Friday, December 19, 2003

Back to weblog!

எத்தனை நாளுக்குத்தான் அலுவலகத்திலேயே உட்கார்ந்து கொண்டிருப்பது? வருடக் கடைசி; கிறிஸ்மஸ் கொண்டாட்டம் என்று எனது குழுவில் அனைவரும் அவர்களைத் தயார்படுத்திக் கொண்டிருக்க நான் ஊரை விட்டே ஓடுவதுதான் நல்லது என்று நினைத்து விமான டிக்கட்டை எடுத்துக் கொண்டு பறந்து விட்டேன். எங்கே என்று கேட்கின்றீர்களா? தென் ரியாவுக்குத்தான்.



ஜெர்மனியில் தான் குளிர் வாட்டுகின்றது என்றால் தென் கொரியத் தலைநகரான சியோலிலும் குளிர் அதிகமாகத்தான் இருக்கின்றது.

குளிர் -3 டிகிரிக்குச் சென்றாலும் சும்மா உட்கார்ந்திருக்க முடியவில்லை. குளிர் ஜேக்கட்டை அணிந்து கொண்டு சியோலை சுற்றிப்பார்க்க கிளம்பி விட்டேன். வருகின்ற நாட்களில் இந்த வலைப்பூவில் எனது சியோல் பயணக் கட்டுரை வெளிவரும், படங்களோடு..:-)

Monday, December 8, 2003

Ilayaraja

இளையராஜாவின் பால்நிலாப் பாதை என்ற புத்தகத்தை நேற்று வாசித்துக் கொண்டிருந்தேன். தனது வாழ்க்கை அனுபவங்களை உரைவீச்சாகவும் கட்டுரையாகவும் தந்திருக்கின்றார் இளையராஜா இந்த நூலில். இதற்கு முன்னுரையாக இனிய கவிதைகளாக அமைந்திருக்கின்றன பாரதிராஜவும் கமலஹாசனும் கொடுத்திருக்கும் நட்பு மிகுந்த அனிந்துரைகள்.

எளிமையான எழுத்து. மிகச் சாதரணமாகத் தான் கடந்து வந்த பாதை, இளம் வயது அனுபவங்கள், இசைப்பயணத்தில் கிடைத்த நட்பு, ஆசிரியர்கள், மற்றும் வாழ்க்கை அனுபவங்கள் ஆகியவற்றைப் பதிவாக்கியிருக்கின்றார் இந்த நூலில்.

மிகப் பெரிய இசை ஜாம்பவானாக இருந்த போதும் தானும் ஒரு சாதாரண மனிதன் தான் என்பதை, தன்னுடைய எண்ணங்களை, தனது பயத்தை, தனது செயலை எடுத்துச் சொல்வதன் வழி படிக்கின்ற வாசகர்களுக்குக் கொடுத்திருக்கின்றார் இளையராஜா என்று தான் சொல்ல வேண்டும். பல இடங்களில் இவரின் ஆழ்ந்த சிந்தனையின் வெளிப்பாடுகளும் புரிந்துணர்வும் வெளிப்படுகின்றன.

படித்து ரசிக்க வேண்டிய ஒரு நூல்தான் இது. அரும்பு பதிப்பகத்தின் வெளியீடாக வந்திருக்கும் இந்த நூலின் விலை ரூ. 75 நூலிலிருந்து சில வரிகள்:

"ஒரு நிகழ்ச்சியில் ஒன்றிப்போய் மகிழ்ந்திருந்தாலோ விலகிப்போய் வருந்தியிருந்தாலோ அதிலிருந்து ஏதோ ஒன்றை நான் கற்றுக் கொண்டிருக்கின்றேன் என்று நம்பலாம்.
எனக்குச் சாதாரணமாகப் படுவது உங்களுக்குக் கற்றுக் கொள்ளும் ஓர் உயர்ந்த விஷயமாகவும்
உங்களுக்குச் சாதாரணமாகத் தோன்றுவது எனக்கு விசேஷ அம்சம் உடையதாகவும் இருக்கலாம். நீங்களும் நானும் கற்பது - நிற்கப்போவதில்லை என்பதே உண்மை. "

Monday, December 1, 2003

JK's Letters to the Schools - 10

To observe a cloud with all the light of the world in it, to follow a stream chattering down the hill; to look at your friend with the sensitivity in which there is no resistance and to see youself as you are without the shades of denial or easy acceptance; to see yourself as part of the whole; to see the immensity of the universe - this is observation: to see without the shadow of yourself. - by J.K.



ஜே.கே - யின் குறிப்புக்களைப் படிக்கும் போது எனக்குள் எழுந்த தாக்கங்களை இங்கு தருகின்றேன்.

இந்த உலகம் பல அற்புதங்களை உள்ளடக்கி உள்ளது. இங்கே இயற்கை எனும் அழகு இருக்கின்றது. துள்ளித் திரியும் விலங்குகள், சிறகை விரித்துப் பறக்கும் புல்லினங்கள் கடல் வாழ் உயிரினங்கள் நம் கண்களுக்கு அதிசயமாய் தென்படும்
உயிரினங்கள் இப்படிப் பல; அதுமட்டுமல்ல. பிறவிகளிலேயே அற்புதப் பிறவியாக மனித இனம்; மனிதன் நாளுக்கு நாள் அடையும் வளர்ச்சி; இப்படி எங்கெங்கு பார்த்தாலும் அற்புதங்கள் தான் இந்த உலகில் நிறைந்திருக்கின்றன.

மனம்; அந்த மனத்தில் எழும் எண்ணங்கள்; சிந்தனைகள் செயல் வடிவம் பெற மனிதன் எடுக்கும் முயற்சிகள்; இவைகள் கூட அற்புதமானவைதான். இந்த அற்புதங்களை என்னுடைய ஆழ் மனத்தின் கற்பிதங்கள் பாதிக்காமல் நான் பார்க்க முயற்சிக்கின்றேனா???

இன்று மனம் சோகமாக இருக்கின்றது; காய்ந்து தரையில் பரந்து கிடக்கும் இலைகளைப் பார்க்கும் போது இயற்கையே என்னுடைய சோகத்தைப் பகிர்ந்து கொண்டு விட்டதோ என நினைக்கும் வகையில் உலகமே சூன்யமாகப் படுகின்றது. அடுத்த நிமிடமே சந்தோஷமான ஒரு தகவல் கிடைக்க, உடனே மனம் ஆனந்தத்தில் அலைமோதுகின்றது. தரையில் கிடக்கும் காய்ந்த சிவப்பு நிற இலைகள் என்னை வரவேற்பதற்காகப் போடப்பட்ட சிவப்புக் கம்பளமாக
மனதில் தோன்றுகின்றது. உலகமே இப்போது எனக்கு அழகாகத் தோன்றுகின்றது.

உலகம் நம் மனத்தைப் பொறுத்தே அமைகின்றது!


ஒன்றைப் பார்க்கும் பொழுது, அதனைப் புரிந்து கொள்ள முயலும் பொழுது அதனை அதன் தன்மை கெடாமல் நமது சுய எண்ணங்கள் பிரதிபலிக்காமல் அதனைப் பார்க்க முயலும் போதுதான் உண்மையான அதன் தன்மையைப் புரிந்து கொள்ள முடியும். என்னுடைய சிந்தனைகளின் மொத்த வடிவம் பற்பல சிறிய சிந்தனைகளின் கோர்வை. ஒவ்வொரு கணமும் மனதில் எண்ணற்ற சிந்தனைக் குவியல்கள் எழுகின்றன. மனம் அந்த எண்ணங்களை process செய்து அதற்கு ஒரு summary உருவாக்கி மனதில் சேர்த்து வைத்துக்கொள்கின்றது. இந்த தகவல் வங்கியைப் பயன்படுத்திக் கொண்டே மீண்டும் மீண்டும் பற்பல தகவல்கள் மனதில் உருவாகிக் கொண்டும் வளர்ந்து கொண்டும் இருக்கின்றன.

ஒரு பொருளை உள்ளதை உள்ளவாறு பார்க்கத் தெரிந்தவராக நான் இருக்கின்றேனா என்பதை மீண்டும் மீண்டும் நான் கேட்டுக் கொள்கின்றேன். ஒரு புதிய விஷயத்தை எந்த யோசனையும் இல்லாமல் எனக்குப் பிடித்த வகையில் வியாக்கியானம் செய்து விட்டுப் போகும் போது எனது சிந்தனை அங்கு கொஞ்சமும் வேலை செய்யாமல் போய்விடுகின்றது. அவசர உலகத்தில் வாழும் நமக்கு இது மிகப் பெரிய ஒரு சோதனைதான். அவசர அவசரமாக ஒன்றினைப் பார்க்கின்றோம். பார்க்கின்ற, கேட்கின்ற ஒன்றினை முழு கவனத்தோடு உணர்வதில்லை; ஆழமாக யோசிக்காமல் உடனே ஒரு அவசர முடிவுக்கு வந்து விடுகின்றோம். நமது மனதில் உருவாகியிருக்கும் எண்ணம் தான் சரியான ஒன்று என்பதை நிலை நாட்ட ஆயிரம் சாக்குப் போக்குகளை உருவாக்குகின்றோம். உண்மையான புரிந்துணர்விற்கு இது கொஞ்சமும் உதவ முடியாது. நாம் அனுபவிக்கும், பார்க்கும், பழகும் அத்தனை விஷயங்களையும் 'விழிப்புணர்வோடு' 'திறந்த மனத்தோடு' பார்ப்பதே அறிவுடமை. ஒரு மாயத் திரையை மனதில் வைத்துக் கொண்டும் பற்பல சாக்குப் போக்குகளைக் கற்பித்துக் கொண்டும், காரண காரியங்களை உருவாக்கிக் கொண்டும் பொய்யான ஒரு விஷயத்தையோ, சரியற்ற ஒன்றினையோ, முறையற்ற ஒரு செயலையோ நியாயப்படுத்துவதில் சிறிதளவும் பலனில்லையே.

நான், வானம் மஞ்சள் நிறம் என்று சொல்லிக்கொண்டிருந்தால் வானம் மஞ்சள் நிறமாகப் போய்விடப்போவதில்லை. உண்மையைப் பார்க்க மனம் அஞ்சும் நிலையை நான் பெற்றிருந்தால் அந்த உணமையை உணர மனதிற்கு தைரியத்தை நான் வளர்த்துக் கொள்வது தானே சரியான செயல்!

Friday, November 28, 2003

Matrix IV

இணையத்தில் கிடைத்த ஒரு movie clip ஒன்று இன்று என்னை வயிறு வலிக்க சிரிக்க வைத்து விட்டது. நீங்களும் அதைப் பார்த்து மகிழ உங்களுக்குக்காக எனது வலைப்பக்கத்தில் சேர்த்திருக்கிறேன். இங்கே பாருங்கள். (Windows Media Player இருந்தால் நன்றாகப் பார்க்கலாம்)

Matrix நான் ரசித்துப் பார்த்த படம். அதில் புதிதாக வந்திருக்கும் Matrix Revolution-க்கு அடுத்ததாக நினைத்து இந்த சிறிய Trailer உருவாக்கியிருக்கின்றனர். பார்த்து மகிழுங்கள். உங்களுக்கும் சிரித்து சிரித்து வயிறு புண்ணாகப்போவது நிச்சயம்.

Wednesday, November 26, 2003

Work Life

அலுவலகத்தில் அதிக நேரம் செலவழிக்கின்றேன் என்று அன்பானவர்கள் என் மேல் கோபப்பட்டுக் கொள்வார்கள். பற்பல தொடர் பிரச்சனைகளைக் கணினிகள் வழங்கிக் கொண்டிருக்கும் போது வேலையை அப்படியே விட்டு விட்டு 5 மணிக்கெல்லாம் வீடு திரும்பலாம் என்பதெல்லாம் சாத்தியப்படுத்தப்பட முடியாத ஒன்றாகி விட்ட நிலை. வேலையில் நம்மை மறந்து மூழ்கிப் போய்விடும் போது, நேரம் செல்வதே தெரியாமல் போய்விடுகின்றது. அதிலும் குறிப்பாக கடந்த இரண்டு மாதமாக என்னையே மறந்து விடச்செய்யக்கூடிய வகையில் வேலை பளு அதிகரித்து விட்டமையால் வார இறுதி நாட்களிலும் அலுவலகத்திலேயே 'இனிமையாக' பொழுதைக் கழித்துக் கொண்டிருக்கின்றேன்.

காலையில் எழுந்ததிலிருந்து இரவு வரை அலுவலகமே கதி. சில நேரங்கங்களில் அலுவலகம் தான் புகுந்த வீடாகி விட்டதோ என்ற நிலை தான் மனதில் தோன்றுகின்றது!
நம்மில் பலருக்கு இப்படிப்பட்ட நிலை தவிர்க்கமுடியாத ஒன்று தான் என்பதை நான் அறிந்திருக்கின்றேன். வேலையில் மூழ்கி அதிலேயே மெய்மறந்து போய்விடும் நிலை என்பது வற்புறுத்தலால் வருவதில்லை. ஒரு கடமையில் ஈடுபாடு இருக்கும் போது, அதனை மனம் விரும்பும் போது மனதில் மற்ற எண்ணங்கள் தோன்றாமல் அலுவலகமே கதி என்ற நிலமைக்கு வந்து விடுகிறோம் என்றே நினைக்கின்றேன்.

நம்மை மறந்து இப்படி வேலையிலேயே மூழ்கிப்போய்விடுவதால் சில வேளைகளில் வெளி உலக விஷயங்களைப் பற்றி அறிந்து கொள்வதற்கான வாய்ப்பு குறைந்து விடுகின்றது. ஆனாலும் இணையம் தந்திருக்கும் வாய்ப்பு என்பது உலகின் எல்லா மூலைகளிலும் நடக்கும் பல விஷயங்களைத் தெரிந்து கொள்ளும் நிலையை வழங்கியிருப்பதால் 24 மணி நேரமும் இணையத் தொடர்புள்ள வகையிலான தொழிலில் ஈடுபட்டிருக்கும் என்போன்றவர்களுக்கு இந்தப் பிரச்சனை ஏற்படுவதில்லை. மின்னஞ்சல் மூலமாகவும் MMS SMS வழியாகவும் உடனுக்குடன் நண்பர்களுடனும் உறவினர்களுடன் தொடர்பு கொள்ளவும் முடிகின்றது. தொலைத் தொடர்பு தொழில் நுட்ப வளர்ச்சியினால் தான் இம்மாதிரியான பிரச்சனைகளை சமாளிப்பது சாத்தியமாகின்றது. ஆனாலும் பல நேரங்களில் அலுவலகமே உலகம் என்ற நிலையை படிப்படியாக இந்தப் போக்கு வளர்ப்பதையும் பார்க்க முடிகின்றது. எப்படி இந்த நிலையை சமாளிப்பது என்பது தான் பிரச்சனையே!

Monday, November 24, 2003

Friendship

நல்ல நண்பர்கள் அமைவது என்பது சாதாரண ஒரு விஷயமில்லை என்பதை வாழ்க்கை அனுபவம் கற்றுக் கொடுக்கின்றது. இளம் வயதில் பள்ளி நாட்களில் என்னோடு சேர்ந்து படித்த நண்பர்களில் இரண்டு பேர்தான் இன்றளவும் என்னோடு தொடர்புடன் இருக்கின்றனர். !இவர்கள் இருவரும் எனது இனிய தோழிகள். மற்ற நண்பர்கள் எல்லாம் எங்கே என்ன செய்கின்றார்கள் என்பது கூடத் தெரிவதில்லை.

உற்ற நண்பர்களாக பள்ளிக் காலத்தில் இருந்தாலும் காலம் ஏற்படுத்தும் பிரிவு நாள்பட நாள்பட ஒருவரை ஒருவர் மறக்கும் அளவிற்குக் கொண்டு சென்று விடுகின்றது. காலம் செல்லச் செல்ல பல புதிய நண்பர்கள் அறிமுகமாகின்றார்கள். நண்பர்கள் என்பவர்கள் ஓரளவிற்காவது ஒத்த சிந்தனையுடையவர்களாக இருந்தால் தான் அந்த நட்பில் இனிமையை உணரமுடிகின்றது. ஓரளவேனும் மன அலைகள் ஒத்தவர்களாக இருக்க வேண்டும். ஓரளவிற்காவது சில விஷயங்களில் ஒரே மாதிரியான விருப்பம் இருக்க வேண்டும். அப்படி இல்லாத பட்சத்தில் நட்பு வளர்வதற்கு பதிலாக வெறுப்பு வளர்வதற்கான நிலை ஏற்பட்டு விடுகின்றது.

நல்ல நண்பர்கள் என்பவர்கள் பொழுதை இனிமையாகக் கழிப்பதற்கு மட்டுமல்ல; மாறாக மனதில் பிரச்சனைகளும் கவலைகளும் தோன்றும் போது அதனை பகிர்ந்து கொள்வதற்கும் தேவை. நன்றாக நம்மை புரிந்து கொண்டவர்கள் தான் நண்பர்களாக இருக்க முடியும். புரிந்துணர்வு இல்லாமல் ஏதாவது ஒரு தேவைக்காக உறவை வளர்த்துக் கொள்ளும் போது அங்கே உண்மையான நட்பு இல்லாமல் போய்விடுகின்றது. சில வேளைகளில் நண்பர்களால் உருவாகின்ற பிரச்சனைகளை பார்க்கும் போது இந்த மாதிரி நட்பு தேவையே

இல்லை என்றே எண்ணத் தோன்றுகின்றது. ஒரு சிலர், நண்பர்களை அவர்களது பலகீனத்தை கேலி செய்தே சந்தோஷமடைபவர்களாகவும் இருக்கின்றனர். இவர்களை எப்படி நண்பர்கள் என்று சொல்லிக் கொள்வது?

மனிதர்கள் மாத்திரம் தான் நண்பர்களாக இருக்க முடியும் என்பதல்ல. புத்தகங்களும் கூட நமக்கு நல்ல நண்பர்களாகலாம்; மனதிற்குப் பிடித்த விஷயங்களை அவை தெளிவுபட நமக்கு விவரிக்கும் போது!

Wednesday, November 19, 2003

Vairamuthu



ஒரு உண்மையை ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும். 8 நாட்களுக்கு முன்னர் வரை நான் வைரமுத்துவின் 'புத்தகம்' எதையும் வாசித்ததில்லை.

வைரமுத்துவின் பாடல்களைப், பேச்சுக்களைக் கேட்டதில்லையா என என்னைக் கேட்டு விடாதீர்கள். அவை வேறு; அவரது புத்தகத்தில் உள்ள எழுத்துக்கள் வேறு. இணையம் வழி தேர்வு செய்து வாங்கிய நூற்களில் வைரமுத்துவின் 'சிகரங்களை நோக்கி' என்ற புத்தகமும் ஒன்று. 1992-ல் வெளியிடப்பட்ட நூல் இதுவரை 11 மறுபதிப்புக்களை 2003 வரை கண்டிருக்கின்றது. இந்த விபரமே இவரது எழுத்தின் பிரபல்யத்தை வெளிக்க்காட்டுகின்றது.

வைரமுத்துவின் தனிப்பட்ட கொள்கைகள் எனக்குத் தெரியாது. ஆனால் இந்த ஒரு நூலில் அவர் தன்னை ஓரளவு வெளிப்படுத்த முயற்சிக்கின்றார் என்பது உண்மை. தத்துவ விசாரணையை மனிதர் எளிமையாய் கவிதை வரிகள் மனதில் பதியும் வகையில் படைக்கின்றார். படிக்கும் போது பேனாவை வைத்துக் கொண்டு எனக்குப் பிடித்த வரிகளை நான் கோடிடுவது வழக்கம். அதேபோல கோடிடலாம் என்று முயற்சித்தால் ஒரு பக்கத்திலுள்ள முக்கால்வாசி வரிகளை கோடிட்டே ஆக வேண்டும். பளிச்சென்று ஆழமான தத்துவங்களை எளிமையாக கொடுக்கின்றார். தத்துவம் மட்டும் தான் என்பதல்ல. காதலை விபரிப்பதிலும் அழகு தெரிக்கின்றது.


புத்தகத்தில் பக்கம் 59.
***********************

ஓவியா என்ற அறிவார்ந்த அழகிய பெண்ணை இயற்கைப் பிரியனான கவிஞன் காண்கிறான். அவள் மேல் காதல் வருகின்றது. அவனது உணர்வுகளை வெளிப்படுத்தும் விதம் அழகு.

'உதடு ஒரு முறை உச்சரித்தாலும் இருதயப் பாறையெங்கும் அவள் பெயர் ஒலித்தது"

"உன்னை மீண்டும் காண்பேனா ஓவியா..? அப்படிச் சந்திக்க முடியாவிட்டால்? இப்படித்தான் விளம்பரம் கொடுக்க வேண்டும். "காணவில்லை! கண்டுபிடியுங்கள்! பெயர்:மின்னல்"

புத்தகத்தை இன்னமும் வாசித்து முடிக்கவில்லை. இன்றைக்கு இரவும் தொடர வேண்டும்.

Saturday, November 15, 2003

Kannathaasan QA -2

கண்ணதாசனின் கேள்வி பதில்கள் பகுதியிலிருந்து மேலும் ஒன்று.

[ கே: ஆண்டவன் படைப்பில் உங்களை அதிசயிக்க வைத்தது எது?

பதில்: சிலந்தி கூடு கட்டுவது. எந்த இஞ்சினியரை வேண்டுமானாலும் கூப்பிட்டுக் கேளுங்கள். அவ்வளவு முறையாக எவனுக்கும் கட்டத் தெரியாது. ]

இப்போது கண்ணதாசன் உயிரோடு இருந்திருந்தால் இணையத்தின் வழி நடந்து கொண்டிருக்கும் வலைப்பின்னலைப் பார்த்து தான் அதிசப்பட்டுப் போயிருப்பார் என்று நினைக்கின்றேன்.

அது இருக்கட்டும். இந்த சிலந்தி என்றவுடன் தான் ஒன்று ஞாபகமே வருகிறது. பூச்சிகளைக் கண்டு பலரும் பயப்படுவார்கள் என்பது தெரிந்த செய்திதான். அதிலும் குறிப்பாக என்னை மிக மிக பயமுறுத்திய பூச்சி சிலந்திதான். என்ன காரணம் என்றே தெரியாது. சிலந்திப் பூச்சியைப் பார்த்தாலே எனக்கு உதறல் எடுத்து விடும்; அவ்வளவு பயம். ஆஸ்திரேலியாவில் பல்கலைக்கழகத்தில் மாணவர் விடுதிக்குச் சென்ற முதல் நாள் எங்களுக்குப் பாதுகாப்பு விபரங்களை வழங்குவதற்காக வந்திருந்தவர் எங்களுக்கு இந்தச் சிலந்திப் பூச்சிகளைப் பற்றியும் கொஞ்சம் அதிகமாகவே எச்சரிக்கைக் கொடுத்திருந்தார். ஆஸ்திரேலியாவில் இருக்கும் சிலந்திப் பூச்சிகள் கொடிய விஷம் கொண்டவை. அதனால் அறையில் எப்போதும் ஒரு விதமான மருந்தை தெளிக்க வேண்டும் என்று எச்சரித்திருந்தார்கள். எனது படுக்கையைச் சோதித்த எனக்கும் முதல் நாளே ஒரு சிலந்திப் பூச்சியின் பூத உடல் கிடைக்கத்தான் செய்தது.

Thursday, November 13, 2003

Kannathaasan - QA

புதிதாக நான் இணையம் வழி வாங்கியிருந்த புத்தகங்கள் நேற்று வந்து சேர்ந்திருந்தன. (இணைய புத்தகக் கடைகளை அறிமுகப்படுத்திய நண்பர்கள் ராஜு, ரமணி மற்றும் ராஜரத்தினம் ஆகியோருக்கு மிக்க நன்றி) அதில் ஒன்று மிகச் சிறிய நூலான "கண்ணதாசனின் கேள்விகளும் பதிலும்" என்ற நூல். மிகச் சிறிய கையடக்கமான ஒரு நூலாக இருந்ததால் உடனே திறந்து வாசிக்க ஆரம்பித்தேன். பத்திரிக்கைகள் வழியாக கண்ணதாசனிடம் கேட்கப்பட்ட கேள்விகளும் அதற்கான பதிலுமாக அமைந்த தொகுப்பு தான் இந்த சிறிய நூல். அதில் ஒரு கேள்விக்கு கண்ணதாசனின் வில்லங்கமான பதில்.

கே: பெண்களையே கவிதை வடிக்கிறீர்களே? எங்கே ஆண்களைப் பற்றி சிறு கவிதை பாடுங்கள்....

பதில்: என்னுடைய மூதாதையரைவிட நான் கெட்டிக்காரன் அல்ல. ஆண் என்பவனே அபத்தம். அவனைப்பற்றிப்
பாடுவதற்கு என்ன இருக்கின்றது?

எப்படி இருக்கின்றது பதில்..??..:-) கண்ணதாசன் நகைச்சுவை உணர்வும் நிறம்பியவராகத் தான் இருந்திருக்க வேண்டும் இல்லையா..?

Tuesday, November 11, 2003

JK's Letters to the Schools - 9

15 November 1982
..... A relationship is a process of learning. A relationship is not a static affair but a living movement and so it is never the same. What it was yesterday it is not today. When yesterday dominates in relationship, then relationship is what it was, not a living thing. ..

உலகம் கணம் கணம் மாறிக் கொண்டேயிருக்கின்றது. உயிருள்ள பொருள்கள் மாறுகின்றன; உயிரற்ற பொருட்களும் மாறுகின்றன. அதோடு மனித மனங்களும் மாறிக் கொண்டேயிருக்கின்றன. ஒவ்வொரு நிமிடமும் வாழ்க்கையில் கற்றுக் கொண்டேயிருப்பது தெரிகின்றது. வாழ்க்கை அனுபவம் புகட்டும் பாடத்தில் மனித மனங்களில் மாற்றங்கள் தென்படுவது மிக மிக சகஜம்.

ஒரு உறவு என்பது எப்படி அமைகின்றது என்பது மிகவும் சூட்சமமான விஷயமாகப் படுகின்றது. உலகில் பிறக்கும் போதே உறவுகலுடனேயே பிறக்கின்றோம். உலகுக்கு வந்த காரணத்தைப் புரிந்து கொண்டு கடமையைச் செய்கின்றோமோ இல்லையோ ஆனால் உறவுகளின் வட்டத்தை பெறுக்கி அதில் இன்பம் காண்பதை வளர்த்துக் கொள்கின்றோம். இயற்கை அதில் இன்பத்தை வைத்திருக்கின்றது.

உறவுகளைச் சட்டங்களைப் போட்டு வைத்து பாதுகாப்பது என்பது முடியாத காரியம். ஒரு குழந்தை தனது பெற்றோரிடம் இப்படித்தான் நடக்க வேண்டும் என்று ஏதாவது சட்டம் இருக்கின்றதா? இளம் வயதில் கஷ்டப்பட்டு வளர்த்த பெற்றோர்களை அவர்கள் வயதான பிறகு பாதுகாப்பது ஒரு மகன் அல்லது மகளின் கடமை என்று சட்டம் இருக்கின்றதா..? அல்லது இப்படிப்பட்ட சட்டங்கள் தான் தேவையா? சட்டங்களைக் கொண்டு மனித உறவுகளை கட்டிக் காக்க முடியுமா..?

உறவுகளின் தன்மை மாறிக் கொண்டே தான் இருக்கும். இது காலத்தின் கட்டாயம். சிந்தனை வளர்ச்சி; உலக அறிவு; வாழ்க்கை தெளிவு; வாழ்க்கைப் பாடம் புகட்டும் ஞானம் இவையெல்லாம் சேர்ந்து மனித மனங்களில் வளர்ந்திருக்கும் உறவுகளின் தன்மைகளை மாற்றிக் கொண்டே தான் இருக்கின்றன. 'அன்பு' என்ற ஒன்று இருந்தாலும் அது வெளிப்படும் தன்மை நாளுக்கு நாள் மாற்றம் கண்டு கொண்டே தான் இருக்கும். உறவுகளில் ஏற்படுகின்ற எல்லா பிரச்சனைகளுக்குமே மூல காரணமாக அமைந்து விடுவது 'நமது எதிர்பார்ப்புக்கள்' தான். எதிர்பார்ப்புக்கள் இல்லாமல் வாழ்வது மனித உடலெடுத்த நமக்கு கஷ்டமான ஒன்று. எதிலும் ஒரு எதிர்பார்ப்பு இருப்பதால் தான் வாழ்க்கையிலும் முன்னேற்றத்தைக் காணமுடியும். ஆனால் அதே சமயத்தில், எதிர்பார்ப்புக்களால் ஏற்படும் மன வேதனைகளையும்
மறுப்பதற்கில்லை.

அவரவர் கடமையை அவரவர் செய்தால் எங்கே பிரச்சனை வரப்போகின்றது? மனதில் தூய்மையும் தெளிவும் இருந்தால் ஏன் பிறரை தனது சுய சந்தோஷத்திற்காக பலியாக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றப்போகின்றது? வாழ்க்கையில் அனுபவிக்கின்ற அனைத்து பிரச்சனைகளுமே மாந்தர்கள் அனைவரும் நீதியுடனும், கடமை உணர்வுடனும் இருந்து விட்டால் தோன்றப் போவதில்லை. உலகம் பிரச்சனைகள் நிரம்பியதே. மனிதர்கள் பல வகை; அவர்களின் பக்குவத்திற்கேற்ற சிந்தனை போக்கு; வாழ்க்கை முறை. பிரச்சனைகள் நிரம்பிய இந்த உலகத்தில் இன்பத்திற்கும் பஞ்சமில்லை. பிரச்சனைகளை மட்டுமே சிந்தித்துக் கொண்டிருக்கும் வரை உலகில் இறைவன் வழங்கியிருக்கும் இன்பங்களை ரசிக்கும் தனமையை இழந்து விடுகின்றோம். பாரதியார் 'எத்தனை கோடி இன்பம் வைத்தாய் எங்கள் இறைவா..? என்று எவ்வளவு அழகாகப் பாடுகின்றார். (பாடல் முழுமையும் Suba's Musings எனும் எனது வலைப்பூவில் Oct 14ம் திகதிக்கான குறிப்பில் இருக்கின்றது)

இசையில் இன்பம்; சிரிப்பில் இன்பம்; அன்பில் இன்பம்; வெற்றியில் இன்பம்; தியாகத்தில் இன்பம்; கடமையைச் செய்வதில் இன்பம்; இறைவனோடு கலப்பதில் இன்பம்; இப்படி எத்தனை எத்தனையோ இன்பங்கள் இருக்கின்றன. ஆனால் அதனை அனுபவிக்கும் எளிமையான மனம் நமக்கு இருக்கின்றதா என்பதே கேள்விக் குறி!

Monday, November 10, 2003

Back to weblog ...

கடந்த நான்கு நாட்களாக அலுவல வேலையில் மாட்டிக் கொண்டதால் தகவல் பறிமாறிக் கொள்ள முடியவில்லை. நான்கு நாட்கள் அமைந்த எனது Basel அலுவலக பயணத்தைப் பற்றிய சிறிய பயணத் தொடரை Germany in Focus வலைப்பூவில்[ http://subaonline.log.ag ] எழுத ஆரம்பித்திருக்கிறேன். அலுவலக வேலைகளில் மாட்டிக் கொள்ளும் போது வலை சஞ்சாரம் செய்ய முடிவதில்லை. வெளி உலகத்திலிருந்து தனித்துப் போய்விட்ட உணர்வுதான் தோன்றுகின்றது. என்ன செய்வது. இது தவிர்க்க முடியாத ஒன்று தானே!

Thursday, November 6, 2003

Jaws



கடலில் விளையாடுவது என்பது சந்தோஷமான ஒரு விஷயம்தான். பல மணி நேரங்கள் நண்பர்களோடு கடற்கரையில் மணல் வீடு கட்டி விளையாடுவது என்றால் எனக்கும் என் நண்பர்களுக்கும் மிகவும் பிடிக்கும். பினாங்குத் தீவில் இருந்ததால் சிறிய வயதிலிருந்தே கடற்கறைக்கு ஏறக்குறைய ஒவ்வொரு வார இறுதியிலும் விளையாடுவதற்காகச் சென்று விடுவோம்.

அப்போது தான் ஸ்பீல்பெர்க்கின் Jaws ஆங்கிலப்படம் திரையரங்குகளில் வந்திருந்தது. இம்மாதிரியான படங்களைப் பார்ப்பதென்றால் எனக்கு ஏகப்பட்ட சந்தோஷம். வீட்டில் அனைவரையும் வற்புறுத்திக் கேட்டு அந்தப்படம் பார்க்கச் சொன்றிருந்தோம். படம் பார்க்கும் போது அவ்வளவு திகிலாகவும், குஷியாகவும் இருந்தது. ஆனால் அதற்கு பிறகு நடந்தது தான் பிரச்சனையே.

Jaws படத்தைப் பார்த்ததிலிருந்து எப்போது கடற்கரைக்குச் சென்றாலும் கடலில் சுராமீன் வாயைத் திறந்து கொண்டு என்னை கடிக்க வருவதாக ஒரு அனாவசியக் கற்பனை. கடலில் கொஞ்ச தூரம் சென்று விளையாடுவேன். பிறகு மீன் வந்து கடித்து விடும் என பயந்து ஓடி வந்து விடுவேன். கடற்கரையில் மீன் பிடிக்கும் சிறிய படகுகளில் கயிறு கட்டி வைத்திருப்பார்கள். தண்ணீரில் நிற்கும் போது அந்த கயிறு காலில் பட்டு விட்டாலும் மீன் கடிக்க வந்து விட்டது என்று கத்திக் கொண்டு ஓடி வருவேன். அப்படி ஒரு பயம். பல ஆண்டுகள் ஆனது எனக்கு இந்த பயம் தொலைவதற்கு.

சினிமா படங்களினால் பல பாதிப்புக்கள்; அதிலும் குழந்தைகளுக்கு எம்மாதிரியான உளவியல் பாதிப்புக்கள் ஏற்படக்கூடும் என்பதை இந்த மாதிரியான சுய அனுபவத்திலேயே தெரிந்து கொள்ள முடிகின்றது.

Monday, November 3, 2003

மெயிலில் எச்சரிக்கை - கவிதை

ஜெர்மனியில் முனைவர் பட்ட ஆராய்ச்சிக்காக வந்திருக்கும் இனிய நண்பர் அமிர்தராஜ் ஒரு நல்ல கவிஞர். தேவாலயத்தில் பாதிரியாராக பொறுப்பேற்றுக் கொண்டே தமிழ் இலக்கியத்தில், குறிப்பாக கவிதைகள் எழுதுவதில் ஈடுபட்டு வருகின்றார். இவரது கவிதகளில் சிலவற்றை எனது தமிழ்வலைப்பக்கத்தில் சேர்த்திருக்கின்றேன்.

http://www.subaonline.de/tamil/kavikaru.html
இங்குள்ள இலங்கைத் தமிழ் மக்களின் வாழ்க்கையை அடிப்படியாக வைத்து ஒரு கவிதைத் தொகுப்பாக 20 கவிதைகளை எழுதியிருந்தார். வெளிவராத அந்தத் தொகுப்பில் இருந்து ஒரு கவிதை.

மெயிலில் எச்சரிக்கை
ஆ.அமிர்தராஜ்
Wuerzburg, Germany

தயாராக உள்ள உன்
தங்கச் செயின்
தேவையில்லை
(சே! அடுத்தென்ன
கர்மம்? மேளமா? தாலியா?
தங்கத் தாலியும் வேலியே!)

தலைபோகும்
இக்காதலிட்டும்
என்
நீண்ட கழுத்தின்
அழகை
நகை மாட்டி அலட்டிக்
கெடுக்க மட்டேன்
தங்க இருநாள் கொடு.

வெறும் பூ நகைப்பால் வாட்டி
மயக்கிக்
கெடுப்பேன் உன்னை
(இன்னும் கைப்படாத
ராஜாவா நீ)
சிறு பிராய சிநேகிதியின்
சின்ன சமரசமாய்
காதில் இரு பவளங்கள்
போட்டிருப்பேன். போதுமா?

வந்ததும்
கும்பலில் உன்னை
தேடி நானேப் பிடிப்பேன்.
வெந்து தாமதியாமல்
கண்டதும் கெடுப்பேன்
சூடாய் கடித்து!
முள்ளில்லா ரோஜா வருகிறேன்.
தயாரா?

Sunday, November 2, 2003

JK's Letters to the Schools - 8



1 Oct 1982
Mind is infinite, is the nature of the universe which has its own order, has its own immense energy. It is everlastingly free. The brain, as it is now, is the slave of knowledge and so is limited, finite, fragmentary. When the brain frees itself from its conditioning, then the brain is infinite.... - J.K.

மேல் உள்ள வாசகத்தை வாசித்த போது என்னுள்ளே எழுந்த எனது சிந்தனை....கீழே தொடர்கின்றது.

சுதந்திரக் காற்றை சுவாசிப்பதற்காகவே என் மனம் யாசிக்கின்றது. என் எண்ணங்கள் சுதந்திரமாக வெளிப்படும் போது என் மனதிற்கு அமைதியும் அலாதியான சந்தோஷமும் கிடைக்கின்றன.

ஒரு நண்பர்  ஒருவர் ஒரு முறை சொன்ன வாசகங்கள். "இப்போதெல்லாம் நமக்கு எங்கே சுதந்திரம் இருக்கின்றது. வெளி உலகத்தில் மட்டும் தான் நமது சுதந்திரம் பறிக்கப்படுகின்றது என்று நம்பிக் கொண்டிருக்கின்றோம். ஆனால் உள்ளே, நமது மனதிற்குள்ளேயே சுதந்திரம் பறிபோய்விட்ட நிலையில் நாம் இருக்கின்றோம். சமுதாயத்தின் அழுத்தம், அந்த அழுத்தம் நமது மனதிற்குள்ளே உருவாக்கும் கட்டளைகள் நம்மை நாமாக இருக்க விடுவதில்லை. பிறரது கருத்துக்கள் வலிய நமது மனதிற்குள் திணிக்கப்படுகின்றன. ஆக சுதந்திரம் அற்றவர்களாகத்தான் நாம் இருக்கின்றோம்."

இன்னொரு நண்பரிடம் பேசிக் கொண்டிருந்தேன்; தமிழர்தான். பேச்சு ஒரு விஷயத்தைப் பற்றியது. பேசும் போது தனது கருத்தைத் தெரிவித்த நண்பர், எனது கருத்தை நான் சொல்ல எத்தனிக்கும் போது உரையாடலை மாற்றி அவர் சொல்வதுதான் சரி என்று அந்த உரையாடலுக்கு முற்றுப் புள்ளி வைத்து விட்டார். நான் சொல்ல வந்த கருத்தைக் கேட்க அவருக்கு விருப்பமில்லை; ஏனென்றால் எற்கனவே அவரது மனதிற்குள் தனது கருத்துக்கள் எல்லாமே சரியானவை; முழுதும் சரியானவை என்ற அசைக்க முடியாத நம்பிக்கை. என்னுடைய கருத்தைத் தெரிவிக்க அங்கு சுதந்திரம் இல்லை. இதேபோல பல வேளைகளில், பலரோடு பேசும் போது இந்த வகை அனுபவம் எனக்கு ஏற்பட்டிருக்கின்றது. கலந்துரையாடல் என்ற பெயரில் ஆரம்பிக்கப்படும் ஒரு விஷயம் ego என்ற ஒன்று வந்து மோதும் போது உடனேயே அங்கு முற்றுப்புள்ளியை வைத்துக் கொள்கின்றது.

நமது மனதிற்குள் எண்ணற்ற கருத்துக்கள் முளைக்கின்றன. அந்தக் கருத்துக்கள் எல்லாம் சரியானவைதானா என்பதை யோசிக்க வேண்டியது அவசியமாகின்றது. அப்போதுதான் "சிந்தனை வளர்ச்சி" என்ற ஒன்று தோன்றும். ஒரு உரையாடலின் போது "இந்த மேதாவி சொல்லி விட்டார்; அந்த ஞானி சொல்லிவிட்டார்; அவரது கருத்துக்கள் தான் எவ்வளவு சரியானவை; ஆக மற்றவையெல்லாம் பொய்யானவை; உனது கருத்துக்கள் முட்டாள்தனமானவை, ஏற்றுக் கொள்ளப்படமுடியாதவை" என்று ஒருவர் நினைப்பாரேயானால் அவர் சிந்தனை என்ற ஒன்றையே மறுப்பவர் என்று தான் கொள்ள முடியும்.

எதற்கெல்லாமோ சுதந்திரத்தைத் தேடிக் கொண்டிருக்கும் நாம் நமது மனதிற்குள்ளேயே பற்பல வகைகள ல் அடிமைகளாகிப் போயிருக்கின்றோம் என்பதை ஏன் சிந்திக்க மறந்து விடுகின்றோம்? ஒருவர் கூறிய விஷயத்தைக் கேட்டவுடனேயே அதை அப்படியே எந்த சிந்தனையுமின்றி எனது கருத்தாக நான் எடுத்துக் கொண்டேன் என்றால் எனக்கு உண்மையான ஆன்ம வளர்ச்சி இருக்குமா..? ஆனால், நான் கேட்ட விஷயத்தை கொஞ்சம் யோசித்து, அந்த விஷயம் எந்த வகையில் எனது சிந்தனை, அனுபவம், உலக நியதி, போன்றவற்றோடு ஒட்டியோ அல்லது மாறுபட்டோ செல்கின்றது என்று யோசித்து அதில் தேவையானதை எடுத்துக் கொண்டு தேவையற்றதை ஒதுக்கும் போதுதானே சிந்தனை வளர்ச்சி என்ற ஒன்றே தோன்றும்!

பற்பல விலங்குகளை நாமே போட்டுக் கொள்கின்றோம். அதற்கு பண்பாடு, கலாச்சாரம், சமயம் என்று அழகிய பெயர்களை அரணாகப் பயண்படுத்திக் கொள்கின்றோம். ஏன் சிந்தனையில் நமக்கு நாமே விலங்கை மேலும் மேலும் போட்டுக் கொண்டிருக்கின்றோம்?

எனக்கு நானே சிந்தனைச் சுதந்திரத்தை ஏற்படுத்திக் கொள்ளப் பழகிக் கொள்ள முடியாத போது பிறரது சுதந்திரத்தைப் பறிப்பதற்கு எந்த வகையில் எனக்கு நியாயம் இருக்கின்றது..?

Saturday, November 1, 2003

Quick Recipe - வென்பொங்கல்

நேற்று அலுவலகம் முடிந்து வீட்டுக்கு வருவதற்கு நேரமாகிவிட்டது. பசி வேறு. நம்ம ஊறு மாதிரி உடனே வெளியே போய் சாப்பிடலாம் என்றால் 9 மணிக்குத் திறந்திருக்கும் கடையைத் தேடுவதற்குள் போதும் போதும் என்றாகி விடும். என்ன சமையல் செய்வதென்று வீட்டிற்கு வந்து கொண்டிருக்கும் வழியிலேயே யோசிக்க ஆரம்பித்து விட்டேன். சாத வகையறாக்களில் ஏதாவது செய்யலாம் என்று தோன்றியது. வீட்டிற்கு வந்ததும் முதல் வேலையாக எனது சமையலறையில் இருக்கும் புத்தகங்களில் 'மணக்க மணக்க சமையல்' என்ற புத்தகத்தை எடுத்து சாத வகையாறாக்களில் தேட ஆரம்பித்தேன். 2 வகை வெண்பொங்கலைப் பார்த்ததும் அதில் ஒன்றையே செய்யலாம் என முடிவெடுத்து 20 நிமிடத்திற்குள் அருமையான இரவு உணவை செய்து முடித்தேன். சுவைத்தும் சாப்பிட்டேன். இந்த recipe மிகச் சுலபமாக செய்யக் கூடிய ஒன்றாக இருக்கின்றது. படிக்கின்ற நீங்களும் அவசர வேளைகளில் இதனை செய்து பார்க்கலாமே என்ற எண்ணத்தில் உங்களுக்காகவும் இதனைத் தருகின்றேன்.

தேவையான பொருட்கள்:


1/2 கப் அரிசி 1/2 கப் (கொஞ்சம் குறைச்சலாக) பாசிப் பருப்பு கொஞ்சம் கருப்பு மிளகு (8 போதும்) - தூளாக்கிக் கொள்ளவும் கொஞ்சம் ஜீரகம் (1 தேக்கரண்டி) - பாதிப் பாதியாக தூளாக்கிக் கொள்ளவும் 10 முந்திரிப்பருப்பு - பாதியாக உடைத்துக் கொள்ளவும் கொஞ்சம் இஞ்சி உப்பு 1 1/2 கரண்டி நெய்

செய்யும் முறை


1.அரிசியையும் பாசிப்பருப்பையும் கழுவி பின்னர் எப்போதும் சாதத்திற்கு விடுவதற்கு 2 மடங்கு மேலாக தண்ணீர் விட்டு, உப்பையும் சேர்த்து rice cooker- ரில் வேகவிடுங்கள்.

2.ஒரு சிறிய பாத்திரத்தில் 1 1/2 கரண்டி நெய் விட்டு சூடானதும், மிளகு மற்றும் ஜீரகத்தைப் போட்டு 1 நிமிடம் வதக்கி, அதோடு இஞ்சியைப் போட்டு வதக்கிக் கொள்ளுங்கள். இப்போது முந்திரிப்பருப்பையும் சேர்த்து, கொஞ்சம் நிறம் வரும் வரை வதக்கி அடுப்பை நிறுத்தி விடுங்கள்.

3. சாதம் வெந்தவுடன் இந்தக் கலவையை cooker- ரில் போட்டு நன்றாக கிளருங்கள்.அவ்வளவுதான். வென்பொங்கல் தயார். கொஞ்சம் ஊருகாய் சேர்த்துச் சாப்பிட்டுப் பாருங்கள். இதன் ருசியே தனிதான்.!

கண்ணனின் வலைப்பூவில் சில சமையல் குறிப்புக்கள் இருக்கின்றன. பார்த்திருக்கின்றீர்களா? உருளைக் கிழங்கைச் சிக்கிரமாக வேக வைப்பதற்கான டிப்ஸை அங்கே இருந்து தான் கற்றுக் கொண்டேன்!

Friday, October 31, 2003

Dr.Robot



Dr.Robot பற்றி கேள்விப் பட்டிருக்கின்றீர்களா? கனடாவின் Ontario வைச் சார்ந்த மார்க்ஹாம் நிறுவனத்தாரின் உருவாக்கம் இந்த இயந்திர மனிதன். ஜப்பானியர்கள் மிக அதிகமாக மனிதர்களுக்குத் துணையாக இருக்கும் ரோபோட்களை உருவாக்கிக் கொண்டிருக்கின்றனர். வியக்கத்தக்க வகையில் மனிதர்கள் செய்யக்கூடிய சில காரியங்களைச் செய்கின்ற பல இயந்திர மனிதர்கள் உருவாகி விட்டன. [எனது Robotics in Tamil பகுதியில் மேலும் இதனைப் பற்றிய விபரங்களைக் காணலாம்.] அந்த வகையில் Dr.Robot இன்னொரு வரவு.

Dr.Robot என்னவெல்லாம் செய்ய முடியும் தெரியுமா? மனிதர்களைப் போலவே நடக்க முடியும், பேசும், நாட்டியம் ஆடும், நமது நடவடிக்கைகளைக் குறித்துக் கொள்ளும், நமக்கு பொருளாதார ஆலோசனைகள் வழங்கும். அதற்கும் மேலாக நாம் வீட்டில் இல்லாத போது வீட்டின் பாதுக்காப்பிற்காகவும் இதனைப் பயன்படுத்திக் கொள்ளமுடியும். எவ்வளவு வசதியாக போய்விட்டது பார்த்தீர்களா! இந்த இயந்திர மனிதனின் விலை இன்னமும் நிர்ணயிக்கப்படவில்லை. ஆனாலும் $1500 லிருந்து $3,000 வரை இருக்கலாம் எனத் தெரிகின்றது. wireless தொடர்பைப் பயன்படுத்தி இணையத் தொடர்பையும் உருவாக்கிக் கொள்ளும், Dr.Robot.

இயந்திரத்தனம் தெரியும் வகையில் உருவாக்கப்படும் ரோபோட்களைப் போலில்லாமல் பொம்மையைப் பார்ப்பது போன்ற எண்ணத்தை உருவாக்கும் வகையில் இதன் உருவம் வடிவமைக்கப்பட்டிருக்கின்றது. Dr.Robot 60 cm உயரம் இருக்குமாம்.

Wednesday, October 29, 2003

Online Book Shop's for Tamil books

நமது சொந்த நாட்டை விட்டு வெளியே வந்த பிறகு பற்பல சௌகரியங்களை இழந்து விட்டது போன்ற பிரம்மை சில வேளைகளில் தோன்றுகின்றது. சமயலுக்குக் கரிவேப்பிலை வேண்டுமென்றாலும் கூட இலங்கையிலிருந்து வருகின்ற விமானத்திற்காகக் காத்திருக்க வேண்டிய சூழ் நிலை. கரிவேப்பிலை மாத்திரம் இங்கு பிரச்சனை இல்லை. ஒரு புதிய தமிழ் புத்தகம் படிக்க வேண்டும் என நினைத்தால் என்ன செய்ய முடியும்? ஜெர்மனியில் இருக்கின்ற தமிழ் கடைகளிலெல்லாம் சஞ்சிககள் தான் கிடைக்கின்றன. அதிலும், India Today, விகடன், ராணி, துக்ளக் போன்றவை தான் கிடைக்கின்றன. இலக்கிய சஞ்சிகைகளைப் பற்றி கேட்டால் கடை வைத்திருக்கும் தமிழர்கள் நம்மைப் பார்த்துய் பயந்தே ஓட்டி விடுவார்களோ என அச்சப்படும் வகையில் நம்மிடமே சில நேரத்தில் சண்டைக்கு வந்து விடுகின்றனர்.

புதிய வரவுகள், சிந்தனைகளைப் பற்றிய பிரக்ஞயே இல்லாதவர்களாக ஆகிவிடுவோமோ என சில நேரங்களில் எண்ணத்தோன்றுகின்றது. இணையத்தில் வணிகத்திற்கு மிகச் சிறந்த வாய்ப்புக்கள் இருக்கின்ற இக்காலத்தில் தமிழ் புத்தக விற்பனை ஏன் அவ்வளவாக இல்லை என்பது கேள்விக்குறியாகவே தோன்றுகின்றது. வலைப்பக்கங்களைத் தேடும் போது, Amazon.com போல தமிழ் நூல்களுக்கும் இணையத் தளங்கள் இருக்கக்கூடாதா என மனம் ஏங்குகின்றது.
சுலேகா வலைத்தளத்தில் சுஜாத்தாவின் நாவல்களை வாங்க முடிகின்றது. இதேபோல சில நாட்களுக்கு முன்னர் நா.கண்ணனின் புத்தகத்தைக் கூட மானசராவ் வலைத் தளத்தில் பார்க்க நேர்ந்தது. ஆனால் இப்போது அந்த URL -ஐ கண்டுபிடிப்பது கஷ்டமாக இருக்கின்றது.

நண்பர்களே, உங்களுக்குத் தெரிந்த ஏதாவது Online Tamil Bookshop இருந்தால் எனக்கு அதன் URL -ஐ தெரியப்படுத்துங்கள்.

Tuesday, October 28, 2003

JK's Letters to the Schools - 7

[1 october 1982]
"We all want security physically as well as emotionally and this is becoming more and more difficult and painful." - J.K.

எனது சிந்தனை....

எதிரிகளிடமிருந்து நம்மை எப்படி பாதுகாத்துக் கொள்வது என்பதுதான் இன்றைய பல அரசாங்கங்களின் முக்கியப் பிரச்சனை. புறத்திலே மட்டும் இந்தக் கவலையில்லை. மனத்திலே நாம் ஒவ்வொருவருக்கும் இந்த கவலை இருந்து கொண்டுதான் இருக்கின்றது.

நமக்கு ஏற்படுகின்ற அத்தனை பிரச்சனைகளுக்கும் மூல காரணமாக இருப்பது அச்ச உணர்வே. பாதுகாப்பு இல்லாத பட்சத்தில் மனதில் பயம் தோன்றுகின்றது. பய உணர்வு ஏன் தோன்றுகின்றது என்பதற்கு எத்தனையோ காரணங்களைச் சொல்லலாம். ஆனால் மிக முக்கியக் காரணமாக அமைவது பாதுகாப்பு இல்லாமை தான். பாதுகாப்பு இல்லாமல் நாம் தனிமைப் படுத்தப்பட்டு விடுகின்ற சமயத்தில் மனத்திலே பயம் பூதாகாரமாக வியாபித்து விடுகின்றது.


மனம் பல வகையில் கற்பனை செய்யும் திறமையை பெற்றிருக்கின்றது. உண்மையில் நடக்காத பல விஷயங்களை மனத்தால் கற்பனை செய்து பார்க்க முடியும். அந்த கற்பனையை மீண்டும் மீண்டும் செய்து மனதிலே பதிய வைக்கும் போது அந்த கற்பனை மனதிலே நிஜமாகிப் போய் விடக்கூடிய சந்தர்ப்பங்களும் ஏற்படுகின்றன. மனத்திலே காண்கின்ற விஷயங்களை மீண்டும் மீண்டும் நினத்துப் பார்த்து அந்த நினைவுகளையே நிஜம் என நினைக்கும் ஒரு நிலையை அடைந்தவர்களால் நிஜமாக புற உலகில் நடப்பதைக் காணமுடியாது. மனம் அடிப்படையில் அமைதியாகவும் இன்பமாகவும் இருப்பதையே விரும்புகின்றது. அளவுக்கு மீறிய பிரச்சனைகள், கவலைகள் தோன்றும் போது அந்தப் பிரச்சனைகளை எதிர்கொள்ளும் திறன் இல்லாதவர்கள், கற்பனை செய்து, அந்தக் கற்பனை உலகில் வாழ்வதையே பாதுகாப்பாக நினைக்கும் நிலைக்கு வந்து விடுகின்றனர். சில வேளைகளில் தங்களையே வருத்திக் கொள்ளும் வகையில் கூட கற்பனைகள் அமைந்து விடுவதுண்டு. இது ஒரு வகையான திரிபு நிலை. உண்மையை உண்மையாகக் காணமுடியாத நிலை.

உறவுகள், சுற்றத்தார், குடும்பத்தினர் என சொந்தங்களை விரும்பி அமைத்துக் கொள்வதும் இந்தப் பாதுகாப்பை எண்ணித்தான். பொதுவாக திருமணப் பேச்சை எடுப்பவர்கள் கூட, பிற்காலத்தில் பாதுகாப்பிற்காக ஒரு துணை தேவை என வலியுறுத்தியே திருமண பந்தத்தையே ஆரம்பித்து வைக்கின்றனர். குழந்தைகள் பெற்றுக் கொள்வதற்கும் கூட, பிற்காலத்தில் வயதான காலத்தில் பிள்ளகள் உதவுவார்களே என நினைப்பவர்களும் உண்டு. சுற்றத்தாரின் அரவணைப்பில் இருக்கும் போதும் நமக்கு பாதுகாப்புக் கிடைப்பதாக நினைத்துக் கொள்கின்றோம்.

ஆனால் உண்மையில் அப்படி இருப்பதில்லை. எனது வாழ்க்கையில் நடக்கின்ற அனைத்து விஷயங்களுக்குமே நானே மூல காரணமாக அமைகின்றேன். எனது துன்பங்களை என் உறவினர்களால் ஓரளவு தீர்த்து வைக்க முடியுமே தவிர முற்றாக ஒழித்து விட முடியாது. அவர்களால் ஆறுதல் சொல்ல முடியுமே தவிர வேதனையிலிருந்து என்னை வெளியேற்றி உடனே ஒரு தீர்வினை எனக்குத் தந்து விட முடியாது. இதுதான் உண்மை. அவரவர் வாழ்க்கைக்கும் அவரவரே பொறுப்பு. ஆக மனதில் உறுதியையும், தெளிவையும், தன்னம்பிக்கையையும் சேர்த்துக் கொள்ளும் போதுதான் படிப்படியாக பய உணர்வை போக்கிக் கொள்ள முடிகின்றது.

Sunday, October 26, 2003

Jensy

இளையராஜாவின் இசையில் இனிய பாடல்களைப் பாடியவர் ஜென்ஸி. இவரது பாடல்கள் அனைத்துமே பிரசித்தி பெற்றவை. ஆனால் இந்தப் பாடகியை இன்றுதான் ஜெயா தொலைகாட்சியின் ராகமாலிகா நிகழ்ச்சியின் வழி பார்க்க முடிந்தது. மிகவும் குறைச்சலாகவும் மலையாளம் கலந்த தமிழிலும் பேசுகின்றார்.

என் வானிலே ஒரே வென்னிலா
மீன் கொடி தேரில் மன்மதராஜன் ஊர்வலம் போகின்றான்
ஆயிரம் மலர்களே மலருங்கள்
மயிலே மயிலே உன் தோகை எங்கே.

போன்றவை என்னால் மறக்கமுடியாதவை!

இவரது பாடல்களின் சிறு பட்டியல் ஒன்று இந்த வலைப்பகுதியில் இருக்கின்றது. ஆனால் பாடலைக் கேட்கமுடியவில்லை. http://www.raajangahm.com/ric/song/VoiceOfJNC.html
[ யாருக்காவது இவரது பாடல்களின் Link இருந்தால் எனக்கு எழுதுங்கள். ]

Friday, October 24, 2003

Happy Diwali




இருளை விலக்கும் நல்லொளி உள்ளம் முழுதும் நிறைந்திட
இனிய தீபாவளியைக் கொண்டாடுவோம்.

Sunday, October 19, 2003

Azhagi Tamil Software

இன்று தொலைக்காட்சியில் பார்த்த ஒரு விஷயத்தைப் பற்றி பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கின்றேன். விசுவின் அரட்டை அரங்கத்தில் இந்திய தேசிய தினத்தன்று நெய்வேலியில் ஒலிப்பதிவு செய்யப்பட்ட ஒரு நிகழ்ச்சியின் வழி ரு அருமையான விஷயத்தை அவர் நம் எல்லோரிடமும் பகிர்ந்து கொண்டார். தமிழகத்தைச் சார்ந்த திரு விஷ்வநாதன் உருவாக்கியிருக்கும் அழகி என்ற தமிழ் மென்பொருளைப் பற்றிய ஒரு அறிமுக நிகழ்ச்சியைத் தனது நிகழ்ச்சியிலேயே ஒரு அங்கமாக வைத்து, வந்திருந்த பார்வையாளர் அனைவரும் அந்த மென்பொருளை அறிந்து கொள்ளும் படி செய்து விட்டார் விசு. "தமிழில் கணினிகளில் பயன்படுத்த எத்தனையோ மென்பொருட்கள் வந்து விட்டன. ஆக இதில் என்ன விஷேஷம் இருக்கின்றது" என்று கேட்கத் தோன்றுகின்றது இல்லையா?

இந்த மென்பொருளை உருவாக்கியிருக்கும் இளைஞரான திரு. விஷ்வநாதான் உடல் நோயினால் வாடுபவர். தனது மனைவி மற்றும் குடும்பத்தாரின் அரவனைப்பின் வழி, வெளி உலக தொடர்புகளைப் பெற்று தனது கணினில் மென்பொருளை உருவாக்கி வெற்றி கண்டிருக்கின்றார். விசுவின் இந்த அரட்டை அரங்கம் நிகழ்ச்சிக்கு வருவதற்குள் உடல் உபாதையின் கரணமாக பல முறை வாந்தியெடுத்து சிரமப்பட்டிருக்கின்றார். 7 km தூரம் வெளியே செல்வதே இவருக்கு நினைத்துப் பார்க்க முடியாத சிரமமான ஒரு காரியம். எப்போழுதும் தனது நோயின் காரணத்தால் அறையிலேயே அடைந்து கிடக்கும் திரு. விஷ்வநாதானுக்குக் கணினியில் அதுவும் தமிழில் எதாவது செய்தே தீரவேண்டும் என்ற தனியாத ஆர்வத்தினால் தமிழில் எழுத வழிவகுக்கும் இந்த 'அழகி' மென்பொருளை உருவாக்கியிருக்கின்றார்.

இந்த மென்பொருளைப் பற்றி தெரிந்து கொள்ள http://www.azhagi.com/ என்ற வலைப்பக்கத்துக்குச் சென்று பாருங்கள். இந்த மென்பொருளின் விலை மிகவும் மலிவாகவே இருக்கின்றது. சோதனை செய்து பார்க்க ஏதுவாக free download பகுதி ஒன்றும் வழங்கியிருக்கின்றார். இந்த மென்பொருளைப் பயன்படுத்தி Microsoft Office மென்பொருட்களிலும் மேலும் Yahoo, MSN chat போன்றவற்றையும் தமிழிலேயே செய்ய முடியும். இது ஒரு பாராட்டப்படக் கூடிய ஒரு சாதனை என்பதை மறுக்கவே முடியாது.

எத்தனையோ திறமைகள் வெளி உலகத்துக்குத் தெரியாமலேயே முடங்கி விடுகின்றன. இம்மாதிரியான திறமைகளை வெளி உலகத்துக்குக் கொண்டுவந்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் தொலைக்காட்சிகள் அதிகமாகவே பங்கு வகிக்க முடியும். அந்த வகையில் சன் தொலைக்காட்சியில் விசுவின் சேவை ஒரு நல்ல உதாரணம். அவரது சேவைத் தொடர வேண்டும்.

Tuesday, October 14, 2003

JK's Letters to the Schools - 6



15 February 1982 அன்று எழுதப்பட்ட ஒரு கடிதத்திலிருந்து சில வரிகள்....

"What are you going to become as a human being? ..... Are you going to become a mediocre human being without any passion, in conflict with yourself and with the world? This is really a serious question you have to ask yourself."
- by J.K



நான் பல முக மூடிகளை வைத்திருக்கின்றேன். மற்றவரின் தேவைகேற்ப முக மூடிகளை மாற்றிக் கொண்டு நான் என்னை அவர்களுக்கு வெளிக்காட்டிக் கொள்கின்றேன். பிறர் விரும்பும் வகையில் என்னைக் காட்டிக் கொள்வதுதான் சரி என்று நினைக்கின்றேன். அதனால் எனக்கு இந்த முகமூடிகள் தேவைப்படுகின்றன. இந்த முகமூடிகள் இல்லாமல் இருந்தால் எங்கே, நான் என்னோடு பழகும் பிறரை திருப்தி படுத்தமுடியாமல் போய்விடுமோ என்று அஞ்சுகின்றேன். ஆனால் என்னோடு நான் சம்பாஷித்துக் கொள்ள எனக்கு முகமூடி தேவையா என்ற கேள்வியை எனக்குள்ளே கேட்க மறந்து விடுகின்றேன். சில வேளைகளில் நான் அணிந்திருந்த முகமூடிதான் உண்மையில் நான் என்று என்னையே நான் பொய்யாக நினைத்துக் கொள்கின்றேன். முக மூடிகள் இல்லாமல் நான் என்னைக் காண எனக்கு தைரியம் இருக்கின்றதா? முகமூடிகள் இல்லாமல் நான் என்னை மற்றவர்களுக்கு வெளிப்படுத்திக் கொள்ள எனக்கு தைரியம் இருக்கின்றதா?

என்னை யாரும் குறை சொல்லி விடக்கூடாது என்று நான் அஞ்சுகிறேன். உலகமே என்னைத்தான் பாரட்ட வேண்டும் என்று விரும்புகின்றேன். என்னை நான் மிகவும் தூய்மையானவராக, உயர்ந்த சிந்தனை உடையவராக, அன்புள்ளம் படைத்தவராக, அதோடு 'எல்லாம்' தெரிந்தவராக காட்டிக் கொள்ள விரும்புகின்றேன். இந்த மாயத்திரையை பிறர் கிழித்தெரியும் போது திகைத்து நிற்கிறேன்.

என்னுடைய எல்லா முகமூடிகளும் கிழிந்து விட்ட நிலையை அந்த கணத்தில் தான் நான் உணர்கின்றேன். இதுவரை நான் போட்டிருந்த அனைத்து முகமூடிகளும் நிறந்தரமற்றவை என்பதை உணரும் போது ஆள்மனத்தில் மாபெரும் சலனம் தோன்றுகின்றது. அப்படியென்றால் எதுதான் நிரந்தரம்?முகமூடிகளைத் தூக்கி எறிந்து விட்டு என்னை, எனது சிந்தனைகளை, எனது முகமூடியற்ற முகத்தை நானே எந்த விதமான மாயாஜாலங்களும் இன்றி பார்க்கின்றேன். நான் என் இப்படி இருக்கின்றேன்?

நான் ஏன் இப்படி சிந்திக்கின்றேன் என்று என்னையே நான் கேள்விகள் கேட்கின்றேன். என்னை இப்போது என்னால் சரியாகப் பார்க்க முடிகின்றது. ஒரு தந்தைக்கும் தாய்க்கும் மகளாக அல்ல; ஒரு தோழனுக்கும் தோழிக்கும் தோழியாக அல்ல; ஒரு சகோதரனுக்கும் சகோதரிக்கும் ஒரு சகோதரியாக அல்ல; ஒரு அலுவலகத்தில் பணிபுரியும் ஒரு பொறியியலாளராக அல்ல; ஒரு மனிதராக என்னை நான் காண்கின்றேன். இந்த முகமூடிகளையெல்லால் தூக்கி வீசிவிட்டு, நான், எனது ஆன்மாவின் சிந்தனை, எனது அபிலாஷைகள் யாவை என்பதை சிந்திக்கின்றேன். இப்போது எனக்கு எந்த வித மாயையும் அற்ற நிலையிலேயே என்னை பிடிக்கின்றது. இதில் சலனம் இல்லை. என் முகமூடி கிழிந்துவிடுமோ என்ற அச்சம் இல்லை!

Immense Beauty!




பார்க்கும் இடமெல்லாம் அழகு நிறைந்திருக்கின்றது, இந்த உலகில். இயற்கையின் எழில் வார்த்தைகளினால் விளக்கமுடியாத ஒன்று. இறைவன் இயற்கையாய் என்னோடு கலந்திருக்கும் போது மனம் ஆனந்ததில் லயிக்கின்றது.

எல்லாம் நல்ல நாளே! அதில் இன்று எனக்கு ஒரு இனிய நாள்!


பாரதி இப்படிப் பாடுகின்றான்.

இறைவா! இறைவா!


பல்லவி

எத்தனை கோடி இன்பம் வைத்தாய் - எங்கள்
இறைவா! இறைவா! இறைவா! (ஓ - எத்தனை)

சரணங்கள்

சித்தினை அசித்துடன் இணைத்தாய் -அங்கு
சேரும்ஐம் பூதத்து வியனுல கமைத்தாய்.
அத்தனை யுலகமும் வர்ணக் களஞ்சிய
மாகப் பலபலநல் லழகுகள் சமைத்தாய். (ஓ- எத்தனை)

முக்தியென் றொருநிலை சமைத்தாய் - அங்கு
முழுதினையு முணரும் உணர் வமைத்தாய்
பக்தியென் றொரு நிலை வகுத்தாய் - எங்கள்
பரமா! பரமா! பரமா! (ஓ - எத்தனை)


குறிப்பு: இந்தப்பாடலை பேகடா ராகத்தில் நித்யஸ்ரீ பாடியிருக்கின்றார். அவரது Divine Melodies கேட்டுப் பாருங்கள்!

Monday, October 13, 2003

Vajrayana

"Tantric Grounds and Path" என்ற தலைப்பிலான ஒரு புத்தகம் ஒன்றினை சென்ற ஆண்டு கலிபோர்னியா சென்றிருந்தபோது வாங்கி வந்திருந்தேன். புத்த தத்துவத்தை விளக்கும் ஒரு வழியான வஜ்ராயனாவை விளக்கும் நூல் இது. "வஜ்ராயனா எனும் இந்த வாழ்க்கைப் பாதையை கடைபிடிப்பது அசாதாரணமான ஒன்று. இதனை கடைபிடிக்க விரும்பினால் மிகவும் உயர்ந்த யோக நிலையை கடைபிடிக்க வேண்டும். அதோடு 'Prayer of the stages of the Path' எனப்படும் இந்த இறைவாழ்த்தையும் மனனம் செய்து உணர்ந்து படித்து கடைபிடிக்க வேண்டும்" என்று இந்த நூல் ஆரம்பிக்கின்றது.

அதில் சில வரிகள்; இவை மனதை கவர்ந்தவை:

When I become a pure container
Through common paths, bless me to enter
The essesnce practice of good fortune,
The supreme vehicle, Vajrayana

வஜ்ரயனா எனும் இவ்வழி, சாத்திரங்களை படிப்பதன் வழியாக ஒருவன் புத்தராக முடியாது; மாறாக தந்திரங்களை முறையாகக் கற்று அதனை அனுஷ்டிக்க வேண்டும் என்று கூறுகின்றது. படிக்கப் படிக்க பல புதிய விஷயங்களை இன்நூல் ஆசிரியர் கையாளும் விதம் சிறப்பாக இருப்பதை அதுவும் சித்தர்களின் சிந்தனைகளோடு மிக மிக ஒத்திருப்பதை உணர முடிகின்றது.

Sunday, October 12, 2003

JK's Letters to the Schools - 5

" ..that very learning is order...... In a school, routine is necessary but this is not order. A machine that is well put together functions effectively. How will an educator, if he has deeply learned all this, convey to the student the nature of order? if his own inward life is in disorder and he talks about order, he will not only be a hypocrite, which in itself is a conflict, but the student will realize this is a double-talk..... When one is very honest, that very hoesty is transmitted to another." - by J.K.

இந்தப் பகுதி ஒழுக்கம் ஒழுங்கு என்பனவற்றைப் பற்றிப் பேசுகின்றது. பொதுவாகவே நல்ல சிந்தனை நல்ல செயல் என்று பேசும் போது நமக்குப் எப்போதும் பிறருக்கு அறிவுறைக் கூறி "இப்படி நடந்து கொள், நீ செய்வது தவறு, இப்படி மாற்றிச் செய், என்னைப் போல இருக்கப்பழகிக் கொள்" என்று பலவாறாக நம்மை சிறந்தவர்களாகக் காட்டிக் கொண்டு மற்றவர்களுக்குப் பாடம் கற்றுக் கொடுக்கவே நமது எண்ணமும் மனமும் செயல்பட்டுக்கொண்டிருக்கின்றது. ஓரிடத்தில் ஒரு தவறு நிகழ்ந்து விட்டால் அந்தத் தவறுக்கு நான் தான் காரணமாக இருக்கின்றேன் என்பதைப் பார்க்க மனது தயங்குகின்றது. பிறரின் மீது அந்த தவற்றுக்கான காரணத்தைச் செலுத்தி மற்றவர்கள் தான் அந்தப் பிரச்சனை உருவாகக் காரணமானவர்கள் என்று கூறி தப்பித்துக் கொள்ளும் ஆசாமிகளாகவே நாம் பெரும்பாலும் இருக்கின்றோம். நமது சுய தவறுகளை மணக்கண்ணைக் கொண்டு நன்றாகப் பார்த்து நானும் தவறு செய்தவர் தான்; நான் தான் அந்தத் தவறு நடப்பதற்குக் காரணமாக இருந்தேன் என்று நமது மனசாட்சியிடம் பேசக்கூடிய தைரியமற்ற கோழைகளாகவே பெறும்பாலும் நாம் இருக்கின்றோம்.



ஒழுங்கு என்பது வெளியில் காட்டிக் கொள்ளக் கூடிய ஒன்று மட்டுமல்ல. அது மனதின் அடித்தளத்திலேயே இருக்க வேண்டும். பிறருக்காக ஒழுங்காக இருப்பதாக என்னை நான் வெளியே காட்டி கொண்டே உள்ளே, மனத்தில் ஒழுங்கீனத்தை வளர்த்துக் கொண்டு வந்தால் அங்கே உண்மையற்று போய்விடுகின்றது. யாருக்காக நான் இந்த உலகில் வாழ்கின்றேன் என்ற கேள்வியை நான் அடிக்கடி கேட்டுக் கொள்ள வேண்டும் என்று நினைக்கின்றேன். பிறர் என்னைப் பாராட்ட வேண்டுமே என்ற காரணத்திற்காக நான் எனக்குப் பிடிக்காத ஒன்றை அது மனசாட்சிக்கு முறன்பாடான ஒன்றாக இருப்பினும் அதை நான் செய்யலாமா..? அதனை நான் செய்வதனால் என்னுடைய மனதிற்கு நான் ஒழுங்கானவராக இருக்கின்றேனா?


மனம் முழுவதிலும் அழுக்கையும் அசுத்தத்தையும் வைத்துக் கொண்டு மற்றவர்களிடம் நான் எப்படி ஒழுக்கத்தைப் பற்றிப் பேச முடியும். நான் என்னளவில் நல்ல எண்ணங்கள் இல்லாத நிலையில் பிறரிடம் நல்லெண்ணத்தைப் பற்றி பேசுவதற்கு எந்த விதமான தகுதியும் இல்லதவராகி விடுகின்ற நிலையில் எப்படி நான் பிறருக்கு ஒழுக்கத்தைப் பற்றி சொல்லிக் கொடுக்க முடியும். வீட்டில் வேலை செய்யும் தனது வேலைக்காரியிடம் அன்பு காட்ட முடியாத ஒரு ஆசிரியை பள்ளியில் மாணவர்களிடம் அன்பைப் பற்றி பாடம் நடத்துவது என்பது எப்படி சாத்தியமாகும்?

நாம் பெரும்பாலும் பிறருக்காக வாழ்வதாகவே எனக்குத் தோன்றுகின்றது. பிறருக்காக வாழ்வது என்பது நல்ல சிந்தனை; அது பிறருக்கு உபயோகப்படும் வகையில் பிறரின் நல்வாழ்வுக்கு உதவுவது, பிறர் மேன்மைக்கு உதவுவது போன்ற நல்ல உதாரணங்களுக்குப் பொருந்தும். ஆனால் என்னுடைய வாழ்க்கையே பிறர் புகழ்வதற்காகவும், பிறர் என்னைப் பற்றி என்ன நினைப்பார்களோ என்பதற்காக பயந்து அஞ்சி ஒரு முகமூடியைப் போட்டுக் கொண்டு வாழ்வதுமாக இருந்தால் அதனால் எனக்கு என்ன பயன்? நானே என்னை, எனது சிந்தனைகளை, எனது வாழ்க்கை முறையை முழுமையாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்றால் அகத்திலே ஒரு வாழ்க்கையும் புறத்திலே மற்றொரு வாழ்க்கையும் என்று இரண்டு வாழ்க்கையை வாழும் நிலைதானே எனக்கு ஏற்படும். ஏன் இந்த conflict? என் மனதில் தோன்றும் எண்ணங்கள், உண்மையான, சரியான ஒன்று தான் என்பதில் முதலில் எனக்கு நம்பிக்கை வரவேண்டும். அந்த நம்பிக்கை உறுதியைத் தரும் போது உள்ளே ஒரு வாழ்க்கை வெளியே வேறு ஒரு வாழ்க்கை என்ற நிலை தோன்ற வழியில்லையே.

அப்போதுதானே மனதுக்கு அமைதியும் நிம்மதியும் கிடைக்கும்!

Thursday, October 9, 2003

JK's Letters to the Schools - 4

"Time to us is very important. We live in the past, in past memories, past hurts and pleasuers. Our thought is the past. It is always modifying itself as a reaction to the present, projecting itself into the future, but the deep rooted past is always with us and this is the binding quality of time.." - by J.K.

என்னுடைய மனதை சோதித்துப் பார்க்கின்றேன். என் மனதில் எண்ணற்ற விஷயங்கள் அடங்கிக் கிடக்கின்றன. பல்லாயிரக்கணக்கான விஷயங்கள். பல வேறு பட்ட விஷயங்கள். என்னுடைய வாழ்வில் இதுவரை நான் கடந்து வந்த அனுபவங்கள், பார்த்துப் பழகிய மனிதர்கள், அவர்களைப் பற்றிய எனது அபிப்ராயம், அவர்களோடு நான் நடத்திய உரையாடல், அந்த உரையாடல்களுக்குப் பிறகு அவர்கள் மேல் நான் கொண்டிருக்கும் அபிப்ராயம் எனப் பலப் பல விஷயங்கள் மனதிற்குள் அடங்கிக் கிடக்கின்றன. அடங்கிக் கிடக்கின்ற இந்த தகவல் வங்கியைப் பயன்படுத்திக் கொண்டு நிஜத்தில் வாழ்கின்றேன்.


எனது சிந்தனை எப்போதும் புதிதாக இருப்பதில்லை. ஒருவர் என் உள்ளத்தை வேதனைப் படுத்தி விட்டார் என்றால் அந்த வேதனையும் கவலையும் என் மனதை விட்டு வெகு சீக்கிரமாக விலகி விடுவதில்லை. அந்த வேதனை உணர்வும், அந்த உணர்வு ஏற்படக் காரணமாக இருந்த அந்த நிகழ்வும் மனக்கண்ணில் நினைத்துப் பார்த்தால் தோன்றும் அளவுக்கு மனதில் பதிந்திருக்கின்றன. அதே போலத்தான் சந்தோஷமான நிகழ்வுகளும். என் மனதிற்கு மகிழ்ச்சி அளித்த ஒரு நிகழ்வினை மீண்டும் சிந்தித்துப் பார்க்கும் போது என் மனம் மகிழ்கின்றது. முகம் சந்தோஷத்தில் மலர்கின்றது.




நினைவுகளைக் கொண்டு ஒரு அனுபவத்திற்கு உயிர் கொடுத்து, அதனை நிஜமாக்கி, அது தரும் உணர்வுகளை அனுபவிக்க முடிகின்றது. எனது ஆழ் உள்ளத்தில் தேங்கிக் கிடக்கும் அனுபவங்களை அடிப்படையாக வைத்துக் கொண்டு நிகழ்கால வாழ்க்கையை நடத்துகின்றேன்; அனுபவத்தின் மூலம் கிடைத்த கற்றலை வைத்துக் கொண்டும் இன்றைய பொழுதின் தேவைகளை சமாளிக்கின்றேன்.

நடக்கின்ற அனைத்திலுமே காலத்தின் தொடர்ச்சியைக் காணமுடிகின்றது. ஒரே பொருளை நேற்று நான் பார்க்கும் போது எனக்கு அது வேறு விதமாகத் தோன்றுகின்றது. அந்த தோற்றத்தின் அடிப்படையில் இன்று கிடைத்த அனுபவத்தோடு சேர்த்துக் கொண்டு பார்க்கும் போது இன்று வேறொறு விதமாகத் தோன்றுகின்றது. ஒரு புதிய நபரைப் பார்க்கின்றேன். முதல் சில நாட்கள் பேசிப் பழகும் போது அமைகின்ற அபிப்ராயம் வேறு விதமாக இருக்கின்றது. குறுகிய காலத்தில் அவரோடு பழகிய அனுபவத்தை வைத்து அவரைப் பற்றி எடைபோட்டு மனதில் அவரைப் பற்றிய ஒரு image
ஒன்றினை உருவாக்கி வைத்துக் கொள்கின்றேன். அடுத்த முறைப் பார்க்கும் போது நான் அவரைப் பற்றி தயாரித்து வைத்திருக்கும் அந்த image -ன் அடிப்படையை வைத்துக் கொண்டே அவரோடு பழகுகின்றேன்; உரையாடுகின்றேன். ஆனால் நன்றாகப் பேசிப் பழகிய பின்னர், அவரைப் பற்றி மேலும் புரிந்து கொண்ட பின்னர், அவருடைய வாழ்க்கை அனுபவங்கள் எனக்கு நெருக்கமாக வருவதை உணர்ந்த பின்னர் நான் அவரைப்பற்றி உருவாக்கி வைத்திருந்த image-ல் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றம் ஏற்படுகின்றது. பழகித் தெரிந்து கொள்ள வாய்ப்பு அமையாத போது முன்பிருந்த அந்த பழைய image அப்படியே மனதில் தங்கிக் கிடக்கின்றது.

என் மனம் மட்டுமல்ல; நம் அனைவரின் மனங்களிலும் அனுபவப் பழமை கொட்டிக் கிடக்கின்றன. இந்த அனுபவங்களை, இந்த பழமைகளை, நாம் காலத்தைக் கடக்கும் நிலையை எட்டும் போது மட்டும் தான் தொலைக்க முடியும்!

Wednesday, October 8, 2003

JK's Letters to the Schools - 3

"Learning has been the ancient tradition of man, not only from books, but about the nature and structure of the psychology of a human being. As we have neglected this entirely, there is disorder in the world...."

கல்வி என்பது ஒருவரை தொழிலுக்குத் தயார் செய்யும் ஊடகமாக தற்பொழுது பெரும்பாலும் எடை போடப்படுகின்றது. பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு பரீட்சைக்குத் தயார் செய்வதிலேயே ஆசிரியர்களும் பெற்றோர்களும் குறியாக இருக்கின்றனர். ஏன் பள்ளிப் படிப்பு என்றால், ஒரு குறிப்பிட்ட வேலை செய்வதற்காக என்பதும், அந்த குறிப்பிட்ட வேலை எதற்காக என்றால் அதிகமாக பணம் சம்பாதிக்கலாம், நல்ல வரன் அல்லது பெண் கிடைப்பாள் என்ற உலகியல் காரணங்களுக்காக கல்வி தேவை என்ற எண்ணம் நமது மனதின் அடித்தளத்தில் அமர்ந்திருக்கின்றது. வாழ்க்கையின் ஒவ்வொரு கணத்திலும் கற்கின்றோம்; புதியவர்களைப் பார்க்கும் போது, புதிய இடங்களுக்குச் செல்லும் பொது, பிரச்சனைகளை எதிர் நோக்கும் போது, இயற்கையை ரசிக்கும் போது என எப்போழுதும் ஒன்றினை கற்றுக் கொண்டேயிருக்கின்றோம். ஆனால் அதுவும் கற்றல் தான் என்பதை நினைக்க மறந்து விடுகின்றோம். வாழ்க்கை மிக மிக அவசரமாக ஓடிக் கொண்டிருக்கின்றது; இந்த அவசர உலகில் நமது மனதின் ஓட்டங்களை அதன் தேவைகளை பூர்த்தி செய்கின்றோமா என்று கேட்டுக் கொள்ள வேண்டியது அவசியமாகின்றது.


கல்வி அல்லது ஞானம் என்பது நமது மனதிற்கு ஒழுங்கினை ஏற்படுத்திக் கொடுக்கக் கூடிய மிகப் பெரிய ஆற்றலைக் கொண்டிருக்கின்றது. சிந்தனையைத் தூண்டும் நூல்களை வாசிக்கும் போது நமது உள்ளத்தில் எழுகின்ற பல கேள்விகளுக்கான விடைகளை கண்டெடுத்துக் கொள்ள முடிகின்றது. சில வேளைகளில் நமது சிந்தனைக்குத் தோன்றாத, நாம் இதுவரை நினைத்திராத சில விளக்கங்கள் பிறரது அனுபவத்திற்கும் சிந்தனைக்கும் எட்டி அது எழுத்து வடிவில் நமக்குக் கிடைக்கும் போது அந்த அனுபவத்தையும் நாம் எடுத்துக் கொள்ள வாய்ப்பு கிடைக்கின்றது.

புத்தகங்கள் மட்டுமன்றி அனுபங்களையும் உலகையும் வாசிக்க நாம் பழகும் போது இதுவரைக் காணாத அனுபவத்தைப் பெறமுடிகின்றது. இயற்கையில் கிடக்கும் அதிசயங்களைச் சிந்திக்கும் போது, நம்மைச் சுற்றி நிகழ்ந்து கொண்டிருக்கும் பலப் பல விஷயங்களையும் கூர்ந்து நோக்கி அதற்கு தெளிவு காணும் போது நமது மனம் கற்பதை உணர முடிகின்றது.

பெரும்பாலும் நமது எண்ணங்கள் பிறரை சுற்றியே வலம் வருகின்றன. எனது அண்டை வீட்டுக்காரர், எனது மேலாளர், எனது தோழர்கள், எனது உறவினர், எனது மனைவி, எனது கணவர், இப்படி மற்றவர்கள் என்ன செய்கின்றார்கள், ஏன் இப்படி செய்கின்றார்கள் என்று பிறரது குறைகளைக் கண்டு பிடிப்பதிலேயே நமது சிந்தனையைச் செலவிடுபவர்களாக
இருக்கின்ற நிலையை மாற்றிக் கொண்டு நமது சுய சிந்தனை போகின்ற போக்கினை கவனிக்க ஆரம்பித்தால், நமது உள் மனத்தோடு சம்பாஷிக்கப் பழகும் ஆற்றலைப் பழக்கிக் கொண்டால், நமது மனதின் sensitivity கூடுகின்றது. இது உணரக்கூடிய ஒன்று; எழுத்துக்களால் விளக்கப்பட முடியாத ஒன்றும் கூட!

Tuesday, October 7, 2003

JK's Letters to the Schools - 2

J.K. 15 December 1981 அவர்கள் 'Letter to the Schools" அன்று எழுதிய ஒரு கடிதம். அதனை ஒட்டிய சில சிந்தனைகள்." A school is a place of learning and so it is sacred. The temples, churches and mosques are not sacred for they have stopped learning. They believe, they have faith and that denies entirely the great art of learning......" - by J.K. எங்கே புனிதம் ஒருக்கின்றது என்று சமுதாயத்தை நோக்கி சிந்தனையைத் தூண்டும் கருத்தினை வைக்கும் முயற்சி இது என நான் நினைக்கின்றேன். மனிதர்கள் வாழ் நாள் முழுதும் கற்க வேண்டும். கற்றல் இருக்கின்ற இடத்திலே தான் வளர்ச்சி இருக்கும். கற்கின்ற மனிதர் தான் சிந்திக்கும் வாய்ப்பினைப் பெறுகின்றார். கற்கின்ற வாய்ப்பு என்பது எப்போதும் யாருக்கும் தானாக வந்துவிடுவதில்லை. சமுதாய அமைப்புக்கள் கொடுக்கின்ற வாய்ப்புக்களின் வழியாகத்தான் ஒரு தனி நபர் வாழ்க்கையில் கற்க முடிகின்றது.


பள்ளிக்கூடம் என்பது அறிவை கூர்மையாக்கி சிந்தனையைச் தூண்டச் செய்கின்ற இடம். கற்பித்தல் என்ற ஒரு நடவடிக்கை அங்கு இருந்தாலும் 'கற்றல்' தான் அங்கு மிக முக்கியமான ஒரு அம்சம். ஒரு பள்ளி எனப்படும் இடத்தில் மாணவர்கள் மட்டும் கற்பதில்லை; மாறாக ஆசிரியர்களும் கற்கின்றனர் என்பதை மறுக்கமுடியாது. எண்ணங்கள் உயர்ந்தனவாக இருப்பதற்கும், வாழ்க்கையின் போராட்டங்களை சமாளிப்பதற்கும் மனதை தயார்படுத்திக் கொள்ளும் பயற்சிக்கூடமாக அமைகின்ற ஆரம்பகால இடமாக இருப்பதும் பள்ளி தான்.

மதங்களும் சமய நெறிகளும் ஞானத்தைப் புகட்டுவதற்காகவும், அல்லல் படும் மனித வர்க்கத்தின் மனதிற்கு ஆறுதலும் விளக்கமும் தந்து அறிவினில் தெளிவை உருவாக்கவும் தோன்றின. ஆனால் இன்றைய நிலையில் அவற்றின் நோக்கங்களில் மாற்றங்கள் ஏற்பட்டு விட்டமை கண்கூடான ஒன்று. ஆலயங்கள் வணிக நிறுவனங்களாக மாறி செயல்படுவதும், மூட நம்பிக்கைகளை வளர்க்கும் பயிற்சிக் கூடங்களாக மாறிக் கொண்டிருப்பதும் உலகம் முழுதும் நாம் காணக்கூடிய ஒன்றாகத் தான் இருக்கின்றது என்பதை மறுப்பதற்கில்லை.

எப்போது 'எனக்கு எல்லாம் தெரியும்' என்ற சிந்தனை என் உள்ளத்தில் தோன்றுகின்றதோ அப்போது நான் சிந்திக்கும் திறனையும் கற்கும் ஆற்றலையும் இழந்து விடுகின்றேன். பல சமய நிறுவனங்கள் இப்போது அப்படித்தானே இயங்கிக் கொண்டிருக்கின்றன! "இதைத்தான் செய்ய வேண்டும். மாற்றி செய்யக்கூடாது.

அப்படி செய்து விட்டால் உனது சமயத்திற்கு நீ பாவம் இழைக்கின்றாய். ஏன் எதற்கு என்ற கேள்வியெல்லாம் சமயத்தின் புனிதத்தை அழிக்கக்கூடியவை" என்று பயம் காட்டுவதும், "இதைச் செய்தால் இந்தப்பலன் கிடைக்கும்; அதைச் செய்தால் உன் பாவங்கள் அழிக்கப்படும்" என்று வித்தை காட்டும் கூடாரங்களாகவும் மாறி 'இறை' எனும் புனிதத்தை மறந்து விட்ட நிலையில் தான் உள்ளன. மனிதனை மதத்தின் பெயரால் பிரித்துப் பார்க்கவும், பல வேறான சாதிகளில் பிரித்து வைத்துப் பார்க்கவுமே சமயம் விரும்பினால், குலம் கோத்திரம் கேட்டுத்தான் இறைனிடம் அறிமுகம் செய்து வைக்கமுடியும் என்று கூறினால், அதை விட வேறு என்ன மடமை இருக்க முடியும்? இந்த மடமையையும் தலையை ஆட்டிக்கொண்டு ஏற்றுக் கொண்டு அவற்றை நியாயப்படுத்தகாரணங்களை உருவாக்கிக் கொண்டிருக்கும் சமுதாயம் வளர்ந்து கொண்டே சென்றால் அன்புதான் என் சமயத்தின் அடிப்படை என்று எப்படி சொல்லிக்கொள்ள முடியும்?

Monday, October 6, 2003

JK's Letters to the Schools - Part 1

கடந்த வெள்ளியன்று வார இறுதி நாட்களோடு கூடுதலாக கிடைத்த ஒரு நாள் விடுமுறையையும் பயன்படுத்திக் கொண்டு இத்தாலிக்கு சுற்றுப்பயணம் சென்றிருந்தேன். [இந்த பயணத்தைப் பற்றிய தகவல்களையும் படங்களையும் http://subaonline.log.ag - Germany in Focus வலைப்பூவில் காணலாம்] பயணம் சுகமான அனுபவம் என்றாலும், சில மணி நேரங்கள் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குப் பயணம் செய்வதிலேயே செலவிட வேண்டிய நிர்பந்தம் இருப்பதால், பெரும்பாலும் ஏதாவது புத்தகத்தைக் கையோடு கொண்டு செல்வது எனது வழக்கம். இந்த முறை என் கைக்குக் கிடைத்தது தத்துவச் சிந்தனையாளர் ஜே.கிருஷ்ணமூர்த்தி அவர்களின் 'Letters to the Schools - Volume Two' என்ற சிறிய புத்தகம்.


இது ஒரு வித்தியாசமான நூல். சிறிய சிறிய கட்டுரைகளாக 1981 லிருந்து 1983 வரையில் அவர் எழுதிய சில கடிதங்களின் தொகுப்பே இது. புத்தகத்தின் தலைப்பு Letters to the Schools என்றிருந்தாலும் வெறும் பள்ளி மற்றும் ஆசிரியர்கள் இவர்களை மனதில் கொண்டு மட்டுமே எழுதப்பட்டவை என்று நினைக்க முடியாது. கடிதங்கள் தானே என சாதாரணமாக இந்த நூலை எடை போட்டு விட முடியவில்லை. நூலின் ஆரம்பத்தில் மிகச் சிறிய அறிமுக உறை ஒன்றை ஜே.கே தருகின்றார். அதில் "These letters are not meant to be read casually when you have a little time from other things, nor are they to be treated as entertainment. These letters are written seriously and if you care to read them, read them with intent to study what is said as you would study a flower by looking at the flower very carefully..." என்று ஆரம்பிக்கின்றார்.

முதல் கடிதத்தைப் படிக்க ஆரம்பித்து ஒவ்வொன்றாகப் படிக்கப் படிக்க எனக்கு ஆச்சரியம். எவ்வளவு ஆழமான சிந்தனை. உலகை எப்படி நோக்க வேண்டும்; எப்படி சிந்திக்க வேண்டும்; எதனை சிந்திக்க வேண்டும், கல்வி என்றால் என்ன போன்ற பல பல விஷயங்களை வரிக்கு வரி மனதைத் தாக்கி சிந்திக்கத் தூண்டும் வகையில் இந்த கடிதங்களில் தனது எண்ணங்களை இந்த சிந்தனையாளர் வெளிப்படுத்துவது அபாரம். அழகுக்காக அல்லது வார்த்தைகளை நிரப்பி கட்டுரையை அமைக்க வேண்டுமே என்ற சிந்தனையோ எந்த முயற்சியோ இன்றி வரிக்கு வரி கருத்துக் குவியல்கள். இந்தக் கடிதங்களை இத்தாலியின் அழகிய நகரான Milan-லிருந்து Rome சென்று சேரும் வரை கிடைத்த நான்கு மணி நேரத்தில் படித்து முடித்தேன். படிக்கப் படிக்க என்னுள்ளே எழுந்த சிந்தனைகளை எழுத்து வடிவாக்கித் தருவதற்காகவே இந்த முயற்சி.. தினம் தொடரும்..!

Wednesday, October 1, 2003

சாமி ஆட்டம்..:-)

கோயில் திருவிழாக்களில் கலந்து கொள்வது நம் அனைவருக்குமே பிடித்தமான ஒன்று தானே. எங்கள் ஊரில்..அதாவது பினாங்கில் (ஜெர்மனிக்கு சென்று விட்ட பிறகும் பினாங்கு தான் என் ஊர்..:) ) தைப்பூசத் திருவிழா தான் மிக மிக பிரசித்தி பெற்ற ஒரு சமயத் திருவிழா. இது தவிர வேறு சில கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டும் பல திருவிழாக்கள் நடைபெறுவதுண்டு. திருவிழாக்கள் என்றால் நமக்கு எத்தனையோ விஷயங்கள் ஞாபகம் வரும் இல்லையா..? ஆனால் எனக்கு மனதில் தோன்றுவது இந்த திருவிழாக்களின் போது சில 'பக்தர்களுக்கு' சாமி வந்து அவர்கள் போடும் ஆட்டம்தான்.

இளம் வயதில், தைப்பூசத் திருவிழாவில் வேடிக்கைப் பார்க்கச் செல்லும் போதெல்லாம் யாராவது சாமி வந்து ஆடிக்கொண்டிருந்தால் என் பெற்றோர்கள் பின்னால் ஓடி ஒளிந்து கொள்வேன் அவ்வளவு பயம். சிலர் நீண்ட அலகுக் கம்பியை வாயில் செறுகிக் கொண்டு சாமி வந்து ஆடுவதை பார்க்க பயமாகத்தான் இருக்கும்.

அப்போது எனக்கு வயது 14 இருக்கும். தைப்பூசத்திற்கு மறுநாள் பினாங்கில் வழக்கமாக தண்ணீர்மலையிலுள்ள இடும்பன் ஆலயத்தில் ஒரு விஷேஷமான பூஜை செய்வார்கள். அதற்கு இடும்பன் பூஜை என்று பெயர். யாரெல்லாம் தைப்பூசத்தில் காவடி எடுத்தார்களோ அவர்கள் எல்லாரும் அந்த இடும்பன் பூஜையில் கலந்து கொள்ள வேண்டும் என்பது ஒரு ஐதீகம். அந்த பூஜையைப் பார்ப்பதற்காக நாங்கள் குடும்பத்தோடு சென்றிருந்தோம்.

பூஜையெல்லாம் முடிந்து குருக்கள் இடும்பன் சுவாமிக்கு தீபாராதனை காட்டும் சமயத்தில் நீளமான அலகு போட்டிருந்த ஒரு ஆசாமிக்கு சாமி வந்து விட்டது. தட்டில் இருந்த சாட்டையை எடுத்து தன்னுடைய உடம்பில் சுற்றி மாற்றி மாற்றி அடித்துக் கொண்டார்.எனக்குத்தான் இதைப் பார்த்தால் பயமாயிற்றே. என் அம்மாவின் பின்னால் ஓட்டி ஒளிந்து கொண்டேன். அந்த சாமி வந்தவர் அத்தோடு நிற்கவில்லை; சாட்டையை கீழே போட்டுவிட்டு குருக்களின் கையிலிருந்த தட்டை வாங்கிக் கொண்டு கோயிலைச் சுற்றி ஒட ஆரம்பித்து விட்டார். இந்த கோயில் மிகச் சிறிய ஒரு கோயில். அவர் சுற்றி வரும் போது அவரது அலகு என் மேல் பட்டு விட்டது. அவ்வளவுதான். என்னைத்தான் அவர் விரட்டுகின்றார் என நினைத்து நான் பயந்து ஓட ஆரம்பித்து விட்டேன். ஆசாமி என்ன நினைத்தாரோ தெரியவில்லை. இப்போது நான் ஓட என்னை விரட்டிக் கொண்டு அவர் ஓட் ஆரம்பித்து விட்டார். பயத்தில் அலறிக் கொண்டு என்ன செய்வதென்று தெரியாமல் ஒரு சுற்று ஒடி வந்துவிட்டேன். என் அப்பா அதற்குள் என்னை தேடிப் பிடித்துக் கொண்டார். சாமி வந்த ஆசாமி கோயிலுக்குள் மீண்டும் சென்று இடும்பன் சுவாமியின் வீர வசனம் பேச ஆரம்பித்து விட்டார். அதற்குள் சிலர் அவரைப் பிடித்து அவருக்கு விபூதியை நெற்றியில் தேய்த்து அவருக்குப் பிடித்திருந்த இடும்பன் சாமியை மலையேற்றி வைத்தனர்.

இந்த நிகழ்வுக்குப் பிறகும் பல முறை சாமி வந்து ஆடுபவர்களைப் பார்த்திருக்கின்றேன். அப்போதெல்லாம் இந்த நிகழ்ச்சிதான் கண்முன்னே வந்து நிற்கும். இப்படி முட்டாள்தனமாக பயந்திருக்கின்றேனே என்று நினைத்துக் கொண்டாலும் வேடிக்கையான ஒரு அனுபவமாகத்தான் தோன்றும். பல முறை இதை நினைத்து நானே சிரித்துக் கொள்வதுண்டு!

Tuesday, September 30, 2003

Job search..!

நேற்று எனக்கு மலேசியாவிலிருந்து ஒரு தமிழ் பெண் மின்னஞ்சல் அனுப்பியிருந்தாள். உயர்நிலைப்பள்ளியில் படித்து முடித்துவிட்டதாகவும் அடுத்து பல்கலைக்கழகம் சேரவிருப்பதாகவும் தெரிவித்திருந்தாள். அவளுடைய கவலையும் சந்தேகமும் என்னெவென்றால் எந்த வகையான கல்வியைத் தேர்ந்தெடுப்பது எனபது தான். கடந்த முறை எழுதியிருந்த போது இந்தத் தகவலை எனக்கு எழுதி என்னுடைய ஆலோசனையை எதிர்பார்ப்பதாகத் தெரிவித்திருந்தாள். அவள் தேர்ந்தெடுக்கும் கல்வி அவளுக்குப் பிடித்தமான ஒரு வேலையை அவளுக்கு அமைத்துக் கொடுக்கவேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையில் அவளது விருப்பதையும்,. எப்படிப்பட்ட வேலையில் தன்னை அவள் ஈடுபடுத்திக் கொள்ள விரும்புகின்றாள் என்பன போன்ற சில கேள்விகளை அவளிடம் கேட்டிருந்தேன். அதற்கு பதில் தரும் வகையில் அமைந்திருந்தது இந்த இரண்டாவது கடிதம்.

அவளுக்கு அதிகமாகப் படித்துக் கொண்டேயிருக்கக் கூடிய வகையிலான வேலையில் கொஞ்சமும் நாட்டமில்லை என்று குறிப்பிட்டிருந்தாள். "வக்கீல், மருத்துவம் இப்படிப்பட்ட வேலைக்கெல்லாம் வாழ் நாள் முழுதும் படித்துக் கொண்டேயிருக்கவேண்டும். அதனால் அந்த மாதிரியான வேலையெல்லாம் வேண்டாம். கணிதம் அதிகமாக உள்ள வேலை எதுவும் வேண்டாம். ஆசிரியராகவும் விருப்பமில்லை. நல்ல வருமானம் வரக்கூடிய ஒரு வேலை வேண்டும். முடிந்தால் கணிணி சம்பந்தப்பட்ட துறையில் ஏதாவது ஒரு வேலையாக இருந்தால் பிடிக்கும். நான் ஒரு computer engineer ஆனால் சந்தோஷப்படுவேன். இதைப் பற்றி என்ன நினைக்கின்றீர்கள்" என்று கேட்டு எழுதியிருந்தாள்.



கடிதத்தைப் பார்த்த எனக்கு அவளது சிந்தனைப் போக்கையும் மடமையையும் நினைத்து சிரிப்பதைத் தவிர வேறொன்றும் எண்ணத்தோன்றவில்லை. ஒரு கணினி பொறியியலாளர் ஆகிவிட்டால் நிறைய சம்பாதிக்கலாம்; அதிகமாகப் படிக்கத் தேவையில்லை என்ற தப்பான சிந்தனைப் போக்கு எப்படி இவர்களுக்கு வந்தது? மலேசியாவில் சில நண்பர்களிடம் பேசும் போதும் இம்மாதிரியான சில பொய்யான கருத்துக்களை அவர்கள் கொண்டிருப்பதைக் கேட்கும் போது எனக்கு ஆச்சரியமாக இருக்கும். "என் மகள் அல்லது மகன் நன்றாகப்படிக்கவில்லை. உயர்நிலைப் பள்ளி சோதனையில் சுமாரான மதிப்பெண்கள் தான் பெற்றிருக்கின்றாள்(ன்). அதனால் computer engineering படிக்க வைக்கலாம் என்று நினைக்கின்றேன்" என்று கூறுபவர்களை நான் நிறையவே பார்த்திருக்கின்றேன்.



இது எவ்வளவு பெரிய மடமை. ஒரு கணினி பொறியியலாளர் என்பவர் ஒரு மருத்துவருக்குச் சமமானவர். எப்படி ஒரு மனிதனுக்கு நோய் வந்தால் அதற்கான அத்தனை சிகிச்சைகளையும் செய்கின்றோமோ, அதேபோலத்தான் ஒரு கணினிக்கும். அதுவும் மிகப்பெரிய நிறுவனங்களில், அதுவும் கோடிக்கான பணச்செலவில் தகவல் பாதுகாக்கப்படும் இடங்களிலெல்லாம் வேலை செய்வது என்பது சாதாரண ஒரு காரியமல்லவே. அதுவும் கணினி தொழில்நுட்பம் என்பது நிமிடத்திற்குள் எத்தனையோ வளர்ச்சியை நாளுக்கு நாள் கண்டுவருகின்றது. அப்படிப்பட்ட இந்தத் துறையில் வேலை கிடைத்து விட்டால் போதும்; அதற்குப் பிறகு படிக்க வேண்டியதே இல்லை என்று சொல்லும் மடமையை என்னவென்று சொல்வது? அறியாமை படித்தவர்களிடமும் இருக்கின்றதே என நினைக்கும் போது கவலையாகத்தான் இருக்கின்றது.

Sunday, September 28, 2003

TVU..!

லண்டனிலிருந்து ஒலிபரப்பாகும் தீபம் தொலைக்காட்சியில் ஞாயிற்றுக்கிழமைகளில் 1:30 மணிக்கு ஒலிபரப்பாகும் 'அரங்கம் அந்தரங்கம்' நிகழ்ச்சி எனக்குப் பிடித்த சில நிகழ்ச்சிகளில் ஒன்று. தமிழக அரசியல் நிலவரத்தை மிகுந்த பச்சாதபத்தோடும் மன உருக்கத்துடனும் தேர்ந்த செய்தியாளர் அப்துல் ஜபார் அவர்கள் வழங்குவார். தமிழகத்தில் நடக்கின்ற, நடந்துகொண்டிருக்கின்ற செய்திகள், அவற்றினால் ஏற்படப்போகும் விளைவுகளை மிகுந்த கவலையோடும் ஆதங்கத்தோடும் அவர் ஐரோப்பிய தமிழர்களிடம் பகிர்ந்து கொள்வது கொஞ்சம் வித்தியாசமான ஒரு நிகழ்ச்சியாகவே மனதிற்குப் படும்.

இன்று மத்தியான உணவுக்குத் தயாரித்திருந்த ஒரு pizza-வோடு தொலைக்காட்சி முன் உட்கார்ந்து விட்டேன், தமிழக நிலவரம் கேட்க. மற்ற சில விஷயங்களுக்கூடாகவே, நடந்து முடிந்த தமிழ் இணைய மாநாட்டைப் பற்றியும் அவரது பேச்சு அமைந்திருந்தது. தமிழ் இணையப் பல்கலைக் கழகம், முரசொலி மாறனின் மிகுந்த ஈடுபாட்டோடு உருவாக்கப்பட்ட ஒன்று என்று குறிப்பிட்ட அவர், அதன் நிர்வாக இயக்குனர் முனைவர் பொன்னவைக்கோ அரசியல் காரணங்களுக்காக இப்போது பழிவாங்கப்பட்டிருக்கின்றார் என்ற தகவலையும் சேர்த்தே சொன்னார். இந்த மாநாடு நடந்த இடம் கலைஞரின் ஆளுமைக்கு உட்பட்ட இடம் என்ற ஒரே காரணத்திற்காக அவருக்கும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அழைப்பிதழ் கொடுத்தமைக்காக, முனைவர் பொன்னவைக்கோ பதவி நீக்கம் செய்யப்படிருப்பதாகவும் தெரிவித்தார்.

TI2003 முடிந்த சில நாட்களிலேயே இந்த பேச்சு பரவலாக ஆனால் கொஞ்சம் ரகசியமாகப் பேசப்பட்டது. ஆனால் இப்போது செய்தி தொலைக்காட்சியிலேயே அறிவிப்பு கண்டிருக்கின்றது!

Friday, September 26, 2003

Travel Diary - Tamil Nadu 1

எனது அன்மையகால தமிழகப் பயணம் மனதிற்கு இனியமான நினைவுகளை எனக்கு தந்திருந்தாலும் ஒரு சில கசப்பான அனுபவங்களும் இல்லாமல் இல்லை. அதில் ஒன்று தான் ஸ்ரீரங்கத்தில் நடந்த ஒரு நிகழ்வு.

இதுதான் என்னுடைய திருச்சிக்கான முதல் பயணம். இதுவரை திருச்சிப் பக்கம் சென்றதே இல்லை. மலேசியாவில் இருக்கும் எனது பெற்றோருக்கும் உறவினர் இங்கு இருப்பதாக கூறக்கேட்டிருக்கின்றேன். மதியம் வரை பாரதிதாசன் பலகலைக்கழகத்தில் கருத்தரங்கத்தை முடித்து விட்டு மாலையில் ஸ்ரீரங்கத்திற்கு செல்லலாம் என டாக்டர்.ராதா செல்லப்பன் சொல்லியிருந்தார். அவரது முனைவர் பட்ட மாணவி சுமதி தான் எனக்கு வழிகாட்டி. நல்ல அறிவான அன்பான பெண் இவள்.

எனக்கு காய்ச்சலில் உடல் அனலாய் கொதித்துக் கொண்டிருந்தது. ஆனாலும் ஸ்ரீரங்கநாதரை தரிசனம் செய்து விட்டுத்தான் செல்ல வேண்டும் என்ற உறுதியோடு கிளம்பி விட்டோம். எங்கே நுழைந்தோம் எப்படி வெளியே வருவது எனத்தெரியாதவகையில் அவ்வளவு பெரிய கோயில் அது. கோயிலை சுற்றி சுற்றி ரசித்து விட்டு சுவாமி கும்பிட்டுக் கொண்டே வரும் போது ஒரு பட்டாச்சாரியார் வந்தார். கூட்டம் அதிகமாக இருப்பதால் உங்களுக்கு நானே அர்ச்சனை தட்டு வாங்கித் தருகிறேன் என்று வலிய வந்து உதவினார். பூஜை எல்லாம் முடிந்த பின்னர் எங்களையே வால் பிடித்துக் கொண்டு வந்தார். சொர்ணக் கலசம், ஆஞ்சனேயர் என்று சில இடங்களைக் காட்டினார். தாயார் சன்னிதி எங்கே இருக்கின்றது என்று நான் கேட்க நான் உங்களை அழைத்துச் சென்று முழுசும் காட்டுவேன் என சத்தியம் செய்யாத குறையாகக் கூறி பணம் கொடுக்குமாறு கேட்டார். 50 ரூபாய் கொடுத்தேன். ஏன் இவ்வளவு கொடுக்கின்றீர்கள் என்று சுமதியும் கொஞ்சம் கடிந்து கொண்டாள். "பரவாயில்லை, நமக்கு கோயிலைச் சுற்றிக் காட்டப்போகின்றார்.அதனால் கொடுக்கலாம்" என்று அவளை சமாதானம் செய்து வரும் போது மேலே 9 குடம் இருக்கின்றது. அதை சுற்றி விட்டு வாருங்கள்" என்று கூற நாங்களும் குடங்களை (ஏன் சுற்ற வேண்டும் என்ற காரணத்தைப் பிறகு கூறுவதாகச் சொன்னார்) சுற்றி விட்டு அவர் கூறியபடியே கும்பிட்டு விட்டு கீழே வந்து பார்த்தால் ஆளையே காணவில்லை. சுற்றிலும் தேடிய எங்களுக்கு ஆளை கண்டு பிடிக்கவே முடியவில்லை. மனிதர் escape ஆகிவிட்டார். பிறகு நாங்களே முட்டி மோதி தேடி மற்ற சன்னதிகளுக்கும் சென்று வழிபட்டு திரும்பினோம்.

நாராயணன் இருக்கும் இடத்திலேயே நமக்கு (பக்தர்களுக்கு) நாமம் போடும் இவரைப் போன்றவர்களை என்ன செய்வது..??வருத்தப்படத்தானே முடியும்..?

Thursday, September 25, 2003

செடிகள்..!



எனக்குக் காரணம் புரியாமலேயே செடிகளை பிடிக்கும். எவ்வளவு நேரமானாலும் செடிகளை அதுவும் விதம் விதமான அழகிய செடிகளைப், பூச்செடிகளை மரங்களை பார்த்துக் கொண்டே இருக்கப் பிடிக்கும். நல்ல பூங்காக்கள் எனது மனதை ஈர்த்து விடும். எவ்வளவு அலுப்பாக இருந்தாலும், கவலையாக இருந்தாலும் கூட செடிகளைப் பார்த்து அவற்றோடு உறவாடும் போது அந்த அலுப்பெல்லாம் பறந்து விடும்.




முன்பு பினாங்கில் (மலேசியாவில்) ஒருக்கும் போது எனது இல்லத்தில் பெரிய தோட்டம் இருந்ததால் அது முழுதும் நிறைய செடிகளை நட்டு வைத்திருந்தேன். பூச்செடிகள் அழகிய மரங்கள் மட்டுமன்றி காய்கறிச் செடிகளும் எனக்குப் பிடிக்கும். வெண்டைக்காய், கத்தரிக்காய், மிளகாய் பாகற்காய் கீறை வகைகள், மற்றும் முருங்கை மரம் கறிவேப்பிலை மரம் இப்படி விதம் விதமான செடிகளை வைத்திருந்தேன். பச்சை மிளகாய் செடியில் பூவாகி பின்னர் பெரிதாக வளரும் போது பார்க்க கொள்ளை அழகாக எனக்குத் தோன்றும். அதே போலத்தான் பாகற்காயைப் பார்க்கும் போதும் தோன்றும். இயற்கையில் எத்தனை அழகு மறைந்து இருக்கின்றது.


ஒவ்வொரு நாளும் மாலையில் வேலை முடிந்து வந்தது குறைந்தது 1 மணி நேரம் எனது தோட்டத்தில் முன்பெல்லாம் செலவிடுவேன். புற்களை நீக்குவது, மற்றும் உரம் சேர்ப்பது, சுத்தம் செய்வது நீர் விடுவது என்று செடிகளுடன் நேரத்தைச் செலவிடும் போது அன்றைய களைப்பு முற்றிலும் நீங்கி மனமெல்லம் உற்சாகம் வந்து விடும். இது ஏன் என்று தெரிவதில்லை. எனது நண்பர்களுக்கே ஆச்சரியமாக இருக்கும். ஆனால் ஜெர்மனிக்கு வந்து அடுக்கு மாடி வீட்டில் இப்போது இருக்கும் போது அப்படி செய்ய முடிவதில்லை. வருத்தமாகத்தான் இருக்கின்றது.

ஆனாலும் சில பூச்செடிகளை வீட்டில் வைத்திருக்கிறேன். எனது அலுவலக மேசையிலும் பூச்செடிகளை அதுவும் இங்கே கிடைக்கக்கூடிய வகைச் செடிகளை வைத்திருக்கின்றேன். காலையில் வேலையத் தொடங்கும் முன் அவை சிரித்துக் கொண்டுப்பதைப் பார்க்க மனதிற்கு சந்தோஷமாகத்தான் இருக்கின்றது.

Wednesday, September 24, 2003

J.K's diary - 1

ஜே.கே அவர்களின் நாட்குறிப்பினை படித்துக் கொண்டிருந்தேன். "Imagination and illusion distort clear observation.Illusion will always exist..." என்று குறிப்பிட்டிருந்தார். மனம் எப்போது எந்த கற்பனைகளும் சிந்தனைகளும் இல்லாமல் இருக்கின்றதோ அப்போதுதான் அமைதியும் தெளிவும் கிடைக்கும் என்கின்றார்.

மனது எப்போதும் எதையாவது சிந்தித்துக் கொண்டே இருக்கின்றது. பல வேளைகளில் கற்பனைகள் தொடங்கிவிடுகின்றன. இந்த கற்பனைகளுக்கு எல்லையே இல்லாதவாறு பரந்து வளர்ந்து கொண்டே போகின்றன. நிஜத்தில் நடக்காததையெல்லாம் மனது கற்பனை செய்கின்றது. இப்படி நடந்தால் நன்றாக இருக்குமே எனக் கற்பனை செய்து மனம் மகிழ்கின்றது. இது சரியா தப்பா என்பது கேள்வியல்ல.. இதனால் மனம் அமைதி அடைகின்றதா இல்லையா என்பதே எனக்கு முக்கியமான கேள்வியாகப் படுகின்றது.

ஒரு வேலையில் மாட்டிக் கொண்டு அந்தப் பிரச்சனையில் மூழ்கிக் கிடக்கும் போது கற்பனைகளுக்கு இடமில்லாமல் போய்விடுகின்றது. செய்வதற்கு வேலை இல்லாமல் தனியாக ஓய்வாக இருக்கும் போதுதான் நாம் மனத்தோடு அதன் ஓட்டத்தோடு கலந்து சம்பாஷித்துக் கொண்டிருப்பதை உணர முடிகின்றது. எனது சிந்தனைகளை சில நேரம் கவனித்துக் கொண்டே வந்தேன். பல விஷயங்களை அதுவும் நான் விரும்பும் பல விஷயங்களைப் பற்றி மனம் சிந்தித்துக் கொண்டே செல்வதைக் காண முடிகின்றது. மனதில் ஒரு கலந்துரையாடல் நடக்கின்றது. முடிவுகள் எடுக்கப்படுகின்றன. மனதின் இந்த சிந்தனை ஓட்டம் உணர்வுகளோடு சம்பந்தப்பட்டும் இருக்கின்றது. மனதின் சிந்தனைகளைப் பொருத்து எனது உணர்வுகளும் கவலை, மகிழ்ச்சி, வேதனை எனப் பலவாராக மாற்றம் கான்பதை உணர முடிகின்றது. ஒரு சிந்தனை ஓடிக் கொண்டே இருக்கும் போது மூச்சு முழுதாக ஓடுவதில்லை. அறை குறையாக மூச்சு இயங்குகின்றது. அந்த சிந்தனையை நிறுத்தி விட்டுப் பார்த்தால் நல்ல ஆழமான deepth breath என்பது கிடைக்கின்றது. மனதை அமைத்டிப் படுத்துவது என்பது அசாதாரண ஒரு விஷயம்தான்..!

Monday, September 22, 2003

Punishment..!

இப்போது ஜெர்மனியில் இலவசமாகவே 4 தமிழ் டிவி தமிழ் சானல்கள். இன்று சன் டிவில் ஒரு செய்தி. ஒரு தமிழக அரசியல்வாதிக்கு ஏதோ குற்றத்திற்கு நீதிமன்றத்தில் ஆச்சரியம் தரும் வகையிலான ஒரு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. அதாவது சட்டம் ஒழுங்கு ஆகியவற்றை மதிக்காததால் அவருக்கு சட்டம் நீதி நியாயம் ஆகியவைப்பற்றி புரிய வைக்க வேண்டும் என்பதற்கு மாறுபட்ட ஒரு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அந்த தீர்ப்பின் படி அவர் ஒவ்வொரு நாளும் நூலகத்திற்குச் சென்று காந்தியடிகளின் புத்தகத்தைப் படிக்க வேண்டும் என்பதுதான்.

அந்தத் தீர்ப்பின் படி இந்த அரசியல்வாதி தனது தொண்டர்கள் சிலரோடு நூலகத்திற்குச் செல்லும் காட்சி செய்திப்பகுதியில் காட்டப்பட்டது. காந்தியின் நூற்களை, அவரைப்பற்றிய விஷயங்கள் அடங்கிய நூற்களைப் படிக்க ஆரம்பித்திருக்கின்றாராம். அவரது தொண்டர்கள் சூழ்ந்திருக்க, தான் இதுவரைக்கும் வாங்கியிருக்கும் நூற்களையும் காட்டினார். வித்தியாசமான தீர்ப்பாக இருக்கின்றது அல்லவா..?

Sunday, September 21, 2003

பெண்ணாசை

மனிதன் ஆன்ம வளர்ச்சி பெற்று ஞானமும் இறையருளும் பெற வேண்டுமானால் மண்ணாசை, பொண்ணாசை, பெண்ணாசையைத் துறக்க வேண்டும் என்பது மிக மிக வழக்கில் இருந்து வருகின்ற ஒரு கூற்று. பல வேளைகளில் நான் என்னைக் கேட்டுக் கொள்வதுண்டு. இந்த ஆன்ம வளர்ச்சி, மற்றும் இறைவனை நெருங்குதல் போன்றவை
ஆணுக்கு மட்டும் தானா..? ஏன் பெண்களுக்கும் இந்த வளர்ச்சிகள் உண்டு என்பதை நினைத்து இந்த வார்த்தைகளை மாற்றி ஒரு பொதுவாக்கியமாகக் கொடுக்காமல் விட்டுருக்கின்றார்களே என்று. இதில் என்ன வேடிக்கையென்றால் பெண்கள் சிலர் சமயச் சொற்பொழிவு ஆற்றுகின்ற பொழுதும் கூட இந்த உதாரண வாக்கியத்தைக் குறிப்பிட்டு பேசுவதுதான். சிலர் கேட்கலாம் "ஏன், மண்ணாசை, பொண்ணாசை, ஆணாசை" என்று சொல்ல வேண்டுமா..?" என்று.

ஏன் இப்படி ஆண், பெண் என்று பிரிக்க வேண்டும்..? மண் எப்படிப் பொதுப் பெயராக இருக்கின்றதோ, பொண் என்பது எப்படி பொதுப் பெயராக இருக்கின்றதோ அதே போல ஒரு பொதுப் பெயரைக் குறிப்பிடலாமே..! "உடல் கூறு" அல்லது "காமம்" இப்ப்டிப் பட்ட வார்த்தைகளை பயன்படுத்தலாமே..!

திரு.வி.க. தனது பெண்ணின் பெருமை என்ற நூலில் "துறவைப் பற்றிய ஐயம்" என்ற தலைப்பில் இப்படிக் குறிப்பிடுகின்றார்.

"பெண்ணைத் துறக்குமாறு பெரியோர் நூல்களிற் சில வலியுறுத்திக் கூறுவதன் பெருளென்னை என்று சிலர் கேட்கலாம். பெண்ணைத் துறக்குமாறு பெரியோர் எவரும் கூறினாரில்லை. ..... பெண்ணாசை எவரிடத்திருப்பது? அது பெண்ணைக் காமுறும் ஒருவன் உள்ளத்திருப்பது. அவ்வாசையைத் துறவாது, பெண்ணை நீத்துக் காட்டுக்கோடி, மூக்கைப் பிடித்தல் எங்கனந் துறவாகும்? என்கின்றார்.

பெண்ணாசை என்பது அதாவது காமம் அல்லது அதீதக் காமம் என்பது ஆணுக்கு மட்டும் தான் உண்டு என்று சொல்கின்றவர்களும் இருக்கின்றனர். பெண்களுக்கும் இம்மாதிரியான உணர்வுகள் உண்டு என்பதை உணர மறுப்பவர்கள் இவர்கள். பெண்களிலும் அதீத காமத்தால் வாழ்க்கையில் அடிபட்டு துன்பத்தில் விழுந்து வாடுபவர்களும் உண்டு. தமிழ் பாரம்பரியத்தில் பெண்ணை எப்பொழுதும் தூய நிலையிலேயே வைத்துப் பார்ப்பதையே உலகம் (பொதுவாக ஆண் உலகம்) விரும்புகின்றது. நிதர்சனம் அப்படியில்லையே.. உண்மையை எழுதும் பலர் உண்மையைக் காண விரும்பாதவர்களால் தாக்கப்படுகின்றார்கள் [சொற்களால் பெரும்பாலும்..:( ] ஏன் இந்த நிலை..?

Saturday, September 20, 2003

Art of Listening

பேச்சுக் கலை என்பது சாதாரணமான ஒன்றல்ல. எல்லோராலும் மனதில் நினைப்பதைச் சரியாக சொல்லி விட முடியாது. பல வேளைகளில் நான் தடுமாறித் தவிப்பதுண்டு. மனதில் தோன்றுகின்ற சிந்தனைகளை, எண்ணங்களை முழுதாகச் சொல்ல முடிவதில்லை. நாம் நினைப்பது ஒன்று ஆனால் சொல்ல முயற்சிக்கும் போது வார்த்தைகள் மாறி
வேறொன்றாக வந்து விழுந்துவிடும். உரையாடலின் முடிவில் சொல்ல வந்ததை முழுசாகச் சொல்லவில்லையே என்ற விரக்தி தோன்றும். இந்தப் பேச்சுக் கலையை விடை மிகக் கடினமானது கேட்கும் கலை.

ஒருவர் பேசுவதைக் கேட்பதில் என்ன சிரமம் இருக்கப்போகின்றது என்று சாதாரணமாக நினைத்து விட முடியாது.பிறர் பேசுவதை நாம் கேட்கும் போது நாம் நமது மனதின் எண்ணங்களோடு சேர்த்தே தான் கேட்கிறோம்.

பேசுபவரின் சொற்களோடு நமது மனதின் தன்மைகள் கலந்து பல விதமான வியாக்கியானங்களை அந்த பேச்சுக்குக் கொடுத்துக் கொண்டே தான் கேட்கிறோம். பல வேளைகளில் பேசுபவர் பேசிக் கொண்டேயிருப்பார். நமது முகம் மட்டும் கேட்பது போல பாவனை செய்து கொண்டிருக்கும்; ஆனால் மனம் அந்த பேச்சில் லயித்து இருக்காது. பல
வேளைகளில் சொல்பவர் சொல்வதை நமது மனதிற்குப் பிடித்த வகையில் மாற்றி வேறு விதமாக வியாக்கியானம் செய்து கொள்வோம்.

ஆக கேட்பது என்பது சுலபமான ஒன்றல்ல என்பது நாம் நமது மனதின் ஓட்டத்தை உற்று நோக்கினால் தெரிய வரும். கேட்பது என்பது ஒரு கலை. அந்தக் கலையை முறையாகப் பழகத்தானே வேண்டும்!

Wednesday, September 17, 2003

திரு.வி.க

இன்று திரு.வி.க. அவர்களின் நினைவு நாள். திரு.வி.க என்று செல்லமாக அழைக்கப்படும் திரு கலியாணசுந்தரனார் மு.வா அவர்களின் குருவாகத்தான் எனக்கு முதலில் அறிமுகமானார். திரு.வி.காவின் உள்ளொளி என்ற நூல் தான நான் வாசித்த அவரது முதல் நூல். இதற்குப் பின்னர் அவரது பல நூல்களை வாசித்திருக்கின்றேன். அவரது கருத்துக்கள் என்னை முழுதாக ஈர்த்தவை.


அவர் காலத்திலேயே சமுதாய வளர்ச்சியை மனதில் நினைத்து அவர் எழுதிய நூல்களின் வழி அவரது எண்ணங்களைப் புரிந்து கொள்ள முடிந்தது. உரிமை வேட்டல், மனித வாழ்க்கையும் காந்தியடிகளும், பெண்ணின் பெருமை, சன்மார்க்கமும் வள்ளலாரும் என்பவை என்னைக் கவர்ந்தவற்றில் சில. அவரது புத்தகங்களைப் பினாங்கில் இருந்த சமயத்திலேயே 'வெற்றிவேல்' புத்தகக்கடையில் வாங்கி எனது நூலகத்தில் வைத்திருந்தேன். அவரது அனைத்து நூல்களிலும் மிகச் சிறந்ததாக என்க்குப் பட்டது உள்ளொளி தான்.


ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய ஒரு நூல் இது. மனிதர்கள் ஒவ்வொருவருக்கும் ஆன்ம ஒளி இருக்கின்றது; இந்த ஆன்ம ஒளியின் பிரகாசத்தைப் பொருத்தே அவரது தன்மைகள் அமைகின்றன என்பதை எனக்கு விளக்கி அறிமுகப்படுத்திய முதல் தமிழ் நூல் இது. இதற்குப் பின்னர் தான் சித்தர்களின் பாடல்களின் மேல் காதலும் அதில் குறிப்பிடப்படும் ஆன்ம தரிசனத்தில் ஆர்வமும் எனக்கு படிப்படியாக வளர்ந்தன. இன்றளவும் எனது மனதில் நீங்கா இடம் பெற்று விட்டது இந்நூல்.

Tuesday, September 16, 2003

Special weblog for Malaysian Tamil Writers

மலேசிய தமிழ் எழுத்தாளர்கள் தங்கள் படைப்புக்களை மின் பதிப்பாக்கம் செய்யும் வகையில் பிரத்தியேகமாக ஒரு வலைப்பூவினை உருவாக்கியிருக்கின்றேன். அதன் முகவரி http://subaraagam.log.ag மலேசிய நாளிதழ்கள் இந்த முயற்சிக்கு உதவ முடியும். இந்த வலைப்பூவில் தொடர்ந்து இந்த முயற்சிகள் விவாதிக்கப்படும்.

Monday, September 15, 2003

வழி தவறிய வண்ணத்துப் பூச்சிகள் - மாலன்

பல நாட்களுக்குப் பின்னர் நெடுங்கதை ஒன்றினைப் படிக்கும் அதிர்ஷ்டம் வாய்த்தது. இந்த முறை தமிழகம் சென்றிருந்த போது மாலன் அவர்கள் கொடுத்த அவரின் 'வழி தவறிய வண்ணத்துப் பூச்சிகள்' என்ற நூல் கையிலிருந்தது. மலேசியாவிலிருந்து ஜெர்மனி வரும் வழியில் படிக்க தேவைப்படும் என எடுத்து வைத்திருந்தேன்.

ஏறக்குறைய 12 மணி நேரம் நீடித்த அந்த பயணத்தில் இந்த நூலிலிருந்த நாவலின் தலைப்பினைக் கொண்ட அந்தக் கதையினை வாசிக்கும் வாய்ப்பு அமைந்தது.

பொதுவாகவே கதையின் சில பக்கங்களைப் படித்து பாத்திரங்களை பற்றி அறிந்து கொண்ட பின்னர் கதையின் முடிவைப் புரட்டி பார்த்து விடுவேன்; சோக முடிவா அல்லது சந்தோஷமான முடிவா என்பதைத் தெரிந்து கொள்ள.

ஆனால் இந்த நாவலில் நான் இதனைச் செய்வதற்கு முன்னர் இந்த நாவலுக்கு அறிமுக உரை வழங்கியிருக்கும் தி.ஜா அவர்களின் எழுத்துக்களே கதையின் தன்மையை, இதன் முடிவை ஓரளவு காட்டி விடும் வகையில் அமைந்துள்ளது. சமர்ப்பணம் என்ற பகுதியில் மாலனின் 4 வரிகளும் அபாரம். மாலனின் தனித்துவத்தை இந்த 4 சின்ன வரிகளிலே தெரிந்து கொள்ள முடிகின்றது.

இந்த நெடுங்கதையில் ஒவ்வொரு தனிப் பகுதி ஆரம்பிக்கும் போதும் 'அப்பாவின் டைரி' என்ற ஒரு அறிமுகப் பகுதி. இந்த எழுத்து நடை மனதிற்கு மிக மிக அன்னியோன்னியமாக வருகின்றது. கதை முழுக்க அழகு அழகான பல சொற்கள். பல நாட்களாக பயன்படுத்தாத பல நல்ல தமிழ் சொற்களை இந்த கதை படிக்கும் போது படித்து மகிழ்ந்தேன். சில எழுத்தாளர்களின் திறமையைக் கண்டு நான் வியப்பதுண்டு. மாலனின் எழுத்தும் அப்படித்தான் இருக்கின்றது. கதை ஒரு விதத்தில் சோகமான ஒரு முடிவைத்தான் வைக்கின்றது. ஆனாலும் அந்த சோகத்தையும் காரணத்தோடு விளக்கி நிதர்சனத்தை விளக்கும் வகையில் முடித்திருப்பது சிறப்பு.

Sunday, September 14, 2003

Kannathaasan Poem

ஏறக்குறைய எட்டு வருடங்களுக்கு முன்னர் தமிழை நான் தீவிரமாக கற்க ஆரம்பித்த காலத்தில் நான் வாசித்த கண்ணதாசனின் ஒரு கவிதை. கவிதயின் வரிகள் அழகாக இருந்ததாலும் மனதைத் தொடும் வகையில் அமைந்திருந்ததாலும் அதனை எனது டைரியில் குறித்து வைத்திருந்தேன். நீளமான அந்த கவிதையில் எனக்குப் பிடித்த சில வரிகள்.

காலமகள் கோலம்


காலமெனும் தேவமகள் கையிலுள்ள
துலாக்கோலில்
எந்த எடை எப்பொழுது எவ்வளவெண்
றாரறிவார்..?

.....

கடல் அருகே வீற்றிருந்தும் கடுந்தாகம்
வரும்போதே
கடவுளெனும் ஒருவரது கைச்சரக்கு
நினைவு வரும்.!

காக்கை குருவியைப் போல் கவலையின்றி
நீ இருந்தால்
யாக்கை கொடுத்தவனை யார் நினைப்பார்
இவ்வுலகில்

ஓடுகின்ற வண்டியெல்லாம் ஊர்சென்று
சேர்ந்து விட்டால்
தேடுகின்ற கோவிலை நீ தேடாமற்
போய்விடுவாய்!

'எல்லாம் அவன் செயலே' என்பதற்கு
என்ன பொருள்?
உன்னால் முடிந்ததெல்லாம் ஓரளவு
என்று பொருள்..!
- கண்ணதான்

Saturday, September 13, 2003

Malaysian Tamil literature - 1

மலேசியாவில் 300க்கும் மேற்பட்ட தமிழ் எழுத்தாளர்கள் இருக்கின்றனர். ஆனாலும் இவர்களது படைப்புக்கள் மற்றும் இவர்களைப் பற்றிய தகவல்கள் எந்த அளவுக்கு உலகத் தமிழர்களுக்குத் தெரிந்திருக்கின்றது என்பது கேள்விக்குறி! புத்தகங்களைப் பதிப்பிக்கும் பழைய முறையை மட்டுமே நம்பிக் கொண்டிருந்தால் எப்போது இவர்களது எழுத்துக்கள் உலக மக்களுக்கு அறிமுகமாக முடியும்?

மலேசிய தமிழ் எழுத்தாளர்களில் ஏறக்குறைய அனைவருமே கணினியின் பக்கமே தலைகாட்டாதவர்களாகவே இருக்கின்றனர். கனினி வழி தங்கள் எழுத்துக்களை அச்சுப்பதிப்பாக்கம் செய்தல் என்ற விஷயத்தை அறியாதவர்களாகவே இவர்கள் இருப்பது வேதனைக்குறிய ஒரு விஷயம்.

மலேசிய நாட்டிற்கென ஒரு தனி கலாச்சாரம் உண்டு; ஒரு தனித்துவம் உண்டு, ஒரு பாரம்பரியம் உண்டு. ரப்பர் மற்றும் செம்பனைத் தோட்டங்களில் வசிக்கும் மக்களின் பிரச்சனைகளும் இவர்களது வாழ்க்கை முறைகளும் மலேசிய எழுத்தாளர்களின் வழி தானே உலக மக்களுக்கு அறிமுகமாக வேண்டும். எத்தனை நாட்கள் இன்னமும் இந்த முயற்சியை இவர்கள் தள்ளி வைப்பது?

31 ஆகஸ்டு (மலேசிய சுதந்திர தினம்) அன்று மலேசியாவில் இருக்க நேர்ந்ததால் மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கம் ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கில் சிறப்புறையாற்றும் வாய்ப்பு கிடைத்த போது இந்த தகவலைக் கூறினேன். வலைப்பதிவு, உயிர்ப்பூ போன்ற பல வசதிகள் இணையத்தில் வந்து விட்ட பின்னர் அதனைப் பயன்படுத்தி மலேசிய எழுத்துக்களை மின்பதிப்பாக்கம் செய்ய வேண்டும்; மற்றும் மதுரைத் திட்டத்தில் இந்த நூல்கள் சேர்க்கப்பட வேண்டும் என்ற கருத்துக்களைக் கூறிய போது ஆர்வம் துளிர்வதைக் காண முடிந்தது. கணினி பயிற்சி பெற்ற சிலர் நமது தமிழ் எழுத்தாளர்களுக்கு உதவ வேண்டும். இந்த வகையில் படிப்படியாக தமிழ் எழுத்தாளர்களுக்கு இருக்கும் கணினியைப் பற்றிய அச்ச உணர்வுகள் தொலைந்து ஆர்வம் பிறக்க வழி உண்டு.

Friday, September 12, 2003

தொடக்கம்..

நல்லதோர் வீணை செய்தே-அதை
நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ..?
சொல்லடி சிவ சக்தி!-எனைச்
சுடர்மிகும் அறிவுடன் படைத்து விட்டாய்!
வல்லமை தாராயோ? இந்த
மாநிலம் பயனுற வாழ்வதற்கே!
பாரதி!

Saturday, July 12, 2003

அம்ருதபிந்து உபநிஷத் - பாகம் 1 - மனித, இயந்திர - (எனக்குள் என்னைத் தேடி)




From: "ksuba100"
Date: Sat Jul 12, 2003 10:57 am
Subject: Subject:

சுருக்கம்

1.மனதின் ஆசையை சுத்தம் அசுத்தம் என்று இருவகையாகப் பிரிக்கலாம்.
2.விஷயங்களில் பற்றுகொண்ட மனது பந்தங்களுக்குக் காரணமாகின்றது
3.விஷயத்தில் பற்றில்லாதது முக்திக்குக் காரணமாகின்றது.
4.பரம்பொருள் சிந்திக்கத் தகுந்த ஒரு பொருளேயாகும்.
5.முக்தி என்பது ஒரு நிலை. அது அனுபவித்து விளக்கக் கூடிய ஒரு பொருளல்ல!

குறிப்பு: பிந்து உபநிஷத்துக்கள் 5. அவை நாதபிந்து, ப்ரஹ்மபிந்து, அம்ருதபிந்து, த்யானபிந்து, தேஜோபிந்து ஆகியவையாகும். இவை ஐந்தும் கிருஸ்ஹ்ணயஜுர் வேதத்தைச் சேர்ந்தவை.

[இத்தொடரின் முதற் கட்டுரைகளை http://www.subaonline.de/upani/listti.html என்ற எமது வலைப்பக்கத்தில் காணலாம்]

தொடர் சிந்தனை:

"இறந்த பிறகு நாம் என்ன ஆவோம் என்று எப்போதாவது நீ சிந்தித்திருக்கி ன்றாயா"என்று எனது நண்பன் அலெக்ஸைக் காபி நேரத்தில் ஒரு கேள்வி கேட்டேன். அவனும் ஒரு கணினி பொறியியளாளராகப் பணியாற்றுவதால் டெக்னி கலாகவே பதிலும் இருந்தது. "ஆமாம் சில நேரங்களில் சிந்திப்பதுண்டு. எப்படி நமது செர்வர்கள் shutdown செய்தவுடன் நின்று விடுகின்றனவோ அது மாதிரிதான் இந்த உடம்பும் என்று நினைக்கின்றேன். செர்வர்களைச் shutdown செய்வதற்கு நம்மைப் போன்றவர்கள் தேவை ஆனால் நம்மை shutdown செய்வது எது என்று தெரி யவில்லை. செர்வர்களை shutdown செய்து மறுபடியும் Reboot செய்துவிடலாம். ஆனால் நம்மை Reboot செய்ய முடியாது" என்றான். "டெக்னிகலாகப் பார்த்தால் இந்த உடம்பு, அதோடு இந்த உடம்பில் நாம் இதுவரைக்கும் தேடிச் சேர்த்து வைத்தி ருக்கும் அத்தனை அறிவும் (skills) ஒரே நேரத்தில் இல்லாமல் ஆக்கப்படுகின்றன" என்றான்.

"ஏன் இப்படி சொல்கிறாய்? இவ்வளவு படித்து, முயற்சி செய்து நாம் சேர்த்து வைத்தி ருக்கும் அனுபவம் எல்லாம் ஒரே நொடியில் அழிந்துவிடக்கூடியது என்று சொல்கிறாயே" என்று கேட்க, "இருக்க முடியாது என்று தான் நினைக்கத் தோன்றுகின்றது. இதற்குப் பி றகு உள்ள உலகத்தில் இந்த அறிவு எந்த வகையில் பயன்படும் என்பது தெரியவில்லை. அதுதான் எனக்குக் குழப்பமாக இருக்கின்றது" என்றான். இந்த உடம்பு ஒரு செயலி (hardware). இதில் மென்பொருள் பதியப்படுகின்றது. அந்த மென்பொருள் இந்த செயலி யைப் பயன்படுத்திக் கொண்டு இயங்குகிறது; கற்கிறது; மேலும் மென்பொருளை வளர்ச்சி செய்து கொள்கின்றது. பிறகு ஒரு நாள் இந்த மென்பொருள் செயலியை விட்டு நீங்க, செயலியும் சேர்ந்து இல்லாமல் போய்விடுகின்றது" இப்படித்தான் இருக்க வேண்டும் என்றான்.

உன்னுடைய பதில் இந்த வாழ்க்கையையே பயனில்லாத ஒன்றாகத்தான் காட்டுகின்றது. ஏன் இப்படியும் இருக்கலாம் தானே என்று என்னுடைய கருத்தைக் கூற ஆரம்பித்தேன். 2 செயலிகள்(hardware) இருக்கின்றன; ஒன்று கண்களுக்குத் தெரிகின்ற செயலி; மற்றொன்று கண்களுக்குத் தெரியாத செயலி. கண்களுக்குத் தெரிவது இந்த பூத உடல்; கண்களுக்குத் தெரியாதது இந்தா ஆன்மா (Soul). மென்பொருள் இந்த இரண்டு செயலி களில் கண்களுக்குத் தெரியாமல் இருக்கின்ற செயலியிலேயே பதியப்படுகின்றது. இந்த வாழ்க்கை இருக்கும் வரை மென்பொருள் இயங்குகிறது; வளர்ச்சியடைகின்றது, மேலும் பெரிதானதாக, திறமை வாய்ந்தததாக மாற்றம் காண்கின்றது. இவையெல்லாம் இந்த இரண்டு செயலிகளின் துணையோடு நடக்கக் கூடியவை. கண்ணுக்குத் தெரிகின்ற இந்த செயலியான உடம்பு இறக்கும் போது மென்பொருள் இறப்பதில்லை. மாறாக அது கண்ணுக்குத் தெரியாத செயலியோடே சேர்ந்திருக்கும்; அந்த கண்ணுக்குத் தெரியாத செயலிக்கு ஒரு உடம்பு கிடைக்கும் வரை" என்றேன்.

எத்தனையோ அனுபவங்கள் காரியங்கள் என்று வாழ்க்கையில் பல நிகழ்வுகள் நடந்து கொண்டேயிருக்கின்ற போது ஒரே ஒரு நிமிடம் நம்மை உலுக்கும் கேள்விகள் எழுவதுண்டு. எத்தனை ஆண்டுகள் நாம் இதையே மீண்டும் மீண்டும் செய்து கொண்டிருக்கப்போகின்றோம்? எத்தனை நாள் நாம் இந்த அலுவலகத்தில் இருக்கப்போகி ன்றோம்?; எத்தனை நாள் இந்த வீட்டில், எனது அறையில் எனது நகரில், எனது நாட்டில் எனது இந்த அழகிய உலகில் வாழப்போகின்றோம்? என்று கேள்வி திடீரெறு வந்து குழப்பி விட்டுச் செல்வதை யாராலும் மறுக்க முடியாதுதான். வயதும் வாழ்க்கை அனுபவமும் அதிகமாக இம்மாதிரியான கேள்விகள் மனதில் எழுவதன் எண்ணி க்கையும் அடிகமாகத்தான் செய்கின்றது.

பிறந்தவர்கள் எல்லோரும் சாகத்தான் போகின்றார்கள்; அதற்காக இப்போதே சாவைப்பற்றி நினைத்து புலம்ப வேண்டுமா..? இது சிலரது விவாதம். எதிர்காலத்தைப் பற்றிய சிந்தனை எப்போதுமே மனிதனைச் சிந்திக்க வைக்கின்றது. 10 வயது குழந்தைக்கு மருத்துவராக வேண்டும் என்பது கனவாகின்றது. "எதிர்காலத்தில் நான் மருத்துவராகத்தான் இருப்பேன்; அதுதான் என்னுடைய ஆசை; அதனால் இப்போதே கணிதம் அறிவியல் பாடங்களை ஆசையோடு படிக்கின்றேன்" என்கிறாள் ஒரு குழந்தை. "இன்னும் இரண்டு மூன்று வருடங்களில் கோபுரத்தோடு கூடிய ஒரு ஆலயத்தை இந்த ஸ்டுட்கார்ட் நகரத்தில் அமைத்தே ஆகவேண்டும். எதிர்காலத்தில் நமது தமிழர்களுக்கு ஆன்மீகத்தை ஜெர்மனியில் பரப்ப இந்த ஆலயத்தைக் கட்டுவது முக்கி யமான ஒன்று" என்று தீவிரமாக இறங்கியிருக்கின்றனர் அருகாமையிலுள்ள விநாயகர் ஆலயத்து நிர்வாகத்தினர். இப்படி ஒவ்வொருவருக்கும் எதிர்கால ஆசைகள் மனதை சூழ்ந்தி ருக்கின்றன. மனிதரை அவையே இயக்குகின்றன.

ஒன்றை அடைய வேண்டும் என்று நினைப்பவருக்குத்தான அந்த பொருள் கிட்டும். எதை அடையப் போகின்றோம்? எதை அடைய வேண்டும் என்ற தெளிவி ல்லாதவருக்கு...?????

எது வேண்டும் என்று நினைப்பவருக்குத் தான் தனக்கு வேண்டுவதை அடைவதற்கான தி ட்டங்களைத் தீட்டும் திறம் கிடைக்கும். திட்டங்களைச் செயல்படுத்தினால் தான் மனம் வி ரும்பியதை அடைய முடியும். மிகச் சுலபமான சூத்திரம்.

வேண்டுவது கிடைக்குமா..? நிச்சயம் கிடைக்கும்; போடுகின்ற முயற்சியைப் பொருத்து! "வேண்டத்தக்கது அறிவோய் நீ
வேண்ட முழுதும் தருவோய் நீ" - பல ஆண்டுகளுக்கு முன்படித்த இனிய தேவாரப் பாடலின் வாசகம் இன்னமும் மனதில் ஒலித்துக் கொண்டே இருக்கின்றது.


"எண்ணிய நான் எண்ணியவாறு எனக்கருளும் தெய்வம் அருட்ஜோதி தெய்வம்" - என்று பாடுகின்றார் வள்ளலார். மனதிற்கு தைரியத்தைச் சேர்க்கும் இனிய வரிகள் இவை.

எதை வேண்டுவது...? வேண்டுகின்ற அப்பொருள் நமக்குக் கிடைக்கும் போது அப்பொருள் தனது கன்மங்களையும் சேர்த்தே கொண்டு வருவதுதான் நியதி. எனக்கு ஒரு கார் வேண்டும். ஆசை ஆசையாய் தேடி எனக்கு பிடித்த மாடலில், எனக்கு பிடித்த வர்ணத்தில் ஏறக்குறைய என்னால் சமாளிக்கக் கூடிய ஒரு காரை வாங்கி னேன். சந்தோஷம். ஆனால் அன்றிலிருந்து செலவு அதிகரிக்க ஆரம்பித்தது. எண்ணை விலை ஏறுகின்ற போதெல்லாம் மனம் தவிக்கின்றது. வாகனத்தை சுத்தம் செய்ய பணம் தேவை, அவ்வப்போது அதனை பழுது பார்க்க பணம் தேவை. எத்தனை செலவுகள்? இது போதாதென்று குளிர்காலங்களில் பணி பெய்யும் போது கார் முழுதும் பணி மூடிவி ட்ட நிலையில் அதனை சுரண்டி சுத்தம் செய்து அலுவலகம் செல்வதற்குள் போதும் போதும் என்ற நிலை. சுத்தம் செய்து முடிப்பதற்குள் குளிரில் கை உறைந்து, நடுங்கும் போது இந்த நிலை தேவை தானா என்று மனது கேட்கின்றது. சில வேலைகளில் தரையெங்கும் பணி கொட்டிக் கிடக்கும் போது நேரத்தைப் பொருட்படுத்தாமல் 40 நிமி டங்கள் நடந்தே அலுவலகம் போக வேண்டிய நிலக்குத் தள்ளப்படுகிறேன்.

சந்தோஷம் என்று நான் நினைத்த ஒன்று ஏன் எனக்கு வெறும் சந்தோஷத்தை மட்டும் தருவதில்லை..?

இப்படி ஒவ்வொரு பொருளாக மனம் ஆசைப்படுகின்றது; ஆசைப்பட்ட பொருள் கிடைக்கி ன்றது அல்லது கிடைக்காமல் போகின்றது. அனுபவம் பெறுகுகின்றது; ஆன்மா வளர்ச்சி அடைகின்றது. இப்போது ஒரு கேள்வி எழுகின்றது? எல்லா பொருளுமே நி றந்தரமற்றதுதானா..? முழுமையான சந்தோஷத்தைத் தரக்கூடிய ஒரு பொருள்(உயிர் இல்லாத/உயிர் உள்ள) இருக்கின்றதா..?

சிந்திக்கத் தகுந்த பொருள் பரம்பொருள்; சிந்திக்கத் தகுந்த பொருள் அப்பரம் பொருள் தருகின்ற ஞானம். அதுவே சிந்திப்பதற்கு உரிய அமிர்தம் என்கின்றது அம்ருதபிந்து உபநிஷத். ஆக கேள்விக்கான பதில்கள் நமக்குள்ளேயே தான் இருக்கின்றன. தேடி கண்டு கொள்வோம்!




ஆசைவலைப் பாசத்து அகப்பட்டு மாயாமல்
ஓசைமணித் தீபத்தில் ஒன்றி நிற்பது எக்காலம்?[47]

தக்கும் வகைக்கு ஓர்பொருளும் சாராமலே நினைவில்
பக்குவம்வந்து உன் அருளைப் பார்த்திருப்பது எக்காலம்? [50]

கருப்படுத்தி என்னை யமன் கைப்பிடித்துக் கொள்ளாமுன்
உருப்படுத்தி ஆள உடன்படுவது எக்காலம்?[24]
[பத்திரகிரியார் - மெய்ஞானப் புலம்பல்]

தொடரும்.....

அன்புடன்
சுபா

பரமஹம்ஸ உபநிஷத் - மனித, இயந்திர - மந்திராயனம் ஏகதண்டீ




From: "ksuba100"
Date: Sat Jul 12, 2003 10:57 am
Subject: Subject:

சுருக்கம்

நாராதர் விஷ்னு பகவானிடம் கேட்கின்றார்:
பரமஸர்களாகிய யோகிகளின் நோக்கம் என்ன?
அவர்களுக்கு ஏற்படும் வாழ்க்கை எப்படிப்பட்டது?

பகவானின் பதில்:
பரமஹம்சர்கள் எனப்படுபவர்கள் மிகச் சிலரே. அவர்களுடைய மனது எப்பொழுதும் இறை சிந்தனையிலேயே லயித்திருக்கும்; நானும் அவர்களிடத்தில் லயித்திப்பேன்.அவர்கள் மனித உறவுகள், பொருட் பற்று ஆகிய அனைத்தையும் துறந்து வாழ்வர். உடலை பொருட்படுத்தாது பற்றின்றி வாழ்வர்.

ஆசைகளை முற்றும் துறந்து ஞான தண்டத்தை தரித்த ஏகதண்டியே பரமஹம்சர்.

குறிப்பு: மிகச் சிறிய ஒரு உபநிஷத்து என்றாலும், இதனை ஞான வாழ்க்கையைப் பற்றி அலசும் பழம் தத்துவ நூல்களில் ஒன்று எனக் கொள்வது அவசியமாகின்றது. இந்த நூல் "ஓம் பூர்ணமத ..சாந்தி ..சாந்தி" எனத் தொடங்குவதால் இது சுக்லயஜுர்வேதத்தைச் சார்ந்த உபநிஷத்தாகக் கொள்ளப்படுகின்றது. 

தொடர் சிந்தனை:

எனது அலுவலக நண்பன் ஒருவன் விடுமுறையில் சென்று விட்டதால் அவனுடைய பொறுப்புக்கள் சிலவற்றை ஏற்றுக் கொள்ளும் நிலை. ஐரோப்பிய அளவிளான ஒரு வங்கி யின் கணினிகளில் இரண்டில் புதிய அறிக்கை தயாரிக்கும் மென்பொருள் ஒன்றினைப் பதி யும் வேலை வந்து சேர்ந்தது. Virtual Vault என்று சொல்லப்படும் unix-ன் புதிய பொதில்நுட்பத்தை அடிப்படை மென்பொருளாகக் கொண்ட கணினிகள் அவை. எல்லா கணினிகளைப் போலத்தானே செய்ல்பாடுகள் இருக்கும் என்று நினைத்து காரியத்தில் இறங்கிய எனக்கு அதிர்ச்சி. பல அடுக்கு நிலைகளில் தளங்களைக் கொண்ட ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் அமைப்பு. ஒரு தளத்தில் உருவாக்கிய கோப்புக்களை மற்ற தளத்தில் பார்க்க முடிவதில்லை. அடித்தளத்தில் மட்டுமே மேல் தளங்களில் உள்ள கோப்புக்களைப் பார்க்க முடியும் என்ற ஒரு வடிவமைப்பு. ஒரு தளத்தில் கிடக்கும் அனுமதி கள் மற்ற தளத்தில் கிடைப்பதில்லை. இப்படி ஏராளமான பிரிவுகளைக் கொண்ட 'மிகப் பாதுகாப்பான' ஒரு ஆப்பரேட்டிங் சிஸ்டம்; அதில் வேலையைச் செய்து முடிப்பதற்குள் போதும் போதும் என்றாகி விட்டது.

இந்த சூழ்நிலையில் மாட்டிக் கொண்டு தவித்துக் கொண்டிருக்கும் போது ஒரு சிறிய சிந்தனை; இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டம் போலத்தானே மனிதர்களாகிய நாமும் இருக்கின்றோம். காற்று வாங்க வெளியே செல்கின்றோம்; எனக்கு கண்களில் படும் பொருட்களோ அல்லது மற்ற விசயங்களோ என்னோடு அருகில் வரும் மற்ற நபருக்கு தெரி வதில்லை; அதேபோலத்தான் எனக்கும் ; அவர்களுக்கு முக்கியமாகத் தெரிவது எனக்கு பெரிதாகப் படாமலேயே போய்விடுகின்றன. எனக்கு ஒரு பிரச்சனையைப் பார்க்கும் போது தெரிகின்ற பின் விளைவுகள் மற்ற நபருக்கு மனதில் படாமலேயே போய்விடுகின்றன. அதேபோல, என் நண்பருக்குத் தெரிகின்ற பல விசயங்கள் எனக்கு ஒரு பொருட்டாகவே இல்லாமல் போய்விடுகின்றன. ஏன் இப்படி..?

பக்குவ வேறுபாடுகள் மனிதனை வித்தியாசப்படுத்திக் காட்டுகின்றன.வாழ்க்கையில் நமக்குப் போராட்டக் களமாக அமைவது நமது குடும்பம்தான். எதில் அதிக ஆசைகளும் பற்றுக்களும் வைத்திருக்கின்றோமோ அதுவே அனைத்து மன வேதனைகளுக்கும், பி ரச்சனைகளுக்கும் மூலமாக அமைந்து விடுவதுதான் நிதர்சனம். அந்த நிதர்சனத்தைப் பார்த்து அதிலிருந்து சற்று வெளியாகி, தன்னை தனது செயல்களை வெளியேயிருந்து நோக்கி படிப்படியாக இந்த உறவுச் சங்கிலிகளை வெட்டி வீச உதவும் மருந்தாகவே நமது வாழ்க்கை அமைந்திருப்பதை நாம் பல வேளைகளில் பார்க்க மறந்து விடுகின்றோம். இப்படிப் பிரச்சனைகள் நிறைந்த வாழ்க்கையில் மனிதர்கள் பிரச்சனைகளைச் சமாளிக்கும் விதம் தான் எத்தனை வகை?

நாம் கடந்து வந்த பாதையை சற்று பின்னோக்கிச் சிந்தித்துப் பார்ப்போம்; அதில் எத்தனை விஷயங்களுக்கு நாம் ஆசைப்பட்டிருக்கின்றோம்; எத்தனை ஆசைகள் நிறைவேறி யுள்ளன; அந்த நிறைவேறிய ஆசைகளால் நாம் அடைந்த இன்ப துன்பங்கள் யாவை என்பதை கணக்கிடுவோம். முடிவில் நமக்குத் தெரிவதென்ன..? ஒவ்வொரு மனி னுக்கும் ஒவ்வொரு விதமான ஆசைகள். ஆனால் பெரும்பாலும் ஆசைள் நிறைவேறிவி ட்டன என்று நாம் அப்படியே அமைதி அடைந்து விடுவதும் இல்லை; அதேபோல அடைந்த ஆசையினால் மன நிறைவு பெற்று அதே சந்தோஷத்தில் மூழ்கிக் கிடப்பதுவும் இல்லை; கால ஓட்டத்தில் புதிய புதிய ஆசைகள் தோன்றுகின்றன; புதிய புதிய பிரச்சனைகள் தலைதூக்குகின்றன; புதிய புதிய சவால்கள எதிர்நோக்கி விட்டு வாழ்க்கையை ஓட்டிக் கொண்டுதானிருக்கின்றோம். இதுதான் ஒரு சாதாரண மனிதனின் வாழ்க்கை; ஆனால் அசாதாரன மனிதர் இதைனை மாற்றி அமைத்து வாழ்க்கையை வென்றவராகின்றார்.

பேச்சாளர் சுகி சிவம் அவர்களின் ஒரு சொற்பொழிவில் அழகான ஒரு கருத்தினைக் கேட்க நேர்ந்தது. "நீங்கள் வாழ்க்கையில் வென்றவர்களாக இருக்க விரும்புகி ன்றீர்களா? அல்லது வாழ்க்கையையே வென்றவர்களாக இருக்கவிரும்புகின்றீர்களா?" என்ற ஒரு கேள்வியை எழுப்பினார். இது தான் ஒரு சாதாரன மனிதனுக்கும் அசாதாரன மனிதனுக்கு உள்ள வேற்றுமை.

நாம் சுலபமாக நமது வாழ்க்கை முறைகளை மாற்றிக் கொள்வதில்லை; நமது ஆசைகளை, விருப்பங்களைச், சிந்தனைப் போகை, வாழ்க்கை முறையை யாரும் சுலபமாக மாற்றிக் கொள்ள விரும்புவதில்லை.ஏதாவது ஒரு கட்டாயத்தின் பேரில் தான் பெரும்பாலும் நாம் மாற்றங்களை ஏற்றுக் கொள்கிறோம். வாழ்வில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்துவதில் மிக முக்கியமாக விளங்குவது மரணம். அதேபோல பிறரால் நமக்கு ஏற்படுகின்ற ஏமாற்றம், வெறுப்பு, தோல்வி, பொருள் இழப்பு போன்றவையும் நம்மை இப்போது சென்று கொண்டிருக்கின்ற நிலையிலிருந்து நிறுத்தி தற்போதைய போக்கை மாற்றி அமைத்து விடுவதைப் பார்க்கின்றோம். இது தொடர்ச்சியாக நிகழ்ந்து கொண்டிருக்கி ன்ற ஒன்று.

குடும்பம், பற்றுக்கள், ஆசைகள், திட்டங்கள் என மனதில் கோட்டை கட்டி வைத்துக் கொண்டிருக்கும் வரை இந்த சுழற்சியிலிருந்து தப்பிக்கவே முடியாது. அனைத்தும் விட்டு அமைதியை உண்மையாகப் பெற வேண்டுமானால் உறவுகளையும் ஆசைகளையும் துறக்க வேண்டும்.

சொந்தங்களையும் ஆசைகளையும் விட்டு விட்டு சவம் போல என்ன வாழ்க்கை என நாம் நினைக்கலாம். இங்கே இரண்டு விதமான வாழ்க்கையையைக் காணமுடிகின்றது. தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் நமக்கே கொடுக்கப்பட்டுள்ளது. எனக்கு சொந்த பந்தங்களில் மாட்டிக் கொண்டு பிரச்சனைகளில் மூழ்கித் தவித்து அவ்வப்போது வருகின்ற சிறிய சந்தோஷத்தை மட்டும் அனுபவித்து, பெரும்பாலும் துன்பத்தில் கிடக்கும் நிலை வேண்டுமா? அல்லது அனைத்தையும் ஒரே நிமிடத்தில் விட்டு விட்டு ஏகாந்தமான இறை அனுபவத்தையே சிந்தித்துக் கொண்டிருக்கும் நிலை வேண்டுமா? பற்றுக்களை பெரி தாக நினைக்கும் மனிதனுக்குப் பற்றுக்களை முற்றிலும் அறுத்த அசாதாரன மனிதனை புரி ந்து கொள்ள முடிவதில்லை; Virtual Vault சிஸ்டத்தைப் போல.

மனிதர்களில் அசாதரணமானவர்களே பரமஹம்சர்கள். மனிதர்களாக பிறவியெடுத்த நாம் அனைவருமே பரமஹம்சர்களாகிக் கொண்டேயிருக்கின்றோம் என்பது தான் சைவ சி த்தாந்தம். பரமஹம்சர்கள் வானிலிருந்து தோன்றுவதில்லை; நாம் தான் வாழ்க்கையில் கிடைக்கின்ற அனுபவங்களை சிந்திக்க சிந்திக்க விடுபட வேண்டியவற்றிலிருந்து ஒவ்வொன்றாக விட்டு விட்டு இறுதில் இறைவனை மட்டுமே நினைவில் கொண்டு வாழும் நிலைக்கு வரும் போது பரமஹம்சர்களாகின்றோம்.

பரமஹம்சர்களுக்கு உள்ளது ஏக சிந்தனை; தன்னை மறந்து தன்னுள் உறைந்துள்ள இறைச்சிந்தனையில் மட்டுமே லயித்திருக்க, வாழ்க்கை நிறைந்த சுகானுபவத்தை வழங்குகி ன்ற நிலை.



பிறந்தும் இறந்தும் பல் பேதைமை யாலே
மறந்து மல இருள் நீங்க மறைந்து
சிறந்த சிவனருள் சேர்பரு வத்துத்
துறந்த உயிர்க்குச் உடரொளி யாமே
 [ - திருமந்திரம், 1589.]

என்று திருமூலர் கூறுகின்றார்.

உள்ளொளியாகிய இச்சுடரொளியே தானாகி, நித்திய இன்பத்தில் இருப்பவர்களாக பரமஹம்சர்கள் விளங்குகின்றார்கள். இவர்களுக்கு உடல் பற்றுக்கள் இல்லை, உலக ஆசைகள் இல்லை, சாஸ்திரங்கள் இல்லை, சம்பிரதாயங்கள் இல்லை; இன்பமும் துன்பமும் இல்லை. சந்தேகம், பொய்யறிவு இவற்றிலிருந்து விலகி விட்டதால் அழியாத தன்மை படைத்த இறைவனுடன் இரண்டறக் கலந்து ஆனந்தமாய், அறிவே உருவாய் இவர்கள் இருப்பர் என பரமஹம்ஸ உபநிஷத் கூறுகின்றது. இந்நிலையில் ஞானம் எனும் ஒரே தண்டத்தை மட்டும் இவர் கொண்டிருப்பதால் இவரே எகதண்டீ.

"ஸர்வான் காமான் பரித்யஜ்ய அத்வைதே பரமேஸ்த்திதி
ஜ்ஞானதண்டோ த்ருதோ யேந ஏகதண்டீ ஸ உச்யதே!"



எங்கும் பரவடிவாய் என் வடிவு நின் நினைவாய்
கங்குல்பகல் இன்றி உனைக் கண்டிருப்பது எக்காலம்?

நின்றநிலை பேராமல், நினைவில் ஒன்றும் சாராமல்
சென்றநிலை முத்தி என்று சேர்ந்தறிவது எக்காலம்?

என்னைவிட்டு நீங்காது என்னிடத்து நீ இருக்க
உன்னைவிட்டு நிங்காது ஒருப்படுவது எக்காலம்?
[பத்திரகிரியார் - மெய்ஞானப் புலம்பல்]

தொடரும்.....

அன்புடன்
சுபா