Monday, September 15, 2003

வழி தவறிய வண்ணத்துப் பூச்சிகள் - மாலன்

பல நாட்களுக்குப் பின்னர் நெடுங்கதை ஒன்றினைப் படிக்கும் அதிர்ஷ்டம் வாய்த்தது. இந்த முறை தமிழகம் சென்றிருந்த போது மாலன் அவர்கள் கொடுத்த அவரின் 'வழி தவறிய வண்ணத்துப் பூச்சிகள்' என்ற நூல் கையிலிருந்தது. மலேசியாவிலிருந்து ஜெர்மனி வரும் வழியில் படிக்க தேவைப்படும் என எடுத்து வைத்திருந்தேன்.

ஏறக்குறைய 12 மணி நேரம் நீடித்த அந்த பயணத்தில் இந்த நூலிலிருந்த நாவலின் தலைப்பினைக் கொண்ட அந்தக் கதையினை வாசிக்கும் வாய்ப்பு அமைந்தது.

பொதுவாகவே கதையின் சில பக்கங்களைப் படித்து பாத்திரங்களை பற்றி அறிந்து கொண்ட பின்னர் கதையின் முடிவைப் புரட்டி பார்த்து விடுவேன்; சோக முடிவா அல்லது சந்தோஷமான முடிவா என்பதைத் தெரிந்து கொள்ள.

ஆனால் இந்த நாவலில் நான் இதனைச் செய்வதற்கு முன்னர் இந்த நாவலுக்கு அறிமுக உரை வழங்கியிருக்கும் தி.ஜா அவர்களின் எழுத்துக்களே கதையின் தன்மையை, இதன் முடிவை ஓரளவு காட்டி விடும் வகையில் அமைந்துள்ளது. சமர்ப்பணம் என்ற பகுதியில் மாலனின் 4 வரிகளும் அபாரம். மாலனின் தனித்துவத்தை இந்த 4 சின்ன வரிகளிலே தெரிந்து கொள்ள முடிகின்றது.

இந்த நெடுங்கதையில் ஒவ்வொரு தனிப் பகுதி ஆரம்பிக்கும் போதும் 'அப்பாவின் டைரி' என்ற ஒரு அறிமுகப் பகுதி. இந்த எழுத்து நடை மனதிற்கு மிக மிக அன்னியோன்னியமாக வருகின்றது. கதை முழுக்க அழகு அழகான பல சொற்கள். பல நாட்களாக பயன்படுத்தாத பல நல்ல தமிழ் சொற்களை இந்த கதை படிக்கும் போது படித்து மகிழ்ந்தேன். சில எழுத்தாளர்களின் திறமையைக் கண்டு நான் வியப்பதுண்டு. மாலனின் எழுத்தும் அப்படித்தான் இருக்கின்றது. கதை ஒரு விதத்தில் சோகமான ஒரு முடிவைத்தான் வைக்கின்றது. ஆனாலும் அந்த சோகத்தையும் காரணத்தோடு விளக்கி நிதர்சனத்தை விளக்கும் வகையில் முடித்திருப்பது சிறப்பு.

No comments:

Post a Comment