Sunday, September 28, 2003

TVU..!

லண்டனிலிருந்து ஒலிபரப்பாகும் தீபம் தொலைக்காட்சியில் ஞாயிற்றுக்கிழமைகளில் 1:30 மணிக்கு ஒலிபரப்பாகும் 'அரங்கம் அந்தரங்கம்' நிகழ்ச்சி எனக்குப் பிடித்த சில நிகழ்ச்சிகளில் ஒன்று. தமிழக அரசியல் நிலவரத்தை மிகுந்த பச்சாதபத்தோடும் மன உருக்கத்துடனும் தேர்ந்த செய்தியாளர் அப்துல் ஜபார் அவர்கள் வழங்குவார். தமிழகத்தில் நடக்கின்ற, நடந்துகொண்டிருக்கின்ற செய்திகள், அவற்றினால் ஏற்படப்போகும் விளைவுகளை மிகுந்த கவலையோடும் ஆதங்கத்தோடும் அவர் ஐரோப்பிய தமிழர்களிடம் பகிர்ந்து கொள்வது கொஞ்சம் வித்தியாசமான ஒரு நிகழ்ச்சியாகவே மனதிற்குப் படும்.

இன்று மத்தியான உணவுக்குத் தயாரித்திருந்த ஒரு pizza-வோடு தொலைக்காட்சி முன் உட்கார்ந்து விட்டேன், தமிழக நிலவரம் கேட்க. மற்ற சில விஷயங்களுக்கூடாகவே, நடந்து முடிந்த தமிழ் இணைய மாநாட்டைப் பற்றியும் அவரது பேச்சு அமைந்திருந்தது. தமிழ் இணையப் பல்கலைக் கழகம், முரசொலி மாறனின் மிகுந்த ஈடுபாட்டோடு உருவாக்கப்பட்ட ஒன்று என்று குறிப்பிட்ட அவர், அதன் நிர்வாக இயக்குனர் முனைவர் பொன்னவைக்கோ அரசியல் காரணங்களுக்காக இப்போது பழிவாங்கப்பட்டிருக்கின்றார் என்ற தகவலையும் சேர்த்தே சொன்னார். இந்த மாநாடு நடந்த இடம் கலைஞரின் ஆளுமைக்கு உட்பட்ட இடம் என்ற ஒரே காரணத்திற்காக அவருக்கும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அழைப்பிதழ் கொடுத்தமைக்காக, முனைவர் பொன்னவைக்கோ பதவி நீக்கம் செய்யப்படிருப்பதாகவும் தெரிவித்தார்.

TI2003 முடிந்த சில நாட்களிலேயே இந்த பேச்சு பரவலாக ஆனால் கொஞ்சம் ரகசியமாகப் பேசப்பட்டது. ஆனால் இப்போது செய்தி தொலைக்காட்சியிலேயே அறிவிப்பு கண்டிருக்கின்றது!

No comments:

Post a Comment