Friday, November 28, 2003

Matrix IV

இணையத்தில் கிடைத்த ஒரு movie clip ஒன்று இன்று என்னை வயிறு வலிக்க சிரிக்க வைத்து விட்டது. நீங்களும் அதைப் பார்த்து மகிழ உங்களுக்குக்காக எனது வலைப்பக்கத்தில் சேர்த்திருக்கிறேன். இங்கே பாருங்கள். (Windows Media Player இருந்தால் நன்றாகப் பார்க்கலாம்)

Matrix நான் ரசித்துப் பார்த்த படம். அதில் புதிதாக வந்திருக்கும் Matrix Revolution-க்கு அடுத்ததாக நினைத்து இந்த சிறிய Trailer உருவாக்கியிருக்கின்றனர். பார்த்து மகிழுங்கள். உங்களுக்கும் சிரித்து சிரித்து வயிறு புண்ணாகப்போவது நிச்சயம்.

Wednesday, November 26, 2003

Work Life

அலுவலகத்தில் அதிக நேரம் செலவழிக்கின்றேன் என்று அன்பானவர்கள் என் மேல் கோபப்பட்டுக் கொள்வார்கள். பற்பல தொடர் பிரச்சனைகளைக் கணினிகள் வழங்கிக் கொண்டிருக்கும் போது வேலையை அப்படியே விட்டு விட்டு 5 மணிக்கெல்லாம் வீடு திரும்பலாம் என்பதெல்லாம் சாத்தியப்படுத்தப்பட முடியாத ஒன்றாகி விட்ட நிலை. வேலையில் நம்மை மறந்து மூழ்கிப் போய்விடும் போது, நேரம் செல்வதே தெரியாமல் போய்விடுகின்றது. அதிலும் குறிப்பாக கடந்த இரண்டு மாதமாக என்னையே மறந்து விடச்செய்யக்கூடிய வகையில் வேலை பளு அதிகரித்து விட்டமையால் வார இறுதி நாட்களிலும் அலுவலகத்திலேயே 'இனிமையாக' பொழுதைக் கழித்துக் கொண்டிருக்கின்றேன்.

காலையில் எழுந்ததிலிருந்து இரவு வரை அலுவலகமே கதி. சில நேரங்கங்களில் அலுவலகம் தான் புகுந்த வீடாகி விட்டதோ என்ற நிலை தான் மனதில் தோன்றுகின்றது!
நம்மில் பலருக்கு இப்படிப்பட்ட நிலை தவிர்க்கமுடியாத ஒன்று தான் என்பதை நான் அறிந்திருக்கின்றேன். வேலையில் மூழ்கி அதிலேயே மெய்மறந்து போய்விடும் நிலை என்பது வற்புறுத்தலால் வருவதில்லை. ஒரு கடமையில் ஈடுபாடு இருக்கும் போது, அதனை மனம் விரும்பும் போது மனதில் மற்ற எண்ணங்கள் தோன்றாமல் அலுவலகமே கதி என்ற நிலமைக்கு வந்து விடுகிறோம் என்றே நினைக்கின்றேன்.

நம்மை மறந்து இப்படி வேலையிலேயே மூழ்கிப்போய்விடுவதால் சில வேளைகளில் வெளி உலக விஷயங்களைப் பற்றி அறிந்து கொள்வதற்கான வாய்ப்பு குறைந்து விடுகின்றது. ஆனாலும் இணையம் தந்திருக்கும் வாய்ப்பு என்பது உலகின் எல்லா மூலைகளிலும் நடக்கும் பல விஷயங்களைத் தெரிந்து கொள்ளும் நிலையை வழங்கியிருப்பதால் 24 மணி நேரமும் இணையத் தொடர்புள்ள வகையிலான தொழிலில் ஈடுபட்டிருக்கும் என்போன்றவர்களுக்கு இந்தப் பிரச்சனை ஏற்படுவதில்லை. மின்னஞ்சல் மூலமாகவும் MMS SMS வழியாகவும் உடனுக்குடன் நண்பர்களுடனும் உறவினர்களுடன் தொடர்பு கொள்ளவும் முடிகின்றது. தொலைத் தொடர்பு தொழில் நுட்ப வளர்ச்சியினால் தான் இம்மாதிரியான பிரச்சனைகளை சமாளிப்பது சாத்தியமாகின்றது. ஆனாலும் பல நேரங்களில் அலுவலகமே உலகம் என்ற நிலையை படிப்படியாக இந்தப் போக்கு வளர்ப்பதையும் பார்க்க முடிகின்றது. எப்படி இந்த நிலையை சமாளிப்பது என்பது தான் பிரச்சனையே!

Monday, November 24, 2003

Friendship

நல்ல நண்பர்கள் அமைவது என்பது சாதாரண ஒரு விஷயமில்லை என்பதை வாழ்க்கை அனுபவம் கற்றுக் கொடுக்கின்றது. இளம் வயதில் பள்ளி நாட்களில் என்னோடு சேர்ந்து படித்த நண்பர்களில் இரண்டு பேர்தான் இன்றளவும் என்னோடு தொடர்புடன் இருக்கின்றனர். !இவர்கள் இருவரும் எனது இனிய தோழிகள். மற்ற நண்பர்கள் எல்லாம் எங்கே என்ன செய்கின்றார்கள் என்பது கூடத் தெரிவதில்லை.

உற்ற நண்பர்களாக பள்ளிக் காலத்தில் இருந்தாலும் காலம் ஏற்படுத்தும் பிரிவு நாள்பட நாள்பட ஒருவரை ஒருவர் மறக்கும் அளவிற்குக் கொண்டு சென்று விடுகின்றது. காலம் செல்லச் செல்ல பல புதிய நண்பர்கள் அறிமுகமாகின்றார்கள். நண்பர்கள் என்பவர்கள் ஓரளவிற்காவது ஒத்த சிந்தனையுடையவர்களாக இருந்தால் தான் அந்த நட்பில் இனிமையை உணரமுடிகின்றது. ஓரளவேனும் மன அலைகள் ஒத்தவர்களாக இருக்க வேண்டும். ஓரளவிற்காவது சில விஷயங்களில் ஒரே மாதிரியான விருப்பம் இருக்க வேண்டும். அப்படி இல்லாத பட்சத்தில் நட்பு வளர்வதற்கு பதிலாக வெறுப்பு வளர்வதற்கான நிலை ஏற்பட்டு விடுகின்றது.

நல்ல நண்பர்கள் என்பவர்கள் பொழுதை இனிமையாகக் கழிப்பதற்கு மட்டுமல்ல; மாறாக மனதில் பிரச்சனைகளும் கவலைகளும் தோன்றும் போது அதனை பகிர்ந்து கொள்வதற்கும் தேவை. நன்றாக நம்மை புரிந்து கொண்டவர்கள் தான் நண்பர்களாக இருக்க முடியும். புரிந்துணர்வு இல்லாமல் ஏதாவது ஒரு தேவைக்காக உறவை வளர்த்துக் கொள்ளும் போது அங்கே உண்மையான நட்பு இல்லாமல் போய்விடுகின்றது. சில வேளைகளில் நண்பர்களால் உருவாகின்ற பிரச்சனைகளை பார்க்கும் போது இந்த மாதிரி நட்பு தேவையே

இல்லை என்றே எண்ணத் தோன்றுகின்றது. ஒரு சிலர், நண்பர்களை அவர்களது பலகீனத்தை கேலி செய்தே சந்தோஷமடைபவர்களாகவும் இருக்கின்றனர். இவர்களை எப்படி நண்பர்கள் என்று சொல்லிக் கொள்வது?

மனிதர்கள் மாத்திரம் தான் நண்பர்களாக இருக்க முடியும் என்பதல்ல. புத்தகங்களும் கூட நமக்கு நல்ல நண்பர்களாகலாம்; மனதிற்குப் பிடித்த விஷயங்களை அவை தெளிவுபட நமக்கு விவரிக்கும் போது!

Wednesday, November 19, 2003

Vairamuthu



ஒரு உண்மையை ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும். 8 நாட்களுக்கு முன்னர் வரை நான் வைரமுத்துவின் 'புத்தகம்' எதையும் வாசித்ததில்லை.

வைரமுத்துவின் பாடல்களைப், பேச்சுக்களைக் கேட்டதில்லையா என என்னைக் கேட்டு விடாதீர்கள். அவை வேறு; அவரது புத்தகத்தில் உள்ள எழுத்துக்கள் வேறு. இணையம் வழி தேர்வு செய்து வாங்கிய நூற்களில் வைரமுத்துவின் 'சிகரங்களை நோக்கி' என்ற புத்தகமும் ஒன்று. 1992-ல் வெளியிடப்பட்ட நூல் இதுவரை 11 மறுபதிப்புக்களை 2003 வரை கண்டிருக்கின்றது. இந்த விபரமே இவரது எழுத்தின் பிரபல்யத்தை வெளிக்க்காட்டுகின்றது.

வைரமுத்துவின் தனிப்பட்ட கொள்கைகள் எனக்குத் தெரியாது. ஆனால் இந்த ஒரு நூலில் அவர் தன்னை ஓரளவு வெளிப்படுத்த முயற்சிக்கின்றார் என்பது உண்மை. தத்துவ விசாரணையை மனிதர் எளிமையாய் கவிதை வரிகள் மனதில் பதியும் வகையில் படைக்கின்றார். படிக்கும் போது பேனாவை வைத்துக் கொண்டு எனக்குப் பிடித்த வரிகளை நான் கோடிடுவது வழக்கம். அதேபோல கோடிடலாம் என்று முயற்சித்தால் ஒரு பக்கத்திலுள்ள முக்கால்வாசி வரிகளை கோடிட்டே ஆக வேண்டும். பளிச்சென்று ஆழமான தத்துவங்களை எளிமையாக கொடுக்கின்றார். தத்துவம் மட்டும் தான் என்பதல்ல. காதலை விபரிப்பதிலும் அழகு தெரிக்கின்றது.


புத்தகத்தில் பக்கம் 59.
***********************

ஓவியா என்ற அறிவார்ந்த அழகிய பெண்ணை இயற்கைப் பிரியனான கவிஞன் காண்கிறான். அவள் மேல் காதல் வருகின்றது. அவனது உணர்வுகளை வெளிப்படுத்தும் விதம் அழகு.

'உதடு ஒரு முறை உச்சரித்தாலும் இருதயப் பாறையெங்கும் அவள் பெயர் ஒலித்தது"

"உன்னை மீண்டும் காண்பேனா ஓவியா..? அப்படிச் சந்திக்க முடியாவிட்டால்? இப்படித்தான் விளம்பரம் கொடுக்க வேண்டும். "காணவில்லை! கண்டுபிடியுங்கள்! பெயர்:மின்னல்"

புத்தகத்தை இன்னமும் வாசித்து முடிக்கவில்லை. இன்றைக்கு இரவும் தொடர வேண்டும்.

Saturday, November 15, 2003

Kannathaasan QA -2

கண்ணதாசனின் கேள்வி பதில்கள் பகுதியிலிருந்து மேலும் ஒன்று.

[ கே: ஆண்டவன் படைப்பில் உங்களை அதிசயிக்க வைத்தது எது?

பதில்: சிலந்தி கூடு கட்டுவது. எந்த இஞ்சினியரை வேண்டுமானாலும் கூப்பிட்டுக் கேளுங்கள். அவ்வளவு முறையாக எவனுக்கும் கட்டத் தெரியாது. ]

இப்போது கண்ணதாசன் உயிரோடு இருந்திருந்தால் இணையத்தின் வழி நடந்து கொண்டிருக்கும் வலைப்பின்னலைப் பார்த்து தான் அதிசப்பட்டுப் போயிருப்பார் என்று நினைக்கின்றேன்.

அது இருக்கட்டும். இந்த சிலந்தி என்றவுடன் தான் ஒன்று ஞாபகமே வருகிறது. பூச்சிகளைக் கண்டு பலரும் பயப்படுவார்கள் என்பது தெரிந்த செய்திதான். அதிலும் குறிப்பாக என்னை மிக மிக பயமுறுத்திய பூச்சி சிலந்திதான். என்ன காரணம் என்றே தெரியாது. சிலந்திப் பூச்சியைப் பார்த்தாலே எனக்கு உதறல் எடுத்து விடும்; அவ்வளவு பயம். ஆஸ்திரேலியாவில் பல்கலைக்கழகத்தில் மாணவர் விடுதிக்குச் சென்ற முதல் நாள் எங்களுக்குப் பாதுகாப்பு விபரங்களை வழங்குவதற்காக வந்திருந்தவர் எங்களுக்கு இந்தச் சிலந்திப் பூச்சிகளைப் பற்றியும் கொஞ்சம் அதிகமாகவே எச்சரிக்கைக் கொடுத்திருந்தார். ஆஸ்திரேலியாவில் இருக்கும் சிலந்திப் பூச்சிகள் கொடிய விஷம் கொண்டவை. அதனால் அறையில் எப்போதும் ஒரு விதமான மருந்தை தெளிக்க வேண்டும் என்று எச்சரித்திருந்தார்கள். எனது படுக்கையைச் சோதித்த எனக்கும் முதல் நாளே ஒரு சிலந்திப் பூச்சியின் பூத உடல் கிடைக்கத்தான் செய்தது.

Thursday, November 13, 2003

Kannathaasan - QA

புதிதாக நான் இணையம் வழி வாங்கியிருந்த புத்தகங்கள் நேற்று வந்து சேர்ந்திருந்தன. (இணைய புத்தகக் கடைகளை அறிமுகப்படுத்திய நண்பர்கள் ராஜு, ரமணி மற்றும் ராஜரத்தினம் ஆகியோருக்கு மிக்க நன்றி) அதில் ஒன்று மிகச் சிறிய நூலான "கண்ணதாசனின் கேள்விகளும் பதிலும்" என்ற நூல். மிகச் சிறிய கையடக்கமான ஒரு நூலாக இருந்ததால் உடனே திறந்து வாசிக்க ஆரம்பித்தேன். பத்திரிக்கைகள் வழியாக கண்ணதாசனிடம் கேட்கப்பட்ட கேள்விகளும் அதற்கான பதிலுமாக அமைந்த தொகுப்பு தான் இந்த சிறிய நூல். அதில் ஒரு கேள்விக்கு கண்ணதாசனின் வில்லங்கமான பதில்.

கே: பெண்களையே கவிதை வடிக்கிறீர்களே? எங்கே ஆண்களைப் பற்றி சிறு கவிதை பாடுங்கள்....

பதில்: என்னுடைய மூதாதையரைவிட நான் கெட்டிக்காரன் அல்ல. ஆண் என்பவனே அபத்தம். அவனைப்பற்றிப்
பாடுவதற்கு என்ன இருக்கின்றது?

எப்படி இருக்கின்றது பதில்..??..:-) கண்ணதாசன் நகைச்சுவை உணர்வும் நிறம்பியவராகத் தான் இருந்திருக்க வேண்டும் இல்லையா..?

Tuesday, November 11, 2003

JK's Letters to the Schools - 9

15 November 1982
..... A relationship is a process of learning. A relationship is not a static affair but a living movement and so it is never the same. What it was yesterday it is not today. When yesterday dominates in relationship, then relationship is what it was, not a living thing. ..

உலகம் கணம் கணம் மாறிக் கொண்டேயிருக்கின்றது. உயிருள்ள பொருள்கள் மாறுகின்றன; உயிரற்ற பொருட்களும் மாறுகின்றன. அதோடு மனித மனங்களும் மாறிக் கொண்டேயிருக்கின்றன. ஒவ்வொரு நிமிடமும் வாழ்க்கையில் கற்றுக் கொண்டேயிருப்பது தெரிகின்றது. வாழ்க்கை அனுபவம் புகட்டும் பாடத்தில் மனித மனங்களில் மாற்றங்கள் தென்படுவது மிக மிக சகஜம்.

ஒரு உறவு என்பது எப்படி அமைகின்றது என்பது மிகவும் சூட்சமமான விஷயமாகப் படுகின்றது. உலகில் பிறக்கும் போதே உறவுகலுடனேயே பிறக்கின்றோம். உலகுக்கு வந்த காரணத்தைப் புரிந்து கொண்டு கடமையைச் செய்கின்றோமோ இல்லையோ ஆனால் உறவுகளின் வட்டத்தை பெறுக்கி அதில் இன்பம் காண்பதை வளர்த்துக் கொள்கின்றோம். இயற்கை அதில் இன்பத்தை வைத்திருக்கின்றது.

உறவுகளைச் சட்டங்களைப் போட்டு வைத்து பாதுகாப்பது என்பது முடியாத காரியம். ஒரு குழந்தை தனது பெற்றோரிடம் இப்படித்தான் நடக்க வேண்டும் என்று ஏதாவது சட்டம் இருக்கின்றதா? இளம் வயதில் கஷ்டப்பட்டு வளர்த்த பெற்றோர்களை அவர்கள் வயதான பிறகு பாதுகாப்பது ஒரு மகன் அல்லது மகளின் கடமை என்று சட்டம் இருக்கின்றதா..? அல்லது இப்படிப்பட்ட சட்டங்கள் தான் தேவையா? சட்டங்களைக் கொண்டு மனித உறவுகளை கட்டிக் காக்க முடியுமா..?

உறவுகளின் தன்மை மாறிக் கொண்டே தான் இருக்கும். இது காலத்தின் கட்டாயம். சிந்தனை வளர்ச்சி; உலக அறிவு; வாழ்க்கை தெளிவு; வாழ்க்கைப் பாடம் புகட்டும் ஞானம் இவையெல்லாம் சேர்ந்து மனித மனங்களில் வளர்ந்திருக்கும் உறவுகளின் தன்மைகளை மாற்றிக் கொண்டே தான் இருக்கின்றன. 'அன்பு' என்ற ஒன்று இருந்தாலும் அது வெளிப்படும் தன்மை நாளுக்கு நாள் மாற்றம் கண்டு கொண்டே தான் இருக்கும். உறவுகளில் ஏற்படுகின்ற எல்லா பிரச்சனைகளுக்குமே மூல காரணமாக அமைந்து விடுவது 'நமது எதிர்பார்ப்புக்கள்' தான். எதிர்பார்ப்புக்கள் இல்லாமல் வாழ்வது மனித உடலெடுத்த நமக்கு கஷ்டமான ஒன்று. எதிலும் ஒரு எதிர்பார்ப்பு இருப்பதால் தான் வாழ்க்கையிலும் முன்னேற்றத்தைக் காணமுடியும். ஆனால் அதே சமயத்தில், எதிர்பார்ப்புக்களால் ஏற்படும் மன வேதனைகளையும்
மறுப்பதற்கில்லை.

அவரவர் கடமையை அவரவர் செய்தால் எங்கே பிரச்சனை வரப்போகின்றது? மனதில் தூய்மையும் தெளிவும் இருந்தால் ஏன் பிறரை தனது சுய சந்தோஷத்திற்காக பலியாக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றப்போகின்றது? வாழ்க்கையில் அனுபவிக்கின்ற அனைத்து பிரச்சனைகளுமே மாந்தர்கள் அனைவரும் நீதியுடனும், கடமை உணர்வுடனும் இருந்து விட்டால் தோன்றப் போவதில்லை. உலகம் பிரச்சனைகள் நிரம்பியதே. மனிதர்கள் பல வகை; அவர்களின் பக்குவத்திற்கேற்ற சிந்தனை போக்கு; வாழ்க்கை முறை. பிரச்சனைகள் நிரம்பிய இந்த உலகத்தில் இன்பத்திற்கும் பஞ்சமில்லை. பிரச்சனைகளை மட்டுமே சிந்தித்துக் கொண்டிருக்கும் வரை உலகில் இறைவன் வழங்கியிருக்கும் இன்பங்களை ரசிக்கும் தனமையை இழந்து விடுகின்றோம். பாரதியார் 'எத்தனை கோடி இன்பம் வைத்தாய் எங்கள் இறைவா..? என்று எவ்வளவு அழகாகப் பாடுகின்றார். (பாடல் முழுமையும் Suba's Musings எனும் எனது வலைப்பூவில் Oct 14ம் திகதிக்கான குறிப்பில் இருக்கின்றது)

இசையில் இன்பம்; சிரிப்பில் இன்பம்; அன்பில் இன்பம்; வெற்றியில் இன்பம்; தியாகத்தில் இன்பம்; கடமையைச் செய்வதில் இன்பம்; இறைவனோடு கலப்பதில் இன்பம்; இப்படி எத்தனை எத்தனையோ இன்பங்கள் இருக்கின்றன. ஆனால் அதனை அனுபவிக்கும் எளிமையான மனம் நமக்கு இருக்கின்றதா என்பதே கேள்விக் குறி!

Monday, November 10, 2003

Back to weblog ...

கடந்த நான்கு நாட்களாக அலுவல வேலையில் மாட்டிக் கொண்டதால் தகவல் பறிமாறிக் கொள்ள முடியவில்லை. நான்கு நாட்கள் அமைந்த எனது Basel அலுவலக பயணத்தைப் பற்றிய சிறிய பயணத் தொடரை Germany in Focus வலைப்பூவில்[ http://subaonline.log.ag ] எழுத ஆரம்பித்திருக்கிறேன். அலுவலக வேலைகளில் மாட்டிக் கொள்ளும் போது வலை சஞ்சாரம் செய்ய முடிவதில்லை. வெளி உலகத்திலிருந்து தனித்துப் போய்விட்ட உணர்வுதான் தோன்றுகின்றது. என்ன செய்வது. இது தவிர்க்க முடியாத ஒன்று தானே!

Thursday, November 6, 2003

Jaws



கடலில் விளையாடுவது என்பது சந்தோஷமான ஒரு விஷயம்தான். பல மணி நேரங்கள் நண்பர்களோடு கடற்கரையில் மணல் வீடு கட்டி விளையாடுவது என்றால் எனக்கும் என் நண்பர்களுக்கும் மிகவும் பிடிக்கும். பினாங்குத் தீவில் இருந்ததால் சிறிய வயதிலிருந்தே கடற்கறைக்கு ஏறக்குறைய ஒவ்வொரு வார இறுதியிலும் விளையாடுவதற்காகச் சென்று விடுவோம்.

அப்போது தான் ஸ்பீல்பெர்க்கின் Jaws ஆங்கிலப்படம் திரையரங்குகளில் வந்திருந்தது. இம்மாதிரியான படங்களைப் பார்ப்பதென்றால் எனக்கு ஏகப்பட்ட சந்தோஷம். வீட்டில் அனைவரையும் வற்புறுத்திக் கேட்டு அந்தப்படம் பார்க்கச் சொன்றிருந்தோம். படம் பார்க்கும் போது அவ்வளவு திகிலாகவும், குஷியாகவும் இருந்தது. ஆனால் அதற்கு பிறகு நடந்தது தான் பிரச்சனையே.

Jaws படத்தைப் பார்த்ததிலிருந்து எப்போது கடற்கரைக்குச் சென்றாலும் கடலில் சுராமீன் வாயைத் திறந்து கொண்டு என்னை கடிக்க வருவதாக ஒரு அனாவசியக் கற்பனை. கடலில் கொஞ்ச தூரம் சென்று விளையாடுவேன். பிறகு மீன் வந்து கடித்து விடும் என பயந்து ஓடி வந்து விடுவேன். கடற்கரையில் மீன் பிடிக்கும் சிறிய படகுகளில் கயிறு கட்டி வைத்திருப்பார்கள். தண்ணீரில் நிற்கும் போது அந்த கயிறு காலில் பட்டு விட்டாலும் மீன் கடிக்க வந்து விட்டது என்று கத்திக் கொண்டு ஓடி வருவேன். அப்படி ஒரு பயம். பல ஆண்டுகள் ஆனது எனக்கு இந்த பயம் தொலைவதற்கு.

சினிமா படங்களினால் பல பாதிப்புக்கள்; அதிலும் குழந்தைகளுக்கு எம்மாதிரியான உளவியல் பாதிப்புக்கள் ஏற்படக்கூடும் என்பதை இந்த மாதிரியான சுய அனுபவத்திலேயே தெரிந்து கொள்ள முடிகின்றது.

Monday, November 3, 2003

மெயிலில் எச்சரிக்கை - கவிதை

ஜெர்மனியில் முனைவர் பட்ட ஆராய்ச்சிக்காக வந்திருக்கும் இனிய நண்பர் அமிர்தராஜ் ஒரு நல்ல கவிஞர். தேவாலயத்தில் பாதிரியாராக பொறுப்பேற்றுக் கொண்டே தமிழ் இலக்கியத்தில், குறிப்பாக கவிதைகள் எழுதுவதில் ஈடுபட்டு வருகின்றார். இவரது கவிதகளில் சிலவற்றை எனது தமிழ்வலைப்பக்கத்தில் சேர்த்திருக்கின்றேன்.

http://www.subaonline.de/tamil/kavikaru.html
இங்குள்ள இலங்கைத் தமிழ் மக்களின் வாழ்க்கையை அடிப்படியாக வைத்து ஒரு கவிதைத் தொகுப்பாக 20 கவிதைகளை எழுதியிருந்தார். வெளிவராத அந்தத் தொகுப்பில் இருந்து ஒரு கவிதை.

மெயிலில் எச்சரிக்கை
ஆ.அமிர்தராஜ்
Wuerzburg, Germany

தயாராக உள்ள உன்
தங்கச் செயின்
தேவையில்லை
(சே! அடுத்தென்ன
கர்மம்? மேளமா? தாலியா?
தங்கத் தாலியும் வேலியே!)

தலைபோகும்
இக்காதலிட்டும்
என்
நீண்ட கழுத்தின்
அழகை
நகை மாட்டி அலட்டிக்
கெடுக்க மட்டேன்
தங்க இருநாள் கொடு.

வெறும் பூ நகைப்பால் வாட்டி
மயக்கிக்
கெடுப்பேன் உன்னை
(இன்னும் கைப்படாத
ராஜாவா நீ)
சிறு பிராய சிநேகிதியின்
சின்ன சமரசமாய்
காதில் இரு பவளங்கள்
போட்டிருப்பேன். போதுமா?

வந்ததும்
கும்பலில் உன்னை
தேடி நானேப் பிடிப்பேன்.
வெந்து தாமதியாமல்
கண்டதும் கெடுப்பேன்
சூடாய் கடித்து!
முள்ளில்லா ரோஜா வருகிறேன்.
தயாரா?

Sunday, November 2, 2003

JK's Letters to the Schools - 8



1 Oct 1982
Mind is infinite, is the nature of the universe which has its own order, has its own immense energy. It is everlastingly free. The brain, as it is now, is the slave of knowledge and so is limited, finite, fragmentary. When the brain frees itself from its conditioning, then the brain is infinite.... - J.K.

மேல் உள்ள வாசகத்தை வாசித்த போது என்னுள்ளே எழுந்த எனது சிந்தனை....கீழே தொடர்கின்றது.

சுதந்திரக் காற்றை சுவாசிப்பதற்காகவே என் மனம் யாசிக்கின்றது. என் எண்ணங்கள் சுதந்திரமாக வெளிப்படும் போது என் மனதிற்கு அமைதியும் அலாதியான சந்தோஷமும் கிடைக்கின்றன.

ஒரு நண்பர்  ஒருவர் ஒரு முறை சொன்ன வாசகங்கள். "இப்போதெல்லாம் நமக்கு எங்கே சுதந்திரம் இருக்கின்றது. வெளி உலகத்தில் மட்டும் தான் நமது சுதந்திரம் பறிக்கப்படுகின்றது என்று நம்பிக் கொண்டிருக்கின்றோம். ஆனால் உள்ளே, நமது மனதிற்குள்ளேயே சுதந்திரம் பறிபோய்விட்ட நிலையில் நாம் இருக்கின்றோம். சமுதாயத்தின் அழுத்தம், அந்த அழுத்தம் நமது மனதிற்குள்ளே உருவாக்கும் கட்டளைகள் நம்மை நாமாக இருக்க விடுவதில்லை. பிறரது கருத்துக்கள் வலிய நமது மனதிற்குள் திணிக்கப்படுகின்றன. ஆக சுதந்திரம் அற்றவர்களாகத்தான் நாம் இருக்கின்றோம்."

இன்னொரு நண்பரிடம் பேசிக் கொண்டிருந்தேன்; தமிழர்தான். பேச்சு ஒரு விஷயத்தைப் பற்றியது. பேசும் போது தனது கருத்தைத் தெரிவித்த நண்பர், எனது கருத்தை நான் சொல்ல எத்தனிக்கும் போது உரையாடலை மாற்றி அவர் சொல்வதுதான் சரி என்று அந்த உரையாடலுக்கு முற்றுப் புள்ளி வைத்து விட்டார். நான் சொல்ல வந்த கருத்தைக் கேட்க அவருக்கு விருப்பமில்லை; ஏனென்றால் எற்கனவே அவரது மனதிற்குள் தனது கருத்துக்கள் எல்லாமே சரியானவை; முழுதும் சரியானவை என்ற அசைக்க முடியாத நம்பிக்கை. என்னுடைய கருத்தைத் தெரிவிக்க அங்கு சுதந்திரம் இல்லை. இதேபோல பல வேளைகளில், பலரோடு பேசும் போது இந்த வகை அனுபவம் எனக்கு ஏற்பட்டிருக்கின்றது. கலந்துரையாடல் என்ற பெயரில் ஆரம்பிக்கப்படும் ஒரு விஷயம் ego என்ற ஒன்று வந்து மோதும் போது உடனேயே அங்கு முற்றுப்புள்ளியை வைத்துக் கொள்கின்றது.

நமது மனதிற்குள் எண்ணற்ற கருத்துக்கள் முளைக்கின்றன. அந்தக் கருத்துக்கள் எல்லாம் சரியானவைதானா என்பதை யோசிக்க வேண்டியது அவசியமாகின்றது. அப்போதுதான் "சிந்தனை வளர்ச்சி" என்ற ஒன்று தோன்றும். ஒரு உரையாடலின் போது "இந்த மேதாவி சொல்லி விட்டார்; அந்த ஞானி சொல்லிவிட்டார்; அவரது கருத்துக்கள் தான் எவ்வளவு சரியானவை; ஆக மற்றவையெல்லாம் பொய்யானவை; உனது கருத்துக்கள் முட்டாள்தனமானவை, ஏற்றுக் கொள்ளப்படமுடியாதவை" என்று ஒருவர் நினைப்பாரேயானால் அவர் சிந்தனை என்ற ஒன்றையே மறுப்பவர் என்று தான் கொள்ள முடியும்.

எதற்கெல்லாமோ சுதந்திரத்தைத் தேடிக் கொண்டிருக்கும் நாம் நமது மனதிற்குள்ளேயே பற்பல வகைகள ல் அடிமைகளாகிப் போயிருக்கின்றோம் என்பதை ஏன் சிந்திக்க மறந்து விடுகின்றோம்? ஒருவர் கூறிய விஷயத்தைக் கேட்டவுடனேயே அதை அப்படியே எந்த சிந்தனையுமின்றி எனது கருத்தாக நான் எடுத்துக் கொண்டேன் என்றால் எனக்கு உண்மையான ஆன்ம வளர்ச்சி இருக்குமா..? ஆனால், நான் கேட்ட விஷயத்தை கொஞ்சம் யோசித்து, அந்த விஷயம் எந்த வகையில் எனது சிந்தனை, அனுபவம், உலக நியதி, போன்றவற்றோடு ஒட்டியோ அல்லது மாறுபட்டோ செல்கின்றது என்று யோசித்து அதில் தேவையானதை எடுத்துக் கொண்டு தேவையற்றதை ஒதுக்கும் போதுதானே சிந்தனை வளர்ச்சி என்ற ஒன்றே தோன்றும்!

பற்பல விலங்குகளை நாமே போட்டுக் கொள்கின்றோம். அதற்கு பண்பாடு, கலாச்சாரம், சமயம் என்று அழகிய பெயர்களை அரணாகப் பயண்படுத்திக் கொள்கின்றோம். ஏன் சிந்தனையில் நமக்கு நாமே விலங்கை மேலும் மேலும் போட்டுக் கொண்டிருக்கின்றோம்?

எனக்கு நானே சிந்தனைச் சுதந்திரத்தை ஏற்படுத்திக் கொள்ளப் பழகிக் கொள்ள முடியாத போது பிறரது சுதந்திரத்தைப் பறிப்பதற்கு எந்த வகையில் எனக்கு நியாயம் இருக்கின்றது..?

Saturday, November 1, 2003

Quick Recipe - வென்பொங்கல்

நேற்று அலுவலகம் முடிந்து வீட்டுக்கு வருவதற்கு நேரமாகிவிட்டது. பசி வேறு. நம்ம ஊறு மாதிரி உடனே வெளியே போய் சாப்பிடலாம் என்றால் 9 மணிக்குத் திறந்திருக்கும் கடையைத் தேடுவதற்குள் போதும் போதும் என்றாகி விடும். என்ன சமையல் செய்வதென்று வீட்டிற்கு வந்து கொண்டிருக்கும் வழியிலேயே யோசிக்க ஆரம்பித்து விட்டேன். சாத வகையறாக்களில் ஏதாவது செய்யலாம் என்று தோன்றியது. வீட்டிற்கு வந்ததும் முதல் வேலையாக எனது சமையலறையில் இருக்கும் புத்தகங்களில் 'மணக்க மணக்க சமையல்' என்ற புத்தகத்தை எடுத்து சாத வகையாறாக்களில் தேட ஆரம்பித்தேன். 2 வகை வெண்பொங்கலைப் பார்த்ததும் அதில் ஒன்றையே செய்யலாம் என முடிவெடுத்து 20 நிமிடத்திற்குள் அருமையான இரவு உணவை செய்து முடித்தேன். சுவைத்தும் சாப்பிட்டேன். இந்த recipe மிகச் சுலபமாக செய்யக் கூடிய ஒன்றாக இருக்கின்றது. படிக்கின்ற நீங்களும் அவசர வேளைகளில் இதனை செய்து பார்க்கலாமே என்ற எண்ணத்தில் உங்களுக்காகவும் இதனைத் தருகின்றேன்.

தேவையான பொருட்கள்:


1/2 கப் அரிசி 1/2 கப் (கொஞ்சம் குறைச்சலாக) பாசிப் பருப்பு கொஞ்சம் கருப்பு மிளகு (8 போதும்) - தூளாக்கிக் கொள்ளவும் கொஞ்சம் ஜீரகம் (1 தேக்கரண்டி) - பாதிப் பாதியாக தூளாக்கிக் கொள்ளவும் 10 முந்திரிப்பருப்பு - பாதியாக உடைத்துக் கொள்ளவும் கொஞ்சம் இஞ்சி உப்பு 1 1/2 கரண்டி நெய்

செய்யும் முறை


1.அரிசியையும் பாசிப்பருப்பையும் கழுவி பின்னர் எப்போதும் சாதத்திற்கு விடுவதற்கு 2 மடங்கு மேலாக தண்ணீர் விட்டு, உப்பையும் சேர்த்து rice cooker- ரில் வேகவிடுங்கள்.

2.ஒரு சிறிய பாத்திரத்தில் 1 1/2 கரண்டி நெய் விட்டு சூடானதும், மிளகு மற்றும் ஜீரகத்தைப் போட்டு 1 நிமிடம் வதக்கி, அதோடு இஞ்சியைப் போட்டு வதக்கிக் கொள்ளுங்கள். இப்போது முந்திரிப்பருப்பையும் சேர்த்து, கொஞ்சம் நிறம் வரும் வரை வதக்கி அடுப்பை நிறுத்தி விடுங்கள்.

3. சாதம் வெந்தவுடன் இந்தக் கலவையை cooker- ரில் போட்டு நன்றாக கிளருங்கள்.அவ்வளவுதான். வென்பொங்கல் தயார். கொஞ்சம் ஊருகாய் சேர்த்துச் சாப்பிட்டுப் பாருங்கள். இதன் ருசியே தனிதான்.!

கண்ணனின் வலைப்பூவில் சில சமையல் குறிப்புக்கள் இருக்கின்றன. பார்த்திருக்கின்றீர்களா? உருளைக் கிழங்கைச் சிக்கிரமாக வேக வைப்பதற்கான டிப்ஸை அங்கே இருந்து தான் கற்றுக் கொண்டேன்!