Wednesday, September 17, 2003

திரு.வி.க

இன்று திரு.வி.க. அவர்களின் நினைவு நாள். திரு.வி.க என்று செல்லமாக அழைக்கப்படும் திரு கலியாணசுந்தரனார் மு.வா அவர்களின் குருவாகத்தான் எனக்கு முதலில் அறிமுகமானார். திரு.வி.காவின் உள்ளொளி என்ற நூல் தான நான் வாசித்த அவரது முதல் நூல். இதற்குப் பின்னர் அவரது பல நூல்களை வாசித்திருக்கின்றேன். அவரது கருத்துக்கள் என்னை முழுதாக ஈர்த்தவை.


அவர் காலத்திலேயே சமுதாய வளர்ச்சியை மனதில் நினைத்து அவர் எழுதிய நூல்களின் வழி அவரது எண்ணங்களைப் புரிந்து கொள்ள முடிந்தது. உரிமை வேட்டல், மனித வாழ்க்கையும் காந்தியடிகளும், பெண்ணின் பெருமை, சன்மார்க்கமும் வள்ளலாரும் என்பவை என்னைக் கவர்ந்தவற்றில் சில. அவரது புத்தகங்களைப் பினாங்கில் இருந்த சமயத்திலேயே 'வெற்றிவேல்' புத்தகக்கடையில் வாங்கி எனது நூலகத்தில் வைத்திருந்தேன். அவரது அனைத்து நூல்களிலும் மிகச் சிறந்ததாக என்க்குப் பட்டது உள்ளொளி தான்.


ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய ஒரு நூல் இது. மனிதர்கள் ஒவ்வொருவருக்கும் ஆன்ம ஒளி இருக்கின்றது; இந்த ஆன்ம ஒளியின் பிரகாசத்தைப் பொருத்தே அவரது தன்மைகள் அமைகின்றன என்பதை எனக்கு விளக்கி அறிமுகப்படுத்திய முதல் தமிழ் நூல் இது. இதற்குப் பின்னர் தான் சித்தர்களின் பாடல்களின் மேல் காதலும் அதில் குறிப்பிடப்படும் ஆன்ம தரிசனத்தில் ஆர்வமும் எனக்கு படிப்படியாக வளர்ந்தன. இன்றளவும் எனது மனதில் நீங்கா இடம் பெற்று விட்டது இந்நூல்.

No comments:

Post a Comment