் படுத்திக் கொள்ளவும், மன்னர்கள், தளபதிகள், போர் செய்திகள் ஆகியவை பற்றி மேலதிகத் தகவல் பெறவும் தனக்கு தொடர்பில் இருந்த சில நண்பர்களை அவர் கடிதம் வழி தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டதாக என் சரித்திரத்தில் பதிகின்றார். 

அச்சுப் பதிப்பாக ஒரு நூலைக் கொண்டுவருவதற்கு முன்னர் அதில் சொல்லப்படும் செய்திகளை முறையாக அலசி ஆராய்ந்து விளக்கிப் பதிப்பிக்கும் போது அந்த நூலை வாசிப்போருக்கும் அது பயனளிக்கும் என்பது உ.வே.சாவின் எண்ணமாக இருந்தது என்பதை உணர முடிகின்றது. 

தபால் இலாகாவில் சூபரிண்டெண்டாக இருந்த ஸ்ரீ வி.கனகசபைப் பிள்ளை என்பர் தமிழக வரலாற்றில் மிகுந்த ஆர்வத்துடன் ஆராய்ச்சி செய்து வந்தார் என்றும், அவர் தமிழர் சரித்திரம் எழுத வேண்டும் என்ற நோக்கத்துடன் ஆராய்ச்சி செய்து வந்தார் என்றும் உ.வே.சாவின் குறிப்புக்கள் வழி அறியமுடிகின்றது. தனது ஆராய்ச்சியின் வழி தாம் கற்று அறிந்து கொண்ட பல செய்திகளைத் தொகுத்து ஆங்கிலத்தில் "1800 வருஷங்களுக்கு முந்திய தமிழர்" என்ற ஒரு நூலை அவர் எழுதி வெளியிட்ட செய்தியையும் அறியமுடிகின்றது. இந்த வரலாற்றாய்வாளர் உ.வே.சாவிற்கும் நட்பு வட்டத்தில் இருந்தார். அவருக்குக் கடிதம் போட்டுச் சங்க நூல்களில் தென்படுகின்ற வரலாற்று கதாமாந்தர்களைப் பற்றிய விளக்கங்களையும் போர் பற்றிய செய்திகளையும் கேட்டு அறிந்து கொண்டார் உ.வே.சா. இப்படி பலவகையாக சந்தேகங்களைக் களைந்து, பல நூல்களைக் கற்று, குறிப்புக்கள் எழுதி, அகராதிகளையும் தயார்செய்த வகையில் ஒருவாறு புறநானூற்று தயாரிப்பு முழுமை பெற்றது. 

நூலுக்கான தயாரிப்புப் பணிகள் முடிந்தது. கும்பகோணத்திலிருந்து சென்னைக்குப் பயணமானார் உ.வே.சா. புறநானூற்று அச்சுப் பணிகள் 1893ம் ஆண்டு ஜனவரி மாதம் வெ.நா.ஜூபிலி அச்சுக் கூடத்தில் தொடங்கியது. வழக்கம் போல ராமைய்யங்கார் தோட்டத்தில் தங்கிக் கொண்டு அங்கிருந்த படி நூல் அச்சுப்பணிகளைச் செய்யலானார். 

இலங்கையின் யாழ்ப்பாணத்து ஆறுமுக நாவலர் சென்னையில் ஒரு அச்சுக்கூடத்தை வைத்திருந்தார் என்றும் அவருடைய அந்த அச்சுக்கூடத்தைச் சதாசிவ பிள்ளை என்பவர் கவனித்து வந்தார் என்றும் உ.வே.சா பதிகின்றார். இடையே ஒரு நாள் அங்குச் சென்ற போது சதாசிவ பிள்ளையிடம் ஒரு புறநானூற்றுப் பிரதி இருந்தது தெரியவந்தது. அதனைச் சதாசிவப் பிள்ளை ஒரு பிரதி எடுத்து இவருக்குத் தபாலில் அனுப்பி வைத்தார். மூலம் முழுவதும் உள்ள நூல் அது. 267ம் செய்யும் முதல் 369ம் செய்யுள் வரை இருந்தது என்றும் உ.வே.சாவின் புறநானூற்று ஆய்வுப் பணியில் இந்தப் பிரதியும் உதவியது என்றும் தெரிகின்றது. 

பணிகள் சிறப்பாக நடந்து வந்தைமையினால் 18 பாசுரங்களின் அச்சுப் பணி நிறைவேறியது. அங்கிருந்து பணியை மேலும் தொடர அவகாசம் இல்லை. கல்லூரி தொடங்கிவிடும் என்பதால் கும்பகோணம் திரும்பும் சூழல் ஏற்பட்டது. திரும்பும் போது சேலம் வழியாக வந்து கரூருக்கும் வந்து அங்கு சில பேருடன் உரையாடி பின் புறப்பட்டு கும்பகோணம் திரும்பினார் உ.வே.சா.

தொடரும்.
சுபா

Sunday, August 20, 2017

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 129

ஆராய்ச்சியில் ஈடுபடும் மாணாக்கர்கள் மிக முக்கியமாக அறிந்திருக்க வேண்டியது ஆய்வு செய்வதற்கான ஆராய்ச்சி நெறிமுறையும் அவற்றைச் செயல்படுத்தும் வழி முறையும், ஆய்வுக்குப் பயன்படுத்தும் கருவிகளும் எனலாம். இன்றைய காலகட்டத்தில் முனைவர் பட்ட ஆய்வினை சரியாகப் புரிந்து கொண்டு தான் ஆய்வகங்கள் செயல்படுகின்றனவா என்பதே கேள்வியாக இருக்கின்றது. இன்று நம் சூழலில் ஆராய்ச்சிக்கான பொருளை தேர்ந்தெடுப்பதிலிருந்து மாணவர்கள் மேற்கொள்ளும் ஆய்வு முறை, தேர்ச்சி என எல்லாமே மன திருப்தி தருவதாக இல்லை. முனைவர் பட்ட ஆராய்ச்சிகளைக் கூட மிக எளிதாக்கி பணம் கொடுத்தால் தேர்ச்சி பெறலாம் என இயங்கும் வழிகாட்டிகளும், கல்வி நிறுவனங்களும் இன்று எண்ணிக்கையில் அதிகரித்து வருகின்றன. எடுத்துக் கொண்ட ஆராய்ச்சி கருப்பொருளில் மனதை முழுமையாக ஈடுபடுத்தி ஆய்வினை பல கோணங்களில் சிந்தித்துச் சோதித்து செய்வதை மாணவர்களும் சரி பேராசிரியர்களும் சரி, கல்வி நிறுவனங்களும் சரி உறுதியாக்க வேண்டியது அவசியமல்லவா? 

புறநானூற்று அச்சு பதிப்புப் பணிக்கான ஆராய்ச்சியில் உ.வே.சா அவர்கள் இறங்கியபோது அச்சுப்பதிப்புத் துறையில் அவருக்கிருந்த அனுபவம் அதிகரித்திருந்தது என்றே சொல்லலாம். சிந்தாமணி பதிப்பில் அவர் எதிர்கொண்ட சிரமங்கள் இல்லை என்றாலும் அவரது மனம் அடுத்தடுத்து தாம் பதிப்பிக்கும் நூல்களில் ஆராய்ச்சி முறைகளில் புதுமையை புகுத்த வேண்டும் என்ற சிந்தனை அவருக்கு வலுவாக இருந்தது. இது இயல்புதானே. முதலில் நாம் எந்த அனுபவமும் இல்லாமல் ஒரு பணியில் ஈடுபடுவதை விட வாழ்க்கையில் சில அனுபவங்களைப் பெற்று வளர்ந்த பின்னர் செய்யும் காரியங்களை இன்னும் மேன்மையாகச் சிறப்பாகச் செய்ய வேண்டும் என்று தானே நினைப்போம். அதே நிலை தான் உ.வே.சா அவர்களுக்கும். 

புற நானூறு சங்கப்பாடல்களின் தொகுதிகளுள் ஒன்று என்பதை அவர் அறிந்திருந்தார். பத்துப்பாட்டு ஏற்கனவே அவரால் வெளியிடப்பட்டிருந்தது. சங்க நூல்களில் உ.வே.சா அச்சுப்பதிப்பாக வெளியிட்ட முதல் நூல் பத்துப்பாட்டு. சிலம்பிற்குப் பின்னர் அடுத்து புறநானூற்றை வெளியிட எண்ணிய போது சங்கப்பாடல்கள் தொகுதி அனைத்தையும் முதலில் வாசித்து ஆராய்ந்து விடவேண்டும் என்றும், அந்த நூல்கள் தருகின்ற பொதுப்பண்புகளையும் செய்திகளையும் அறிந்து கொண்ட பின்னணியில் சொற்றொடர்களையும் வாக்கியங்களையும் ஆராயும் போது சரியான பொருளை கண்டறிவது சுலபமாகும் என்றும் அவர் எண்ணினார். 

தான் பணியாற்றிக் கொண்டிருந்த கும்பகோணம் கல்லூரியில் பணியாற்றிய பேராசிரியர் கே.ஆர்.துரைசாமி ஐயரென்பவர் தன் கையில் பெரிய ஆங்கில நூல் ஒன்றை வைத்து வாசித்துக் கொண்டிருப்பதை உ.வே.சா கண்டார். தனக்கு ஆங்கில மொழி தெரியாததால் தான் பல ஆங்கிஅல் மொய்ழி நூல்களை வாசித்து அவற்றின் மூலம் பதிப்பிற்கான வழிமுறைகளைக் கண்டறியாமல் போன நிலைபற்றியும் இண்டஹ் அத்தியாயத்தில் குறிப்பிடுகின்றார். ஆக, அது என்ன நூல் ? இவ்வளவு பெரிதாக இருக்கின்றதே எனக் கேட்க, இது பைபிள் என்கின்றார் அந்தப் பேராசிரியர். பைபிள் சிறியதாக அல்லவா இருக்கும். இது ஏன் பெரிதாக இருக்கின்றது. எப்படி சாத்தியம் என ஆவலுடன் தெரிந்து கொள்ள கேள்வி கேட்கலானார் உ.வே.சா. 

அந்தப் பேராசிரியரும், இந்த நூலில் பைபிள் வாசகங்கள் மட்டும் இல்லையென்றும், மாறாகப் பைபிளிலுள்ள சொற்களைத் தொகுத்து வகைப்படுத்தி அவற்றிற்கு ஒப்புவமை ஆய்வும் செய்து அவற்றையெல்லாம் இணைத்து நூலாக்கியிருக்கின்றார்கள். இப்படிச் செய்வதால் வார்த்தைகளுக்கான சரியான பொருளை ஏறக்குறையச் சரியாக அனுமானித்து விட இது உதவும் என விளக்கினார். இந்தக் கலந்துரையாடல் உ.வே.சாவிற்கு மனதில் ஆர்வத்தை உருவாக்கியது. தமது புறநானூற்று அச்சுப் பதிப்பில் இந்த ஆராய்ச்சி நெறிமுறையை பயன்படுத்த வேண்டும் என நினைத்துக் கொண்டு செயல்படத் தொடங்கினார். சங்க இலக்கிய ஆராய்ச்சி எவ்வகையி லிருக்க வேண்டும் என தன் மன ஓட்டத்தை இப்படிப் பதிகின்றார் உ.வே.சா. 

"சங்க காலத்து நூல்களில் வழங்கிய மரபை அறிவதற்கு அவை அனைத்தையுமே ஆராயவேண்டும். சங்க நூல்களவ்வளவும் சேர்ந்து ஓர் உடம்பு போன்றவை. அவ்வுடம்பு முழுவதும் ஒரு வகையான நாடி ஓடும், ஆகையால் அவற்றை முற்றப் பயின்றால்தான் அந்த மரபு தெளிவாக விளங்கும். இதை உத்தேசித்து என்னிடமுள்ள எல்லாச் சங்க நூல்களுக்கும் அகராதி எழுதி வைத்துக்கொண்டேன். 

புறநானூற்றை ஆராய்ச்சி செய்வதற்குச் சங்கநூல் முழுவதையும் ஆராய்ச்சி செய்வது அவசியமாயிற்று. இதனால் எனக்குப் பண் மடங்கு இன்பம் உண்டானாலும் சிரமமும் பன்மடங்காயிற்று. பலபேருடைய உதவியை நாடவேண்டியது இன்றியமையாததாக இருந்தது." 

பொது வாழ்விலும் ஆய்வுகளிலும் ஈடுபடுவோரின் நிலை இத்தகையதுதான். ஒரு பணி முடிந்தால் அடுத்து இரண்டு பணிகள் காத்திருக்கும். அவை முடிந்தால் அடுத்து மேலும் சில பணிகள் நம செயல்படுத்த வேண்டிய சூழல் பிறக்கும். இவை மனதிற்கு இன்பத்தைக் கொடுக்கின்றன என்பதில் மாற்றுக் கருத்தில்லை என்ற போதிலும் அசாத்திய உழைப்பையும் பல சிரமங்களையும் கடந்து செல்ல வேண்டியதும் இதில் இயல்பாக அமைந்து விடும்.

தொடரும்..
சுபா

Monday, August 7, 2017

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 128

சிலப்பதிகாரப்பதிப்பிற்குப் பிறகு அடுத்த நூலை உ.வே.சா அச்சுப்பதிப்பாக்கம் செய்யும் பணியைத் தொடங்குவதற்கு முன்னரே இராமநாதபுரம் ஸ்ரீ பாஸ்கர சேதுபதியிடமிருந்து நவராத்திரி விழாவில் பங்கெடுத்துக் கொள்ள வேண்டும் என்ற அழைப்பு கிட்டியது.  இந்த விழாவில் கலந்து கொள்வதற்காகக் கல்லூரியில் 10 நாட்கள் விடுப்பு எடுத்துக் கொண்டு ரயிலேறி ராமநாதபுரம் புறப்பட்டார் உ.வே.சா. கும்பகோணத்திலிருந்து மதுரை வரை ரயிலில் சென்று பின் அங்கிருந்து ராமநாதபுரத்திற்கு மாட்டு வண்டியில் சென்றிருக்கின்றார். 

தமிழ் நாட்டிலிருந்தும் அடுத்த மாகாணங்களிலிருந்தும் பல அறிஞர்களும் கனவாண்களும் அரச குடும்பத்தினரும் இந்த விழாவின் போது அங்கு வந்திருக்கின்றனர்.  இன்றைய இந்தியாவின் மாநிலங்கள் என்ற கருத்து அன்று வழக்கில் இல்லையென்பதால் தமிழகமும் ”வேறு நாடுகளிலுமிருந்தும்” விருந்தினர் வந்தனர் என உ.வே.சா குறிப்பிடுகின்றார். 

சேதுபதி மன்னர்களின் குல தெய்வமாகிய ராஜராஜேஸ்வரி அன்னைக்கு 1008 சங்கம் வைத்து அபிஷேகம் நடைபெற்றது என்றும், பூசைகள், மேளக் கச்சேரி எனத் திருவிழா களைக்கட்டியிருந்ததையும் அறிய முடிகின்றது. 

தமிழ்ப்பண்டிதர்கள் பலரும் சமஸ்கிருதப் பண்டிதர்கள் பலரும், பல ஜமீந்தார்களும், பிரமுகர்களும் நிகழ்ச்சிக்கு விருந்தினர்களாக வந்து கலந்து கொண்டதனால் உ.வே.சா பலரையும் சந்திக்கும் வாய்ப்பை இந்த ஒரே நிகழ்வில் பெற்றார். இது கிடைத்தற்கறியதோர் நல்ல வாய்ப்பாகவே அமைந்தது.  அவர்களுடன் பேசிக் கொண்டு அங்கேயே 10 நாட்களை  செல்வழித்தை மகிழ்வான நாட்களாக உ.வே.சா நினைத்துப் பார்த்துக் குறிப்பிடுகின்றார்.

பத்து நாட்கள் நிகழ்ச்சி முடிந்து சேதுபதி மன்னரிடமிருந்து விடைபெற்றுச் சென்றபோது அவர் உ.வே.சா விற்கு இரண்டு உயர்தர சாதராக்களைப் போர்த்தி தஞ்சை வரும் போது உ.வே.சாவின் புதிய நூல் அச்சாக்க முயற்சிகளுக்கு தாம் நிச்சயம் பொருளுதவி செய்வோம் என்று கூறி வழிச் செலவுக்கு நூறு  ரூபாயும் கையில் கொடுத்து அனுப்பியிருக்கின்றார். நேராக திருவாவடுதுறை ஆதீனத்திற்கு வந்த உ.வே.சா ஆதீனகர்த்தரிடம் அங்கு சமஸ்தானத்தில் நடந்த நிகழ்வுகளை விளக்கி தமக்களித்த சால்வைகளையும் காட்டியிருக்கின்றார். அவற்றைப் பார்த்த  தேசிகர், இவை மிக உயர்ந்தனவாயிற்றே. முன்னூறு ரூபாய் பெறுமே எனச் சொல்ல, அவற்ரை ஆதீனத்தில் கொடுத்து பணமாகப் பெற்றுக் கொண்டால் தனது தேவைக்கு அது உதவுமே என உ.வே.சா வின் எண்ணம் ஓடியது. அதனை இப்படிக் குறிப்பிடுகின்றார்.

“ ​திருவாவடுதுறைக்குப் போய் அம்பலவாண தேசிகரிடம் காட்டிய போது, “மிகவும் உயர்ந்த சம்மானம்; தங்கள் தகுதியை அறிந்து செய்த சிறப்பு இது” என்று பாராட்டினார். 

“இந்த ஆதீன சம்பந்தம் இல்லாவிட்டால் எனக்கு என்ன மதிப்பு இருக்கப் போகிறது?” என்று சொல்லி விட்டு, “இவை இரண்டும் என்ன விலைபெறும்?” என்று கேட்டேன்.

“முந்நூறு ரூபாய்க்கு மேல் இருக்கும்” என்றார் அம்பலவாண தேசிகர்.
“இந்தந் துப்பட்டாவினால் எனக்கு என்ன பிரயோசனம்? இவற்றை இங்கேயே கொடுத்து விடலாமென்று நினைக்கிறேன்.”

“என்ன, அப்படிச் சொல்லுகிறீர்கள்! ஒரு பெரிய சமஸ்தானத்தில் பெற்ற மரியாதை; பத்திரமாக நீங்களே பாதுகாத்து வைத்துக்கொள்ளுங்கள்.” 

“சிலப்பதிகாரம் அச்சிட்டதனால் ஏற்பட்ட சிரமம் இருக்கிறது. அதைத் தீர்க்க வழியில்லை. இந்த இரண்டையும் வைத்துக்கொண்டு என்ன செய்யப் போகிறேன்? தமிழ்த்தாயின் திருப்பணியினால் வந்த கௌவரம் இவை. ஆகையால் இவற்றை மீட்டும் அதற்கே உபயோகப் படுத்துவதுதான் நியாயம்” என்றேன். அம்பலவாண தேசிகருக்கு, நான் அவற்றைக் கொடுத்து விடுவதில் மனமிராவிட்டாலும் என் குறிப்பை அறிந்து மடத்திலேயே அவற்றை எடுத்துக்கொண்டு அவற்றின் விலையாக ரூ. 300 எனக்கு அளிக்கச் செய்தார். நான் அத்தொகையைப் பெற்றுச் சிலப்பதிகாரப் பதிப்பினால் அப்போது இருந்த கடன் தொல்லையினின்றும் நீங்கினேன். கடன் தீர்ந்த சந்தோஷத்தில் தமிழ் நூற்பதிப்பைப் பற்றி யோசிக்கலானேன். ​”

புலவர்களோடு சேர்ந்தே இருப்பது வறுமை என  பொதுவில் சொல்வோம். அதே சூழல்தான் உ.வே.சாவின் நிலையிலும். சிலப்பதிகார அச்சுப்பதிப்புப் பணிக்கு  அவரது உழைப்பு மட்டுமன்றி சொந்தப் பணத்தையும் செலவிட்டு கடனாளியாகவும் ஆகியிருந்த வேளையில் இந்தச் சால்வைகளை விற்றதால் கடனையும் தீர்க்க முடிந்தது. 

அச்சுப்பதிப்பிற்கான  அடுத்த நூலாக எதனைத் தேர்ந்தெடுக்கலாம் என யோசிக்கலானார் உ.வே.சா. மணிமேகலையை விட புறநானூறு ஓலைப் பிரதிகள் அவரிடம் ஓரளவு கிடைத்திருந்தன. ஆக புறனானூறு அச்சுப்பதிப்புப் பணிகளைத் தொடங்கினார்  உ.வே.சா.

இப்படித்தான் நமக்கு இன்று கிடைக்கின்ற சங்கத்தமிழ் நூல்கள் ஒவ்வொன்றாக ஓலைச்சுவடிப் பிரதிகலீலிருந்து அச்சு வடிவில் எளிதில் எல்லோரும் படிக்கும் வகையில் உருவாக்கம் பெறத் தொடங்கின.

தொடரும்..
சுபா

Friday, August 4, 2017

தமிழ்ப் பேராய்வு ஆய்விதழ், மலாயா பல்கலைக்கழகம் - திருக்குறள் கட்டுரை


மலாயா பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பேராய்வு ஆய்விதழில் எனது திருக்குறள் தொடர்பான ஆய்வுக் கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது. பட்டியலில் எண் 1.

முழு ஆய்விதழையும் இங்கே க்ளிக் செய்து தரவிறக்கி வாசிக்கலாம்.









ஜெர்மானிய மொழி பெயர்ப்பில் திருக்குறள் – கார்ல் க்ரவுல் மொழிபெயர்ப்பு
Thirukkural translation in Deutsch (German) – Karl Grauls Translation work
முனைவர்..சுபாஷிணி
Dr.K.Subashini

Abstract
The trade activities initiated by the Portuguese traders and the religious activities that took place in the 16th to 18th Cent AD in the South Indian costal area has created substantial interest among the English to venture in trade activities in this geographical location. The enduring success of the English East India Company has created deep interest to the Danish Kingdom to focus on establishing Trade in East particularly in Tamil Nadu coastal area. The Danish East India company was formed and it ventured in trade in the East. Not limited to trade the King had the interest to extend the Lutheranian religion in this geography. As a result of this, Lutheran priests arrived in Tharangampadi to spread the gospel among the local people in Tamil Nadu. The priests learn to read and write Tamil language. They mastered many Tamil literatures and among them is Thirukkural. This paper deals with the efforts taken in Translating Thirukkural in German Deutsch language, particularly looking at the efforts of Dr.Karl Graul.

Key words: Thirukkural, Tamil Language, German Deutsch Language, Trade, Karl Graul, translation work, Ziegenbalg, Danish East India Company.  


முன்னுரை
உலகப்பொதுமறை என அழைக்கப்படும் சிறப்புடன் திகழ்வது திருக்குறள். தமிழ் மொழியின் பெருமையை உலகறியச் செய்த தமிழ்ப் படைப்புக்களில் தலையாயதாக நூலாகத் திகழ்கின்றது திருக்குறள். உலகில் புழக்கத்தில் உள்ள பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட நூலாகவும் இது திகழ்கின்றது. ஐரோப்பிய மொழிகளில் ஒன்றான ஜெர்மானிய மொழியில் (டோய்ச்) திருக்குறள் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு  ஜெர்மானிய மொழி பேசும் மக்கள் மத்தியில் இந்த நூல், தமிழ் இலக்கியத்துக்கு ஓர் அறிமுகமாகிய வரலாற்றுச் செய்தியை விவரிப்பதாகவும் அதில் குறிப்பாக டாக்டர்.கார்ல் க்ரவுல் எழுதி பதிப்பித்த திருக்குறள் மொழிபெயர்ப்பு பற்றிய செய்திகளைத் தருவதாகவும் இக்கட்டுரை அமைகின்றது.

ஆய்வுப் பின்புலம்
தமிழக வரலாற்றையும் தமிழர் பண்பாட்டு விசயங்களையும் பற்றிய ஆய்வுகளில் பொதுவாக பாண்டிய, சேர, சோழ, நாயக்க, சாளுக்கிய மன்னர்களின் வரலாறுகளை விவரித்து இவற்றோடு நிறுத்திக் கொள்ளும் ஆய்வுப் போக்கு நிலவுகின்றது. தமிழக நிலப்பரப்பில் ஐரோப்பியர்களின் வருகையும், அது ஏற்படுத்திய சமூக, சமய, வாழ்வியல் சார்ந்த மாற்றங்களும் பெருவாரியாக ஆய்வு நோக்கிலிருந்து ஒதுக்கப்படுவதை அல்லது கண்டு கொள்ளாமல் புறந்தள்ளப்படுவதைக் காண்கின்றோம்.
 கடந்த அறுநூறு ஆண்டுகளில் தமிழர் வாழ் நிலத்தில் நிகழ்ந்த பண்பாட்டு மாற்றங்களை விவரிக்கும் போது சில செய்திகளை மெலெழுந்தவாறியாக சொல்லிவிட்டு அவற்றின் அடித்தளமாக அமைந்திருக்கும் விசயங்களை ஆய்வு பொருளாகக்  காணாமல் செல்கின்ற போக்கினால் வரலாற்றின் ஒரு பகுதி கண்டுகொள்ளப்படாமல் செல்கின்ற நிலையைக் காண்கின்றோம். அதில் முக்கியமாக ஆய்வுக்குட்படுத்தப்பட வேண்டிய விசாயங்களாக உள்ளவை இன்றைக்கு அறுநூறு ஆண்டுகளுக்கு முன்னர் தமிழகத்தில் நிகழ்ந்த ஐரோப்பியர்களின் வணிகம், சமயம் தொடர்பான நிகழ்வுகளும் அதன் பொழுது தமிழ் மொழி தொடர்பான சில நிகழ்வுகளுமாகும்
ஓலைச்சுவடிகளில் தமிழ் இலக்கண இலக்கிய, அறிவியல், சமூக செய்திகளைக் குறித்து வைக்கும் போக்கிலிருந்து அச்சு இயந்திரத்தின் அறிமுகத்தோடு அச்சுப்பதிப்பாக நூல்களை வெளியிடும் மாற்றம் ஐரோப்பியரின் தமிழக வருகையினால் நிகழ்ந்த ஒரு சம்பவம். இது தவிர்க்கப்பட முடியாத படிப்படியான சமூகப்புரட்சியை தமிழக நிலப்பரப்பில் ஏற்படுத்தியது (மோ.நோவிஸ் விக்டோரியா, பக். 34).

தமிழ் நூல்கள் அச்சுப்பதிப்பாக்கம் என்பது போல, தமிழ் இலக்கிய இலக்கணங்களின்  ஐரோப்பிய மொழிபெயர்ப்பு தொடர்பான  நடவடிக்கைகளும் பேசப்படுவது என்பது ஆய்வுலகில் குறைவாகவே உள்ளது. குறிப்பிடத்தக்க மொழி பெயர்ப்புப்பணிகள், அதாவது தமிழிலிருந்து ஐரோப்பிய மொழிகளுக்கு கி.பி.17ம் நூற்றாண்டு தொடங்கி நடந்தன என்பதும், அதில் திருவள்ளுவர் இயற்றிய திருக்குறள் மிக முக்கியமாக பலரது கவனத்தை ஈர்த்த ஒரு நூல் என்பதும் குறிப்பிடத்தக்கது (C.S.Mohanavelu, pg.38)  . ஐரோப்பிய மொழிகளில் திருக்குறள் வெளிவந்துள்ளது எனப் பெருமைப்படுதலோடு நிறுத்திக் கொள்வதிலேயே பெரும்பாலோர் இருந்து விடும் நிலை தெரிகிறது. ஆயின், எவ்வகையில் இந்த மொழிபெயர்ப்பு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன, எவ்வகையான தாக்கத்தை இந்த மொழிப்பெயர்ப்பு நூல்கள் வெளிவந்த போது ஐரோப்பிய நாடுகளில் அவை ஏற்படுத்தின என்பது போன்றவற்றை ஆய்வு செய்வது முன்னெடுக்கப்படாமலேயே உள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு திருக்குறளுக்கான ஜெர்மானிய டோய்ச் மொழி பெயர்ப்பு பற்றிய பின்புல தகவல்களை ஆராயும் ஒரு ஆய்வாக இந்தக் கட்டுரை அமைகின்றது.

ஆய்வுமுறை
மேற்குறிப்பிட்டுள்ள நோக்கத்தைச் செயல்படுத்தும் வகையில்  ஜெர்மானிய டோய்ச் மொழியில் அமைந்த ஆகஸ்ட் ஃப்ரெடிக் காம்மெரர் அவர்களின் திருக்குறள் மொழிபெயர்ப்பு நூலும் (August Friedrich Cammerer , Des Thiruvalluver - Gedicht und Denksruche, Aus der Tamulischen Sprache uebersetz von August Friedrich Cammerer, 1803 )  டாக்டர்.கார்ல் கிரவுல் அவர்களின் ஜெர்மானிய டோய்ச் மொழியில் அமைந்த திருக்குறள் மொழிபெயர்ப்பு நூலும் (Karl Graul, Der Kural des Tiruvalluver, Ein Gnomisches Gedicht über die Drei strebeziele des Menschen, 1856)  முழுமையாக இந்த ஆய்விற்கான அடிப்படைத் தரவுகளாக எடுத்து ஆராயப்பட்டன. இதனுடன் தமிழகத்தின் சுவடிப்பதிப்பியல் தொடர்பான ஆய்வு நூல்கள் அடிப்படை வாசிப்பாக எடுத்துக்கொள்ளப்பட்டனஇந்த ஆய்விற்கு உதவும் வகையில் அமைந்த, கி.பி.17ம் நூற்றாண்டில் டென்மார்க் மற்றும் ஜெர்மானிய வணிக முயற்சிகள் மற்றும் அதோடு தொடர்புடைய செய்திகளை வழங்கும் சில நூல்களும் இந்த ஆய்விற்கு துணை நூல்களாக எடுத்துக் கொள்ளப்பட்டு ஆய்வுக்குட்படுத்தப்பட்டுள்ளன.


ஜெர்மானிய லூதரன் பாதிரிமார்களின் தமிழக வருகை
இந்திய நிலப்பரப்பில் லூதரன் பாதிரிமார்கள் சபையின் சமய நடவடிக்கைகள் 17ம் நூற்றாண்டு தொடங்கி 18ம் நூற்றாண்டின் ஆரம்ப காலகட்டங்களில் நிகழ்ந்தன. இரண்டு லூதரேனிய கிருத்துவ பாதிரிமார்களின் தமிழகத்துக்கான வருகையே இதற்கு தொடக்க நிலையை உருவாக்கிய வரலாற்று நிகழ்வாக அமைகின்றது.

லூதரன் கிருஸ்துவ மத பாதிரிமார்கள் மதம் பரப்பும் நோக்கத்துடன் இந்தியாவின் தெற்குப் பகுதிக்கு வருவதற்கு இரு நூற்றாண்டுகளுக்கு முன்னரே கத்தோலிக்க பாதிரிமார்கள் தென்னிந்தியப் பகுதிகளுக்கு வருகை தந்து தென்தமிழகத்தில்,  குறிப்பாகத் தூத்துக்குடி பகுதியில் கத்தோலிக்க கிறிஸ்துவ மதம் பரவ ஆரம்ப நிலை பணிகளை மேற்கொண்டனர் (மோ. நோவிஸ் விக்டோரியா, பக்.8) இது படிப்படியாக வளர்ந்து தென் தமிழகத்தின் திருநெல்வேலி, தூத்துக்குடி, திருச்சி போன்ற பகுதிகளில் போர்த்துக்கல், இத்தாலி, பிரான்சு ஆகிய நாடுகளிலிருந்து கத்தோலிக்க பாதிரிமார்கள் தமிழகம் வந்து தமிழ் கற்று உள்ளூர் மக்களிடையே கிருத்துவத்தை பரப்புதல், பள்ளிக்கூடங்களை உருவாக்கி தமிழகத்தின் பல்வேறு தரப்பட்ட மக்கள் கல்வி வாய்ப்புக்களை பெறும் வகையிலான சமூக மாற்றங்கள் நிகழத்தொடங்கியிருந்தன.. இத்தகைய முயற்சிகளில் முக்கியமானவர்களாக ஹென்றிக்ஸ் ஹென்றிக்ஸ் அடிகளார், கோண்டண்டின் ஜோசப் பெஸ்கி (வீரமாமுனிவர்) நோபிலி பாதிரியார் போன்றோரைக் குறிப்பிடலாம் (மோ. நோவிஸ் விக்டோரியா, பக்.5).   

இத்தகைய முயற்சிகளில் டென்மார்க் அரசும் முனைப்புக் காட்டத்தொடங்கியது. 1612ம் ஆண்டில் டேனிஷ் ஈஸ்ட் இந்தியா கம்பெனி தஞ்சாவூரின் தரங்கம்பாடி பகுதியில் ஒரு சிறு பகுதியைப் பெறும் உரிமையை ஆண்டுக் கட்டணமாக இந்திய ரூ.3111 செலுத்தி பெற்றனர்அச்சமயம் தஞ்சையை ஆண்டு கொண்டிருந்த ரகுநாத நாயக்க மன்னரின் (இவருக்கு அச்சுதப்ப நாயக்கர் என்ற பெயரும் உண்டு) அனுமதியோடு இந்த உரிமை பெறப்பட்டது. இதன் தொடர்ச்சியாக நிகழ்ந்த அரச ஆணையின் படி 19.11.1620ம் நாள் தரங்கம்பாடியில் டென்மார்க்கின் டேனிஷ் கொடி ஏற்றப்பட்டு தரங்கம்பாடியில் டேனிஷ் தொடர்பு உறுதி செய்யப்பட்டு அதிகாரப்பூர்வமாக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக டேனீஷ் வர்த்தகர்கள் தரங்கம்பாடி வந்திறங்கினர். இவர்களுக்கு வர்த்தக முன்னோடிகளாக அச்சமயம் இங்கிலாந்தின் ஈஸ்ட் இந்தியா கம்பெனி அமைந்திருந்தது (C.Mohanavelu, pg 22)

தென் இந்தியாவின் கிழக்குக் கரை நகர்களில் வர்த்தகம் செய்வது என்பது மட்டும் டேனிஷ் அரசின் நோக்கமாக அமைந்திருக்கவில்லை. வர்த்தகத்தோடு மதம் பரப்பும் சேவையையும் செய்ய வேண்டும் என்பதை டேனிஷ் மன்னர் விரும்பியதால் 18ம் நூற்றாண்டின் ஆரம்ப காலகட்டத்தில் தமிழகத்தின் தரங்கம்பாடிக்கு டேனிஷ்  அரச ஆணையுடன் முதல் அதிகாரப்பூர்வ மதம் பரப்பும் சமயக் குழு ஒன்று வந்திறங்கியது. இதில் இடம் பெற்றவர்கள் ஜெர்மானிய பாதிரிமார்கள் சீகன்பால்கும் ப்ளெட்சோவும் (C.Mohanavelu, pg 26)

மதம் பரப்பும் பணிக்கு இவர்களுக்கு அடிப்படை தேவையாக இருந்தது தமிழ் மொழித்திறன். தமிழ் மொழியைக் கற்க ஆரம்பித்த சீகன்பால்க், லூத்தரன் பாதிரிமார்கள் தமிழ்கற்க உதவும் வகையில் இலக்கண நூற்களை எழுதினார். பல தமிழ் இலக்கிய நூல்களைத் தாம் கற்றுஜெர்மானிய மக்கள் தமிழ் கற்க உதவும் வகையில் சொற்பொருள் அகராதிகளை உருவாக்கினார். அவர் வாசித்த இலக்கிய நூல்களில் திருக்குறளும் அடங்கும் என்ற செய்தியை சீகன்பால்கின் கையெழுத்துக் குறிப்புக்களிலிருந்து அறிய முடிகின்றது. ( Jeyaraj, Daniel and Young, Richard Fox 2013, p. 240 - 241.)  அப்போதைய நிலையில் திருக்குறளின் ஒரு லத்தின் மொழி பெயர்ப்பு மட்டுமே வீரமாமுனிவர் அவர்களால் உருவாக்கப்பட்டிருந்தது. ஆயினும் கூட அது முழுமை பெற்ற எல்லா குறட்பாக்களையும் உள்ளடக்கிய ஒரு மொழிபெயர்ப்பு அல்ல (Graul, 1856 P.XVII).   

ஆரம்பகால திருக்குறள் மொழிபெயர்ப்புகள்
திருநெல்வேலி அம்பலவாண கவிராயர் 1812ம் ஆண்டில் திருக்குறள் மூலபாடம் என்னும் நூலை அச்சு வடிவில் பதிப்பித்தார் என்று அறிகின்றோம் (மாதவன், 2000, .70), . தமிழ் மொழியில் தீவிர பற்றும் ஆர்வமும் கொண்டு நல்ல புலமை பெற்ற ஆங்கிலேயரான அறிஞர் எல்லிஸ் (F.W.Ellis) அவர்கள் அதே 1812ம் ஆண்டில் ஆங்கிலத்திலும் அதன் பின்னர், ப்ரென்சு, ரசிய மொழி, ஸ்வீடிஷ் மொழி, ஜெர்மன் மொழி ஆகிய பிற மொழிகளிலும் மொழிபெயர்த்து வெளியிடும், பணியை மேற்கொண்டிருந்தார் என அறிகின்றோம். இதற்கு முன்னரே போர்த்துக்கீசியரான வீரமாமுனிவர்  (Beschi ) அவர்கள் 1730 வாக்கில் முதல் இரண்டு பகுதிகளை மட்டும் லத்தீன் மொழியில் மொழிபெயர்ப்பு செய்து வெளியிட்டிருந்தார் (Graul, 1856 P.XVII). வீரமாமுனிவரின் மொழிபெயர்ப்பின் அடிப்படையில் ஐரோப்பிய சூழலுக்கு லத்தீன் மொழி வாயிலாக திருக்குறள் ஏற்கனவே அறிமுகம் பெற்றிருந்தது என்பதை நாம் அறிகின்றோம்.



ஜெர்மானிய மொழியில் திருக்குறள்
ஆயினும் முதன் முதலில் முழுமையாக ஜெர்மானிய மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட நூலாக நமக்குக் கிடைப்பது  ஆகஸ்ட் ஃப்ரெடிக் காம்மெரர் என்ற ஜெர்மானிய லூத்தரன் மதபோதகர் (August Friedrich Cämmerer)  அவர்கள் மொழிபெயர்த்து முன்னுரையும் தந்து எழுதிய நூலாகும் (Graul, 1856 P.XVII). எல்லிஸ் அவர்களின் ஆங்கில மொழி பெயர்ப்பு வெளிவருவதற்கு முன்னரே ஜெர்மானிய டோய்ச் மொழியில் இந்த நூல் வெளியிடப்பட்டிருக்கின்றதுஇந்த நூல் 1803ம் ஆண்டு ஜெர்மனியில் நூரன்பெர்க் (Nurnberg)  நகரில் அச்சு வடிவில் வெளியிடப்பட்டது.(பின்னினைப்பு 1. – புகைப்படம் நூலின் அட்டைப்படத்தைக் காட்டுகின்றது)

இந்த நூலின் பெயர் Das Thiruvalluvar Gedichte und Denksprueche என்பதாகும். இந்த நூலைப் பற்றிய விரிவான அறிமுகம் ஒன்று 1807ம் ஆண்டு ஜெர்மனியின் நூரன்பெர்க் (Nurnberg)  நகரில் வெளிவந்த  பொது இலக்கிய நாளேடு ஒன்றில் (Allgemeine Literatur Zeitung, 29.June 1807) பதிவாகியுள்ளது என்ற செய்தியையும் அறிய முடிகின்றது .(பின்னினைப்பு 2. – புகைப்படம் நாளிதழின் செய்தியைக்  காட்டுகின்றது)இந்த நாளேட்டில் ஜெர்மனியிலிருந்து மதம் பரப்பும் பணிக்காக டேனீஷ் அரசின் ஆதரவில் தமிழகத்தின் தரங்கம்பாடிக்குச் சென்ற லூத்தரன் பாதிரிமார்களின் இலக்கியத் தேடல்களை மையப்படுத்தி விவரிக்கும் செய்தியாக இச்செய்தி அமைந்துள்ளது. அதில் சிறு அறிமுகத்துக்குப் பின்னர் இந்த நூலைப்பற்றிய விளக்கம் வருகின்றது. குறள்களின் மொழி பெயர்ப்பு, திருவள்ளுவர் பற்றிய செய்திகள் என்ற வகையில் திரு.காமரர் அவர்கள் படைத்திருக்கும் இப்படைப்பை விவரிக்கின்றது இந்த நாளேட்டுச் செய்தி.

Das Thiruvalluvar Gedichte und Denksprueche  என்ற இந்த  நூல் முழுமையாக ஜெர்மானிய மொழியிலேயே எழுதப்பட்டுள்ளது. நூலில் காமெரர் அவர்கள் முதலில்  தனது அறிமுக உரையை பதிகின்றார். தமிழகத்தின் தெய்வ வழிபாடுகள், சமூக நிலைகள், இலக்கியம் என சில தகவல்களை இப்பகுதியில் குறிப்பிடுகின்றார். அடுத்து திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் வகையில் சில தகவல்களைக் குறிப்பிடுகின்றார். அக்காலத்தில் புழக்கத்தில் இருந்த திருவள்ளுவரைப் பற்றிய கதைகளைக் குறிப்பிட்டு திருவள்ளுவரை இந்த நூலில் அறிமுகம் செய்கின்றார்அதன் பின் 1330 குறள்களுக்குமான மொழி பெயர்ப்பு இந்த நூலில் பத்து பத்தாக  வரிசையாக வழங்கப்பட்டுள்ளன.


கார்ல் க்ரவுல் ஜெர்மானிய மொழிபெயர்ப்பு
காமெரர் அவர்களுக்குப் பின் தரங்கம்பாடி வந்த ஜெர்மானிய அறிஞர் கார்ல் க்ரவுல் அவர்கள் Der Kural des Tiruvalluver (Graul, Karl) என்ற நூலை எழுதி வெளியிட்டார். இது கிழக்கு ஜெர்மனியின் லைப்ஸிக் (Leipzig:) நகரில் 1856ம் ஆண்டில் நூல் வடிவம் கண்டது. இந்த நூலின் பெயரின் தமிழாக்கம் திருவள்ளுவரின் குறள் என்பதாகும். 216 பக்கங்கள் கொண்ட இந்த  நூலில் க்ரவுல் அவர்கள் தனது முன்னுரைபரிமேலழகரின் உரை, அதற்கான தனது முன்னுரை எனத் தொடங்குகின்றார். திருக்குறளின் நேரடி மொழி பெயர்ப்பு என்றில்லாமல் நல்லெண்ணங்கள், நற்கருத்துகள், அரசரின் மாண்பு, பண்பற்ற இச்சையின் பண்பு என்பது பற்றி திருக்குறள் கூறும் கருத்தை முன் வைத்து இந்த நூலைப் படைத்திருக்கின்றார். காதலில் களவு, பெற்றோர் சம்மதத்துடனான திருமணம் என்ற தகவல்களையும் குறிப்பிட்டு திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு என இறுதிப்பகுதியையும் சேர்த்து இந்த நூலை உருவாக்கியிருக்கின்றார். க்ரவுல் அவர்கள் தமிழ் இலக்கணத்தில் மிகுந்த தேர்ச்சி பெற்றவர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

திருக்குறள்ளுக்கான உரை எழுதியோராக பன்னிரெண்டு உரயாசிரியர்களின் பெயர்களை திரு.க்ரவுல் அறிந்திருந்தார். அவர்களுள் தருமர், மணக்குடைவர், தாமத்தர், பரிதி, திருமலையார், மல்லர், கவிப்பெருமாள், காளிங்கர், நச்சினார்க்கினியர், பரிமேலழகர் ஆகியோரின் பெயர்களை அவர் தம் நூலில் சுட்டிக் காட்டி விவரிக்கின்றார். எல்லிஸின் (F.W.Ellis) ஆங்கில மொழிபெயர்ப்பை க்ரவுல் வாசித்திருந்தார். திருக்குறள் நூலின் முதல் பாலில்  பதின்மூன்று அத்தியாயங்களை எல்லிஸ் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்ததாகக் குறிப்பிடுகின்றார் க்ரவுல். இந்த  ஆங்கில மொழிபெயர்ப்பில் ஆங்கிலத்தில்  விளக்க உரையையும் இணைத்து வழங்கியிருப்பதையும், அதில் இலக்கண ஆய்வுகளையும் இணைத்து வழங்கியிருப்பதாகவும் அறிகின்றோம் (Graul, 1856 P.XVII)


இந்த நூலின் அமைப்பைப் பற்றி ஆராய்வதும் இந்த மொழிபெயர்ப்பினைப் பற்றிய விரிவான விளக்கம் பெறுவதற்கு உதவும். இந்த நூலின் முழுமையான பெயர் Der Kural des Tiruvalluver, Ein Gnomisches Gedicht über die Drei strebeziele des Menschen என்பதாகும். இதனை திருவள்ளுவரின்  திருக்குறள்மனித வாழ்வின் (மூன்று) இலக்குகளை நோக்கிய போராட்டங்களைப் பற்றிய செய்யுட்கள்‘, எனத் தமிழில் மொழிபெயர்க்கலாம். நூலின் முதல்பக்கத்தில் உள்ள இந்தத் தலைப்பின் கீழ் இதன் மொழிபெயர்ப்பும் விளக்கமும் வழங்கியவர் கார்ல் க்ரவுல் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நூலை இவர் எழுதி வெளியிட்ட சமயத்தில் இவர் வகித்த பதவிகளைப் பற்றிய செய்திகளையும் அறிந்து கொள்ள முடிகின்றது. அதாவது ஜெர்மனியின் லைப்ஸிக் நகரின் லூத்தரன் மிஷனரி அமைப்பின் இயக்குனராகவும், கீழ்த்திசை நாடுகளின் வரலாற்று இறையியல் அமைப்பின் உறுப்பினராகவும் தாம் இருந்ததை நூலின் முகப்பில்  Director der Evangel, Luther. Mission zu Lepzig, Mitglid der Deutschen Morgenlandischen und der Historisch-Theologischen Gesselschafft  என்றும் குறிப்பிட்டு இந்த நூலைப் பதிப்பித்திருக்கின்றார். இந்த நூல் ஒரே காலகட்டத்தில், அதாவது 1856ம் ஆண்டு  ஜெர்மனியின் லைப்ஸிக் நகரில் Dörffling & Franke பதிப்பகத்தாராலும் லண்டனில்  Williams & Norgate   பதிப்பகத்தாராலும் பதிப்பிக்கப்பட்டது .(பின்னினைப்பு 3. – புகைப்படம் நூலின் முகப்புப்பக்கத்தைக் காட்டுகின்றது)

நூலின் தொடக்கமாக பதிப்பாசிரியர் உரையை வழங்கியிருக்கின்றார். இது இரண்டு பக்கங்கள் மட்டுமே கொண்ட சிறிய விளக்க உரை. இதில் ஜெர்மானியர்களுக்குத் தான் வழங்கும் செய்தியாக தமிழகத்தில் தான் கற்ற தமிழ்மொழியில் உள்ள ஒரு நல்லொழுக்க நூலை ஜெர்மானிய மக்களுக்கு அறிமுகப்படுத்தும் நோக்கத்துடன் இந்த நூலைத் தாம் எழுதியிருப்பதைக் குறிப்பிடுகின்றார். தமிழகத்தைக் குறிப்பிடும் போது  தமிழர்களின் நாடு, அதாவது Tamulenlande  எனக் குறிப்பிடுவதைக் காண்கின்றோம்.

இதற்கடுத்தார்போல நூலுக்கான ஒரு அறிமுக உரை வருகின்றது. இப்பகுதியில் முக்கியமாக தமது சமகாலத்து ஏனைய மொழிபெயர்ப்புக்களைப் பற்றி டாக்டர்.க்ரவுல் குறிப்பிடுகின்றார். இந்த முகவுரை பத்து பக்கங்களுக்கு அமைக்கபப்ட்டுள்ளது

ஜெர்மானிய மொழியில் மட்டுமன்றி ஆங்கிலத்திலும் பிரஞ்சு மொழியிலும் திருக்குறள் மொழிபெயர்ப்பு இதே காலகட்டத்தில் நிகழ்ந்திருக்கின்றது. மிகத் தரமான ஆனால் முழுமையடையாத ஆங்கில மொழி பெயர்ப்பு ஒன்று இங்கிலாந்தைச் சார்ந்த ஆங்கிலேய பாதிரியாராக இந்தியாவின் மெட்ராசில் பணியில் இருந்த ரெவரண்ட் ட்ரூ (Rev. W.H.Drew) அவர்களால் எழுதப்பட்டது. இந்த நூலின் பெயர் The Cural of  Tiruvalluver, First Part, with the Commentary of Parimelaragar. இந்த நூலில் 24 குறள்களுக்கான விளக்கமும் பொருளும் மொழிபெயர்ப்பாக வழங்கப்பட்டுள்ளன. இந்த நூல் 1852ல் வெளிவந்தது. (Graul, 1856 P.XVIII). ஆங்கிலேயர்களைப் போல பிரெஞ்சுக்காரர்களும் திருக்குறள் மொழி பெயர்ப்பில் ஆர்வம் காட்டினர் என்பதையும் மறுக்க முடியாது. திரு.ஏரியல் ( Mr.Ariel) Journal Asiatique என்ற இதழில் தொடராக திருக்குறள் மொழி பெயர்ப்புக்களை எழுதி அவை 1847, 1848 மற்றும் 1852ம் ஆண்டுகளில் வெளிவந்தது. இந்த கட்டுரைகளில் பிரஞ்சுமொழியில் திருக்குறளின் முதற் பாலும் இரண்டாம் பாலும் மொழி பெயர்க்கப்பட்டு விளக்கத்துடன் வழங்கப்பட்டிருக்கின்றது (Graul, 1856 P.XVIII). காமத்துப்பால் பகுதியை திரு.ஏரியல் தமது மொழி பெயர்ப்பில் இணைத்துக் கொள்ளவில்லை. ஆனால் டாக்டர்.க்ரவுல் தனது மொழிபெயர்ப்பில் முப்பால் குறட்பாக்கள் அனைத்தையும் உள்ளடக்கிய மொழிபெயர்ப்பாக இதனை வெளியிட்டிருப்பது மிகச் சிறப்பு.

இதனைத் தொடர்ந்து வரும் பகுதி பரிமேலழகர் உரைப்பற்றிய ஒரு விளக்கம். ஏனைய உரையாசிரியர்களைப் பற்றி அறிந்திருந்தாலும் திருக்குறள் வாசிப்பில் பரிமேலழகரின் உரையைத் துணையாகக் கொண்டு அதன் செய்யுட்களை புரிந்து கொள்ள முயன்றிருக்கின்றார் டாக்டர்.க்ரவுல். நல்லொழுக்கம், நற்பண்புகள், காமம் மற்றும் அதிலிருந்து மீள்வதற்கான வழி ஆகியவையே திருக்குறளின் முக்கியச் செய்திகள் என்ற வகையில் குறிப்பிட்டு, தனது புரிதலின் அடிப்படையிலான ஒரு விளக்கத்தை டாக்டர்.க்ரவுல் இரண்டு பக்கங்களில் அமைத்திருக்கின்றார்.

இதன் தொடர்ச்சியாக முப்பாலுக்குமான ஜெர்மானிய டோய்ச் மொழியில் அமைந்த மொழிபெயர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இவை ஒவ்வொரு செய்யுளின் நேரடி மொழி பெயர்ப்பாகவும் சில கடினமான பொருள் கொண்ட சொற்களுக்கு மேலதிக விளக்கங்களை வழங்கிய தன்மையுடனும் அமைக்கப்பட்டுள்ளன.

இறுதிப்பகுதியாக இடம் பெறுவது திருவள்ளுவர் வரலாறு. திருவள்ளுவரைச் சுற்றி கட்டமைக்கப்பட்ட கதைகளில் இரண்டு கதைகளை எடுத்துக் கொண்டு அவை இரண்டையும் திருவள்ளுவர் வரலாறு என்று இப்பகுதியில் மொழிபெயர்ப்பு செய்திருக்கின்றார் டாக்ட.க்ரவுல்.

முதலில் வரும் திருவள்ளுவர் வரலாறு வேட்டைக்காரமுதலியார் (Graul, 1856 P.185)  என்பவர் எழுதிய நூலைத்தழுவிய கதை. இரண்டாவதாக வருகின்ற திருவள்ளுவர் வரலாறு சரவணப்பெருமாள் ஐயர் (Graul, 1856 P.189)  என்பவர் எழுதிய திருவள்ளுவர் வரலாறு என்ற கதை. இவை இரண்டுமே திருவள்ளுவரின் வரலாற்றைப் புனைக்கதையாக்கி அதீத மலைப்புக்களை வழங்கும் வகையில் திருவள்ளுவரை உயர்த்தி கற்பனை சிந்தனைகளை அதிகம் உட்புகுத்தி உருவாக்கப்பட்ட கதைகளே. எனினும் திருக்குறளை எழுதிய திருவள்ளுவரைப் பற்றிய வாழ்க்கை வரலாற்றை தனக்குக் கிடைத்த நூலாதாரங்களின் துணையுடன் டாக்டர்.க்ரவுல் அவர்கள் இந்த நூலில் வழங்க முற்பட்டிருக்கின்றார் என்ற அளவிலேயே நூலில் அமைந்திருக்கும் இந்தப் பகுதியைக் காணவேண்டியுள்ளது
.
மதிப்பீடு
ஜெர்மனி மட்டுமன்றி ஜெர்மன் மொழியான டோய்ச் மொழி பயண்பாட்டில் உள்ள ஏனைய நாடுகளான டென்மார்க், சுவிஸர்லாந்து, ஆஸ்திரியா போன்ற நாடுகளிலும்  திருக்குறளுக்கான மொழி பெயர்ப்புக்களாக இக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருக்கும் இரு ஜெர்மானிய மொழிபெயர்ப்பு நூல்களும் பொது மக்கள் வாசிப்பிற்கும், ஆசிய நாடுகளின் இலக்கியங்களை ஆராய விரும்புவோர் மத்தியிலும் அறிமுகமாக வழி ஏற்படுத்தியிருக்கின்றன என்பதை மறுப்பதற்கில்லை. ஆயினும் இந்த மொழி பெயர்ப்பும் இவற்றில் உள்ள வரலாற்றுத் தகவல்களும் முழுமையான பார்வையைத் தரும் வகையில் அமைந்துள்ளனவா என்பது கேள்விக்குட்படுத்தப்பட வேண்டியுள்ளது.

 உதாரணமாக, தமிழகத்திற்கு 16ம் நூற்றாண்டு இறுதி தொடங்கி லூத்தரன் மதம் பரப்பும் பணிக்காக ஜெர்மனியிலிருந்து கடல்வழிப்பயணம் மேற்கொண்டு வந்து சேர்ந்த பாதிரிமார்கள் தமிழ் கற்ற சூழலை கவனிக்காது ஒதுக்கிவிட முடியாது. அவர்களது அக்கால   சூழலில் தமிழ் சமூக கட்டமைப்பில் உயர்சாதி என அழைக்கப்படும் சமூகத்து மக்களிடம் மட்டுமே தமிழும் தமிழ் இலக்கியமும் கற்கக்கூடிய சூழல் இருந்தமையால் திருவள்ளுவரைப் பற்றிய நிலைப்பாட்டை அதுகாறும் கட்டமைக்கப்பட்ட ஒரு குறிப்பிட்ட பார்வையில் வைத்து மட்டுமே இந்த மொழிப்பெயர்ப்பில் சில பகுதிகளில் விளக்கங்கள் வழங்கப்பட்டுள்ளமையைக் காண முடிகின்றது. இது திருவள்ளுவரின் பின்புலத்தையும் கருத்தின் ஆழத்தையும் மொழி பெயர்ப்பில் சரியாக உட்படுத்தவில்லை என்ற  சிந்தனையை எழுப்புகின்றதுதிருக்குறளைப் பற்றியும் திருவள்ளுவரைப் பற்றியும் விரிவான ஆய்வுத் தரவுகள் கிடைக்கின்ற இக்காலகட்டத்தில் ஏனைய மொழிகளில் இதற்கான மொழிபெயர்ப்பு முயற்சிகளுக்கு ஏற்பட்டுள்ள தேவை போலவே  ஜெர்மானிய மொழியிலும் மீண்டும் திருக்குறள் மறுவாசிப்புக்கு உட்படுத்தப்பட்டு  ஜெர்மானிய டோய்ச் மொழியில் மீள்பதிப்பு செய்யப்பட வேண்டியது அவசியக்கடமையாகின்றது. இதனைச் செய்வதன் வழி திருக்குறளைச் செம்மைப்படுத்தி  ஜெர்மானிய மொழி பேசுவோர் மத்தியில் மீண்டும் அறிமுகப்படுத்த இயலும்.

முடிவுரை
தமிழ் மொழி ஐரோப்பிய சூழலில், அதிலும் குறிப்பாக ஜெர்மானிய மொழி பேசும் மக்கள் வாழ்கின்ற நாடுகளில் அறியப்படாத மொழி அல்ல. கடந்த ஒரு நூற்றாண்டில் ஏற்பட்ட அதிகமான மக்கள் புலம்பெயர்வும் இலங்கைப் போரினால் ஐரோப்பாவெங்கும் புலம்பெய்ர்ந்த இலங்கைத் தமிழ் மக்கள் அதிகம் வாழ்கின்ற சூழலிலும் தமிழ்மொழி ஐரோப்பிய நிலத்தில் அன்னியப்பட்ட, அறியாத மொழி என்ற நிலையைப் பெறவில்லை என்பது நிதர்சனம்குறிப்பிடத்தக்க  ஒரு சில பல்கலைக்கழகங்களில் தமிழ்த்துறையின் வழி தமிழ் போதிக்கப்படுவது ஐரோப்பாவில் நிகழ்கின்றது. ஐரோப்பிய மாணவர்களுக்கு திருக்குறள் மீள்வாசிப்பிற்கு உட்படுத்தப்பட்டு சமகால ஆய்வின் அடிப்படையில் திருக்குறள் மீண்டும் ஜெர்மானிய மொழியில் மொழி பெயர்க்கப்பட்டு வழங்கப்பட வேண்டியது நம் முன்னே இருக்கின்ற மிக முக்கிய நடவடிக்கை என்பதில் ஐயத்திற்கு இடமில்லை.


References
·        
  •  Allgemeine Literatur Zeitung, 29.June 1807
  • Mathavan V.Ira. (2000). Cuvadippathippiyal, Pavai Publications, Thanjavur, Tamil Nadu.
  • விக்டோரியா மோ.நேவிஸ் (2011). தம்பிரான் வணக்கம், தமிழ் மொழியின் முதல் அச்சு புத்தகம். Pavai Publications, Rayappetai, Chennai, Tamil Nadu.
  • Graul Karl (1856). Der Kural des Tiruvalluver, Ein Gnomisches Gedicht über die Drei strebeziele des Menschen,  Doeffling & Franke, Leipzig, Germany).
  • The Cural of  Tiruvalluver, First Part, with the Commentary of Parimelaragar. (Pls provide –details of this book including Place of publication and Publisher).
  • Mr.Ariel. 1947 Journal Asiatique,  A Paris, Chez Doney-Dupre Pere et Fils, Imp. –Libraires,au Marais, France
  • Jeyaraj, Daniel and Young, Richard Fox (transl. Eds.) (2013). Hindu-Christian Epistolary Self-Disclosures: ‘Malabarian Correspondence’ between German Pietist Missionaries and South      Indian Hindus (1712–1714), Wiesbaden: Harrassowitz Verlag,
  • An Historical Essay by James F.B. Tinling, B.A. (1871), Early Roman-Catholic Missions to India,       with sketches of Jesuitism, Hindu Philosophy and The Christianity of the Ancient Indo-Syrian Church of Malabar.
  • Joseph G.Muthuraj, (2011), We began at Tranquebar ISPCK, Kashmere Gate, Delhi.






பின்னினைப்புகள்
பின்னினைப்பு 1:

ஆகஸ்ட் ஃப்ரெடெரிக் காம்மெரர் 1803ம் ஆண்டில் பதிப்பித்த திருக்குறள் மொழிபெயர்ப்பு

பின்னினைப்பு 2:

ஜெர்மானிய பத்திரிக்கையில் 1807ம் ஆண்டில் திருக்குறள் பற்றிய நூல் விமர்சனம்

பின்னினைப்பு 3:


கார்ல் க்ரவுல் அவர்கள் எழுதிய திருக்குறள் மொழிபெயர்ப்பு நூலின் அட்டைப்படம்.