Tuesday, April 30, 2019

சூளவம்சம் - நூல் வாசிப்பு - 5

*பகுதி 5  - தொடர்கின்றது.* 
சூளவம்சம் - நூல் வாசிப்பு
நூலாசிரியர் - முனைவர்.க.குணராசா

பதிப்பு - கமலம் பதிப்பகம், யாழ்ப்பாணம்



சிற்றரசனான மானவர்மனுக்கு மகனாக பராக்கிரமபாகு பிறந்தான். தனக்கு மகன் பிறந்த   செய்தியை இலங்கை மன்னன் விக்கிரமபாகுவிற்குத் தூதுவர் மூலம் அறிவித்தான் மானவர்மன். விக்கிரமபாகுவின் தங்கைதான் மானவர்மனின் மனைவி. தன் தங்கையைப் போல நல்ல குணங்களுடன் பராக்கிரமபாகு வளரவேண்டும் என்று எண்ணி விக்ரமபாகு, தன் மருமகனைத் தன்னிடம் கொடுத்து வளர்க்க அனுமதிக்கும்படி கேட்டுக் கொண்டான்.  ஆனால் மானவர்மன் அதற்குச் சம்மதம் தெரிவிக்கவில்லை. பராக்கிரமபாகு ஒரு அரசனுக்குத் தேவையான எல்லா கலைகளையும் கற்று வளர்ந்து வந்தான்.

சூளவம்சத்தின் இந்தப் பகுதியில் ஒரு உரையாடலின் போது "கலிங்க மரபில் வந்த விஜய மன்னன் இத்தீவில் வசித்த இயக்ர்களை அழைத்து இத்தீவை மக்கள் வாழ கந்ததாக ஆக்கினான். அன்றிலிருந்து கலிங்க மரபு மன்னர் வழி வருகின்றது" என்று ஒரு அரசி கூறும் ஒரு செய்தியும் இடம் பெறுகின்றது. இதனை நோக்கும்போது சூளவம்ம் கூறும் செய்திகளின் அடிப்படையில், இலங்கை மன்னர்கள் பரம்பரை என்பது கலிங்க நாட்டு மன்னர் பரம்பரையினரின் தொடர்ச்சி என்பதாகவே அறியக்கூடியதாக இருக்கின்றது.

பராக்கிரமபாகு ஏனைய அரசர்களை விட மாறுபட்ட வகையில் சிந்திக்கும் திறன் உடையவனாக இருந்தான். தானே பல ஊர்களுக்குப் பயணம் செய்து கிராமங்களை நேரில் கண்டு சில இடங்களில் போரிட்டு, அங்கு தனது வீரத்தைவெளிப்படுத்தி, தனது புகழை வளர்த்துக் கொண்டு வந்தான். அவனுக்கு இலங்கையில் வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு மனிதர்கள் தனித்தனியாக ஆட்சி செய்வது மனதிற்கு ஒவ்வாததாக இருந்தது இலங்கையின் முழு பகுதியையும் ஒரு ஆட்சியின் கீழ் கொண்டு வர வேண்டும். அந்த ஆட்சிக்கு தானே தலைமை தாங்க வேண்டும், என்று அவன் யோசித்துக் கொண்டிருந்தான். அது மட்டுமல்ல. இலங்கைத்தீவு சிறியதான ஒரு தீவாக இருந்தாலும் கூட, பௌத்த நெறிக்கு மிக முக்கியமான ஒரு நாடாக இருப்பதை அவன் மிக முக்கிய காரணமாகக் கருதினான். "புத்தரின் கேசம், தோள் எலும்பு, கழுத்து எலும்பு, பல், பிச்சைப்பாத்திரம் பாத அடையாளம் போதி மரத்தின் கிளை ஆகியவை இலங்கையில் தான் இருக்கின்றது" என்று அவன் கூறுவதாக ஒரு வாக்கியம் சூளவம்சத்தில் இடம்பெறுகின்றது.

இளவரசனாக சுகங்களை மட்டும் அனுபவித்து கொண்டிராமல் இலங்கையின் எல்லாப் பகுதிகளுக்கும் பயணம் செய்து, சீர்குலைந்து கிடந்த கிராமங்களை தனது ஆட்சிக்கு கீழ் கொண்டு வந்து எல்லா பகுதிகளையும் ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டான். சில ஆண்டுகளில் தக்ஷிணதேசத்தில் அரசனாக அரியணை ஏறினான் பராக்கிரமபாகு.  அது மட்டும் போதாது. இலங்கை முழுவதையும் தனது ஆளுமைக்குள் கொண்டு வர வேண்டும் என்று திட்டமிட்டான். "பொழியும் மழை நீரில் ஒரு துளி கூட சமுத்திரத்தில் கலக்கக்கூடாது. அவை அனைத்தும் விவசாயத்திற்குப் பயன்படவேண்டும்" என்று நீர்ப்பாசனத் திட்டங்களை இலங்கை முழுவதும் திட்டமிட்டான்,  செயல்படுத்தினான். நெல் வயல்களின் பரப்பினை அதிகரித்தான். நாட்டை நெற்களஞ்சியமாக்கினான். முந்தைய அரசர்கள் தங்கள் பெரும்பகுதி நேரத்தை யுத்தங்களில் செலவிட்டு நாட்டை பாழ்படுத்தினர். யுத்தத்தை விட்டு நாட்டினையும் சமயத்தையும் அவர்கள் வளர்ச்சிக்குப் பயன்படுத்தவில்லைஆகவே பௌத்த தர்மத்தை முன்னெடுக்கவும், இளைஞர்கள் ஆரோக்கியத்துடன் வாழ்வதற்கு போர் பயிற்சி பெறவும் எல்லா மாவட்டங்களிலும் சிறந்த நிர்வாகம் செயல்படவும், நாடு முழுவதும் திட்டங்களை வகுத்து செயல்படத் தொடங்கினான் பராக்கிரமபாகு.

இவனது ஆட்சியின் கீழ் தமிழ்ப்படை ஒன்று இருந்தமையும், அதற்குத் தளபதியாக மலைராஜா என்ற ஒருவனை நியமித்மையும் சூளவம்சம் குறிப்பிடுகிறது. பலம் பொருந்திய படையினை  உருவாக்கி இலங்கை முழுவதும் இருந்த அனைத்து சிற்றரசர்களையும் தனது ஆட்சியின் கீழ் கொண்டு வந்தான் பராக்கிரமபாகு.

இலங்கை முழுமைக்கும்  மன்னனாக முடிசூட்டிக் கொண்டான். மகா பராக்கிரமபாகு என்று அழைக்கப்பட்டான். முந்தைய ஆட்சியாளர்கள் விதித்திருந்த வரிச் சுமைகளை குறைத்தான் பௌத்தத்தில் இருந்த மூன்று மதப் பிரிவுகளையும் சேர்ந்த பிக்குகளை அழைத்து அவர்களிடம் சமரசத்தை உருவாக்க முயற்சித்தான்.  பௌத்த பிக்குகளுக்கு நிறைய சலுகைகளை வழங்கினான்.  வழிப்போக்கர்களுக்கும் பிச்சைக்காரர்களுக்கும் அன்னசத்திரங்கள் அமைத்தான். தானியங்கள் சேகரித்து வைக்க களஞ்சியங்களை அமைப்பித்தான். நோயாளிகளுக்கு வைத்தியசாலைகளை நிறுவினான். திறன் வாய்ந்த வைத்தியர்களை ஒருங்கிணைத்து சிறந்த வைத்தியசாலைகளை உருவாக்கினான்.  மாதத்தில் நான்கு நாட்களை  பௌத்த உபதேச நாட்களாக அறிவித்தான். பிராமணர்கள் தமது சடங்கு, கிரியைகள் ஆகியவற்றைச் செய்வதற்கு ஒரு தங்கமாளிகை உருவாக்கித் தந்தான். பிராமணர்கள் மந்திரச் சடங்குகள் ஆற்றுவதற்கு விஷ்ணுவுக்கு ஒரு கோயில் அமைத்தான்.  புனித நூல்கள் வழங்குவதற்குரிய மாளிகைகளையும் அமைத்தான்

பராக்கிரமபாகுவின் பட்டத்து ராணியாக ரூபவதி என்பவள் இருந்தாள்.  அவளைத் தவிர நூற்றுக்கணக்கான மகளிர் அரண்மனையில் இருந்தார்கள். ரூபவதி பௌத்த மத நம்பிக்கை கொண்டவள். அவள் பௌத்த சமயத் தொண்டினைத் தொடர்ந்து ஆற்றி வந்தாள்.  பராக்கிரமபாகு மூன்று தேவாலயங்களைக்  கட்டுவித்தான் என்ற செய்தியையும் சூளவம்சம் குறிப்பிடுகிறது.

மகா பராக்கிரமபாகு சோழர்களால் சேதமாக்கப்பட்ட புராதன அரச நகரான அனுராதபுரத்தைப் புனரமைக்கவும்,  போதி மரத்தையும், புனித சின்னங்களையும் பாதுகாக்கவும் நடவடிக்கைகள் எடுத்தான்.  இவன் காலத்திலேயே பௌத்தப் புனித சின்னங்கள் மீட்கப்பட்டன. அவை பொலநருவ நகருக்குக் கொண்டுவரப்பட்டன. மகா பராக்கிரமபாகுஅந்தப் புனித சின்னங்களைத் தனது தலையில் தாங்கி ஊர்வலம் வந்து விழா எடுத்துக் கொண்டாடி ஆலயத்தில் வைத்தான்.

சூம்சத்தில் மற்றொரு செய்தியும் இடம் பெறுகிறது. அதாவது, பராக்கிரமபாகு கம்போஜ மன்னனுக்கு  நட்புறவு நிமித்தமாக இலங்கை இளவரசி ஒருத்தியைத் திருமணம் செய்விக்க அனுப்பியதாகவும், அவள் சென்ற அந்தக் கப்பலை பர்மிய மன்னன் இடையில் தாக்கி கைப்பற்றி அவளை கொண்டு சென்றதாகவும், இதனால் கோபமடைந்த மகா பராக்கிரமபாகு தமிழ்த் தளபதி ஒருவரை அழைத்து பர்மா மீது போர் தொடுக்க கட்டளையிட்டான் என்றும்,  பர்மா வந்து இறங்கிய தமிழ் தளபதி  ஆதித்தன் அவர்களுடன் சண்டையிட்டு பர்மிய மன்னனைச் சிறைபிடித்து  இளவரசியை மீட்டான் என்றும் இச்செய்தி குறிப்பிடுகிறது.  அதோடு மட்டுமன்றி, பர்மாவின் மன்னன் இலங்கைக்குத் திறை செலுத்தும் மன்னனாக இருப்பதற்கு ஒப்புக்கொண்டு திறை செலுத்தினான் என்ற செய்தியும் கிடைக்கின்றது.

அந்தக் காலகட்டத்தில் தமிழகத்தில் ஆட்சி செய்து கொண்டிருந்த பாண்டிய மன்னன் பராக்கிரமனைத் தாக்கி மற்றொரு இளவரசனான குலசேகரன் ஆட்சியைக் கைப்பற்றிக் கொண்டான். குலசேகர பாண்டியனைத் தாக்கி தனது ஆட்சியை மீட்டுக் கொடுக்கும்படி பராக்கிரம பாண்டியன், மகா பராக்கிரமபாகுவின் உதவி கேட்டு தூது அனுப்பினான். தனது படைத் தளபதியை அழைத்து குலசேகரனைத் தாக்கி கைப்பற்றி மீண்டும்   பராக்கிரம பாண்டியனுக்கே அரசை ஒப்படைக்கும்படி கட்டளையிட்டான் மகா பராக்கிரமபாகு.  தளபதி தண்டநாயக்கன் முதலில் ராமேஸ்வரத்தைக் கைப்பற்றிக் கொண்டான். அப்பகுதியில் ஆட்சி செய்த சிற்றரசர்களைத் தாக்கிச் சிறைப்பிடித்துஇலங்கைக்கு அனுப்பினான் அவர்களைக் கொண்டு முன்னர் இலங்கையில் தமிழ் படைகள் ஏற்படுத்திய சேதங்களைத் திருத்தவும், பழுதடைந்த கோவில்களைப்  புதுப்பிக்கும் பணிக்கும் அவர்களை அனுப்பினான். இந்த தண்டநாயக்கன் தென்னிந்தியாவில் குண்டுக்ல் என்ற இடத்தில் தனக்கு ஒரு கோட்டை நிறுவி அதற்கு பராக்கிரமபும் என்றும் பெயரிட்டான் என்று சூளவம்சம் குறிப்பிடுகிறது. குலசேகரனுக்கும் பாண்டியன் பராக்கிரமனுக்கும் நடைபெற்ற சண்டையின்போது பராக்கிரம பாண்டியன் கொல்லப்பட்டான்.  ஆயினும் தண்டநாயக்னின் படைகள்  பராக்கிரம பாண்டியனின் குடும்பத்தாருக்கு உதவும் பொருட்டு தொடர்ச்சியாகப் போர் செய்து வந்தது. தமிழகத்தின் பொன்னமராவதியில் நடந்த புரட்சியை முற்றுமாக அடக்கி, அங்கிருந்த பாண்டியனின் மூன்று அடுக்கு மாளிகையைத் தீக்கிரையாக்கியது இலங்கை படை. பாண்டியன் பராக்கிரமன் மகனான் வீரபாண்டியனுக்கு முடிசூடி விட்டு பின்னர் நாடு திரும்பியது இலங்கை படை. இலங்கை படையோடு போர் தொடுக்கும் வகையில் குலசேகரன் சோழமன்னர்களின் உதவியை நாடினான். தமிழகத்தில் பெரும் போர் நடைபெற்றது. அதில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டனர். குலசேகரன் அனைத்தையும் இழந்து ஓடினான். இலங்கை மன்னனின் தளபதி நாட்டை வீரபாண்டியனிடம் ஒப்படைத்துவிட்டு, "இந்த ராஜ்ஜியத்தில் பராக்கிரமபாகுவின் தலைச் சின்னம் பொறித்த காசு பணம் பயன்படுத்தப்பட வேண்டும்" என்று கட்டளை பிறப்பித்து, பாண்டிய சோழ கைதிகளோடு இலங்கைக்குக் திரும்பினான். இந்த வெற்றியைக் கொண்டாடி பராக்கிரமபாகு இலங்கையில் "பாண்டி விஜயம்" என்ற பெயரில் ஒரு கிராமத்தை உருவாக்கினான். அக்கிராமத்தில் பிராமணர்கள் வளமாக வாழ நிலங்களை நன்கொடையாக வழங்கினான் மகா பராக்கிரமபாகு என்று சொல்கிறது சூளவம்சம்.

மகா பராக்கிரமபாகுவின் ஆட்சி 33 ஆண்டுகள் நீடித்தன. இவனது ஆட்சி இலங்கை வரலாற்றில் இலங்கைக்குப் பெரும் வளத்தையும் புகழையும் தேடித் தந்த ஆட்சி   என்று ஐயமின்றி  குறிப்பிடலாம். பராக்கிரமபாகுவின் மறைவிற்கு பிறகு அவனது சகோதரியின் மகனான விஜயபாகு என்பவன் அரியணை ஏறினான். அவன் கவிஞன் அதோடு மனுநீதியை உயர்வாகக் கருதி அவன் மக்களை மனு நீதியின் கட்டளைப்படி நான்கு ஒழுக்கங்களை பின்பற்றி நடக்குமாறு பணித்தான் என்றும், அவன் ஆட்சி ஒரு ஆண்டு காலம் மட்டுமே நீடித்தது என்றும், அவனுக்குப் பின் மகிந்தன் என்பவன் ஆட்சியை எடுத்துக்கொண்டான் என்றும் சூளவம்சம் குறிப்பிடுகிறது.

மீண்டும் பல குழப்பங்கள் இலங்கை அரச குடும்பத்தில் ஏற்பட்டன. மகா பராக்கிரமபாகுவின் மனைவியருள் ஒருத்தியான லீலாவதியை இடைக்காலத்தில் அரியணையில் ஏற்றினார்கள். அந்த காலகட்டத்தில் இந்தியாவில் இருந்து பராக்கிரம பாண்டியன் என்பவன் பெரும்படையுடன் வந்து லீலாவதியையும் அவள் தளபதியையும் கொன்று இலங்கையைக் கைப்பற்றிக் கொண்டான். இதனைக் குறிப்பிடும் போது சூளவம்சம் இக்காலகட்டத்தில் மனு நீதி தவறிய ஆட்சி மூன்று ஆண்டுகள் புலத்தி நகரில்  நிலவியது, அதாவது பொலநறுவ நகரில் நிலவியது என்று குறிப்பிடுகிறது. 

சூளவம்சத்தின் அடிப்படையில் மனுநீதியே உயர்ந்த தர்மமாக கொள்ளப்பட்டது என்பதை அறிகின்றோம். ஆக, பௌத்த சமயத்தை அரச சமயமாக ஏற்ற இலங்கை சிங்கள மன்னர்கள், பௌத்த தத்துவங்களின் அடிப்படைகளுக்கு நேர்மாறான மனு நீதியை எவ்வாறு  ஏற்றுக் கொண்டனர் என்பதுவும், மனு நீதி சிங்கள ஆட்சியில் எப்போது உட்புகுந்தது என்பதும், அது எவ்வாறு ஆட்சியில் உள்ளோருக்கு துணை புரிந்தது என்பதும், அதனால் ஏற்பட்ட பின்விளைவுகள் யாவை என்பதுவும் ஆய்வுக்குட்படுத்தப்பட வேண்டியவையே!

தொடரும்..
சுபா

Monday, April 29, 2019

சூளவம்சம் - நூல் வாசிப்பு - 4



*பகுதி 4 - தொடர்கின்றது.*
சூளவம்சம் - நூல் வாசிப்பு
நூலாசிரியர் - முனைவர்.க.குணராசா
பதிப்பு - கமலம் பதிப்பகம், யாழ்ப்பாணம்
சேனன் இலங்கை மன்னனாக ஆட்சி செய்து கொண்டிருந்த போது, சோழ மன்னன் வல்லபன் இலங்கையின் நாக தீபத்திற்கு, அதாவது வட பகுதியில் உத்தர தேசம் என்ற பெயர் கொண்ட ஒரு பகுதி, அதனை வல்லபன் போரிட்டு கைப்பற்றிக்கொண்டதாக சூளவம்சம் குறிப்பிடுகிறது. சேனன் மீண்டும் தாக்கியதாகவும், அதனை எதிர்த்து சோழன் வல்லபன் மீண்டும் போர் செய்து வாகை சூடியதாகவும், பின் மீண்டும் நடந்த போரில் தோல்வி கண்டு வல்லபன் நட்புறவுக்கு வந்ததாகவும், இதனால் இலங்கை மன்னனின் புகழ் இந்தியாவிலும் பரவியது என்றும் மேலும் குறிப்பிடுகிறது. சூளவம்சம் குறிப்பிடும் சோழன் வல்லபன் யார் என்பது ஆய்விற்குறியது.
இதற்கு அடுத்த 16 வருடங்கள் சேனன் மன்னனாக ஆட்சியைத் தொடர்ந்தான். அதற்குப்பின் மகிந்தன். அவனுக்குப் பின்னர் அவனது கலிங்க ராணியின் மகன் சேனன் கி.பி 972 லிருந்து 982 வரை ஆட்சி செய்து கொண்டிருந்தான். இந்தக் காலகட்டத்தில் இலங்கையில் சிற்றரசர்களிடையே குழப்பம் அதிகரித்து விட்டது. இந்தச் சூழலில் இளம் வயது மன்னனான சேனன் தனது சேனாதிபதியாக சேனன் என்ற இன்னொருவனை அழைத்து பதவியை ஒப்படைத்துவிட்டு பொலநருவ நகருக்குச் சென்று தங்கிவிட்டதாக சூளவம்சம் குறிப்பிடுகிறது. சேனாதிபதி முறையாக ஆட்சியைப் பாதுகாக்காமையினால் தமிழர்கள் பெரும் பலம் கொண்டு செயல்பட்டதாகவும், ராட்சதர்கள் போல நாட்டை நாசமாக்கினர் என்றும் சூளவம்சம் குறிப்பிடுகிறது. இந்தக் காலகட்டத்தில் சேனனின் மரணம் நிகழ்கின்றது. அவனது இளைய சகோதரன் மஹிந்தன் கிபி 982 லிருந்து அரசனாக முடி சூடிக்கொண்டான். அந்தக் காலகட்டத்தில் அரசாட்சி சரியாக அமையாமல் உள்ளூரில் பல குழப்பங்கள் நிகழ்ந்து வந்தன.
அந்தக் காலகட்டத்தில் இந்தியாவில் இருந்து இலங்கைக்குக் குதிரைகள் விற்க வந்த ஒரு வியாபாரி, இலங்கையில் உள்ள நிலையற்ற ஆட்சித்தன்மை அப்போதைய சோழ மன்னன் ராஜராஜனுக்குக் குறிப்பிடவே, மாமன்னன் ராஜராஜ சோழன் (கி.பி 985 முதல் கி.பி 1014) இலங்கையைக் கைப்பற்றும் நோக்கத்துடன் தனது படைகளை இலங்கைக்கு அனுப்பியதாகவும், சோழர் படைகள் இலங்கை வந்து அங்கு பல கிராமங்களைத் தாக்கி இலங்கையின் பெரும் பகுதியை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்ததாகவும்,. இலங்கை மகாராணி மற்றும் அவளது அனைத்து தங்க ஆபரணங்கள், மகுடம், விலை மதிப்பில்லா வைரங்கள், முறியாத வாள், பதக்கங்கள் ஆகிய அனைத்தையும் சோழப் படைகள் கவர்ந்து இந்தியாவிற்குக் கொண்டு வந்தன என்றும், இலங்கையின் பௌத்த சின்னமாகிய தந்ததாது இருந்த கோயிலையும் சோழர் படைகள் அழித்ததாகவும் சூளவம்சம் குறிப்பிடுகிறது. விகாரைகளில் இருந்த தங்க வைர ஆபரணங்களையும் சூறையாடி அனுராதபுரத்து செல்வங்களையும் கொள்ளையிட்டு அங்கிருந்த விலைமதிப்பில்லா பொருட்களைத் தமிழகம் கொண்டு வந்ததாக சூளவம்சம் மேலும் குறிப்பிடுகிறது. இலங்கையின் பெரும்பகுதியை கைப்பற்றிக்கொண்ட ராஜராஜனின் படைகள் அனுராதபுரத்தை விட்டு பொலநருவ நகரை தனது தலைநகராக்கிக் கொண்டன. அந்த வேளை இளவரசனாக இருந்த இலங்கை மன்னனின் மகன் காசியப்பன், சோழ மன்னன் ராஜராஜனின் படைகளின் கண்களில் படாமல் மறைந்திருந்தான். அவன் விக்கிரமபாகு என்ற சிம்மாசனப் பெயரோடு ஒரு பகுதியில் முடி சூடிக் கொண்டு தனியாக ஆட்சி செய்து கொண்டிருந்தான். இடைக்கிடையே விக்கிரமபாகுவின் படைகளை வெல்வதற்குத் தமிழர்கள் படை முயற்சி செய்து கொண்டே இருந்தது. அதற்குப் பின்னர் மற்றொரு விக்கிரமபாகு என்பவன் ஆட்சியைத் தொடர்ந்ததாகவும், அதற்குப் பின்னர் லோகேஸ்வரன் என்ற சிங்கள ராணுவத் தலைவன் சோழர்களை எதிர்க்கும் பொருட்டு ஒரு படையை ஏற்பாடு செய்ததாகவும், கதிர்காமத்தில் தனது தலைமையகத்தை நிறுவியதாகவும் அறிகிறோம். ஆனாலும் சோழர் படைகளை அவர்களால் வெற்றி பெற முடியவில்லை. இலங்கையின் பெரும்பகுதியைச் சோழர் படை ஆட்சி செய்ய, ஒரு சில பகுதிகளை இலங்கை மன்னர்கள் தொடர்ந்து ஆட்சி செய்து கொண்டு வந்தனர். அந்த வரிசையில் மகிந்தன் அவனுக்கு பின்னர் புத்த ராஜா பின்னர் காசியப்பன் என்ற இலங்கை மன்னர்களின் பெயர்களைக் காண்கின்றோம்.
சோழ மன்னன் ராஜேந்திர சோழனைப் பற்றி இந்த சூளவம்சம் ஏதும் குறிப்பிடவில்லை. ராஜராஜனின் பெயரருக்குப் பின்னர் அடுத்து வருவது வீரராஜேந்திரனின் பெயர். இந்தியாவில் சோழநாட்டில் வீரராஜேந்திரன் பதவியேற்ற பின்னர் அக்காலகட்டத்தில் மீண்டும் இலங்கையில் இலங்கை மன்னர்களின் ஆட்சி மீண்டது என்பதை சூளவம்சம் வழி அறியமுடிகின்றது. ஆக, ராஜராஜனுக்குப் பிறகு இராஜேந்திர சோழனின் கலாத்தில் இலங்கை முழுமையும் சோழர்கள் ஆட்சியின் கீழ் இருந்தமையும் அதன் பின்னர் இலங்கை சிற்றரசர்கள் படிப்படியாக பலம் பெற்றார்கள் என்பதையும் அறிய முடிகிறது. சோழர்கள் ஆட்சி காலத்தில் இலங்கையில் எழுப்பப்பட்ட கோயில்களின் சிதைந்த பகுதிகளை இன்றும் பொலநருவ நகரத்தில் காணலாம். சோழநாட்டில் வீரராஜேந்திரனின் ஆட்சி காலத்தில் விஜயபாகு என்ற மன்னன் இலங்கையின் ஆட்சிப் பொறுப்பை எடுக்கிறான்.
இலங்கையில் இருந்த சோழர் படையை தோற்கடித்து இலங்கை மன்னனாக முடி சூட்டிக் கொள்கின்றான் இந்த விஜயபாகு. இவன் ஸ்ரீ சங்கபோதி என்ற அரச பெயரை ஏற்றுக்கொண்டான். முன்னர் போரில் சோழ மன்னனால் சிறைப்படுத்தப்பட்டு இந்தியாவிற்குக் கொண்டு செல்லப்பட்ட மன்னன் ஜெகதீசனின் மனைவியான பட்டமகிஷியின் மகள் லீலாவதி சோழ நாட்டிலிருந்து தப்பி இலங்கை வந்து வீரபாகுவுக்கு தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டாள். வீரபாகு லீலாவதியை தன் பட்டத்து ராணியாக ஏற்றுக் கொண்டான்.
விஜயபாகுவிற்கு மித்ரா என்ற ஒரு இளைய சகோதரி இருந்ததாகவும், அப்போதைய சோழ மன்னன் அதாவது வீரராஜேந்திரன் அவளை மணந்து கொள்ள விழைந்த போது விஜயபாகு அதனை மறுத்து விட்டு பாண்டிய வம்சத்தில் வந்த இளவரசன் ஒருவருக்கு அவளை திருமணம் செய்து வைத்ததாகவும் சூளவம்சம் குறிப்பிடுகிறது.
இலங்கை மன்னன் விஜயபாகு பல சமூக பணிகளைச் செய்ததாகவும், பல பௌத்த விகாரைகளைச் சீரமைத்ததாகவும், தடைகளை மிக நேர்த்தியாக விரிவாக்கி நாட்டினைத் திறம்பட ஆட்சி செய்ததாகவும் சூளவம்சம் குறிப்பிடுகிறது. வீரபாகு 55 ஆண்டுகள் இலங்கை மன்னனாக ஆட்சி புரிந்தான். அவனுக்குப் பின்னர் அரச வம்சத்தைச் சேர்ந்த சிலர் தொடர்ச்சியாக ஆட்சி செய்து வந்தனர்.
அந்தக் காலகட்டத்தில் மானவர்மன் என்ற மன்னன் ஆட்சியில் இருந்ததாகவும் அவருக்கு ஒரு குழந்தை பிறந்ததாகவும், அந்த இளவரசனே இலங்கையின் புகழ்மிக்க மன்னன் பராக்கிரமபாகு என்பதையும் சூளவம்சம் குறிப்பிடுகிறது.
பராக்கிரமபாகுவைப் பற்றி அடுத்த பதிவில் தொடர்கிறேன்.
தொடரும்..
சுபா

Sunday, April 28, 2019

சூளவம்சம் - நூல் வாசிப்பு - 3


சூளவம்சம் - நூல் வாசிப்பு
நூலாசிரியர் - முனைவர்.க.குணராசா



பதிப்பு - கமலம் பதிப்பகம், யாழ்ப்பாணம்

மானவர்மனுக்கும் தமிழகத்தை ஆண்ட பல்லவ மன்னன் நரசிம்மனுக்கும் நல்ல நட்புறவு இருந்தது என்று முந்தைய பதிவில் குறிப்பிட்டிருந்தேன்.  முதலாம் நரசிம்மவர்மன் முதலாம் மகேந்திரவர்மனின் மகன். இவனது ஆட்சிக்காலம் கிபி.630லிருந்து 668 வரையாகும். தனது தந்தை மகேந்திரவர்மப் பல்லவன் போலவே சிறப்புமிக்க கோயில்களைத் தமிழகத்தில் அமைத்தவன் என்பதோடு வாதாபியை ஆட்சி செய்துகொண்டிருந்த சாளுக்கியரோடு போரிட்டு வென்றவன் என்ற சிறப்பும் பெற்றவன்  பல்லவ மன்னன் முதலாம் நரசிம்மன்.

இந்த மானவர்மன் என்பவன் முன்னர் நான் குறிப்பிட்ட இலங்கை மன்னன்காசியப்பனின் மகன். அடைக்கலம் வேண்டி இந்தியாவிற்குத் தப்பி ஓடிவந்த மானவர்மன், பல்லவமன்னன் நரசிம்மனிடம் தஞ்சம் புகுந்தான். பல்லவ மன்னன் நரசிம்மன் மாவர்மனைத் தனது படை பிரிவுகளில் ஒன்றின் தளபதியாக நியமித்திருந்தான். மானவர்மன் திருமணம் முடித்து அவனுக்கு நான்கு புதல்வர்களும் இருந்தார்கள். பல்லவ மன்னன் நரசிம்மன்  மானவர்மனுடன் மிகுந்த நட்புறவில் இருந்தான். நரசிம்மனின் படையில் தலைமையேற்று ஒரு போரில் மிகப்பெரிய வெற்றியைத் தேடித் தந்தான் மானவர்மன்.   வெற்றியை மானவர்மன் ஈட்டித் தந்ததமைக்குப் பரிசாக ஏதாவது செய்ய வேண்டும் என நினைத்த நரசிம்மன், ஒரு படையினை இலங்கைக்கு அனுப்பி வைத்தான். மானவர்மனும் உடன் சென்றான். கடுமையான போர் நடந்தது.  ஆனால் வெற்றி பெற முடியாது தப்பியோடி மீண்டும் தமிழகம் வந்து சேர்ந்தான் மானவர்மன்.  நீண்ட காலம் கழித்து மீண்டும் பல்லவன் நரசிம்மன் மற்றொரு படையை ஏற்பாடு செய்து மானவர்மனை உடன் அனுப்பி   இலங்கையைக் கைப்பற்ற முயற்சி செய்தான் பல்லவ மன்னனின் கப்பற்படை இலங்கை நோக்கி சென்றது. மானவர்மனும் அப்படையில் இணைந்து சென்றான். பயங்கரமான போர் நடைபெற்றது. அதன் இறுதியில் மானவர்மனின் படை வெற்றி கண்டது. மானவர்மன் அனுராதபுரத்தின் மணிமுடியை அணிந்து கொண்டான். அதன் பின்னர் ஏறக்குறைய 35 ஆண்டுகள் மானவர்மன் தொடர்ந்து இலங்கை மன்னனாக ஆட்சி செய்தான். அவன் ஆட்சி காலத்தில் இலங்கையின் பல பௌத்த விகாரைகளைத் திருத்தி அமைத்ததோடு விவசாயத்திற்கு நீர்பாசன குளங்களையும் ஏரிகளையும் வெட்டி விவசாயத்தை வளர்ச்சியுறச் செய்தான்.

மானவர்மனின் மறைவிற்குப்  பிறகு அவனுடைய மகன் காசியப்பன்,   அவனுக்குப் பிறகு மகிந்தன் ஆகியோர் ஆட்சி செய்ததை சூளவம்சம் குறிப்பிடுகிறது.

மகிந்தன் மரணமடைந்தபோது அவனது மகன்  ஆட்சிப் பொறுப்பை எடுத்துக் கொண்டான். அடுத்த சில ஆண்டுகளில் மீண்டும் மாறி மாறி பல மன்னர்கள் தொடர்ச்சியாக இலங்கையின் ஆட்சி பீடத்தில் இருந்தார்கள். சேனன், உதயன், மகிந்தன்,  அக்கபோதி என தொடர்ச்சியாக வெவ்வேறு அரசர்களின் ஆட்சிக்கு உட்பட்டது இலங்கை.

அடுத்து சேனன் என்ற மன்னன் ஆட்சி செய்து கொண்டிருந்த போது தமிழகத்தை ஆண்ட பாண்டிய மன்னன் ஸ்ரீமாற ஸ்ரீவல்லபன்  (கி.பி. 815-862) பெரும்படையுடன் இலங்கையைக் கைப்பற்றும் நோக்கத்துடன் வந்தான். இலங்கையின் வடபகுதி அனைத்தையும் வெற்றி கண்டு தன் ஆட்சிக்குக் கீழ் கொண்டு வந்தான்  பாண்டிய மன்னன் ஸ்ரீமாற ஸ்ரீவல்லபன்.  இலங்கையின் வடபகுதியில் மகாதாலிதகமத்தில் பாசறை அமைத்தான். தமிழ் மக்கள் பலர் அவனது ஆட்சியின் கீழ் அரசியலில் இடம் பெற்றனர். அதனால் பாண்டிய மன்னனின் படை பலம் பொருந்தியதாக ஆகியது அதே வேளை இலங்கையின் மத்திய மற்றும் தெற்குப் பகுதிகளில் இலங்கை மன்னர்களின் ஆட்சி தொடர்ந்தது. சேனன் அப்போது நடந்த போரில் தோல்வி கண்டு மலையகத்திற்குத் தப்பி ஓடினான்.

பாண்டிய மன்னனின் படை படிப்படியாக அனுராதபுரத்தைக் கைப்பற்றிக் கொண்டது. பாண்டிய மன்னனின் படை அரண்மனையில் இருந்த எல்லா செல்வங்களையும் சூறையாடியதோடு, விகாரைகளில் இருந்த தங்கத்தினாலான புத்தரின் சிலைகளையும், செல்வங்களையும் சூறையாடி எடுத்துக்கொண்டது. தங்க நகைகள், வைரங்கள் தூபராமசேத்தியத்தின் பொன் கூரை, பௌத்த சமய சின்னங்கள் என அனைத்தையும் எடுத்துக் கொண்டு தமிழகம் திரும்பியது பாண்டியனின் படைகள். இதனால் மனம் வருந்திய சேனன்,  தான் பாண்டிய மன்னனுக்குக் கீழ் திறைதரும் மன்னனாக இருக்க சம்மதித்துஇரண்டு யானை அம்பாரிகளில் பல பரிசுப் பொருட்களை அனுப்பி வைத்தான். பாண்டிய மன்னனும் இதனை ஏற்றுக்கொண்டு  சேனனை இலங்கையின்  திறை செலுத்தும் மன்னனாக  இருக்கச் சம்மதித்து,  ஆட்சியையும் கொடுக்கச்  சம்மதித்தான். சேனனின் ஆட்சி இலங்கையில் தொடர்ந்தது.

சேனன் மரணமடைந்ததும் அடுத்ததா, சேனன் என்ற மற்றொருவன் கிபி 853 லிருந்து 887 வரை இலங்கை மன்னனாக ஆட்சி செய்தான். அவன் காலத்தில் பாண்டிய மன்னர்களை பழி வாங்குவதற்காக திட்டமிட்டான். அப்போது தமிழகத்தில்  ஆட்சியில் இருந்த ஸ்ரீமாற ஸ்ரீவல்லபன் பாண்டியனுக்கு எதிராக செயல்பட்ட அவனது மகனான வரகுணபாண்டியன் தந்தைக்கு எதிராக கலகம் செய்து புகலிடம் தேடி இலங்கைக்கு சேனனிடம் வந்து அடைக்கலம் புகுந்தான். அதுவே நல்ல சமயம் என திட்டமிட்ட சேனன், தனது சேனாதிபதியை அழைத்து பாண்டி நாட்டின் மீது படையெடுத்துச் சென்று பாண்டிய மன்னனைக் கொன்று வரகுனை சிம்மாசனத்தில் அமர்த்துமாறு தனது படையினருக்குக் கட்டளையிட்டான்.

கடும் யுத்தம் நடந்தது. பாண்டியமன்னன் ஸ்ரீமாற ஸ்ரீவல்லபன் போரில் கொல்லப்பட்டான். வரகுணனை பாண்டிய மன்னனாக முடிசூட்டி விட்டு இலங்கைக்கு படை திரும்பியது. ஆனாலும் படையைச் சார்ந்த தளபதிகள்  சிலர் தமிழகத்தின் ராமநாதபுரம் பகுதிகளில் தொடர்ந்து தங்கியிருந்தார்கள் என்றும் தெரிகிறது.  பாண்டியர்கள் இலங்கையிலிருந்து சூறையாடிச் சென்ற தங்க புத்தர் சிலைகளை மீண்டும் தமிழகத்தில் இருந்து கொண்டு வந்து ஆலயங்களில் நிறுவினான் மன்னன் சேனன். இவன் தொடர்ந்து  மன்னனாக இலங்கையில் ஆட்சியில் இருந்தான். அதன் பின்னர் உதயன் என்பவன், காசியப்பன் என்பவன் என இலங்கை ஆட்சி தொடர்ந்தது.

அடுத்து தப்புலன் அரசனாக முடிசூட்டிக் கொண்டான். இவனது காலம் கிபி 924 லிருந்து 935 வரை. அதே சமயத்தில் தமிழகத்தில் பாண்டிய மன்னன் இரண்டாம் இராஜசிங்கன் சோழர்களால் விரட்டப்பட்டு இலங்கைக்கு வந்து சரண் அடைந்தான். தப்புலன் பாண்டியனுக்கு   உதவி செய்ய நினைத்தாலும் அவனது அரசின் அதிகாரிகள் இதற்கு இணங்கவில்லை. ஆகையால் பாண்டிய மன்னன் தனது  சிம்மாசனம் மற்றும் சில அரச முத்திரை சின்னங்களையும் மன்னனிடம் பாதுகாப்பாக ஒப்படைத்துவிட்டு சேர நாட்டிற்குச் சென்று தஞ்சமடைந்தான்.

சேனனுக்குப் பிறகு உதயன் என்பவன் மன்னனானான். அவனுக்குப் பின் மேலும் சேனன் என்னும் மற்றொருவன் மன்னனானான். இவனது காலம் கிபி 956 லிருந்து 972 வரை. இவன் கலிங்கத்து  இளவரசி ஒருத்தியை திருமணம் செய்து கொண்டான்.

சூளவம்சம் குறிப்பிடும் செய்திகளைக் காணும், போது பாண்டிய மன்னர்களின் அரச சின்னங்கள் குறிப்பிட்ட சில ஆண்டுகள் இலங்கையில் இருந்ததை உறுதி செய்வதாகவே அமைகின்றது. அதுமட்டுமின்றி, சோழ மன்னர்கள் தமிழகத்தில் பலம் பெற்ற போது அதன் தாக்கம் இலங்கையிலும் எதிரொலிக்கத் தொடங்கியது. இதனைப் பற்றி அடுத்து காண்போம்.!

தொடரும்.
-சுபா

Saturday, April 27, 2019

சூளவம்சம் - நூல் வாசிப்பு - 2

*பகுதி 2  - தொடர்கின்றது.*

சூளவம்சம் - நூல் வாசிப்பு
நூலாசிரியர் - முனைவர்.க.குணராசா

பதிப்பு - கமலம் பதிப்பகம், யாழ்ப்பாணம்


சூவம்சம்  கூறும் மன்னர்கள் பரம்பரை பற்றிய செய்தியில் மீண்டும் மீண்டும் சில பெயர்கள் வருவதைக் காணலாம். உதாரணமாக, காசியப்பன் அக்கபோதி, சேனன் போன்ற பெயர்கள் மீண்டும் மீண்டும் இடம்பெறுகின்றன. அதேபோல பராக்கிரமபாகு, விக்கிரமபாகு என்ற பெயர்களும் ஒரு முறைக்கு மேல் இடம்பெறுகின்றன.  இப்பெயர்களைக் கவனிக்கும் போது இவை சிங்கள பெயர்களா அல்லது தமிழ் பெயர்களா என்ற மயக்கம் ஏற்படுவதைத் தவிர்க்க இயலவில்லை. ஆயினும் சூளவம்சம் பொதுவாகவே சிங்கள மன்னர்களை மட்டுமே இலங்கை மன்னர்களாக எடுத்துக்கொண்டு இந்த நூலில் கையாள்கிறது. எப்போதெல்லாம் தமிழர்கள்இலங்கையில் ஆட்சியைக் கைப்பற்றினாலும் அல்லது சிங்கள படையில் பதவி வகித்தாலும், அல்லது தமிழகம் போன்ற நாடுகளில் இருந்து இலங்கைக்கு வந்தாலும் அதனை தெளிவாக குறிப்பிட்டுச் சொல்கிறது. ஆக சூவம்சம் முதன்மைப்படுத்துவது இலங்கை சிங்கள மன்னர் பரம்பரையையே என்பது உறுதிப்படுகிறது.

மகாவம்சத்தில் இறுதியாக இடம் பெறும் மகாசேனனின் 27 ஆண்டு ஆட்சி, அதாவது கி.பி 361ல் அவன் ஆட்சி முடிய, அவனது மகன் ஸ்ரீ மேகவண்ணன் ஆட்சியைக் கையில் எடுக்கின்றான். அவன் முடிசூடிக்கொண்ட செய்தியிலிருந்து சூளவம்சத்தின் முதல் அத்தியாயம் தொடங்குகிறது. அந்த காலகட்டத்தில் அனுராதபுரம் இலங்கை அரசின் தலைநகராக விளங்கியது. அப்போது தேரவாத பௌத்த சிந்தனைகளைக் கடைப்பிடிக்கும் மகாவிகாரை பிக்குகளும், மகாயான பௌத்த சிந்தனைகளைத் தொடரும் அபயகிரி விகாரை பிக்குகளும் இக்காலகட்டத்தில் சமநிலையில் இருந்திருக்கின்றன. பௌத்தத்தின் இந்த இரண்டு உட்பிரிவுகளும் பெருத்த வேறுபாடுகளுடனே அப்போது கடைப்பிடிக்கப்பட்ட நிலையும் தெரியவருகின்றது. இதில் மகாசேனன் மகாயான தத்துவத்தைக் கடைபிடித்தவன்.

மகாசேனுக்குப் பிறகு அவரது மகன் ஸ்ரீ மேகவண்ணன் மன்னனாக முடிசூட்டிக் கொண்டான். அவன் தனது தந்தை புறக்கணித்த தேரவாத பௌத்தத்தை முன்னெடுத்தான். அவனுக்கு அடுத்து ஜெட்டதீசன் கிபி 331 லிருந்து 339 வரை ஆட்சியில் இருந்தான். அவன் ஸ்ரீ மேகவண்ணனின் சகோதரனின் கடைசி மகன். ஒன்பது ஆண்டுகள் ஆட்சிக்குப் பிறகு தனது மகன் புத்ததாசனிடம் ஆட்சியை ஒப்படைத்து அவன் மரணமடைந்தான். அவனுக்குப் பின்னர் அவனது மகன் உபதேசன் ஆட்சியை எடுத்துக் கொண்டான். நல்ல குணங்கள் கொண்ட மன்னனாக இவன் விவரிக்கப்படுகின்றான்.

புத்ததாசனுக்குப் பின்னர் அவன் மகன் உபதேசன் அரியனை ஏறினான். உபதேசனின்  மனைவியுடன் தகாத உறவு வைத்திருந்த அவனது தம்பி மகாநாமன் மன்னனைக் கொன்றுவிட்டு ஆட்சியைக் கைப்பற்றிக் கொண்டான். இவனுக்கு இரண்டு மனைவியர்- ஒருவர் சிங்களப் பெண். மற்றொருவர் தமிழ் பெண். தமிழ் பெண்ணுக்குப் பிறந்த சொத்திசேனன் என்பவன் மகாநாமனின் இறப்புக்குப் பின்னர் ஆட்சியைக் கையில் எடுத்துக் கொண்டான். ஆனால் அன்று இரவே தனது தந்தையின் முதல் மனைவிக்குப் பிறந்த சிங்கள வம்சாவளிப் பெண் சம்ஹாவின்  காதலனால் கொல்லப்பட்டான். அவளது காதலன் அரசனானான். பின் அவனும் இறந்து போனான். பின் தாதுசேனன் என்பவன் ஆட்சிபீடத்தை ஏற்றான்.

அந்த சமயத்தில் தமிழகத்திலிருந்து படையுடன் வந்த பாண்டு என்ற தமிழ் மன்னன் இலங்கையில் போர் தொடுத்து  அனுராதபுரத்தை கைப்பற்றிக்கொண்டான். ஐந்து ஆண்டுகள் இந்த தமிழ் மன்னன் பாண்டுவின் கீழ் இலங்கை ஆட்சி இருந்தது. பாண்டு என்பது ஒரு பாண்டிய சிற்றரசனாக  இருக்க வேண்டும். அவன் ஐந்தாண்டுகளில் மரணமடைய அவனது மகன் பாரிந்தன் முடிசூடிக் கொண்டான். மூன்றாண்டுகளில் அவனும் மரணமடைந்தான்.  இந்தக் காலகட்டத்தில் தாதுசேனன்  பாண்டிய ஆட்சிக்கு எதிராக படை திரட்டிக் கொண்டு வந்து தாக்கினான். அதில் வெற்றியும் பெற்றான். இலங்கை முழுவதையும் கைப்பற்றி கொண்டு கிபி 459 லிருந்து 477 வரை மன்னனாக ஆட்சி செய்தான். இக்காலகட்டத்தில் நீர்ப்பாசன வசதிகளைச் செய்து இலங்கையில் விவசாயத்தைச் செழிக்க வைத்தான்.

அவனுக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். முதலில் மகன் மொகல்லானன் பட்டத்துக்கு வந்தான். குடும்ப சண்டையினால் அவன் தப்பி ஓடவே இரண்டாவது மகன் காசியப்பன் மன்னனாக அரியணை ஏறினான். காசியப்பன் கி.பி 477 இலிருந்து கி.பி 495 வரை ஆட்சி செய்தான்.

முன்னர் தப்பி ஓடிய  மொகல்லானன்  பதினெட்டு வருடம் கழித்து இந்தியாவில் இருந்து ஒரு படையையும் சேர்த்துக் கொண்டு இலங்கை திரும்பினான். போர் நடைபெற்றது. அதில் காசியப்பன் கொல்லப்பட்டு மொகல்லானன்  அரியணை ஏறினான். அவனுக்குப் பின்னர் அவனது மகன் குமாரதத்துசேனன் என்பவன் மன்னனானான். அதன் பிறகு அவனது மகன் கீர்த்திசேனன் அரியணை அமர்ந்தான். அவன் ஒன்பது மாதத்தில் அவனது மாமன் சிவா என்பவனால் கொலை செய்யப்பட்டான். சிவாவின் ஆட்சியும் குறுகிய காலமே இருந்தது. இப்படியே செல்கிறது இலங்கை மன்னர்களின் அடுத்த இருநூறு ஆண்டு கால வரலாறு.

ஹத்ததாடன் என்பவன் கி.பி 659 இலிருந்து 667 வரை அரசனாக இருந்தான். அதன் பின்னர் மீண்டும் சில ஆண்டுகளில்  கலவரம்  ஏற்படவே, அதன் பின்னர் ஸ்ரீ சங்கபோதி கி.பி.667 லிருந்து 683 வரை ஆட்சி செய்தான். அப்போது இலங்கை முழுவதும் பௌத்த சமயம் பரவியிருந்தது. தமிழ் சேனாதிபதி ஒருவன் பௌத்த விகாரைக்கு மண்டபங்களை அமைத்து கொடுத்தமையையும் சூளவம்சம் குறிப்பிடுகிறதுஸ்ரீ சங்கபோதி ஆட்சிக்காலத்தில் புலத்தி (பொலநறுவை) தலைநகரமாக விளங்கியதுஸ்ரீ சங்கபோதியின் மறைவுக்குப் பிறகு பிரதம அமைச்சராக இருந்த பொத்தகுட்டன் என்ற தமிழ் அதிகாரி ஆட்சியைக் கைப்பற்றிக் கொண்டான். பின் அவனும் கொல்லப்பட்டான். அதன் பின்னர் மானவர்மன் அரியணை ஏறினான். மானவர்மன் சமகாலத்தில் தமிழகத்தை ஆட்சி செய்த நரசிம்ம பல்லவ மன்னனுடன்  நெருக்கமான உறவு கொண்டவன். அது தொடர்பான செய்திகளை அடுத்த பதிவில் சொல்கிறேன்.

தொடரும்...

Friday, April 26, 2019

சூளவம்சம் - நூல் வாசிப்பு

நூலாசிரியர் - முனைவர்.க.குணராசா

பதிப்பு - கமலம் பதிப்பகம், யாழ்ப்பாணம்

(பகுதி 1)


இலங்கை வரலாற்றைக் கூறும் முக்கிய நூல்களுல் மகாவம்சம் சிறப்பிடம் பெறுகின்றது. மகாவம்சம் என்ற நூலுடன் சூளவம்சம் என்ற நூலும் வரலாற்றுச் செய்திகளை வழங்கும் முக்கிய நூலாக கருதப்படுகின்றது. அடிப்படையில் தீபவம்சம் என்ற நூலின் திருத்தப்பட்ட வடிவமே மகாவம்சம் என்ற நூலாகும். இதனை எழுதிய ஆசிரியராக மகாநாமதேரர் என்பவர்.

 தீபவம்சம்  என்னும் இந்த நூல் சொல்லும் செய்திகள் 100 பகுதிகளாக அமைந்தவை.  தீபவம்சம் என்ற மூல நூலில் குறிப்பிடப்படும் 37 அத்தியாயங்கள் மகாவம்சத்தில் அடங்கியுள்ளனதீபவம்சம்  முழுமையாக பாளி மொழியில் எழுதப்பட்டதாகும்தீபவம்சம் என்ற இந்தப் பாளி மொழியில் அமைந்த நூலை மொழி பெயர்த்தவர்  வில்லியம் கெய்கர் ஆகும். முதல் 37 பகுதிகளைக் கொண்டு அமைக்கப்பட்ட நூலாக மகாவம்சம் என்ற பெயருடன் முதற்பகுதி விளங்குகின்றது எஞ்சிய பகுதிகள் அதாவது 38 ஆம் பகுதி தொடங்கி 100 ஆவது அத்தியாயம் வரையான தொகுப்பு சூவம்சம் என்று பெயருடன் விளங்குகின்றது.  இது தவிர ஜோர்ஜ் ரேனர் என்பவர் தீபவம்சம் நூலில் உள்ள நூறு அதிகாரங்களையும் மகாவம்சம் என்ற பெயருடன் மொழிபெயர்த்தார் என்பதும் நூல் வழங்கும் செய்தி

வில்லியம்  கெய்கர்  பாளி மொழியில் அமைந்த தீபவம்சம் நூலை ஜெர்மானிய மொழிக்கு  மொழி பெயர்ப்பு  செய்தார் பின்னர் அது ஆங்கில மொழிக்கு மொழிமாற்றம் செய்யப்பட்டது. ஆனால்   ஜோர்ஜ் ரேனர்   பாளியிலிருந்து நேரடியாக ஆங்கில மொழிக்கு மொழி பெயர்த்துள்ளார்.

வில்லியம் கெய்கர் மொழிபெயர்த்து வழங்கிய முதல் 37 பகுதிகளைக் கொண்ட மகாவம்சம், கௌதம புத்தரின் இலங்கைக்கான பயணத்தை  முதலாவது அத்தியாயமாகக் கொண்டு தொடங்குகின்றது. அதாவது கி.மு. 483 லிருந்து கி.பி. 362 ஆம் ஆண்டு வரை அமைந்த வரலாற்றுச் செய்திகளை விவரிப்பதாக இந்த முதல் 37 பகுதிகளிள் அமைகின்றது. மகாவம்சத்தின் அடிப்படையில் விஜயன் முதலாவது மன்னனாக அறியப்படுகின்றான். மகாவம்சம் நூலின் 58ஆவது மன்னனாக மகாசேனன் என்பவன் குறிப்பிடப்படுகின்றான். இதன் தொடர்ச்சியாக, அதாவது 37ஆவது அத்தியாயம் தொடங்கி 100வது அத்தியாயம் வரை அமைகின்ற சூளவம்சம் நூல், மகாசேனனின் மகன் மேகவண்ணன்ஆட்சி காலம் முதல் தொடங்குகின்றது. அவனது ஆட்சி ஆண்டு கி.மு 362 முதல் இறுதி மன்னனான ஸ்ரீ விக்ரமசிங்கனின் ஆட்சி காலமான கி.பி.1815 வரையிலான மன்னர்களைப் பர்றி சூளவம்சம் சொல்கின்றது.

மகாவம்சம் நூலில் முக்கியத்துவம் வழங்கப்படும் மாமன்னனாக மாமன்னன் துட்டகாமினி குறிப்பிடப்படுகின்றான். சூளவம்சம் நூலில்  முக்கியத்துவம் பெறுகின்ற மன்னனாக பராக்கிரமபாகு குறிப்பிடப்படுகின்றான்.

மகாவம்சம் நூலை தமிழ் மொழிக்கு மொழி பெயர்த்த முனைவர் கா. குணராசா அவர்களே சூளவம்சம் கூறுகின்ற வரலாற்றுச் செய்தியையும் தமிழில் மொழிபெயர்த்து வழங்கியிருக்கின்றார். அவற்றுள் பராக்கிரமபாகு தொடர்பான செய்திகள் நான்கு அத்தியாயங்களில் அமைகின்றன. 

சூளவம்சம் நூலை முழுதும் வாசிக்கும்போது இலங்கை மன்னர்கள் ஆட்சியில் தொடர்ச்சியான மன்னர் பாரம்பரியம் என்ற நிலைக்கே வாய்ப்பில்லை என்பதை தெளிவுபடுத்துகின்றது. தொடர்ச்சியான போர், நிலையற்ற அரசு, சகோதரர்களுக்குள் பிரிவு, சகோதரர்களுக்குள் துரோகம், தந்தையை கொல்லும் மகன், மன்னரை வீழ்த்திவிட்டு பதவியை கைப்பற்றும் சேனாதிபதிசில நூற்றாண்டுகளுக்கு பின்னர் மீண்டும் வந்து ஆட்சியைக் கைப்பற்றும் வாரிசுகள்,  கொடூரமான தண்டனைகள், பெண்கள் அசியல் ரீதியாக நட்புறவை நாடுவதற்காகத் திருமணத்தில் பயன்படுத்தப்பட்ட வரலாற்றுச் செய்திகள், பௌத்தத்தின் எழுச்சி, 3 வகை பௌத்த நெறிகள்,  தமிழகத்தை ஆண்ட  மன்னர்கள் ஏற்படுத்திய தாக்கம், பாண்டிய மன்னர்களுக்கும் இலங்கை அரசுக்கும் இருந்த நெருக்கமான தொடர்பு, சோழமன்னர்கள் ஏற்படுத்திய போர், அதனால் விளைந்த விளைவு, போர்ச்சுகீசிய மற்றும் டச்சுக்காரர்கள் வணிகத்திற்காக வந்து பின்னர் படிப்படியாக இலங்கைத் தீவு முழுமையும் அந்நியர்களின் கைக்கு மாறிய வரலாறு என்று சூவம்சம் வரலாற்றுச்செய்திகளைப் பதிந்து தருகின்றது, பெரும்பாலான செய்திகள் வரலாற்றுக் குறிப்புகள் என்று எடுத்துக் கொண்டாலும் கூட, ஆங்காங்கே கற்பனைக் கதைகள் புகுத்தப்பட்டிருக்கின்றன என்பதையும் காணமுடிகின்றது.

சூளவம்சம் பற்றிய இந்த அறிமுகத்தோடு தொடர்ச்சியாக சூளவம்சம் நூல் சொல்லும் வரலாற்றை சிறு பகுதிகளாகத் தொடர்ந்து வழங்குகிறேன்.

-சுபா