Friday, September 26, 2003

Travel Diary - Tamil Nadu 1

எனது அன்மையகால தமிழகப் பயணம் மனதிற்கு இனியமான நினைவுகளை எனக்கு தந்திருந்தாலும் ஒரு சில கசப்பான அனுபவங்களும் இல்லாமல் இல்லை. அதில் ஒன்று தான் ஸ்ரீரங்கத்தில் நடந்த ஒரு நிகழ்வு.

இதுதான் என்னுடைய திருச்சிக்கான முதல் பயணம். இதுவரை திருச்சிப் பக்கம் சென்றதே இல்லை. மலேசியாவில் இருக்கும் எனது பெற்றோருக்கும் உறவினர் இங்கு இருப்பதாக கூறக்கேட்டிருக்கின்றேன். மதியம் வரை பாரதிதாசன் பலகலைக்கழகத்தில் கருத்தரங்கத்தை முடித்து விட்டு மாலையில் ஸ்ரீரங்கத்திற்கு செல்லலாம் என டாக்டர்.ராதா செல்லப்பன் சொல்லியிருந்தார். அவரது முனைவர் பட்ட மாணவி சுமதி தான் எனக்கு வழிகாட்டி. நல்ல அறிவான அன்பான பெண் இவள்.

எனக்கு காய்ச்சலில் உடல் அனலாய் கொதித்துக் கொண்டிருந்தது. ஆனாலும் ஸ்ரீரங்கநாதரை தரிசனம் செய்து விட்டுத்தான் செல்ல வேண்டும் என்ற உறுதியோடு கிளம்பி விட்டோம். எங்கே நுழைந்தோம் எப்படி வெளியே வருவது எனத்தெரியாதவகையில் அவ்வளவு பெரிய கோயில் அது. கோயிலை சுற்றி சுற்றி ரசித்து விட்டு சுவாமி கும்பிட்டுக் கொண்டே வரும் போது ஒரு பட்டாச்சாரியார் வந்தார். கூட்டம் அதிகமாக இருப்பதால் உங்களுக்கு நானே அர்ச்சனை தட்டு வாங்கித் தருகிறேன் என்று வலிய வந்து உதவினார். பூஜை எல்லாம் முடிந்த பின்னர் எங்களையே வால் பிடித்துக் கொண்டு வந்தார். சொர்ணக் கலசம், ஆஞ்சனேயர் என்று சில இடங்களைக் காட்டினார். தாயார் சன்னிதி எங்கே இருக்கின்றது என்று நான் கேட்க நான் உங்களை அழைத்துச் சென்று முழுசும் காட்டுவேன் என சத்தியம் செய்யாத குறையாகக் கூறி பணம் கொடுக்குமாறு கேட்டார். 50 ரூபாய் கொடுத்தேன். ஏன் இவ்வளவு கொடுக்கின்றீர்கள் என்று சுமதியும் கொஞ்சம் கடிந்து கொண்டாள். "பரவாயில்லை, நமக்கு கோயிலைச் சுற்றிக் காட்டப்போகின்றார்.அதனால் கொடுக்கலாம்" என்று அவளை சமாதானம் செய்து வரும் போது மேலே 9 குடம் இருக்கின்றது. அதை சுற்றி விட்டு வாருங்கள்" என்று கூற நாங்களும் குடங்களை (ஏன் சுற்ற வேண்டும் என்ற காரணத்தைப் பிறகு கூறுவதாகச் சொன்னார்) சுற்றி விட்டு அவர் கூறியபடியே கும்பிட்டு விட்டு கீழே வந்து பார்த்தால் ஆளையே காணவில்லை. சுற்றிலும் தேடிய எங்களுக்கு ஆளை கண்டு பிடிக்கவே முடியவில்லை. மனிதர் escape ஆகிவிட்டார். பிறகு நாங்களே முட்டி மோதி தேடி மற்ற சன்னதிகளுக்கும் சென்று வழிபட்டு திரும்பினோம்.

நாராயணன் இருக்கும் இடத்திலேயே நமக்கு (பக்தர்களுக்கு) நாமம் போடும் இவரைப் போன்றவர்களை என்ன செய்வது..??வருத்தப்படத்தானே முடியும்..?

No comments:

Post a Comment