Sunday, February 23, 2014

அனைத்துலக தாய்மொழிகளின் தினம் 22.2.2014 - ஸ்டுட்கார்ட் பல்கலைக்கழக நிகழ்ச்சி

Inline image 1

நேற்று மாலை ஸ்டுடார்ட் பல்கலைக்கழகத்தில் தாய்மொழிகளின் தினம் நிகழ்ச்சி நலமே நடைபெற்றது. மொழிகளில் ஆர்வமுள்ள பலர் வந்து கலந்து சிறப்பித்தனர். 

Inline image 9

தமிழ் மொழி பற்றிய ஒரு அறிமுக நிகழ்ச்சியைத் தமிழ் மரபு அறக்கட்டளை சார்பாக நானும் நண்பர் யோக புத்ராவும் வழங்கினோம். நண்பர் யோகா இலங்கைத் தமிழர். ஏறக்குறைய கடந்த 25 ஆண்டுகளாக ஸ்டுட்கார்ட் நகரில் வசிப்பவர். SWR  தொலைகாட்சி நிருவனத்தில் பணிபுரிபவர்.  எங்களுக்கு ஏறக்குறைய 30 நிமிடங்கள் பேச வழங்கியிருந்தார்கள்.

அதோடு எங்களுக்கு ஒதுக்கப்பட்ட அறை வங்காளதேசத்து மக்களின் கலையைச் சிறப்பிக்கும் ஒரு அறை. அதனால் அந்த அறைக்கு ஸ்டுட்கார்ட் நகரில் இருக்கும் மோனோகொல் என்ற ஒரு அமைப்பு பொறுப்பெடுத்துக் கொண்டிருந்தது. அந்த  அறையின் அலங்காரம் வரவேற்பு என அனைத்தும் வங்காள தேச முறைப்படி என ஏற்பாடு செய்திருந்தனர்.

மாலை உணவு வகை அந்த அறையில் வங்காள தேச உணவு என்பதாகவும் ஏற்பாடாகியிருந்தது. 

Inline image 2

தமிழ் பொழி பற்றிய உரையுடன் தமிழ் நூல்களை அறிமுகப்படுத்தும் நோக்கத்துடன் நாங்கள் ஒரு சிறு தமிழ் நூல் கண்காட்சி ஏற்பாடு செய்திருந்தோம். அந்த கண்காட்சியில் தமிழ் மரபு அறக்கட்டளை - மின்தமிழ் நண்பர்கள்
  • டாக்டர்.மா.ராஜேந்திரன்
  • டாக்டர்.பத்மா
  • திரு.மோகனரங்கன்,
  • டாக்டர்.கார்த்திகேசு
  • திரு.நரசய்யா
  • திரு.மாலன்
  • திருமதி பவளசங்கரி,
  • திரு.திவாகர்
  • டாக்டர்.நா.கண்ணன்
ஆகியோரது நூல்களையும் ஏனை பிற நூல்களையும் இணைத்திருந்தேன்.

Inline image 3

எங்கள் நிகழ்ச்சியை பாடர்ன் உட்டன்பெர்க் மானில ஆட்சிக்குழுவிலிருந்து வந்திருந்த திரு.ஹெல்முட் ஆல்பெர்க் தொடக்கி வைத்து பேசினார். பொதுவான ஒரு பேச்சாக அது அமைந்தது.

எங்கள் தமிழ் மொழி பற்றிய உரையில் நானும் யோகாவும் தமிழ் எழுத்துக்கள் அறிமுகம்,. தமிழ் மொழி பேசப்படும் நாடுகள், அதன் ஆரம்பகால எழுத்து வடிவம், தமிழ் நூல் அச்சு வரலாறு, முதல் தமிழ் நூல், குட்டன்பெர்க் அச்சு இயந்திரம், அச்சுக் கலை வளர்ச்சியில் போர்த்துக்கீஸிய தாக்கம், ஜெர்மானிய பாதிரிமார்களின் தமிழ்-ஜெர்மன் மொழி தொடர்பான செயற்பாடுகள், ஹாலே தமிழ் தொகுப்புக்கள் என பல தகவல்களை வழங்கினோம்.

Inline image 4

வந்திருந்து நிகழ்ச்சியை தொடக்கி வைத்து பேசிய திரு. ஆல்பெர்க் ஹாலே தொகுப்புக்களைப் பற்றி தாம் இதுவரை கேள்விப்பட்டதில்லை என்றும் அதனை பற்றி மேலும் அறிந்து கொள்ள ஆர்வம் உள்ளதாகவும் பின்னர் தேனீர் நேரத்தில் என்னிடம் குறிப்பிட்டார். வேறொரு சமயத்தில் இதுபற்றி மேலும் தகவல் அளிப்பதாக உறுதி கூறியிருக்கின்றேன். 

Inline image 10

அடிப்படையில் ஒரு எண்ணெய் சோதனைத்துறை எஞ்சீனியரான திரு.ஆல்பெர்க் இந்தோனீசியாவிலும் தாய்லாந்திலும் பல ஆண்டுகள் தொழில் முறையில் கழித்தவர் என்பதும் மலாய் கலாச்சாரமும் மொழியும் ஓரளவு அறிந்தவர் என்பதும் எனக்கு ஆர்வத்தை அளித்தது. எனது தமிழக தொடர்புகள், பயணங்கள், தமிழ் மரபு அறக்கட்டளை பணிகள் பற்றி பின்னர் அதிக நேரம் உரையாடினோம். இது அவருக்கு ஒருமுறை தமிழகம் வந்து கட்டாயம் ஆலயங்களில் உள்ள கல்வெட்டுக்களை காண ஆவலை உருவாக்கியுள்ளது. 

எங்கள் உரையோடு அதற்கு பின்னர் ஹங்கேரி நாட்டின் மொழி பற்றி ஒருவர் சிறு விளக்கம் அளித்தார்.

Inline image 6

அதன் பின்னர் வங்காள மொழி பற்றி டோய்ச்ச வெல்ல தொலைகாட்சி நிறுவனத்தில் பணிபுரியும் நிருபர் ஒருவர் ஆங்கிலம், வங்காளம் என இரு மொழிகளில் உரையாற்றினார்.

Inline image 7

அதன் பின்னர் வங்காள மொழி இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மிகச் சிறப்பாக தேசிய உணர்வை வெளிப்படுத்தும் பாடல்களாகத் தேர்ந்தெடுத்து இவர்கள் நிகழ்ச்சியை நடத்தினர். அழகிய சேலைகளில்,  கண் கவரும் அலங்காரத்துடன் பெண்மணிகள் வந்து கலை நிகழ்ச்சியை செய்தது மிக அருமையாக அமைந்திருந்தது.

Inline image 8

இந்த நிகழ்ச்சி இரவு உணவுடன் முடிவுற்றது. இத்தாலிய உணவகத்தில் இரவு உணவை முடித்து இல்லம் திரும்பினேன்.

பல இனங்கள் வாழும் ஜெர்மனி போன்ற நாடுகளில் இவ்வகை நிகழ்ச்சிகள் மாறுபட்ட சமூகங்களின் வாழ்க்கை முறைகளையும் மொழி கலாச்சார பண்பாட்டு விஷயங்களையும் அறிந்து கொள்ள உதவுகின்றன. அருமையானதொரு நிகழ்வில் பங்கெடுத்துக் கொண்ட மகிழ்ச்சி மனதில் நிறைந்திருக்கின்றது.

சுபா

Thursday, February 20, 2014

என் வீட்டுத் தோட்டத்தில்....!

நீண்ட நாட்களுக்குப் பின் என் தோட்டத்திலிருந்து....

குளிர் காலம்.. 
இப்போது பனி படர்ந்து குளிரும் போது தோட்டத்தில் செடிகள் மண்னுக்குள் மறைந்து கொண்டுவிட்டன. ஆக தோட்டத்தில் பூத்தொட்டிகளில் சில செடிகள் இருக்கட்டுமே என ப்ரைமல் (Primeln) வகைச் பூச்செடிகளில் சில மாறுபட்ட வர்ணங்களில் மூன்று வாரங்களுக்கு முன் வாங்கி வைத்தேன். வாங்கி நட்டு வைக்கும் போது எனக்கு கொஞ்சம் சங்கடம்..குளிரில் எல்லாம் விரைத்து செத்துப் ஓய்விடுமே என கவலை. ஆனால் இந்த ப்ரைமல் வகைச் செடிகள் குளிரைத் தாங்குபவை என சென்ற ஆண்டு பனிக்காலத்தில் சோதனை செய்த அனுபவம் எனக்கிருந்ததால் வாங்கி வைத்தேன். நன்கு பூக்களோடு தோட்டத்திற்கு வர்ணம் சேர்த்துக் கொண்டிருக்கின்றன. 

சில புகைப்படங்கள்...

Inline image 1



Inline image 2




Inline image 3



Inline image 4




Inline image 5


​அதோடு இந்த ஆண்டு சீதோஷ்ணமே வித்தியாசமாக இருக்கிறது. சென்ற ஆண்டெல்லாம் பெப்ரவரி மாதம் -12 டிகிரி செல்ஸியஸ் வரை இப்பகுதியில் இருந்தது. இப்போதோ 3 லிருந்து 11 வரை என இருக்கின்றது. என் தோட்டத்துச் செடிகளும் வசந்த காலம் வந்து விட்டதோ என சில தலையை எட்டிப் பார்க்கின்றன.. :-)
​சுபா​

Wednesday, February 19, 2014

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 66

ஜனவரி 31ம் திகதி. 

திருவாவடுதுறை ஆதின குருபூஜையில் கலந்து கொள்ள உள்ளூரிலிருந்தும் அயலூரிலிருந்தும் வந்திருந்த தமிழறிஞர்கள், தனவந்தர்கள், திருவாவடுதுறை மடத்திற்கு அணுக்கமானோர் என பலர் வந்து திருவாவடுதுறையில் கூடிவிட்டனர். அன்று நடைபெற வேண்டிய நிகழ்வுகள் குருபூஜைக்கான
 ​த்​
 தயாரிப்பு பூஜைகள் என நடந்துகொண்டிருந்தன. அன்று இரவு ஸ்ரீ கோமுத்தீசுவர கடவுள் நகர் வலம் வந்தருளினார். இரவு சுவாமி தரிசனத்திற்குச் சென்ற உ.வே.சாவைப் பார்த்த ஆதீனகர்த்தர் சுப்பிரமணிய தேசிகர், பிள்ளையவர்களின் உடல் நிலையை விசாரிக்கின்றார். பூஜைகளுக்கிடையிலேயும் அவர் மனதில் பிள்ளையவர்களின் ஆரோக்கியம் குறைந்த உடல் நிலை கவலையைக் கொடுத்துக் கொண்டிருந்தது. நலிவடைந்திருந்த பிள்ளையவர்களின் தேக ஆரோக்கிய நிலை அப்படியே எந்த மாற்றமும் இல்லாமல் இருப்பதை கண்ணீருடன் சொல்லி விட்டு அழுகின்றார் உ.வே.சா. அன்றைய நாளில் பிள்ளையவர்களின் உடல் நிலை மிக மோசமான நிலையையடைந்து விட்டது. பிறர் பேசினால் புரிந்து கொள்ளும் சக்தி இருந்தாலும் அவரால் அன்று பேச முடிய வில்லை. தாமும் சவேரிநாதரும் அவருக்குப் பால் மட்டும் அருந்தக் கொடுத்து வருவதை விளக்கும் போது தேசிகரும் கலங்கி விடுகின்றார். அருகிலேயே இருந்து முழுமையாக பிள்ளையவர்களை
 ​க்​
 கவனித்துக் கொள்ளுமாறு சொல்லி உ.வே.சாவை  அனுப்பி வைக்கின்றார்.

நடக்கவேண்டியவை அனைத்தும் நடந்து தா
​னே
 ஆக வேண்டும். 
​மனிதர்கள் நினைத்தால் மாற்றக் கூடியவை என்ற வரையரைக்குள் அடங்கும் பல விஷயங்கள் இருந்தாலும் இறப்பு என்பதை கட்டுப்படுத்தும் சக்தி நமக்கு சிறிதும் இல்லையே. 

மறு நாள் பெப்ரவரி 1ம் திகதி
​,​
 திருவாவடுதுறை குருபூஜை தினத்தன்று 
அதிகாலை வேளையில் ​
மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் இந்தப் பூவலகை விட்டு மறைந்தார்கள். 

இதனை உ.வே.சா 
விவரிப்ப
தைப் போல என்னால் விவரிக்க இயலாது. அவர் 
 உணர்ந்த
 காட்சியை, மனதில் பதிந்து வைத்த விஷயங்களை அவர் சொற்களினால் 
​அறிவதே
 இப்பதிவுக்கு நான் செய்யும் சிறப்பாகக் கருதுகிறேன். சிவலோகம் திறந்தது எனும் 63ம் அத்தியாயத்திலிருந்து இப்பகுதி!

“இந்த நிலையிலாவது பிள்ளையவர்கள் ஜீவித்திருக்கிறார்களென்றால் ஆதீனத்திற்கு மிகவும் கௌரவமாக இருக்கும். ஸ்ரீ கோமுத்தீசர் திருவருள் என்ன செய்கின்றதோ!” என்று வருந்தி விட்டு, “போய்க் கவனித்துக் கொள்ளும்” என்று விடை கொடுத்தனுப்பினார். நான் பிள்ளையவர்களிடம் சென்றேன்.

மறைவு

அடிக்கடி ஆசிரியருக்கு ஞாபகம் தவறியது. நள்ளிரவுக்குமேல் நெடு நேரம் பிரக்ஞை இழந்திருந்தார். பிறகு விழித்துப் பார்த்து ஏதோ சொல்ல வாயெடுத்தார். அக்குறிப்பு, திருவாசகமென்று சொன்னதாகப் புலப்படுத்தியது. நான் திருவாசகத்தை எடுத்து அடைக்கலப்பத்தை வாசித்து வந்தேன். சிவபெருமான் திருவடியில் அடைக்கலம் புகுவதற்கு என் ஆசிரியர் தகுதியுடையவரே. அவர் கண்ணை  மூடிக்கொண்டே இருந்தார். திருவாசகச் செய்யுள் அவர் காதின் வழியே உள்ளத்துள் புகுந்து இன்பத்தை விளைவித்திருக்க வேண்டும். அந்த இன்பம் அவர் முகத்தில் ஒரு மலர்ச்சியை உண்டாக்கியது.

அவர் நெற்றியில் விபூதியை நிறைய ஒருவர் இட்டனர். சவேரிநாத பிள்ளை அவரைத் தமது மார்பில் சார்த்திக் கொண்டார். அடைக்கலப்பத்தை வாசித்துக் கொண்டிருந்தேன். திடீரென்று அவரது தேகத்தில் உள்ளங்கால் முதல் உச்சி வரையில் ஒரு துடிப்பு உண்டாயிற்று. மூடியிருந்த கண்களில்
 ​ 
வலக்கண் திறந்தது. அவ்வளவுதான். சிவலோகத்தில் அதே சமயத்தில் அந்த நல்லுயிர் புகுவதற்கு வாயிலும் திறந்ததுபோலும்! 

அவர் மூச்சு நின்றபோதுதான் அவருடைய தமிழ் உணர்ச்சி நின்றது. 

திருவாசகம் என் கையிலிருந்து நழுவியது. கண்ணிலிருந்து நீரருவி புறப்பட்டது.

அங்கிருந்தவர்களில் சிலர் அரற்றினார்கள். சிலர் துக்கம் தாங்கமாட்டாமல் வாயைப் பொத்திக்கொண்டனர். நான் ஒன்றும் தோன்றாமல் என் ஆசிரியரின் புனித உடலையும், அமைதி தவழ்ந்த முகத்தையும், எனக்கு ஆதரவோடு பாடம் சொல்லிய திருவாயையும், அன்புப் பார்வையில் என்னைத் தழுவிய கண்களையும் பார்த்துப் பார்த்து விம்மினேன். “இப்போது நிகழ்ந்த நிகழ்ச்சி பொய்யாக இருக்கக் கூடாதா? பிள்ளையவர்கள் மீண்டும் வாய் திறந்து பேசக்கூடாதா!” என்ற எண்ணத்தோடு பார்க்கையில் அவர் கண்கள் இமைப்பது போலவே தோற்றும்; வாய் அசைவதுபோலத் தெரியும்; மூச்சு விடுவது போலக் கண்ணில் படும். அடுத்த நிமிஷமே எல்லாம் வெறும் தோற்றமாகிவிடும்; பிரமையினால் விளையும் காட்சிகளாக முடியும்.

ஆசிரியருடைய குமாரரும் மனைவியாரும் அங்கே இருந்தனர். வேறு பல அன்பர்களும் கூடியிருந்தனர். ஆசிரியர் மறைந்த செய்தி உடனே எங்கும் பரவி விட்டது. சுப்பிரமணிய தேசிகர் விஷயத்தை அறிந்து வருந்தினார். அவருக்கு ஒரு காரியமும் ஓடவில்லை.

விடிந்தது; இருண்டிருந்த எங்கள் மனத்திற்கு விடிவு இல்லை. 

பலர் வந்து வந்து ஆசிரியர் திருமேனியைப் பார்த்துப் பார்த்துப் புலம்பிவிட்டுச் சென்றனர். ஆதீன ஞானாசிரியர் சமாதியுற்ற திருநாட் கொண்டாட்டத்திற் கலந்து கொண்டு இன்பம் அனுபவிக்க வந்தவர்களிற் பலர் ஆதீனத் தமிழாசிரியர் மறைந்த செய்தி கேட்டுத் துன்பக் கடலில் ஆழ்ந்தனர்.

சுப்பிரமணிய தேசிகர் மேலே நடக்க வேண்டிய காரியங்களுக்குரிய ஏற்பாடுகளைச் செவ்வனே செய்யலானார். பல ஊர்களிலிருந்து அபிஷேகஸ்தர்கள் வந்தனர்.

அந்நல்லுடலை ருத்திரபூமிக்கு எடுத்துச் சென்ற போது நான் கண்ட காட்சியும் கேட்ட வார்த்தைகளும் இன்று நினைத்தாலும் உள்ளத்தைக் கலக்குகின்றன. எல்லோரும் வாய்விட்டுக் கதறி விட்டார்கள். அவரது புலமைத் திறத்தைச் சொல்லி வருந்து வாரும், அவரது கவித்துவத்தைப் பாராட்டி
 ​ 
உருகுவாரும், மாணாக்கர்கள் பால் அவர் வைத்திருந்த அன்பை எடுத்துரைத்துத் துயருறுவாரும், அவர் குண விசேஷங்களை விரித்துப் புலம்புவாருமாக எங்கே பார்த்தாலும் ஜனங்கள் நிரம்பிவிட்டனர்.

அபிஷேகஸ்தர்கள் அப்போது திருவாசகம் சொல்லிக்கொண்டு போனார்கள். அதைக் கேட்ட என் தந்தையார், “இனிமேல் திருவாசகத்துக்கு உரை சொல்பவர்கள் இவர்களைப்போல் யார் பிறக்கப் போகிறார்கள்?” என்று சொல்லி வருந்தினார். ஆசிரியர் தம் கடைசி நாட்களில் கடைசி நிமிஷம்
வரையில் திருவாசகத்தில் ஒன்றியிருந்ததை அறிந்தவனாதலின் அவ்வார்த்தைகளைக் கேட்ட போது என் உள்ளமும் உயிரும் நடுங்கின.

பல பேருடைய அறிவுக்கும், கண்ணுக்கும், காதுக்கும் இன்பந் தந்து வாழ்ந்திருந்த ஆசிரியர் திருவுடலம் அக்கினிபகவானால் அங்கீகரிக்கப் பெற்றது. சிதம்பரம் பிள்ளை தம் தந்தையாரது உத்தரக்கிரியைகளைச் செய்தார். எல்லாம் முடியப் பன்னிரண்டு மணி வரையில் ஆயிற்று. பின்பு யாவரும் நீராடித் திரும்பினர். நானும் என் ஆசிரியரை அப்பால் பாராத நிலையிலே விட்டுவிட்டு ஸ்நானம் செய்து வந்தேன்.

ஊர் முழுவதும் ஒளி இழந்திருந்தது.

என் சரித்திரம் நூலை லாபல்மா தீவில் விடுமுறைக்குச் சென்ற போது நான் வாசித்தேன். இந்தப் பகுதியை வாசித்து முடித்த போது என் கண்களிலிருந்து கண்ணீர் வடிந்து நூலின் பக்கங்களை நனைத்தது. அவர்கள் துக்கத்தை நானும் உடனிருந்து  உணர்ந்தேன். அதே துக்கத்தை இன்று மீண்டும் இப்பதிவை எழுதும் போதும் உணர்கிறேன். என் உறவில் ஒன்றினை இழந்த ஒரு உணர்வு தோன்றுகிறது. 

நூலை வாசிக்கும் போது கூட இத்தகைய உணர்வுகளைக் கொண்டு வர முடியும் என் சாதித்துக் காட்டியவர் உ.வே.சா.
122 அத்தியாயங்களைக் கொண்டது என் சரித்திரம் நூல். அதில் ஏறக்குறைய 40 அத்தியாயங்களாக அமைபவை உ.வே.சா முழுமையாக பிள்ளையவர்களுடன் தான் வாழ்ந்த காலகட்டத்தின் நிகழ்வுகளைக் குறிப்பவை. அவர் மறைவுக்குப் பின் தன் வாழ்வில் நடைபெறும் நிகழ்வுகளை குறிப்பிடும் போதும் ஏனைய அத்தியாயங்களிலும் ஆங்காங்கே பிள்ளையவர்களும் உலா வருகின்றார்கள்.
 ​
 

தன் சரித்திரத்தில் முழுமையாக தன் ஞானாசிரியரையரையும் பிணைத்துக் கொண்டார் உ.வே.சா என்றே சொல்லத் தோன்றுகிறது. ​

தொடரும்.

Thursday, February 13, 2014

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 65

1875ம் ஆண்டு ஆகஸ்டு தொடங்கி படிப்படியாக  பிள்ளையவர்களை நோய் பலகீனப்படுத்தத் தொடங்கியது. தீபாவளி நேரத்திலும் அவருக்கு மாயூரத்திற்குப் பயணம்.  பின்னர் திருவாவடுதுறை ஆதீனத்திற்கே வந்து சேர்ந்த பின்னர் அங்கும் எவ்வளவோ கவனிப்பு இருந்தும் நோய் குணமாகவில்லை, அதன் கடுமையும் குறையவில்லை. 

1876ம் ஆண்டு ஜனவரி மாதம் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களின் உடல் நிலை மிக நலிவுற்ற நிலையையடைந்தது. அம்மாத இறுதியில் தான் மடத்தில் குருபூஜை நடைபெறும். திருவாவடுதுறை மடத்தின் குருபூஜை என்பது இன்றைக்கு 150 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு மாபெரும் திருவிழா. குருபூஜை ஒரு நாள் விழா என்றல்லாமல் தொடர்ச்சியாக பூஜைகள், இசை, வாத்திய, நாட்டிய, நாடக நிகழ்ச்சிகள் என தொடர்ந்து நடைபெறும். திருவாவடுதுறை நகரமே உள்ளூர், வெளியூர் மக்களால் நிறைந்து காணப்படும். இந்த குறிப்புக்களையெல்லாம் முந்தைய பதிவுகளில் நான் வழங்கியிருக்கின்றேன். ஜனவரி மாத இறுதி நாட்கள் திருவாவடுதுறை மடத்தில் அந்த ஆண்டும் அப்படித்தான் குருபூஜை நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன. குருபூஜையில் கவனம் இருந்தாலும் ஆதீன கர்த்தர் சுப்பிரமணிய தேசிகருக்கும் பிள்ளைவர்களின் உடல் நிலை மன வேதனையைக் கொடுத்துக் கொண்டிருந்தது.

உடல் நிலை நலிவடைந்த இந்த நிலையில் மாணவர்கள் பிள்ளையவர்களிடம் பாடம் கேட்பது என்பது நின்றது. ஆயினும் மாணவர்கள் வந்து கேட்கும் சில சந்தேகங்களுக்கு அவர் தெளிவு கொடுப்பதைத் தொடர்ந்து கொண்டிருந்தார். தனக்கு பிடித்தமான நூல்களை மாணாக்கர்களைக் கொண்டு வாசிக்கச் சொல்லி கேட்டுக் கொண்டிருப்பாராம். தமிழே அவர் உயிர் மூச்சு. அதிலும் அவ்வேளையில் தெய்வீகத் தமிழே அவரது உடலோடு பிணைத்திருந்த அவ்வுயிருக்கு ஆறுதல் தரும் மருந்தாக அமைந்தது. உ.வே.சா இந்த நிகழ்வுகளைப் பதிந்து வைக்கின்றார்.

ஆசிரியர் படுக்கையிற் படுத்துக் கொண்டிருப்பார். அவரருகில் அமர்ந்து சவேரிநாத பிள்ளை கால் கைகளைத் தடவிக் கொடுத்துக் கொண்டே இருப்பார். நான் அருகில் உட்கார்ந்து தேவாரத்தையோ திருவாசகத்தையோ ஆசிரியர் காதில் படும்படி படிப்பேன். வேறு மாணாக்கர்களும் ஆசிரியரைப்
பார்க்க வரும் அன்பர்களும் சுற்றிலும் இருப்பார்கள். எல்லோருடைய கண்களும் ஆழ்ந்த பயத்தை வெளிப்படுத்தும்.

இடைக்கிடையே தேவார திருவாசகத்தில் தனக்கு எழும் சந்தேகத்தை உ.வே.சா கேட்கும் போது அதற்கு விளக்கம் கொடுக்க தடையாக அவர் காரணம் சொல்வதில்லை. அப்படி அவ்வேளையில் அவர் வழங்கிய விளக்கங்களை உ.வே.சாவை பொறுத்தவரை தன் வாழ் நாளில் கிடைத்தற்கறிய விளக்கங்களாக தாம் போற்றுவதாகக் குறிப்பிடுகின்றார். மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் தேவாரத்திலும் திருவாசகத்திலும் நெடுநாட்கள் தன் சிந்தனையைச் செலுத்தியவர். தாம் எழுதிய புராண நூல்களிலெல்லாம் தேவார திருவாசக கதைகளையும் நிகழ்வுகளையும் இணைத்து ஈடுபாட்டுடன் பல திருத்தலங்களுக்கு வரலாற்று காவியங்களைச் செய்தவர். ஆக இந்த உடல் நலிவுற்ற வேளையில் அவர் தரும் சிறு விளக்கம் கூட மாணிக்கப் புதையலாகவே உ.வே.சாவிற்குத் தோன்றியதில் ஆச்சரியமில்லையே.

திருவாசகப் பாடல்கள் வாசிக்கப்படும் போது பிள்ளையவர்களின் கண்களில் இருந்து கண்ணீர் வடிந்து கொண்டிருக்குமாம். திருவாசகத்தின் செய்யுட்களில் தானும் உருகிக் கரைந்து  விட தவித்த அவரது ஆழ் மனதின் விருப்பம் இந்த உடல் நலிவுற்ற நிலையிலும் தொடர்ந்து கொண்டிருந்தது. இப்படி ஒரு நிகழ்ச்சியை பதிந்து வைக்கிறார் உ.வே.சா. 

திருவாசகத்தில் திருக்கோத்தும்பியென்னும் பகுதியைப் படித்தேன்.

“நோயுற்று மூத்துநா னுந்துகன்றா யிங்கிருந்து
நாயுற்ற செல்வ நயந்தறியா வண்ணமெல்லாம்
தாயுற்று வந்தென்னை யாண்டுகொண்ட தன்கருணைத்
தேயுற்ற செல்வற்கே சென்றூதாய் கோத்தும்பீ”

என்ற செய்யுளை வாசித்தேன், ‘நுந்து கன்றாய்’ என்பதற்குப் பொருள் விளங்கவில்லை. சந்தேகம் கேட்கும் பொருட்டுத் தலை நிமிர்ந்து ஆசிரியரைப் பார்த்தேன். அவர் கண்களில் தாரை தாரையாகக் கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது. “நுந்து கன்றாய் என்பதற்கு அர்த்தம் என்ன?” என்று கேட்டேன். அவரால் பேச முடியவில்லை. நாக்குக் குழறியது; தொண்டை அடைத்தது. “வெறுத்துச் செலுத்தப்பட்ட கன்றைப்போல” என்று அந்தக் குழறலோடே சொன்னார். அந்த நிலையில் அவரைப் பார்க்கும்போது எனக்கும் கண்ணீர் பெருகியது. தளர்ச்சியால் பேச முடியாமல் இருந்த ஆசிரியர் அந்தப் பாட்டில் உருகிப்போய் அவசமுற்றிருந்தார்.

“நோயுற்று மூத்துநா னுந்துகன்றா யிங்கிருந்து”

என்ற அடி அவர் உள்ளத்தைப் பிணித்து அன்புணர்ச்சியை எழுப்பிவிட்டது. மாணிக்கவாசகரது அவ்வாக்கு என் ஆசிரியருடைய நிலைக்கு மிகவும் பொருத்தமாக இருந்தது. நோயுற்று மூத்துநின்ற அவருடைய உள்ளக்கருத்தை அந்தச்செய்யுள் தெரிவித்தமையால் அவர் உருகிப் போனார்.

“தாயுற்று வந்தென்னை யாண்டுகொண்ட தன்கருணைத்
தேயுற்ற செல்வற்கே சென்றூதாய் கோத்தும்பீ”

என்ற அடிகளில் மாணிக்கவாசகர் சிவபெருமான் தமக்கு அருளிய பெருங்கருணைத் திறத்தைப் பாராட்டுகிறார். அவரை ஆண்டு கொண்ட வண்ணம் தம்மையும் ஆண்டு கொள்வாரோ என்ற ஏக்கமும் ஆசிரியர் உள்ளத்தே எழுந்தது போலும்! அவர் அப்பொழுது இவ்வுலகில் இருந்தாலும்
இந்நினைவுகள் எல்லாம் சேர்ந்து அதனை மறக்கச் செய்துவிட்டன. “இவர் இப்போது நம்மோடு பேசவில்லை. ஆண்டவனோடு பேசுகிறார். இவர் தம் உள்ளமாகிய கோத்தும்பியை மாணிக்கவாசகரைப் போலச் சிவ பெருமான் திருவடி மலரில் ஊதும்படி விட்டிருக்கிறார்” என்ற உண்மையை அப்போது
தெளிவாக நான் அறிந்து கொள்ளவில்லை. சிலநேரம் மௌனம் நிலவியது. அவர் திருவாசகத்தில் ஒன்றி உருகினார்: நான் அவர் நிலைகண்டு உருகினேன். பின்பு மீண்டும் தொடர்ந்து படிக்கலானேன்.

வாழ்வில் மரணம் என்பது நடந்தே ஆகவேண்டியது. உறவுகளையும்,உற்றாரையும், அன்பு செய்தோரையும் பிரியும் துன்பம் போல் வேறு துன்பம் உலகில் இல்லை. இவ்வுலகை விட்டுச் செல்வோரை விட அவரைப் பிரிந்து வாழும் பிற உயிர்களின் மீளா துயரம் பெரிதுதான் என்றாலும் இதனைக் கூட எப்படி அளவிடுவது? காலம் இந்தத் துயரத்தை போக்கும் மாமருந்து என்றாலும் அவ்வப்போது நம்மை பிரிந்தோரின் நினைவு மின்னல் போல நம் மனதில் தோன்றி மறையும் போது நாம் தடுமாறித்தானே போய் விடுகிறோம். அது அச்சமா? தனிமை உணர்வா? இருந்தது இல்லாமல் போய்விட்ட உண்மை தரிசனமா?

ஒருவர் நம்மை விட்டு பிரியும் போது ஏன் இறப்பு ஏற்படுகின்றது என்று புலம்பும் நாம் அதே வேளை நாமும் இந்த இயற்கை நீதிக்கு கட்டுப்பட்டவர்களே என்ற உண்மையையும் உணர வேண்டியவர்களே. என்றோ நடக்கும் நம் மரணம் இன்றே நடக்கலாம் என்பதை உணர்ந்து எத்தருணமும் இறப்பு எனும் ஒன்று நம்மை சந்திக்கலாம் என்று தயார் நிலையில் நம்மை வைத்திருக்க வேண்டியதும் அவசியம் தானோ?

தொடரும்...

சுபா



2014-02-08 9:34 GMT+01:00 Subashini Tremmel <ksubashini@gmail.com>:
பதிவு 64

நோயின் கடுமை மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களுக்கு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருந்தது. தீபாவளிக்கு மாயூரத்திற்குச் சென்றவர் தன் குடும்பத்தாருடனும் ஏனைய சில மாணவர்களுடனும் அங்கேயே தொடர்ந்து சில நாட்கள் தங்கியிருந்தார். அவரோடு சென்றவர்களில் பிள்ளையவர்களுக்கு மிக மிக அணுக்கமான சவேரி நாதப் பிள்ளையவர்களும் ஒருவர். 

Tuesday, February 11, 2014

குடியரசில் பெரியார் உடன்....! - 7

கணவன் இறந்த பின் மனைவிக்கே மாத பென்ஷன் தொகை செல்லும் என்பது இன்று சட்டப்படி நடைமுறையில் இருக்கும் வழக்கம். ஆனால் இன்றைக்கு 100 ஆண்டுகளுக்கு முன்னால் இது சாத்தியமாகாத ஒன்றாக இருந்தது என்பதை இன்றைய தலைமுறையினர் அறியும் போது ஆச்சரியப்படுவர். 

இன்றைய நிலையில் பெண்களும் உத்தியோகம் பார்க்கும் நிலமை வளர்ந்து விட்ட சூழலில் அவர்களின் உழைப்பினால் அவர்கள் ஏற்படுத்தி வைக்கும் ஓய்வூதிய பங்குத் தொகை பிற்காலத்தில் வயது முதிர்ந்த காலத்தில் அவர்கள் தங்கள் வாழ்க்கைத் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள உதவுகின்றது. இந்த மாதாந்திர ஓய்வூதியத் தொகை தொடர்ந்து அவர்கள் தங்கள் மருத்துவச் செல்விற்கும் வாழ்க்கை தேவைகளுக்கும் குடும்பத்தாரை எதிர்பார்த்து நிற்கும் நிலையை தவிர்த்து பல உளவியல் சங்கடங்களிலிருந்தும் இவர்களைக் காப்பாற்றுகின்றது.

ஆண்கள் உத்தியோகம் பார்த்து பணமீட்டும் நிலையில், வீட்டிலிருந்து குடும்ப கடமைகளைப் பராமரிப்பதும், குழந்தைகளைப் பேணி வளர்த்து அவர்கள் தேவைகளைப் பூர்த்தி செய்வதும், குடும்பத்தாரின் தேவைகளைப் பூர்த்தி செய்வதும், உறவினர்களின் விஷேஷங்களில் பங்கெடுத்துக் கொண்டு உறவைப் பேணி வளர்ப்பதும் குடும்பத்தலைவியரின் கடமையாகி விடுகின்றது.

குடும்பத்தலைவியாக இருந்து செய்யும் கடமைகளுக்கு விதி முறை அமைத்து சம்பளம் கொடுக்க வேண்டுமா..? அன்பினால் உண்டாகும் ஒரு விஷயமல்லவா இது என்றால் அதை மறுக்கமுடியாது தான். மனிதர் செய்யும் ஒவ்வொரு காரியத்திற்கும் விலை பேச முடியுமா? ஆனால் பொதுவாக பார்க்கும் நிலையில் வீட்டிலிருந்து வீட்டுக் கடமைகளை செய்து வரும் ஒரு பெண் பொருளாதார அடிப்படையில் சம்பாதிக்கும் கணவனை அண்டி வாழும் போது அக்கணவனின், அவனது குடும்பத்தாரின் நிலையைப் பொறுத்து அவளது பொருளாதாரத் தேவைகளைப் பூரித்து செய்து கொள்ளும் நிலையில் வைக்கப்படுகின்றாள். இது நிதர்சனம். தனது தேவை தன் பெற்றோர் தேவை என்பது கணவன், அவன் குடும்பத்தார் தேவைகளுக்கு அடித்த படி நிலையிலே தான் என்ற அமைப்பு வந்து விடுகிறது.

அலுவலகத்தில் வேலை பார்க்கும் ஒரு ஆணோ  பெண்ணோ, தனக்கு கொடுக்கப்படும் கடமைகளைச் சரியாக அதன் தேவை உணர்ந்து 8 மணி நேரத்திற்குச் செய்வது என்பது உத்தியோக நிலை. வீட்டுக் கடமை என்பது இந்த வரையறைக்கு அப்பாற்பட்டது. 8 மணி நேர கணக்கு என்பதில்லை. அலுவலகத்திலோ 8 மணி நேரத்திற்கு மேல் வேலை செய்தால் ஓவர் டைம் ஊதியம் கிடைக்கும். ஆனால் இல்லத்திலோ இப்படி ஒரு குறிப்பிட்ட வரை முறை என்பது கிடையாது. எப்போதும் ஏதாகினும் தேவை ஏற்படும் சாத்தியம் எழுவதும் அதற்கு தன்னை தயார் நிலையில் வைத்திருப்பதும்  நிரந்தரமாக நிகழக்கூடியவையே. ஆனால் பெரும்பாலான சமூகங்களில் வீட்டிலிருந்து குடும்பத்தை கவனிக்கும் பெண்களை ஒரு பொருட்டாக நினைப்பதில்லை. பொது இடங்களில் 'உங்கள் மனவி என்ன செய்கின்றார்'  என யாராவது கேட்டால்.. 'அவங்க சும்மா வீட்டில தான் இருக்காங்க' என்று சொல்லும் கணவர்களும் இருக்கின்றனர். விழிப்புணர்வு அடைந்து  வரும் சமூகத்தில் தற்காலம் ஆங்கிலத்தில் இல்லத்தரசிகளை  home maker என்ற சொல் கொண்டு அழைப்பது வழக்கமாகியுள்ளது. இந்தச் சொல் ஆண் பெண் இருபாலருக்கும் பொருந்தும் ஒரு சொல்லே.

ஜெர்மனியில் வீட்டிலிருந்து குடும்பத்தலைவியாக இருக்கும் ஒரு பெண்ணிற்கு கணவனின் சம்பாத்தியத்தில் 50% பங்குண்டு என்பது சட்டமாக உள்ளது. குடும்பத் தலைவியாக குழந்தை வளர்ப்பு, குடும்ப தேவைகளைப் பேணுதல் ஆகிய கடமைகளைச் செய்யும் பெண்களின் இந்த காலகட்டங்கள் ஒரு தொழில் என்ற நிலையிலேயே மதிக்கப்படுகின்றது. அதே போல மனைவி வேலை பார்ப்பவராக இருந்து கணவர் குடும்பத்தையும் குழந்தையயும் கவனிப்பவராக இருந்தாலும் இதே நிலைதான். மனைவியின் சம்பாத்தியத்தில் 50% இந்த வீட்டுப் பொறுப்புக்களைக் கவனிக்கும் கணவனுக்குக் கிடைக்கும். எனது அலுலவக நண்பர்கள் சூழலிலும் குழந்தைப் பேற்றுக்குப் பிறகு இப்படி மாற்றி மாற்றி அலுவலகத்தில் வேலையிலிருந்து ஒரு வருட கால இடைவெளி எடுத்துக் கொண்ட சக தொழிலாளர்களில் இருவரை நான் அறிவேன். 

இக்கால நிலையைப் பற்றி அலசுகிறோம். இன்றைக்கு 100 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழகச் சூழலில் திருமணம் செய்து கொண்டு கணவன் வீட்டிற்கு வரும் பெண்ணின் நிலை எப்படி இருந்தது என் அறிந்து கொள்ளும் போது பெண்களின் அக்கால நிலையை ஓரளவு ஊகித்துப் பார்க்க நமக்கு அது உதவலாம் எனக் கருதுகிறேன். குடியரசு நாளிதளில் புரட்சி கட்டுரை என்ற பகுதியில் வந்த திரு.ஈ.வே.ரா வின்  பரோடா பெண்கள் முன்னேற்றம் புதிய சட்ட விபரம் என்ற கட்டுரையிலிருந்து சில விஷயங்களை ஊகிக்க முடிகின்றது. 

பரோடா சமஸ்தானம் இந்துப் பெண்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக இந்து சமுதாயச் சட்டத்தை பின்வருமாறு திருத்தி புதிய சட்டம் ஏற்படுத்தியிருக்கிறார்கள். .. ஒரு இந்துக் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் இறந்து போனால் அவருடைய விதவை அந்தக் குடும்பத்தில் ஒரு பங்காளி ஆகிவிடுகிறாள். விதவைகளின் முந்தின நிலமையில் இந்தச் சட்டம் ஓர் பெரிய மாறுதலை உண்டு பண்ணி விட்டிருக்கிறதென்று சொல்லலாம். முந்தியெல்லாம் ஒரு விதவைக்கு அவள் புருஷன் குடும்பத்திலே சோறும், உடையும் தான் கிடைக்கும். வேறு எவ்வித உரிமையும் கிடையாது. இந்தச் சட்டப்படி ஒரு விதவையானவள் தன் புருஷன் குடும்பத்தின் மற்ற நபர்களைப் போல் ஒரு சம பங்காளி ஆகிவிடுகிறாள். சொத்தில் தனக்குள்ள பாகத்தைப் பிரித்துக் கொடுக்கும்படி கேட்பதற்குக் கூட இந்தச் சட்டத்தினால் உரிமை ஏற்பட்டிருக்கின்றது.

..பழைய சட்டப்படி என்றால் மகனுக்கும், பேரனுக்கும் பேரன் மகனுக்கும் தான் கிடைக்கும். இந்த வாரிசுகள் இல்லாமலிருந்தால் மட்டுமே விதவைக்கு கிடைக்கும். இப்போது இந்தப் புதிய சட்டத்தினால் மகன், பேரன் முதலியவர்களைப் போலவே விதவையான பெண்ணும் சமபாகம் கிடைக்க உரிமை ஏற்படுத்தப் பட்டிருக்கின்றது. 

திருமணமாகி ஒரு பெண் கணவன் வீடு சென்று விட்டால் அங்கு அவளுக்கு எத்தகைய சிரமம் இருந்தாலும் தகப்பன் குடும்பத்திலிருந்து உதவி கோர உரிமை இல்லாமலிருந்தது என்றும் இதனால் திருமணமாகிச் சென்ற பல பெண்கள் சிரமம் அனுபவித்தனர் என்றும் இக்கட்டுரை சொல்கிறது. இந்தப் புதிய சட்டம் இந்த நிலையையும் மாற்றுவதாக ஈ.வே.ரா குறிப்பிடுகிறார்.அதாவது,

எப்படியெனில் புருஷன் இறந்தபின் ஒரு பெண் தன் தகப்பன் வீட்டிலேயே வசித்து வருவாளானால், அவளுடைய மாமனார் வீட்டில் அவளுக்கு சம்ரட்சனை செலவு கொடுக்க வழியில்லாமல் இருக்கும் போதும் தகப்பனுக்கு அவளை வைத்துக் காப்பாற்ற சக்தி இருக்கும் போதும் தகப்பன் குடும்பத்தாரே அவளுடைய ஜீவனத்துக்கு பணம் கொடுக்க வேண்டும் என்று இந்தப் புதிய சட்டம் கூறுகிறது.
...

இந்தப் புதிய சட்டத்தினால் பரோடா நாட்டுப் பெண்களுக்கு அதிக உரிமைகளும் பாதுகாப்புகளும் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. இவ்விதமே பிரிட்டிஷ் இந்தியாவிலும், மற்ற சமஸ்தானங்களிலும், இந்து சட்டம் திருத்தப்படுமாயின் பெண்கள் முன்னேற்றத்துக்குப் பெரிதும் அனுகூலமாயிருக்கும்.

புரட்சி - கட்டுரை - 04.02.1934

திரு.ஈ.வே.ராவின் இந்தக் கட்டுரை வெளிவந்த தேதியை கவனிக்கும் போது 1930களில் கூட பெண்களின் பொருளாதார நிலை என்பது கணவன், கணவன் குடும்பத்தார் ஆகியோரது வாழ்க்கையைச் சார்ந்ததாகவே இருந்ததாகக் காண்கிறேன். தன் கணவனை இழந்த நிலையில் தன் பெற்றோர் குடும்பத்தாரும் வைத்து ஆதரிக்க முடியாத நிலை ஏற்படும் போது அப்பெண்ணின் நிலை மிகுந்த கவலைக்கிடமான சூழலிலேயே இருந்திருக்கும் என்பதில் ஐயமில்லை.இந்த நிலை படிப்படியாக பல்வேறு முயற்சிகளின் வழியாகத்தான் மாற்றமடைந்திருக்க வேண்டும். பலரது இடைவிடா உழைப்பும் பெண்கள் நலனில் அக்கறை கொண்டோர் பலரின் முயற்சிகளுமே இன்றைய நிலையில் தமிழகப் பெண்கள் அனுபவிக்கும் மாற்றமடைந்த சூழலை ஏற்படுத்தியிருக்கின்றது. 

சுபா 

Saturday, February 8, 2014

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 64

பதிவு 64

நோயின் கடுமை மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களுக்கு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருந்தது. தீபாவளிக்கு மாயூரத்திற்குச் சென்றவர் தன் குடும்பத்தாருடனும் ஏனைய சில மாணவர்களுடனும் அங்கேயே தொடர்ந்து சில நாட்கள் தங்கியிருந்தார். அவரோடு சென்றவர்களில் பிள்ளையவர்களுக்கு மிக மிக அணுக்கமான சவேரி நாதப் பிள்ளையவர்களும் ஒருவர்.

பிள்ளையவர்களை நீங்காது அவரது இறுதி காலம் வரை துணையிருந்து அவருக்குத் தேவையான அனைத்து பணிவிடைகளையும் தொடர்ந்து செய்து கொண்டு மாணாக்கர்களுக்கும் பாடம் போதித்து வந்தவர் இவர். சவேரிநாதப் பிள்ளை இயற்றிய செய்யுட்கள் சிலவும் பிரபந்தத் திரட்டு நூலில் சிறப்புப் பாயிரங்களாக ஆங்காங்கே இருப்பதை இந்த நூல்களை வாசித்தவர்கள் பார்த்திருக்கலாம். அடிப்படையில் மதத்தால் கிருஸ்துவரான சவேரிநாதர், மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களிடம் இணைந்த பிறகு அவரது அன்பிற்குப் பாத்திரமானவர். மீனாட்சி சுந்தரம் பிள்ளை செல்லும் இடங்களெல்லாம் அவரை நீங்காது துணையாக சென்றவர் இவர். பல வேளைகளில் மீனாட்சி சுந்தரம் பிள்ளைக்குப் பதிலாக மாணவர்களுக்குப் பாடம் சொல்வதையும் வழக்கமாகக் கொண்டிருந்தார் சவேரி நாதப் பிள்ளை என்பதை என் சரித்திரம் நூலில் ஆங்காங்கே உள்ள குறிப்புக்கள் சிலவற்றிலிருந்து அறிகிறோம். உதாரணமாக உ.வே.சா பிள்ளையவர்களிடம் பாடங் கேட்க இணையும் போது நைடதம் பாடத்தை சவேரி நாதப் பிள்ளையே நடத்துகின்றார். அது மட்டுமல்லாமல் பிள்ளையவர்களுக்குச் சுவடி நூலில் செய்யுட்களை எழுதும் பணியையும் இவர் செய்திருக்கின்றார் என்ற விஷயத்தை ஆங்காங்கே என் சரித்திரத்தில் உள்ள குறிப்புக்களில் காண முடிகின்றது. உ.வே.சாவுக்கு சில வேளைகளில் பிரச்சனை வந்த சமயத்தில் சவேரி நாதப் பிள்ளையின் அணுக்கம் மிகுந்த ஆறுதலைத் தந்திருக்கின்றது என்ற குறிப்பையும் காண்கின்றோம். உதாரணமாக ஆறுமுகத்தா பிள்ளையுடன் பட்டீச்சுரத்தில் தங்கியிருந்த வேளையில் நடந்த நிகழ்வுகள் இங்கு நினைவு கூறத் தக்கன.

அன்பும் நற்குணமும் தமிழ்க்கல்வியில் தீராத ஆர்வமும் கொண்ட சவேரிநாதப் பிள்ளை, உ.வே.சா போன்ற  மாணவர்களைப் பெற்றதில் மீனாட்சி சுந்தரம் பிள்ளயவர்களுக்கு நிறைந்த சந்தோஷம் இருந்தது என்பதில் மறுப்பதற்கு யாதுமில்லை. இந்த மாணவர்கள் சூழலும், அவர்களின் அணுக்கமான செயல்பாடுகளும் அவரது நோயிலும் புத்துணர்ச்சி கொடுத்து வந்தது என்பதை உணர முடிகின்றது.

பிள்ளையவர்களைத் திருவாவடுதுறை மடத்திற்கு திரும்ப அழைத்து வரும் கட்டளையைப் பெற்றுக் கொண்டு மாயூரம் சென்ற உ.வே.சா அங்கே ஆசிரியரின் அன்பிற்கிணங்க சில நாட்கள் தங்கியிருந்தார்.பின்னர் நவம்பர் மாதத்தில் (1875) ஆசிரியருடனும் பிற மாணவர்களுடன் புறப்பட்டு ஆதீனத்திற்கே வந்து சேர்ந்தார்.

திருமடத்திற்குத் திரும்பிய  பின்னர் பிள்ளையவர்களின் உடல் நிலையில் மாற்றம் ஏற்படவில்லை. ஆதீனகர்த்தரின் அன்பும், தம்பிரான்களின் அரவணைப்பும், வந்து பார்த்துச் செல்வோரின் இனிய சொற்களும் மனதிற்கு சந்தோஷத்தைக் கொடுப்பதாக இருந்தாலும் இந்த அன்பும் உபசரிப்பும் அவரது உடல் நோயைத் தீர்க்கவில்லை.

அந்த வேளையில் நடந்த ஒரு விஷயத்தை உ.வே.சா பதிகின்றார். உ.வே.சா அப்போது தனது சிற்றப்பா வீட்டில் தங்கியிருந்தவாறு மடத்தில் பாடம் கேட்டு வந்தார். தன் சிற்றன்னை தயார் செய்யும் உணவு பதார்த்தங்களை தான் சாப்பிடுவதோடு ஆசிரியருக்கும் அவ்வப்போது கொண்டு வருவாரம். அப்படி இருந்த பழக்கத்தில் ஆசிரியருக்கு என்னென்ன உணவு பதார்த்தங்கள் பிடிக்கும் என்பதை அவர் நன்கு அறிந்திருக்கின்றார். ஆக இக்கால கட்டத்தில் தன் சிற்றனையிடம் கூறி ஆசிரியருக்காக பதர்த்தங்களைச் செய்யச் சொல்லி எடுத்து வந்து கொடுத்து ஆசிரியர் உண்டு மகிழ்வதைப் பார்த்து ஆனந்தித்திருக்கின்றார்.

நாளுக்கு நாள் நோயின் கடுமை அதிகரிக்கவே பிள்ளையவர்கள் மறைவு நெருங்கி விட்டதோ என்ற சஞ்சலம் மடத்திலுள்ளோருக்கும் ஏனையோருக்கும் ஏற்படத் தொடங்கி விட்டது. இந்த நிலையை விவரித்து உ.வே.சா அவர் தந்தையாருக்கு ஒரு கடிதம் எழுதுகின்றார். அதனைப் பார்த்ததும் வேங்கட சுப்பையர் தன் மனைவியுடன் உடனே புறப்பட்டு திருவாவடுதுறை வந்து விடுகின்றார். அங்கே தன் சகோதரர் இல்லத்திலேயே தங்கியிருந்து பிள்ளையவர்களை பார்க்க வருகின்றார் என்பதனையும் காண்கின்றோம்.

ஆதீனத்திலும், உ.வே.சா பிள்ளையவர்களின் அன்பிற்குப் பாத்திரமானவர் என்ற காரணத்தினால் உ.வே.சா வின் குடும்பத்தினருக்குத் தேவையான உதவிகளை மடத்தின் நிர்வாகத்தினரும் செய்திருக்கின்றனர்.

இக்கால சூழலை உ.வே.சா தன் சரிதத்தில் இப்படிக் குறிப்பிடுகின்றார்.

சுப்பிரமணிய தேசிகர் அடிக்கடி ஆசிரியருக்கு வேண்டிய சௌகரியங்களை அமைக்கும்படி சொல்லி வந்தார். வைத்தியர்கள் செய்த பரிகாரம் தேசிகர் முதலியோருடைய அன்பை வெளிப்படுத்தியதே யன்றி நோயைப் போக்குவதற்கு உபயோகப் படவில்லை. காலபலம் கை கூடவில்லை. குமாரசாமித் தம்பிரான் அவர் செய்யும் பூஜையைத் தாமே செய்து பிரசாதம் அளித்து வந்தார்.

ஆசிரியரது உடல் தளர்ந்தாலும் அவருடைய குணச் சிறப்பு வேறுபடவில்லை. அத்தளர்ச்சியில் அவரது அறிவும் அன்பும் மரியாதையும் பெருந்தன்மையும் சிறப்பாகப் புலப்பட்டன.

தொடரும்...

சுபா

Tuesday, February 4, 2014

குடியரசில் பெரியார் உடன்....! - 6

அரசியல் என்பது சமூக நலனைக் காப்பதற்காக என்ற நோக்கத்தை அடிப்படையில் கொண்டிருப்பது. ஆனால் இன்று அரசியல் என்னும் சொல்லே அது தமிழாகட்டும், ஆங்கிலமாகட்டும் வேறு எந்த மொழியாகட்டும்.. அதன் பொருள் சிதைந்து எதிர்மறையான விளக்கத்திற்கு வழி வகுப்பதாக அமைந்து விட்டது. அரசியலின் வழி பொதுச் சேவை செய்ய முடியுமா ? என்றால் ஏன் முடியாது என்ற கேள்வியும் எழுகின்றது. அதே வேளை அரசியல் என்பது ஒரு தனி மனிதர் தன் கொள்கை நிலைப்பாட்டினை உறுதியுடன் கொண்டிருக்கும் பட்ஷத்தில் எந்த அளவிற்குக் கொண்ட கொள்கை மாறாமல், சுய நலம் சேராமல் மக்கள் நலனே பிரதானம் என்ற வகையில் செயலாற்ற முடியும் என்ற கேள்வியை முன் வைக்கின்றது. 

நேற்று இரவு ஒரு ஆங்கிலப்படம் The Whistleblower (ஜெர்மன் மொழி பெயர்ப்புடன்) பார்க்க நேர்ந்தது.  Kathryn Bolkovac என்ற பெண் எழுத்தாளர்  எழுதிய உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட படம். அதில் முக்கியமாக ஒரு UNO  நிறுவனத்தின் ஒரு பகுதி நிறுவனம் ஒன்றின் பொருளாதார உதவியுடன் அமெரிக்காவிலிருந்து போர்முடிந்த போஸ்னியா-ஹெர்ஸகோவினியாவிற்குப் போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ வரும் ஒரு பெண் போலிஸ் அதிகாரி சந்திக்கும் விஷயங்களை விளக்குவது.

போர் முடிந்த சூழலில் பெண்களை நாட்டு எல்லைகளில் கொண்டு விற்பதும், கடுமையான பாலியல் வன்முறைகளுக்கு உட்படுத்துவதும் என்று நிகழ்வதை இப்பெண் அதிகாரி கண்டுபிடிப்பதும் அதனை அவர் தடுக்க எடுக்கும் முயற்சிகளையும் காட்டுவதாக இப்படம். இதில் அதிர்ச்சி தரும் விஷயம் என்னவென்றால் அமைதி காக்க வந்த போலீஸ் அதிகாரிகளே இக்காரியத்தை செய்வது. இதனைத் தட்டிக் கேட்க பாடுபடும் இப்பெண் போலீஸ் அதிகாரியை பதவியை விட்டு நீக்குகின்றனர். ஆனால் அவர் தப்பித்து பிபிஸிக்கு ஆவணங்களைத் திருடிக்கொண்டு சென்று அதனை வெளிப்படுத்தி விடுகின்றார். இதனால் அமைதி காக்க வந்த போலீஸ், அதன் பின்னனியில் இயங்கிய அரசியல் கூட்டத்தினரின் கொடுமையான செயல்கள் என பல விஷயங்கள் உலகுக்கு அம்பலமாகின்றன. 1999 வாக்கில் நடந்த உண்மைச் சம்பவத்தை தழுவிய கதை இது.

இதனைப் பார்த்த போது சமூகக் கொடுமைகளின் எல்லையற்ற தன்மை, அதிலும் பாதுகாப்பு தரவேண்டிய அரசியல்வாதிகளும் காவல் துறையினரும் அமைதிகாக்க வரும் அதிகாரிகளுமே செய்யும் கொடுமைகள் மனதை உறைய வைத்தன. 

இப்படிப் பல உண்மைச் சம்பவங்கள்.. உலகின் பல மூலைகளில் நிகழ்ந்து கொண்டிருப்பதை அறியாதவர்கள் இல்லை நாம்.

அரசியல் & சமூக சேவை  - இதனை இணைத்துப் பார்க்க முடியுமா...என்ற வகையில் திரு.ஈ.வே.ராவின் சிந்தனைப் பதிவதாக ஒரு குடியரசு தலையங்கம். அதில் ஈ.வே.ரா இப்படிச் சொல்கின்றார்.....

சமூகத் தொண்டிற்கும் அரசியல் தொண்டிற்கும் ஒன்றுக்கொன்று சம்பந்தம் வைத்துக் கொள்வது சமூகத் தொண்டிற்குப் பெருத்த கேடு சூழ்வதேயாகும்.

அரசியல் தொண்டு என்பதாக ஒரு தொண்டே இல்லை என்பதும், அது அவ்வளவும் புரட்டு என்பதுவுமே நமது அபிப்ராயம். அப்படி ஒன்று இருப்பதாக யாராவது வாதத்தில் வெல்லலாமானாலும் அது கண்டிப்பாய் இது சமயம் நமது நாட்டிற்குத் தேவையில்லாதது என்றே சொல்லுவோம்.

நம்மைப் பொருத்தவரை அரசியலின் பெயரால் கூடுமானவரை உழைத்தாகிவிட்டது. கண்டது ஒன்றும் இல்லை. அயோக்கியர்களை உற்பத்தி செய்து அவர்கள் மூலம் பாமர மக்களை வஞ்சிக்கச் செய்ததே அல்லாமல் வேறில்லை. அதைவிட்டுத் தொலைத்து சமூகத் தொண்டையே பிரமாதமாய்க் கருதி அதற்கென உழைத்தாலும் அடிக்கடி சறுக்கி, அரசியல் சேற்றில் விழ வேண்டியதாக நேரிட்டு  விடுகிறது. இது சவகாச தோஷமே அல்லாமல் வேறல்ல.

இனி அடியோடு அரசியலை உதறித்தள்ளி வைத்து விட்டு மக்களுக்கும் அதிலிருக்கும் மூட நம்பிக்கையை ஒழிப்பதை ஒரு திட்டமாக சமூகத் தொண்டில் சேர்த்து, எல்லா மக்களையும் சமூகத் தொண்டையே பிரதானமாய்க் கருதும்படி செய்வதை முக்கிய தொண்டாக வைத்துக் கொள்வதே நலமெனத் தோன்றுகிறது.
..

தாடி, நெருப்பு பற்றி எரிகிற போது அதில் சுருட்டு பற்றவைக்க நெருப்பு கேள்பதுபோல். நமது மக்களின்  நிலை தாழ்ந்து கிடப்பதையும், சிறுமைப் படுவதையும், அயோக்கியர்களால் கொடுமைப் படுத்துவதையும் பற்றி கொஞ்சமும் கவலை எடுத்துக் கொள்ளாமல் இருப்பதோடு மற்றவர்கள் யாராவது கவலை எடுத்துக் கொண்டாலும்  அதையும் கெடுத்து அதன் பலனையும் தங்கள் சுயனலத்திற்கு உபயோகப்படுத்திக் கொள்ளப் பார்க்கிற மக்களை வைத்துக் கொண்டு என்னதான் செய்யமுடியும் என்பது நமக்குத் தோன்றவில்லை.

ஆகையால் உண்மைத் தொண்டர்கள் இது விஷயத்தில் போதிய கவலை எடுத்து, யோசித்து இது சமயம் ஒரு முடிவுக்கு வரவேண்டியது அவசியம் என்பதை  இப்போதே தெரியப்படுத்திக் கொள்ளுகிறோம். இதில் சேர வருகிறவர்கள் கூடுமான வரை கஷ்டம் அனுபவிக்க நேர்ந்தால் அனுபவிக்கவும், தியாகம் செய்யவும், தன்னலத்தை அடியோடு மறுக்கவும் தயாராயிருக்க வேண்டும் என்பதையும் ஞாபகத்தில் வைத்துக் கொண்டு யோசிக்க வேண்டும் என்பதையும் தெரியப்படுத்திக் கொள்ளுகிறோம்.

குடி அரசு - தலையங்கம் - 31.07.1927

சுபா

Saturday, February 1, 2014

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 63

பதிவு 63

திருவிடைமருதூர் கட்டளை மடத்தில் தங்கியிருந்த மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களுக்கு வைத்தியம் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது. ஆனால் பெரிதாகப் பலன் ஏதும் தெரியவில்லை. மாணவர்கள் ஒரு நாள் விட்டு பாடம் கேட்க வந்து சென்று கொண்டிருந்தார்கள். அச்சமயத்தில் பிள்ளையவர்களும் ஸ்ரீ சிவஞான யோகிகள் வரலாற்றை எழுதும் பணியில் இறங்கியிருந்தார்கள்.  அந்தச் சரித்திரத்தை பெரிய காவியம் போல படைக்க எண்ணியிருந்தாராம். அதற்காக வரலாற்று விஷயங்களை மூல நூலிலிருந்து விரிவாக்கிச் சொல்ல, நாடு நகரச் சிறப்பையெல்லாம் எடுத்துக் காட்டி நூலை எழுதத் தொடங்கியிருந்தார் பிள்ளையவர்கள்.

பாடம் கேட்க உ.வே.சா வும் ஏனைய மாணவர்களும் செல்லும் போது இரவிலும் சில நாட்கள் அங்கு தங்கியிருந்து பேசி வருவார்களாம். சங்கீத ஞானம் பெற்றிருந்த உ.வே.சா சில நேரங்களில் ஆசிரியர் மனம் குளிர கீர்த்தனைகளைப் பாடுவாராம். அதிலும் குறிப்பாக நந்தனார் கீர்த்தனைகளை இசையொடு பாடுவாராம். இதனைப் பாடும் போது பிள்ளையவர்கள தன்னை மறந்து ரசிப்பாராம்.  தனக்கு இசை ஞானம் இல்லாதபோதிலும் இசையுடன் வரும் அந்த கீர்த்தனைகள் சொல்லும் பக்தி நிலையை நினைத்து தன்னை இழந்திருப்பார் போலும். உ.வே.சாவின் குறிப்புக்களில் அத்தியாயம் 62லிருந்து இப்படி அறிகிறோம்.

சங்கீதத்தில் சிறிதும் பயிற்சியில்லாத ஆசிரியர் எல்லாம் தளர்ந்திருந்த அந்த நிலையில் அக்கீர்த்தனங்களில் மனம் ஒன்றித் தம் நோயை மறந்தார். அவரை அறியாமலே சங்கீதமும் கீர்த்தனங்களின் எளிய நடையும் அவர் உள்ளத்தைக் கவர்ந்தன. முக்கியமாக நந்தனார் சரித்திரக் கீர்த்தனைகளைக் கேட்கும்போது அவர் அடைந்த ஆறுதல் மிகுதியாக இருந்தது.

கட்டளை மடத்தில் இருந்து வைத்தியம் பார்த்தும் பிள்ளையவர்களின் உடல் நிலையில் மாற்றம் காணாததால் ஆதீனகர்த்தர் பிள்ளையவர்களை மீண்டும் தாம் இருக்கும் திருவாவடுதுறை மடத்திற்கே வந்து விடும் படி சொலி அழைத்துக் கொண்டார். இவர்கள் இருவருக்கும் ஆதீனகர்த்தர்-ஆதீனப் புலவர் என்பதோடு ஆரம்ப காலம் முதல் ஆழ்ந்த அன்பும் இருந்தது என்பதை அறிகின்றோம். ஆக தன் பார்வையில் பிள்ளையவர்கள் எப்போதும் இருப்பதை ஆதீனகர்த்தர் விரும்பினார் என்பது தெரிகின்றது. 

அடுத்த சில நாட்களிலேயே தீபாவளி நெருங்க பிள்ளையவர்களின் குமாரன் சிதம்பரம் பிள்ளை தன் குடும்பத்தோடு வந்து தீபாவளி நாளில் சேர்ந்திருக்க வரும்படி கூறி மாயூரத்திற்கு அழைத்துச் சென்றிருக்கின்றார். அப்போது பிள்ளையவர்கள் தனியாகச் செல்லவில்லை. ஏனைய சில மாணாக்கர்களையும் உடன் அழைத்துக் கொண்டே சென்றிருக்கின்றார். அச்சமயத்தில் உ.வே.சா. திருவாவடுதுறையிலேயே தனது சிற்றப்பா இல்லத்திலேயே இருந்து தீபாவளி கொண்டாடியிருக்கின்றார்.  

தீபாவளி நேரத்தில் மடத்தின் சார்பாக அனைவருக்கும் புதிய ஆடைகளை ஆதீனகர்த்தர் பரிசாக வழங்கியிருக்கின்றார். மாயூரத்திற்குச் சென்ற பிள்ளையவர்களுக்கும் அவரோடு துணையாகச் சென்ற மாணவர்களுக்கும் ஆதீனகர்த்தர் புதிய ஆடைகளை வாங்கச் செய்து அனுப்பி வைத்திருக்கின்றார். ஆனால் ஏதோ காரணமாக தவறுதலாக உ.வே.சாவுக்கு மடத்திலிருந்து புதிய வேஷ்டியும் வஸ்திரமும் கிடைக்கவிலை. இந்தச் செய்தி எப்படியோ மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களுக்குச் சென்று சேர்ந்திருக்கின்றது. 

தீபாவளி முடிந்து சில நாட்களில் பிள்ளையவர்களை மீண்டும் மடத்திற்கு அழைத்து வரும்படி நினைத்து உ.வே.சாவை அழைத்துச் சொல்லியிருக்கின்றார் ஆதீனகர்த்தர். ஆசிரியரைப் பார்க்கத் தான் இந்த மாணவருக்கு மிகுந்த மகிழ்ச்சியாயிற்றே. உடனே மாயூரம் புறப்பட்டு விட்டார் உ.வே.சா. அங்கு சென்று சேர்ந்ததும் பிள்ளையவர்கள் இவரைப் பார்த்து கேட்ட கேள்வியும் அந்த சம்பாஷணையும் சுவையானது. உ.வே.சா. அதனை இப்படி பதிந்திருக்கின்றார். 

நான் போய்ப் பிள்ளையவர்களைக் கண்டதும், அவர் முதலில் என்னை, “தீபாவளிக்கு உமக்கு மடத்திலிருந்து வேஷ்டி கிடைக்க வில்லையாமே?” என்று கேட்டார். அந்த விஷயத்தை அவர் எப்படியோ தெரிந்து கொண்டிருந்தார். அதனால் எனக்கு விசேஷ வருத்தம் ஒன்றும் இராவிட்டாலும் அவருக்கு மாத்திரம் அது பற்றிய உறுத்தல் மனத்தில் இருந்தே வந்தது. “மடத்தில் படிக்கும் பிள்ளைகள் எல்லோருக்கும் வஸ்திரம் வழங்கும்போது உம்மை மட்டும் மறப்பதற்கு நியாயம் இல்லையே! உம்மிடம் ஸந்நிதானத்திற்கு எவ்வளவோ பிரியம் இருக்கிறதே. கவனிக்க வேண்டாமா?” என்று அவர் சொன்னார்.

“பெருங் கூட்டத்தில் மறந்து போயிருக்கலாம்; அல்லது கொடுத்ததாக எண்ணி இருக்கலாம். இதற்கு வேறு விதமான காரணம் இராது” என்று நான் சமாதானம் சொன்னேன்.

அப்படிச் சொன்னதோடு நின்று விடவில்லை. தன் மாணவரின் மனக்குறையை தன் மனக்குறையாக பாவிப்பவர் அல்லவா? பிள்ளையவர்கள் உடனே என்ன செய்தார் என்பதையும் உ.வே.சா. பதிந்து வைக்கின்றார்.

ஆசிரியர் அதோடு நிற்கவில்லை. அருகில் இருந்த ஒருவரை அழைத்து அவர் கையில் பணத்தை அளித்துக் கடைக்குச் சென்று ஒரு புதிய பத்தாறு வஸ்திரம் வாங்கிவரச் செய்து தாமே அதற்கு மஞ்சள் தடவி என் கையிலே கொடுத்து, “இதைக் கட்டிக் கொள்ளும்” என்று அன்புடன் கூறினார். நான் அவ்வாறே அதைத்தரித்துக் கொண்டேன். தீபாவளி எனக்கு இரண்டு தடவை ஏற்பட்டது. திருவாவடுதுறையில் எல்லாரோடும் ஸ்நானம் செய்து யாவருக்கும் பொதுவான தீபாவளியைக் கொண்டாடினேன். அன்று மாயூரத்தில் ஆசிரியர் முன்னிலையில் அவர் அன்புப் பார்வையில் மூழ்கி அவர்தம் அருமைக்கையால் அளித்த வஸ்திரத்தைத் தரித்து ஒரு தீபாவளியைக் கொண்டாடினேன். அன்று எனக்கிருந்த மகிழ்ச்சிக்கு அளவில்லை.

என்னை ஒருமுறை பார்த்துவிட்டு, “இப்போது எவ்வளவு நன்றாக இருக்கிறது!” என்று சொல்லி ஒரு பெருமூச்சு விட்டார். அப்போது நெடுநாளாக இருந்த குறை ஒன்று நீங்கப் பெற்றவரைப் போலவே அவர் தோன்றினார்.

இப்படி பல நெகிழ்ச்சியான சம்பவங்கள் உ.வே.சா வாழ்க்கையில் பிள்ளைவர்களோடு இணைந்திருந்த காலகட்டத்தில் நிகழ்ந்திருக்கின்றது. இதனை வாசிக்கும் போது நமது மனமும் இவர்களின் அன்பில் கறைகின்றது என்பது உண்மை!

தொடரும்....

சுபா