Sunday, December 31, 2017

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 150

வயதாகிவிட்டது. இனி செய்வதற்கு என்ன இருக்கின்றது, என வருந்திக் கொண்டிருப்பவர்கள் பலர். வயதை ஒரு பொருட்டாகக் கருதாது சிந்தனாசக்தி இயங்கிக் கொண்டிருக்கும் வரை பணி செய்து கொண்டிருக்கும் மனிதர்கள் தான், தனது ஒவ்வொரு நாட்களையும் வாழ்கின்றார்கள். பயனுள்ளதாக்குகின்றார்கள்!

உ.வே.சாவின் இறுதி நாள்வரை தொய்வே இல்லாமல் அவர் பணியாற்றியிருக்கின்றார்.

1942ம் ஆண்டு ஜனவரி மாதம், உ.வே.சா, தன் வீட்டின் மேல் மாடியிலிருந்து கீழே வரும்போது படியில் விழுந்து கால் முறிவு ஏற்பட்டது. வயோதிகக் காலம் வேறு. படுத்தப் படுக்கையாகி விட்டார். அந்தக் காலகட்டத்தில் இரண்டாம் உலகப்போர் நடந்து கொண்டிருந்ததன் பிரதிபலிப்பு தமிழகத்தின் மெட்ராஸிலும் பிரதிபலித்துக் கொண்டிருந்தது. திருவாவடுதுறை ஆதீனத்துக்குச் சொந்தமான ஒரு வீடு திருக்கழுக்குன்றத்தில் இருந்தது. அங்கே போய் தங்குவதே சரியான பாதுகாப்பாக இருக்கும் என உறவினரும் நண்பர்களும் சொல்ல அங்கே சென்று விட்டார். நூல்களையும் சுவடிக்கட்டுக்களையும் விட்டு வருகின்றோமே என்ற வருத்தம் அவருக்கு மனம் முழுதும் நிறைந்திருந்தது நூல்களைப் பிரிந்து அவரால் இருக்க முடியாததால் அவரது சேகரிப்புக்களைத் திருக்கழுக்குன்றத்து வீட்டிற்குக் கொண்டு வர வைத்தார்கள். மெட்ராஸிலிருந்து பத்து மாட்டு வண்டிகளில் இந்த நூல்களைக் கொண்டு சென்றார்கள் எனக் குறிப்பிடுகின்றார் கி.வா.ஜ. அந்த வேளையில் கம்பராமாயணத்தையும் தேவாரப்பதிகங்களையும் சீரிய பதிப்பாக வெளியிட வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு இருந்ததால் அந்தப் பணியில் ஈடுபட்டிருந்தார். அதே ஆண்டு தனது வாழ்வில் மிக முக்கிய இடம் வகித்தவர்களுள் ஒருவரான வித்துவான் தியாகராச செட்டியார் அவர்களது வாழ்க்கைச் சரிதத்தையும் வெளியிட்டார். தன் வீட்டின் பெயரையும் 'தியாகராச விலாசம்' என உ.வெ.சா பெயரிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது!

ஏப்ரல் மாதம் 28ம் தேதி இந்த உலகை விட்டு உ.வே.சா அவர்களது உயிர் நீங்கியது. தமிழ் உலகில் நீங்காப்புகழை மட்டும் எடுத்துக் கொண்டு தனது உறவினர்களையும், நண்பர்களையும், தனது மாணாக்கர்களையும் தான் நேசித்த நூல்களையும், இவ்வுலகையும் விட்டு நீங்கினார்.

உ.வே.சா அவர்களின் மறைவுச் செய்தி தமிழ் உலகில் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது என்பதை அவருக்கு வந்து சேர்ந்த இரங்கற்பாக்கள் சான்று பகர்கின்றன.

தன் வாழ்நாள் முழுவதும் தமிழ் ஆராய்ச்சி, தமிழ் நூல் அச்சுப்பதிப்பாக்கம், மாணாக்கர்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்தல் என்ற சிந்தனையுடனே அவர் செலவிட்டிருப்பதை அவரது வாழ்க்கைச் சரித்திரம் காட்டுகிறது. தேடல்.. தேடல்.. தேடல்.. என அவர் நிகழ்த்திய தேடலில் நமக்குக் கிடைத்தவை தமிழின் அருந்தவச் செல்வங்கள். ஏறக்குறைய 100 நூல்கள் அவர் பதிப்பித்தும் எழுதி வெளியிட்டும் எனத் தமிழ் உலகிற்குக் கிடைத்திருக்கின்றன. அவற்றுள் சங்கத்தமிழ் நூற்பதிப்பும், காப்பிய நூற்பதிப்பும் அவர் உழைப்புக்கு மகுடமாக அமைகின்றன.

உ.வே.சாவின் ஆய்வு உத்தி என்பது வெறும் நூல்களை அலசுவது மட்டுமன்று. பலதரப்பட்ட மக்களுடனும் கலந்து பேசுவதன் வழி தனக்குக் கிடைக்கும் அனுபவங்களையும் அறிவுத் தெளிவையும் அவர் தனது ஆராய்ச்சியின் ஒரு பகுதியாகவே பயன்படுத்தியிருக்கின்றார். உதாரணமாக 'நினைவு மஞ்சரி பாகம் 1', எனும் நூலில் வரும் இடையன் எறிந்த மரம் என்ற கட்டுரையில் அவர் விவரிக்கும் சம்பவம் சுவையானது.

அதன்படி, 1937ம் ஆண்டு திருப்பனந்தாள் காசி மடத்திற்குச் சென்றிருந்த போது மடத்தில் மாடுகளை மேய்ப்பதற்காக நியமிக்கப்பட்டிருந்த ஒரு இடையன் ஒருவரிடம் தாம் பேசிக் கொண்டிருந்தபோது தமக்கு அந்த இடையனின் பேச்சிலிருந்து செய்யுளுக்குப் பொருள் கிடைத்தது என்று குறிப்பிடுகின்றார். அந்த மனிதர், இடையர் சமூகத்தில் வழங்கப்படும் பழமொழிகளைச் சொல்லியிருக்கின்றார். "நல்லெருமை நாகு, நற்பசு சேங்கன்று, ஆடு கிடாய், அடியாள் பெண்பெற" என்று அவர்கள் வழக்கில் சொல்லி வாழ்த்துவார்களாம். நாகு எனும் சொல் பெண் எருமையைக் குறிப்பது என விளக்குகின்றார்.

அதோடு 'இடையர்கள் ஆடுமாடுகளுக்கு உணவு அளிப்பதற்காக மரக்கிளைகளை வெட்டிச் சாய்ப்பார்கள்' என்றும் அவர்களது வாழ்வியல் முறையை விளக்கியிருக்கின்றார் அந்த இடையன். ஏன் அடியோடு வெட்டுவதில்லை, என உ.வே.சா கேட்க, அதற்கு அந்த இடையனோ "அப்படி வெட்டிவிட்டால் அந்தக் கிளை பிறகு உபயோகமில்லாமற் போய்விடும். நாங்கள் வெட்டும் கிளையோ மரத்தோடு ஒட்டிக்கொண்டிருப்பதால் மறுபடியும் தழைக்கும்." என்று விளக்கம் சொல்லியிருக்கின்றார். இந்த விளக்கத்தை தாம் கேட்டபோது, 'இடையன் எறிந்த மரம் முழுவதும் அறாமல் அரைகுறையாக உயிர் வைத்துக் கொண்டிருக்கும்' என்ற எண்ணத்தை அவன் கூறிய விடை உண்டாக்கியது என்றும்,  "இடைமகன் கொன்ற வின்னா மரத்தினேன்" (1914), என்ற சீவக சிந்தாமணி அடி ஞாபகத்திற்கு வந்தது.' எனவும் குறிப்பிடுகின்றார் உ.வே.சா.

அதோடு, அந்த 'இடையன் சொல்லிவந்த செய்திகள் இலக்கியப் பொருளைத் தெளிவாக விளக்கின. இலக்கியங்களில் இடையர்களைப் பற்றி வருணிக்கும் இடங்களில், 'ஒடி யெறிதல்' என ஒரு தொடர் வரும். "ஒடிய எறிதல்" என்பதே அவ்வாறு விகாரப்பட்டு வந்தது. இடையர்கள் ஒடிய எறியார்களே அன்றி அற்றுவிடும்படி எறியார்கள் என்பதை அத்தொடர் குறிப்பதை அப்போது தெளிவாக நான் உணர்ந்தேன்', எனக் குறிப்பிடுகின்றார்.

உ.வே.சா கேட்கக் கேட்க அந்த இடையனுக்கும் ஆர்வம் மேலிடுகின்றது. மேலும் ஒரு பழமொழி சொல்கின்றார். " 'இடையன் வெட்டு அறா வெட்டு' என்ற பழமொழியைத் தான் சொல்லுகிறேன். எங்கள் கைப்பழக்கத்தை அந்தப் பழமொழி தெரிவிக்கிறதே." என்றார் அந்த இடையன். பெரியதிருமொழி பாசுரம் ஒன்றில் இதே உவமை வரும் செய்யுளான,
*"படைநின்ற பைந்தாமரையோடணி நீலம்
மடை நின் றலரும் வயலாளி மணாளா
இடய னெறிந்த மரமேயொத் திராமே
அடைய வருளா யெனக்குன்ற னருளே!"
என்ற செய்யுள் உடன் உ.வே.சாவிற்கு நினைவு வந்து அதன் பொருளை தெளிவு படுத்தியதை நினைத்து வியந்து எழுதுகின்றார்.


கல்வி என்பது புத்தகப்படிப்பால் மட்டும் வருவதன்று. வாழ்க்கையில் அன்றாடம் நாம் காணும், அனுபவிக்கும், செயல்படுத்தும் ஒவ்வொரு சிறு சிறு விசயங்கள் கூட தனி ஒரு மனிதருக்குக் கல்வியைப் புகட்டிக் கொண்டேயிருக்கின்றன.

நம் மனம் திறந்திருக்கும் போது உலகம் நமக்குக் காட்டும் புதிய பாடங்களைப் பார்த்து அறிந்து, நம் கற்றலை நாம் மேம்படுத்திக் கொண்டே நம் சிந்தனையில் வளர்ச்சி காண முடியும். நம் முன்னோர்கள் சொல்லிவிட்டார்கள், அதனால் செய்கிறேன் என்பதோ, முன்னோர்களுக்குத் தெரியாதது இன்றைய நமக்குத் தெரிந்து விடப்போகின்றதா என சிந்தனைச் செயல்பாட்டை அடக்கிக் குறுக்கி வாழ்வதோ, முன்னோர்கள் செய்தவற்றைக் கேள்வி கேட்காமல் செய்வதே மரபு, பண்பு என்று சொல்லிக் கொண்டிருத்தலோ கல்வி அறிவை வளர்க்காது. மாறாக மூடத்தனத்தையே வளர்க்கும்.

வாழ்க்கையில் மேன்மை என்பது தானாகக் கிடைத்து விடாது. அதற்குக் கடும் உழைப்பு வேண்டும். புதியன தேடிக் கொண்டேயிருத்தல் வேண்டும். சலிக்காத உழைப்பு வேண்டும். புதிய முயற்சிகளில் ஈடுபட தயக்கமும் அச்சமும் இல்லாதிருக்க வேண்டும். இத்தகைய பண்புகளுக்கு உதாரணமாகத் தான் வாழ்ந்து மறைந்திருக்கின்றார் உ.வே.சா.

உ.வே.சாவை வணங்கிப் போற்றுவது என்பது ஒரு புறமிருக்க, அவர் நிகழ்த்திய தொய்வில்லாப் பணி போல இன்னும் அச்சுக்கு வராத ஏராளமான தமிழ் ஓலைச்சுவடிகளைப் பதிப்பாக்கம் செய்யவேண்டிய கடமையை முன்னெடுப்பதே சாலச்சிறந்தது. இன்று பலர், உ.வே.சாவைப் போற்றுகின்றோம் என்க் கூறிக்கொண்டு,  நிகழ்ச்சிகளை நடத்தி பொன்னாடை போர்த்தி பேசி, சிலாகித்துச் செல்வதால் மட்டும் என்ன பயன் விளைந்து விடப்போகின்றது?

எண்ணற்ற சுவடி நூல்கள் தமிழகத்தின் மூலை முடுக்குகளிலும், இந்தியாவிலும், ஐரோப்பிய, அமெரிக்க, ஆசிய நாடுகளின் நூலகங்களிலும் ஆவணப்பதுகாப்பு மையங்களிலும் உள்ளன. அவை அப்படியே பெட்டிக்குள் முடங்கிக் கிடப்பதால் தமிழ் உலகுக்கு என்ன பயன்? அவற்றைத் தேடிக் கண்டுபிடித்து, அவற்றைப் பற்றிய தகவல்களைத் தமிழ் கூறு நல்லுலகம் அறியச் செய்வதும், அவற்றை இன்றைய கணினி தொழில்நுட்பத்தின் துணை கொண்டு பதிப்பாக்கம் செய்து வெளியிடுவதும் அவசியம் அல்லவா? அத்தகைய பணியில் தமிழ் மரபு அறக்கட்டளை ஈடுபட்டு வருகின்றோம் எனச் சொல்லிக் கொள்வதில் என் மனம் பெருமை கொள்கின்றது.

'என் சரித்திரம்' நூலில் உ.வே.சாவுடன் நான் சென்ற உலா, எனக்கு வரலாற்று ரீதியான பல செய்திகளை வழங்கியது. 19ம் 20ம் நூற்றாண்டு தமிழ் அச்சுப்பதிப்பாக்க முயற்சிகள் தொடர்பான, நான் அறிந்திராத பல கோணங்களை அவரது எழுத்துக்கள் எனக்குத் தெளிவு படுத்தின. அவரது தளராத முயற்சிகள் என்னுள்ளே தேடுதலில் ஆர்வத்தைத் தூண்டுவதாக அமைந்தன. தமிழ் உலகம் தவிர்க்க முடியாத ஒரு ஆளுமை உ.வே.சா என்பது உண்மை!

முற்றும்

சுபா

Friday, December 29, 2017

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 149

பழமையான நூல்களைத் தேடிச் செல்லுதல், அவற்றை வாசித்தல், ஆராய்ச்சி செய்தல் என்பனவே உ.வே.சா அவர்களின் வாழ்க்கையின் பெரும்பகுதியை ஆக்கிரமித்துக் கொண்டன எனலாம். தொய்வில்லாத தொடர்பணிகள் அலுப்பும் சலிப்பும் ஏற்படாத வகையில் தமிழாராய்ச்சிப் பணியில் ஆழ்ந்த பற்றுடன் உ.வே.சா அவர்கள் செயல்பட்டமையினால்தான் செயற்கரிய பல காரியங்களை அவரால் அன்று செய்து முடிக்க முடிந்துள்ளது.

சங்கத்தமிழை நம் முன் கொண்டு வந்து கொடுத்த பெரும் பணியை இவர் மேற்கொண்டு வெற்றி பெற்றார்.
சங்கம் மருவிய காலத்து காப்பியங்களைக் காப்பாற்றி, இந்த நூற்றாண்டிலும் தமிழின் வளத்தையும் தமிழர் வரலாற்றையும் நாம் புரிந்து கொள்ள உதவியுள்ளார்

சைவ இலக்கியங்களும் வைணவ இலக்கியங்களும் மட்டுமே தமிழ் கற்ற சான்றோர்களால் பெரிதும் பேசப்பட்ட 19ம் நூற்றாண்டில், சிலப்பதிகாரத்தையும், மணிமேகலையையும், சீவக சிந்தாமணியையும் அச்சுப்பதிப்பாக்கி வெளியிட்டு தமிழறிஞர் மத்தியில் சமணத்திற்கும் பௌத்தத்திற்கும் மீண்டும் இலக்கிய நோக்கில் புத்துணர்ச்சியைக் கொடுத்ததிலும் உ.வே.சா அவர்களது பங்களிப்பினை நாம் மறுத்து விட முடியாது.

அவரது சுவடிப்பதிப்பு ஆய்வு முறை என்பது ஒரு சுவடியை எடுத்தோமா , அதனை வரிக்கு வரி அச்சுப்பதிப்பாகக் கொண்டு வந்தோமா என்றில்லாமல், ஒரு நூலின் பல பிரதிகளைத் தேடித் திரிந்து, வெவ்வேறு பிரதிகளின் பாட பேதங்களை ஆராய்ந்து, சொற்பொருளுக்கு விளக்கங்கள் அளித்து, உடைந்த பகுதிகளில் தனக்குத் தோன்றிய செய்திகளைப் போட்டு நிரப்பாது, விடுபட்ட பகுதிகளைக் குறிப்பாகச் சொல்லி மூலபாடங்களுடன் பதிப்பித்து அந்த நூலை வெளிக்கொணரும் வகையானது.

தனது அச்சுப்பதிப்பாக்கங்கள் ஒவ்வொன்றிலும் நூலின் முன்னுரையில் அந்த நூல் எதனை முதன்மைப் படுத்துகின்றதோ அவற்றைத் தெளிவுடன் விளக்குவது; நூலின் குறிப்புறைகளில் பதப்பொருள் அளித்து வாசிப்பில் ஏற்படும் சிரமம் வாசிப்போருக்கு எழாமல் இருக்க உதவுவது; நூலில் அருஞ்சொற்பதங்களுக்கென்றே ஒரு அகராதியை இணைத்து அதில் சொற்களுக்கான பொருள் விளக்கத்தை அளித்திருப்பது; தனது பரந்த விரிந்த வாசிப்புக்களின் பயனாக தேவைக்கேற்ற இடங்களில் ஏற்புடைய உதாரணங்களைக் கொடுத்திருப்பது; தேவைக்கேற்ற இடங்களில் ஒப்புவமைகளை எழுதி நூலை வாசகர் புரிந்து கொள்வதோடு அதனை ஆழமாக ஆராயும் வகையில் பல கோணங்களை முன்னிறுத்தியிருப்பது ஆகியவை அச்சுப்பதிப்புப் பணியில் தனி பாணியாகவே அமைந்து விட்டன.

தமிழகத்தில் சுவடி, ஆவணப்பாதுகாப்பு எனும்போது உ.வே.சாவிற்கு முன்னோடிகளாக விளங்குபவர்களில் மிக முக்கியமானவர்களாக நாம் ஒரு சிலரைக் குறிப்பிடலாம்.

அயர்லாந்தில் பிறந்து பின்னர் ஆங்கிலேய காலணித்துவ அரசில் ஆசிய நாடுகளுக்கு நில அளவையாளராக பணியாற்ற வந்த காலின் மெக்கின்ஸி அவர்கள் (Colonel Colin Mackenzie 1754 – 8 May 1821) அவர்கள் தமிழகம் உட்பட இந்தியாவின் பல பகுதிகளில் தேடித்திரிந்து சேகரித்த ஆவணங்களும் ஓலைச்சுவடிகளும் எண்ணற்றவை. இவை இன்று பிரித்தானிய நூலகத்திலும், சென்னை கீழ்த்திசைச் சுவடி நூலகத்திலும், மேற்கு வங்கத்தின் தேசிய நூலகத்திலும் பாதுகாக்கப்படுகின்றன. தமிழ்ச்சுவடிகளை மொழி பெயர்ப்பு செய்து அவற்றை வெளியிட்ட ஐரோப்பியர்களான வீரமாமுனிவர் Constantine Joseph Beschi (8 November 1680 – 4 Feb 1742), Augustus Frederick Cammerer (1767- 1837), Francis Whyte Ellis (1777–1819) ஆகியோரையும் நாம் ஒதுக்கிச் செல்ல முடியாது. ஐரோப்பியர்களின் தென்னிந்திய வருகையே அச்சுப்பதிப்பு முயற்சிகளை இந்தியாவில், அதிலும் குறிப்பாக தமிழகத்தில் அறிமுகப்படுத்தியதோடு, அதன் தொடர்ச்சியாக ஏராளமான நூல்கள் சுவடி வடிவத்திலிருந்து காகிதத்தில் அச்சிட்டுப் பல பிரதிகள் கிடைக்கச் செய்யும் அறிவுப் புரட்சிக்கு வித்திட்ட முக்கிய காரணமாக அமைகின்றது.

தமிழகச்சூழலில் உ.வே.சாவிற்கு முன்னரே சுவடிகளை அச்சுப்பதிப்பாக்கம் செய்தவர்களில் 1812ம் ஆண்டில் திருக்குறளை அச்சிட்டு வெளியிட்ட திருநெல்வேலி அம்பலவாண கவிராயர், நன்னூல், அகப்பொருள் மூலம், வெண்பாமாலை ஆகிய நூற்களை அச்சிட்ட அ. முத்துசாமிப்பிள்ளை அவர்களையும் குறிப்பிடலாம். அ.முத்துசாமிப்பிள்ளை அவர்கள் எல்லிஸ் அவர்களால் தமிழகத்தின் பல ஊர்களுக்குச் சென்று சுவடிகளைத்தேடி வர பணிக்கப்பட்டவர். பாண்டிச்சேரியில் பிறந்த இவர் தமிழ் இலக்கண இலக்கிய ஆராய்ச்சி மிக்கவர். என்பதோடு வடமொழி, தெலுங்கு இவற்றுடன் ஆங்கிலம் இலத்தீன் மொழிகளிலும் தேர்ச்சி பெற்று, கிறித்தவ வேத விற்பன்னராகவும் திகழ்ந்தவர். புதுவை நயனப்ப முதலியார் (1779 – 1845) என்பவர் ஒருசொற் பலபொருட் தொகுதி உரைபாடம் (1835), தஞ்சைவாணன் கோவை (1836), நேமிநாதம் மூலபாடம் (1836), நாலடியார் மூலமும் உரையும் (1844), திவாகரநிகண்டு (9,10 ஆம் தொகுதி, சூடாமணி நிகண்டு 11ஆம் பகுதி வரை (1839) ஆகிய நூல்களைப் பதிப்பித்தவர். தாண்டவராய முதலியார் வீரமாமுனிவரின் சதுர் அகராதி (1824), சேந்தன் திவாகரம் (1835), சூடாமணி நிகண்டு (1856) ஆகிய நூல்களைப் பதிப்பித்தவர். வடலூர் இராமலிங்க அடிகள் (1823 – 1874) ஒழிவிலொடுக்கம் (1851), தொண்டைமண்டல சதகம் (1857), சின்மய தீபிகை (1857) ஆகிய நூல்களை அச்சில் பதிப்பித்து வெளியிட்டார். அதே போல சோழ நாட்டின் தில்லையம்பூரில் பிறந்து சித்தூர் உயர் நிலைப் பள்ளியிலும், கும்பகோணம் கல்லூரியிலும் தமிழாசிரியராக இருந்தவரான சந்திரசேகர கவிராச பண்டிதர் ( - 1883) தனிப்பாடல்கள் திரட்டு, பாலபோத இலக்கணம், நன்னூற் காண்டிகையுரை, ஐந்திலக்கண விடை, நன்னூல் விரித்தியுரை, யாப்பருங்காலக் காரிகையுரை, வெண்பாப் பாட்டியல் உரை செய்யுட் கோவை, பழமொழித் திரட்டு, பரதநூல், தண்டியலங்கார உரை போன்ற நூல்களை அச்சுப்பதிப்பாக வெளியிட்டிருக்கின்றனர்.

இலங்கையை எடுத்துக் கொண்டால் சைவ சமயத் தொண்டால் சிறப்புற்ற யாழ்ப்பாணம் நல்லூர் க.ஆறுமுக நாவலர் (1822 – 1879) அவர்கள் சூடாமணி நிகண்டு உரை, சௌந்தரியலகரி உரை (1849), நன்னூல் விருத்தியுரை, திருச்செந்தூர் நீரோட்டக யமக வந்தாதி, திருமுருகாற்றுப்படை (1851), ஞானக்கும்மி (1852), திருவாசகம், திருக்கோவையார் (1860), திருக்குறள் மூலமும் பரிமேலழகர் உரையும்(1861), தருக்க சங்கிரகம், அன்னபட்டீயம் (1861), இலக்கணக்கொத்து, இலக்கண விளக்கச் சூறாவளி, தொல்காப்பிய சூத்திரவிருத்தி (1866), கோயிற்புராணம் (1867), சைவசமய நெறி (1868) ஆகிய நூற்களைப் பதிப்பித்திருக்கின்றார். மேலும், யாழ்ப்பாணம் புலோலியூர் நா.கதிரைவேற்பிள்ளை (1844 – 1907), யாழ்ப்பாணம் வடகோவை சபாபதி நாவலர் (1843 – 1903), யாழ்ப்பாணம் சுண்ணாகம் குமாரசுவாமிப் புலவர் (1854 – 1922),திரிகோணமலை த.கனகசுந்தரம் பிள்ளை (1852 – 1901), யாழ்ப்பாணம் சிறுப்பிட்டி வை.தாமோதரம் பிள்ளை (1832 – 1901) ஆகியோரும் தமிழ் நூல்கள் அச்சுப்பதிப்பில் உ.வே.சா அவர்களுக்கு முன்னோடியாகவும் சமகாலத்தவராகவும் இத்தமிழ்ப்பணியில் ஈடுபட்டவர்களாவர்.


தொடரும்..
சுபா

Thursday, December 28, 2017

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 148

​சங்க இல​க்கியங்களின் அச்சுப்பதிப்பு முயற்சிகளின் தொடர்ச்சியாக ஐங்குறுநூறு 1903ம் ஆண்டும், பதிற்றுப் பத்து 1904ம் ஆண்டும், பரிபாடல் 1918ம் ஆண்டிலும் உ.வே.சாவால் வெளியிடப்பட்டன. குறுந்தொகையை நீண்ட இடைவெளிக்குப் பிறகு 1937ம் ஆண்டு அச்சுப்பதிப்பாக வெளியிட்டார். இச்சங்க இலக்கிய நூல்கள் தமிழ் அச்சுப்பதிப்பு வெளியீட்டில் மாபெரும் திருப்புமுனையாக அமைந்தன. தமிழின் செம்மை திறத்தையும், தமிழர் வரலாற்று வளத்தையும் மேன்மையையும் வெளிக்காட்டும் சிறந்த ஆவணங்களாக இவை திகழ்கின்றன என்பதோடு இன்றும் பலரால் பல கோணங்களில் ஆராயப்படும் நூல்களாக இவை உள்ளன.

சிதம்பரத்தில் சில ஆண்டுகள் உ.வே.சா அவர்கள் பணியாற்றியிருக்கின்றார் என்பது பலருக்கும் புதிய செய்தியாக இருக்கலாம். அவர் சிதம்பரத்திற்குச் செல்வதற்கு பின்னணியில் இருந்தவர் அன்று மிகப் பிரபலமாக தமிழறிஞர்களால் அறியப்பட்ட ராஜா அண்ணாமலைச் செட்டியார் அவர்கள் தான்.

1924ம் ஆண்டு சிதம்பரத்தில் ராஜா அண்ணாமலைச் செட்டியார் கல்விக்கூடங்களைக் கட்ட உத்தேசித்திருந்தார். முதலில் ஒரு தமிழ்க் கல்லூரியையும் வடமொழிக் கல்லூரியையும் தொடங்கினார். அத்தோடு ஒரு கலைக்கல்லூரியும் தொடங்கப்பட்டது.  மீனாட்சி தமிழ்க்கல்லூரி, மீனாட்சி வடமொழிக் கல்லூரி, மீனாட்சி கலைக்கல்லூரி ஆகிய மூன்றும் அப்போது தொடங்கப்பட்டவையே. இதில் தமிழ்க்கல்லூரிக்கு முதல்வராக உ.வே.சா பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும் என்பது ராஜா அண்ணாமலைச் செட்டியார் அவர்களது விருப்பமாக இருந்தது. இதன் நிமித்தமாக அதே ஆண்டு ஜூலை மாதம் உ.வே.சா சிதம்பரத்திற்கு மாற்றலானார். இந்தப் பணியை ஏற்றுக் கொண்டபோது புகழ்பெற்ற வரலாற்றாசிரியர் திரு.நீலகண்டசாஸ்திரியார் மீனாட்சி கலைக்கல்லூரியின் முதல்வராக பணியேற்றிருந்தார். இவரது சோழர்கள் பற்றிய ஆராய்ச்சியும் அவரது நூல்களும் கட்டுரைகளும் இன்றும் பல ஆராய்ச்சி மாணவர்களாலும் வரலாற்று ஆர்வலர்களாலும் விரும்பி வாசிக்கப்படும் நூல்களாக இருப்பவை என்பதை நாம் அறிவோம்.

சிதம்பரத்தில் கல்லூரியில் முதல்வராகப் பணியாற்றிக் கொண்டிருந்த வேளையில் மதுரையில் 1925ம் ஆண்டு நிகழ்ந்த மதுரைத் தமிழ்ச்சங்கத்தின் 24வது ஆண்டு விழாவில் உ.வே.சா பொற்கிழி கொடுத்துச் சிறப்பிக்கப்பட்டார். அவ்விழாவில் காஞ்சிகாமகோடி பீடத்தின் அதிபர் சங்கராச்சார்ய சுவாமிகள் உ.வே.சா அவர்களுக்கு இரட்டைச் சால்வை அணிவித்துச் சிறப்புச் செய்யக் கூறியிருந்தார். அத்தோடு இவ்விழாவில் "தாஷிணாத்ய கலாநிதி" என்ற பட்டத்தையும் சங்கரமடத்தின் சார்பில் வழங்கிச் சிறப்பித்தார்.

சிதம்பரத்தில் உ.வே.சா இருந்த காலகட்டத்தில், அவர் ஒட்டக்கூத்தர் இயற்றிய தக்கயாகப்பரணி சுவடி நூற்களை ஆராய்ந்து வந்தார். அதனைச் செம்மையான பதிப்பாகக் கொண்டு வரவேண்டும் என்ற பேராவல் உ.வே.சாவிற்கு இருந்தது.

தக்கயாகப்ரணி ஒட்டக்கூத்தர் என்ற புலவரால் இயற்றப்பட்ட நூல். கவிச்சக்கரவர்த்தி என்று சோழ மன்னன் வீரராசேந்திரனால் சிறப்பிக்கப்பட்டவர் என்பதோடு மூன்று சோழமன்னர்களின் அரசவையில் அவைப்புலவராகப் பதவி வகித்தவர் என்ற சிறப்பும் பெற்றவர் இவர். சோழ மன்னர்களின் போர் சிறப்பையும் வரலாற்றுச் செய்திகளையும் செய்யுள் நடையில் குறிப்பிடும் ஒரு நூல் தக்கயாகப்பரணி. ஒட்டக்கூத்தர் இயற்றிய 'விக்கிரமசோழன் உலா' மற்றும் விக்கிரம சோழனின் கலிங்கத்துப் போரை விவரித்துச் சொல்லும் 'கலிங்கத்துப்பரணி', 'நாலாயிரக்கோவை' ஆகிய நூல்களும் மிகச் சிறப்பாகப்பேசப்படும் நூல்கள். ஒட்டக்கூத்தர் வீரராசேந்திரன், இரண்டாம் குலோத்துங்கன், விக்கிரமசோழன் ஆகிய மூன்று சோழ மன்னர்களின் அவையை அலங்கரித்த புலவர். 'அரும்பைத்தொள்ளாயிரம்' என்ற நூலையும் இவரே இயற்றியிருப்பார் என அறியப்படுகின்றது. 'விக்கிரமசோழனுலா', 'குலோத்துங்கசோழனுலா', 'இராசராசசோழனுலா' என்ற மூன்று உலா நூற்களிணைந்து 'மூவருலா' என்ற நூலினை ஒட்டக்கூத்தர் இயற்றினார். இன்றைய தஞ்சை மாவட்டத்தின் அரிசியாற்றின் கரையிலுள்ள 'கூத்தனூர்' என்னும் சிற்றூர் ஒட்டக்கூத்தருக்குச் சோழமன்னர் அன்பளிப்பாக அளித்தார் என்ற தகவலையும், ஒட்டக்கூத்தரின் வாழ்க்கை வரலாற்றையும், அவரது குடும்பப்பின்னனியையும், கவிஞராக வளர்ந்து புலவராக தன்னை உயர்த்திக் கொண்டு சோழ மன்னர்கள் அவையில் இருந்த செய்திகளையும், அவரோடு தொடர்பு படுத்திச் சொல்லப்படும் கர்ண பரம்பரைக் கதைகள் பற்றிய தகவல்களையும் வரலாற்று நூல்  'சோழர்கள் 2ம்' பாகத்தில் 26வது அத்தியாயத்தில் விரிவாகத் தருகின்றார் வரலாற்றாசிரியர் திரு.நீலகண்டசாஸ்திரியார். தாராசுரத்தில் உள்ள தாராசுரம் கோயில் அதாவது, ஐராவதீசுவரர் கோயிலுக்குப் பின்புறம் ஒட்டக்கூத்தரின் சமாதி அமைந்துள்ளது. பட்டீச்சரம் சாலைக்கு மேற்கே வீரபத்திரர் கோயில் என்ற பெயரில் ஒட்டக்கூத்தரின் சமாதி ஆலயம் இங்கு எழுப்பப்பட்டுள்ளது.

தக்கயாகப்பரணி நூலை எழுதிய ஒட்டக்கூத்தர் தாராசுரத்தில் எழுப்பப்பட்ட கவின்மிகு சிற்பங்களுக்குப் புகழ்பெற்ற தாராசுரம் கோயிலின் மண்டபத்தில் தான் அரங்கேற்றப்பட்டது. தமிழ் மரபு அறக்கட்டளை பதிவிற்காக இக்கோயிலுக்கு நான் சென்றிருந்த போது, ஒட்டக்கூத்தர் தக்கயாகப்பரணியை அறங்கேற்றிய மண்டபப் பகுதியில் அமர்ந்திருக்கும் வாய்ப்பு கிட்டியதும் என் வரலாற்றுத் தேடுதல் முயற்சியில் மறக்க இயலாத ஒரு முக்கிய நிகழ்வாகக் கருதுகிறேன்.

சிதம்பரத்தில் நீண்டகாலம் உ.வே.சா பணியாற்றவில்லை. 1917ம் ஆண்டில் உ.வே.சா அவர்களின் மனைவி காலமானார். அதன் காரணமாக சிதம்பரத்திற்கு மீனாட்சி தமிழ்க்கல்லூரி முதல்வராக பணியேற்றுக் கொண்டு 1924ல்  வந்த போது  தனக்கு ஒரு சமையல்காரரையும் பணிக்கு அமர்த்தியிருந்தார். சரியான கவனிப்பாரற்று அவரது உடல் நிலை தளர்ச்சியடைந்து வந்தது தொடர்ச்சியாக உடல் நலக்குறைவு ஏற்பட்டுக் கொண்டிருந்தது. இதனால் தக்க அறிஞர் ஒருவரை தமது பணிக்கு ஏற்பாடு செய்துவிட்டு 11.3.1927ல் அவர் சென்னைக்குத் திரும்பினார். சென்னையில் தக்கயாகப்பரணி நூலுக்கான அச்சுப்பதிப்பாக்கப் பணி தொடர்ந்து நடந்து வந்தது. இடைக்கிடையே வேறு சில சுவடி நூல்களை ஆராயும் பணியையும் உ.வே.சா மேற்கொண்டிருந்தார். அதில் ஒன்று 'தமிழ்விடு தூது'. இந்த நூல் 1930ம் ஆண்டு அச்சுப்பதிப்பாக வெளிவந்தது. அதே 1930ம் ஆண்டு, தக்கயாகப்பரணி நூல் அச்சுப்பதிப்பாக வெளிவந்தது.

உ.வே.சாவின் தக்கயாகப்பரணி மிகச் சிறந்த படைப்பாக இன்றும் அறியப்படுவது. ஒட்டக்கூத்தர் எழுதிய செய்யுளுக்கு விரிவான உரை எழுதி இதில் சேர்த்துள்ளார். இந்த நூல் ஆராய்ச்சிக்காக சில வடமொழிப்புலவர்களுடனும் வரலாற்றாசிரியர்களுடனும் கலந்துரையாடி விளக்கம் பெற்று தனது உரையினை உ.வே.சா இந்த நூலில் வழங்கியிருக்கின்றார்கள்.


தொடரும்

சுபா

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 147

தமிழக சூழலில் உ.வே.சா வாழ்ந்த காலத்தில்  சாதி நிலைப்பாடு தொடர்பான அவரது சிந்தனையைப் பற்றி, அதாவது  நாடார் சமூகத்தவர் கோயில் நுழைவு தொடர்பான வழக்கில் பாஸ்கர சேதுபதிக்கு ஆதரவாக நின்று, நாடார் சமூகத்தவர் கமுதியில் கோயில் நுழைவில் ஈடுபட்டது தமிழர் மரபு ரீதியாக தவறு என மன்னருக்குச் சார்ந்து பேசியமையைச் சுட்டிக் காட்டியிருந்தேன். உயர்ந்த கல்வி கற்றிருந்தாலும் கூட., வாழ்க்கையையே தமிழ்ப்பணிக்கு என அர்ப்பணித்திருந்தாலும் கூட, இறைவனுக்கு சாதி பேதமில்லை என்ற எளிய உண்மையை உணராத அவரது பேதமையை நாம் கண்டிக்காது ஒதுக்கிச் சென்று விட முடியாது.

தமிழகச் சூழலில் கல்விக்கூடங்களில் எல்லா குழந்தைகளும் படிக்கும் சூழல் ஒரு வழியாக இன்று நடைமுறைக்கு வந்துவிட்டது.  இருப்பினும் கூட, சாதி அமைப்பின் பெயருடன் கூடிய  உயர் கல்வி நிலையங்களை உருவாக்கும் முயற்சி்கள் இருக்கின்றன. தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டும் உள்ளன. இதற்குச் சான்றாக பல கல்விச்சாலைகள் சாதி அடையாளப் பெயர்களைத் தாங்கியே இன்று செயல்படுகின்றன.    கல்வி நிலையங்களுக்குள் சாதி கூடாது எனும் கருததை முன்னெடுத்தால் இட ஒதுக்கீடு என்பதே சாதியின் அடிப்படையில் தானே அமைகின்றது என, இட ஒதுக்கீட்டுக் கொள்கையின் அடிப்படையை அறியாதோர் விவாதத்துக்கு வருவதும் வழக்கமாகி விட்டது. எதனால் தமிழகச் சூழலில் சமூகங்களிடையே இட ஒதுக்கீடு தேவை என்ற புரிதல் இன்று வரை தெளிவாக பொதுமக்களிடத்தில் இல்லாமையே இதற்குக் காரணம் என்பதை வலியுறுத்தவேண்டியுள்ளது.

இதே சாதி அமைப்பு தொடர்பில் உ.வே.சா வாழ்க்கையில் நிகழ்ந்த மேலும் ஒரு நிகழ்வை அவரது மாணாக்கராகிய கி.வா.ஜ தனது ’என் ஆசிரியப்பிரான்’ எனும் நூலின் 38வது அத்தியாயத்தில் குறிப்பிடுகிறார்.

அதில் உள்ளபடி,  ஒரு முறை திருவாவடுதுறைக்குச் சென்று விட்டு தனது ஊர் உத்தமதானபுரத்திற்கு உ.வே.சா சென்றிருக்கின்றார். அந்தச் சமயத்தில் ஆரம்பப்பள்ளிக்கூடம் ஒன்று அந்த ஊர் அக்கிரகாரத்தில் நடைபெற்று வந்தது.  அந்தப் பள்ளிக்கூடத்தில் ”ஒடுக்கப்பட்ட சமூகத்துச் சிறுவர்களையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். அவர்களும் கல்வி கற்கச் செய்ய வேண்டும்” என்ற குரல் எழும்பியிருக்கின்றது. யார் இத்தகைய முயற்சிகளை மேற்கொண்டனர் என்ற விபரத்தை கி.வா.ஜ அவர்கள் தன் நூலில் குறிப்பிடவில்லை.  ஆயினும், அத்தகைய குரல் எழுந்தது, என்ற செய்தியைப் பதிகின்றார். அனேகமாக இது 20ம் நூற்றாண்டின் ஆரம்பகால நிகழ்வாகத்தான் இருக்க வேண்டும்.

’அக்கிரகாரத்தில் வசிக்கும்  பிள்ளைகள், அதாவது பிராமணர் சமூகத்துக் குழந்தைகள் படிக்கும் பள்ளியில் ஒடுக்கப்பட்ட சமூகத்துப் பிள்ளைகள்  வந்து படிப்பது சரியல்ல’  என்று அங்கிருந்தவர்கள் என்ணினார்கள் என்றும், எனவே ஒடுக்கப்பட்ட சமூகத்துப் பிள்ளைகள் படிப்பதற்கு அக்கிரகாரத்திற்குத் தூரத்தில் வேறு  ஒரு இடம் பார்க்கலாம் என்று சொல்லிவிட்டார்கள் என்றும் கி.வா.ஜ. தன் நூலில் குறிப்பிடுகின்றார்.  அப்போது உத்தமதானபுரம் சென்றிருந்த உ.வே.சா விடம் இந்தச் செய்தியை கிராம முன்சீப் அண்ணாசாமி ஐயர் தெரிவித்திருக்கின்றார்.

அக்கிரகாரத்திற்கு வெளியே ஒரு புன்செய் நிலம் ஒன்று உ.வே.சாவின்   பெயரில் இருந்ததாகவும், அது பயன்பாட்டில் இல்லாமல் இருப்பதால் அந்த இடத்தில் பள்ளிக்கூடத்தைக் கட்டினால், ஒடுக்கப்பட்ட  சமூகத்துக் குழந்தைகள் வந்து படிக்க அது வசதியாக அமையும் என்றும் கூறி, அந்த தனது நிலத்தை பள்ளிக்கூடம் கட்ட உ.வே.சா அவர்கள் பணம் பெற்றுக்கொள்ளாமல் இனாமாகக் கொடுத்ததாக கி.வா.ஜ அவர்கள் குறிப்பிடுகின்றார். உ.வே.சா அவர்களின் சிற்றப்பா சின்னசாமி பெயரில் 'சின்னசாமி நிலையம்'  என்ற  பெயரிடப்பட்டு அந்த நிலத்தில் ஒரு பள்ளிக்கூடம் கட்டப்பட்டுள்ளது.   உத்தமதானபுரம் குளக்கரையில் அந்த சின்னசாமி நிலையம் என்ற பள்ளிக்கூடம் இயங்கி வந்துள்ளது என்பதையும் இச்செய்திகளின் வழி அறியக்கூடியதாக இருக்கின்றது.

உ.வே.சாவின் என் சரித்திரம் நூலை நாம் வாசிக்கும் போதும், மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களின் சரித்திரத்தை வாசிக்கும் போதும்,  தமிழ்ச்சாதிகளுக்கிடையே கல்விச்சமன்மை இல்லாத நிலை இருந்ததை உணர முடிகின்றது. தமிழ்ச் சமூகத்தில் பிராமணர்கள், சைவ பிள்ளைமார்கள், ரெட்டியார்கள்,  செட்டியார்கள், முதலியார்கள்  உள்ளிட்ட பிற இடைநிலைச்சாடியினரின் பெயர்களும்   சில ஜமீந்தார்களின் பெயர்களுமே இந்த நூல்களில் கானப்படுகின்றன. ஓரிரு ஐரோப்பிய தமிழறிஞர்களும் இந்த நூல்களில் சுட்டிக்காட்டப்படுகின்றார்கள். 

உ.வே.சா போன்ற அறிஞர்கள் பேசிப்பழகி, தமிழ்கற்று உலாவந்த சூழல் என்பது  ஒடுக்கப்பட்ட மக்களைத் தவிர்த்த, தனித்த வகையிலான ஒரு அமைப்பாக இருந்திருக்க வேண்டும். அல்லது. 17, 18, 19ம் நூற்றாண்டு காலத்தில், மேற்குறிப்பிட்ட ஒரு சில சாதிக்குழுவினரைத் தவிர, ஏனையோருக்குக் கல்விக்கு  இடமளிக்காத சூழல் என்ற ஒன்று மிகத்தீவிரமாக இருந்திருக்க வேண்டும்.  எப்படியாகினும், தமிழகத்தின் மிகப் பெரும்பாலான, பெருவாரியான சதவிகித தமிழ் மக்கள் அக்காலத்தில் கல்விக்கு வாய்ப்பளிக்கப்படாத நிலையில் இருந்தார்கள் என்பது இந்த நூல்களின் வழி மட்டுமன்றி நமக்குக் கிடைக்கின்ற, தமிழகம் வந்து வாழ்ந்த ஐரோப்பியர்களின் ஆவணக் குறிப்புக்களின் வழியாகவும்  நம்மால் அறிந்து கொள்ள முடிகின்றது.

கல்வியும் வாசிப்பும், இலக்கியச் செழுமையும், ஏட்டுச் சுவடிகளும் முற்றும் முழுதுமாகக் குறிப்பிட்ட ஒரு சில சமூகத்தினர்  கைகளில் மட்டும் தான் இருந்தனவா என்றால், இதற்கு மாறான கருத்தினைத் தரும்  தகவல்களையும்  நமக்குக் கிடைக்கின்ற  சில ஆவணங்களின் வழி  அறியமுடிகின்றது . உதாரணமாக, பறையர் சமூகத்தவராக அறியப்படுகின்ற அயோத்திதாசப் பண்டிதரின் தாத்தாவின் சேகரிப்பில் இருந்த சுவடிகளை, எல்லிஸ் அவர்கள் காணும் வாய்ப்பு அமைந்ததும், அதில் குறிப்பாக திருக்குறளை வாசிக்க நேர்ந்து அதன் அறிவுச் செறிவில் ஆழ்ந்து வியந்து எல்லிஸ் அவர்கள் திருக்குறளை மொழிபெயர்ப்பு செய்தார் என்பதையும் நாம் அறிகின்றோம்.  இப்படி  சமூகத்தில் ஒடுக்கி வைக்கப்பட்டிருந்த சமூகத்தினரிடையேயும் தமிழ் நூல்கள கற்கும் வழக்கம் இருந்தமையையும் கேள்விப்படுகின்றோம். ஆனால் அது பொது வெளியில் அறியப்படாது  பேசப்படாமலேயே போய் விட்டமையையும்  காணமுடிகின்றது.

18,19, 20ம் நூற்றாண்டுகளில், பொதுவாகக் கல்வி கற்றோர் என அறியப்படுவோர் ஒடுக்கப்பட்ட சாதி அடையாளம் தரப்பட்ட மக்களிடமிருந்து மதத்தின் அடிப்படையில் ஒதுங்கி  இருந்தார்கள் என்பதும், இந்த ஒதுங்கி இருந்தலை சைவ மற்றும் வைணவ  சமய மடங்களும்  சாத்திரம் சார்ந்த ஒழுக்கமாக எண்ணி கடைபிடித்தன என்பதையும், அது பெருமளவு இன்றும் தொடர்ந்து உறுதியாகக் கடைபிடிக்கப்படுவதையும் காண்கின்றோம். பல நூற்றாண்டு காலமாக ஒரு சில சமூகங்களுக்குக் கல்விக் கேள்வி மறுக்கப்பட்ட இந்த நிகழ்வை ஒரு சமூக அநீதியாகக்  குறிப்பிட வேண்டியது அவசியம்.   இன்று நாம் அறியக்கூடிய 18ம் 19ம் நூற்றாண்டு தமிழறிஞர்களில் மிகப்பெரும்பாலானோர் இந்த பார்வையை சிறிதும் அற்றவர்களாகத்தான்  இருந்திருக்கின்றனர். இது தமிழ்ச் சமூகத்தின் வரலாற்றில் நிகழ்ந்த மாபெரும் அவலம். அநீதி.

கல்வி வாய்ப்பு என்பது குறிப்பிட்ட ஒரு சில சாதியினருக்கே என  குறுக்கிய சமூக அநீதியால் தமிழகம் இழந்தது அதிகம் என்பது என் கணிப்பு. கல்வியும் அறிவும் தனிப்பட்ட  சில குலங்களுக்கு மட்டும் வழங்கப்பட வேண்டிய வாய்ப்பல்ல. மாறாக அது மனித குலம் அனைத்திற்கும் உள்ள தார்மீக உரிமை. இதனை மறுத்து கல்வி வாய்ப்பை சிறிய வட்டத்திற்குள் மட்டுமே வைத்துக் கொண்டமையே தமிழகம் இன்றும் பொருளாதார ரீதியாக முன்னேற்றம் காணாத பல கிராமங்களைக் கொண்டிருக்கும் சூழ்நிலை அமைந்திருப்பதற்குக்  காரணமாகின்றது எனக் கருதுகிறேன்.

இன்று  தமிழகத்தில் எல்லோருக்குமான கல்வி வாய்ப்பு என்பது பெருமளவில் மாற்றம் கண்டுள்ளது. ஆனால் இந்த மாற்றத்தை நோக்கிய முன்னெடுப்புக்களைச் சாத்தியப்படுத்த நிகழ்ந்த சமூகச்  சீர்திருத்த போராட்டங்கள் ஏராளம் ஏராளம். படிப்படியாக தமிழகத்தில் தமிழ்ச்சான்றோர் பலர் முன்னெடுத்த முயற்சிகளும், ஐரோப்பிய பாதிரிமார்களும், ஆங்கிலேய காலணித்துவ அரசும் மேற்கொண்ட கல்வி சீர்திருத்த நடவடிக்கைகளே சமூகத்தில் அனைவரும் கல்வி கற்கலாம் என்ற நிலையை ஏற்படுத்தி கல்விக்கான கதவை அனைவருக்கும் திறந்தது என்பது மறுக்கப்பட முடியாத உண்மை. சாதி வேறுபாடுகளின்றி, ஆண் பெண் பேதமின்றி, இன்று கல்வி வாய்ப்பு அனைவருக்கும் கிட்டியிருக்கின்றது. முயற்சியும், ஆர்வமும், தீவிர நாட்டமும் இருந்தால் ஒருவர் எத்தகைய உயரிய நிலைக்கும் செல்லலாம் என்பதை நம் கண் முன்னெ இன்று காண்கின்றோம். ஆயினும் இன்று நம் மாணவச் செல்வங்களிடத்திலும்,  ஆய்வு மாணவர்கள் மத்தியிலும் கிடைத்திருக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்தி வாழ்வில் உயர்வதற்கானச் சிந்தனை ஏற்பட்டுள்ளதா என்பது கேள்வியே.

பொதுவாகவே, தமிழ் மக்களிடையே நூல் வாசிப்பு என்பது மிகக் குறைந்து கொண்டே வருகின்றது. பள்ளியில் தேர்வுக்காகவும், கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் பட்டம் பெருவதற்காகவும் என்று வாசிக்கும் போக்கை தான் பெருவாரியாகக் காண முடிகின்றது. இன்னும் சிலரோ பிறருக்குப் பணமும், சலுகைகளும், பரிசுகளும் கொடுத்து ஆராய்ச்சி பட்டங்களைப் பெறுவதற்கான தரம் தாழ்ந்த முயற்சிகளையும் கூட மேற்கொள்ளும் அவல நிலையும் இருக்கின்றது. இது சமூகத்தில் தோன்றியிருக்கும் ஒரு வகையான நோய். இந்த நோய் பரவவிடாமல் தவிர்க்கப்படவேண்டுமென்றால்  தமிழறிஞர்கள் வாழ்க்கை சரித்திரங்களையும் சமூகப் போராளிகளின் வாழ்க்கைச் சரிதங்களையும்,  அவர்கள் கடந்து வந்த பாதை, தமிழ்க்கல்வியைப் பெற அவர்கள் மேற்கொண்ட முயற்சிகள், அவர்களது ஆக்கப்பணிகள், அந்த ஆக்கப்பணிகள் ஏற்படுத்திய சமூக மாற்றங்கள் ஆகியவற்றைப் பற்றிய  செய்திகளையும்  அறிவுறுத்த் வேண்டியது   அவசியமாகின்றது.

தொடர்க...
சுபா

Tuesday, December 26, 2017

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 146

சாதி வலியது. கொடியது!

நூல்களை வாசிப்பதனால் பல அனுகூலங்கள் இருக்கின்றன. அதிலும் இன்று வாசிக்கும்போது, இன்றைய காலகட்டங்களிலிருந்து பின்னோக்கிய செய்திகளைச் சொல்லும் நூல்கள் நமக்கு முக்கிய வரலாற்று ஆவணங்களாகவே திகழ்கின்றன. 

'என் ஆசிரியப்பிரான்' என்ற தனது நூலில் கி.வா.ஜ அவர்கள் தன் ஆசிரியரின் வாழ்வில் நிகழ்ந்த முக்கிய செய்திகளை அவர் மறைவுக்குப் பின்னர் எழுதி வெளியிட்டுள்ளார். 1983ல் இந்த நூல் மகாமகோபாத்தியாய டாக்டர். உ. வே.. சாமிநாதயர் நூல் நிலயத்தின் பதிப்பகத்தால் பதிப்பிக்கப்பட்டு வெளிவந்தது. என் சரித்திரம் நூலின் தொடர்ச்சி எனப் பார்க்கப்படும் நூல் இது எனலாம்.

​இதில் ஆறாம் அத்தியாயத்தில் 'பழைய மரபு' என்ற தலைப்பில் உ.வே.சாவின் வாழ்க்கையில் நிகழ்ந்த ஒரு செய்தியைப் பகிர்கின்றார். இது சாதிப்பிரிவினைத் தொடர்பானது. இச்செய்தியை​ ஒதுக்கித் தள்ளி செல்ல முடியாத ஒரு பகுதியாக நான் கருதுவதால்  இந்த நிகழ்வைப் பற்றியும் அதில் உ.வே.சா கொண்டிருந்த சார்பு நிலையைப் பற்றியும் இத்தொடரில் குறிப்பிட வேண்டியது அவசியம் என்று கருதுகிறேன்.

​கி.வா.ஜா,   ​"அந்தக் காலத்தில் பாண்டிய நாட்டில் கோவில்களில் நாடார்கள் புகுவது இல்லை. எத்தனையோ நாடார்கள் நல்ல பழக்கங்களை உடையவர்களாகவும், சிவ பக்தியில் சிறந்தவர்களாகவும் இருந்தார்கள். என்றாலும் நாடார் என்ற சாதியை எண்ணி, அவர்களைக் கோவிலுக்குள் விடுகிற பழக்கம் இல்லாமல் இருந்தது."  என்று குறிப்பிடுகின்றார்.​

சமூகத்தில் மக்களைச் சாதியால் பிரித்து, இவர்கள் உயர்ந்தவர்கள், இவர்கள் தாழ்ந்தவர்கள் என்ற ​கருத்தினை வலியத் திணித்து தாழ்த்தப்பட்டோர் என்ற ஒரு கருத்தைத் தீவிரமாகப் பிரச்சாரம் செய்து தம்மை உயர்ந்தவர்களாகக் காட்டிக் கொள்ளச்செய்த முயற்சிகள் காலம் காலமாகத் தொடர்ந்தாலும், 18ம், 19ம் நூற்றாண்டுகளில் இது மிக அதிகமாகவும் தீவிரமாகவும் இருந்ததோ என நான் ஐயமுறுகின்றேன். சாதிப் பிரிவினையைச் சட்டப்பூர்வமாக நடைமுறைப்படுத்த சில முயற்சிகள் நடந்தன என்பதனையும் அவ்வகையான சில நடவடிக்கைகளில் உ.வே.சாமிநாதையர் தானும் தனது பங்களிப்பை வழங்கியிருக்கின்றார் என்பதுவும் வேதனைத் தரும் உண்மையே.

கி.வா.ஜா அவர்கள் தரும் தகவல்களின் அடிப்படையில், இராமநாதபுரம் ஜமீனைச் சார்ந்த கமுதி என்ற கிராமத்தில் உள்ள மீனாட்சி சுந்தரேசுவரர் ஆலயத்தில் அச்சமயம் நாடார் சமூகத்தைச் சார்ந்தோர் அக்கோயிலில் நுழைந்தார்கள் என்றும் அதனைப் பலர் தடுத்ததாகவும், இதனால் ஒரு கலகம் ஏற்பட்டதாகவும் அறிய முடிகின்றது. இது 20ம் நூற்றாண்டின் ஆரம்ப காலகட்டத்தில் அயோத்திதாசப் பண்டிதர், தந்தை பெரியார் போன்றோரின் சீர்திருத்தக் கருத்துக்கள் பொது மக்கள் மத்தியில் பரவத் தொடங்கியதால் ஏற்பட்ட மக்கள் விழிப்புணர்ச்சியின் பலனாகத் தொடங்கிய முயற்சிகளாக இருக்கலாம்.

இராமநாதபுரம் மன்னர் பழைய மரபுகளை மாற்றக்கூடாது என்ற எண்ணம் கொண்டவராம். ஆக, நாடார் சமூகத்தார் கோயிலுக்குள் நுழைந்தமையை எதிர்த்து அவர்கள் மீது நீதிமன்றத்தில் அப்போது ஒரு வழக்கு தொடர்ந்திருக்கின்றார். பல காலமாக இருந்து வரும் பழக்கத்தை மாற்றுவதால் தமக்குப் பழி வரும் என நினைத்து அவர் அப்படிச் செய்திருக்கலாம் என கி.வா.ஜ குறிப்பிடுகின்றார். அவருக்கும் பல நாடார் சமூகத்து நண்பர்கள் இருந்ததாகவும் ஆனாலும் கூட மரபை மீறக்கூடாது என்ற கொள்கையுடன் செய்தார் என கி.வா.ஜ குறிப்பிடுகின்றார்.

​மதுரை நீதிமன்றத்தில் இந்த வழக்கு வந்திருக்கின்றது. மன்னருக்குச் சார்பாக வழக்கில் சாட்சி சொல்ல வந்தவர்களில் உ.வே.சாமிநாதயர் அவர்களும் ஒருவர் என்று கி.வா.ஜ குறிப்பிடுகின்றார். அதில் "நாடார்களைப் பற்றி இழிவாகக் கூறாமல் அவர்களில் எத்தனையோ பக்தர்கள் இருக்கின்றார்கள் என்று சொல்லி, ஆனாலும் மரபு பிறழக்கூடாது என்று வற்புறுத்தினார்" என்று குறிப்பிடுகின்றார்.

தீர்ப்புக் கூறிய நீதிபதி டி.வரதராவ் என்பவர், உ.வே.சே சிறந்த தமிழறிஞர், தமிழுக்குத் தொண்டு செய்தவர், பல அறிய நூல்களை வெளியிட்டு தமிழன்னையின் அன்பைப் பெற்றவர் என்று புகழ்ந்து, ஆகவே அவர் சொல்வது தகுதியாக இருப்பதாகச் சொல்லிப் பாராட்டி தீர்ப்பளித்திருக்கின்றார்.

கொடுமை!

இன்னார் இன்னார்தான் கோயிலுக்குள் செல்லலாம்; இந்தச் சாதியினர்தான் சிவாலயங்களுக்குள் செல்ல பிறப்பால் தகுதி படைத்தவர்கள் என்ற சிந்தனை இவ்வளவு தீவிரமாக இன்றைக்கு நூறு ஆண்டுகளுக்கு முன்னர் வரை இருந்தது என்பதை இந்தச் செய்தி நமக்குக் காட்டுகின்றது. மிக அதிகமாக நூல்களை வாசித்தவர், மிகப் பெரும் தமிழ்ப்பணியை ஆற்றியவர், மத வேறுபாடுகள் களைந்து சமண பௌத்த நூல்களை வெளியிட்டவர் என்ற சிறப்புக்களையெல்லாம் பெற்றிருந்தாலும் கூட சமூகத்தில் உள்ள ஏற்றத்தாழ்வுகளைக் கவனித்து மனிதருக்குள் அடக்குமுறையும் ஒடுக்குமுறையும் தேவையற்றது எனக் கூறாமல் சாதியால் மக்களைப் பிரித்து வைத்த சமூகத்தில் தானும் ஒருவராகவே உ.வே.சாமிநாதையர் தன்னை அடையாளம் காட்டிக் கொள்கின்றார். அவரது காலத்தில் தான் தமிழகத்தின் பல இடங்களில் சாதிக்கு எதிரான போராட்டங்கள் நடைபெற்று வந்தன. மக்கள் எழுச்சி மிகத் தீவிரமாக ஏற்பட்டு வளர்ந்த காலகட்டமது. அந்தக் குரல்கள் அவர் செவிகளுக்கும் மனதிற்கும் எட்டவில்லை போலும்.  தனது ஆதரவை சாதிப் பிரிவுகளைத் தக்க வைக்கப் போராடிய ஆதிக்கவர்க்கத்துடன் இணைந்திருக்கும் வகையிலான சார்பு நிலையையே உ.வே.சா கொண்டிருந்தார் என்பது, நாம் விரும்பாவிட்டாலும் உண்மை என்பது புலப்படுகின்றது.

தொடரும்..

சுபா

Monday, December 25, 2017

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 145

சமய நிறுவனங்களில் நிர்வாகத்தில் பூசல்கள் நடப்பது என்பது புதிதல்ல. வாட்டிக்கன் ஆகட்டும், தமிழகத்தின் மதுரை ஆதீனமாகட்டும், காஞ்சி சங்கரமடமாகட்டும். ஒரு நிறுவனம் என்றாலே அதற்குள் ஏதாவது ஒரு உட்பூசல்கள் எழுவதைத் தடுக்க முடியாது. சமய நிறுவனங்களுக்கும் அது பொருந்தும் என்பதை செய்தி ஊடகங்களின் வழி கிடைக்கின்ற தகவல்கள் நமக்கு வெளிச்சமாக்குகின்றன .

உ.வே.சா அவர்களின் வாழ்க்கை மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம்பிள்ளையின் அறிமுகத்திற்குப் பின்னர், திருவாவடுதுறை சைவத்திருமடத்தோடு முற்றும் முழுதுமாக பின்னிப் பிணைக்கப்பட்டிருந்தது என்பதை மறுக்கமுடியாது. அத்திருமடத்தில் நிகழ்ந்த பல நிகழ்வுகளில் உ.வே.சாவின் ஈடுபாடு இருந்தமையும்,  அத்திருமடம் உ.வே.சாவின் வாழ்க்கையில் ஏற்பட்ட பல நல்ல மாற்றங்களுக்கும் உயர்வுக்கும் அடிப்படையை அமைத்துக் கொடுத்தமையும் இந்தத் தொடரின் ஆரம்பத்தில் குறிப்பிட்டுள்ளேன். உ.வே.சா தன் சரிதத்தில் பதியாமல் விடுபட்ட ஒரு குறிப்பு, ஆனால் அவரது மாணவர் கி.வா.ஜ அவர்கள் என் ஆசிரியப்பிரான் நூலில் குறிப்பிடும் ஒன்று இத்திருமடத்தில் நிகழ்ந்தது.

1920ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 20ம் தேதி அப்பொழுது மடத்தின் ஆதீனகர்த்தராக இருந்த அம்பலவாண தேசிகர் மறைந்தார். அவரது மறைவுக்குப் பின்னர் மடத்தின் தம்பிரான்களில் ஒருவரான காறுபாறு வைத்தியநாதத் தம்பிரான் ஆதீனத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். இந்த தலைமைப் பொறுப்பு ஏற்கும் விழாவில் உ.வே.சா அவர்கள் நேரில் சென்று கலந்து கொண்டார். மடத்தின் வழக்கப்படி அம்பலவாண தேசிகர் என்ற பட்டப்பெயருக்குப் பின் பதவி ஏற்போர் ஏற்கும் ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகர் என்ற திருப்பெயர் அவருக்குச் சூட்டப்பட்டது.

இந்த நிகழ்வு நடந்த காலகட்டத்தில் திருமடத்தின் தலைமைப்பீடம் தனக்கே வேண்டும் என்று அதே மடத்தைச் சார்ந்த தம்பிரான் ஒருவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கின்றார். அந்தச் சமயத்தில் சில கலவரங்கள் திருவாவடுதுறை ஆதீனத்தில்  நிகழ்ந்ததாகவும் அறிய முடிகின்றது. இந்தச் சூழலில் புதிதாகப் பதவி ஏற்றுக் கொண்ட சுப்பிரமணிய தேசிகர் ஆதீனத்தில்  தனக்குத் துணையாக ஒருவர் இருக்க வேண்டும் என்று விரும்பி உ.வே.சா அவர்களை உடன் இருக்கும் படி கேட்டுக் கொண்டதாக அறியமுடிகின்றது. ஆக, ஏப்ரல் 1920 முதல் உ.வே.சா அவர்கள் திருவாவடுதுறை மடத்தில் தொடர்ந்து சில மாதங்கள் தங்கியிருக்கின்றார். அந்தச் சமயத்தில் மடத்தின் சரசுவதி மகாலில் இருந்த ஓலைச்சுவடிகளை மீண்டும் கண்டு ஆராயும் வாய்ப்பு அவருக்கு வாய்த்தது. அச்சமயத்தில் உ.வே.சா தான் மட்டும் என்றில்லாமல் தனது மாணாக்கர்கள் சிலரையும் அங்கு வரச் செய்து உடன் இருக்கும் படி ஏற்பாடுகள் செய்து அங்கே தமிழ்ப்பாடம் நடத்தத் தொடங்கியிருக்கின்றார். உ.வே.சா மடத்திலேயே இருந்ததால் தலைமைப் பீடத்திற்கு ஆசைப்பட்டோர் மடத்தில் கலவரங்களை நிகழ்த்தாமல் அமைதியாகிச் சென்றுவிட்டனர். திருவாவடுதுறை மடத்திலேயே அவரது தமிழ்ப்பணி இக்காலகட்டத்தில் வாசிப்பு, சுவடி ஆராய்ச்சி, பாடம் போதித்தல் இறைவழிபாடு என்று கழிந்து கொண்டிருந்தது.

அதே ஆண்டு நவராத்திரியின் போது உ.வே.சா ஆதீனத்தின் சார்பில் அங்கு ஒரு பள்ளிக்கூடத்தை ஆரம்பித்தார். அப்போது அதற்குச் 'சுப்பிரமணிய தேசிகர் கலாசாலை' என்ற பெயர் வழங்கப்பட்டது. அங்குத் தமிழ்ப்பாடசாலையும் தேவாரப் பாடசாலையும் தொடங்கி நடத்தப்பட்டன. மடத்தில் படிக்கும் மாணவர்களுக்குத் திருமடமே உடையும் உணவும் வழங்கி ஊக்குவித்தது.

இதற்கு அடுத்த ஆண்டு, 1921ல் மாசி மாதத்தில் நிகழ்ந்த கும்பகோண மகாமகப் பெருவிழாவில் ஆதீனகர்த்தரும் உ.வே.சாவும் கலந்து கொண்டனர். அங்கு நடத்த இலக்கிய நிகழ்வுகளை உ.வே.சா முன்னின்று நடத்தும் வகையில் ஆதீனகர்த்தர் ஏற்பாடுகளைச் செய்து தந்திருந்தார்.

அதே கால கட்டத்தில் சென்னையில் உ.வே.சாவின் சிலப்பதிகாரம், மணிமேகலை, பத்துப்பாட்டு ஆகிய நூல்களின் இரண்டாம் பதிப்பு அச்சாகி வெளிவந்தன. நீண்ட இடைவெளியில் முன்னர் பதிப்பித்தபோது விடுபட்ட செய்திகளையும் தகவல்களையும் விளக்கங்களையும் இந்த இரண்டாம் பதிப்பில் உ.வே.சா இணைத்திருந்தார்.

இதற்கு அடுத்த ஆண்டு, 1922 ஜனவரி மாதத்தில் அப்போதைய காலணித்துவ இந்தியாவை ஆட்சி செய்த  ஆங்கிலேய அரசு,  புலவர்களைச் சிறப்பிக்கும் ஒரு நிகழ்வினை 13ம் தேதி ஏற்பாடு செய்திருந்தது. அதில் கலந்து கொள்ள இங்கிலாந்தின் இளவரசர் எட்வர்ட் இந்தியா வந்திருந்தார். தமிழ்ப் புலவர்களும் வடமொழிப் புலவர்களும் அந்த நிகழ்வில் பரிசளித்துச் சிறப்புச் செய்யப்பட்டனர். அப்படிச் சிறப்பு செய்யப்பட்டவர்களில் உவே.சா அவர்களும் ஒருவர். இந்த நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்புப் பெறுவதற்காக மெட்ராஸ் புறப்பட்டார் உ.வே.சா. இந்தச் சிறப்பு மிக்க நிகழ்ச்சிக்கு அணியவேண்டிய பிரத்தியேக தலைப்பாகை, அங்கி ஆகியவற்றை அணிந்து கொண்டு தமக்கு அளிக்கப்பட்ட சிறப்பினைப் பெற்றுக் கொண்டார்.  மெட்ராசில் தொடர்ச்சியாக சில நாட்கள் தங்கியிருந்தபோது அதிர்ச்சி தரும் செய்தி அவருக்குத் திருவாவடுதுறை மடத்திலிருந்து கிட்டியது. ஈராண்டுகளுக்கு முன்னர் பதவி ஏற்றுக் கொண்ட ஆதீனகர்த்தர் சுப்பிரமணிய தேசிகர் உடல் நலக்குறைவு ஏற்பட்டுக் காலமானார் என்பது தான் அந்தத் துயரச் செய்தி. ஆதீனகர்த்தர் எழுதி உ.வே,சாவும் சாட்சிக் கையெழுத்து இட்டு வைத்துச் சென்ற உயிலின் படி ஆதீனத்தில் ஆசிரியராக இருந்த ஸ்ரீ வைத்தியலிங்க தேசிகர் அடுத்த ஆதீனத் தலைவராகப் பொறுப்பேற்றுக் கோண்டார்.

திருமடத்தில் முன்னர் ஏற்பட்ட குழப்பங்கள் மீண்டும் தலைதூக்கின. புதிதாக 1922ம் ஆண்டு மடத்தின் தலைமைப்பீடத்தை ஏற்றுக் கொண்ட  ஆதீனகர்த்தர் காலத்தில் இந்தக் குழப்பங்கள் மேலும் பெருகவே, தம்மோடு வந்து மடத்தில் தங்கியிருந்து உதவுமாறு ஆதீனகர்த்தர் கேட்டுக் கொள்ளவே உ.வே.சாவும் மீண்டும் மெட்ராசிலிருந்து புறப்பட்டு திருவாவடுதுறை சென்று அங்கு மடத்தில் தங்கியிருந்தார் என்பது தெரிகிறது. அங்கே நிகழ்ந்த பூசல்களும் பிரச்சனைகளும் குறைவதாக இல்லை. உ.வே.சா அவர்களின் சீரிய தமிழ்ப்பணி தொடர முடியாத நிலைக்கு உள்ளானது.    இதே வகையில் தொடர்வது தமது பதிப்புப் பணியைப் பாதிக்கும் என முடிவெடுத்து உ.வே.சா ஆதீனகர்த்தரிடம் உத்தரவு பெற்றுக் கொண்டு மெட்ராசுக்குத் திரும்பினார். தன் பதிப்புப் பணிகளில் மீண்டும் கவனத்தைச் செலுத்தத் தொடங்கினார். அப்போது சீவக சிந்தாமணியின் 3ம் பதிப்பு பணிகள் தொடங்கி அதே ஆண்டு 3ம் பதிப்பும் வெளிவந்தது.

ஆரம்பமும் முடிவும் இல்லாத கொங்குவேளிர் இயற்றிய பெருங்கதை நூலின் சுவடிப்பிரதி ஒன்று உ.வே.சாவிற்கு முன்னர் ஏடு தேடச் சென்ற சமயத்தில் கிடைத்திருந்தது. அதனை ஆராய்ந்து பதிப்பிக்கும் பணியைத் தொடங்கினார். இதனைப் பதிப்பிப்பதற்காக உ.வே.சா பெரும் உழைப்பைப் போடவேண்டியதாக இருந்தது. தயாரித்த ஒரு பிரதியை ராவ்பகதூர் கனகசபைப்பிள்ளையின் ஒரு சொற்பொழிவுக்காக வழங்கினார்.  ஆனால் அப்பெரியவர் எதிர்பாராதவிதமாக இறந்து போனமையால் அப்பிரதி இவர் கைக்கு வராமலேயே போனது. குறிப்பெழுதி தயாரித்த ஏட்டுச்சுவடியின் படி காணாது போனது உ.வே.சாவிற்கு மிகுந்த மன வருத்தத்தை ஏற்படுத்தியது. மீண்டும் பல இடங்களில் தேடியும் வேறு படிகள் இந்த நூலுக்குக் கிடைக்கவில்லை. கிடைத்த ஒரு சுவடியை மீண்டும் ஆய்ந்து குறிப்பெழுதி முகவுரையும் சேர்த்து 1924ம் ஆண்டில் அது வெளியீடு கண்டது. இந்த நூலைத் தனது ஆசிரியர் மீனாட்சி சுந்தரம் பிள்ளைக்கு உரிமையாகிக்கியிருந்தார். 18.2.1924ம் தேதி இந்த நூல் வெளியீடு கண்டது.


தொடரும்

சுபா

Sunday, December 24, 2017

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 144

வித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் 19ம் நூற்றாண்டின் இணையற்ற தமிழறிஞராக விளங்கியவர். இன்று அவர் பெயரைக் குறிப்பிட்டுச் சொன்னால் எத்துணை பேருக்கு அவரைத் தெரியுமோ, என்பது பெரிய கேள்விக்குறியே.

உ.வே.சாவின் வாழ்வில், தன் இளம் வயதில் அவர் கல்வி கற்க ஆரம்பித்த நாட்களில் மகாவித்வானைப் பற்றி கேள்விப்பட்டு அவரிடமே கல்வி கற்க வேண்டும் என்ற பேராவலுடன் பெருங்கனவினை மனதில் வளர்த்து வந்தார். அவரது கனவு மெய்ப்பட்டு வித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையிடம் தமிழ்க்கல்வி பாடம் படிக்கும் வாய்ப்பு கிட்டியது. ஆறு வருடங்கள் தான் அவருக்கு இவர் மாணவராக இருந்தார் என்றாலும் உ.வே.சாவின் சிந்தனையை முழுமையாக ஆர்ப்பரித்தவர் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம்பிள்ளை அவர்கள் என்றே சொல்லத் தோன்றுகின்றது. ஏனெனில், தன் சுயசரிதத்தை எழுதுவதற்கு முன்னர், மகாவித்துவானின் வரலாற்றை இரண்டு பகுதிகளாக எழுதி முடித்தார் உ.வே.சா.  அதோ தன் சரிதத்திலும் ஏறக்குறை பெரும்பகுதிகளில் மகாவித்துவான் பற்றிய தகவல்களை வழங்கியிருக்கின்றார் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

உ.வே.சா பதிப்பித்த சிலப்பதிகாரம், சீவகசிந்தாமணி, பத்துப்பாட்டு, மணிமேகலை போன்ற நூல்களைத் தமிழறிஞர்கள் பலர் பாராட்டி சொல்லும் போது, எப்போதும் உ.வே.சா தம் ஆசிரியராகிய மகாவித்வான் மீனாட்சிசுந்தரம்பிள்ளையவர்களைப் போற்றிப்புழ்வார், என உ.வே.சா அவர்களின் மகன் கலியான சுந்தரம் அவர்கள் என் சரித்திரம் நூலுக்கு வழங்கிய முகவுரையில் குறிப்பிடுகிறார். தமிழ்க்கல்வியினால் தமக்கு ஏற்பட்டுவரும் பெருமைக்கெல்லாம் அவரே காரணம் என்று தன் நண்பர்களிடமெல்லாம் சொல்லி மகிழ்ந்திருக்கின்றார் உ.வே.சா.

இத்தகைய புகழுரைகளைக் கேட்ட பலரும் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களின் வரலாறு நூலாக வெளிவந்தால் அது பலருக்கும் பயன்தரும் எனப் பல முறை சொல்லிக் கொண்டிருக்க, அந்த எண்ணம் உ.வே.சா அவர்களுக்கு மனதில் வலுப்பெற்று வந்தது.

1930ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஒரு நாள் சென்னையில் தனது தியாகராச விலாசம் வீட்டின் மாடியிலிருந்து படிகளில் நடந்து வரும் பொழுது கால் தடுக்கி கீழே விழுந்து விட்டார் உ.வே.சா. காலில் அடி நன்றாகப் பட்டுவிட படுத்தப் படுக்கையாகி விட்டார். சில நாட்கள் ஆகியும் குணமாகாத நிலையில் அவரது இல்லத்திலேயே அவருக்கு சத்திரசிகிச்சை நடந்தது. அதன் பின்னர் அவர் அதிகமாகப் படிக்கக்கூடாது, ஓய்வுதான் தேவை என மருத்துவர்கள் சொன்னாலும் அவரால் இந்தக் கட்டளைகளை ஏற்க முடியவில்லை. படுக்கையில் இருந்த போது அவருக்கு ஆசிரியரின் நினைவு மனதில் எழுந்தவண்ணம் இருந்தது. மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் வாழ்க்கைச் சரித்திரத்தை முடிக்காமல் தனது சரித்திரம் முடிந்து விடுமோ என்ற அச்சம் வந்திருக்குமோ எனத் தனது நூலான என் ஆசிரியப்பிரானில் குறிப்பிடுகின்றார் உ.வே.சாவிடம் தமிழ்க்கல்வி பயின்ற கி.வ.ஜகந்நாதன் அவர்கள். தான் மகாவித்துவான் பற்றி எழுதிவைத்திருந்த குறிப்புக்கட்டை எடுத்துவரும்படி தமக்கு கட்டளையிட்டு  தான்   உடல் நலிவுற்றுக்கிடந்த அவ்வேளையில் அவரது சரிதத்தை எழுதும் பணியைத் தொடங்கியதைக் குறிப்பிடுகின்றார். உ.வே.சா சொல்லச் சொல்ல, அந்த நூல்களை எழுதியவர் கி.வ.ஜகந்நாதன் தான். இப்படித்தான் அந்த இரு நூல்களும் பிறந்தன.

முதல்பாகம் 1933ம் ஆண்டும் இரண்டாம் பாகம் 1934ம் ஆண்டும் என வரிசையாக ஓராண்டு இடைவெளியில் இந்த நூல்கள் பிறந்தன. தமிழ் நூல்கள் அச்சுப்பணியாக்கம் போல இந்த இரு வாழ்க்கை வரலாற்று நூல்களும் உ.வே.சா அவர்களின் சிறந்த படைப்புக்களாகத் திகழ்கின்றன.

மீனாட்சிசுந்தரம்பிள்ளையவர்களின் சரிதத்தை எழுதத் தொடங்கிய பின்னர் 1931ம் ஆண்டு டிசம்பர் மாத வாக்கில் சென்னை மயிலாப்பூரிலுள்ள 'லா ஜர்னல்' பத்திரிக்கை நிறுவனத்தின் உரிமையாளர் நாராயணசாமி ஐயர் அவர்கள் தம்முடைய உறவினர் இராமச்சந்திர ஐயருடன் உ.வே.சா அவர்களைப் பார்க்க வந்திருக்கின்றார். 1932 ஜனவரி தொடங்கி 'கலைமகள் ' என்ற பெயரில் ஒரு பத்திரிக்கை ஆரம்பிக்கப்போவதாகக் குறிப்பிட்டு அதில் உ.வே.சாவின் கட்டுரைகள் இடம்பெறவேண்டும் என்று குறிப்பிட்டு கேட்டுக் கொண்டதாக கி.வ.ஜா அவர்கள் தன் நூலில் குறிப்பிடுகின்றார். 'கலைமகள் ' என்ற பெயரிலேயே அதற்கு முதல் கட்டுரையை உ.வே.சா அவர்கள் எழுதித்தந்திருக்கின்றார். இதன் தொடர்ச்சியாக கலைமகள் பத்திரிக்கையில் கி.வா.ஜா அவர்கள் முதலில் துணை ஆசிரியராகச் சேர்ந்து பின்னர் மூன்று ஆண்டுகளில் கலைமகள் பத்திரிக்கையில் ஆசிரியர் பொறுப்பை ஏற்றுக்கொண்டிருக்கின்றார். பத்திரிக்கையாக மட்டுமன்றி கலைமகள் பிரசுரத்தின் வழியாகத் தமிழ் நூல்களை வெளியிட வேண்டும் என்ற உ.வே.சா அவர்களின் ஆலோசனையின் படி சில தமிழ் நூல்களும் வெளியிடப்பட்டமையை கி.வா.ஜா வின் எழுத்துக்கள் மூலம் அறிய முடிகின்றது.

உ.வே.சா வின் வாழ்க்கை வரலாற்றின் முதல் 43 ஆண்டுகளின் நிகழ்வினை படம்பிடித்துக் காட்டுவது போல விவரிப்பது 'என் சரித்திரம்'. அவரது மறைவுக்குப் பின்னர் உ.வே.சாவின் வரலாற்றில் விடுபட்ட செய்திகளைத் தொகுத்து 'என் ஆசிரியப்பிரான்' என்ற பெயரிட்டு நூலாக வெளியிட்டவர் கி.வா.ஜா என்பது குறிப்பிடத்தக்கது.

உ.வே.சா அவர்கள் தனது சரிதத்தில் குறிப்பிடாவிட்டாலும் கூட அவரது பணிகளில் சிறந்த படைப்புக்களுள் ஒன்றாகத் திகழ்வது அவரது குறுந்தொகை அச்சுப்பதிப்பாக்கமாகும். குறுந்தொகை எட்டுத் தொகை நூல்களுள் இரண்டாவதாக இடம்பெறுவது.

உ,வே.சா வெளியிடுவதற்கு முன்னரே திருக்கண்ணபுரம் திருமாளிகைச் சௌரிப்பெருமாளரங்கனார் என்ற தமிழறிஞர் குறுந்தொகையை 1915ம் ஆண்டு அச்சுப்பதிப்பாக வெளியிட்டிருந்தார். சங்க நூல்களின் மரபு தெரியாமல் ஏதோ ஒருவகையில் உரையெழுதி அச்சிடப்பட்ட பதிப்பு அது. அச்சில் குறுந்தொகை வந்துவிட்டதால், தான் அதே பணியை செய்ய வேண்டாம் என உ.வே.சா அவர்கள் நினைத்திருந்தார். ஆனாலும் அந்தப் பதிப்பில் பல செய்திகள் விடுபட்டிருந்தமையைக் கருத்தில் கொண்டு தானே குறுந்தொகைக்கு உரையெழுதிப் பதிப்பிக்க வேண்டும் என பணிகளைத் தொடங்கி விட்டார். குறிப்புக்களை எழுதி விரிவான உரையைத் தயாரித்தார். நச்சினார்க்கினியரும், பேராசிரியரும் ஏற்கனவே எழுதிய உரைகளை எங்குத் தேடியும் உ.வே.சாவிற்கு அவை கிட்டவில்லை. அந்தக் காலகட்டத்தில் தான் எதையோ இழந்து விட்டது போன்ற நிலையில் உ.வே.சா இருந்ததாக கி.வா.ஜா குறிப்பிடுகின்றார். பொக்கிஷம் போன்ற இலக்கியங்களைப் போற்றத்தெரியாத மூடர்களை எண்ணி அவர் மனம் வருந்தியிருக்கும் போல..!

முதுமையினாலும் உடல் தளர்ச்சியினாலும் அவரால் வேகத்துடன் பல காரியங்களைச் செயல்படுத்த இயலவில்லை. ஆயினும் இந்த அச்சுப்பதிப்பின் எழுத்துப் பணிகளில் அவருக்குத் துணையிருந்து பெரிதும் உதவியவர் கி.வா.ஜா. இதனைக் குறுந்தொகை நூலின் முகவுரையில் உ.வே.சா பதிகின்றார். சென்னை பல்கலைகழத்தின் பொருளுதவியுடன், கேணி அச்சுக்கூடத்தில் அச்சிடப்பட்டு உ.வே.சாவின் உரையுடன் கூடிய குறுந்தொகை, 1937ம் ஆண்டு வெளிவந்தது.



தொடரும்..
சுபா

Saturday, December 23, 2017

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 143

இன்று இப்பதிவினை எழுதும் போது என் மனம் கனக்கின்றது.

என் சரித்திரம் நூலில், தனது வாழ்க்கையில் தான் செய்த தமிழ்ப்பணியில் மிக முக்கியமானதொன்றாக உ.வே.சா அவர்கள் கருதும் மணிமேகலை பதிப்பைப் பற்றியும், அதன் தொடர்ச்சியாக அதன் வெளியீட்டையும், அதன் பின்னர் மணிமேகலைக்குத் தமிழறிஞர்கள் மத்தியில் கிடைத்த ஏகோபித்த வரவேற்பினையும் விவரிக்கும் அத்தியாயம் 122. இந்த அத்தியாயத்தை அவர் எழுதி அனுப்பிய பின்னர் இத்தொடர் தொடரப்படவில்லை. உ.வே.சா அவர்கள் 28.4.1942 அன்று மறைந்தார்கள்.

கடந்த 4 ஆண்டுகளாக முடிந்த வரை வாரம் ஒன்று என்றும் பல வேளைகளில் எனது அலுவலகப் பணிகளாலும் தமிழ் மரபு அறக்கட்டளைப் பணிகளாலும் ஏற்படும் நீண்ட இடைவெளிக்குப் பிறகும் உ.வே.சா அவர்கள் எழுதிய என் சரித்திரம் நூலை வாசித்து, அவர் இந்த நூலில் தந்துள்ள செய்திகளைச் சிந்தித்து அவற்றுடன் நான் உலா செல்லும் போது என் மனதில் தோன்றும் கருத்துக்களை இத்தொடரின் வழி பதிந்து வந்துள்ளேன்.

இந்த என் சரித்திரம் எனும் நூல் தனிச்சிறப்பு கொண்டது. ஏனெனில் உ.வே.சா அவர்கள் தனது வாழ்க்கைப் பயணத்தில் மிக முக்கியமானவையாக மனதில் கருதி, தமிழ் உலகுக்கு விட்டுச் செல்ல வேண்டும் என நினைத்த பகுதிகள் அனைத்துமே தமிழ்க்கல்வி தொடர்பானவையே. அங்கொன்றும் இங்கொன்றுமாக மட்டுமே நிகழ்வுகளின் வரலாற்றுக் குறிப்பு போலத் தனது சொந்த குடும்பத்தின் செய்திகளைக் குறிப்பிடுகின்றார். இவற்றை நீக்கினால் நூல் முழுக்க மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையும், திருவாவடுதுறை சைவமடமும், ஓலைச்சுவடிகளும், தமிழ் ஆய்வுகளுமே இந்தச் சரிதத்தை நிறைத்திருக்கின்றன.

2014ம் ஆண்டு மே மாதம் ஒரு குறுகிய கால விடுமுறைக்காக கனேரிய தீவுக்கூட்டத்தில் உள்ள தீவு ஒன்றிற்கு விடுமுறை சென்றிருந்தபோது வாசிக்க வேண்டும் என என் சரித்திரம் நூலைக் கையில் எடுத்துச் சென்று அந்த விடுமுறையில் முழுமையாக இரண்டாம் முறையாக வாசித்து முடித்தேன். சில நேரங்களில் வாசிக்கும் போது நான் அவரது ஒவ்வொரு சொற்களுக்குள்ளும் இடைவெளி விடாது இணைந்து நடப்பது போல உணர்ந்திருக்கின்றேன். சில பகுதிகளை வாசித்தபோது என் சுய கட்டுப்பாட்டையும் மீறி கண்களில் நீர் வழிந்தோடுவதை உணர்ந்திருக்கின்றேன் தடுக்க மனமில்லாமல்!

நான் வாசித்தது மட்டும் போதாது! இன்றைய ஆய்வுலகமும், இளைய தலைமுறையும் இந்த நூலை வாசிக்க வேண்டும் என்ற எண்ணம் இதனை வாசித்து முடித்தபோது எனக்குள் எழுந்ததன் விளைவாகத்தான் இந்தத் தொடரை எழுத வேண்டும் என்ற எண்ணம் என் மனதில் உதித்தது. மே மாதம் 14ம் தேதி 2014ம் ஆண்டு இத்தொடரின் முதல் பதிவினை நான் எழுதி தமிழ் மரபு அறக்கட்டளையின் இணைய ஊடகமான மின்தமிழில் பகிர்ந்து கொண்டேன். அதில் உள்ள சில பத்திகளை, இவை வாசகர்களுக்கு உதவும் என்ற நோக்கத்தில் இந்தப் பதிவில் மீள்பார்வைக்காக மீண்டும் பதிகிறேன்.

என் சரித்திரம் என்னும் இந்நூல் மகாமகோபாத்தியாய தாக்ஷிணாத்ய கலாநிதி டாக்டர் உ.வே.சாமிநாதையர் எழுதிய தன்வரலாறு ஆகும். இதில் 1855ஆம் ஆண்டு முதல் 1898ஆம் ஆண்டு வரை அவருடைய வாழ்வில் நிகழ்ந்தவை பதியப்பட்டுள்ளன. இது ஆனந்த விகடன் இதழில் 6-1-1940 ஆம் நாள் முதல் தொடர்ந்து 28-4-1942ஆம் நாள் அவர் காலமாகும் வரை வெளிவந்தது. இதில் அவர் தமிழ் கற்ற வரலாறு, தமிழ் நூல்களைப் பதிப்பித்த வரலாறும் பதிவுசெய்யப்பட்டு உள்ளன.

என் சரித்திரம் உருவான விதத்தையும் தெரிந்து கொள்வது நமக்குப் பயனளிக்கும் அல்லவா?

1935ம் ஆண்டு மார்ச்சு 6ம் தேதி உ.வே.சா அவர்களின் 80ம் ஆண்டு பூர்த்தி சதாபிஷேகத்தின் போது கலந்து கொண்ட சில நண்பர்களின் எண்ணத்தில் உ.வே.சா அவர்கள் தனது சுயசரிதத்தை எழுத வேண்டும் என்ற கருத்து உதித்திருக்கின்றது. உ.வே.சா அவர்கள் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களின் சுயசரிதத்தை எழுதி வெளியிட்டிருந்தார்கள். பிள்ளையவர்களின் சரித்திரமே இவ்வளவு அருமையாக வந்திருக்கின்றதே. அவரது சுய சரித்திரத்தையும் உ.வே.சா அவர்கள் எழுத வேண்டும் என்ற நண்பர்களின் நோக்கத்தை உ.வே.சா அவர்கள் ஏற்றுக் கொண்டார்கள். நண்பர்களின் கருத்தை ஏற்றுக் கொண்டாலும் குறுந்தொகை பதிப்பிப்பதில் தனது கவனத்தைச் செலுத்தியதால் இந்த முயற்சி தொடங்கப்படாமலேயே இருந்தது. ஆனாலும் அவ்வப்போது நண்பர்கள் பலர் இவருக்கு ஞாபகம் ஊட்டத் தவறவில்லை.

ஒரு நூலாக அமைத்து வெளியிட நீண்ட காலமாகும் என்பதால் ஒரு பத்திரிக்கையில் வாராவாரம் வரும் வகையில் பதியலாமே என்ற எண்ணம் நண்பர்களுக்கும் இவருக்கும் தோன்றியிருக்கின்றது. அப்போது ஆனந்த விகடன் பத்திரிக்கை பிரதம ஆசிரியராக இருந்த ஸ்ரீ ரா.கிருஷ்ணமூர்த்தி ஐயரவர்கள் ஸ்ரீ எஸ்.எஸ்.வாசன் அவர்களுடன் வந்து உ.வே.சா அவர்களுடன் பேசி வாரந்தோறும் ஒவ்வொரு அத்தியாயம் வரும் வகையில் ஏற்பாடு செய்திருக்கின்றனர். அதன் அடிப்படையில் 1940 ஜனவரி முதல் சுயசரிதை எழுதும் பணி இவரது 85ஆவது அகவையில் தொடங்கியது. முதல் அத்தியாயம் 6.1.1940 அன்று ஆனந்த விகடனில் வெளிவந்தது.

இந்தத் தொடர் வாரந்தோறும் ஒரு அத்தியாயம் என்ற வகையில் 1942ம் ஆண்டு மே மாதம் வரையில் சுயசரிதம் என்ற தலைப்பில் வெளிவந்தது. 28.4.1942 அன்று உ.வே.சா அவர்கள் மறைந்தார்கள். உ.வே.சா அவர்கள் முன்னரே குறிப்புக்கள் எடுத்து வைத்துக் கொள்ளும் பழக்கம் உள்ளவராதலால் அவரது எழுத்தில் இறுதியாக வந்த அத்தியாயம் மே மாதத்துடன் முற்றுப்பெறாமலேயே நிறைவடைந்தது. ஆக 122 அத்தியாயங்களுடன் என் சரித்திரம் முற்றுப் பெறாத சரித்திரமாகவே நம் கையில் தவழ்கின்றது. 1942க்குப் பின்னர் பல தடங்கல்களைத் தாண்டி 1950ம் ஆண்டு உ.வே.சா அவர்களின் திருக்குமாரன் திரு.சா.கலியாணசுந்தர ஐயர் அவர்களால் நூலாக வெளியிடப்பட்டது.

தொடரும்..

சுபா

Thursday, December 21, 2017

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 142

தனது முந்தைய அச்சுப் பதிப்பு நூல் வெளியீடு போலன்றி நூலுக்கு உரையையும் எழுதி வெளியிட்ட புதிய முயற்சியாய் மணிமேகலை அச்சுப்பதிப்பாக்கம் இருந்தது. எளிய உரை நடையில் விளக்கம் என அமைத்திருந்தமையினால் மணிமேகலை அக்காலத்து தமிழறிஞர்கள் பலரது கவனத்தை ஈர்த்தது. தமிழகத்தின் பல ஊர்களிலிருந்து வாழ்த்துகள் வந்து குவிந்த வண்ணமிருந்தன. நூலின் அமைப்பு முறை வாசிப்போருக்குப் பொருளை மிக எளிமையானதாக ஆக்கியிருந்தது. பல கூடுதல் தகவல்களையும் விரிவாக உ.வே.சா நூலில் இணைத்திருந்தார். இவையெல்லாமே இந்த நூலை வாசகர்கள் மத்தியில் ஈர்ப்பனவாக அமைந்திருந்தது.

இந்த நூலில் புறத்திரட்டு நூல்களை ஆராய்ந்தபோது அதில் கிட்டிய குண்டலகேசி காப்பியத்தின் செய்யுட்களையும் தாம் இந்த நூலில் சேர்த்தமையைப் பற்றி உ.வே.சா குறிப்பிடுகின்றார். ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்று குண்டலகேசி. இது பௌத்த மதச் சார்பு கொண்ட ஒரு இலக்கியம். இதனை நாதகுத்தனார் என்ற தமிழ்ப்புலவர் இயற்றினார் என அறிகின்றோம். இன்று இதன் 19 செய்யுட்கள் மட்டும் அடங்கிய பகுதிகள் மட்டுமே நமக்குக் கிடைத்திருக்கின்றன. இந்த நூல் முழுமையாகக் கிடைக்காமல் போனது நமது துரதிர்ஷ்டமே. ஓலைச்சுவடிகளை முறையாகப் பாதுகாக்காது போனமையினால் தமிழுக்கு ஏற்பட்ட இழப்பு பல. இது ஈடுகட்டவே முடியாத இழப்பு.

குண்டலகேசியின் செய்யுட்கள் சிலவற்றை விளக்கக் குறிப்பு பகுதிகளில் மணிமேகலை பதிப்பில் உ.வே.சா இணைத்திருந்தார். இந்த முயற்சிகளினால் குண்டலகேசி என்று ஒரு தமிழ் பௌத்த காப்பியம் ஒன்று பௌத்த முனிவர்களால் இயற்றப்பட்டிருந்தது என்பதை இன்று நம்மால் அறிந்து கொள்ள முடிகின்றது.

ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றாகக் குறிப்பிடப்படும் வளையாபதியின் நிலையோ இன்றும் கேள்விக்குறிதான். ஏனெனில் உ.வே.சா அவர்கள் ஏடுதேட பல ஊர்களுக்குச் சென்று ஓலைக்கட்டுக்களை அலசிய காலகட்டங்களில் எங்கோ ஓரிடத்தில் தாம் வளையாபதியின் சில ஏடுகளைப் பார்க்க நேரிட்டதாகவும் பின்னர் அதனை மீண்டும் தேடத் துணிகையில் அது அவருக்குக் கிடைக்காமலேயே போய்விட்டது என்றும் அறியமுடிகின்றது. இதனை உ.வே.சா அவர்களின் மாணாக்கர் கி.வா.ஜகந்நாதன் அவர்கள் தனது என் ஆசிரியப்பிரான் என்ற நூலில் குறிப்பிடுகின்றார். இது கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்று. இந்தியாவின் பல நூலகங்களிலும் இலங்கையின் நூலகங்களிலும் மட்டுமன்றி ஐரோப்பாவின் பல நூலகங்களில் உள்ள தமிழ் ஓலைச்சுவடிகளைத் தேடிப் பார்த்தால் வளையாபதியின் ஒரு பிரதி எங்காவது கிட்டுமோ என்ற ஆதங்கம் இவ்வேளையில் மனதில் எழத்தான் செய்கின்றது. இந்த முயற்சியைக் கைவிடாது தொடர வேண்டியது நம் கடமை.


"தமிழ்மகள் தன் மணிமேகலையை இழந்திருந்தாள். அதனைக் கண்டெடுக்கும் பேறு எனக்கு வாய்த்தது. ஆயினும், அதிற் பதித்திருக்கின்ற ரத்தினங்களின் தன்மை இன்னதென்று முதலில் எனக்குத் தெரியவில்லை. அதனை ரங்காசாரியார் அறிவித்தார். மணிமேகலை மீட்டும் துலக்கப் பெற்றுத் தமிழ்மகளின் இடையை அலங்கரித்து நிற்கின்றது." என உ.வே.சா அவர்கள் கலைமகள் பத்திரிக்கையில் 'மணிமேகலையும் மும்மணியும்' என்ற தலைப்பில் எழுதி கட்டுரையில் குறிப்பிடுகின்றார்.

மணிமேகலை அச்சு வெளியீட்டினால் உ.வே.சாவிற்கு வந்து குவிந்த புகழ்மாலைகளுக்கிடையே அவருக்கு 'பௌத்த சமயப் பிரபந்த பிரவர்த்தனாசாரியார்' என்ற பட்டமும் கிடைத்தது சுவாரசியமானதொரு கதை. ஆனந்தன் என்ற பெர் கொண்ட ஒருவர் விவேக திவாகரன் என்ற அன்றைய பத்திரிக்கையில் உ.வே.சா அவர்களை மணிமேகலையைப் பிரசுத்தமையைப் பாராட்டி இந்தச் சிறப்புப் பட்டத்தையும் வழங்குவதாகக் குறிப்பிட்டு எழுதியிருந்தார். இந்தச் செய்தியை வாசித்து தன் சக நண்பர்களுக்குக் கூறி மகிழ்ந்ததோடு இப்பட்டத்தை ஒரு பெட்டியில் வைத்துப் பூட்டிப் போற்றி வந்ததாக உ.வே.சா குறிப்பிடுகின்றார்.

முன்னர் சிந்தாமணியைப் பதிப்பித்த காலத்தில் ஒரு ஜைனப் பெண்மனியார் உ.வே.சா அவர்களை ஒரு சமணத்தமிழ் அறிஞரோ எனப்பாராட்டி பவ்ய ஜீவன் என சிறப்புடன் அழைத்தார். மணிமேகலை அச்சுப்பதிப்புப் பணியை வியந்து ஒரு பௌத்த அன்பர் ஒரு சிறப்புப் பட்டம் வழங்கி மகிழ்ந்தார். மதங்களைக் கடந்ததுதான் தமிழ்ப்பணி. அதனை உ.வே.சா அவர்கள் அன்று செய்தார்கள். இன்று நிலையோ வேறாகத்தான் இருக்கின்றது!

ஒரு மதத்தை தீவிரமாகப் பின்பற்றுவோர் வேறு பிற சமயத்து இலக்கியங்களைப் பற்றி ஒரு சிறிதும் அறிந்து கொள்ள ஆர்வம் காட்டுவதில்லை. தான் சார்ந்துள்ள சமயமே எல்லா உண்மைகளையும் சொல்வதாகக் கருதிக் கொண்டு ஏனைய பிற மதங்களில் உள்ள நூல்களை குறைந்த ஞானம் கொண்ட நூலாக மதிப்பிடும் தன்மை கொண்டவர்களாக இருக்கின்றனர். இத்தகையோர் பிற மதங்களில் உள்ள நூல்களை ஆராய்ந்து பார்க்கவும் துணியாதவர்களாக இருக்கின்றனர். தனக்குத் தெரிந்தவை மட்டுமே உண்மை என்றும் தாம் நம்பும் தத்துவங்களே சத்தியமென்றும் பிறமதங்கள் சார்ந்தவை எதைனையும் துச்சமென மதிப்பதும் இத்தகையோர் போக்காக உள்ளது.

மனிதர்களால் தோற்றுவிக்கப்பட்டவைதான் மதங்கள். அவற்றில் உள்ள குறைகளும் நிறைகளும் மனிதர்களையே சாரும். பல சமய தத்துவங்களையும் வாசித்து, மதம் என்னும் வரையறுக்கப்பட்ட எல்லைகள் கொண்ட ஒரு சிறிய வட்டத்திலிருந்து வெளியேறுவதே சிந்தனை சுதந்திரத்திற்கு அடிப்படையாக அமையும். தத்துவக்கோட்பாட்டை அலசுவதற்குச் சுதந்திரத்தைக் கடைபிடிக்கும் போக்கு வளர வேண்டும் . அதற்கு பிற மதங்களை அறிந்து கொள்ள அச்சமில்லாத மன திடம் தான் அடிப்படையே!

தொடரும்..

சுபா

Tuesday, December 19, 2017

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 141

உ.வே.சா அவர்கள் சிவவழிபாட்டினைக் குடும்பப்பின்னனியாகக் கொண்டவர். அவரது ஆசிரியர் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களிடமும் பின்னர் திருவாவடுதுறை ஆதீனகர்த்தரிடமும் அவர் அடிப்படைத் தமிழ்ப் பாடங்களைக் கற்றபோது பெரும்பாலானவை தமிழ் இலக்கண, இலக்கிய நூல்களுடன் சமயம் என வரும் போது சிவ வழிபாட்டினையும் சில வைஷ்ணவ சமய சம்பந்தமான தத்துவ நூல்களையே பாடமாகக் கற்றிருந்தார்.


முதலில் சீவக சிந்தாமணிக் காப்பியத்தை அச்சுப்பதிப்பாக வெளியிட அவர் முயற்சியைத் தொடக்கியபோது சமண மதச்சார்பு கொண்ட அதனைப் புரிந்து கொள்வதில் மிகுந்த சிரமத்தை அவர் எதிர்நோக்கினார் என்பதனையும் பின்னர் பற்பல சமண அறிஞர்களின் நட்பு ஏற்பட அதன் வழி தனது ஐயங்களைப் போக்கிக் கொண்டு சமண சமய அடிப்படைத் தத்துவங்களைப் புரிந்து கொண்டு அவர் சீவக சிந்தாமணி அச்சுப்பதிப்பை வெளியிட்டார் என்பதையும் முந்தைய பதிவு ஒன்றில் குறிப்பிட்டிருந்தேன். அதே போன்ற பிரச்சனையே மணிமேகலை நூல் அச்சுப்பதிப்பு வெளியீட்டிலும் உ.வே.சா அவர்களுக்கு ஏற்பட்டது. தனக்குக் குடும்பப் பின்னனியோ அல்லது கல்விப் பின்னணியோ இல்லாத ஒரு சமயமாக புத்த சமயம் இருந்தது. மணிமேகலை ஒரு பௌத்த காவியம். ஆக அதனைச் சுவடியில் இருப்பது போல வரிக்கு வரி அப்படியே பதிப்பிக்காமல், மணிமேகலை உள்ளடக்கியுள்ள பௌத்த தத்துவங்களைப் புரிந்து கொண்டு அதன் அடிப்படையில் சொற்களின் பொருளையும் செய்யுட்களின் பொருளையும் விவரித்து எழுதி நூலை அவர் தயாரித்திருந்தார். அதில் இலங்கையிலிருந்து அவருக்குப் பௌத்த அறிஞர்கள் சிலரது உதவியும் தமிழகத்திலும் மளூர் ரங்காச்சாரியார் போன்ற அறிஞர்களின் உதவியாலும் பௌத்த சமயப் பின்னணியை அவர் புரிந்து கொள்ள நல்வாய்ப்பு கிட்டியது.


மணிமேகலை செய்யுட்களுக்கு விளக்கம் அளிப்பது போலமே அதன் வரலாற்றைக் கதையாக எழுதி இணைக்க வேண்டும் என்றும் அவர் முடிவு செய்திருந்தார். நூலில் இணைத்து வெளியிடுவதற்காகக் கதைச் சுருக்கம் ஒன்றைத் தயாரித்தார். பொதுவாக அக்காலத்துத் தமிழறிஞர்கள் மத்தியில் பௌத்த மரபுகள் வழக்கில் அருகிக் குன்றிப்போயிருந்தமையால் அவற்றை இந்த நூலின் வழி வெளிப்படுத்த வேண்டும் என்ற சிந்தனையும் அவருக்கு எழுந்தது. இதனைக் கருத்தில் கொண்டு மணிமேகலை அச்சுப்பதிப்பின் குறிப்புரையில் பௌத்த தத்துவங்களை ஆங்காங்கே தேவைப்படும் இடங்களில் இணைத்திருந்தார். ஆனாலும் தான் அறிந்து கொண்ட பௌத்த தத்துவங்களைத் தனியாக எழுதி வெளியிடவேண்டுமென்றும் அவருக்கு ஆர்வம் மேலிட்டது.

தனது கலந்துரையாடல், வாசிப்பு ஆகியவற்றிலிருந்து தொகுத்த எல்லாத் தகவல்களையும் இணைத்து உ.வே.சா ஒரு தொகுப்பாகத் தயார்படுத்திக் கொண்டிருந்தார்.

பௌத்தர்கள் மரபின் அடிப்படையில் புத்தர், பௌத்த தருமம், பௌத்த சங்கம் ஆகிய மூன்றும் மும்மணிகள் எனப் போற்றப்படுவன. தான் இதுவரை தனது மணிமேகலை ஆய்விற்காகச் சேர்த்துத் தொகுத்து வைத்திருந்த தகவல்கள் அனைத்தையும் தொகுத்து பௌத்த மும்மணிகள் பற்றி எழுதத் தொடங்கினார் உ.வே.சா. தான் எழுதி வரும் பகுதிகளை அவ்வப்போது மளூர் ரங்காச்சாரியாரிடம் காண்பித்து அதில் உள்ள கருத்துப் பிழைகளைக் கேட்டறிந்து செப்பம் செய்து வந்தார். இந்தப் பதிவில் வசன நடையுடன் செய்யுட்களையும் இணைத்திருந்தார் உ.வே.சா.

1896ம் ஆண்டு ஜூலை மாதத்தில் அச்சுக்கூடத்தில் தனது முதல் தயாரிப்பினைக் கொடுத்திருந்தார் உ.வே.சா. அதனை அடுத்து இரு ஆண்டுகள் நூலின் பிற பகுதிகளைச் செப்பனிடுவதில் அவர் கவனம் இருந்தது. நூலின் செய்யுட்களோடு மணிமேகலை நூலுக்கான முகவுரை, புத்தரின் வாழ்க்கைச் சரித்திரம், பௌத்த தர்மம், பௌத்த தத்துவங்கள், சங்கம் ஆகியவற்றோடு மணிமேகலையின் வாழ்க்கைக் கதைச் சுருக்கத்தையும் எழுதித் தயாரித்து முடித்திருந்தார். இவையனைத்தையும் முடிப்பதற்கு 2 ஆண்டுகள் ஆகின.

1898ம் ஆண்டு ஜூலை மாதம் மணிமேகலை முழுமையான அச்சுப்பதிப்பாக வெளிவந்தது.

'புத்த சரித்திரம், பெளத்த தருமம், பெளத்த சங்கம்' என்ற நூலும் இந்தக் கடும் உழைப்பால் அதே ஆண்டு வெளிவந்தது

சீத்தலை சாத்தனார் என்ற பௌத்த அறிஞர் எழுதிப் பல காலங்களாகப் பனை ஓலைச்சுவடியிலேயே பிரதி எடுத்துப் பாதுகாத்து வரப்பட்ட தமிழ்க் காவியமான மணிமேகலை தெளிவான விளக்கங்களுடன் அச்சுப்பதிப்பாக தமிழ் உலகில் மலர்ந்தது.

தொடரும்..

சுபா

Monday, December 18, 2017

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 140

இதுவரை பதிப்பித்த ஏனைய நூல்களின் பணியை விடவும் மணிமேகலை அச்சுப் பதிப்புப் பணி உ.வே.சாவிற்கு மிகக் கடினமானதாகவே இருந்தது. ஆயினும் அறிஞர்கள் பலரது ஊக்கச் சொற்கள் அவரை இந்தப் பெரும் பணியைத் தான் செய்தே முடிக்க வேண்டும் என்ற வைராக்கியத்தை ஏற்படுத்தியிருந்தது. முன்னர் குறிப்பிட்டது போல மணிமேகலையை 1891ம் ஆண்டு திருமயிலை வித்துவான் சண்முகம் பிள்ளை என்பவர் ஏட்டுச் சுவடியிலிருந்து பெயர்த்து அச்சு நூலாக்கி வெளியிட்டிருந்தார். அது எந்த விளக்கமும் குறிப்புக்களும் இன்றி அப்படியே சுவடியிலிருந்தமை அச்சு வடிவத்தில் என்ற வகையில் வெளியிடப்பட்டிருந்தது. அந்த அச்சுப்பதிப்பு வெளிவந்து 7 ஆண்டுகள் முடிந்திருந்தன. உ.வே.சாவின் நட்புச் சூழலில் அந்த நூல், வாசிப்போருக்குப் பயனளிக்காது என்ற கருத்து நிலவி வந்தது. அரும்பத உரைகளும், நூல் உரையும் சேர்த்து விரிவாக நூல் அமைந்தால் தான் வாசிப்போருக்கு மணிமேகலையை எளிதில் புரிந்து கொள்ள முடியும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. இதனைக் கவனத்தில் எடுத்துக் கொண்டு உ.வே.சா தன் ஆய்வினுள் மூழ்கிக் கிடந்தார்.

மணிமேகலையில் சமயக் கணக்கர் தந்திரம் கேட்ட காதை என்று ஒரு பகுதி உள்ளது. இது பிற சமய தத்துவங்களை விளக்கும் ஒரு பகுதி. அதே போல தவத்திறம் பூண்டு தருமங் கேட்ட காதை என்ற ஒரு பகுதியும் உள்ளது. இந்தப் பகுதியில் பௌத்த மதத்தின் அளவை இலக்கணம் விளக்கப்படுகின்றது. இந்த இரண்டு பகுதிகளுக்கும் குறிப்புரை எழுதுவது என்பது மிகச் சிரமமான பணியாகிப் போனது உ.வே.சாவிற்கு.

பௌத்த ஞானத்தைப் பின்புலமாக கொண்டவர்களின் உதவியோடு வடமொழி தர்க்க சாத்திரங்களை அறிந்தோரிடமும் கலந்து பேசி இவற்றிற்கான விளக்கங்களைப் பெற்று புரிந்து கொள்ளும் முயற்சியில் உ.வே.சா ஈடுபட்டார். இப்படி வாசித்தும் தத்துவங்களின் பின்னணியைத் தேடிப் புரிந்து கொண்டும், கலந்துரையாடியும் மணிமேகலை காப்பியத்தினை ஆராய்ந்து தனது குறிப்புக்களை எழுதி வந்தார்.

1896ம் ஆண்டின் மத்தியில் மணிமேகலை அச்சுப் பதிப்புக்குத் தயாராகியிருந்தது. ஏறக்குறைய எல்லா எழுத்துப் பணிகளும் முடிந்திருந்தன. சென்னையிலிருந்த வெ.நா.ஜூபிலி அச்சுக் கூடத்தில் இந்த நூலை அச்சிட்டு வெளியிட முடிவாகியது. நூலை எடுத்துக் கொண்டு சென்னைக்குப் புறப்பட்டார் உ.வே.சா.

மணிமேகலையின் அடிக்குறிப்பு பத உரைகளோடு நூல் அச்சாக்கம் பெற்றது. மணிமேகலையைத் தான் பதிப்பித்து முடிப்போமா என ஏங்கிக் கொண்டிருந்த உ.வே.சாவிற்கு இது மாபெரும் சாதனையைத் தாம் நிகழ்த்தியிருப்பதை உணர்த்தியது. சாதாரண மனிதர்களாகிய நாம் அசாதாரணமான காரியங்களைச் செயல்படுத்தி முடிக்கும் போது நமது பலம் நமக்கே புரியத் தொடங்கும். அந்த நிலையில் தான் உ.வே.சாவின் மனமும் அந்தச் சூழலில் இருந்திருக்கும்.

அச்சுப் பதிப்பின் முதல் படிவத்தைப் பார்த்த போது அவர் உள்ளம் மகிழ்ச்சியில் பூரித்தது. மணிமேகலை அச்சுப்பதிப்பாக்கம் தமிழ் உலகிற்கு உ.வே.சா அவர்கள் ஆற்றிய பணியில் ஒரு மகுடம். சமய பேதங்களைக் கடந்து தமிழின் சிறந்த இலக்கியங்களில் ஒன்றினை பதிப்பித்த பெருமை அது. இதற்காகத் தமிழ் உலகம் உ.வே.சாவிற்கு நன்றி சொல்லக் கடமை பட்டுள்ளது என்றால் அதில் மாற்றுக் கருத்துக்கு இடமேது?

தொடரும்..
சுபா

Sunday, December 17, 2017

சாதீயம்

'வருமானம் இல்லாமல் குடும்பமே திண்டாடுகிறது: தூக்கு தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு இல்லை - உடுமலை கவுசல்யாவின் சகோதரர் விரக்தி' என்ற தலைப்பிட்டு பரிதாப அலையை உருவாக்கும் நோக்கத்தில் இந்து நாளேடு ஒரு பதிவினை இன்று வெளியிட்டுள்ளது. இந்த பதிவில் ஒரு வரி கூட மிகக் கொடூரமாக கௌசல்யா அருவாளால் வெட்டப்பட்டதையும் சங்கர் வெட்டி படுகொலை செய்யப்பட்டதையும் பற்றி வார்த்தைகள் இல்லை.
வெட்டி கொல்லப்பட்ட சங்கரின் தந்தையும் குடும்பமும் படும் பொருளாதார பிரச்சனைகளை இந்தக் கட்டுரையை எழுதிய நிருபர் எழுதவில்லை. மாறாக சாதிய வன்முறையைத் தூண்டி கொடூர காரியங்களைச் செய்தவர்களின் குடும்ப பின்னனியைச் சொல்லி பரிதாப உணர்ச்சியைத் தேட செய்திருக்கும் இம்முயற்சி கண்டிக்கத்தக்கது.
சாதீய கொடுமைகளால் தாழ்த்தப்பட்ட மக்கள் பட்ட கொடுமைகள் பல. இன்று ஒரு கொடுமைக்கு சட்டப்பூர்வமாக ஒரு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனை ஒரு படிப்பினையாகக் கொண்டு சாதி வெறித்தனத்தை மூட்டை கட்டி வைத்து விட்டு மனித நேயத்தை மட்டும் வளர்க்க ஊடகங்கள் செயலாற்ற வேண்டும். அதுவே ஊடக தர்மம். அதைவிட்டு எல்லா செய்திகளையும் போடுவோம் என நீதிக்குப் புறம்பாக
அநீதிக்கு பச்சாதாப அலையை உருவாக்கும் இவ்வகைச் செய்திகளை வெளியிடுவது தவறு . இந்து நாளிதழுக்கு எனது கண்டனத்தைப் பதிகிறேன்.
-சுபா

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 139

ஜி.யூ போப் எழுதிய கடிதம் உ.வே.சாவிற்கு ஊக்கமளிப்பதாக இருந்தது. அறிஞர்களுக்கு ஊக்க மருந்தாக அமைபவை பாராட்டு மொழிகளும் ஆலோசனைகளும் தானே. ஆக, தனது அடுத்த கடிதத்தோடு உ.வே.சா தனது அச்சுப்பதிப்பாகிய புறப்பொருள் வெண்பாமாலை நூல் பிரதி ஒன்றினை அனுப்பி வைத்தார். அதற்கு 21.10.1895 தேதியிட்டு ஆக்ஸ்பர்ட் பல்கலைக்கழகத்தின் பேலியல் காலேஜிலிருந்து போப்பின் கடிதமொன்று பதிலாக வந்தது. 

அக்கடிதத்தில் அந்த நூல் ஆக்ஸ்பர்ட் நூலகத்தில் இடம்பெறுவதாகவும், தான் உடல் ஆரோக்கியம் குன்றி இருப்பதாகவும், உ.வே.சாவின் பதிப்பு முயற்சி மிகச் சிறப்பாக இருப்பதாகவும் குறிப்பிட்டு எழுதியிருந்தார் ஜி.யூ போப். அத்தோடு ”பழந்தமிழ் நூல்களெல்லாம் புதுத் தமிழர்களுக்கு விளங்கும்படி செய்ய வேண்டும். அதற்கு வழி செய்யுங்கள்,,,,,,” என்றும் குறிப்பிட்டிருந்தார். 

பிறகு ஒரு இடைவெளிக்குப் பிறகு 3.1.1896 அன்று தேதியிட்ட ஒரு கடிதம் ஜி.யூ போப் அவர்களிடமிருந்து உ.வே.சாவிற்கு வந்தது. அதில் தான் புறநானூறு, புறப்பொருள் வெண்பாமாலை ஆகிய இரு நூல்களையும் படித்து எளிதில் புரிந்து கொண்டு மகிழ்ந்ததாகக் குறிப்பிட்டிருந்தார். தற்சமயம் தான் பாரி, அவன் மகள்கள், கபிலர், கோப்பெருஞ் சோழன், பிசிராந்தையார், பொத்தியார் முதலானவர்களைப் பற்றி ஆராய்ந்து ஒரு கட்டுரை எழுதிக் கொண்டிருப்பதைப் பற்றியும் குறிப்பிட்டிருந்தார். அத்தோடு பல்கலைக்கழகத்தில் சொல்லி ஜி.யூ போப் தான் பதிப்பித்த நாலடியார் நூல் ஒன்றினை ஆக்ஸ்பர்ட் பல்கலைக்கழகத்தில் சொல்லி அனுப்பியதாகவும் அது உ.வே.சாவிற்கு வந்து சேர்ந்ததா என்றும் வினவியிருந்தார். அந்த நூல் உ.வே.சாவிற்கு வந்து சேர்ந்தது. 

ஐரோப்பிய தமிழ் அறிஞர்கள் மிகத் தீவிரமாகத் தமிழ் கற்றதோடு தமிழ் அச்சுப்பதிப்பாக்க முயற்சியில் செயல்பட்டிருந்தமையை இத்தகைய சான்றுக் குறிப்புக்களின் வழி நம்மால் அறிந்து கொள்ள முடிகின்றது. 

ஜி.யூ போப் எழுதிய  கடிதத்தை வாசித்த உ.வே.சா வின் சிந்தனையை அவரது வரிகளிலேயே வாசிப்பது சுவையானது. இப்படிச் சொல்கின்றார். 

”அவர் அனுப்பச் செய்த நாலடியார் எனக்குக் கிடைத்தது. அவர் எவ்வளவு ஊக்கத்தோடும் ஆவலோடும் தமிழ் நூல்களை ஆழ்ந்து  படிப்பவரென்பதை இக்கடிதத்திலிருந்து உணர்ந்து கொண்டேன். எந்த விஷயத்தையும் தெளிவாகத் தெரிந்துகொள்ள வேண்டும், தெரிந்ததைப்  பிறருக்கு விளங்கும்படி வெளியிட வேண்டுமென்ற அவர் கொள்கை எனக்கு மிகவும் உவப்பாக இருந்தது. பாரிஸ் நகரத்தில் இருந்த ஜூலியன் வின்ஸோனது தமிழன்பையும் ஆக்ஸ்போர்டிலிருந்த போப்பினுடைய தமிழன்பையும் ஒப்பிட்டுப் பார்ப்பேன். ஒவ்வொன்றும் ஒவ்வொரு முறையில் சிறப்புடையதாக இருந்தது. இருவரிடத்தும் விடா முயற்சியும் மேற்கொண்ட காரியத்தில் ஆழ்ந்த அன்பும் இருந்தன. நம் நாட்டினரிடத்தில் இக்குணங்கள் இல்லாமையால் சோம்பலுக்காளாகி வாழ்நாளை வீணே கழிக்கின்றனரென்றெண்ணி வருந்தினேன்.” 

அன்று உ.வே.சா மனம் வருந்தியது போன்றே தான் இன்றும் நாம் மனம் வருந்திக் கொண்டிருக்கின்றோம். ஐரோப்பிய தமிழறிஞர்கள் சிலர் நம் தமிழ் மொழியின் பால் ஆர்வத்துடன் ஈடுபட்டு ஆய்வு மேற்கொண்டது போலக்கூட இன்று தரமான ஆய்வுகள் வருவது அருகிவிட்டது. அன்று அந்த அறிஞர்கள் மேற்கொண்ட உழைப்பு இன்று தமிழ் மொழி ஆக்ஸ்பர்ட் பல்கலைக்கழகத்திலும் ஜெர்மனியிலும் டென்மார்க்கிலும் பாரீசிலும் அறியப்பட்ட உலக மொழியாக இடம்பெறுவதற்கு அடித்தலம் அமைத்த செயல்பாடுகளாக அமைந்தான் என்பதை நம்மில் எத்துணை பேர் அறிந்திருக்கின்றோம்? 

தொடர்ந்து ஜி.யூ போப் அவர்களுக்கு உ.வே.சாவிற்கு கடிதப்போக்கு வரத்து நிகழ்ந்து வந்தது. தாம் புறநானூற்றிலிருந்தும் புறப்பொருள் வெண்பாமாலை நூலிலிருந்தும் பல செய்யுட்கலைத் தேர்ந்தெடுத்து ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து வெளியிட்டுள்ளதாகவும் ஜி.யூ போப் குறிப்பிட்டிருந்தார். ஒவ்வொரு வருட ஆரம்பத்திலும் இத்தகைய மொழி பெயர்ப்புக்களை வைத்து தனக்கு அவர் புத்தாண்டு செய்தி அனுப்பியதை உ.வே.சா பதிகின்றார். அக்கடிதங்கள் அவருக்கு ஊக்கம் தரும் மருந்தாகவும் அமைந்தன. 

”இத்தகைய உண்மை உழைப்பாளிகளுடைய நட்பினால் தமிழ்ப் பணியில் என் மனம் ஊற்றமடையலாயிற்று. மணிமேகலை ஆராய்ச்சி நடைபெற்று வந்தது.”

தொடரும்.

சுபா

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 138

ஜி.யூ போப் அவர்கள் தமிழகத்தில் நீண்டகாலம் பணியாற்றி பின்னர் இங்கிலாந்து திரும்பி அங்கு ஆக்ஸ்பர்ட் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைப் பேராசிரியராகப் பணியாற்றிய ஒரு ஆங்கிலேயர். ஜி.யூ போப் என்றே அறியப்பட்ட இவரது முழுப் பெயர் George Uglow Pope என்பதாகும். ஆங்க்லிக்கன் கிருத்துவ மதபோதகராகத் தமிழகத்துக்குப் பணியாற்ற வந்த இவர் 40 ஆண்டுகள் தமிழகத்திலேயே தங்கிவிட்டார். கல்வி மறுக்கப்பட்டோருக்குக் கல்விக்கு வழிகாட்டிய கல்வித்தந்தை என்ற சிறப்புக்கு உரியவர் இவர். இன்று பணம் வாங்கிக் கொண்டு கராராகக் கல்லூரி நடத்துவோரைக் கூட கல்வித்தந்தை எனப் புகழும் காலம் வந்து விட்டது. காலத்தின் கோலம். அது ஒருபுறமிருக்கட்டும்!

தமிழிலிருந்து ஆங்கிலத்திற்குக் குறிப்பிடத்தக்க தமிழ் நூற்களை மொழி பெயர்ப்பு செய்துள்ளார் ஜி.யூ போப். அதில் திருக்குறளையும் திருவாசகத்தையும் மொழி பெயர்ப்பு செய்த பெருமை இவருக்குண்டு. 

தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சாயர்புரம் பகுதிக்கு நான் கடந்த ஆண்டு சென்றிருந்த போது ஜி.யூ போப் அவர்களின் பெயரில் இயங்கும் உயர்கல்விக்கூடங்களை பார்வையிட வாய்ப்பு கிட்டியது. இவரைப் பற்றி ஓரளவு நேரிலும் அறிந்து கொள்ள எனக்கு அது வாய்ப்பாகவும் அமைந்தது. 

இந்த சாயர்புரத்தில் தான் 1839ம் ஆண்டு இறைப்பணி ஆற்ற இவர் தமிழகம் வந்து சேர்ந்தார். தமிழகம் வருவதற்கு முன்னரே ஜெர்மானிய பாதிரிமார்கள் உருவாக்கித் தந்த நூல்களின் வாயிலாகத் தமிழ் மொழியை இவர் எழுதவும் வாசிக்கவும் கற்றிருந்தார். தமிழகத்திற்கு வந்த பின்னர் இவரது தமிழ் மொழிப்புலமை மேலும் அதிகரித்தது. நாலடியார் நூலை இவரே அச்சுப்பதிப்பாகக் கொண்டு வந்தார். அத்தோடு அதனைத் தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்ப்பும் செய்து வெளியிட்டார். தமிழ் இலக்கண நூலும் தமிழ்ப்பாட நூல்களையும் உருவாக்கினார். 

ஜி.யூ.போப் அவர்களுக்கும் உ.வெ.சாவிற்கும் கடிதப் போக்குவரத்துத் தொடர்பு இருந்தது என்பதை என் சரித்திரம் நூல் வழி அறிகின்றோம். அவரைப்பற்றிக் குறிப்பிடும் போது உ.வே.சா சிறுவர்களுக்குப் பயன்படும் சிற்றிலக்கணம் எழுதியவர் என்று குறிப்பிட்டு 'போப்பையர் இலக்கணம்' என அது தமிழ் நாட்டில் வழங்கியது என்கின்றார். 

தமிழ் கற்ற ஐரோப்பியர்களை 'ஐயர்' என அடைமொழி கொடுத்து அழைக்கும் வழக்கம் தமிழகத்தில் இருந்தது. பெஸ்கி, நோபிலி, போப் போன்றவர்கள் வாழ்க்கைச் சரிதத்தின் வழி இதனை அறிய முடிகின்றது. 

கல்வி கற்றவர் அல்லது ஆசிரியர் நிலையில் இருப்பவர் என்றால் ஐயர் என்ற அடைமொழி தேவை என்ற எண்ணம் அன்று நிலவியிருக்கின்றது. பல தொடர்ச்சியான சமூகச் சீர்திருத்த நடவடிக்கைகளினால் தான் இந்த நடைமுறை இன்று ஓரளவு கைவிடப்பட்டுள்ளது. தேவாலயங்களில் சமய நடவடிக்கைகளில் உள்ளோரை ஐயர் என விளிக்கும் முறை சில இடங்களில் இருப்பதாக அறிகிறேன். இன்று ஐரோப்பிய தமிழறிஞர்களுக்கு ஐயர் என்ற அடைமொழியைச் சேர்த்து எழுதும் பாணியை மக்கள் பயன் படுத்துவதில்லை. அது தேவையற்றது பொருளற்றது என்பதை உணர்ந்தவர்களாக நாம் தெளிந்து மாறிவிட்டோம்!

ஜி.யூ போப் அவர்களுக்குப் புறநானூறு வெளிவந்தபின் ஒரு பிரதியை உ.வே.சா அவர்கள் அனுப்பி வைக்க அதற்கு போப்பின் 26.4.1895 என்ற தேதியிட்ட கடிதத்தில் பதில் எழுதுகின்றார். அதில் முன்னரே உ.வே.சா பதிப்பித்த சிந்தாமணி எளிமையாக இருந்ததாகவும், ஆனால் புறநானூறு கடினமாக இருப்பதாகவும் குறிப்பிடுகின்றார். இன்னும் எளிமையாகச் சிந்தாமணி போல எழுத முடியாதா என வினவுகின்றார். ஜி.யூ போப் அவர்களது கையெழுத்தில் அவர் குறிப்பிடுவதைக் காண்க. 

“புறநானூற்றை இன்னும் தெளிவு படுத்த முடியாதா? எனக்குத் தமிழ் தெரியுமென்று நான் எண்ணிக் கொண்டிருந்தாலும் எனக்கு அதில் பல பகுதிகள் விளங்கவில்லை. ஆதலால் இன்னும் தெளிவும் சுலபமுமான நடையில் உரை வேண்டும். பண்டிதரல்லாத என் போலியரிடம் கருணை கொள்ளுங்கள். சிந்தாமணி பெரும்பாலும் சுலபமாகவே இருக்கிறது. அருமையும் பெருமையுமுள்ள தமிழின் பொருட்டுத் தொல்காப்பியத்திற்கு ஆராய்ச்சித் திறனமைந்த பதிப்பு ஒன்று வேண்டும்,.,,,,,புராணக் கதைகளை விலக்கிவிட்டு முச்சங்க வரலாற்றைத் தக்க ஆதாரங்களைக் கொண்டு எழுத வேண்டும்,,,,புறநானூற்றை எவ்வாறு படித்துப் பயன் படுத்தலாமென்பதையேனும் தெரிவியுங்கள்.” 

ஜி.யூ போப் அவர்களிடமிருந்த் தமக்கு வந்த இந்த முதல் கடிதம் பொருத்தமான கருத்துக்களை முன் வைப்பதாக உ.வே.சா அவர்கள் குறிப்பிடுகின்றார். 

இதில் ஒரு முக்கிய விசயத்தை ஜி.யூ.போப் குறிப்பிடுவதைக் கவனிக்க வேண்டியுள்ளது. புராணக் கதைகளை விலக்கி விட்டு முச்சங்க வரலாற்றைத் தக்க ஆதாரங்களோடு பதிப்பிக்கும் முயற்சி வேண்டும் என வலியுறுத்துகின்றார். 

தமிழ் நூல்களில் புராணக் கதைகளின் அதீதப் போக்கு வாசிப்போரின் சிந்தனையை முடக்கிப் பெறும் கோட்டினை வளர்த்தது என்பதை உறுதியாகக் கூறத்தான் வேண்டும். ஏரணவியல் சிந்தனையும் எதனையும் சீர்துக்கி அறிவுக்குப் பொருந்தும் கருத்துக்கள் உள்ளனவா என ஆராய்ந்து தெளிவது புராணக்கதைகள் மிகுந்திருந்த காலத்தில் வாய்ப்பில்லாமல் போனது கண்கூடு. இந்த நிலை இன்று மாறி வருகின்றது. அறிவுக்குப் பொருந்தும் சிந்தனையை வளர்க்கும் நூல்களை வாசிப்பதும், எழுதுவதும் அவை பற்றி சிந்திப்பதும் அவற்றை இளம் தலைமுறையினரிடையே அறிமுகப்படுத்த வேண்டியதும் நம் கடமையாகின்றது!

தொடரும்...

சுபா

Saturday, December 16, 2017

அம்மா - தமிழகத்தின் இரும்புப் பெண் - நூல் விமர்சனம்

அம்மா - தமிழகத்தின் இரும்புப் பெண் - நூல் விமர்சனம்
முனைவர்.க.சுபாஷிணி
*******************************************************************************
தமிழக அரசியல் தளத்தில் மிக முக்கியப்பங்கு வகித்த ஒரு அரசியல் தலைவர் முன்னாள் தமிழக ஜெயலலிதா அவர்கள். அவர் அரசியலுக்கு வந்த நாள் தொடங்கி இவ்வுலகை விட்டு மறைந்த நாள் வரையிலான அவரது ஒவ்வொரு நடவடிக்கைகளும் வெகுவாக மக்களின் கவனத்தை ஈர்த்தவை. ஜெயலலிதா என்ற பெண்மணி ஒரு சாதாரண பெண்ணாக இருந்து, பலரும் புகழும் நடிகையாக வளர்ந்து, பின்னர் தமது தொண்டர்களால் 'அண்ணி' என்றும் பின்னர் 'அம்மா' என்றும் புதுப்பரிமாணம் பெற்ற தகவல்களை இந்த நூல் வாசகர்களாகிய நமக்கு வழங்குகின்றது.
நம்மைச் சுற்றிலும் நடக்கும் பல செய்திகள் நாளடைவில் நமது நினைவுகளிலிருந்து நீங்கி விடுகின்றன. பொதுவாக அவ்வப்போது பேசப்படுகின்ற செய்திகள் மட்டிலும் தலைதூக்கி அவ்வப்போது தனது இருப்பைக் காட்டும் போது அவை சிறிது பேசப்பட்டு பின் மீண்டும் நினைவுத் தளத்தின் பின் பக்கத்திற்குச் சென்று விடுகின்றன. ஜெயலலிதா அம்மையாரைப் பற்றிய நினைவுகளும் அப்படித்தான். ஜெயலலிதா என்றால் இன்று நமது நினைவில் கண் முன்னே காட்சியளிப்பது ஒரு நடிகை அரசியல்வாதியான ஒரு நிகழ்வும் பின்னர் அவரது மரணமும், அதன் பின்னனில் இருக்கும் மர்மங்களுமே. அம்மா என்று அழைத்து காலில் விழுந்து வணங்கியவர்களும் ஹெலிகாப்டரில் பறக்கும் போதும் கீழே விழுந்து வணங்கியவர்களும் கூட இன்று அவரது பெயரைக் களங்கப்படுத்தும் முயற்சிகளில் இறங்கி விட்டனர். இந்தச் சூழலில் செல்வி ஜெயலலிதா அவர்களின் வாழ்க்கை சரிதத்தின் பல முக்கியச் செய்திகளையும் நிகழ்வுகளையும், சங்கடங்களையும், சாதனைகளையும், குற்றங்களையும், முடிச்சு அவிழ்க்கப்படா மர்மங்களையும் தொட்டுப் பேசுகின்றது முனைவர் சந்திரிகா சுப்ரமண்யன் அவர்கள் எழுதி யிருக்கும் இந்த நூல்.
ஸ்ரீரங்கத்தின் ரங்கசாமி ஐயங்கார் பெங்களூர் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸில் வேலை கிடைத்து சென்றபோது தனது குடும்பத்தையும் உடன் அழைத்துச் செல்கின்றார். அங்கு மைசூரில் பிரபல டாக்டர்.ரங்காச்சாரி மகன் ஜெயராமுக்கு மகள் வேதாவைத் திருமணம் செய்து வைக்கின்றார். ஜெயராம் வேதா தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள். அவர்களில் ஒருவர் தான் 1948ம் ஆண்டு பிப்ரவரி 28ம் தேதி பிறந்த கோமளவல்லி என்ற இயற்பெயர்கொண்ட ஜெயலலிதா. பிறக்கும் போது வசதியாக இருந்த குடும்பம் பின் தந்தையின் ஊதாரித்தனத்தால் மிகவும் கஷ்டப்படும் நிலைக்கு வந்தது. விமானப்பணிப்பெண்ணாக இருந்த சித்தி அம்புஜா அன்று வித்யாவதி என்ற பெயரில் தமிழ்ச்சினிமா உலகில் நுழைந்தார். இரண்டு குழந்தைகளையும் காப்பாற்ற வேதாவும் சினிமா துறையில் காலடி எடுத்து வைத்தார். சந்தியாவாக மாறினார். பள்ளிப்படிப்பிலும் நடனத்திலும் மிகத்தேர்ந்தவராக இருந்தார் கோமளவல்லி. பின்னர் படிப்படியாக திரைப்படம் , மேடை நாடகங்கள் என அவரது வாழ்க்கை தொடர்ந்தது. ஒய்.ஜி.பார்த்தசாரதியின் ஆங்கில மொழி நாடகத்தில் அப்போது வாய்ப்பு வந்தது. The Hold truth, The House of the August Moon ஆகிய நாடகங்களில் ஜெயலலிதா நடித்தார். அப்போது அவரோடு நடித்தவர்களில் சோ வும் ஒருவர். இவர்கள் நட்பு அன்றிலிருந்து இறுதி வரை தொடர்ந்தது. பின்னர் கன்னட மொழிப்படம் எனத்தொடங்கி தமிழ்ப்பட உலகில் மிக அதிக சம்பளம் பெற்ற கதாநாயகியாகவும் வலம் வந்தவர்.
ஜெயலலிதாவின் அரசியல் பிரவேசம் ஏதேச்சையாக நடந்ததுதான் என்றாலும் தனது திறமையினாலும் அறிவுக் கூர்மையினாலும் தனது இருப்பை அவர் தக்க வைத்துக் கொண்டார் என்றே கூறவேண்டும். தனது சமகாலத்து ஏனைய பெண் அரசியல்வாதிகளான, இந்திராகாந்தி அம்மையார், பெனாசீர் பூட்டோ போன்று இவருக்கு அரசியல் குடும்பப் பின்னணி என்பது அமையவில்லை. ஆனால் அதற்கும் மாறாகப் பல குழப்பங்கள் நிறைந்த குடும்பப் பின்னணியே இருந்தது. ஆணாதிக்கம் நிறைந்த அரசியல் சூழலில் தனது இருப்பை நிலை நாட்டிக் கொள்ள அவர் எடுத்த முடிவுகளும் செயல்படுத்திய நடவடிக்கைகளும் அவரது வெகுவான நூல் வாசிப்பு தந்த பரந்த விரிவான வாசிப்பின் மூலமாகத்தான் அமைந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
அம்மையார் ஜெயலலிதா வாழ்வில் அவர் தானே வலிந்து தனக்கு ஏற்படுத்திக் கொண்ட களங்கம் என்றால் அது அவர் தனது வளர்ப்பு மகனாக சில காலம் தத்தெடுத்த சுதாகரனின் திருமணத்திற்காக அவர் செய்த படோடோபமான கோலாகலத் திருமண நிகழ்வு என்பது மறுக்க முடியாதது. தன்னை ஒரு மகாராணியாக நினைத்துக் கொண்டு அவரும் சசிகலாவின் குடும்பத்தாருமாக அன்று செய்தவையே அவரது தாழ்விற்கு முக்கியக் காரணமாக அமைகின்றது. இன்றளவும் அம்மையார் ஜெயலலிதாவின் வாழ்க்கையில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய கரும்புள்ளியாக இருப்பது இந்த நிகழ்வே. இதனை தன் வாழ்வில் அவர் யோசித்துத் தடுத்திருந்தால் தமிழகம் போற்றும் தாயாகத் தமிழ் மக்கள் பலரால் அவர் போற்றப்பட்டிருப்பார். அது நடைபெறாமல் போனதற்கு அவரே முழுக்காரணம் என்று தான் சொல்லவேண்டும்.
தமிழகத்தில் வேறெந்த முதலமைச்சருக்கும் இல்லாத வகையில் 6 முறை முதலமைச்சர் பதவியை வகித்தவர் என்ற பெருமை அவருக்கு உண்டு. இவர் ஏற்படுத்திச் செயல்படுத்திய நலத் திட்டங்களால் ஏழை எளியப் பெண்களுக்கு குறிப்பிடத்தக்க அனுகூலங்கள் கிடைத்ததை மறுக்கவியலாது. 5 ரூபாயில் முழுச்சாப்பாடு என்று அம்மா உணவகம் செயல்பட்டபோது முதலில் கேலி பேசியவர்கள் கூட பின்னர் அதனைப் பாராட்டித் தான் பேசினார்கள். கல்லூரி மாணவர்களுக்குக் மடிக்கணினி, பெண்களுக்கு சைக்கிள், திருமணத்திற்குக் காசு, குழந்தைப் பேறு நலன், இலவச மருந்தகங்கள் எனப் பல நலன் திட்டங்கள் இவரால் அமல் படுத்தப்பட்டன. இதனால் தான் இவரது இழப்பை நினைத்து இன்றளவும் ஏழைப் பெண்கள் தங்கள் வீட்டுப் பெண்ணே இறந்து போனது போல நினைத்து வருந்தினர்.
ஏற்றத்தாழ்வுகள் நிறைந்த வாழ்க்கையில் சலிக்காமல் அலுக்காமல் முன்னேற்றப்பாதையை மட்டுமே கருத்தில் கொண்டு வெற்றியை நோக்கியே தமது பயணத்தை அமைத்துக் கொண்டவர் அம்மையார் ஜெயலலிதா. தன் வாழ்வில் அவர் எல்லா நேரங்களிலும் புத்தகம் வாசித்தவராகவும், நேரத்தை முறையாகப் பயன்படுத்தியவராகவும் தனது நெருக்கமான வட்டத்தினரால் அறியப்படுகின்றார். தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் எனப் பல மொழிகளில் பாண்டித்தியம் பெற்றவராகத் திகழ்ந்திருக்கின்றார். நாடாளுமன்ற உறுப்பினராக பணியேற்ற பின்னர் இவர் வழங்கிய முதல் உரையே பலரது கவனத்தை ஈர்த்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நூலில் அம்மையார் ஜெயலலிதாவைப் பற்றி விருப்பு வெறுப்பு இல்லாமல் நூலாசிரியர் செய்திகளை வழங்கியிருக்கின்றார். அதில் சிலவற்றைக் குறிப்பிட்டுச் சொல்லலாம்.
-நூலில் முழுமையாக இடம்பெறும் 2 பேட்டிகள்
-நாடாளுமன்ற உரை
-இவரது மரணம் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் பொது மக்களால் கேட்கப்பட்ட கேள்விகளின் தொகுப்பு
-அப்போலோவில் இறுதி நாட்கள் - புள்ளி விவரத்துடன் தேதி வாரியாக
-சொத்துக் குவிப்பு வழக்கின் முழு விபரங்கள் - நீதிபதி குன்ஹா அறிக்கை, மேல்முறையீட்டுத் தகவல்கள்
-சொத்து குவிப்பு வழக்கு கால அட்டவணை
-முழுமையான சொத்து விவரங்கள், சொத்து மதிப்பு
-அவர் பெற்ற விருதுகள்
நூல் ஆசிரியர் சந்திரிகா அவர்கள் ஜெயலலிதா அம்மையாரை நேரில் சந்தித்து அவருடன் சில பணிகளில் இணைந்து செயலாற்றியவர் . சட்டத்துறை வல்லுநர் என்பதால் இந்த நூலை மிகக் கவனமாக ஆதாரப்பூர்வமான தகவல்களை மட்டுமே திரட்டி நூலாக வழங்கியிருக்கின்றார்.
கடந்த நூற்றாண்டின் ஆணாதிக்க அரசியல் சூழலில் அம்மையார் ஜெயலலிதாவின் வாழ்க்கை பயணம் என்பது முள் வேலிக்குள் எடுத்து வைத்த அடிகளாகத்தான் அமைந்திருந்தன. எளிமையான பெண்ணாக இருந்து கனவுக்கன்னியாக வளர்ந்து அரசியல் சாணக்கியம் கற்று, தன் தவற்றால் வீழ்ந்து மீண்டு வளர்ந்து தன் இறுதி நாள் வரை அரசியலில் இரும்பும் பெண்மணியாக வலம் வந்தவர் அம்மையார் ஜெயலலிதா அவர்கள். இவர் விட்டுச் சென்ற அ.தி.மு.க எனும் அரசியல் கட்சி இன்றைய நடப்புச் சூழலைக் காணும் போது மிகவும் பின் தங்கிச் செல்லும் அபாயத்தை வெளிக்காட்டுகின்றது. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா என்ற இரண்டு சகாப்தங்கள் மட்டுமே அ.தி.மு.க என்ற இந்த அரசியல் கட்சிக்கு இருந்த பலங்கள். அடுத்து வரும் இக்கட்சியின் தொண்டர்கள் தங்கள் முன்னாள் தலைமையின் செயல் திறமையைக் கருத்தில் கொண்டு திட்டங்களையும் வியூகங்களையும் மக்கள் நலம் சார்ந்த செயல்பாடுகளையும் முன்னெடுத்தால் மட்டுமே அ.தி.மு.க அரசியல் தளத்தில் தொடர்ந்து நடைபோடலாம்.
--------------------------------------------------------------------------------
நூலாசிரியர்- முனைவர் சந்திரிகா சுப்ரமண்யன்
பதிப்பு: Giri Law Hause, Madurai, Tamil Nadu.


அம்மா - தமிழகத்தின் இரும்புப் பெண்

அம்மா - தமிழகத்தின் இரும்புப் பெண்
முனைவர் சந்திரிகா சுப்ரமண்யன்
பதிப்பு: Giri Law Hause, Madurai, Tamil Nadu.

தமிழக அரசியல் தளத்தில் மிக முக்கியப்பங்கு வகித்த ஒரு அரசியல் தலைவர் முன்னாள் தமிழக ஜெயலலிதா அவர்கள். அவர் அரசியலுக்கு வந்த நாள் தொடங்கி இவ்வுலகை விட்டு மறைந்த நாள் வரையிலான அவரது ஒவ்வொரு நடவடிக்கைகளும் வெகுவாக மக்களின் கவனத்தை ஈர்த்தவை. ஜெயலலிதா என்ற பெண்மணி ஒரு சாதாரண பெண்ணாக இருந்து, பலரும் புகழும் நடிகையாக வளர்ந்து, பின்னர் தமது தொண்டர்களால் 'அண்ணி' என்றும் பின்னர் 'அம்மா' என்றும் புதுப்பரிமாணம் பெற்ற தகவல்களை இந்த நூல் வாசகர்களாகிய நமக்கு வழங்குகின்றது. 

நம்மைச் சுற்றிலும் நடக்கும் பல செய்திகள் நாளடைவில் நமது நினைவுகளிலிருந்து நீங்கி விடுகின்றன. பொதுவாக அவ்வப்போது பேசப்படுகின்ற செய்திகள் மட்டிலும் தலைதூக்கி அவ்வப்போது தனது இருப்பைக் காட்டும் போது அவை சிறிது பேசப்பட்டு பின் மீண்டும் நினைவுத் தளத்தின் பின் பக்கத்திற்குச் சென்று விடுகின்றன. ஜெயலலிதா அம்மையாரைப் பற்றிய நினைவுகளும் அப்படித்தான். ஜெயலலிதா என்றால் இன்று நமது நினைவில் கண் முன்னே காட்சியளிப்பது ஒரு நடிகை அரசியல்வாதியான ஒரு நிகழ்வும் பின்னர் அவரது மரணமும், அதன் பின்னனில் இருக்கும் மர்மங்களுமே. அம்மா என்று அழைத்து காலில் விழுந்து வணங்கியவர்களும் ஹெலிகாப்டரில் பறக்கும் போதும் கீழே விழுந்து வணங்கியவர்களும் கூட இன்று அவரது பெயரைக் களங்கப்படுத்தும் முயற்சிகளில் இறங்கி விட்டனர். இந்தச் சூழலில் செல்வி ஜெயலலிதா அவர்களின் வாழ்க்கை சரிதத்தின் பல முக்கியச் செய்திகளையும் நிகழ்வுகளையும், சங்கடங்களையும், சாதனைகளையும், குற்றங்களையும், முடிச்சு அவிழ்க்கப்படா மர்மங்களையும் தொட்டுப் பேசுகின்றது முனைவர் சந்திரிகா சுப்ரமண்யன் அவர்கள் எழுதி யிருக்கும் இந்த நூல். 

ஸ்ரீரங்கத்தின் ரங்கசாமி ஐயங்கார் பெங்களூர் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸில் வேலை கிடைத்து சென்றபோது தனது குடும்பத்தையும் உடன் அழைத்துச் செல்கின்றார். அங்கு மைசூரில் பிரபல டாக்டர்.ரங்காச்சாரி மகன் ஜெயராமுக்கு மகள் வேதாவைத் திருமணம் செய்து வைக்கின்றார். ஜெயராம் வேதா தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள். அவர்களில் ஒருவர் தான் 1948ம் ஆண்டு பிப்ரவரி 28ம் தேதி பிறந்த கோமளவல்லி என்ற இயற்பெயர்கொண்ட ஜெயலலிதா. பிறக்கும் போது வசதியாக இருந்த குடும்பம் பின் தந்தையின் ஊதாரித்தனத்தால் மிகவும் கஷ்டப்படும் நிலைக்கு வந்தது. விமானப்பணிப்பெண்ணாக இருந்த சித்தி அம்புஜா அன்று வித்யாவதி என்ற பெயரில் தமிழ்ச்சினிமா உலகில் நுழைந்தார். இரண்டு குழந்தைகளையும் காப்பாற்ற வேதாவும் சினிமா துறையில் காலடி எடுத்து வைத்தார். சந்தியாவாக மாறினார். பள்ளிப்படிப்பிலும் நடனத்திலும் மிகத்தேர்ந்தவராக இருந்தார் கோமளவல்லி. பின்னர் படிப்படியாக திரைப்படம் , மேடை நாடகங்கள் என அவரது வாழ்க்கை தொடர்ந்தது. ஒய்.ஜி.பார்த்தசாரதியின் ஆங்கில மொழி நாடகத்தில் அப்போது வாய்ப்பு வந்தது. The Hold truth, The House of the August Moon ஆகிய நாடகங்களில் ஜெயலலிதா நடித்தார். அப்போது அவரோடு நடித்தவர்களில் சோ வும் ஒருவர். இவர்கள் நட்பு அன்றிலிருந்து இறுதி வரை தொடர்ந்தது. பின்னர் கன்னட மொழிப்படம் எனத்தொடங்கி தமிழ்ப்பட உலகில் மிக அதிக சம்பளம் பெற்ற கதாநாயகியாகவும் வலம் வந்தவர். 

ஜெயலலிதாவின் அரசியல் பிரவேசம் ஏதேச்சையாக நடந்ததுதான் என்றாலும் தனது திறமையினாலும் அறிவுக் கூர்மையினாலும் தனது இருப்பை அவர் தக்க வைத்துக் கொண்டார் என்றே கூறவேண்டும். தனது சமகாலத்து ஏனைய பெண் அரசியல்வாதிகளான, இந்திராகாந்தி அம்மையார், பெனாசீர் பூட்டோ போன்று இவருக்கு அரசியல் குடும்பப் பின்னணி என்பது அமையவில்லை. ஆனால் அதற்கும் மாறாகப் பல குழப்பங்கள் நிறைந்த குடும்பப் பின்னணியே இருந்தது. ஆணாதிக்கம் நிறைந்த அரசியல் சூழலில் தனது இருப்பை நிலை நாட்டிக் கொள்ள அவர் எடுத்த முடிவுகளும் செயல்படுத்திய நடவடிக்கைகளும் அவரது வெகுவான நூல் வாசிப்பு தந்த பரந்த விரிவான வாசிப்பின் மூலமாகத்தான் அமைந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. 

அம்மையார் ஜெயலலிதா வாழ்வில் அவர் தானே வலிந்து தனக்கு ஏற்படுத்திக் கொண்ட களங்கம் என்றால் அது அவர் தனது வளர்ப்பு மகனாக சில காலம் தத்தெடுத்த சுதாகரனின் திருமணத்திற்காக அவர் செய்த படோடோபமான கோலாகலத் திருமண நிகழ்வு என்பது மறுக்க முடியாதது. தன்னை ஒரு மகாராணியாக நினைத்துக் கொண்டு அவரும் சசிகலாவின் குடும்பத்தாருமாக அன்று செய்தவையே அவரது தாழ்விற்கு முக்கியக் காரணமாக அமைகின்றது. இன்றளவும் அம்மையார் ஜெயலலிதாவின் வாழ்க்கையில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய கரும்புள்ளியாக இருப்பது இந்த நிகழ்வே. இதனை தன் வாழ்வில் அவர் யோசித்துத் தடுத்திருந்தால் தமிழகம் போற்றும் தாயாகத் தமிழ் மக்கள் பலரால் அவர் போற்றப்பட்டிருப்பார். அது நடைபெறாமல் போனதற்கு அவரே முழுக்காரணம் என்று தான் சொல்லவேண்டும். 

தமிழகத்தில் வேறெந்த முதலமைச்சருக்கும் இல்லாத வகையில் 6 முறை முதலமைச்சர் பதவியை வகித்தவர் என்ற பெருமை அவருக்கு உண்டு. இவர் ஏற்படுத்திச் செயல்படுத்திய நலத் திட்டங்களால் ஏழை எளியப் பெண்களுக்கு குறிப்பிடத்தக்க அனுகூலங்கள் கிடைத்ததை மறுக்கவியலாது. 5 ரூபாயில் முழுச்சாப்பாடு என்று அம்மா உணவகம் செயல்பட்டபோது முதலில் கேலி பேசியவர்கள் கூட பின்னர் அதனைப் பாராட்டித் தான் பேசினார்கள். கல்லூரி மாணவர்களுக்குக் மடிக்கணினி, பெண்களுக்கு சைக்கிள், திருமணத்திற்குக் காசு, குழந்தைப் பேறு நலன், இலவச மருந்தகங்கள் எனப் பல நலன் திட்டங்கள் இவரால் அமல் படுத்தப்பட்டன. இதனால் தான் இவரது இழப்பை நினைத்து இன்றளவும் ஏழைப் பெண்கள் தங்கள் வீட்டுப் பெண்ணே இறந்து போனது போல நினைத்து வருந்தினர். 

ஏற்றத்தாழ்வுகள் நிறைந்த வாழ்க்கையில் சலிக்காமல் அலுக்காமல் முன்னேற்றப்பாதையை மட்டுமே கருத்தில் கொண்டு வெற்றியை நோக்கியே தமது பயணத்தை அமைத்துக் கொண்டவர் அம்மையார் ஜெயலலிதா. தன் வாழ்வில் அவர் எல்லா நேரங்களிலும் புத்தகம் வாசித்தவராகவும், நேரத்தை முறையாகப் பயன்படுத்தியவராகவும் தனது நெருக்கமான வட்டத்தினரால் அறியப்படுகின்றார். தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் எனப் பல மொழிகளில் பாண்டித்தியம் பெற்றவராகத் திகழ்ந்திருக்கின்றார். நாடாளுமன்ற உறுப்பினராக பணியேற்ற பின்னர் இவர் வழங்கிய முதல் உரையே பலரது கவனத்தை ஈர்த்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. 

இந்த நூலில் அம்மையார் ஜெயலலிதாவைப் பற்றி விருப்பு வெறுப்பு இல்லாமல் நூலாசிரியர் செய்திகளை வழங்கியிருக்கின்றார். அதில் சிலவற்றைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். 
  • நூலில் முழுமையாக இடம்பெறும் 2 பேட்டிகள் 
  • நாடாளுமன்ற உரை
  • இவரது மரணம் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் பொது மக்களால் கேட்கப்பட்ட கேள்விகளின் தொகுப்பு 
  • அப்போலோவில் இறுதி நாட்கள் - புள்ளி விவரத்துடன் தேதி வாரியாக 
  • சொத்துக் குவிப்பு வழக்கின் முழு விபரங்கள் - நீதிபதி குன்ஹா அறிக்கை, மேல்முறையீட்டுத் தகவல்கள் 
  • சொத்து குவிப்பு வழக்கு கால அட்டவணை 
  • முழுமையான சொத்து விவரங்கள், சொத்து மதிப்பு 
  • அவர் பெற்ற விருதுகள்

நூல் ஆசிரியர் சந்திரிகா அவர்கள் ஜெயலலிதா அம்மையாரை நேரில் சந்தித்து அவருடன் சில பணிகளில் இணைந்து செயலாற்றியவர் . சட்டத்துறை வல்லுநர் என்பதால் இந்த நூலை மிகக் கவனமாக ஆதாரப்பூர்வமான தகவல்களை மட்டுமே திரட்டி நூலாக வழங்கியிருக்கின்றார். 

கடந்த நூற்றாண்டின் ஆணாதிக்க அரசியல் சூழலில் அம்மையார் ஜெயலலிதாவின் வாழ்க்கை பயணம் என்பது முள் வேலிக்குள் எடுத்து வைத்த அடிகளாகத்தான் அமைந்திருந்தன. எளிமையான பெண்ணாக இருந்து கனவுக்கன்னியாக வளர்ந்து அரசியல் சாணக்கியம் கற்று, தன் தவற்றால் வீழ்ந்து மீண்டு வளர்ந்து தன் இறுதி நாள் வரை அரசியலில் இரும்பும் பெண்மணியாக வலம் வந்தவர் அம்மையார் ஜெயலலிதா அவர்கள். இவர் விட்டுச் சென்ற அ.தி.மு.க எனும் அரசியல் கட்சி இன்றைய நடப்புச் சூழலைக் காணும் போது மிகவும் பின் தங்கிச் செல்லும் அபாயத்தை வெளிக்காட்டுகின்றது. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா என்ற இரண்டு சகாப்தங்கள் மட்டுமே அ.தி.மு.க என்ற இந்த அரசியல் கட்சிக்கு இருந்த பலங்கள். அடுத்து வரும் இக்கட்சியின் தொண்டர்கள் தங்கள் முன்னாள் தலைமையின் செயல் திறமையைக் கருத்தில் கொண்டு திட்டங்களையும் வியூகங்களையும் மக்கள் நலம் சார்ந்த செயல்பாடுகளையும் முன்னெடுத்தால் மட்டுமே அ.தி.மு.க அரசியல் தளத்தில் தொடர்ந்து நடைபோடலாம். 



முனைவர்.க.சுபாஷிணி