Sunday, April 30, 2017

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 115

பல இடர்பாடுகளுக்கிடையே அச்சு நூலாக வெளிவந்தது பத்துப்பாட்டு நூல். தமிழறிஞர்கள் பலர் இந்த வெளியீட்டை போற்றிப் புகழ்ந்தனர். சிந்தாமணிக்கு இருந்த எதிர்ப்பு பத்துப்பாட்டு நூலின் வெளியீட்டில் இல்லை. பத்துப்பாட்டு அச்சேறியதால் தொடர்ச்சியான பலதரப்பட்ட ஆய்வுகளுக்கு அது வழிவகுக்கும் எனப் பலர் புகழ்ந்து பேசி மகிழ்ந்தனர். 

பத்துப்பாட்டு ஆராய்ச்சியின் போதும் சிந்தாமணி ஆராய்ச்சியின் போதும் நச்சினார்க்கினியருடைய உரை நயத்தைப் பார்த்து அதன் வழி பெற்ற விளக்கம் தனது புரிதலுக்கு மிக உதவியது என்பதை உ.வே.சா. என் சரிதம் நூலில் குறிப்பிடுகின்றார். இத்தகைய உரை விளக்கங்கள் இல்லையென்றால் அச்சுப்பதிப்பாக்கம் சாத்தியம் அடைந்திருக்காது. 

கடினமான செய்யுள் நடையில் அமைந்த நூல்களுக்கு அதன் கால நிலையறிந்து பொருள் புரிந்து கொள்வது என்பது உரைகள் இன்றி சிரமமே. பத்துப்பாட்டு அச்சு வெளியீட்டில் நச்சினார்க்கினியரின் வரலாற்றினைச் சேர்க்கவில்லை. அவரை வணங்கி அவருக்கான ஒரு துதி பாடல் ஒன்றினை மட்டும் இணைத்திருந்தார் உ.வே.சா. அத்துடன் நூலைப்பற்றிய தனது முகவுரை, நூலின் மூலம். நச்சினார்க்கினியருடைய உரைச்சிறப்பு, அரும்பத விளக்கம், அருந்தொடர் விளக்கம், பிழை திருத்தம் ஆகியனவற்றையும் இந்தப் பதிப்பில் இணைத்திருந்தார். 

இது வெளிவந்த சில நாட்களில் மேலும் இரண்டு நூல்களை உ.வே.சா அச்சுப்பதிப்பாக்கி வெளியிட்டார். அவை ஆனந்த ருத்திரேசர் இயற்றிய வண்டு விடுதூது என்ற பிரபந்த நூலின் மூலமும் மற்றும் மாயூரம் ராமையர் என்பவர் இயற்றிய மயிலை அந்தாதி என்ற நூலின் மூலமுமாகும். 

பத்துப்பாட்டு முடிக்கும் தருவாயில் அவருக்கு மனதில் மற்றுமொரு மாபெரும் நூலினை அச்சுப்பதிப்பாக கொண்டுவரவேண்டும் என்ற எண்ணம் மனதில் ஓடிக்கொண்டிருந்தது. அதுதான் சிலப்பதிகாரம். இந்த எண்ணத்திற்கு மற்றுமொரு காரணமும் இருந்தது. இலங்கையின் கொழும்பு நகரில் வசித்து வந்த ஸ்ரீ.பொ.குமாரசுவாமி என்பவர் சிலப்பதிகாரத்தை உ.வெ.சா அச்சுப்பதிப்பாக வெளிக்கொணரப் பொருளுதவி செய்வதாக உறுதி கூறியிருந்தார். ஐம்பெருங்காப்பியங்களுள் சீவகசிந்தாமணியை அச்சிட்டு வெளிக்கொணர்ந்த உ.வே.சா அவர்களே இப்பணியைச் செய்ய வேண்டும் என்ற எண்ணம் அந்த பொருட்செல்வருக்கு இருந்தது. உ.வே.சா மனதில் அந்த விருப்பம் ஆழமானதாக இருந்தாலும் அதுவரை தகுந்த நூல்கள் அவருக்குக் கிடைக்காமலேயே இருந்தன. 

தேடுதலைத் தொடர்ந்து கொண்டிருந்தார் உ.வே.சா. 

இடைக்கிடையே ஏனைய நூல்களுக்கானப் பணிகளும் ஏனைய வகைப்பட்ட தமிழ்ப்பணிகளும் தொடர்ந்து கொண்டிருந்தன. நல்ல உள்ளம் படைத்த நண்பர்களின் சூழல் உ.வே.சாவிற்கு பெருகிக்கொண்டிருந்தது. உ.வே.சா மேலும் பல பண்டைய தமிழ் நூல்களை அச்சு நூலாக வெளிக்கொணர வேண்டும் என்று நண்பர்கள் கேட்டுக் கொண்டிருந்தனர். 

இடையில் இலங்கையின் கொழும்பு நகரில் இலந்தை எனும் இடத்தில் தண்டபாணிக் கடவுளை பிரதிஷ்டை செய்து அக்கோயிலின் உற்சவ மூர்த்திகளுக்காகப் பிரத்தியேகமாக சில செய்யுட்களை இயற்றித் தரவேண்டும் என உ.வே.சாவிடம் கேட்டிருந்தார் தி.குமாரசாமி செட்டியார் என்ற ஒரு அன்பர். அவருக்கு மற்றுமொரு வேண்டுகோளும் உ.வே.சாவிடத்தில் இருந்தது. விநாயக புராணத்தை அச்சிட வேண்டும் என்பது தான் அது. திருவாவடுதுறை ஆதீனகர்த்தர் அம்பலவாண தேசிகரும் இதே விண்ணப்பத்தை உ.வே.சா விடம் வைத்திருந்தார். ஆக இந்த நூலையும் தண்டபாணிக்கடவுள் கோயிலுக்காகத் தான் இயற்றிய நூலையும் இந்தக் காலகட்டத்தில் உ.வெ.சா அச்சு நூலாகக் கொண்டு வந்தார். இது நிகழ்ந்தது 1891ம் ஆண்டு. 

நண்பர்களின் ஊக்குவிப்பு உ.வே.சாவிற்கு மனதில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. சக மனிதர்களின் இனிய சொற்களும் பாராட்டுதல்களும் தானே கடும் உழைப்பாளிகளுக்கு மாமருந்தாகின்றன. இந்த ஊக்கம் தரும் ஆக்கத்தின் விளைவாக சமூகத்திற்குப் பற்பல நலன்களும் விளைகின்றன. 

இந்த வேளையில் உ.வே.சாவின் நண்பரும் முன்னர் உ.வே.சா வை சிந்தாமணி ஆராய்ச்சிக்குள் ஈடுபடுத்தியவருமான சேலம் இராமசாமி முதலியார் சில நூல்களை அனுப்பி வைத்தார். அதில் சிலப்பதிகாரம் மூலமும் உரையும் இருந்தது. இது போதாதா இப்பணியைத் தொடக்க? அதற்கடுத்து மீனாட்சி சுந்தரம்பிள்ளையவர்கள் கைப்பட எழுதிய சிலப்பதிகாரத்தின் மூலப்பிரதி ஒன்றும் கிடைத்தது. தியாகராச செட்டியார் வைத்திருந்த சிலப்பதிகாரப் பிரதி ஒன்றை ஏற்கனவே தன் சேகரத்திற்காக உ.,வே.சா. தன்னிடம் வைத்திருந்தார். இவ்வளவு நூல்கள் கைவசம் இருந்தும் உ.வே.சாவினால் சிலப்பதிகாரம் அச்சுப் பணியைத் தொடக்க முடியவில்லை. அதற்குப் பல காரணங்கள் இருந்தன. 

தொடரும்..

Saturday, April 22, 2017

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 114

பல சிரமங்களுக்கிடையே பத்துப்பாட்டு பதிப்பு வேலைத் தொடங்கியிருந்தது. ஒரு நூலை அதிலும் இன்றைக்கு 150 ஆண்டுகளுக்கு முன்னர் அச்சு வடிவில் கொண்டுவருவது என்றால் அது அசாதாரணக் காரியம் தான். ஒரு அமைப்பு, அல்லது அரசு செய்யும் போது மனித வளத்துடன் பொருள் உதவியும் அமையும். செய்ய நினைத்த காரியத்தைச் சுலபமாகச் செய்யலாம். ஆனால் ஒரு தனி நபர் ஒரு காரியத்தைச் செய்யும் போது அதில் ஏற்படும் தடங்கல்கள் என்பன ஏராளம் ஏராளம். 

சீவக சிந்தாமணியைக் குறை சொல்லிக் கொண்டிருந்தவர்கள் தொடர்ந்து தங்கள் கண்டனக் குரல்களை எழுப்பிக் கொண்டேயிருந்தனர். ஏனெனில், உ.வே.சாவின் தமிழ் நூல்கள் பதிப்புப்பணியை முடக்க வேண்டும் என்பது அத்தகையோர் நோக்கம். அதனை அவர்கள் கண்ணும் கருத்துமாகச் செய்து கொண்டிருந்தனர். இதற்கெல்லாம் அசந்து விடக்கூடாது என மனதில் உறுதி எடுத்துக் கொண்டு உ.வே.சா தன் பத்துப்பாட்டு ஆராய்ச்சியைத் தொடர்ந்து கொண்டிருந்தார். அவர் மனதில் மற்றொரு கவலையும் இருந்தது. இத்தனை பாடபேதங்கள் கொண்ட சுவடி நூற்கள் கிடைத்தாலும் மூல நூலை இன்னமும் பார்க்கவில்லையே என்ற எண்ணம் அவர் மனதில் முள்ளாய் வருத்திக் கொண்டேயிருந்தது. 

நல்ல சிந்தனையுடனும், உயரிய நோக்கத்துடனும் செயல்பட்டுக் கொண்டிருக்கும் போது எண்ணியது கிட்டாமல் போகுமா? மூல நூலும் கிடைக்கத்தான் செய்தது! 

கல்லூரி விடுமுறை காலத்தில் சென்னைக்கு வந்து விட்டார் உ.வே.சா. அங்கு அவரது நண்பர் இராமசுவாமி முதலியாரின் இல்லத்தில் தங்கிக் கொண்டார்.அங்கிருந்தபடி பத்துப்பாட்டு அச்சுப்பணியைக் கவனித்து வந்தார். அச்சமயம் திருவண்ணாமலை சைவ மடத்தில் இருந்த யாழ்ப்பாணத்துத் துறவி ஒருவரைப் பற்றி கேள்விப்பட, அந்த முதிய துறவியைச் சென்று பார்த்து பத்துப்பாட்டு பற்றிக் கேட்கலாம் என்று தோன்றியது. சித்த மருத்துவத்திலும் கை தேர்ந்தவராம் அந்தத் துறவி. அவரிடம் சென்று தான் அறிந்த வகையில் திருவம்பலத்தின்னமுதம்பிள்ளை என்பவரிடம் நூற்கள் இருப்பதாகப் பிறர் தன்னிடம் குறிப்பிட்டதாகச் சொல்லி அவரிடம் இந்தத் தேடுதலில் உதவுமாறு கேட்டுக் கொண்டார். 

திருவம்பலத்தின்னமுதம்பிள்ளையின் ஏட்டுச் சுவடிகளெல்லாம் மந்தைவெளி பகுதியில் வசிக்கும் அண்ணாசாமி ஆசிரியர் வீட்டில் கொடுத்து விட்டார் என்றும், அங்குக் கேட்டால் கிடைக்கலாம் என்றும் தகவல் கிடைத்தது. அண்ணாசாமி ஆசிரியரைத் தேடிக்கொண்டு மந்தைவெளி புறப்பட்டார் உ.வே.சா. அங்குச் சென்றதும் அண்ணாசாமி ஆசிரியர் இறந்து விட்டார் என்றும், ஆனால் அவர் சேகரிப்பில் இருந்த நூற்கள் தன்னிடம் உள்ளன என்றும் அவர் மகன் தெரிவிக்க, அவரிடமிருந்த நூற்களையெல்லாம் எடுத்துப் போட்டுத் தேடினர். 

மகிழ்ச்சி. ஆம். முற்றுப்பெறாத, ஆனால் ஒரு மூல நூல் பத்துப்பாட்டு கிடைத்தது. அதுமட்டுமன்று. திருமுருகாற்றுப்படை உரைப்பிரதி ஒன்றும் அதில் கிடைத்தது. அதோடு பதினெண்கீழ்க்கணக்கு முழுவதும் இருந்த, ஆனால் சிதிலமடைந்த பிரதி ஒன்றும் கிடைத்தது. அதில் தான் கைந்நிலை நூலும் இருந்தது. 

இப்படி தமிழ்ப்பொக்கிஷங்களாக அன்று உ.வே.சாவிற்கு கிடைத்தன. 

அதன் பின்னர் தபால் இலாகாவில் சூப்பரிண்டெண்டாக பதவி வகித்த வி.கனகசபைப் பிள்ளையிடமிருந்தும் ஒரு பத்துப்பாட்டு உரைப்பிரதியும் கிடைத்தது. 

தேடத் தேட தமிழ்க்களஞ்சியங்கள் ஒவ்வொன்றாகக் கிடைத்துக் கொண்டேயிருந்தன. 

உண்மை தானே. தேடத்தேடத்தான் தேடப்படும் பொருள் கிடைக்கும். தேடாமலேயே ஓரிடத்தில் உட்கார்ந்து கொண்டு கிடைக்கவில்லையே எனப் புலம்புவோருக்கு எது தான் கிடைக்கும்? 

சென்னைக்கு வருவதற்கு முன்னரே கும்பகோணத்தில் இருந்த போது பத்துப்பாட்டு நூல் அச்சுப்பணிக்காக நண்பர்களிடம் கையெழுத்து வாங்கி ஏறக்குறைய 200 ரூபாய் சேர்த்திருந்தார் உ.வே.சா. அவரது எதிர்ப்பாளர்களுக்கு இது தெரிய வர, இதனைப் பெரிதாக்கி உ.வே.சா பெயரைக் களங்கப்படுத்தும் முயற்சியை மேலும் தொடங்கினர். இதுவரை பெற்றுக் கோண்ட தொகை போதும் என நினைத்து திருவாவடுதுறை மடத்திற்கு வந்து அங்குத் தேசிகரிடம் தனது அச்சுப்பனியைக் குறிப்பிட்டு பணக்குறைபாட்டையும் சொல்லி வைத்தார் உ.வே.சா. அம்பலவாண தேசிகர் 60 ரூபாய் ரொக்கமும் வழங்கி சென்னைக்கு அனுப்பும் காரியத்தையும் அவரே பார்த்துக் கொண்டார். 

நல்ல சிந்தனையோடு நாம் தமிழுக்காக உழைக்கும் போது நல்ல உள்ளம் படைத்தோர் யாவரும் நமக்குத் தேவையான ஏதாவது ஒரு வகையில் உதவத்தான் செய்வர் என்பதற்கு இதுவே சான்று. 

சென்னையில் பத்துப்பாட்டு அச்சுப்பணிக்காக உழைத்துக் கொண்டிருந்த போது, பூண்டி அரங்கநாத முதலியாருடன் உ.வே.சாவிற்கு நட்பு மேலும் நெருக்கமடைந்தது. அவர் சென்னை பிரசிடென்சி கல்லூரியில் ஆசிரியர் பணி வாங்கித்தருவதாகச் சொல்லி சம்மதமா, என உ.வே.சா வைக் கேட்டிருந்தார். உ,வே.சா விற்கு இதில் விருப்பம் இருந்தது. இதனை தன் தகப்பனாரிடம் கூற அவர், தனது முதுமைக் காலத்தில் காவேரி பாயும் கும்பகோணத்திலேயே இருப்பதையே தாம் விரும்புவதாகச் சொல்லிவிட, அந்த வாய்ப்பை உ.வே.சா தன் தந்தையின் நலனுக்காக மறுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அந்தச் சமயத்தில் பூண்டி அரங்கநாத முதலியார் கச்சிக்கலபகம் என்ற நூலை எழுதிக் கொண்டிருந்தார் என்பதையும் உ.வே.சா குறிப்பிடுகின்றார். 

உ.வே.சாவுடன் பத்துப்பாட்டு அச்சுப்பதிப்புப் பணியில் உதவிக் கொண்டிருந்த இராஜகோபாலாச்சாரியார் அரும்பதங்களையும் அருந்தொடர்களையும் தொகுத்து ஒரு அகராதி தயாரிப்போம் எனச் சொல்லி அகராதி செய்யும் முறையை உ.வே.சாவிற்கு கற்பித்தார். இந்த முறையைக் கற்றுக் கொண்டு அகராதி செய்வது சுலபமாக இருந்ததாகவும் உ.வே.சா குறிப்பிடுவதை அறிய முடிகின்றது. 

நீண்ட உழைப்பின் பலனாய் 1889ம் ஆண்டு ஜூன் மாதம் பத்துப்பாட்டு அச்சு நூலாய் வெளிவந்தது. 

தமிழ் உலகில் உ.வே-சாவின் புகழ் நிலைபெற்றது!

Sunday, April 9, 2017

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 113

உ.வே.சா பதிப்பித்த சீவக சிந்தாமணிக்கு எழுந்த கண்டன அலை ஓயவில்லை. அது தொடர்ந்தது பெருகியது. இப்போது தாம் ஈடுபட்டிருக்கும் சீவக சிந்தாமணி பதிப்புக்காரியங்கள் தடைப்பட்டுப் போகுமே என நினைத்துக் கொண்டு, எழுந்த கண்டனங்களையெல்லாம் ஒதுக்கி விட்டு தனது ஆய்வுப்பணியிலேயே தொடர்ந்தார் உ.வே.சா. ஆனாலும் வந்து கொண்டிருந்த எதிர்ப்பு அலைகள் பெருகிக் கொண்டே இருந்தன. இவரது அமைதியைக் கண்டு எதிர்க்கும் முகமாக, "சீவகசிந்தாமணிப் பிரகடன வழுப் பிரகரணம்" என்று ஒரு தனி கண்டன நூலையே பதிப்பித்தனர் எதிர்ப்பாளர்கள். இப்படி எதிர்ப்புப் பெருகியதும் மனம் குலைந்து போனார் உ.வே.சா. ஒருநாள் காலையில் எழுந்து இந்த எதிர் குரல்களுக்கு பதில் கடிதம் எழுத ஆரம்பித்தார் உ.வே.சா. அப்போது வாசலில் குடுகுடுப்பைக்காரர், "ஐயா உங்களுக்கு ஷேமம் உண்டாகும். கவலைப்பட வேண்டாம்" எனக் குறி சொல்லி விட்டுச் சென்றிருக்கின்றார். இந்தக் குடுகுடுப்பைக்காரரின் சொற்கள் உ.வே.சா விற்கு ஆறுதலாக அமைந்திருக்கின்றன. அந்தச் சொற்கள் கொடுத்த மன பலத்தில் சமாதானக் கடிதத்தை ஒரு வழியாக எழுதி முடித்தார். 

காலையில் இந்தச் சமாதானக் கடிதத்தை எடுத்துக் கொண்டு கல்லூரியில் சாது ஷேஷையரிடம் சென்று காட்டி, இந்தக் கடிதத்தை பிரசுரிக்கலாமா, என கருத்துக் கேட்கச் சென்றார் உ.வே.சா. எப்போதுமே பிரச்சனையான விஷயங்களை எதிர்கொள்ள நேரிடும் போது ஒன்றுக்குப் பலவாக பலரிடம் ஆலோசனைக் கேட்டு பின் முடிவெடுப்பு உதவும். நாம் பார்த்திராத கோணங்களில் மற்றவர்கள் பார்த்திருப்பார்கள் என்பதோடு பிறரது அனுபவங்களும் பல வேளைகளில் உதவும் அல்லவா?

கடிதத்தைப் பார்த்த சாது ஷேஷையர், அதனை வாசித்துப் பார்த்த உடனேயே ஏதும் சொல்லாமல் அதனைக் கிழித்து குப்பைத்தொட்டியில் போட்டிருக்கின்றார். உ.வே.சாவிற்கு இது அதிர்ச்சியாகி விட்டது. தன்னிடம் ஏதாவது சொல்லியிருக்கலாம். ஏதும் சொல்லாமல் இப்படி திடீரென்று கிழித்துப் போட்டுவிட்டாரே என மனதில் சஞ்சலம் தோன்றியது. அதனைப் பார்த்து சாது ஷேஷையர், 
“நான் கிழித்து விட்டதைப்பற்றி வருத்தப்படவேண்டாம். நீங்கள் சமாதானம் எழுதுவதென்ற வேலையையே வைத்துக் கொள்ளக்கூடாது. சிலர் உங்களைத் தூஷித்துக் கொண்டு திரிவதும் கண்டனங்கள் வெளிப்படுத்தியிருப்பதும் எங்களுக்குத் தெரிந்தனவே. அப்படிச் செய்கிறவர்கள் இன்னாரென்பதை நான் நன்றாக அறிவேன். அவர்கள் செயலால் என்னைப் போன்றவர்களுக்கோ மாணாக்கர்களுக்கோ மற்ற அன்பர்களுக்கோ உங்களிடம் மன வேறுபாடு ஏற்பட்டிருக்கிறதா? இம்மியளவுகூட இல்லை என்பது நிச்சயம். அப்படி இருக்க, இந்த விஷயங்களைப் பற்றிச் சிந்தித்து நீங்கள் கவலைப்படுவது அனாவசியம். இதற்கு நீங்கள் பதில் எழுதினால் உங்களுடைய எதிரியின் பேர் பிரகாசப்படும். 
உங்கள் பதிலுக்கு மறுப்பு அவர்கள் எழுதுவார்கள்; நீங்கள் மறுப்புக்கு மறுப்பு எழுத நேரும். இப்படியே உங்கள் காலமெல்லாம் வீணாகி விடும். நல்ல காரியத்துக்கு நானூறு விக்கினங்கள் வருவது உலக வழக்கம். சீமையிலும் இப்படியே வீண் காரியங்கள் நடைபெறுவதுண்டு. அவற்றைத் தக்கவர்கள் மதிப்பதில்லை. உங்கள் அமைதியான நேரத்தை இந்தக் காரியத்திலே போக்கவேண்டாம். இம்மாதிரி யாரேனும் தூஷித்தால் பதிலெழுதுகிறதில்லை யென்று வாக்குறுதி அளியுங்கள்” என்று கூறியதாக உ.வே.சா பதிகின்றார். 

காலம் எப்போதும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. இன்று போற்றுபவர்கள் நாளைத் தூற்றலாம். இன்று கண்டனக் குரல் எழுப்புபவர்கள் நாளைத் தூக்கி வைத்துப் போற்றலாம். காலம் தான் இதனை நிர்ணயிக்கும். ஆக, ஆக்கப்பூர்வமான காரியங்களில் ஈடுபட்டிருப்போர் நேர விரயத்தை ஏற்படுத்தும் வகையிலான செயல்பாடுகளிலிருந்து விலகி நின்று செயல்படுவதே சிறப்பு. இன்றைக்குத் தூற்றுபவர்கள் கூடப் பின்னர் தமது குறைகளை உணர்ந்து தனது இயலாமையை நினைத்து வருந்தும் நிலை ஏற்படலாம். குறை சொல்பவர் ஒவ்வொருவருக்கும் பதில் சொல்லிக் கொண்டிருந்தால் வேறு எந்தப் பணியில் தான் ஈடுபட முடியும்? இது எல்லோருக்கும் பொருந்தும் ஒரு நிலைதான். 

இந்த உரையாடலுக்குப் பிறகு தன் குறிப்பாக உ.வே.சா இப்படி எழுதுகின்றார். 
"இப்பொழுது கடந்த காலத்தையும் நிகழ்காலத்தையும் பார்க்கும்போது அந்தப் பேரறிஞருடைய மணிமொழிகள் எவ்வளவு சிறப்புடையனவென்று உணர்கிறேன். தமிழ்த்தாயின் திருவடித் தொண்டில் நான் செய்யும் பிழைகளை நாளடைவில் திருத்திக் கொள்ளலாம். அந்தத் தொண்டை மதியாமல் சிற்றறிவினேனாகிய என்னை மாத்திரம் இலக்காக்கி எய்யும் வசையம்புகளை நான் என்றும் பொருட்படுத்தவேயில்லை. தென்றலும் சந்தனமும் பிறந்த இடத்திலே வளர்ந்த தமிழ் மென்மையும் இனிமையும் உடையது. அந்தச் செந்தமிழ்த் தெய்வத் திருப்பணியே வாழ்க்கை நோக்கமாக உடைய என்பால் உலகியலில் வந்து மோதும் வெவ்விய அலைகளெல்லாம் அத்தெய்வத்தின் மெல்லருளால் 
சிறிதளவும் துன்பத்தை உண்டாக்குவதில்லை. “அவர்கள் இந்த வசை மொழிகளை வெளியிட்டுத் திருப்தியடைகிறார்கள். அவர்கள் திருப்தியடைவது கண்டு நாமும் சந்தோஷிப்போமே” என்று அமைதிபெறும் இயல்பை நான் பற்றிக் கொண்டிருக்கிறேன். அந்த இயல்பு நன்மையோ, தீமையோ அறியேன்; அதனால், என் உள்ளம் தளர்ச்சி பெறாமல் மேலும் மேலும் தொண்டு புரியும் ஊக்கத்தைப் பெற்று நிற்கிறது. இது கைகண்ட பயன்." 

கண்டனங்கள் வந்த அதே வேளை ஆதரவாகவும் பலர் இணைந்து கொண்டனர். ஆயினும் எந்த வகையிலும் தனது கவனத்தையும் நேரத்தையும் மறுப்பெழுத பயன்படுத்தக்கூடாது என்பதில் உ.வே.சா உறுதியுடன் இருந்தார். ஆயினும் இவரது ஆதரவாளர்களில் ஒருவரான குடவாயில் சண்முகம் என்பவர் எதிர்ப்பாளர்களைக் கண்டிக்கத் தொடங்கினார். இரு தரப்பினரும் மாற்றி மாற்றி எழுதிக்கொண்டிருந்தனர். தரம் குறைந்த வார்த்தைகளைப் பயன்படுத்தியும் வசைமொழிகள் வந்திருக்கின்றன. மன உலைச்சலை அதிகரித்த இந்த நிகழ்வினால் விளைந்த பயன் எதுவுமில்லை என்று உ.வே குறிப்பிடுகின்றார். தனக்குச் சார்பாக பேசிக்கொண்டிருந்த குடவாயில் சண்முகத்திடமிருந்தும் ஒதுங்கிக்கொண்டு தன் பத்துப்பாட்டு ஆய்வுப் பணியில் மட்டும் தன் கவனத்தை வைத்து அச்சுப்பணிக்காக பணியில் மூழ்கிப்போனார் உ.வே.சா. 

தொடரும்...
சுபா 


Sunday, April 2, 2017

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 112

"மனிதன் சிற்றறிவால் ஆராய்ந்து அமைக்கும் ஒன்றை எப்படி முடிந்த முடிபென்று கொள்ள முடியும்?"

இந்த மிக இயல்பான உண்மையை அறியாத, அல்லது அறிந்து கொள்ள விரும்பாத பலரால் ஏற்படும் பாதிப்புக்களும் துன்பங்களும் ஏராளம் ஏராளம். உலகம் புதுமையானது. தினம் தினம், நொடிக்கு நொடி புதுமையை வெளிப்படுத்திக் கொண்டே இருக்கின்றது உலகம். சிந்தனையை செயல்படுத்தத் தொடங்கினால் உலகம் நமக்கு வெளிக்காட்டிக் கொண்டிருக்கும் புதுமைகளை நம்மால் உணர்ந்து கொள்வது எல்லோருக்குமே சாத்தியம். தான் நினைத்த ஒரு செய்தி அல்லது தான் கொண்டிருக்கும் ஒரு சித்தாந்தம் என்பது முடிந்த முடிபு என நினைக்கும் மனிதர்கள் சிந்தனை வளர்ச்சிக்கு இடம் கொடுப்பது சாத்தியப்படாது. மாறாக, திறந்த உள்ளத்தோடு புதிதாக வருகின்ற படைப்புக்களையும் செய்யப்படுகின்ற மாற்று முயற்சிகளையும் எதிர்நோக்கப் பழகிக் கொள்வது மனிதக் குல வளர்ச்சிக்கு உதவும். 

இன்றைக்கு நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்னர் உள்ள சூழல் தான் உ.வே.சா அவர்களது தமிழாராய்ச்சிகளும் ஓலைச்சுவடி தேடல்களும் நடந்த காலகட்டம். இன்று நமது படைப்பிலக்கியச் சூழலில் காண்கின்ற போராட்டம், பொறாமை, புதுமை முயற்சிகளுக்கு எதிர்ப்பு ஆகியன அன்றும் இருந்ததுதான். சீவக சிந்தாமணி என்ற சமண காப்பியத்தை உ.வே.சா அச்சு நூலாக வெளியிட்ட முயற்சி என்பது அக்கால நிகழ்வின் சூழலில் ஒரு சாதாரண முயற்சியல்ல. சமய வேற்றுமை என்பது ஒரு புறமிருக்க, துணை நூற்கள் இல்லாமை, தகுந்த தகவல்கள் இல்லாமை என்பதும் கூட அச்சுப்பதிப்பில் அவர் எதிர்நோக்கிய பிரச்சனைகளின் ஆழத்தை அதிகப்படுத்தின. 

பத்துப்பாட்டு அச்சுப்பணியில் இருக்கும் போது உ.வே.சாவிற்கு கண்டனங்கள் எழுந்தன. அவை சீவக சிந்தாமணி தொடர்பானதுதான். இதனைத் தனது என் சரித்திரம் நூலில் 107ம் அத்தியாயத்தில் உ.வே.சா இப்படிப் பதிகின்றார். 

"ஜைன நூலை நான் அச்சிட்டது பிழையென்றும், சைவ மடாதிபதி சகாயம் செய்தது தவறென்றும், சிந்தாமணியில் பிழைகள் மலிந்துள்ளன வென்றும், அதிலுள்ள பிழைகள் கடல் மணலினும் விண்மீனினும் பல என்றும் கண்டித்துத் துண்டுப் பிரசுரங்களை வெளியிட்டனர். முதலில் அயலார் பெயரால் வெளியிட்டனர்: அப்பால் தங்கள் பெயராலேயே வெளியிட்டனர். கும்பகோணத்தில், வீதிதோறும் இந்தப் பிரசுரங்களைப் பரப்பினர். திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், மதுரை, திருநெல்வேலி, கோயம்புத்தூர், மாயூரம், திருப்பாதிரிப் புலியூர், சென்னை முதலிய இடங்களுக்கும் அனுப்பி அங்கங்கே பரவும்படி செய்தனர். சென்னையில் யார் யார் எனக்கு உபகாரம் செய்தார்களோ அவர்களுக்கெல்லாம் கட்டுக் கட்டாகக் கண்டனப் பிரசுரங்களை அனுப்பினர். பூண்டி அரங்கநாத முதலியார், சேலம் இராமசுவாமி முதலியார், ஆர்.வி.ஸ்ரீநிவாச ஐயர் முதலியவர்கள் அவற்றைக் கண்டு எனக்குச் செய்தி தெரிவித்தனர். " 

நூற்பதிப்பு முயற்சியில் ஒரு பதிப்பில் விடுபட்ட செய்திகள், முதல் பதிப்பில் இணைக்கப்பட்ட தவறான செய்திகள் என்பன ஏற்படுவதைத் தவிர்க்க இயலாது. அதிலும் காலத்தால் முந்திய இலக்கியங்களை ஆய்ந்து பதிப்பிக்கும் போது பாட பேத பிரச்சனைகள் பதிப்பித்தலில் பல பிரச்சனைகளை ஏற்படுத்துவது மிக மிக உண்மை. தவிர்க்க முடியாத ஒன்றே இது. இதனால் தான் பல நூற்கள், அதனைப் பதிப்பித்தோராலேயே திருத்திய பதிப்பாக அச்சு வடிவில் மீண்டும் கொண்டு வரப்பட்டன. இதனை அறிவுலகம் வரவேற்க வேண்டியது முக்கியம். அதைவிட்டு தவறாக நூல் வந்துள்ளது எனக் கண்டனக் குரல் எழுப்பி கடுமையாக உழைத்தோரைத் தாக்குவது எவ்வகையிலும் உதவாது ஆனால், எதிர்மாறாக அப்படி உழைப்போரை மன வலு இழக்கச் செய்யும் முயற்சியாகவே அமையும். 

உ.வே.சா தனது சிந்தாமணியின் முதல் பதிப்பில் சில தகவல்களைத் தாம் தவறாக வழங்கியுள்ளதைத் தான் உணர்ந்திருப்பதைச் சுட்டிக் காட்டுகின்றார். உதாரணமாக, திருத்தக்கதேவர் மதுரைக்கு வந்த போது சந்தித்தவர்கள் சங்க வித்துவான்கள் அல்ல என்றும் ஜைனப்பெரியவர்கள் என்று தாம் அறிந்ததைப் பற்றியும் அதனை அடுத்த பதிப்பில் தான் மாற்றியதையும் குறிப்பிடுகின்றார். மேலும் சில நூல் பெயர்கள் சில புலவர்களின் பெயர்கள் ஆகியவற்றிலும் பிழைகள் இருந்தமையை அவர் குறிப்பிடுகின்றார். இவற்றையெல்லாம் மற்றி தாம் அடுத்த பதிப்பினை கொண்டு வர அச்சமயத்தில் நினைத்திருந்தமையும் பதிகின்றார். 

இந்தக் கண்டனங்கள் வந்த சமயத்தில் பத்துப்பாட்டு அச்சுப் பணியில் அவர் ஈடுபட்டிருந்த நேரம். ஒரு நாள் புகழ்ந்தும் மறுநாள் கண்டனம் தெரிவித்தும் எனப் பத்திரிக்கைகள் செய்தி வெளியிட்டு அவருக்கு மன உலைச்சலைத் தந்துகொண்டிருந்தன. 

கண்டனம் செய்ய வேண்டுமென நினைப்பவர்களுக்கு அதில் தான் மன திருப்தி ஏற்படும். ஆக அவர்கள் அதனை மட்டுமே காரியமாகச் செய்வர். அவர்களுடைய கண்டனங்களைக் கேட்டு அதற்காக உணர்ச்சி வசப்படுதலினால் ஆகப்போவது ஏதும் இல்லை. நாம் செய்ய வேண்டிய பணிகள் நம் முன்னே இருக்கும் போது கண்டனங்களைப் புறம் தள்ளி விட்டுச் செய்ய வேண்டிய தமிழ்ப்பணி தொடர்பான காரியத்தில் நாம் கவனம் செலுத்திச் செல்வதுதான் நமது நோக்கம் கலையாமல் நம்மை வழி நடத்தும்!

தொடரும்..

சுபா