Friday, May 27, 2022

பாக்கிஸ்தான் ஸ்வாட் பள்ளத்தாக்குப் பகுதியில் கிமு 2ஆம் நூற்றாண்டு பௌத்தப் பள்ளி கண்டுபிடிப்பு



வட இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் பண்டைய பௌத்த மதச் சான்றுகள் கிடைப்பதைப் பற்றிய செய்திகள் வரலாற்று ஆய்வுகளின் வழியும் தொல்லியல் கள ஆய்வுகளின் வழியும் கிடைக்கின்றன. இதைப்போல இன்றைய பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நிலப்பகுதிகளிலும் இன்றும் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற பல்வேறு வரலாற்றுத் தேடல்கள், அகழ்வாய்வுப் பணிகளில் குறிப்பிடத்தக்க முக்கியத்துவம் பெற்ற கண்டுபிடிப்புகள் தொடர்ந்து நிகழ்ந்த வண்ணம் இருக்கின்றன.



பாகிஸ்தான் நாட்டின் ஸ்வாட் பள்ளத்தாக்கு பகுதியில் தொல்லியல் களப்பணியாளர்கள் ஏறக்குறைய ஈராயிரம் ஆண்டு பழமையான பௌத்தப்பள்ளிகளைக் கண்டு பிடித்திருக்கின்றார்கள். இந்த பௌத்தப் பள்ளி பாகிஸ்தான் நாட்டில் உள்ள பௌத்தப் பள்ளி வளாகங்களில் பழமையான ஒன்றாகக் கருதப்படுகின்றது.

பாரிக்கோட் என்ற நகரில் ஏறக்குறைய கிமு 2ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பௌத்த சமய அமைப்பாக இதனைக் கருதலாம் என ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றார்கள். இந்தக் கட்டிட பகுதி இதன் அருகிலேயே கிமு 3ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பௌத்த விகாரைக்கு அருகிலேயே அமைந்திருக்கின்றது.

பாகிஸ்தான் மட்டுமன்றி உலக அளவில் பழமையான பௌத்தப் பள்ளிகளில் ஒன்றாக இது அறியப்படுகின்றது. கிபி 2 ஆம் நூற்றாண்டு எனக் கருதப்பட்டாலும் கூட இதன் காலம் கி மு 3, அதாவது மௌரியப் பேரரசர் காலம் எனக் கருதக்கூடிய வகையில் கரிம சோதனை ஆய்வு முடிவுகள் வெளிவந்திருக்கின்றன. இந்தப் புதிய கண்டுபிடிப்பானது பண்டைய காந்தாரப் பகுதியில் பண்டைய பௌத்த சமய செயல்பாடுகள் பற்றிய சான்றுகளை வழங்குவதாகவும் அக்காலகட்டத்தில் இப்பகுதி முக்கியத்துவம் பெற்ற ஒரு நகரமாக விளங்கி இருக்கலாம் என்ற கருத்தையும் வெளிப்படுத்துகிறது.

ஆசிய அளவில் இத்தாலியைச் சேர்ந்த ஆய்வாளர்கள் தொல்லியல் கள ஆய்வில் ஈடுபடுவது 1955 வாக்கில் தொடங்கியது. அச்சமயத்தில் தொல்லியல் கள ஆய்வுக்கு தலைமை ஏற்றவர் ஆய்வாளர் கீசோப் தூச்சி( Giuseppe Tucci) ஆவார். தற்சமயம் இத்தாலிய தொல்லியல் பணிக் குழுவின் தலைவராக Ca'Foscari University of Venice பல்கலைக் கழகத்தைச் சார்ந்த பேராசிரியர் லூக்கா மரியா ஒலிவியர் (Luca Maria Oliviero) பணியாற்றுகின்றார். இவர் தலைமையிலான குழு 2020 ஆம் ஆண்டு தொடக்கம் பாகிஸ்தான் ஸ்வாட் பகுதியில் தொடர்ந்து தொல்லியல் ஆய்வுகளை நிகழ்த்தி வருகின்றது.

இந்தக் கள ஆய்வு நடைபெறும் பாரிகோட் (Barikot) என்ற நகரம் கிரேக்க மற்றும் லத்தீன் மொழியில் Bazira or Vajrasthana என குறிப்பிடப்படுகின்றது. இது மாவீரன் அலெக்சாந்தர் காலத்தில் அவனது படைகளால் கைப்பற்றப்பட்ட நிலப்பகுதி என்பதும் குறிப்பிடத்தக்கது. இங்கு நிகழ்த்தப்பட்ட கள ஆய்வுகளும் அங்கு மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளும் இந்த நகரம் மாவீரன் அலெக்சாண்டர் போரிட்டு வந்த காலமான ஏறக்குறைய கிமு 327 காலகட்டத்தில் மக்கள் வாழ்ந்த ஒரு நகரமாக இருந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அப்போதைய காலகட்டத்தில் இந்த பாரிக்கோட் நகர பள்ளத்தாக்கு பகுதியில் நிகழ்ந்த விவசாய செயல்பாடுகளை முன்னிறுத்தி தானியங்கள் விற்பனை மற்றும் தானியங்கள் சேகரித்து வைக்கும் பகுதியாகவும் இருந்தது என்று அறியப்படுகிறது. இப்பகுதியில் வேளாண்மை சிறப்புற்று இருந்தது. வருடத்திற்கு இரண்டு முறை அறுவடை நிகழ்ந்ததும் அதாவது வசந்த காலத்தில் ஒரு முறையும் கோடை காலத்தின் இறுதியில் ஒரு முறையும் அறுவடை நிகழ்வதையும் கள ஆய்வுகள் வெளிப்படுத்துகின்றன. மாவீரன் அலெக்சாண்டர் இந்தியாவிற்குத் தனது படைகளைக் கொண்டு செல்வதற்கு முன் தங்கியிருந்த ஒரு பகுதியாகவும் இந்த நகரம் அமைகிறது.
ரோமானிய வரலாற்று அறிஞர் Quintus Curtius Rufus பாரிக்கோடு நகரம் வளமான பொருளாதார உயர்வு பெற்ற ஒரு நகராக இருந்தது என்று தனது நூலான Histories of Alexander the Great என்ற நூலில் குறிப்பிடுகின்றார்.
2020 ஒரு தொடக்கம் இங்கு நிகழ்த்தப்பட்டு கொண்டிருக்கும் தொல்லியல் கள ஆய்வுகளில் இங்கு பிரமிக்க வைக்கும் வகையிலான கிமு 3ஆம் நூற்றாண்டு அல்லது கிமு 2ஆம் நூற்றாண்டு காலத்து பௌத்த சமய சின்னங்கள் பல கிடைத்துள்ளன. பௌத்த விகாரை அதனை ஒட்டிய வகையில் அமைந்த பௌத்த பள்ளி, வட்ட வடிவில் அமைந்த சிறிய ஸ்தூபி, மண்ணால் செய்யப்பட்ட பொருட்கள் சின்னங்கள், ஆபரணங்கள் ஆகியவை அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்டன.
கிபி முதலாம் நூற்றாண்டை சார்ந்த கரோஷ்டி எழுத்து பொறிப்பு கொண்ட கல்வெட்டுக்களும் இங்கே கிடைத்துள்ளன.
இப்பகுதிகளில் கள ஆய்வுகள் நடைபெறுவதற்கு முன்பே தொல்லியல் சான்றுகளைச் சட்டத்திற்கு விரோதமாக திருடி விற்கும் செயல்பாடுகள் நடந்துள்ளன. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் நிகழ்கின்ற அரசியல், மற்றும் சமயப் போராட்டங்கள் காரணமாகவும் அங்கு நடைபெறுகின்ற வன்முறை செயல்பாடுகளின் காரணமாகவும் பல வரலாற்று சின்னங்கள் சேதம் அடைந்துள்ளன என்பதையும் கருத வேண்டியுள்ளது. அத்தகைய இடர்பாடுகளுக்கு இடையே இப்போது தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருக்கின்ற அகழாய்வுப் பணிகள் புதிய கண்டுபிடிப்புகளை வெளிக்கொணர்ந்துள்ளன‌. காந்தாரா கலைப் பண்பாடு இப்பகுதியில் செழித்து வளர்ந்த ஒரு பண்பாடு என்பதும் இப்பகுதியின் சிறப்பாகும்.
-சுபா

Wednesday, April 6, 2022

என் குரலில் ஒரு பாடல்

 


கஜானனயுதம் கணேஸ்வரம்


பாடல்: கஜானனயுதம் கணேஸ்வரம்

இராகம்: சக்கரவாகம்; தாளம்: ஆதி

இயற்றியவர்: முத்துசுவாமி தீட்சிதர்

பாடியவர்: டாக்டர்.சுபாஷினி கனகசுந்தரம்

__________


பல்லவி:

கஜானனயுதம் கணேஸ்வரம்

பஜாமி ஸததம் சுரேஸ்வரம்


அனுபல்லவி:

அஜேந்திர பூஜித விக்னேஸ்வரம்

கணாதி சந்நுதபத பத்மகரம்


சமஷ்டி சரணம்:

குஞ்ஜர பஞ்ஜன சதுரதரகரம்

குருகுஹாக்ரஜம் பிரணவாகரம்


யானை முகத்தோனை கணேசனைத் துதிக்கிறேன்.

சுரர் களால் தொ ழப்படும் 

எப்போதும் அவனப் பாடுகிறேன்.

பிறப்பற்ற இந்திர னால் வணங்கப்படும் விக்னேஸ்வரனே

கணங்களால் (தொண்டர் படை மாதிரி 😊)  வணங்கப்படும் பாதங்களையும், தாமரைக் கரங்களையும் உடையவனே!!

யானை முகத்தையும்

நான்கு பு ஜங்களையும்

குரு வின் மந்திரத்தை முன்னெ டுத்து, ஓம் கார வடிவில் இருப்பவனே!!!


மொழி பெயர்ப்பு திரு.சபாரத்தினம்

Thursday, March 31, 2022

பெண் பூப்பின் புனித வழிபாடு


நூல்  அணிந்துரை 

உலகளாவிய வகையில் நிகழ்த்தப்பட்ட அகழாய்வுகளில் இதுவரை நமக்குக் கிடைத்துள்ள மிகப்பழமையான தெய்வ வடிவங்களாக அமைபவை தாய்தெய்வங்களாகும்.  அச்ச உணர்வும், பாதுகாப்பு வேண்டும் என்ற ஆழ்மனதின் வேட்கையும் ஒன்றிணையும் போது பண்டைய மனிதர்கள், இயற்கையையும்,  குழந்தையை ஈன்றெடுக்கும் பெண் உடலையும் தாய்த்தெய்வமாக வடித்து அவற்றை வணங்கினர். ஹோலெஃபெல்ஸ் வீனஸ், வீனஸ் ஆஃப் வில்லண்டோர் ஆகியவை இவற்றிற்குச் சான்றுகளாகின்றன.  ஆயினும் காலப்போக்கில் ஆணாதிக்கச் சிந்தனை என்பது எழும் போது அது தாக்கி எதிர்கொண்ட ஒன்றாக வழிபாட்டு அமைப்பில் இடம்பெற்றிருந்த பெண்தெய்வங்களின் நிலை  அமைந்து போனது.

மக்களின் மனதில் உயர்ந்த நிலையில் வைத்துப் பூசிக்கப்படும் பெண் தெய்வங்களை எதிர்கொள்வதற்கு ஆணாதிக்க சமயவாதிகளுக்கு கிடைத்த ஒரு கருவியே புராணங்கள் எனலாம். கட்டுக் கதைகளால் உருவாக்கப்படுகின்ற புராணங்களைச் சமயவாதிகள் தங்கள் இலக்கை அடைய எளிதாகப் பயன்படுத்திக் கொண்டனர் என்பதை வரலாறு வெளிப்படுத்துகின்றது.  வலிமை மிக்க பெண்தெய்வங்களுக்கு வழங்கப்பட்டு வந்த  முக்கியத்துவத்துவத்தைக் குறைக்க புதிய புதிய புராணக்கதைகளை ஆணாதிக்கச் சிந்தனை கொண்ட சமயவாதிகள் உருவாக்கினர்.   மக்களின் சிந்தனையில் ஆண்தெய்வங்களின் பராக்கிரமங்களும் மேலாண்மையும் பதியத் தொடங்கிய பின்னர், பெண் தெய்வங்களின் முக்கியத்துவம் குறைக்கப்பட்டு   நீட்சியடையும் நிலையில் அவை மக்கள் மனதில் நிற்க முடியாமல் காலப்போக்கில் மறைந்து போய்விடுகின்றன. மூத்த தேவி அல்லது ஜேஷ்டாதேவி என்ற பெண் தெய்வத்தை இதற்கு உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம்.   இப்பண்பாட்டு மாற்றம் என்பது ஒரே நாளில் நிகழ்ந்ததா என்றால் இல்லை என்பதே நமக்கு விடையாகின்றது.   பெண் தெய்வங்களின் மதிப்பை இறக்கவேண்டும் என்ற திட்டத்தின்  அடிப்படையில் புராணக்கதைகளை மையக் கருவியாகக் கொண்டு இது நிகழ்த்தப்பட்டது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதோடு, இவை பெண் உடலைத் தாழ்த்தும் போக்கையும் பெண் பலகீனமானவள் என்ற கருத்தைப் புகுத்த பல்வேறு முயற்சிகளைத் தொடர்ந்து மேற்கொள்வதையும் புரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகின்றது. 

ஆணாதிக்கச் சிந்தனையாகிய, பெண்ணை தரம் தாழ்த்துவது, பெண் உடலை பாவப்பொருளாகவும் தீட்டுப் பொருளாகவும் தாழ்த்துவது, பெண் பலகீனமானவள் என்ற கருத்தை வலித்து திணிப்பது போன்ற கருத்தாக்கங்களை ஆண் மட்டுமன்றி பெண்ணும் உள்வாங்கிக் கொண்டு ஆணாதிக்கச் சிந்தனையை வெளிப்படுத்துகின்ற சூழலை உருவாக்கி ஆணாதிக்கச் சமூகம் வெற்றி கண்டுள்ளது.   இது பல்வேறு சமூகச் சிக்கல்களுக்குக் காரணமாகவும் அமைகின்றது என்பதை நாம் ஒதுக்கித் தவிர்த்து விட்டுப் போக முடியாது.  இத்தகையச் சூழலில் இந்த நூல் பல்வேறு முக்கியச் செய்திகளை உள்ளடக்கி வெளிவருகின்றது.   

அதிகார குணம் கொண்ட பெண்தெய்வங்களை ஆணாதிக்கச் சிந்தனை எவ்வகையில் தாக்கி எதிர்கொள்கின்றது என்பதை முதல் கட்டுரை விவரிக்கின்றது.  அப்பெண்தெய்வத்தின் பண்புகளைத் தாழ்த்தி ஆண்தெய்வங்கள் அவர்களை எதிர்கொண்டு தாக்கி நல்வழி படுத்துவதை புராணக்கதைகளின் வழியாக மக்கள் சிந்தனையில் கொண்டு சேர்த்த தகவல்களை இக்கட்டுரை கூறுகிறது.  காளி, லிலித் என்ற இரண்டு பெண் தெய்வங்களை இதற்கு நூலாசிரியர் மையக்கருத்தாக வைத்து தன்  ஆய்வுப் பார்வையைச் செலுத்தியிருக்கின்றார்.  

இரண்டாவது கட்டுரை பெண் பருவமடைதல், பூப்புக்குருதி, தாந்திரீக, மருத்துவ கருத்தாக்கங்கள்  என்பதோடு பூப்புக்குருதியோடு தொடர்புடைய சமய நம்பிக்கைகளை ஆய்வுக்குட்படுத்துகிறது. நூலாசிரியர் விரிவாக பல்வேறு சமய நம்பிக்கைகளையும், அவற்றோடு இணைந்து வருகின்ற சடங்குகளையும் இப்பகுதியில் விவரிக்கின்றார். புராணக்கதைகள் பூப்புக்குருதியை கையாளும் வகையும்  மூடநம்பிக்கைகளைச் சமயசடங்குகளாக அவை ஒன்றிணைத்திருக்கும் நிலையையும் ஆழமாக இப்பகுதி விளக்குகின்றது. 

குழந்தை வெளிவருகின்ற பெண் உறுப்பின் வடிவம்,  தாந்திரீக முறைகள்  மட்டுமன்றி உலகளாவிய நிலையில் பண்டைய வழிபாட்டுக் குறியீடுகளில் மிக முக்கியத்துவம் பெறும் ஒரு குறியீடாகக் கருதப்பட்டது. அதனை விளக்கும் வகையில் இந்த நூலின் 3வது கட்டுரை அமைகின்றது.  பெண் உறுப்பை உருவகப்படுத்தும் குறியீடுகள், லிங்கமும் ஆவுடையாரும் இணைந்த வகையான அமைப்பு, அதன் வரலாறு,   பல்வேறு இனக்குழுக்களில் பெண் உறுப்பு தொடர்பான புராணக் கதைகள் ஆகியவை இக்கட்டுரையில் வழங்கப்பட்டுள்ளன. இது  பெண் உறுப்பை மனித இனம் அச்சத்தோடும் வியப்போடும்  காண்கின்ற மனப்போக்கை வெளிப்படுத்துகின்றது. இவற்றோடு குமரி வழிபாடு, இளம் பெண்கள் அதிலும் குறிப்பாக பெண் உறுப்பை   தெய்வமாகப் பூசித்து வழிபடும் மரபுகள் பற்றியும் இக்கட்டுரை அலசுகிறது.

நூலின் இறுதிக் கட்டுரை வட இந்திய கருக்காத்தம்மன் என்ற தெய்வத்தைப் பற்றி விவரிக்கிறது. பார்வதி, தேவயானை போன்ற தெய்வங்களுடனான ஒப்பீடுகள், குழந்தைப் பேற்றிற்காகச் செய்யப்படும் பூசைகள் என்பது பற்றி இந்த இறுதிக் கட்டுரை விவரிக்கின்றது.

பொதுவாகவே வெளிப்படையாகப் பேசத்தயங்கும், ஆனால் பண்பாட்டுச் சூழலில் பெரும்பாலும் மறைமுகமாகவும் சில வேளைகளில்  நேரடியாகவும் நிகழ்த்தப்படுகின்ற பல்வேறு சடங்குகளை இந்த நூல் பண்பாட்டு மானுடவியல் பார்வையில் அலசுகிறது. வெவ்வேறு பண்பாடுகளில் பெண் உடல், குறிப்பாக பெண் உறுப்பு, பாலியல் கூறுகள் என்பவற்றை நூல் ஆராய்கின்றது என்பதோடு பெண்ணைச் சிறுமைப்படுத்தவும் பெண்ணின் ஆளுமையைக் குறைக்கவும் ஆணாதிக்கத்தை மேலெழச் செய்யவும் புராணக் கதைகள் முக்கியக் கருவிகளாகச் செயல்பட்டன என்பதை இந்நூல் வெளிச்சப் படுத்துகின்றது. நூலாசிரியர் முனைவர் ராஜேஸ்வரி அவர்களின் இந்த சிறந்த ஆய்விற்கு எனது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். மானுடவியல் பார்வையில் மேலும் பல நூல்களை ஆசிரியர் படைக்க வேண்டும்.

நல்வாழ்த்துகள்.
முனைவர்.க.சுபாஷிணி
தலைவர், தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு
30.1.2022