Sunday, May 28, 2017

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 119

சாதி ரீதியாக யார் வீட்டில் யார் சாப்பிடலாம் என்ற சமூகப்பிரிவினை மிகக் கண்டிக்கத்தக்கது. உயர்ந்த சாதி எனத் தம்மை அடையாளப்படுத்திக் கொள்வோரில் பலர் தாழ்ந்த சாதி என அடையாளப்படுத்தப்படுவோர் இல்லங்களில் உணவருந்துவதில்லை. சிலர் இன்னமும் அதிகமாக அதனைப் பாவச் செயல் என்றும் சொல்லி சமூகத்தில் ஏற்றத்தாழ்வினையும் பிரிவினையையும் ஏற்படுத்தி வருகின்றனர். சில நாட்களுக்கு முன்னர் நாம் செய்தி ஊடகங்களின் வழியே கேள்விப்பட்ட அரசியல்வாதி திரு.எடியூரப்பா போன்றவர்கள் இன்றும் கூட வெளிப்படையாக இந்தப் பிரிவினைவாதப்போக்கினை நடைமுறையில் கையாள்கின்றனர் என்பது, "காலம் மாறிவிட்டதே, இப்போது எங்கே சமூகத்தில் ஏற்றத்தாழ்வு?" எனச் சொல்லிக் கொள்வோருக்கும் கூட அதிர்ச்சியைக் கொடுக்கின்றது அல்லவா? 

தமிழ்ச் சமூகத்தில் படிப்படியான சீர்திருத்தங்கள் ஏற்பட்டுள்ள இந்த நிலையில் கூட சாதி பாகுபாடுகளும், மனிதரை மனிதரே தாழ்த்தியும் உயர்த்தியும் பேசிப்பழகும் நிலை இருக்கின்றதென்றால், இன்றைக்கு சில நூறு ஆண்டுகளுக்கு முன்னர் சமூகப்பிரிவினையின் ஆளுமை என்பது இன்னமும் பல மடங்கு அதிகமாக இருந்திருக்கும் என்பதை நம்மால் ஊகிக்க முடியும்.என் சரித்திரம் நூலில் சில உரையாடல்கள் அதற்குச் சான்று பகர்கின்றன. ஓலைச்சுவடி தேடுதல் நடவடிக்கை, பழந்தமிழ் நூல் அச்சாக்கம் என்ற விசயங்கள் ஒருபுறமிருக்க, அக்காலத்துச் சமூக நிலவரங்களையும் என் சரித்திரம் நூல் பதிந்துள்ளதால் அவற்றையும் கவனித்துச் செல்வது தேவை என்றே கருதுகின்றேன். 

உ.வே.சா சுவடி நூல்களைத் தேடிச் செல்லும் போது அவர் செல்லும் ஊர்களில் அவர் உணவு சாப்பிடுவதற்காக அவருக்கு ஏற்பாடு செய்யப்படும் வீடுகள் ஐயர் சமூகத்து வீடுகளாகத்தான் இருந்தன என்பதை நூலை வாசிக்கும் பொழுது பல இடங்களில் அவரது பதிவுகளின் வழியே அதனை அறிய முடிகின்றது. அவர் ஒரு செய்தியாக மட்டுமே இதனைப் பதிகின்றார் என்று தான் குறிப்பிட வேண்டும். உதாரணமாகச் சிலப்பதிகாரம் ஓலைச்சுவடியைத் தேடிக் கொண்டு திருநெல்வேலிக்குச் சென்று, அங்கிருந்து ஸ்ரீவைகுண்டம் செல்கின்றார். அங்கும் தனக்குத் தேவையான நூல்கள் கிடைக்காமல் தன் பயணத்தை மேலும் தொடர்ந்தார். "ஆறுமுக மங்கலம் என்ற ஊரில் கற்றவர்கள் இருக்கின்றார்கள், ஓலைச்சுவடி கிடைக்கும்", என சிலர் கூற, அங்குச் சுந்தரமூர்த்திப்பிள்ளை என்பவரின் தொடர்பு கிடைக்கின்றது. சுந்தரமூர்த்தி பிள்ளை அங்குள்ள அக்கிரகாரம் ஒன்றில் உ.வே.சாவிற்குச் சாப்பாட்டிற்கு ஏற்பாடு செய்தார் என்று உ.வே.சா குறிப்பிடுகின்றார். இன்றைக்கு 150 ஆண்டுகளுக்கு முன்னர் சைவப்பிள்ளைமார் இல்லங்களில் ஐயர்மார் சாப்பிடுவது வழக்கமில்லை என்பதை அறிகின்றோம். ஆக, உணவு எனும் போது தமது சொந்த சாதிக்குழுமத்தில் மட்டுமே உணவு உண்ணும் பழக்கம் கடந்த நூற்றாண்டு வரை வழக்கத்தில் இருந்திருக்கின்றது என்பதைக் காண முடிகின்றது. இன்றைய தலைமுறையினருக்கு இது ஆச்சரியமளிக்கும் ஒரு தகவலாக அமையலாம் என்றாலும்கூட இச்செய்திகளையும் அறிந்திருப்பதும் அவசியம் என்றே கருதுகிறேன். 

உ.வே.சா சிலப்பதிகாரச் சுவடி நூல் தேடிச் சென்ற சிற்றூரான ஆறுமுகமங்கலம் என்ற ஊருக்கு நான் கடந்த 2016 டிசம்பரில் சென்றிருந்தேன். சாயர்புரத்திலிருந்து கொற்கைக்குச் செல்லும் வழியில் இந்த ஆறுமுக மங்கலம் என்ற ஊரைப்பார்த்து இச்சிற்றூரைத் தாண்டிப் பயணித்தேன். மங்கலம் என வரும் சொல் பிராமண சமூகத்தாருக்கு அரசர்களால் கொடையாக வழங்கப்பட்ட ஊர் என்பதை அறிவோம். இன்றைய நிலையில் இந்தச் சிற்றூரில் பிராமண சமூகத்தவர் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் உ.வே.சா குறிப்பிடும், அதாவது இன்றைக்கு 150 ஆண்டுகளுக்கு முன்னர், இங்குப் பிராமண சமூகத்தவர் அதிகமாக இருந்திருக்கின்றனர் என்பது தெரிகின்றது. 

ஆறுமுகமங்கலம் அக்கிரகாரத்தில் தான் உ.,வே.சாவிற்கு உணவிற்கு ஏற்பாடு செய்திருந்தார் சுந்தரமூர்த்தி பிள்ளை. சுவடிகளை அவரது வீட்டில் வாசித்து விட்டு மதிய வேளையில் உணவருந்த உ.வே.சா அங்குச் சென்று விடுவாராம். அப்படி அங்குச் செல்லும் போது தனக்கு பெரிய விருந்து உபசாரத்தை அந்த வீட்டுக்காரர் நடத்தினார் என்று உ.வே.சா குறிப்பிடுகின்றார். அப்படி விருந்தை ரசித்து உண்ணும் போது தனக்கு ஒரு கதை நினைவுக்கு வந்ததையும் உ.வே.சா குறிப்பிடுகின்றார். 

அதாவது, முன்னர் ஆண்டாள் கவிராயரென்ற பிராமண வித்துவான் ஒருவர் இந்த ஆறுமுக மங்கலம் என்ற ஊருக்கு வந்ததாகவும், அப்போது அங்கே 1008 பிராமணர் குடித்தனங்கள் இருந்ததாகவும், ஆனால் ஒருவர் கூட அவர் பசிக்கு உணவளிக்கவில்லை என்றும் அதன் காரணத்தால் கோபம் கொண்டு அந்த ஊரையும் மக்களையும் நினைத்து ஒரு வசைக்கவி பாடியதாகவும், அந்த வசைக்கவியில்... "ஆறுமுகமங்கலத்துக்கு யார் போனாலும், சோறு கொண்டு போங்கள், சொன்னேன், சொன்னேன்" என்று அந்தக் கவிதை இருக்கும் என்றும் அக்கவிதை நினைவில் வந்ததை உ.வே.சா குறிப்பிடுகின்றார். அந்தக் கவிதைக்கு நேர்மாறாக தனக்குக் கிடைக்கும் விருந்தை நினைத்து மகிழ்ந்த உ.வே.சா இதனை ஊர் மக்களிடம் சொல்ல, அவர்களோ "ஆமாம், அவர் சொல்லி விட்டுப்போன இழிவை சரிக்கட்டத்தான் நாங்கள் வருவோருக்கு விசேஷமாக விருந்து கொடுக்கின்றோம்" எனச் சொல்லியிருக்கின்றார்கள். 

இந்த ஊரில் உ.வே.சாவிற்கு நல்ல அனுபவங்கள் கிடைத்தாலும் சிலப்பதிகார முழு பிரதி கிடைக்கவில்லை. 

அங்கிருந்து திருச்செந்தூர் சென்றார் உ.வே.சா அங்கு செந்திலாண்டவரை வழிபட்டுவிட்டு ஆழ்வார் திருநகரி சென்றடைந்தார். கல்விமான்கள் பலர் இருந்த ஊர் அல்லவோ இவ்வூர். இங்கு நிச்சயம் கிடைக்கலாம் என அவர் மனம் நினைத்தது. 

அங்குச் சுப்பையா பிள்ளை என்பவருடைய வீட்டிற்குச் சென்றார். அவர் ஒரு வக்கீல். குடும்ப சொத்தாக பல சுவடிகள் அவரிடம் இருப்பதாக உ.வே.சாவிற்குத் தகவல் கிடைத்திருந்தது.தான் வந்த காரணத்தை. உ.வே.சா விளக்கினார். அதற்குச் சுப்பையா பிள்ளை, எல்லாச் சுவடிகளும் பழுதான நிலையில் இருந்தன. இடத்தை அடைத்துக் கொண்டு யாருக்கும் பிரயோசனப்படாமல் இருந்தன. அவற்றுள் என்ன எழுதியிருக்கின்றார்கள் என வாசிக்கும் திறனும் எனக்கில்லை.இந்தக் காலத்தில் இந்தக் குப்பையைச் சுமந்து கொண்டு இருப்பதில் என்ன பயன்? ஆற்றிலே ஆடிப் பெருக்கின் போது போட்டுவிடலாமென்று சில முதிய பெண்கள் சொன்னார்கள். நான் அப்படியே எல்லா சுவடிக்கட்டுக்களையும் ஆற்றில் போட்டு விட்டேன். அதிலும் தேர்போல எல்லாச் சுவடிகளையும் கட்டி ஆற்றிலே விடுவது சிறப்பு எனச் சொன்னார்கள். நானும் அப்படியே செய்தேன். சம்பிராதயப்படி அப்படிச் செய்வது நல்லதாம், எனச் சொன்னார். 

இப்பகுதியை வாசிக்கும் போது நமக்கு மனம் எப்படி அதிர்ச்சியில் உரைகின்றதோ அப்படித்தானே உ.வே.சா உணர்ந்திருப்பார்? 

உ.வே.சா சொல்கிறார், தமிழின் பெருமையைப் பாடிய பெரியோர், தமிழ் நூல்கள் நெருப்பிலும் கருகாமல், நீரிலும் அடித்துச் செல்லாமல் இருந்தனவே என்று சொன்னார்களே. ஆனால், எனது அனுபவமோ வேறு மாதிரியல்லவோ உள்ளது. மக்கள் தமிழ் நூல்களை நெருப்பிலே போட்டு கொளுத்தியிருக்கின்றனர். ஆற்று நீரில் கட்டுக் கட்டாய் சம்பிரதாயம் என்ற பெயரில் வீசியிருக்கின்றனர். எதை நம்புவது? முன்னோர் சொன்ன கதையையா? நிதர்சனமாகத் தான் காணும் உண்மை நிகழ்வுகளையா?, எனத் திகைத்து நின்றார். 

"இப்படிச் சொல்கின்றீர்களே. இது நியாயமா?" என உ.வே.சா மனம் உடைந்து கேட்டார். 

அவருடன் கூட வந்திருந்த ராசப்ப கவிராயர், தான் வந்திருந்த முன்னொரு சமயத்தில் அந்த வீட்டுக்காரர்கள் வாய்க்காலில் சில சுவடிகளை வீசிக்கொண்டிருந்ததாகவும், அதைத் தான் தடுத்து அவற்றை வீட்டில் வைக்கச் சொல்லிச் சொன்னதாகவும், அந்த சுவடிக்கட்டுக்களையாவது கொண்டு வாருங்கள், எனக் கேட்டுக் கொண்டார். 

அந்தச் சுவடிக்கட்டை அவ்வீட்டு நபர்கள் கொண்டு வந்து கொடுத்தனர். அதில் சில பகுதிகள் எலி கடித்து முன்னரே தனது ஆராய்ச்சியை முடித்திருந்தது. மிஞ்சிய பகுதியில் பார்த்தபோது திருப்பூவண நாதருலா என்ற நூலும் சிலப்பதிகார துணுக்குகள் சிலவும் கிடைத்தன. உ.வே.சாவின் மனம் பதைபதைத்தது. தான் தேடி வந்ததோ சிலப்பதிகாரத்தை. இங்கோ சில்லு சில்லாக சில பகுதிகள் மட்டுமே கிடைக்கின்றன என்றால் அந்த வீட்டில் கட்டாயம் சிலப்பதிகாரம் இருந்திருக்க வேண்டும். இந்த மக்களின் பொறுப்பற்ற தன்மையால் அது ஆற்றில் வீசப்பட்டு அழிந்திருக்க வேண்டும், என நினைத்த போது அவருக்கு மயக்கம் ஏற்பட்டது. அந்த நேரத்தை இப்படிக் குறிப்பிடுகின்றார்.

"அவற்றை பொறுக்கி எடுத்து வைத்துக் கொண்டேன். எழுத்துக்கள் தெளிவாகவும் பிழையின்றியும் இருந்தன. அவற்றைக் காணக் காண அகப்படாமற்போன ஏடுகளின் சிறப்பை நான் உணர்ந்து உனர்ந்து உள்ளழிந்தேன்."

இதைவிட தன் வேதனையை வேறு எப்படிச் சொல்ல முடியும்?

தமிழினத்திn தமிழிலக்கியங்களை அந்நிய நாட்டுப் படைகள் வந்து அழிக்கத் தேவையில்லை. தமிழ் மக்களே தாமே சம்பிரதாயம், சாத்திரம் என சாக்குப் போக்கு சொல்லிக் கொண்டு நன்றாக அழித்து விட்டோம். இனி எஞ்சியவனவற்றையாவது தேடிச் சேர்க்க முயற்சிப்போம். இல்லையென்றால் தமிழ் நம்மை மன்னிக்காது!.

Monday, May 22, 2017

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 118

நாம் உலக மாந்தர் பயன்பட வேண்டுமே என நினைத்து நமது  நேரத்தையும் உடல் சக்தியையும் முழுமையாகப் போட்டு அர்ப்பணிப்புடன் ஒரு காரியத்தைச் செய்து கொண்டிருக்கும் போது ஒரு சிலர்  அவற்றிற்குச் சேதத்தை ஏற்படுத்தினால் நம் மனம் எப்படி பாடு படும்? அப்படித்தான் உ.வே.சா வின் வாழ்விலும் ஒரு அனுபவம் ஏற்பட்டது.

தனது கல்லூரியில் விடுமுறை கிடைக்கும் நாளிலெல்லாம் ஊர் ஊராகத் திரிந்து சிலப்பதிகாரத்தின் சுவடி தேடிக்கொண்டிருந்தார் உ.வே.சா. எப்படியாவது நல்ல பிரதிகள் கிடைத்தால் தான் தனக்கு தூக்கமே வரும் என அவர் மனம் நிலைகொள்ளாது தவித்துக் கொண்டிருந்தது. ஆக மீண்டும்  கிடைத்த சிறு இடைவேளையில் பாண்டி நாட்டின் கரிவலம் வந்த நல்லூருக்குச் சென்றார். முன்னர் ஏற்கனவே சுப்பிரமணிய தேசிகருடன் அங்கு சென்றிருந்த போது வரகுண பாண்டியன் காலத்து ஏட்டுச் சுவடிகள் ஆலயத்தில் இருப்பதாக  கேள்விப்பட்டது அவருக்கு நினைவுக்கு வந்தது. கோயிலுக்குச் சென்று தர்மகர்த்தாவைப் பார்த்து விசாரிக்கலாம் என்று சென்றார். அங்கு கோயிலில் தர்மகர்த்தா இல்லை. ஆலயத்தில் பொறுப்பில் இருந்த ஒருவரை அணுகி ஓலைச்சுவடிகள் பற்றி விசாரிக்கலானார் உ.வே.சா.

அந்த மனிதரோ தனக்கு யாதும் தெரியாதென்றும் எல்லாம்  கணக்கு வழக்குச் சுருள்கள் என்றும் நூல்களும் அதில்  இருந்தனவென்றும், அவை குப்பைக்கூளங்கள் போலக் கிடந்தன என்றும்  கூறினார். குப்பையாக இருந்தாலும் பரவாயில்லை. தான் அதில் தனக்குத் தேவையானதைத் தேடி எடுத்துக் கொள்ளமுடியும் என கேட்டுப் பார்த்தார் உ.வே.சா. மீண்டும் மீண்டும் கேட்டும் கதை அளந்து கொண்டு ஓலையைப் பற்றிய செய்தியை நேரடியாகத் தெரிவிக்காமல் சுற்றி வளைத்துப் பேசிக்கொண்டிருந்தார் அந்த மனிதர். உ.வே.சாவுக்குப் பொறுக்கவில்லை. அந்த மனிதரை சுவடிகள் இருக்கும் அறைக்கு செல்லலாம் என அவசரப்படுத்தினார் உ.வே.சா அப்போது நடந்த உரையாடலை உ.வே.சா இப்படிப் பதிகின்றார்.

"அவர்: ஏன் கூப்பிடுகிறீர்கள்? அந்தக் கூளங்களையெல்லாம் என்ன செய்வதென்று யோசித்தார்கள். ஆகம சாஸ்திரத்தில் சொல்லியிருக்கிறபடி செய்துவிட்டார்கள்.

எனக்கு ஒன்றும் புரியவில்லை. “என்ன செய்து விட்டார்கள்?” என்று பதற்றத்துடன் கேட்டேன்.

“பழைய ஏடுகளைக் கண்ட கண்ட இடங்களிலே போடக் கூடாதாம். அவற்றை நெய்யில் தோய்த்து ஹோமம் செய்துவிட வேண்டுமாம்; இங்கே அப்படித்தான் செய்தார்கள்.” 

“ஹா!” என்று என்னையும் மறந்துவிட்டேன்.

“குழி வெட்டி அக்கினி வளர்த்து நெய்யில் தோய்த்து அந்தப் பழைய சுவடிகள் அவ்வளவையும் ஆகுதி செய்து விட்டார்கள்” என்று அவர் வருணித்தார். இப்படி எங்காவது ஆகமம் சொல்லுமா? ‘அப்படிச் சொல்லியிருந்தால் அந்த ஆகமத்தையல்லவா முதலில் ஆகுதி செய்ய வேண்டும்!’ என்று கோபம் கோபமாக வந்தது. பழங்காலத்திற் பழைய சுவடிகள் சிதிலமான நிலையில் இருந்தாற் புதிய பிரதி பண்ணிக்கொண்டு பழம் பிரதிகளை ஆகுதி செய்வது வழக்கம். புதுப்பிரதி இருத்தலினால் பழம் பிரதி போவதில் நஷ்டம் ஒன்றும் இராது. பிற்காலத்து மேதாவிகள் பிரதி செய்வதை மறந்துவிட்டுச் சுவடிகளைத் தீக்கு இரையாக்கும் பாதகச் செயலைச் செய்தார்கள். என்ன பேதைமை! இத்தகைய எண்ணத்தால் எவ்வளவு அருமையான சுவடிகள் இந்த உலகிலிருந்து மறைந்தன!"

நினைக்கும் போதே மனம் பதறுகின்றதே. இப்படி எத்தனை எத்தனை மூடர்களால் என்ணற்ற தமிழ்ச் சுவடிகள் அழிக்கப்பட்டனவோ என நினைக்கும் போது சாத்திரம் சம்பிரதாயம் எனப் பேசி அறியாமையில் அவலம் செய்யும் இந்த மூடர்களைச் சிறையில் அடைத்து சித்திரவதைச் செய்ய வேண்டும் என்று தான் தோன்றுகின்றது. தமிழின் கருவூலங்கள் எத்தனையோ இப்படிப்பட்ட மூடர்களால் அழிக்கப்பட்டிருக்கும் என்று நினைக்கும் போதே வருத்தத்தில் மனம் நடுக்கமடைகின்றது. உண்மையில்  இயற்கையாக அழிந்த சுவடிகளை விட இவ்வகை மூடர்களால் சாத்திரம் எனக் காரணம் காட்டிக் கொண்டு அழிக்கப்பட்ட சுவடி நூல்கள் தான் ஏராளம். 

ஆகமமும் சாத்திரமும் சொல்லியிருக்கும் செய்திகளைச் சரிவர புரிந்து கொண்டு அதன் படி செய்ய முயற்சிக்க வேண்டும். அல்லது சாத்திரங்கள் தவறான கருத்துக்களை முன் வைக்கும் போது அறிவுக்கு அக்கருத்து உகந்ததா என யோசித்துக் காலத்துக்கு ஒவ்வோதனவற்றை உதறித்தள்ளிவிட துணிய வேண்டும். ஆனால் பலர் இப்படி செய்வதில்லை. நினைப்பதுமில்லை. கண்களை மூடிக்கொண்டு இது தான் சம்பிரதாயம், இதுதான் சாத்திரம். இதனை மீறினால் அது  பண்பாட்டுக்கும் தாம் சார்ந்திருக்கும் மதத்திற்கும் அவமதிப்பதாகும் என சாடிக் கொண்டிருப்பர். ஒரு சாமியார் சொன்னால் தன் பிள்ளையயே வெட்டிக்கொடுத்து சமைத்து சாமிக்குப் படையலிடத் துணியவேண்டும் எனச் சொல்கின்ற கருத்துக்களையும் கேள்வி கேட்காமல் புகழ்ந்து பேசும் மடமை இன்னமும் இருக்கத்தானே செய்கின்றது. கருணையே வடிவான இறையருள் இப்படி ஒரு கொடுமையை நாமே செய்யவேண்டுமென்று வந்து கேட்குமா? என்று கொஞ்சம் இருக்கின்ற புத்தியைப் பயன்படுத்தி யோசிப்பதற்குக் கூட பலருக்கு மனம் இடம் கொடுப்பதில்லை. இப்படிப்பட்ட சூழலில்  மடமையும் மூடத்தனமும் கொண்டு மக்கல் இருப்பட்து, ஏமாற்றுவாதிகள் பலருக்குத் தாங்கள் ஜீவிக்க நல்ல வாய்ப்பாகிவிடுகின்றது. 

அந்தக் கோயிலை விட்டு வெளியேறி  வரும் முன்னர் இப்படிப்பட்ட அக்கிரமம் இனி நடக்கக்கூடாது இறைவா, என வேண்டிக் கொண்டே வந்தார் உ.வே.சா. 

நாமும் இப்படி வேண்டிக் கொள்ளத்தான் வேண்டியிருக்கின்றது. இன்னமும் கூட சில கோயில்களில் குப்பை மூட்டைகளாய் ஓலைகளைக் கொட்டி வைத்திருக்கின்றார்கள். பாதுகாப்போம் என அணுகிக் கேட்டால் அதற்கும் சம்மதம் தெரிவிக்க அவர்களுக்கு மனம் வருவதில்லை. தானும் பாதுகாக்க மாட்டர்கள் . பாதுகாப்போம் என முனைந்து  செல்வோரையும் அதற்கு அனுமதிக்கமாட்டார்கள். இத்தகைய மூடர்களால் தமிழ் சமூகத்துக்கே கேடுதான்!

தொடரும்.

சுபா

Monday, May 15, 2017

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 117

நாம் மனதில் ஒன்றைச் செய்து முடிக்க வேண்டும் என்று நினைப்போம். அப்படி நினைத்துத் தொடக்கிய காரியத்தைச் செய்து முடித்தால் தான் மனதில் எழுந்த அந்தச் சிந்தனைக்கும் பொருள் பிறக்கும். பத்து காரியங்களைச் செய்ய வேண்டும் என நினைப்போம். ஒன்றையும் செய்து முடிக்க அதற்குத் தேவையான முயற்சிகளை மேற்கொள்ள மாட்டோம் என்ற செயல்பாடு இருந்தால் நாம் நமக்குள்ளே மாற்றத்தைக் காண இயலாது. மாறாக இருந்த இடத்திலேயே தான் இருப்போம். ஒரு காரியத்தைச் செய்து முடிக்க வேண்டுமென்றால் மனதில் அதன்மேல் ஆசை மட்டும் இருந்தால் போதாது. அதனை எவ்வாறு செய்வது என்று அலசி ஆராய வேண்டும். அதனைச் செய்வதற்கான வழி முறைகளை நுணுக்கமாகக் கவனிக்க வேண்டும். மனதை அச்செயலில் ஈடுபடுத்த வேண்டும். கவனத்தைச் சிதற விடாது காரியத்திலேயே சிந்தனைக் குவிந்திருக்கும் வகையில் மனதை ஒரு நிலைப்படுத்த வேண்டும். செய்ய நினைத்த காரியத்திற்குத் தேவையான அனைத்து முயற்சிகளையும் நாமே தான் சுயமாக மேற்கொள்ள வேண்டும். எல்லாம் தானாக நடக்கும் என்று கனவு கண்டு கொண்டிருப்போருக்கும், பிறர் வந்து உதவுவார்கள் என்று காத்துக் கொண்டிருப்போருக்கும் தோல்வி தான் மிஞ்சும். 

ஒரு சிலருக்கு விருப்பம் இருக்கும் அளவிற்கு அதனை அடைய வேண்டிய செயல்களில் தேவைப்படும் முயற்சி இருக்காது. அல்லது முயற்சி குறைவாக இருக்கும். ஓரிரு செயல்களை மட்டும் செய்து விட்டு அலுத்துப் போய் விடுவார்கள் இத்தகையோர். இது வேண்டாம். நம்மால் முடியாது எனத் தனது முயற்சியிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்வார்கள். தனது மனம் போகும் போக்கினைக் கட்டுப்படுத்த இயலாதவர்கள் தாம் இத்தகையோர். 

ஒரு விசயத்தை நாம் கவனித்திருப்போம். பிறரை இப்படி அப்படி, எனக் குறை சொல்லும் நமக்குப் பல வேளைகளில் நமது சொந்த கட்டொழுங்கினைக் கூட கவனித்துக் கொள்ள முடியாமல் மனம் கட்டொழுங்கை மீறிச் செயல்பட விட்டுவிடும் பலகீனம் இருப்பதை நம்மில் சிலர் உணர்ந்திருக்கலாம். மனம் பல விசயங்களில் நாட்டம் கொண்டு அலைபாயும். அதனைச் சீராக்கி செய்ய நினைத்த காரியத்தில் மனதை முழு கவனத்துடன் ஈடுபடுத்திச் செயல்படுத்தும் போது நினைத்த காரியத்தில் வெற்றி கிட்டும். சிலர் மனதைப் பயிற்சி செய்யத் தியானம் செய்வோம் என முயற்சிப்பார்கள். அப்படி தியானம் செய்து சும்மா மனதை வைத்திருக்கப் பழகினாலும் கூட, ஒரு நூலை எடுத்து வைத்து வாசிக்க ஆரம்பித்து கவனம் நிலைக்கவில்லையே என வருந்துவோரும் உண்டு. ஆக மனப்பயிற்சி என்பது எளிதான காரியம் அல்ல. 
ஆனால் அது இயலாத ஒன்றும் அல்ல. 
அது சாத்தியமே. 
எப்படி ? 

எதை அடைய வேண்டும் என நினைக்கின்றோமோ, எதைச் செய்யவேண்டும் என நினைக்கின்றோமோ, அந்தச் சிந்தனை நம்மை முழுமையாக ஆக்கிரமித்திருக்கும் வகையில் மனதை வைத்திருக்க வேண்டும். அந்தச் சிந்தனைத் தற்காலிகமானதாக இல்லாமல் மனம் அதிலேயே ஒன்றிப்போய் கிடக்க வேண்டும். இந்த நிலையை எட்டும் போது நாம் விரும்பும் செயலைச் செய்து முடிக்க நாம் செய்ய வேண்டிய அனைத்துச் செயல்பாடுகளையும் நாம் செய்து கொண்டேயிருப்போம். அது நமது விருப்பம் நிறைவேறுவதற்கான சாத்தியக்கூறுகளைப் பெருக்கிக் கொண்டே இருக்கும். 

உ.வே.சா சிலப்பதிகாரத்திற்கான உரைகளைத் தேடும் முயற்சியைத் தீவிரமாகத் தொடங்கினார். கும்பகோணத்திலிருந்து சேலம் புறப்பட்டுச் சென்றார். அங்கு திருபட்டாபிராமப்பிள்ளை என்பாருடைய உதவியுடன் சில வித்துவான்களின் வீடுகளுக்கு நேரில் சென்று விசாரித்தார். முதலில் தனது தேடுதலின் போது சுவடி நூல்களை மட்டும் கவனத்தில் கொண்டிருந்தார் உ.வே.சா. பின்னர் அச்சுப்பதிப்பாக வந்தவற்றையும் அலசி ஆராய வேண்டும் என்ற எண்ணம் தோன்ற, தனக்கு உபயோகப்படும் எனத் தான் நினைத்த அச்சு நூல்களையும் பெற்றுக் கொண்டார். சேலத்தில் அவர் தேடி வந்த நூல்கள் கிடைக்கவில்லை. உ.வேசாவின் மனமும் சலிக்கவில்லை. 

அங்கிருந்து திருச்சிராப்பள்ளியில் இருக்கும் வரகனேரி என்ற ஊருக்குச் சென்றார். அங்கு மீனாட்சி சுந்தரம்பிள்ளையின் மாணாக்கர்களில் ஒருவராகிய சவரிமுத்தாபிள்ளை என்பவரிடம் நூல்கள் கிடைக்கலாம் என்ற சிந்தனை உ.வே.சாவிற்கு இருந்தது. கிறித்துவ சமயத்தவர் என்றாலும் பல சைவ பிரபந்தங்களையும், புராண நூல்களையும், சாத்திர சுவடிகளையும், பிள்ளையவர்கள் எழுதிய நூல்களையும் அவர் நூலகச் சேகரத்தில் உ.வே.சா கண்டார். தனக்குப் பயன்படும் என நினைத்த சுவடிகளை உ.வே.சா அவரிடமிருந்து பெற்றுக் கொண்டார். அதில் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களும் இருந்தன. பின்னர் உ.வே.சா பதினெண் கீழ்க்கணக்கு நூல்களை அச்சுப்பதிப்பாக்கி வெளியிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அங்கும் சிலப்பதிகாரம் தொடர்பான நூல்கள் கிடைக்கவில்லை. உ.வேசாவின் மனமும் சோர்வடையவில்லை. 

மீண்டும் சேலத்தில் சில நூல்கள் கிடைக்க வாய்ப்புள்ளதாக சேலம் இராமசாமி முதலியாரிடமிருந்து தகவல் கிடைக்க சேலம் புறப்பட்டுப் போனார் உ.வே.சா. அங்குச் சபாபதி முதலியார் என்பவரது வீட்டில் பல பழமையான ஏட்டுச் சுவடிகள் இருந்தன. ஆனால் பெரும்பாலும் பழுதாகியும், சில நூல்களில் ஏடுகள் குறைந்தும், சில ஏடுகள் ஒடிந்தும், முறிந்தும் காணப்பட்டன. மிகவும் சிதலமுற்ற நிலையில் இச்சுவடிகள் இருந்தன. அங்கிருந்து ஆறுமுக பிள்ளை என்ற வைத்தியர் ஒருவரின் இல்லத்தில் சுவடிகள் இருப்பதாக அறிந்து அங்குச் சென்றார். அவர் வீட்டில் கணக்கில்லா சுவடிகள் இருந்தன. அவருக்கு வயது 94. ஆனால் பார்ப்பதற்கு 60 வயதுதானிருக்கும் தோற்றத்துடன் அந்தச் சித்த வைத்தியர் இருந்தார் என்பதை உ,வே.சா பதிகிறார். அவரிடம் அகத்தியர் எழுதிய பல வைத்திய நூல் சுவடிகளை பார்த்தார். ஆனால் சிலப்பதிகாரம் தொடர்பான நூல் ஏதும் கிடைக்கவில்லை. உ.வேசாவின் மனமும் ஆர்வத்தை இழக்கவில்லை. 

மேலும் தன் தேடுதல் பயணத்தைத் தொடர்ந்தார் உ.வே.சா.

Sunday, May 7, 2017

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 116

சிலப்பதிகாரப் பதிப்புப் பணியை உ.வே.சா அவர்களால் தொடங்க முடியாமல் இருந்தமைக்கு இரண்டு முக்கியக் காரணங்கள் இருந்தன. 

முதலில் இக்காப்பியங்களின் இயல்பினைப் பற்றி யோசிக்கத்தான் வேண்டும். சங்க இலக்கியங்களையோ, செய்யுள் வடிவில் நமக்குக் கிடைக்கும் பண்டைய நூல்களையோ புரிந்து கொள்வது என்பது எளிதான ஒரு காரியம் அல்ல. ஆசிரியர் அதனை எப்பொருளை முன்னிறுத்தி எழுதியிருக்கின்றார் என்பது ஒரு புறமிருக்க, ஏட்டுச் சுவடியில் நாம் காணும் செய்யுட்கள் பாடபேதம் அற்றவையா என்பதும் ஒரு கேள்வி அல்லவா? சொற்களின் எழுத்துக்கள் மாற்றம் காணும் போது செய்யுளின் பொருளும் மாறுவதற்கான வாய்ப்புள்ளது. அதுமட்டுமல்ல. இச்செய்யுட்கள் எழுதிய காலகட்டத்தில் வழக்கில் இருந்த பண்பாட்டுச் சூழலை நாம் புறந்தள்ளி விட்டுப் பார்ப்பதும் செய்யுளை நாம் ஆசிரியர் என்ன நினைத்து எழுதினாரோ, அதே அந்தப் பொருளைச் சரியாக அடையாளம் காணமுடியாதவாறு செய்துவிடும். ஆக, மொழிப்புலமை என்பதோடு நீண்ட பாரம்பரியம் பற்றிய வரலாற்றுச் செய்திகளும் இவ்வகை செய்யுட்களைச் சரியாகப் புரிந்து கொள்வதற்கு மிக அவசியமாகின்றது. 

இந்தப் புரிதலை எளிமையாக்கும் தன்மை கொண்டவை தாம் உரை நூல்கள். 

உரை நூல்கள் நமக்கு மூல நூல்களைப் புரிந்து கொள்ள உதவுகின்றன. சில உரை நூல்கள் மேற்கொள்களையும் வழங்குகின்றன. அப்படி நமக்குக் கிடைக்கின்ற மேற்கோள்களின் அடிப்படையில் மேலும் சில நூற்களைத் தேடிச் சென்று அவை கூறும் செய்திகளையும் அறிந்து கொண்டு வந்து பின் நாம் வாசிக்கும் நூலோடு பொருத்திப் பார்க்கும் போது, வாசிப்பு எளிமையாகும் என்பது மட்டுமல்லாது சரியான புரிதலைக் கொண்டதாகவும் அமையும். 

இன்று நாம் வாசிக்கும் எல்லா நூல்களுமே உரைநடையாகவே அமைந்துள்ளன. கதைகளையும் கட்டுரைகளையும் எளிதில் வாசிக்கும் பொது மக்களால் செய்யுட்களை வாசித்தல் என்பது இயல்பாகவே முடியாத ஒரு காரியமாகி விட்டதால் செய்யுள் நடை என்பது தற்சமயம் அந்நியப்பட்டு வருகின்றது என்பது நிதர்சனம். கடினமான எழுத்து நடையை விட எளிதில் வாசிப்பினைப் புரிந்து கொள்ளும் வகையில் அமைந்த எழுத்து நடையே பெரிதும் விரும்பப்படுகின்ற ஒரு எழுத்து நடையாக இன்றுள்ளது. இந்த வகையிலாவது நூல்களை மக்கள் வாசிக்கின்றார்களே என்று மகிழ்ச்சி அடையலாம். இன்றைக்கு ஏறக்குறைய பத்து ஆண்டுகளுக்கு முன் என்ற வகையில் ஒப்பிடும் போது வாசிப்பு பொது மக்கள் மத்தியில் சற்று அதிகரித்துள்ளது என்பதை வருடா வருடம் தமிழகத்தின் பெரு நகரங்களில் நடக்கின்ற புத்தகக் கண்காட்சிகள் பறைசாற்றுகின்றன. 


சிலப்பதிகாரப் அச்சுப்பதிப்பில் உ.வே.சா விற்கு இருந்த முதல் பிரச்சனை இதுதான். 

அவருக்குக் கிடைத்த சிலப்பதிகாரம் தொடர்பான அனைத்துச் சுவடிகளையும் ஆராய்ந்து பார்த்தார். சிலப்பதிகாரத்திற்கான அடியார்க்கு நல்லார் உரை அடங்கிய சுவடியும் அவருக்குக் கிடைத்திருந்தது. அந்த உரையில் மிக விரிவாக அவர் விளக்கியிருந்ததோடு பல மேற்கோள்களையும் குறிப்பிட்டு அவை அடங்கிய நூல்களின் பெயர்களையும் குறிப்பிட்டிருந்தார். இது உ.வே.சா விற்குக் கடல் போன்ற பல புதிய செய்திகளைத் தருவதாக இருந்தது.பத்துப்பாட்டுக்கும் சிந்தாமணிக்கும் இவர் பயன்படுத்திய நச்சினார்க்கினியரின் உரையில் "என்றார் பிறரும்"  என்றே பொதுவாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. இது யார் எந்த நூலில் குறிப்பிட்டார்கள் என வாசிப்போரால் புரிந்து கொள்ளமுடியாத ஒரு நடை. எந்த நூலில் எந்த ஆசிரியர் எதை குறிப்பிட்டிருக்கின்றார் எனக் குறிப்பிடுவது ஆராய்ச்சியில் ஈடுபடுவோரின் பணியை வெகுவாகச் சுலபமாக்கும். இது நச்சினார்க்கினியரின் உரையில் இல்லை. ஆனால் அடியார்க்கு நல்லார் இந்த முறையைக் கடைப்பிடிக்கின்றார். ஆக, இந்த அடியார்க்கு நல்லார் உரையைக் கொண்டு உ.வே.சா சிலப்பதிகார அச்சுப்பணியைத் தொடக்கி விடலாம் தான். ஆயினும் சிலப்பதிகாரத்தின் 30 காதைகளில் கானல் வரிக்கும் (7வது காதை) வழக்குறை காதைக்கும்(20வது காதை) உரை கிடைக்கவில்லை. அத்தோடு சிலப்பதிகாரம் முழுமைக்குமான அரும்பதவுரை சுவடி ஒன்றும் உ.வே.சாவிடம் இருந்தது. ஆனால் அதுவும் பழுதாகி மோசமான நிலையில் ஏடுகள் இருந்தன. ஆக 2 காதைகளுக்கு உரையில்லாமல் ஆராய்ச்சியைத் தொடங்குவதற்கு முன் அந்த விடுபட்ட சுவடிகளைத் தேடி அது கிடைத்ததும் பணியைத் தொடக்குவது தான் சரியாக இருக்கும் என உ.வே.சா முடிவு செய்தார். 

உ.வே.சா விற்கு இருந்த இரண்டாவது பிரச்சனை பண்பாட்டுச் சூழல் பற்றியது.
ஏனெனில் சிலப்பதிகாரம் எழுதப்பட்ட காலசூழலில் சுவடியில் வருகின்ற இசை நாடகப் பாணியில் அமைந்த பகுதிகள் இன்று வழக்கில் இல்லாமல் இருந்தன. ஆக, இந்தப் பண்பாட்டு மாற்றத்தையும் புரிந்து கொள்வது எளிதாக இல்லை. இதனைப் புரிந்து கொள்ளும் முயற்சியில் இறங்கினால் அது வேறு பல ஆராய்ச்சிகளுக்கு இட்டுச் செல்லும். அது நெடுங்காலத்தையும் எடுக்கலாம். சிலப்பதிகார அச்சுப்பதிப்புப் பணியும் இதனால் தள்ளிப்போகும் என உ.வே.சா அஞ்சினார். 

எப்படிப் பார்த்தாலும் சிரமமாக இருக்கின்றதே எனத் தளர்ச்சி ஏற்பட்டது உ.வே.சா விற்கு. 

தளர்ச்சியடைந்து அமைதியானால் செய்ய நினைத்த காரியம் செய்யமுடியாமலேயே போகும். ஆக விடுபட்ட 2 காதைகளுக்கான உரைகளைத் தேடுவது என முடிவெடுத்துக் கொண்டார். தன் தேடுதலை மீண்டும் தொடக்கினார்.

தொடரும்

சுபா