Wednesday, August 22, 2018

மெட்ராஸ் தினம் - 1639 ஆகஸ்ட் 22ம் நாள்

இன்று மெட்ராஸ் தினம். 1639 ஆகஸ்ட் 22ம் நாள் மதராசப்பட்டினத்தை ஈஸ்ட் இந்தியா கம்பெனி சென்னப்ப நாயக்கன் என்பவரிடமிருந்து வாங்கிய நாள். சென்னை என அழைப்பதை விட இதனை மதராஸ் அல்லது மதராசபட்டினம் என்று அழைப்பதே பொருத்தம் எனக் கருதுகிறேன். வரலாற்றுச் சிறப்புக்களுக்குக் குறைவில்லாத ஊர் மெட்ராஸ்.

சென்னைவாசிகள் பெரும்பாலோருக்கு மெட்ராஸ் பற்றிய பல வரலாற்றுத் தகவல்கள் தெரியாது என்பது நிதர்சனம். அதனைக்கருத்தில் கொண்டு பல சமூக நல வரலாற்று ஆர்வலர் குழுக்கள் மெட்ராஸ் பற்றிய நிகழ்வுகளை இந்த வாரத்தில் நடத்தி விழிப்புணர்ச்சி ஏற்படுத்துகின்றன. லூதரன் பாதிரிமார்களின் கி.பி18ம் நூற்றாண்டு, 19ம் நூற்றாண்டு நூல்களை வாசிக்கும் போது மெட்ராஸ் நம் மனக்கண்ணில் அழகிய ஐரோப்பிய நகரம் போன்று காட்சியளிக்கின்றது. ஆனால் இன்று அந்த மெட்ராஸை நாம் காண வாய்ப்பே இல்லை!

வந்தோரை வாழவைத்த மெட்ராஸை இன்று குப்பைக் கூளம் நிறைந்த ஒரு நகராக ஆக்கிவிட்டதன் பலனாக அதன் பொலிவு இழந்து இருக்கின்றது மெட்ராஸ்.

ஒரு ஆய்விற்காகத் தகவல் தேடிக் கொண்டிருந்த போது ஆங்கில நூல், W.T.Munro 1868ல் எழுதி மெட்ராஸ் வெப்பேரி அச்சகத்தில் வெளியிடப்பட்ட நூல் ஒன்று கிடைத்தது. அதன் மெயர் மெட்ராசியானா. இது இன்றைக்கு 150 ஆண்டுகளுக்கு முன் இருந்த மெட்ராஸை விவரிக்கும் ஒரு நூல்.

இதில் மெட்ராஸில் உள்ள ஏறக்குறைய 30 தேவாலயங்களைப் பற்றிய குறிப்புக்கள் உள்ளன. இத்தனை தேவாலயங்களா என்று வியந்து போனேன்.

அது தவிர சல்லிவன் கார்டன், ஆண்டெர்சன் கார்டன், கோர்ன்வாலிஸ் சிலை, மிண்ட் ஹால், சுப்ரீம் கோர்ட், ஓல்ட் எக்ஸேஞ், மவ்ரே கார்டன் என பல தோட்டங்களைப் பற்றிய குறிப்புக்களும் கிடைக்கின்றன.

பழைய பத்திரிக்கைக் குறிப்புக்கள், போர் குறிப்புக்கள், இங்கிலாந்து மகாராணி, இந்திய அரசியல் பொருளாதாரமும் ஆங்கிலேய அரசியல் பொருளாதாரமும் ஒப்பீடு ... இப்படி பல தலைப்புக்களிலும் ஆசிரியர் சிறு கட்டுரைகளை இணைத்திருக்கின்றார்.

நான்கு பகுதிகளில் 300 பக்கங்களிலான ஒரு நூல் இது. மெட்ராசைப் பற்றி ஆய்வில் ஈடுபடுவோருக்கும் தெரிந்து கொள்ள விரும்புவோருக்கும் உதவும் நூல் என்பதில் ஐயமில்லை.

மெட்ராஸ் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த நகரை பாதுகாக்கும் பொறுப்பு இங்கு வசிக்கும் ஒவ்வொருவருக்கும் இருக்கின்றது. தன் வீட்டுக் குப்பையைக் கூட்டி சாலையில் இடும் அதே வேளை அந்தக் குப்பையின் மேல் தானே நாம் நடந்து போகவேண்டும், என நினைத்தால் நம் மனம் மாறும்.

குப்பைக்கூளங்களை மலைபோல குவித்து வைப்பதை வார இறுதி நாட்களில் பெரியவர்கள் எல்லோருமாகச் சேர்ந்து தங்கள் குடியிறுப்புப் பகுதிகளைத் தூய்மை செய்வோம் எனத் தொடங்கினால் சுத்தம் படிப்படியாக நடைமுறைக்கு வரும்.
கையில் கிடைக்கும் குப்பைகளையெல்லாம் கண்ட இடத்தில் உடனுக்குடன் போடும் பழக்கத்தை இன்றே நிறுத்தினால் மெட்ராஸ் தூய்மையாகும். மெட்ராஸைத் தூய்மையாக வைத்திருக்க ஒவ்வொருவரும் தமது பங்கை ஆற்றினால் எழில் மிகு மெட்ராஸை மீண்டும் பெறலாம். அழகான நகரத்தைக் காண விமானம் பிடித்து வேறு நாட்டிற்குச் செல்ல வேண்டியதில்லை. நம் இருப்பிடமே அழகான நகரமாக நமக்கு மகிழ்ச்சி கூட்டும்! 




-சுபா