Saturday, June 20, 2015

என் டைரியிலிருந்து.... சில குறிப்புகள்..!

தமிழ் வாசகர், படைப்பாளர்கள் சிந்தனைகளில் அச்சம் மிக வேறூன்றிவிட்டிருக்கின்றதோ என அய்யப்படுகின்றேன்.

இயல்பான விசயங்களைப் பற்றி பேசி அதனை இலக்கியமாக்கும் தன்மை என்பதனை ஏற்று பெருமை படுத்தத் தயங்கும் மனம், பக்தி.. இறைமை, தமிழ் மொழி பற்றிய சிந்தனை என்பதை மட்டுமே மிகப் போற்றுகின்றது. பக்தியைப் பற்றியும் .. சமயத்தில் தோய்ந்து போன தன் எண்ணங்களைப் பற்றியும்.. சில மகான்களைப் பற்றியும்.. தான் பிடித்துக் கொண்டுள்ள சமயங்களின் நல்ல பண்புகளைப் பற்றியும், மொழி பாதுகாப்பு  பற்றியும் எழுதுவதை தமிழ் சமூகத்து வாசகர்கள் மிக விரும்புவதாக பலர் நம்புகின்றோம்.

இயல்பாக நோக்கினால் ஒவ்வொருவரும் தான் தினம் தினம் அனுபவிக்கும் அனுபங்கள்... அவை  நமக்குச் சொல்லிச் செல்லும் பல்தரப்பட்ட விசயங்கள் ஆகியவற்றை மனம் அலசுவது என்பவை  வாழ்க்கையில் புதுக் கோணங்களைக் காட்டக் கூடியவை. அதனையெல்லாம் ஒதுக்கி விட்டு பக்தி மொழி என்ற இரண்டு விசயங்களுக்குள் மட்டுமே நம் எழுத்துப் படைப்புக்களுக்கான சிந்தனையைச் சுருக்குவதை 'படைப்பில் வறுமையாகவே' கருதுகின்றேன். பக்தியில் தான் தோய்ந்த அனுபவத்தை, தன் மனம் எவ்வாறு இறை நம்பிக்கையில் உழன்று கொண்டிருக்கின்றது என்பதை வெளிப்படுத்தும் வகையில், வாசிப்போருக்கு தன்னை அடையாளம் காட்டிக் கொள்ளும் படைப்புக்களைப் படைப்பதை பலர் செய்வதை நோக்கும் போது அதன் பின்னனியில் இத்தகையோருக்கு ஆழமான அச்ச உணர்வு இருக்கின்றது என்றே கருதத் தோன்றுகின்றது.

பொதுவாகவே பக்தி, யோகம், விரதம், பக்தி இலக்கிய விமர்சனங்கள், வியாக்கியானங்கள் எனச் செய்வோரின் படைப்புக்களைப் பார்த்த உடன் பல சாமானியர்கள் அவர்களை பெரியோர், உயர்ந்தோர், கற்றோர், நாலும் தெரிந்தோர், உயர்ந்த சிந்தனை கொண்டோர் என உடன் இமேஜ் பில்டிங் செய்வதை ஆரம்பித்து விடுகின்றோம். அதே வேளை நிலத்தை பற்றியோ, நீரைப்பற்றியோ, சமூகத்தைப் பற்றியோ, உலக விசயத்தைப் பற்றியோ, அரசியல் பற்றியோ ஆய்வு செய்து எழுதும் ஒருவர், அவரது ஆய்வு மிகத் தீவிரமான பல உண்மைகளை வெளிக்காட்டும் வகையிலான ஒன்றாக இருந்தாலும் கூட முன்னவரை விட தரத்தில் கீழே வைத்துப் பார்க்கப்படும் அளவிலேயே பொதுவான தமிழ் வாசகர் சிந்தனை அமைந்திருப்பதை நான் காண்கின்றேன்.

இதற்கு எது காரணம் என்று யோசிக்கையில், மனித மனதின் உள்ளிருக்கும் அச்ச உணர்வையே இதற்கு முக்கியமாக  நான் கருதுகிறேன். தான் சரியென நினைக்கும் ஒரு விசயத்தை வெளிப்படையாக சொல்ல அச்சப்படும் பலர் தன்னை வெளிக்காட்டிக் கொள்ள எடுக்கும் சாதனமாக பக்தி சார்ந்த சிந்தனைகள் இருக்கின்றன.

ஒவ்வொரு மனிதருக்கும் தன்னை ஏதாவது ஒருவகையில் பிற மனிதர்கள் மத்தியில் வெளிப்படுத்திக்கொள்ளும் ஆர்வம் தொடர்ந்து இருக்கின்றது. எவ்வகையில் தன்னை பிறர் நோக்க வேண்டும் என்பதும், தான் இதைத்தான் சிந்திக்கின்றோம் என்பதை பிறர் அறிந்து கொள்ள வேண்டும் என்று சிந்திப்பதின் விளைவாகவும் ஒரு வகையில் எழுத்து படைப்புக்கள் உருவாகின்றன என்று கொள்ளலாம். அந்த எழுத்துப் படைப்புக்களில் ஒரு தனி மனிதரின் உள்ள உணர்வுகளை முழுமையாக வாசித்து ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம்  பொதுவான தமிழ் வாசகர் மத்தியில் மிக மிக அரிது. ஆனால் எல்லோரும் அறிந்த பக்தி ஞான விசயத்தை தன் படைப்பாக முன் வைக்கும் போது அதனை ஏற்றுக் கொள்வோர் அதிகம்.  இதன் வழி கிடைக்கப்பெறும் தனி மனித அங்கீகாரமும் மிக விரைவு, மிக எளிது.

எதிர் நீச்சலை விட சரளமாக ஓடும் நீரோடையில் அல்லது இன்னும் சொல்லப்போனால் பலர் புகழ்ந்து போற்றும் உறுதியான ஒரு பாதுகாப்பு அரனுக்குள் இருந்து கொண்டு எழுத்தாக்கங்களை படைப்பது எளிது.   மிக விரைவான  வகையில் வாசிப்போரின் அங்கீகாரத்தை, மதிப்பை, போற்றுதலைப் பெற இது  உதவுகின்றது.

தயக்கமின்றி நாம் அன்றாட வாழ்வில் காணும் விசயங்களை, நம் மனதில் எழும் எண்ணங்களை, கருத்துக்களை, உலக நடப்புக்களை எழுத்துப் படைப்புக்களாக  உருவாக்க வேண்டும்.  பிறரின் அங்கீகாரத்திற்காகத்தான் எழுதுகின்றோமா என்பதை விட எத்தகைய மாறுபட்ட விசயங்களைப் பற்றி எழுதுகின்றோம்.. நாம் எவ்வளவு தூரம் இந்த உலகை கற்றுக்கொண்டிருக்கின்றோம் என்பதை அச்சமின்றி வெளிப்படுத்த முனைவது தமிழில் இக்கால நடைமுறைக்கு ஏற்ற படைப்புக்கள் உருவாக்கம் பெற அத்தியாவசியமான ஒன்றாகின்றது.

Sunday, June 7, 2015

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 82

புதிய வாழ்வு எனும் அத்தியாயத்தில் உ.வே.சா தானே தன் வாழ்க்கை மாற்றத்தை பதிகின்றார், இப்படி.

"1880-ஆம் வருஷம் பிப்ரவரி மாதம் 12 உ வியாழக்கிழமை பொழுது விடிந்தது. அன்று காலையில் நான் வழக்கம்போலவே உத்ஸாகத்தோடு இருந்தேன். திருவாவடுதுறை ஆதீனத்தின் சார்பு என்னை நல்ல நிலைமையில் வைத்து வளர்த்து வரும் என்ற எண்ணம் எனக்கும் என்னைச் சார்ந்தவர்களுக்கும் இருந்தது. என் வாழ்வில் ஒரு விதமான அமைதி ஏற்பட்டு விட்டதாகவே நான் கருதினேன். பிள்ளையவர்களுடைய பதவியை வகிக்கும் தகுதி என்னிடம் இராவிட்டாலும் அவரது மாணாக்க பரம்பரையை விருத்தி செய்யும் தொண்டே எனது வாழ்க்கைப் பணியாக இருக்குமென்று எதிர் பார்த்தேன்.

ஆனால் கடவுளுடைய எண்ணம் வேறு விதமாக இருந்தது. மடத்தின் தொடர்பு ஒன்றோடு நில்லாமல் என் ஆசிரியத் தொழிலும், ஆராய்ச்சியும், தமிழ்த் தொண்டும் மேன்மேலும் விரிவடைய வேண்டிய நல்லூழ் எனக்கு இருந்தது போலும். அது தன் வேலையைச் செய்ய ஆரம்பித்தது. கும்பகோணத்திலிருந்து தியாகராச செட்டியாரைக் குருவாரமாகிய அன்று பிற்பகல் திருவாவடுதுறையிற் கொணர்ந்து சேர்த்தது. என் புதிய வாழ்வு தொடங்கிற்று."

திருவாவடுதுறை திருமடத்தை விட்டு கும்பகோணம் காலேஜில் ஆசிரியராக தன் புது வாழ்க்கையை உ.வே.சா தொடங்கும் காலம் வந்த நிகழ்வு இது. இதுவே அவரது வாழ்க்கையின் திசையை மாற்றி அமைத்த நிகழ்வு. இன்று நாம் அறியும் உ.வே.சா  உருவாக அடிப்படையை அமைத்துக் கொடுத்த நிகழ்வு இது. 

மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களிடம் தமிழ் கற்று கும்பகோணம் காலேஜில் பணியாற்றியவர் தியாகராஜ செட்டியார்.  இவருக்கும் மடத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருந்து வந்தது. தான் பணியிலிருந்து ஓய்வு பெற முடிவெடுத்து தியாகராஜ செட்டியாரவர்கள் தான் வகித்து வந்த பதவிக்குப் பொறுத்தமானவராக உ.வே.சா இருப்பார் என நினைத்து  சுப்பிரமணிய தேசிகரின் சம்மதத்தைப் பெற திருமடத்திற்கு அன்று வந்திருந்தார். தேசிகரிடம் தன் விண்ணப்பத்தை வைத்து, தான் பதவி விலகிச் செல்லும் இந்த வேளையில் தான் வகிந்து வந்த   பொறுப்பான அந்த ஆசிரியர் பதவிக்கு உ.வே.சா வை நியமிப்பது பொறுத்தமாக இருக்கும் என விளக்கினார். 

இது மடத்தில் தேசிகர் உட்பட அனைவருக்குமே முதலில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது என்பதில் வியப்பேதுமில்லை. தன் வாழ்நாள் முழுக்க மடத்திலேயே ஆசிரியராக பணியாற்றி அந்தச் சைவ தமிழ் உலகிலேயே தன் வாழ்க்கை நிலைத்து நிற்கும் என கணவு கண்டு கொண்டிருந்தார் உ.வே.சா. ஆதலால் அவரது வாழ்க்கை பயணம் அமைக்கப்பட்ட விதம் அவரது செயல்பாடுகள் திருமடத்தின் எல்லைக்கு அப்பாலும் விரியக்கூடிய மற்றொரு உலகம் ஒன்று அவருக்காகக் காத்திருக்கின்றது என்பதை அக்கணத்தில் அவர் உணர வில்லை.

முதல் நாள் தேசிகரிடமிருந்து மட்டுமல்ல, உ.வே.சாவிடமிருந்தும் இந்த விண்ணப்பத்திற்குச் சம்மதம் கிடைக்கவில்லை. ஆயினும் தன் நம்பிக்கையை இழக்க வில்லை தியாகராஜ செட்டியார். மறுநாள் பூசைக்குப் பின்னர் மீண்டும் அவையில் வந்து தன் விண்ணப்பத்தை வைத்து  தனது கோரிக்கைக்கான காரணத்தையும் விளக்கினார்.

கும்பகோணம் காலேஜ் என்பது அப்பகுதியில் மிக முக்கிய கல்விக்கூடம் என்பதும் பிள்ளையவர்களிடம் கல்வி கற்ற ஒரு மாணவர், அதிலும் திருமடத்தோடு நல்ல தொடர்பு கொண்ட ஒருவர் அங்கு பதவியில் இருப்பது, அங்கு உருவாகும் மாணவர்களும் நல்ல தகுதியுடனும் தரத்துடனும் உருவாக்கம் பெற நல்ல வாய்ப்பைத் தரும் என்பதோடு மடத்திற்கும் காலேஜிற்கு ஒரு உறவு தொடர்வதற்கு இது துணை புரியும் என்பதையும் விளக்கினார். ஆசிரியர் அல்லவா..? அதிலும் மிகத்தேர்ந்த ஆசிரியர் தியாகராஜ செட்டியார். கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும் என்பதற்கொப்ப, இந்த விளக்கங்களைக் கேட்ட தேசிகருக்கு இது ஒரு வகையில் நல்ல யோசனையாகவே அமையும் என்ற நம்பிக்கை ஏற்படலாயிற்று 

முதல் நாள் மாலை உவே.சா தன் மனதில் "திருவாவடுதுறை மடத்தின் அன்னம் என் உடம்பில் எவ்வளவு ஊறியுள்ளதென்பதைச் செட்டியார்  நன்றாகத் தெரிந்துகொள்ளவில்லை". என மனதில் சொல்லிக் கொண்டிருந்தவர்  மறு நாள் இந்த விளக்கங்களைத் தொடர்ந்து கேட்கவும் அவர் மனம் புதிய கோணத்தில் இந்த நிகழ்வைப் பார்க்கத் தொடங்கியது. 

தனக்காக வேறொரு புதிய உலகம் காத்திருகின்றது என்பதை தன் மனத்திரையில் மெலிதாக உணர ஆரம்பித்தார் உ.வே.சா!

தொடரும்

சுபா.