Tuesday, September 30, 2003

Job search..!

நேற்று எனக்கு மலேசியாவிலிருந்து ஒரு தமிழ் பெண் மின்னஞ்சல் அனுப்பியிருந்தாள். உயர்நிலைப்பள்ளியில் படித்து முடித்துவிட்டதாகவும் அடுத்து பல்கலைக்கழகம் சேரவிருப்பதாகவும் தெரிவித்திருந்தாள். அவளுடைய கவலையும் சந்தேகமும் என்னெவென்றால் எந்த வகையான கல்வியைத் தேர்ந்தெடுப்பது எனபது தான். கடந்த முறை எழுதியிருந்த போது இந்தத் தகவலை எனக்கு எழுதி என்னுடைய ஆலோசனையை எதிர்பார்ப்பதாகத் தெரிவித்திருந்தாள். அவள் தேர்ந்தெடுக்கும் கல்வி அவளுக்குப் பிடித்தமான ஒரு வேலையை அவளுக்கு அமைத்துக் கொடுக்கவேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையில் அவளது விருப்பதையும்,. எப்படிப்பட்ட வேலையில் தன்னை அவள் ஈடுபடுத்திக் கொள்ள விரும்புகின்றாள் என்பன போன்ற சில கேள்விகளை அவளிடம் கேட்டிருந்தேன். அதற்கு பதில் தரும் வகையில் அமைந்திருந்தது இந்த இரண்டாவது கடிதம்.

அவளுக்கு அதிகமாகப் படித்துக் கொண்டேயிருக்கக் கூடிய வகையிலான வேலையில் கொஞ்சமும் நாட்டமில்லை என்று குறிப்பிட்டிருந்தாள். "வக்கீல், மருத்துவம் இப்படிப்பட்ட வேலைக்கெல்லாம் வாழ் நாள் முழுதும் படித்துக் கொண்டேயிருக்கவேண்டும். அதனால் அந்த மாதிரியான வேலையெல்லாம் வேண்டாம். கணிதம் அதிகமாக உள்ள வேலை எதுவும் வேண்டாம். ஆசிரியராகவும் விருப்பமில்லை. நல்ல வருமானம் வரக்கூடிய ஒரு வேலை வேண்டும். முடிந்தால் கணிணி சம்பந்தப்பட்ட துறையில் ஏதாவது ஒரு வேலையாக இருந்தால் பிடிக்கும். நான் ஒரு computer engineer ஆனால் சந்தோஷப்படுவேன். இதைப் பற்றி என்ன நினைக்கின்றீர்கள்" என்று கேட்டு எழுதியிருந்தாள்.



கடிதத்தைப் பார்த்த எனக்கு அவளது சிந்தனைப் போக்கையும் மடமையையும் நினைத்து சிரிப்பதைத் தவிர வேறொன்றும் எண்ணத்தோன்றவில்லை. ஒரு கணினி பொறியியலாளர் ஆகிவிட்டால் நிறைய சம்பாதிக்கலாம்; அதிகமாகப் படிக்கத் தேவையில்லை என்ற தப்பான சிந்தனைப் போக்கு எப்படி இவர்களுக்கு வந்தது? மலேசியாவில் சில நண்பர்களிடம் பேசும் போதும் இம்மாதிரியான சில பொய்யான கருத்துக்களை அவர்கள் கொண்டிருப்பதைக் கேட்கும் போது எனக்கு ஆச்சரியமாக இருக்கும். "என் மகள் அல்லது மகன் நன்றாகப்படிக்கவில்லை. உயர்நிலைப் பள்ளி சோதனையில் சுமாரான மதிப்பெண்கள் தான் பெற்றிருக்கின்றாள்(ன்). அதனால் computer engineering படிக்க வைக்கலாம் என்று நினைக்கின்றேன்" என்று கூறுபவர்களை நான் நிறையவே பார்த்திருக்கின்றேன்.



இது எவ்வளவு பெரிய மடமை. ஒரு கணினி பொறியியலாளர் என்பவர் ஒரு மருத்துவருக்குச் சமமானவர். எப்படி ஒரு மனிதனுக்கு நோய் வந்தால் அதற்கான அத்தனை சிகிச்சைகளையும் செய்கின்றோமோ, அதேபோலத்தான் ஒரு கணினிக்கும். அதுவும் மிகப்பெரிய நிறுவனங்களில், அதுவும் கோடிக்கான பணச்செலவில் தகவல் பாதுகாக்கப்படும் இடங்களிலெல்லாம் வேலை செய்வது என்பது சாதாரண ஒரு காரியமல்லவே. அதுவும் கணினி தொழில்நுட்பம் என்பது நிமிடத்திற்குள் எத்தனையோ வளர்ச்சியை நாளுக்கு நாள் கண்டுவருகின்றது. அப்படிப்பட்ட இந்தத் துறையில் வேலை கிடைத்து விட்டால் போதும்; அதற்குப் பிறகு படிக்க வேண்டியதே இல்லை என்று சொல்லும் மடமையை என்னவென்று சொல்வது? அறியாமை படித்தவர்களிடமும் இருக்கின்றதே என நினைக்கும் போது கவலையாகத்தான் இருக்கின்றது.

1 comment: