Monday, March 27, 2017

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 111

பத்துப் பாட்டு நூல் ஆராய்ச்சி மேலும் தொடர்ந்து கொண்டிருந்தது. இடையில் குறிஞ்சியில் சில பூக்களின் பெயர்கள் விடுபட்ட நிலையில் இருந்தது. உ.வே.சாவிடம் இருந்த சுவடியில் இப்பகுதி விடுபட்டிருந்தமையால். முழுமையாக இல்லையே இந்தச் சுவடி என புதிய வருத்தம் அவருக்குத் தொற்றிக் கொண்டது.

வருந்திக் கொண்டிருப்பதால் ஆகப்போவது ஏதும் இல்லை. மீண்டும் முழுமையான சுவடிப்பிரதி வேறுயாரிடமாவது கிடைக்குமா எனத் தேட வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது. யோசித்ததில் திருவாவடுதுறை மடம் போலவே மற்றுமொரு சைவ மடமான தருமபுரம் மடத்திலும் ஏராளமான சுவடிகள் இருக்கின்றன என்பது உ.வே.சாவிற்குத் தெரியும் என்பதால் அங்குச் சென்று கேட்டுப்பார்க்கலாமா என்ற எண்ணம் அவருக்கு மனதில் எழுந்தது.

அந்தக் காலகட்டத்தில் திருவாவடுதுறை மடத்திற்கும் தருமபுரம் மடத்திற்கும் நல்ல சுமுகமான உறவு இல்லாத நிலை ஏற்பட்டிருந்தது. எதனால் இந்தக் கசப்பு என உ.வே.சா என் சரித்திரம் நூலில் குறிப்பிடவில்லை. ஆயினும் இரு சைவ மடங்களுக்குமிடையே மனஸ்தாபம் இருந்தது என்பதைக் குறிப்பிடுகின்றார்.

இந்தச் சூழலில் தேசிகரிடம் அனுமதி கேட்கலாமா, என முதலில் ஐயம் எழுந்தாலும் தனது தயக்கத்தை உதறிவிட்டு தனக்கு குறிஞ்சிப்பாட்டில் சில பகுதிகள் விடுபட்டுள்ள பிரதியே இருப்பதால், முழுமையான பிரதி தருமபுரம் மடத்தில் இருக்கலாம் என்றும், தான் அங்குச் செல்ல அனுமதி கிடைக்குமா என்றும் தேசிகரை அணுகிக் கேட்டார் உ.வே.சா. ஆதீனகர்த்தர் அம்பலவாண தேசிகர், தயங்காது சென்று வரலாம் எனக்கூறியதோடு ஒரு வண்டியையும் ஏற்பாடு செய்து மடத்திலிருந்து பொன்னுசாமி செட்டியார் என்பவர் ஒருவரையும் துணைக்கு அனுப்பியும் வைத்தார்.

தருமபுரம் மடத்தில் அனுமதி பெற்றுக்கொண்டு தேடியதில் முழுமையான பாடல்கள் நிறைந்த குறிஞ்சிப்பாட்டு நூல் கிடைத்தது. இது இடையில் வந்தத் தடையை இல்லாது போக்கியது.

இனி கிடைத்த பிரதிகளை வைத்து ஆராய்ச்சியைத் தொடர்ந்து அச்சுப்பதிப்புக்கானப் பணிகளைத் தொடங்குவதே சரியாக இருக்கும் என உ.வே.சாவிற்கு மனதில் தோன்றியது. அச்சமயத்தில் கனகசுந்தரம் பிள்ளை என்பவர் உ.வே.சாவிற்கு கடிதம் எழுதி தானும் பத்துப்பாட்டு அச்சுப்பதிப்பிற்காக உழைத்துக் கொண்டிருப்பதாகச் சொல்லி உ.வே.சாவும் அதே காரியத்தைச் செய்தால் குழப்பம் வருமே எனக் குறிப்பிட்டு எழுதினார். பணியைத் தொடங்கியபிறகு இப்படி வருகின்ற செய்திகளை எண்ணி வருந்திக் கொண்டிருக்க இயலாது. என் அச்சுப்பதிப்புப் பணியை நான் செய்கின்றேன். உங்களது பனியை நீங்கள் செய்யுங்கள். இரண்டையும் வாங்கிப் படிக்க மக்கள் இருக்கின்றார்கள், எனப் பதில் கடிதம் அனுப்பி விட்டு உ.வே.சா பத்துப்பாட்டு பதிப்புப் பணிகளை தொடக்கிவிட்டார்.

தொடரும்...
சுபா

Thursday, March 23, 2017

மநு தர்ம சாஸ்திரம் - ஏன் தமிழர்களுக்கான ஒரு நூலல்ல!! - 4

 பதிவு 4


தற்போதைய சூழலில், வைதீக சாத்திரங்களைத் தமிழ்ச் சமூகத்தில் புகுத்தி அதன் வழி சமூகத்தில் ஏற்றத்தாழ்வினை   ஏற்படுத்திய மநு தர்ம சாஸ்திரம் ஏன் தமிழர்களுக்கான ஒரு நூல் அல்ல என்பதை ஆராய வேண்டிய அவசியம் எழுந்திருக்கின்றது.   அந்த வகையில் தமிழில் திருலோக சீதாராம் அவர்களால் மொழி பெயர்க்கப்பட்டு ஆர்.கே.எல். பிரிண்டர்ஸ் அச்சகத்தின் பதிப்பாக வந்த தமிழ் மொழி பெயர்ப்பிலிருந்து சில வாசகங்களை இந்தப் பதிவில் தொடர்வோம்.


1.135 பத்தே வயதுடையவனாயினும் அந்தணன் தந்தைக்குச் சமமாகவும், நூறு வயதாகிய ஷத்திரியனைப் பிள்ளையாகவும் மதிக்க வேண்டும்.

இந்த சுலோகம் செய்து வைத்திருக்கும் அபத்தம் மிக அதிகம் தான். சிறியவர்களாகினும் கூட அந்தண சமூகத்தவர்களை சாமி என அழைக்கும் ஏனைய சமூகத்தினர் உருவாக இத்தகைய வாசகமே அடித்தளத்தை அமைத்திருக்கின்றது. இந்த நிலை மாற கடந்த ஒரு நூற்றாண்டில் நிகழ்ந்த மாற்றங்கள் தான் எத்தனை எத்தனை? ஆனாலும் கூட இன்னும் பெருவாரியாக தமிழ்ச்சமூகத்துச் சிந்தனையில் இந்தக் கருத்து ஆழமாகப் புதைந்து தான் இருக்கின்றது.   குறிப்பாக கிராமப்புரங்களில்.

1.213 தங்கள் அலங்காரத்தில் மனிதரைக் கவரும் தன்மை பெண்களின் இயல்பாகையால் அறிந்தோர் பெண்களிடம் கவனக்குறைவாக நடந்து கொள்ளமாட்டார்கள்.

1.214.  புலன்களை அடக்கியவாயினும், அறிவிலியாயினும், அவர்களைத் தங்களது தொடர்பால் காமக் குரோத செய்வர் மாதர்.

1.215 தாய் தங்கை, மகள் ஆகியோராயினும்,  அவர்களுடன் தனித்து ஒன்றியமாகக் கூடாது. ஏனெனில் பொறி புலன்களின் கூட்டமானது தம் வழியே செயற்படுவதில் ஊக்கமுடையன. தெரிந்தவனையும் அவை தம்பால் அடிமைப்படுத்தி விடும்..

பெண்களை இவ்வளவு தரக்குறைவாகப் பேசும் இப்பகுதியை பிரச்சாரம் செய்து பெண்களை அறிவற்றவர்களாகக் காட்டவே மநு தர்மம் முயற்சிக்கின்றது. தாய் தந்தை மகள் கூட தனித்து இருத்தல் தவறு எனச் சொல்லும் மநு, பெண்ணை உயிருள்ள ஒரு மனிதராகப் பார்க்கத் தவறி ஒரு உடலாக மட்டுமே பார்க்கும் தர்மத்தை வலியுறுத்தி இருப்பதை இங்கு காண்கின்றேன். 

இத்தகைய தரக்குறைவான வாசகங்கள் இருந்தும் இந்த நூலை தர்ம சாத்திரம் என சிலர் பிரச்சாரம் செய்கின்றனர் எனும் போது அதைப்பற்றி தெரிந்து கொள்ளாமல் மேலோட்டமாக ஏதோ பேசுவதைத் தவிர்த்து, இவற்றை வாசித்து தெரிந்து கொண்டு, இந்த நூல் தமிழர் பண்பாட்டுக்கு உகந்ததல்ல எனச் சொல்லி இந்த நூலை புரிதலுடன்  ஒதுக்கி வைத்துப் போக வேண்டியது நம் கடமை.

தொடரும்..
சுபா

Monday, March 20, 2017

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 110

சங்க இலக்கியத்தில் பத்துப்பாட்டு அச்சுப்பதிப்பு உருவாக்கும் பணி தொடர்ந்து கொண்டிருந்தது . உ.வே.சா தனது கல்லூரி வேலை நேரம்
தவிர்த்து ஏனைய நேரங்களை முழுமையாக தனக்கு இதுவரை கிடைத்த ஏட்டுச்சுவடி பாடபேதங்களை அலசி ஆராய்ந்து கொண்டிருந்தார். இந்த ஆய்வில் அவரிடம் இதுவரை கிடைத்த நூற்கள் முழுமையானவை இல்லை என்ற எண்ணம் அவருக்கு உருவாகத்தொடங்கியது. கிடைத்தவரைக்கும் வைத்துப் பதிப்பித்து புகழ் தேடிக்கொள்வோம் என்றில்லாது, செய்வன திருந்தச் செய்வோம் என்ற சிந்தனையுடன் மேலும் வேறு இடங்களில் பத்துப்பாட்டு ஓலைச்சுவடி பிரதிகள் கிடைக்குமா என்ற தனது தேடல் முயற்சியை மீண்டும் தொடங்கினார்.

திருவாவடுதுறை ஆதீனத்திற்குச் சென்று அங்கேயும் ஒரு முறை சொல்லி வைத்து வர வேண்டும் எனச் சென்றிருந்தார். முன்னர் ஆதீனகர்த்தராக இருந்து தன்னை ஒரு தந்தையைப் போல அன்பு காட்டி ஆதரித்த சுப்பிரமணிய தேசிகர் இல்லாத போதிலும் ஆதீனத்தில் இவரை அன்புடன் அனைவரும் வரவேற்பதில் எந்தக் குறையும் இல்லாமல் இருந்தது.

ஆதீனகர்த்தரைச் சந்தித்து தனது பத்துப்பாட்டு பதிப்பு முயற்சிகளைப் பற்றி விளக்கி முழுமையாகப் பாடல்கள் கிடைக்காத நிலையைச் சொல்லி வருந்தினார் உ.வே.சா. ஆதீனத்தைச் சார்ந்த ஏனைய மடங்களில் இந்தச் சுவடி நூல் கிடைக்க வாய்ப்பிருக்குமா எனக் கேட்டுக் கொண்டார். இவரது மன நலிவைக் கண்ட ஆதீனகர்த்தர், சிறிதும் கவலைப்படாமல் இருக்கும் படியும், எல்லோருக்கும் கடிதம் எழுதச் சொல்லி பத்துப்பாட்டு பிரதிகளை வருவித்துத் தர ஏற்பாடு செய்வதாகவும் கூறினார். சொன்னதோடு மட்டுமல்ல. உடனே செயலிலும் இறங்கினார். தமது கட்டுப்பாட்டில் இருக்கும் மடங்கள், அறிஞர்கள் எனப் பலருக்கும் கடிதம் திருவாவடுதுறை மடத்திலிருந்து சென்றது.

இன்றைய நிலையை யோசித்துப் பார்க்கின்றேன். ஒரு ஆராய்ச்சி மாணவரை ஊக்குவிக்கும் பண்போ அல்லது நல்ல முயற்சிகளுக்கு அதிகாரத்தில் இருப்பவர்கள் உதவும் மனப்பாங்கோ மிக மிகக் குறைவாகத்தானே இருக்கின்றது. நூற்கள், ஆய்வுகள், அறிவுத்தேடல்கள் என்ற விசயங்களே சமூகத்தின் உயர்மட்ட அதிகாரத்தில் இருப்போருக்கு மிகத் தொலைவில் இருக்கின்ற ஒரு விசயமாகத்தான் அமைந்திருக்கின்றது. கல்வி, அறிவு நாட்டம் என்பதை விடப் பொருளாதார அனுகூலங்களை மட்டும் எண்ணிப்பார்க்கும் தலைமை பீடங்கள் நிறைந்த சூழல் தான் இன்று நிலவுகின்றது. இந்த நிலையை மனதில் கொண்டு உ.வே.சாவின் தேடுதல் பணிக்காக உதவத் தீவிர முயற்சி மேற்கொண்ட திருவாவடுதுறை ஆதீனத்தின் தலைமையில் இருந்த தேசிகரை நாம் நன்றியுடன் எண்ணிப்பார்ப்பது தமிழ் மாணாக்கர்கள் நாம் எல்லோரது கடமையும் கூட. ஏனெனில் ஒரு உயரிய பணிக்கு உதவி செய்தோரை நன்றியுடன் எண்ணிப் பார்த்தலே மனிதப்பண்பு. இத்தகைய உதவிகள் கிட்டிராவிட்டால் பத்துப்பாட்டு நல்ல அச்சுப்பதிப்பு நமக்குக் கிடைத்திருக்குமா என்பது ஒரு பெரிய கேள்வி அல்லவா?

மீண்டும் திருவாவடுதுறை மடத்துக்கு உ.வே.சா சென்ற போது அங்கே நடந்த நிகழ்வுகளைத் தனது எழுத்துக்களால் இப்படிக் குறிப்பிடுகின்றார்.

"அடுத்த வாரமே நான் என்னவாயிற்றென்று விசாரிப்பதற்காகத் திருவாவடுதுறை சென்றேன். மடத்திற்குள் புகுந்து ஒடுக்கத்தின் வாயிலில் கால் வைக்கும்போதே ஆதீனத் தலைவர் என் காதில் படும்படி, “பொன்னுசாமி செட்டியார்! பத்துப் பாட்டைக் கொண்டுவந்து ஐயரவர்களிடம் கொடும்” என்று உத்தரவிட்டார். அந்த வார்த்தைகள் என் காதில் விழுந்த போது என் உடம்பெல்லாம் மயிர்க்கூச்செறிந்தது. மிக்க வேகமாக ஆதீனத் தலைவரை அணுகி உட்கார்ந்தேன். உடனே பொன்னுசாமி செட்டியார் ஏட்டுச் சுவடியைக் கொணர்ந்து என் கையில் கொடுத்தார். பிரித்துப் பார்த்தேன். பத்துப் பாட்டுக்களும் இருந்தன. மூலமும் உரையும் கலந்ததாகவே இருந்தது அப்பிரதி. பத்துப் பாட்டு முழுவதும் இருந்தமையால் எனக்கு அளவற்ற சந்தோஷம் உண்டாயிற்று. ஒவ்வொரு பகுதியாகப் பார்த்து வந்தேன். ஒவ்வொரு பாட்டாகத் திருப்புகையில் என் உள்ளம் குதூகலித்தது. அதில், தூத்துக்குடிக் கால்டுவெல் காலேஜில் தமிழ்ப் பண்டிதராக இருந்த குமாரசாமிப் பிள்ளையால், வீரபாண்டிய கவிராயர் பிரதியைப் பார்த்து எழுதப்பட்டதென்று எழுதியிருந்தது. " 

நாம் முழு கவனம் வைத்து ஆய்விற்காகத் தேடிக் கொண்டிருக்கும் ஒரு விசயம் நமக்குக் கிடைக்கும் போது அது எழுப்பும் மன எழுச்சியே அலாதிதான்!

தொடரும்..
சுபா

Saturday, March 18, 2017

மநு தர்ம சாஸ்திரம் - ஏன் தமிழர்களுக்கான ஒரு நூலல்ல!! - 3

 பதிவு 3.


எனது கடந்த பதிவில் மநு தர்ம சாஸ்திரம் நூலில் உள்ள ஒரு சுலோகத்தைக் குறிப்பிட்டிருந்தேன். அந்த சுலோகத்தின் ஒரு வாசகம் எனக்கு வேறு  ஒரு கோணத்திலான சிந்தனையை எழுப்பியது.

சுலோகம் 
2.32 பிராம்மனனுடைய பெயர் மேன்மையைக் குறிக்கும் சர்மன், ஷத்திரியனுக்குப் பலத்தைக் குறிக்கும் வர்மன், வைசியனுக்கு வளத்தைக் குறிக்கும் பூபதி, நாலாமவனுக்குப் பணிவிடையைக் குறிக்கும் தாசன் என்றிவ்வாறு அவரவர் பெயர்களுடன் பட்டங்கள் வழங்கி வர வேண்டியது.

"தாசி" என்ற சொல் தன் உடலை விற்று வாழும் பெண்களைக் குறிப்பிடுவதற்காகப் பயன்படுத்தப்படுகின்றது. இதன் ஆண்பாலான தாசன் எனும் சொல்லோ  மநுவின் பரிந்துரைப்படி நான்காம் வருணத்தவரான சூத்திரர் வைத்துக் கொள்ள வேண்டிய பெயர் அடையாளமாகச் சொல்லப்படுகின்றது. சரி.. ஏன் தாசி எனும் பெயர் தன் உடலை விற்று வாழும் பெண்களைக் குறிப்பிடுவதற்காகப் பயன்படுத்தப்படுகின்றது?  ஏன் இத்தகைய பெண்களுக்கு சர்மனுக்கு பெண்பாலான சர்மி என்றோ, வர்மனுக்கு பெண்பாலான வர்மி என்றோ பூபதிக்கு பெண்பாலான ஏதோவொன்றோ வழக்கில் இல்லை?

சுபா

Monday, March 13, 2017

மநு தர்ம சாஸ்திரம் - ஏன் தமிழர்களுக்கான ஒரு நூலல்ல!! - 2

பதிவு 2

தற்போதைய சூழலில், வைதீக சாத்திரங்களைத் தமிழ்ச் சமூகத்தில் புகுத்தி அதன் வழி சமூகத்தில் ஏற்றத்தாழ்வினை   ஏற்படுத்திய மநு தர்ம சாஸ்திரம் ஏன் தமிழர்களுக்கான ஒரு நூல் அல்ல என்பதை ஆராய வேண்டிய அவசியம் எழுந்திருக்கின்றது.   அந்த வகையில் தமிழில் திருலோக சீதாராம் அவர்களால் மொழி பெயர்க்கப்பட்டு ஆர்.கே.எல். பிரிண்டர்ஸ் அச்சகத்தின் பதிப்பாக வந்த தமிழ் மொழி பெயர்ப்பிலிருந்து சில வாசகங்களை இந்த இழையில் தொடர்வோம்.

2.31  நாமகரணத்தினால் பிராம்மணனுக்கு மங்களமும், ஷத்திரியனுக்குப் பலமும், வைஸ்யனுக்குத் தனமும், ஏனையோருக்கு அவர்தம் பணியையும்  குறிக்கும் பெயர்களை இட வேண்டியது.

2.32 பிராம்மனனுடைய பெயர் மேன்மையைக் குறிக்கும் சர்மன், ஷத்திரியனுக்குப் பலத்தைக் குறிக்கும் வர்மன், வைசியனுக்கு வளத்தைக் குறிக்கும் பூபதி, நாலாமவனுக்குப் பணிவிடையைக் குறிக்கும் தாசன் என்றிவ்வாறு அவரவர் பெயர்களுடன் பட்டங்கள் வழங்கி வர வேண்டியது.

2.44. பிராம்மணனுடைய பூணூல் பஞ்சினாலும், ஷத்திரியனுக்குச் சணப்பையினாலும், வைசியனுக்கு வெள்ளாட்டு ரோமத்தாலும் நூலிழைத்து மூவடமாகத் தோளில் அணிய வேண்டியது.

2.67. பெண்களுக்கு விவாகமே உபநயனமாகும். கணவனுக்குப் பணி புரிந்திருத்தலே அவர்களது குருகுலவாசமெனப்படும். இல்லத்தைக் காத்து நடத்துதலே அவர்களுக்கு சமிதா தானமாகும்.

பெயர் வைக்கும் போதே அதில் உயர்வு எது தாழ்வு எது என நிர்ணயிக்கின்றது மநு தர்மம். பிறக்கும் ஒரு குழந்தை பூமிக்கு வந்து விழும் போது அதன் உலகம் புதிது. அந்தப் புதிய உலகின் ஆரம்பமே சூத்திரர் எனும் வருணத்தாருக்கு அடிமை வாழ்வை சட்டமாக்கி அதனை உறுதி செய்கிறது மநு தர்மம். இதுதான் தர்மமா?

4ம் வருணத்தாருக்காவது வெளி உலகு என்ற ஒன்றினை விட்டு வைக்கும் மநு, பெண்களுக்கு நான்கு சுவர்களை மட்டுமே உலகமாக்குகின்றார். வெளி உலக வாசனை அற்ற அடிமைகளாகப் பெண்கள் இருத்தலை மநு தர்மம் சிறந்த தர்மமாகச் சொல்கின்றது. இதுதான் தர்மமா?

தொடரும்

சுபா

Sunday, March 12, 2017

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 109

பத்துப்பாட்டு மூல நூலோடு மேலும் சில படிகள் கிடைத்தால் ஒப்பீடு செய்து ஆராய்ந்து அதனை முறையாக வெளியிட முடியும் என்ற எண்ணம் உ.வே.சா மனதில் இருந்தது. ஆக, அவரது எண்ணம் நிறைவேறாத நிலையிலேயே திருநெல்வேலியிலிருந்து கும்பகோணம் திரும்ப வேண்டியதாயிற்று. ஆனாலும் கும்பகோணம் திரும்பிய பின்னரும் நெல்லையில் தனக்கு அறிமுகமானோருக்கெல்லாம் எழுதி எங்காகினும் மேலும் சில பிரதிகள் கிடைக்குமா எனத் தேடும் முயற்சியை அவர் தொடர்ந்து செய்து வந்தார்.

திருநெல்வேலியில் இருந்த போது ஆழ்வார் திருநகரியில் படித்த சான்றோர் சிலர் இருப்பதாகக் கேள்விப்பட்டது அவருக்கு மீண்டும் மீண்டும் நினைவு வந்து கொண்டிருந்தது. ஆகச் சரியான வாய்ப்புக்குக் காத்துக் கொண்டிருந்தார். அப்போது ஆவணி அவிட்டம் விடுமுறை தொடங்கியது. கல்லூரியில் விடுமுறை என்றவுடன் இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு ஆழ்வார் திருநகரி சென்று வருவோம் எனப் பயண ஏற்பாடுகளைச் செய்து விட்டுப் புறப்பட்டு விட்டார்.

உ.வே.சாவின் இந்த உத்வேகம் தான் அவரது தனிச் சிறப்பு. தான் செய்து முடிக்க வேண்டும் என மனதில் எண்ணிக் கொண்ட பத்துப்பாட்டு பதிப்பாக்கத்திற்காக அவரது மனம் அல்லும் பகலும் அதே நினைவுடன் இருந்தமையும் அதற்காக அவர் மேற்கொண்ட முயற்சிகளும் அவரது உழைப்பின் தீவிரத்தை நன்கு பிரதிபலிக்கின்றன. இந்த உத்வேகம் இருந்தால் மட்டுமே எடுத்துக் கொண்ட காரியங்களை ஒருவரால் சாதிக்க முடியும். பலர் இதைச் செய்யப்போகின்றேன், அதைச் செய்யப்போகின்றேன் எனச் சொல்லிக் கொள்வதோடு நின்று விடுகின்றனர். காரியத்தில் இறங்குவதில்லை. ஏனெனில் ஒரு காரியத்தைச் செய்ய அதற்கான உழைப்பைப் போட வேண்டிய அவசியம் இருக்கின்றது. அதற்குத் திட்டமிடுதல் வேண்டும். பின் அதனைச் செயல்படுத்தும் திறனும் வேண்டும். பலருக்கு அதற்குப் பொறுமை இருப்பதில்லை. இதனால் செய்ய நினைக்கும் எந்தக் காரியத்தையும் செய்து முடிக்காமல், தனது இயலாமைக்குப் புறத்தே காரணத்தைத் தேடி தம் இயலாமைகளைப் பார்த்து சரி செய்து கொள்ளத்தவறி விடுகின்றனர்.

ஒரு வழியாக அந்த விடுமுறையில் ஆழ்வார் திருநகரி வந்தடைந்தார் உ.வே.சா. அங்குச் சுப்பையா முதலியாரவர்களுடன் சேர்ந்து ஸ்ரீ வைகுண்டம் சென்றார். போகும் போது வெள்ளூரில் சில கவிராயர்கள் வீடுகளில் உள்ள ஏடுகளை அலசிப் பார்த்தார். அங்குப் பத்துப்பாட்டு கிடைக்கவில்லை. வேறு சில நண்பர்கள் இல்லங்களிலும் தேடினார். அங்கும் இவை கிடைக்கவில்லை. சட்டென்று லட்சுமண கவிராயர் என்பவர் தனது மாமனார் இல்லத்தில் பல சுவடிகள் இருப்பதாகச் சொல்லி அவரிடமிருந்து கேட்டுச் சொல்வதாகச் சொல்லிச் சென்றார். மாலை திரும்பி வந்த போது தன் மாமனாரிடம் ஒரு சுவடிக்கட்டுத்தான் இருந்ததாகவும் அதனைப் பார்த்து உ.வே.சா தேடும் நூல்கள் அதில் உள்ளனவா எனப்பார்க்கும் படியும் கேட்டுக் கோண்டார்.

அந்தச் சுவடிக்கட்டை நிலா வெளிச்சத்திலேயே உ.வே.சா பிரித்துப்பார்த்தார். வியப்பில் ஆழ்ந்தார்.
முல்லைப்பாட்டு என்ற பெயர் அந்தச் சுவடியில் எழுதப்பட்டிருந்தது.

அவருக்கு அப்போது உண்டான மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. முதலிலிருந்து திருப்பி திருப்பி அந்த நூலைப் பார்த்தார். திருமுருகாற்றுப்படை முதல் ஏழு பாட்டுக்கள் வரிசையாக அந்த சுவடிக்கட்டில் இருந்தன.

அன்றிரவு முழுவதும் மகிழ்ச்சியில் அவருக்குத் தூக்கம் வரவில்லை என்பதை அவர் "என் சரித்திரத்தில்" குறிப்பிடும் போதே அவரது மனதின் ஆர்வமும், உற்சாகமும், மகிழ்ச்சியும் நம்மையும் தொற்றிக் கொள்கின்றன.

அதன் பின்னர் ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, புறப்பொருள் வெண்பாமாலை ஆகியவற்றின் பிரதிகளையும் லஷ்மண கவிராயரிடம் வாங்கிக்கொண்டு, ஆழ்வார் திருநகரியிலிருந்து திருநெல்வேலி வந்து அங்கே பார்க்க வேண்டிய நண்பர்களையும் பார்த்து விட்டுத் திரும்பியிருக்கின்றார்.

நானும் திருநெல்வேலி, தூத்துக்குடி ஆழ்வார் திருநகரி போன்ற ஊர்களுக்குச் சென்றிருக்கின்றேன். இன்று இருக்கின்ற போக்கு வரத்து வசதிகளின் நிலையைக் கணக்கில் கொண்டாலும், இந்தப் பயணம் எடுக்கும் கால நேரம் மற்றும் தேடுதலுக்காகச் செலவிடும் நேரம் ஆகியனவற்றை நினைத்துப் பார்க்கும் போது அதிலிருக்கும் சிரமத்தை என்னால் புரிந்து கொள்ள முடிகின்றது. ஆனால் அக்காலத்தில் போக்குவரத்து வசதிகள் குறைந்த நிலையில் கூட தனக்குக் கிடைத்த விடுமுறை நாட்களை சுவடிகளைத் தேடி ஆய்வு செய்து பதிப்பிக்கும் முயற்சிக்காகவே உ.வே.சா செலவிட்டமையை எண்ணி அவரது உழைப்பை எண்ணிப் பார்க்கின்றேன். அந்த மகத்தான உழைப்பின் பலனாகத்தான் இன்று நமக்குச் சங்கத்தமிழ் நூல்கள் கிடைத்திருக்கின்றன என்பதைப் புரிந்து அந்த உழைப்பைப் போற்ற வேண்டியது தமிழ் மாணவர்கள் நம் அனைவரது கடமையும் அல்லவா?


தொடரும்..
சுபா

Saturday, March 11, 2017

மநுதர்ம சாஸ்திரம் - ஏன் தமிழர்களுக்கான ஒரு நூலல்ல!!

 தமிழ் நிலத்தில் தமிழ் மக்களின் பண்பாட்டில் வைதீக தருமம் அதன் விரிவாக்கத்தை அமைத்த பின்னர் மிகப்பல சமூகக் கேடுகள் தமிழர் பண்பாட்டுத் தளத்தில் நுழைந்தன. அதன் தொடர்ச்சியாகச்   சாதி அமைப்பும் அதனைச் சார்ந்த கொள்கைகளும் "நீதி", "சமய ஒழுக்கம்" என்ற பெயரில் அக்கால அரசுகளின்  துணையோடு விரிவாக்கம் கண்டன. இதனால் தமிழ்ப்பெருங்குடி மக்களான பழங்குடி மக்கள், சமூகத்தின் கடைக்கோடி மனிதராக சமூதாய அளவுகோளில் வைக்கப்படும் நிலமை உருவானது. அது இன்றும் தொடர்கின்றது. 


இந்தச் சமுதாய மாற்றத்தை ஏற்படுத்திய வைதீக  சாத்திரங்களாக அமைவனவற்றுள் மநுதர்ம சாத்திரம் முக்கிய இடம் வகிக்கின்றது. கல்வி அறிவு எட்டாக்கணியாக இருந்த சாமானிய மக்கள்  அரசும், சமய அமைப்பும் சொல்லும் நீதியையே எதிர் கேள்வி கேட்காமல் இருந்த காலகட்டத்தில், தமிழரிடையே பிரிவினை என்பது சமூக ரீதியாக கட்டமைக்க இந்த மநு தர்ம சாத்திரம் மிகப் பெரிய அளவில் உதவி இருக்கின்றது.  கடந்த சில காலங்களில் சமஸ்கிருதத்தில் இருந்த மநு தர்ம சாத்திரம்  ஏனைய மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டபோது, ஆங்கிலம் மற்றும் தமிழ் வழியாக இந்த நூலையும் அது என்ன தான் சொல்கின்றது என்பதையும் அறிந்து கொள்ள பலருக்கும் வாய்ப்பு அமைந்தது.

அந்த வகையில் தமிழில் திருலோக சீதாராம் அவர்களால் மொழி பெயர்க்கப்பட்டு ஆர்.கே.எல். பிரிண்டர்ஸ் அச்சகத்தின் பதிப்பாக வந்த தமிழ் மொழி பெயர்ப்பிலிருந்து சில வாசகங்களை இந்த இழையில் பகிர்ந்து  கொள்கிறேன்.

வாசித்து அறிந்து கொள்வோமே!!

1.87 உலக நியதி நின்று நிலைக்கும் பொருட்டாக நால் வருணத்தாருக்கும் உரிய கடமைகளைத் தனித் தனியே கடவுள் விதித்தார்.

1.88. அந்தணாளர் வேதம் ஓதியும், ஓதுவித்தும், தியாக வேள்விகள் புரிந்தும், புரிவித்தும், செல்வராயின் பிறர்க்கு ஈந்தும், வறிஞராயின் செல்வரிடம் ஏற்றும் வாழத் தக்கவராயினர்.

1.89. பிரஜா பரபாலனம் செய்வது, ஈகை. வேள்விகள் புரிவது, வேத பாராயனம் செய்விப்பது, விஷய சுகங்களின் மனத்தை அலைய விடாமல் உறுதியாக நிற்பது மன்னர் கடமையாகும்.

1.90. வாணிபர்க்கு ஆநிரைகளைக் காத்தல், தானம் கொடுத்தல், கடலாரம், மலையாரம், கனிப்பொருள், விளை பொருள், தானியங்கள் இவற்றை வியாபாரம் செய்தல், வட்டிக்கு விடுதல், பயிர்த்தொழில் செய்தல் ஆகியவற்றை விதித்தார்.

1.91. ஏவலரான மக்கள் மேலே சொன்ன மூவர்க்கும் பொறாமையின்றிப் பணி புரிதல் ஒன்றையே முதன்மையாகக் கொள்ளக் கடவரென்றும், ஈதல் முதலிய சத்கருமங்களும் அவர்களுக்கு உண்டென்றும் படைத்தார்.

ஆக எந்தப் பொறாமையுமின்றி அந்தணர், சத்திரியர், வைசியருக்கு சேவகம் செய்வதே சூத்திரரின் கடமை என நிர்ணயிக்கின்றது மநு தர்மம்.  இது ஒரு தர்மமா? 

இக்காலத்தில் சமூகத்தின் எல்லா சமூகத்தோரும் கல்வி கற்று, எது நீதி எது நியாயம் எது அநியாம என உணர்ந்திருக்கின்றோம். அடிப்படை மனித  உரிமை அறிந்த உலக மக்கள், மநுதர்மம் கூறும் இந்த வாசகங்கள் இன்னும் நாகரிகம் அடையாத ஒரு சமூகத்தின் சிந்தனைகளின் பிரதிபலிப்பு எனத்தான் எண்ண முடியும்.

தொடரும்..

சுபா

Monday, March 6, 2017

நாவாய் - கடல்சார் வரலாற்றாய்வுகள் - பகுதி 9

தமிழ்ப்பல்கலைக்கழக வெளியீடாக வந்திருக்கும் கட்டுரைத் தொகுப்பு நூலிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சில கட்டுரைகளைப்பற்றி என் பார்வையைப் பதிகின்றேன்.

இந்த நூலில் 12வது கட்டுரையாக இடம்பெறுவது முனைவர் சொ.சாந்தலிங்கம் அவர்களின் “ காயல்பட்டினம் - ஓர் இசுலாமிய வணிகத்தலம்” என்ற கட்டுரை.

பழையகாயல், புன்னைக்காயல், காயல்பட்டினம்  என் மூன்று நகரங்களாக இன்று இருக்கும் ஊர்கள் இணைந்து ஒரே ஊராக காயல்பட்டினம் என்ற பெயரில் வழங்கப்பட்டது. இதன் அருகில் இருக்கும் கொற்கை சங்க காலத்தில் புகழ்மிக்க நகரமாக விளங்கியது. 

முதன் முதலில் அரேபிய முஸ்லிம்கள் கிபி.633ல் காயலில் வந்து குடியேறுகின்றனர்.இக்காலத்தில் கடற்கரைப்பகுதியில் ஒரு மசூதி கட்டப்பட்டது. அது கடற்கரை மசூதி என்ற பெயரில் வழங்கியது.

அரேபியர்களின் 2வது குடியேற்றம் காயலில் கிபி.842ல் எகிப்திலிருந்து வந்த இசுலாமியர்களால் நிகழ்ந்தது இவர்களால் குப்தா பெரிய பள்ளி என்னும் மசூதி கிபி 842ல் கட்டப்பட்டது.

வாசப், இபின்பதுதா, மார்க்கோபோலோ ஆகிய வெளிநாட்டுப் பயணிகள் காயல்பட்டினம் துறைமுகத்தைத் தங்கள் குறிப்பேடுகளில் சிறப்பித்துக் கூறியிருக்கின்றனர். 

காலத்தால் முந்திய கடற்கரைப் பள்ளிவாசலில் (கிபி 640) இரண்டு கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன. ஒன்று ஜடாவர்மன் கால கல்வெட்டு (கிபி1190-1216). இப்பள்ளிவாசலுக்கு வழங்கப்பட்ட நிலக்கொடை இக்கல்வெட்டில் காணப்படுகின்றது.

கிபி900-1500 வரை காயல்பட்டினத்தில் இசுலாமியர் சிறப்பான வாழ்க்கையைப் பெற்றிருந்தனர். கிபி 1530 பின்னர் போர்த்துக்கீசியர்களின் வருகை இங்கே சலசலப்பை உண்டாக்கியது. முத்துக்குளிக்கும் தொழிலில் போட்டி உருவானது.

வகுதை, வகுதாரி என்ற பெயர்களும் காயல்பட்டினத்திற்கு உண்டு.

அஞ்சுவண்ணத்தார் என்ற வணிகக்குழு, எகிப்திலிருந்து முகமது கில்ஜியுடன் கிபி 850ல் வந்து தங்கிய பக்ரி, ஹாசிம், பருக்கி, உம்மையா, போர்வீரர் குழு ஆகிய ஐந்து குழுக்களுமே ஆவர்.

முதல் தமிழ் இசுலாமிய இலக்கியம் எனப்படும் மிராஜ்மாலை ஆலிப் புலவரால் எழுதப்பட்டது. கிபி 16ன் பிற்பகுதியைச் சார்ந்தது இந்த நூல்.

வரலாற்று அடிப்படையில் பல சான்றுகள் நிறைந்த நகரம் காயல்பட்டினம் என்பதை கட்டுரை ஆசிரியர் விரிவாக இக்கட்டுரையில் வழஙியுள்ளார்.

காயல்பட்டினம் சென்று இங்கு பல வரலாற்றுச் சான்றுகளைப் பதிய வேண்டும் என்ற எண்ணம் எழுகின்றது. அடுத்த எனது தமிழகப் பயணத்தில் இந்த ஊருக்குச் செல்ல வேண்டும்!


சுபா

Saturday, March 4, 2017

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 108

திருநெல்வேலியில் பத்துப்பாட்டின் முழுமையான நல்ல பிரதிகள் கிடைக்குமா என உ.வே.சா தேடித் திரிந்த செய்திகளை முந்தைய பதிவில் குறிப்பிட்டிருந்தேன். ஆயிரக்கணக்கான சுவடிகளை இந்த ஊர் கவிராயர்கள் வைத்திருந்தார்கள் என்பதனையும் அவையெல்லாம் இன்று எக்கத்தியாயின என்றும் என் அய்யத்தை எய்ழுப்பியிருந்தேன். இனி உ.வே.சாவின் பத்துப்பாட்டு தேடலுடன் நாமும் இணைந்து செல்வோம். 

திருநெல்வேலியில் அடையாளம் காணப்பட்ட கவிராயர்கள் வீடுகள் ஒவ்வொன்றிலும் ஏறிச் சென்று அறிமுகம் செய்து கொண்டு நெல்லையைப்ப கவிராயரும் உ.வே.சாவும் பத்துப் பாட்டு நூல்களைத் தேடினர். எங்கும் கிட்டவில்லை. இன்னும் ஒரு வீடுதான் இருக்கின்றது. அங்கு நிச்சயம் கிடைக்க வாய்ப்பிருக்கின்றது என்று நெல்லையப்ப கவிராயர் கூறியது சற்று உற்சாகம் அளித்தது. அவர்கள் செல்லவிருந்த வீடு அம்பலவாண கவிராயருடைய மாணாக்கர்களுள் சிறந்தவரான திருப்பாற்கடநாத கவிராயர் என்பவரது பேரனின் வீடு. முதல் நாளே சென்று தம்மை அறிமுகப்படுஹ்ட்திக் கொண்டனர் இருவரும். மறு நாள் காலையில் உ.வே.சா, நெல்லையப்ப கவிராயர் மற்றும் இந்து கல்லூரியில் தமிழாசிரியராக இருந்த அனந்த கிருஷ்ண கவிராயர் ஆகிய மூவரும் அந்த வீட்டிற்குச் சென்றனர். 

வீட்டிலுள்ள புத்தகங்களையெல்லாம் திருப்பாற்கடநாதன் எடுத்து வைத்தார். ஏறக்குறைய 500 சுவடிகள் இருந்தன. அதில் பெரும்பாலானவை அவர் பாட்டனார் திருப்பாற்கடநாத கவிராயர் எழுதியவை. அதில் பெரிய சுவடி ஒன்றை அனந்த கிருஷ்ண கவிராயர் எடுத்தார். அது திருமுருகாற்றுப்படை மற்றும் பொருநராற்றுப்படை எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. சுவடியை ஒன்றன் பின் ஒன்றாக அனைத்தையும் பார்த்தனர். பத்துப் பாட்டு முழுவதுமாக உரையுடன் இருந்தது. தேடி வந்த பத்துப்பாட்டின் நல்ல பிரதி கிடைத்ததை எண்ணி உ.வே.சாவின் அகம் மகிழ்ந்தது. இதனை உ.வே.சா இப்படிக் குறிப்பிடுகின்றார். 

"மிகவும் பழமையான ஏடு. எனக்கே அளவற்ற மகிழ்ச்சியும் பிரமையும் உண்டாயின. சுவடியின் இறுதியில், “ஸ்ரீ வைகுண்டத்திலிருக்கும் கவிராயரிடத்தே தொல்காப்பிய ஏட்டைக் கொடுத்துக் கொல்ல மாண்டு,,,,, வாங்கி வந்தேன்” என்று எழுதியிருந்தது. கணக்குப் பார்த்ததில் அது 150 வருஷங்களுக்கு முற்பட்டதென்றும் ஏடு எழுதிய காலம் அதற்கும் 200 வருஷங்களுக்கு முன்பு இருக்கலாமென்றும் தோன்றின. அப்பால் நிதானித்துக் கொண்டு மற்ற ஏடுகளைப் பார்த்ததில் சிந்தாமணியும், கொங்குவேண்மாக் கதையும், சில பிரபந்தங்களும் இருந்தன. கொங்குவேண்மாக்கதை முன்னே கூறிய பிரதியைப் பார்த்து எழுதியது. அதில் முதலுமில்லை; இறுதியுமில்லை. அப்போது 12 மணியாயிற்று. சொந்தக்காரரிடமிருந்து அந்தப் பிரதிகளை யெல்லாம் மிக்க நன்றியறிவுடன் பெற்றுக்கொண்டு ஜாகைக்கு வந்து சேர்ந்தேன். பத்துப் பாட்டு முழுவதுமுள்ள பிரதி கிடைத்ததில் என் மனம் மிக்க இன்பமடைந்தது." 

இந்தப் பத்துப்பாட்டு உரையுடன் கூடியதாக இருந்தது. மூலம் மட்டும் உள்ள பத்ஹ்டுப்பாட்டு கிடைக்குமா என தேடிப்பார்க்க வேண்டும் என்ற எண்ணம் உதிக்கவே உ.வே.சா இன்னும் சிலரது இல்லங்களுக்குச் சென்று தேட வேண்டும் என முயற்சியைத் தொடங்கினார். அப்போது கல்லாடத்துக்கு உரையெழுதிய மயிலேறும் பெருமாள் பிள்ளை என்னும் வித்துவானின் நினைவு உ.வே.சாவிற்கு வந்தது. அவரது சந்ததியினரிடம் நிச்சயம் பத்துப்பாட்டு நூல் மூலம் இருக்கலாம் என நினைத்து அவர்கள் இல்லத்தைத் தேடிச்சென்றார். 

அவர் பரம்பரையில் வந்த அதே பெயர் கொண்ட ஒருவரைக் கண்டுபிடித்தார்கள். அவரும் தாம் அந்த வித்ஹ்டுவானின் சந்ததியில் வந்தவர்தான் எனச் சொல்லி, ஆனால் தாம் ஆங்கிலப் படிப்பு படித்டு குமாஸ்தாவாகப் பணி புரிவதாகவும் சட்ட புத்தகங்கள் தாம் தம் வீட்டில் உள்ளன, தமிழ் நூல்கள் ஏதும் இல்லை எனச் சொல்லிவிட்டார். வீட்டில் நிச்சயம் எங்காகினும் இருக்கலாம் என உ.வே.சா மேலும் வற்புறுத்திக் கேட்க அவருக்கோ கோபம் வந்து விட்டது. இந்த உரையாடலை உ.வே.சா பதிந்திருக்கின்றார். 

“அப்படிச் சொல்ல வேண்டாம்; ஒன்று இரண்டாவது இருக்கலாம். தேடிப் பாருங்கள்” என்று நான் சொன்னேன். 
“நான் தான் வீட்டைச் சுத்தமாக வைத்திருக்கிறேனே. எனக்குத் தெரியாமல் எங்கே ஒளிந்து கொண்டிருக்கும், எங்கள் வீட்டிற்கு வர வேண்டாமென்று சொல்லவில்லை. வாருங்கள்; இருங்கள். தாம்பூலம் தருகிறேன். ஆனால் ஏடு என்ற பேச்சு மாத்திரம் எடுக்காதீர்கள். என்னிடம் இருந்தால் அல்லவா உங்களுக்குக் கொடுப்பேன்” என்று சொல்லி விட்டார். 
நான் மறுபடியும் ஏதோ சொல்ல வாயெடுத்தபோது, “எனக்கு வேலையிருக்கிறது; விடை கொடுங்கள், போய் வருகிறேன்” என்று சொல்லிச்சென்று விட்டார். 
“கல்லாடத்துக்கு உரை எழுதிய மயிலேறும் பெருமாள் பிள்ளை எங்கே? அவர் பரம்பரையினராகிய இந்த மயிலேறும் பெருமாள் எங்கே? இந்த வம்சம் இப்படியா ஆகவேண்டும்!” என்று நான் வருந்தினேன். 

உ.வே.சா எதிர்பார்த்ததோ வேறு. ஆனால் அங்கு நிகழ்ந்ததோ வேறு. 

தமிழறிஞர்கள் பலரது சந்ததியினர் தமிழ்ப்பற்று குறைந்து காணப்படுவதும் தமிழ் மொழிமேல் பற்றில்லாது ஆங்கில மோகம் கொண்டு செயல்படுவதும் வருத்தத்திற்குரியது. இத்தகைய பலரால் தான் பல ஏட்டுச் சுவடிகள் குப்பைகளாகப் புறக்கணிக்கப்பட்டு வீணாயின. தமிழ்க் களஞ்சியங்களின் அருமை அறியாத இத்தகையோர் தமிழுக்கு இழைத்தது பெரும் கேடு! 

தொடரும்..

சுபா

நாவாய் - கடல்சார் வரலாற்றாய்வுகள் - பகுதி 8

தமிழ்ப்பல்கலைக்கழக வெளியீடாக வந்திருக்கும் கட்டுரைத் தொகுப்பு நூலிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சில கட்டுரைகளைப்பற்றி என் பார்வையைப் பதிகின்றேன்.

இந்த நூலில் 8வது கட்டுரையாக இடம்பெறுவது திரு.வே.சாமுவேல் அருள்ராஜ் அவர்களின் “ மரபுவழிக்கலங்களும் அவற்றைச் செலுத்தும் நுட்பங்களும்” என்ற கட்டுரை.

இந்தியக் கப்பற்கலை தொடர்பான சான்றுகள் மொகஞ்சதாரோ முத்திரைகளில் உள்ளன. தொல்காப்பியக் குறிப்புக்கள் நீர்வழி நிலவழி வணிகத்தைப் பற்றி குறிப்பிடுகின்றது. 

கொங்கு தேசத்திற்கும் மேலை நாடுகளில் யவனர், கிரேக்கர் பாபிலோனியரோடு வணிகம் நடந்ததற்குச் சான்றாக பண்டைய நாணயங்கள் கிடைத்துள்ளன.

கலங்களின் வகைகள் எனும் போது இலக்கியத்தில் 18 வகையான கலங்கள் குறிப்பிடப்படுகின்றன. இவற்றை
  • கட்டு மர வகை
  • தோணி வகை
  • வள்ளம் வகை 

எனப்பிரித்திருக்கின்றார்கள்.

கட்டுமர வகை தொடர்பான குறிப்புக்கள் சங்க இலக்கியங்களில் அகநானூற்றிலும் பரிபாடலும் சொல்லப்படுகின்றன.

தோணி வகை கலங்கள் மீன் பிடிக்கப் பயன்படுத்தப்பட்டன. இவற்றை பற்றிய குறிப்புக்கள் பரிபாடல், புறநானூறு , அகநானூறு பாடால்களில் உள்ளன.

நீண்ட தூரப்பயணத்துக்கு ஏதுவாக வள்ளம் என்ற வகை பெரிய கப்பல்களை பண்டைய தமிழர்கள் உருவாக்கினர். வகை வகையான வேலைப்பாட்டுடன் கூடிய வள்ளம் வகை கலங்களைப் பற்றி சிலப்பதிகாரம் கூறுகின்றது.

 கடல் நீரோட்டம் பற்றிய அறிவு பண்டைய தமிழருக்கு நிறைவாக இருந்தது. கலங்கள் திசையறியாமல் தத்தளிக்காமல் இருக்க களங்கரை விளக்கத்தை உருவாக்கினர் பண்டைய தமிழர். இது பற்றிய குறிப்பு சிலப்பதிகாரம், பட்டினப்பாலை பெரும்பாணாற்றுப்படை மற்றும் அகநானூறு ஆகிய சங்க இலக்கிய நூல்களில் காணலாம்.

இப்படி நல்ல பல தகவல்களை இக்கட்டுரை நமக்கு வழங்கியிருக்கின்றது.

கடல் சார்ந்த அறிவு, வெவ்வேறு வகையான கப்பல் கட்டுதல் ஆகியவற்றில் பண்டைய தமிழர் சிறந்து விளங்கினர் என்பதில் ஐயமில்லை. இந்த அனுபவங்கள் பண்டைய தமிழர் நீண்ட தூரம் கடல் பயணம் மேற்கொள்ள அவர்களுக்கு உதவியிருக்கின்றது. பண்டைய தமிழரின் கடற்பயணங்கள் குறித்த சான்றுகளைத் தேடும் பணி முனைப்புடன் தொடரப்பட வேண்டும். 

சுபா

Thursday, March 2, 2017

சமபந்தி சாப்பாடு - சமூக நல்லிணக்கத்திற்கு ஒரு வழி

 முனைவர்.க.சுபாஷிணி,

ஜெர்மனி

​சாதி பாகுபாடு தமிழ் சமூகத்தில் ஏற்படுத்தி வைத்திருக்கும் அவலங்கள் சிறிதல்ல. சமூகத்தின் பல பரிமாணங்களைத் தொட்டு அசைத்து சீரழிவினை ஏற்படுத்தி வைத்துள்ளமையில் சாதி அமைப்பின் பங்கு அளப்பறியது.  பல சீரழிவுகளை இது ஏற்படுத்தியிருக்கின்றது என்ற நிலையில் அதில் ஒரு கூறாகிய ”சேர்ந்து உண்ணல்” அல்லது ”சமபந்தி” என்ற ஒரு கருத்தை மட்டும் இந்தக்கட்டுரையில் காண்போம்.

வர்ணாசிரமத்தை அடிப்படை நீதியாக முன் வைக்கும் வைதீக சமயம் யாருடன் சேர்ந்துண்ணுதல் தகும், யாருடன் சேர்ந்து உண்ணக்கூடாது என ஸ்மிருதிகளில் குறிப்பிடுகின்றது.  வசிட்டர் கூறும் போது, கைவினைஞர்கள், மருத்துவர், வட்டித்தொழில் புரிபவர், வண்ணார், பஞ்சமர், மதுவியாபாரி,உளவாளி, வேடுவர், செருப்புத்தைப்பவர் ஆகியோரிடமிருந்து பிராமணர்  உணவு பெறக்கூடாது என்றும் ஒரு சூத்திரன் கொடுத்த உணவை சாப்பிடும் பிராமணன் இறந்துபோனால் மறு பிறவியில் பன்றியாகப் பிறப்பான் அல்லது அந்தச் சூத்திரன் குடும்பத்தில் பிறப்பான் எனக் கூறுகின்றார். ஒரு சண்டாளன் என ஒதுக்கப்பட்டவன் நீர் அருந்துகின்ற குளத்திலிருந்து நீர் பருகிய ஒரு பிராமணன் அதற்குப் பரிகாரமாக ஒரு பசுமாட்டின் சிறுநீரை பல நாட்கள் குடிக்க வேண்டும் எனக் குறிப்பிடுகின்றார்.  

மனுதர்ம சாத்திரத்தை எழுதிய மனுவோ மேலும் விரிவாக உணவு உண்ணுதலை ஆராய்கின்றார்.

ஒரு உணவுப்பந்தியில்​ அனைவரும் சேர்ந்து அமர்ந்து உணவு உண்ணக் கூடாது என்றும், சாதி விட்டு தாழ்ந்த குலத்தில் பெண் எடுத்தவன், விதவையை மணந்து பிறந்த பிள்ளை, தாழ்ந்த குலத்தானிடம் கலைகள் பயின்றவர்கள், கீழ்ச்சாதியினருக்குப் பாடம் நடத்தியோர், கீழ்ச்சாதியினர் என வகைப்படும் அனைவருடனும் பிராமணர் சேர்ந்து சாப்பிடக்கூடாது என சட்டம் இயற்றுகின்றார்.

சாப்பிட்டுக் கொண்டிருக்கும் ஒரு அந்தணனை வேறு குலத்தவன் தொட்டால் அது பாவமாகிவிடும் என்றும் ஒரு அந்தணன் சாப்பிடும் போது யாராவது பார்த்து விட்டால் அந்த அந்தணனுக்கு யார் தர்மம் செய்து உணவிட்டார்களோ அவர்களது புண்ணியமெல்லாம் வீணாகிவிடும் என்பதால் ஒரு அந்தணன் யாரும் காணாத இடத்தில் அமர்ந்து மறைந்து சாப்பிட வேண்டும் எனக்குறிப்பிடுகின்றார்.

ஈழத்து மண்ணில் சைவம் வளர்த்த ஆறுமுக நாவலர் சமபந்தி பற்றி தன் கருத்தினை பதிந்திருக்கின்றார். இருபத்து நான்கு வகையான  ஒழுக்கமின்மை தன்மைகளைப் பட்டியலிடும் அவர் மூன்றாவதாகக் குறிப்பிடும் ஒழுக்கக்கேட்டில், மாமிசம் புசிப்பவர், கள்ளுச் சாராயம் புசிப்பவர், தாழ்ந்த சாதியர் ஆகியோருடன் இணைந்து அமர்ந்து சாப்பிடுவதும் அல்லது இவர்கள் பார்க்கவும் சைவர்கள் சாப்பிடுவதும் ஒழுக்கக்கேடு எனக்குறிப்பிடுகின்றார்.  அதோடு விதவைகளும், விதவைகளைத்திருமணம் செய்தோரும், விதவைகளுக்குப் பிறந்தோரும் கூட சேர்ந்து அமர்ந்து சாப்பிடுவது சைவர்களுக்கு ஒழுக்கக்கேடு என வரையறுக்கின்றார். அன்பே சிவம் என்ற சைவ சித்தாந்தக்கொள்கைக்கு முற்றிலும் எதிர்மறையான நடைமுறைகளாக இவற்றை ஆறுமுக நாவலர் வலியுறுத்தி இருப்பதைக் காண்கின்றோம்.

ஐரோப்பாவிலிருந்து வந்த கிருத்துவ மதத்தில் அடிப்படையில் சாதியக் கோட்பாடு இல்லை. ஆனால் இந்தியாவிலும், இலங்கையிலும் கிருத்துவமும் சாதிப்பிரிவினையை வற்புறுத்தி உள்வாங்கிக் கொண்டு தான் இயங்குகின்றது. இதனால் அனைவருமாக இணைந்து நற்கருணை பெறுவது கூட நடைபெறாது,  உயர்சாதி கிருத்துவர்களுக்கு ஒரு நாளும் ஏனைய கிருத்துவர்களுக்கு மற்றொரு நாளும் என பிரிக்கப்பட்டது. 

கடந்த நூற்றாண்டில் உணவு உண்ணலில் சாதிபேதம் காண்பதை தடுக்கும் பல முயற்சிகள் பல தளங்களில் நிகழ்ந்தன. வடலூர் இராமலிங்க வள்லலார், ஸ்ரீ நாராயண குரு போன்றோரின் முயற்சிகள் இதில் குறிப்பிடத்தக்கவை. வடலூர் இராமலிங்க வள்ளலார் மக்கள் சிந்தனையில் இருந்த பல அழுக்கான சிந்தனைகளைக் களைந்து எல்லோரும் ஒன்றே என்ற  சீர்திருத்தக்கருத்துக்களை முன் வைத்து இயங்கினார். பஞ்சம் விரித்தாடிய காலத்தில் பசித்தோருக்கு சாதி இன பாகுபாடின்றி உணவு வழங்கி பசிப்பிணி போக்கும் முயற்சிகளில் தீவிரமாகச் செயல்பட்டார்.

இன்று இந்தியா மற்றும் இலங்கையின் நகர்ப்புறங்களில் உணவகங்களில் சாதிபேதமின்றி மக்கள் வந்து உணவு உண்டு செல்ல முடிகின்றது. ஆனால் கிராமப்புறங்களிலோ இந்த நிலை இன்னமும் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை.  ஒரு தாழ்ந்த சாதிக்காரர் உணவுக்கடை வைத்தால் அதற்குச் சென்று  சாப்பிடலாம் என்ற எண்ணம் தம்மை உயர்சாதிக்காரர்களாகக் கூறிக்கொள்வோரிடத்தில் இல்லை. இதனை தீட்டு எனப்பெயரிட்டு அத்தகையக் கடைகளுக்குச் செல்லாமல் ஒதுங்கிச்செல்கின்ற போக்கு இன்றளவும் தமிழககிராமங்களில் நடைமுறையில் இருக்கின்றது. 

அடிப்படையில் உயிர்கள் அனைத்தும் ஒன்றே. 
கூடி வாழ்ந்தால் கோடி நன்மையைக் காணலாம். பிரிவினையை வளர்ப்பது மக்களிடையே விரிசலைத்தான் பெரிதாக்கும் என்பதோடு இதனால் ஏற்படுவது பொருள் இழப்பும் மன உளைச்சலுமாகத்தான் இருக்கும். சமூக நல்லிணக்கத்தைப் பேணுவதற்கு சமபந்தி சாப்பாட்டு முறையை விரிவாக்க வேண்டும். எல்லா தளங்களிலும் சாதி மத இன வேறுபாடுகளின்றி எல்லோரும் இணைந்து அமர்ந்து உணவுண்டு மகிழ்ந்திருக்க வேண்டும்.  இது மனித நல்லிணக்கத்திற்கு உதவும்.

Wednesday, March 1, 2017

நாவாய் - கடல்சார் வரலாற்றாய்வுகள் - பகுதி 7

தமிழ்ப்பல்கலைக்கழக வெளியீடாக வந்திருக்கும் கட்டுரைத் தொகுப்பு நூலிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சில கட்டுரைகளைப்பற்றி என் பார்வையைப் பதிகின்றேன்.

இந்த நூலில் 7வது கட்டுரையாக இடம்பெறுவது தொல்லியல் அறிஞர் பு.சந்திரசேகரன் அவர்களின் “ பண்டைய, இடைக்காலக் கடல் ஆதிக்க வரலாறு” என்ற கட்டுரை.

சங்ககால பரதவர்கள் (மீனவர்கள்) கடல் ஆளுமையில் சிறந்திருந்தார்கள் என்பதையும், சங்ககால மன்னர்கள் கடற்கொள்ளையர்களை விரட்டியடித்தார்கள் என்றும், அரிக்கமேடு, அழகன்குளம் போன்ற துறைமுகப் பட்டினங்களில்  ரோமானிய நாணயங்கள்  புழக்கத்தில் இருந்தன என்பதனையும்  இராஜேந்திர சோழ மன்னனின் கடாரத்திற்கான போர் ஆகிய செய்திகளை அக்கால சமூக, பொருளாதார, அரசு அமைப்புக்களுடன்  இணைத்துப் பார்க்கும் வகையில் கட்டுரையாளர் இக்கட்டுரையைப் படைத்திருக்கின்றார்.

பரதவர்களின் ஆதிக்கம் என்பது அவர்களின் வாழ்வாதாரத்திற்கு என அமைந்திருந்தது. ஆக இந்த ஆதிக்கம்  பொருளாதார ஆதிக்கம் என்ற வகையில் அமைகின்றது.

அயல்நாட்டவர்கள் தமிழகத்தின் பண்டைய நகர்களுக்கு வந்து வணிகம் மேற்கொண்டபோது  வெளிநாட்டுப் பொருட்களுக்கு ஏற்ற உள்நாட்டுப் பொருட்கள் பரிவர்த்தனைச் செய்யப்பட்டன. இதனால் பரிமாற்றம் செய்து கொள்ளும் எண்ணத்துடன் பொருள் உற்பத்தி என்பது நிகழ்ந்தது. மிளகு, விலையுயர்ந்த கற்கள், முத்து, பட்டு, பருத்தித் துணி என்பன இவ்வகை உதாரணங்களில் அடங்குகின்றன.

இனக்குழு சமுதாயத்தில்  சிற்றரசர்களே வணிகம் செய்வதும் நிகழ்ந்தது.  

வணிக முதலீடு வணிக குழுக்களின் தோற்றத்திற்குக் காரணமாகியது. நிகமம், சாத்து என்ற வணிகக்கூட்டங்கள் உருவெடுத்தன.

சங்ககால மன்னர்கள் மற்றும் குடிகளின்  வீழ்ச்சிக்கு  கடல்கோளும் மிக முக்கியக் காரணமாகியது.

சாத்து, நிகமத்தைச் சார்ந்த பெரும் வணிகர்கள், பல்லவர்கால சிறுபாண்மை உற்பத்தியாளர்களுடன் சேர்ந்து திசையாயிரத்து ஐந்நூற்றுவராக உருவாகினார்கள். இந்த அமைப்பு வேளாண்மை சிற்பாண்மை உற்பத்தியாளர்களும் நிகம, சாத்து வணிக சந்ததிகளும்  சேர்ந்தே உருவாக்கிய அமைப்பு. இந்த அமைப்பு பல்லவர் காலத்தில்  3ம் நந்திவர்மன் காலத்தில் ஏற்பட்டது. கீழையனூர் கிராமத்திலிருந்து ஒரு நிலக்கிழார் மணிக்கிராமத்து வணிகர்களுடன் தாய்லாந்து சென்று அங்கே ஒரு குளத்தை வெட்டி அது பாதுகாப்பாக இருக்க மணிக்கிராமத்தார் வசம்  ஒப்படைத்துள்ளார் என்ற கல்வெட்டுச் செய்தியும் இக்கட்டுரையில் குறிப்பிடப்படுகின்றது.

மலேசிய சிங்கை தவிர்த்து ஏனைய  கிழக்காசிய நாடுகளுக்கான தமிழட்களின் கடல் ஆளுமை என்பது தற்சமயம் பேசப்படாத ஒரு விசயமாகவே இருக்கின்றது. தமிழகத் தமிழ்த்துறை மற்றும் வரலாற்றுத்துறை ஆய்வு மாணவர்கள் இந்த நோக்கில் ஆய்வு செய்ய முற்பட வேண்டும். இதன் வழி மேலும் பல தகவல்களைப் பெற வாய்ப்பிருக்கும். அது தமிழர் வரலாற்றை மேலும் விரிவாக அறிந்து கொள்ள உதவும்!

சுபா