Sunday, July 12, 2020

ஐரோப்பாவில் கொள்ளை நோய் சிறப்புத் தொடர்-10

முனைவர்.க.சுபாஷிணி 
 
2020ஆம் ஆண்டு தொடங்கி ஏழு மாதங்கள் கடந்து விட்டன. இப்போது ஜூலை மாதத்தில் இருக்கின்றோம். ஜனவரி மாதம் நாம் சற்று கூட நினைத்துப் பார்த்திருக்க மாட்டோம், இந்த அளவிற்கு உலகம் முழுவதும் ஒரு நுண்ணுயிர்க்கிருமி மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி நம் ஒவ்வொருவரது வாழ்க்கையையும் மாற்றி அமைக்கும் என்று. இன்றைய தேதிவரை உலகளாவிய அளவில் 567, 300 இறப்புகள்  உலக சுகாதார நிறுவனத்தினால்  பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. covid-19 தாக்கம் இன்றைய தேதியில் அமெரிக்கா, பிரேசில், இந்தியா ஆகிய மூன்று நாடுகளில் மிகப்பெரிய வைரஸ் தொற்று எண்ணிக்கையை பதிவு செய்திருக்கின்றது.

இவ்வாண்டு பிப்ரவரி மார்ச் மாதவாக்கில் சீனாவிலும் ஐரோப்பாவிலும் கொரோனா வைரஸ் தொற்று மிக வேகமாகப் பரவிக் கொண்டிருந்த காலத்தில் நம்மில் பலரது வாட்ஸ்அப் குழுமங்களில்  நம்மைத் தேடி வந்த பகிர்வுகள் சில  இப்போது நினைவுக்கு வருகின்றன.

உலக நாடுகளே இந்தியாவைக் கண்டு ஆச்சரியப் படுகின்றன; இந்தியாவிற்குக் கொரோனா வைரஸ் வருவதற்கு வாய்ப்பே இல்லை, ஏனெனில் இந்தியர்களின் உணவு முறை எவ்விதமான நோய்களையும் தடுத்து கொன்றுவிடும்.... இந்தியச் சூழலுக்கு கொரோனா வைரஸ் பரவலாக்கம் என்பது நடக்காது .. இப்படிப் பலரும் ஆருடம் கூறிக்கொண்டிருந்தார்கள். ஆங்காங்கே சில சாமியார்களும் ஜூன் மாதம் 21ஆம் தேதியுடன் கொரோனா கொள்ளைநோய் இந்தியாவிலிருந்து மறைந்துவிடும் என்றும் நிவர்த்திக்கு இதை செய்யலாம் அதைச் செய்யலாம் என்று ஆருடம் கூறி யூடியூப் வீடியோக்கள் பதிவு செய்து வெளியிட்டதையும் பார்த்தோம். இந்த ஆருடங்களை எல்லாம் தாண்டி இன்று அதிவேகமாக கொரோனா வைரஸ் பரவும் நாடுகளின் பட்டியலில் இந்தியா மூன்றாவது இடத்தில் இருக்கிறது. நோய் பரவலாக்கம் என்பது தகுந்த முறையான பாதுகாப்பு இல்லை என்றால் எந்த நாடாக இருந்தாலும் பாரபட்சமின்றி பரவும் என்பதைத்தான் இந்த நடப்பு நிலை நமக்குக் காட்டுகிறது.

கொரோனா வைரஸ் சீனாவின் வூகான் மாநிலத்தில் பரவத் தொடங்கிய காலத்தில் இது மனிதர்களே திட்டமிட்டு உருவாக்கி பரப்பி வைத்த வைரஸ்  தாக்குதல் என்ற மிகப்பெரிய சந்தேகமும் பரவலாக்கப்பட்டது. அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய இரண்டு நாடுகளும் ரகசியமாக செய்கின்ற பல்வேறு வகை ரசாயன ஆய்வுகள், மற்றும் அவை தொடர்பில் உலகில் மூன்றாம் உலகப் போர்  இந்த வகையில்தான் அமைகின்றது என்ற கருத்தை மையமாகக்கொண்டு பலபல கட்டுரைகளும் செய்திகளும் யூடியூப் வீடியோ காணொளி பதிவுகளும் நாம் விரும்புகிறோமோ இல்லையோ நம் கவனத்திற்கு வந்து சேர்ந்தன. ஆனால் காலம் காலமாகத் தொடர்ந்து இவ்வுலகை அவ்வப்போது தாக்கி பல்லாயிரக்கணக்கான உயிர் சேதத்தை வைரஸ் நுண்ணுயிர் கிருமிகள் உருவாக்குகின்றன என்பதை இக்கட்டுரைத் தொடரின் முந்தைய பகுதிகளில் விரிவாக விளக்கி இருந்தேன். இந்த நூற்றாண்டின் தொடக்கத்திலும் இபடி ஒரு நிகழ்வு நிகழ்ந்தது என்பதை நாம் நினைவு கூர்வது பொருந்தலாம்..  

2003ஆம் ஆண்டு Severe acute respiratory syndrome (SARS) நுண்ணுயிர் கிருமி முதலில் அடையாளம் காணப்பட்டது. முதலில் வவ்வால்களிடமிருந்து உருவாகி பின்னர் இவை பூனைகள் வழியாக மக்களுக்குப் பரவுவது நிகழ்ந்தது. இந்த வைரஸ் கிருமி முதலில் சீனாவில் தான் அடையாளப்படுத்தப்பட்டது. பின்னர் உலக நாடுகளில் 26 நாடுகளில் இதன் தாக்கம் பிரதிபலித்தது. 8096 மக்கள் இதனால் பாதிக்கப்பட்டு அதில் 774 உயிர் சேதங்கள் பதியப்பட்டன. கொரோனா வைரஸ் கிருமி இன்று உலகம் முழுவதும் ஏற்படுத்தியிருக்கும் உயிர் சேதத்தோடு ஒப்பிட்டு பார்க்கும்போது இது மிகக்குறைவான எண்ணிக்கை தான்.

ஆரம்பத்திலேயே முறையான பாதுகாப்பு நடவடிக்கைகள் சரியாக மேற்கொள்ளப்பட்டமையால் அதே ஆண்டு ஜூலை மாதம் இந்த வைரஸ் பரவல் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டு, இது பரவி உயிர் சேதம் ஏற்படாமல் தற்காப்பு நடவடிக்கைகள் வெற்றி கண்டன. இந்த நோய் பரவலாக்கத்திற்கும் சீனாதான் பொறுப்பு என்ற வகையில் பேச்சுக்கள் எழுந்தது என்பதோடு ஆரம்ப காலகட்டத்தில் இந்த நோய் பரவல் பற்றிய செய்திகளை வெளிப்படையாக சீனா வெளியிடவில்லை என்ற குற்றச்சாட்டும் அப்பொழுது எழுந்தது. இப்போதும் அதே நிலை தொடர்கிறது.

covid-19 தாக்கத்திற்கு அடிப்படையாக இருக்கும் SARS-2 நுண்ணுயிர் கிருமி SARS கிருமி வகையிலிருந்து சற்றே மாறுபட்டது என்றாலும் அடிப்படையில் அதே வகையை சார்ந்தது என்று அறியப்படுகிறது. இன்று உலகம் முழுவதும் பல நாடுகளில் இந்த நுண்ணுயிர் கிருமியை அழிப்பதற்கும் அல்லது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர வேண்டும் என்று முனைப்போடு  தொடர்ச்சியாக விஞ்ஞானிகளும் ஆராய்ச்சியாளர்களும் செயல்பட்டு வருகின்றார்கள். ஜூலை மாதத் தொடக்கத்தில் பல இடங்களில் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்துகள் பற்றிய செய்திகள் உலா வரத் தொடங்கியிருக்கின்றன. இன்றைய காலகட்டத்தில் பல நாடுகளில் சோதனை முயற்சிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.

இன்றைய காலநலையில் உலகவரலாற்றில் தொடர்ச்சியாக நுண்ணுயிர் கிருமிகள் செய்திருக்கின்ற உயிர்ச் சேதங்களைப் பற்றிதான் பெரும்பாலும் நம் கவலைகள் சூழ்ந்திருக்கின்றன. இது இயல்புதான்.. தவிர்க்கமுடியாத ஒன்றுதான் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆயினும் உலக சுற்றுச்சூழல் என்ற ரீதியில் காணும்போது குறிப்பிடத்தக்க வகையில் சுற்றுச்சூழலில் நிலை மேம்பாடு கண்டிருக்கின்றது என்பதை நாம் மறுத்துவிட முடியாது.

அதில் மிக முக்கியமானது காற்று மாசடைதல். உலகம் முழுவதும் ஒவ்வொரு நாடுகளிலும் காற்றின் தூய்மை மேம்பாடு கண்டிருக்கின்றது என்பதை சுற்றுச்சூழல் அறிக்கைகள் வெளிப்படுத்துகின்றன. ஐரோப்பாவைப் பொறுத்தவரை மிக அதிகமான விமானப் போக்குவரத்துகள், மிக அதிகமான வாகன போக்குவரத்துகள், அணு ஆலைகள் உருவாக்குகின்ற காற்றுத் தூய்மைக்கேடு எனப் பல வகையில் மாசடைந்து கிடந்த வான்வெளி என்று தூய்மை அடைந்திருக்கிறது என்பது ஒட்டுமொத்த உலகத்திற்கு நன்மை தான்.

ஐரோப்பாவின் ஒவ்வொரு நகரங்களிலும் கூட்டம் கூட்டமாக மக்கள் நிறைந்திருக்கும் பொதுப்போக்குவரத்து மெட்ரோ ரயில்கள் இப்போது கணிசமான எண்ணிக்கையில் குறைந்த பயணிகளுடன் பயணிக்கின்றன. பெரும்பாலான கணினித்துறை சார் ஊழியர்கள் வீட்டிலிருந்தவாறே அலுவலகப் பணிகளைக் கவனிப்பதால் மிகப்பெரிய அளவில் பொதுப்போக்குவரத்துச் சேவையை நம்பி இருந்த பொதுமக்களின் எண்ணிக்கை குறைந்திருக்கின்றது.

பெரும்பாலான மக்கள் வீட்டிலிருந்தபடியே தங்கள் அலுவலக பணிகளைச் செய்யக்கூடிய வகையில் தங்கள் தொழில் செயல் முறையை மாற்றி அமைத்துச் செயல்படுத்திக் கொண்டிருக்கின்றனர். வீட்டிலேயே இருக்கக்கூடிய சூழல் மன அழுத்தத்தை அதிகரிக்கின்றது என்றாலும்கூட குடும்பத்தாருடன் சேர்ந்திருக்கும் நேரத்தை இது அதிகரித்திருக்கின்றது என்பதோட சாலைகளில் பயணம் செல்வதற்காக பொதுமக்கள் எடுத்துக் கொள்கின்ற நேரத்தை மிச்சப்படுத்தி குடும்பத்தாரோடு நீண்ட நேரத்தைச் செலவிடக் கூடிய வாய்ப்பையும் இது வழங்கியிருக்கின்றது. ஜெர்மனி போன்ற நாடுகளில் மிக அதிக நேரத்தை வாகனங்களிலேயே சாலைகளில் பயணிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்த என்னைப் போன்ற பலருக்கும் இது ஒரு மிகப்பெரிய மாற்று வழியாக அமைந்திருக்கின்றது என்பதை நானும் முழுமையாக உணர்கிறேன்.

ஒவ்வொரு தனி மனிதரின் வாழ்க்கையிலும் மிகப்பெரிய அளவிலான மாற்றத்தை, அதிலும் நாம் ஒவ்வொருவரும் சற்றும் கூட எதிர்பாராத மாற்றத்தை வலிந்து திணித்து இருக்கிறது கொரோனா வைரஸ். பல நாடுகளில் முறையான வழிகாட்டுதல்கள் இல்லாமையால் மக்கள் எந்த வகையில் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளலாம் என்ற தெளிவில்லாமல் தடுமாற்றத்துடன் தங்கள் அன்றாட வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கின்றார்கள். தமிழகத்தில் நடக்கின்ற நிலவரங்களைப் பார்க்கும்பொழுது வறுமை கோட்டிற்குக் கீழ் வாழும்  மக்கள் வேலையின்றி உணவுத் தேவைக்காக மிகப்பெரிய அளவில் பாதிப்பினை எதிர்நோக்கி உள்ளனர்‌. ஐரோப்பா போன்ற நாடுகளிலும
 பல சிறிய நிறுவனங்கள் எப்படி மீண்டு எழுவது என்று யோசித்துக் கொண்டிருக்கும் அதேவேளை மிகப்பெரிய நிறுவனங்கள் மீண்டு எழுவதே சாத்தியமில்லையோ, என்ற வகையில் தடுமாறி நிற்கின்றன. ஆயினும் ஐரோப்பிய ஒன்றியத்தின் பல்வேறு பொருளாதார அவசரக் கூட்டங்கள் சிறிய பெரிய என்ற பாரபட்சமின்றி வணிகத்தை மீட்டெடுக்கும் முயற்சிக்கு வழி தேடிக் கொண்டிருக்கின்றன.

இன்றைய சூழலில் கொரோனா பாதிப்பு மேலும் ஓரிரு மாதங்கள் தொடரும் என்ற ஊகத்தின் அடிப்படையில் ஏறக்குறைய 2021 ஆம் ஆண்டு உலகம் ஓரளவு இயல்பு நிலைக்கு திரும்பலாம் என்ற எதிர்பார்ப்பை மட்டுமே முன்வைக்க முடிகின்றது.

எது எப்படியோ..
கொரோனா உலகில் அடையாளப்படுத்தப் படுவதற்கு முன்பிருந்த நம் வாழ்க்கை.. கொரோனா அடையாளப்படுத்தப்பட்ட பின்னர் நாம் அனுபவிக்கும் வாழ்க்கை, என இரண்டு வகையான வாழ்க்கை நிலையை நமது காலத்திலேயே அனுபவிக்கின்றோம் என்பது நாம் விரும்பாவிட்டாலும் ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலையில்தான் நாம் இருக்கின்றோம்.

உலகில் பல்வேறு காலகட்டங்களில் நுண்ணுயிர் கிருமிகள் கொள்ளை நோயை ஏற்படுத்தி மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தின. அத்தகைய பலப்பல தாக்கங்களில் இருந்து மீண்டு வந்தது மனிதகுலம். அதேபோல இப்போது  வந்திருக்கின்ற இந்த புதிய சவாலையும் எதிர்கொண்டு மனிதகுலம் மீண்டும் தனது நீண்ட நெடிய பயணத்தை தொடரும்.






முற்றும்

Sunday, July 5, 2020

ஐரோப்பாவில் கொள்ளை நோய் சிறப்புத் தொடர்-9

முனைவர்.க.சுபாஷிணி

கொரோனா கொள்ளை நோயின் தாக்கம் பெருமளவிற்கு மேற்கு ஐரோப்பிய நாடுகளில் குறையத் தொடங்கிவிட்டது. ஜெர்மனியிலிருந்து 15 ஐரோப்பிய நாடுகளுக்கு இந்த வாரம், அதாவது ஜூலை 1ஆம் தேதி தொடக்கம் விமானச் சேவைகள் தொடங்கிவிட்டன. நீண்டகாலம் தனது தாயாரைப் பார்க்க முடியாமல் வருந்திக் கொண்டிருந்த எனது அண்டை வீட்டுக்காரர் கடந்த வெள்ளிக்கிழமை மதியம் ஸ்டுட்கார்ட் விமான நிலையத்திலிருந்து ருமேனியா தலைநகர் புகாரெஸ்ட் புறப்பட்டுவிட்டார். ஓரளவுக்கு மக்கள் கோடைக்கால விடுமுறையைத் திட்டமிடத் தொடங்கியிருப்பதைக் காணமுடிகின்றது. ஐரோப்பாவைத் தவிர்த்து ஏனைய நாடுகள் எனும் போது சீனாவிற்கு விமானச் சேவை அனுமதி வழங்கப்பட்டிருக்கின்றது என்பது ஆச்சரியமளிக்கின்றது. அதற்கு எதிர்மாறாக ஜெர்மனியிலிருந்து அமெரிக்காவிற்கு விமானச் சேவை இப்போது சாத்தியமில்லை என்பதையே  இருநாடுகளும் உறுதி செய்திருக்கின்றன. வருகின்ற நாட்களில் கொரோனா தொற்றுப் பரவலின் எண்ணிக்கையின் அடிப்படையில் ஆசிய நாடுகள் சிலவற்றிற்கும் ஜெர்மனிக்குமான விமானச் சேவைகள் தொடங்கப்படும் என நம்பலாம்.

கொரோனா ஏற்படுத்திய அச்சத்தையும் ஒதுக்கிவிட்டுக் கடந்த சில வாரங்களாக ஐரோப்பாவில் பெருமளவிற்கு நிறவெறிக்கு எதிரான கண்டனக்குரல்களும் இனவாதத்திற்கு எதிரான எதிர்ப்புக்குரல்களும் தொடர்கின்றன. இந்த வாரம் பெல்ஜியத்தில் இனவாதத்தால் பாதிக்கப்பட்ட பெண்கள் சிலர் சட்டரீதியான முன்னெடுப்பை மேற்கொண்டுள்ள நிகழ்வு செய்தியாகப் பேசப்பட்டது.

ஆப்பிரிக்காவின் கோங்கோ நாடு பெல்ஜியத்தின் கீழ் அடிமைப்பட்டுக் கிடந்த காலகட்டத்தில் ஆண்களும் பெண்களும் அனுபவித்தஇன்னல்களுக்கு அளவில்லை. கோங்குகோ நாட்டில் வியாபாரம் செய்வதற்காகச் சென்றவர்களும் அங்குள்ள கோங்கோ நாட்டு கறுப்பின பெண்களை மணந்தோ அல்லது அவர்களுடன் பாலியல் உறவு வைத்துக் கொண்டதன் வழியாகப் பெற்ற குழந்தைகளை அப்போதைய பெல்ஜிய அரசு கத்தோலிக்க சமய நிறுவனங்களில் சேர்த்திருக்கிறது.  அப்போதைய பெல்ஜிய அரசின் கருத்துப்படி வெள்ளை நிற தந்தைக்கும் கருப்பு இன பெண்ணுக்கும் பிறந்த குழந்தை பாவத்தின் சின்னம் எனக் கருதப்பட்டதால் அத்தகைய குழந்தைகள் பாவமன்னிப்புக்காகத் தேவாலயங்களின் அனாதை ஆசிரமங்களில் பராமரிக்கப் பட்டிருக்கின்றனர். அவர்களில் பெண் குழந்தைகள் கத்தோலிக்க கன்னியாஸ்திரிகளின் பாதுகாப்பில் அப்போது விடப்பட்டனர்.
1960ஆம் ஆண்டு சுதந்திரம் கிடைத்த  பின்னர் தேவாலயத்தில் வசித்து வந்த பெண்கள்  கைவிடப்பட்ட நிலையில், கோங்கோவில் ஏற்பட்ட மிகக்கொடூரமான வன்முறை காலத்தில் அத்தகைய பெண்கள் பலர் ராணுவ வீரர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு  துன்பத்திற்குள்ளாயினர். அத்தகைய பெண்களுக்குப் பிறந்த குழந்தைகள் சிலர் இப்போது பெல்ஜியம் நாட்டில் வாழ்கின்றனர். அவர்களில் சிலர் பெல்ஜியம் அரசு தங்களுக்கும் தங்கள் பெற்றோருக்கும் இழைத்த கொடுமைகளுக்கு எதிராக சட்டப்படி தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கின்றார்கள். இதற்கு உடனடியாக பெல்ஜியம் அரசிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை என்றாலும், செப்டம்பர் 10-ஆம் தேதி இந்த வழக்கு நீதிமன்றத்திற்கு வருவதாக இதுபற்றிய அண்மைய செய்தி குறிப்பிடுகின்றது (https://www.euronews.com/2020/07/03/mixed-race-women-sue-belgian-state-over-colonial-era-kidnapping).

இது இப்படியிருக்க, கொரோனா கொள்ளை நோய் ஏற்படுத்தி இருக்கின்ற மிகப் பெரிய சவாலாக உலக நாடுகள் தற்சமயம் எதிர்நோக்குவது பொருளாதார பிரச்சனைகள் தான். இந்த இக்கட்டான காலத்தில் ஐரோப்பாவின் பொருளாதார பலம் பொருந்திய நாடுகளில் ஒன்றாகக் கருதப்படும் பிரான்சில் அரசு தலைமைப்பதிவியில் மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. நடப்பு பிரதமரான எடுவாட் ஃபிலிப்பே (Edouard Philippe) தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஒரு மாவட்டத்தின் மேயராக பதவி ஏற்றுக் கொண்டதும், பிரனேஷ் மாவட்டத்தின் மேயராக தற்சமயம் பதவி வகிக்கும் ஷோன் காடெக்ஸ் (Jean Castex) பிரான்சின் பிரதமராக இவ்வாரம் பதவி ஏற்றுக் கொண்டதும் நடந்திருக்கின்றது. புதிய பிரதமருக்கு பிரான்சின் பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்பும் மிகப்பெரிய சவால் காத்துக் கொண்டிருக்கின்றது என்பது உண்மை.

ஐரோப்பாவின் பல நாடுகளில் கோடைகால சுற்றுலா பற்றிய சிந்தனை மக்களின் சிந்தனையை ஆக்கிரமித்திருக்கிறது. ஜெர்மனியை எடுத்துக்கொண்டால் மக்கள் வெகுவாக பொது உணவகங்களுக்குச் செல்வதும், வெளியே கடைவீதிகளில் உலாவுவதும் இப்போது சர்வ சாதாரணமாகக் காட்சியளிப்பது பார்ப்பதற்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் இருக்கிறது. கொரோணா வைரஸ் தொற்றினால் மிகப்பெரிய அளவில் உயிர்ச் சேதத்தை அனுபவித்த இத்தாலி, பிரான்ஸ், ஸ்பெயின் ஆகிய நாடுகள் இயல்பு நிலைக்கு திரும்பி விட்ட இந்தச் சூழலில் கிழக்கு ஐரோப்பிய நாடுகள் கொரோனா கொள்ளை நோய் தொற்றுப் பரவலைக் கடுமையாக எதிர்கொள்ள வேண்டிய நிலை தொடங்கிவிட்டது. உதாரணமாக மொண்டெனேகிரோ, புல்காரியா ஆகிய நாடுகளில் கொரோனா நோயினால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கும் வகையில் எண்ணிக்கைகள் அமைகின்றன. ஆயினும், ஒட்டு மொத்த ஐரோப்பாவில் மேற்கு ஐரோப்பிய நாடுகள் கற்ற பாடங்களின் அடிப்படையில், ஐரோப்பிய ஒன்றியத்தின் துணையுடன் கிழக்கு ஐரோப்பிய நாடுகளும் கொரோனா கொள்ளை நோய்த் தொற்றுகளிலிருந்து தங்களைத் தற்காத்துக் கொள்ளும் வாய்ப்பு அதிகமாக இருக்கிறது என்று நம்பலாம்.
உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டிருக்கும் அண்மைய அறிக்கையின் அடிப்படையில் இன்று மிக அதிக எண்ணிக்கையில் கொரோனா வைரஸ் தொற்று பரவிக் கொண்டிருக்கும் நாடுகளாக அமெரிக்கா, பிரேசில், இந்தியா ஆகிய நாடுகள் பட்டியலில் அமைகின்றன. இந்நோய் பரவுவதிலிருந்து தடுக்கும் வகையில் தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதில் ஐரோப்பா, அமெரிக்கா சீனா ஆகிய நாடுகள் மிகத் தீவிரமாக ஈடுபட்டிருக்கின்றன. இன்றைய நிலவரப்படி கொரோனாவுக்கு எதிரான மிக அதிகமான எண்ணிக்கையில் மருத்துவ சோதனைகளை மேற்கொள்ளும் நாடுகளின் வரிசையில் சீனா, அதனையடுத்து அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி ஆகிய நாடுகள் அமைகின்றன.ஜூன் 16-ஆம் தேதி யூரோநியூஸ் பத்திரிகையின் அறிவிப்பின்படி 13 மருந்துகள் கொரோனா வைரஸ்க்கு எதிராக அதனைக் கட்டுப்படுத்தும் வகையில் அல்லது மனித உடலில் கொரோனா வைரஸ் தாக்கத்தை முற்றிலும் தடுக்கும் வகையில் மருத்துவச் சோதனைக்குத் தயாராக இருப்பதை வெளியிட்டது (https://www.who.int/docs/default-source/coronaviruse/novel-coronavirus-landscape-covid-19f65d59aff81049f5a50d37bebf0caf93.pdf?sfvrsn=394d10c9_2%26download) . இந்தப் பட்டியலில் இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் மற்றும் இங்கிலாந்து மற்றும் சுவீடன் கூட்டு முயற்சியில் செயல்படும் மருத்துவ நிறுவனமான AstraZeneca அறிவித்த மருந்துகள் பாதிக்கப்பட்டவர்களுக்கு நோயைக் குணப்படுத்தக்கூடிய ஆற்றலுடன் இருப்பதை அறிவித்தது.


கடந்த வாரத்தில் remdesivir என்ற மருந்து கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் உடலில் செலுத்துவதற்கு ஐரோப்பிய ஒன்றியத்தால் அங்கீகரிக்கப்பட்டது. இது குறிப்பாக 12 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வழங்கப்படக் கூடிய ஒரு மருந்தாகவும் அதிலும் குறிப்பாக நிமோனியா நோய் வந்த நோயாளிகள் ஆக்சிஜன் அதிக அளவில் மூச்சுவிடத் தேவைப்படும் நிலையில் இருப்பவர்களுக்கு இந்த மருந்து நல்ல பலன் அளிப்பதாகவும் கூறப்பட்டது.

மருத்துவ ஆய்வுகளுக்கு ஏராளமான பொருட் செலவு என்பது தவிர்க்கப்பட முடியாத ஒன்று என்ற சூழலில் ஐரோப்பிய ஒன்றியம் "Global Goal: Unite For Our Future" என்ற பொருளில் தன்னார்வ அமைப்புகளுடன் இணைந்த வகையில் நன்கொடை திரட்டும் ஒரு முயற்சியை மேற்கொண்டது. வெற்றிகரமாக நிகழ்ந்தேறிய இந்த நிகழ்ச்சியில் 6 பில்லியன் யூரோ பணம் சேர்க்கப்பட்டு மேலும் கூடுதலாக நன்கொடைகள் பெறப்பட்டு ஆக மொத்தம் 16 பில்லியன் யூரோ திரட்டப்பட்டது. ஐரோப்பிய ஒன்றியத்தின் கொரோனா கொள்ளை நோய்க்கு எதிரான மருந்துகள் உருவாக்கும் ஆய்வுகளுக்குப் பயன்படுத்தப்படும் என்பதை ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் உர்சுலா ஃபோன் டெர் லையன் ஜூன் மாதம் 27ஆம் தேதி தெரிவித்திருந்தார். தன் மனதை நெகிழ வைத்த இந்த செயல்பாட்டில் உதவிய அனைவருக்கும் தனது நன்றிகளையும் அவர் தொலைக்காட்சி வழியாகத் தெரிவித்துக் கொண்டார். இத்தகைய நடவடிக்கைகளின் வழி மிக அதிகமான ஆய்வுகளுக்கு, அதிலும் குறிப்பாக மருத்துவ ஆய்வுகளுக்குப் பொருளாதார பலம் கிடைப்பது கொரோனா வைரஸ் எதிர்ப்பு தொடர்பான பல்வேறு வகை ஆய்வுகளைச் சாத்தியப்படுத்த இந்தக் காலகட்டத்தில் அத்தியாவசிய தேவையாகின்றது.

ஜூலை மாதம் நம்பிக்கை அளிக்கும் வகையில் தொடங்கியிருக்கின்றது என்றே சொல்லலாம். அமெரிக்காவில் BNT162b1 vaccine என்று அழைக்கப்படும் ஆய்வின் வழி 45 நோயாளிகளுக்கு, அதிலும் குறிப்பாக 18லிருந்து 55 வயது உள்ளவர்களுக்கு வழங்கப்பட்ட தடுப்பு மருந்து நல்ல பலனைக் கொடுத்திருப்பதை அமெரிக்க மருத்துவ அமைப்பு வெளியிட்டது (https://www.pfizer.com/news/press-release/press-release-detail/pfizer-and-biontech-announce-early-positive-data-ongoing-0). இந்தச் செய்தி நம்பிக்கையளிக்கும் ஒரு செய்தியாக அமைகின்றது. இனி அடுத்தடுத்த நாட்களில் மேலும் பல கண்டுபிடிப்புகள் மற்றும் சோதனை முடிவுகள் வெளி வரலாம் என்ற நம்பிக்கை அறிகுறிகள் தென்படத் தொடங்கியிருக்கின்றன. நம்பிக்கையுடன் இருப்போம்!





தொடரும்..