Thursday, November 12, 2015

JK's Letters to the Schools - 13


" Our consciousness is a complexity but its very substance is movement. This must be clearly understood - that we are not dealing with theories, hypotheses, ideals, but with our own actual daily existence......" - by J.K. 

J.K.  அவர்கள் 15 October 1982 அன்று எழுதிய ஒரு கடிதம் இது.  'Letter to the Schools"  நூலில் அடங்கும் கடிதத்தின் இரு வரிகள். அதனை வாசித்த போது எழுந்த  எனது சிந்தனைகள் தமிழில் தொடர்கின்றன.


பிம்பங்களை விட்டு விலக முடியாத பிரச்சனை என்பது தான் நாம் ஒவ்வொருவரும் அன்றாடம் அனுபவிக்கும் பல உளப் பிரச்சனைகளுக்கு அடித்தளம் அமைப்பதாக அமைகின்றது. இளம் வயது தொடங்கி தொடர்ச்சியாக பிம்பங்களை உள்வாங்கிக் கொண்டு அதனை பத்திரப்படுத்தி வைத்து, அவற்றை ஆராதனை செய்து வளர்க்கும் மனம் மிக எளிமையாக பிம்பங்களுக்குள்ளேயே சுகமாக தன்னை புதைத்து வைத்துக் கொள்ளவே விரும்புகின்றது. 

பிம்பங்கள் அகன்ற ஒரு நிலையில் ஒன்றைக் காண்பது என்று ஒன்று இருக்கின்றது. இன்னிலை என்பது, ஒவ்வொன்றையும், அதாவது ஒவ்வொரு பொருளையும் அதனை அதன் தன்மை கெடாதவாறு, அதன் இயற்கைப்படியே அவ்வாறே காண்பது. அதாவதுஉள்ளதை உள்ளவாறு காண்பது. 

நம் உணர்வுகள் என்பது எப்போதும் இயங்கிக் கொண்டே இருப்பது.  இந்த இயங்கு தன்மையில் சிந்தனை செய்தல், முடிவெடுத்தல்,  கருத்தினை எதிர்கொள்தல், கருத்தினை உள்வாங்குதல், கருத்தினைப் பிரசவித்தல் என்பன அடிப்படையாக நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. கருத்துக்களின் ஒப்பீடுகள் என்று வரும் போது ஒரு கருத்தை ஏற்று, அதனைச் சீர்தூக்கிப் பார்த்து, அலசி, காரண காரியங்களை உட்புகுத்தி ஒரு தொடர்ச்சியான சுழற்சியை நம் மனம்  நிகழ்த்திக் கொண்டேயிருக்கின்றது. இந்த  அனுபவம் என்பது மனித உள்ளத்தில் விழிப்பு நிலையில் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டேயிருக்கும் ஒரு செயல்பாடாகவே இருக்கின்றது. நான் சும்மா இருக்கின்றேன் எனச் சொன்னாலும் கூட, அந்நிலையில் நம் உடல் அசைவுகளைக் குறைத்த நிலையில்  இருக்கலாம். ஆனால் உள்ளத்தில் சிந்தனைகளின் தொடர்ச்சி நிகழ்ந்து கொண்டேதான் இருக்கின்றது.

நம் சிந்தனை நமக்கு தெளிவைத் தரும் வகையில் அமைய வேண்டுமென்றால் அடிப்படையில் பிம்பங்களை நாம் கையாளும் முறையில்  சில உத்திகளைச் செயல்படுத்த வேண்டியது அவசியமாகின்றது. நம் சிந்தனையில் நாம் பதிந்து வைக்கும் பிம்பங்கள் பற்றி அவ்வப்போது மீள்பார்வை செய்வது நமது சிந்தனை தெளிவிற்கு நல்ல பயிற்சியாக அமையும். 

இவ்வுலக இயற்கை நமக்குக் காட்டுவது மாற்றம் என்ற ஒன்றைத்தான். 
மாற்றம் என்பது நம்மைச் சுற்றியுள்ள எல்லாவற்றிலும் கணம் கணம் நிகழ்ந்து கொண்டேயிருப்பது.  இப்படி புறத்தே நிகழ்கின்ற மாற்றங்களைச் சரியாக உள்வாங்கி  நம் உள்ளத்தில் பதிந்துள்ள பிம்பங்களையும் தொடர்ச்சியாக அப்க்ரேட் செய்து கொள்வது தான்  சிந்தனையின் ஒரு முக்கிய செயல்பாடாக இருக்க வேண்டும். இந்த பிம்பங்களை அணுகும் போது தியரிகளை மட்டும் வைத்துக் கொண்டோ, நாம் சிறந்தது என நினைக்கும் சித்தாந்தங்களை  மட்டும் அடிப்படையாக அமைத்துக் கொண்டோ செயல்படுவது என்பதை விட உலகில் நம் கண்முன்னே நிகழும் மாற்றங்களை அதனதன் தன்மைக்கேற்ப உள்வாங்கி அதனை சீர்தூக்கி அலசுவது தெளிவினை நோக்கிய சிந்தனையின் பயணத்திற்கு வழி ஏற்படுத்தும்.

எந்த மாற்றங்களையும் செய்து கொள்ளாது என்றோ ஆழ்மனதில் பதிந்து வைத்த பிம்பங்களையும் சித்தாந்தங்களையும்  நமது சிந்தனைகளின் அடித்தளமாக அமைத்துக் கொண்டு மட்டும் இயங்கி கொண்டிருந்தால், நிகழ்காலத்தில் வாழாத நிலையை அடைவதும், அதனால் உளச்சிக்கல்கள் ஏற்படுவதும்,  அது நம் மனதிற்குத் தேவையற்ற கலக்கங்களையும், விரக்தியையும், அதிருப்தியையும்  வழங்குவதாகவே அமையும். 

தடைகளை நாமே திணித்துக் கொள்ளாமல், பிம்பங்களை இறுக்கிப் பிடித்துக் கொண்டிராமல், சிந்தனையைச் சுதந்திரமாக செயல்பட விட்டு அதில் கிடைக்கின்ற தெளிவினை அனுபவிப்பது மனதிற்கு சுகமான அனுபவம். நம் சிந்தனை சுகமான அனுபவமாக அமையட்டுமே!.

-suba