Sunday, June 7, 2015

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 82

புதிய வாழ்வு எனும் அத்தியாயத்தில் உ.வே.சா தானே தன் வாழ்க்கை மாற்றத்தை பதிகின்றார், இப்படி.

"1880-ஆம் வருஷம் பிப்ரவரி மாதம் 12 உ வியாழக்கிழமை பொழுது விடிந்தது. அன்று காலையில் நான் வழக்கம்போலவே உத்ஸாகத்தோடு இருந்தேன். திருவாவடுதுறை ஆதீனத்தின் சார்பு என்னை நல்ல நிலைமையில் வைத்து வளர்த்து வரும் என்ற எண்ணம் எனக்கும் என்னைச் சார்ந்தவர்களுக்கும் இருந்தது. என் வாழ்வில் ஒரு விதமான அமைதி ஏற்பட்டு விட்டதாகவே நான் கருதினேன். பிள்ளையவர்களுடைய பதவியை வகிக்கும் தகுதி என்னிடம் இராவிட்டாலும் அவரது மாணாக்க பரம்பரையை விருத்தி செய்யும் தொண்டே எனது வாழ்க்கைப் பணியாக இருக்குமென்று எதிர் பார்த்தேன்.

ஆனால் கடவுளுடைய எண்ணம் வேறு விதமாக இருந்தது. மடத்தின் தொடர்பு ஒன்றோடு நில்லாமல் என் ஆசிரியத் தொழிலும், ஆராய்ச்சியும், தமிழ்த் தொண்டும் மேன்மேலும் விரிவடைய வேண்டிய நல்லூழ் எனக்கு இருந்தது போலும். அது தன் வேலையைச் செய்ய ஆரம்பித்தது. கும்பகோணத்திலிருந்து தியாகராச செட்டியாரைக் குருவாரமாகிய அன்று பிற்பகல் திருவாவடுதுறையிற் கொணர்ந்து சேர்த்தது. என் புதிய வாழ்வு தொடங்கிற்று."

திருவாவடுதுறை திருமடத்தை விட்டு கும்பகோணம் காலேஜில் ஆசிரியராக தன் புது வாழ்க்கையை உ.வே.சா தொடங்கும் காலம் வந்த நிகழ்வு இது. இதுவே அவரது வாழ்க்கையின் திசையை மாற்றி அமைத்த நிகழ்வு. இன்று நாம் அறியும் உ.வே.சா  உருவாக அடிப்படையை அமைத்துக் கொடுத்த நிகழ்வு இது. 

மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களிடம் தமிழ் கற்று கும்பகோணம் காலேஜில் பணியாற்றியவர் தியாகராஜ செட்டியார்.  இவருக்கும் மடத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருந்து வந்தது. தான் பணியிலிருந்து ஓய்வு பெற முடிவெடுத்து தியாகராஜ செட்டியாரவர்கள் தான் வகித்து வந்த பதவிக்குப் பொறுத்தமானவராக உ.வே.சா இருப்பார் என நினைத்து  சுப்பிரமணிய தேசிகரின் சம்மதத்தைப் பெற திருமடத்திற்கு அன்று வந்திருந்தார். தேசிகரிடம் தன் விண்ணப்பத்தை வைத்து, தான் பதவி விலகிச் செல்லும் இந்த வேளையில் தான் வகிந்து வந்த   பொறுப்பான அந்த ஆசிரியர் பதவிக்கு உ.வே.சா வை நியமிப்பது பொறுத்தமாக இருக்கும் என விளக்கினார். 

இது மடத்தில் தேசிகர் உட்பட அனைவருக்குமே முதலில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது என்பதில் வியப்பேதுமில்லை. தன் வாழ்நாள் முழுக்க மடத்திலேயே ஆசிரியராக பணியாற்றி அந்தச் சைவ தமிழ் உலகிலேயே தன் வாழ்க்கை நிலைத்து நிற்கும் என கணவு கண்டு கொண்டிருந்தார் உ.வே.சா. ஆதலால் அவரது வாழ்க்கை பயணம் அமைக்கப்பட்ட விதம் அவரது செயல்பாடுகள் திருமடத்தின் எல்லைக்கு அப்பாலும் விரியக்கூடிய மற்றொரு உலகம் ஒன்று அவருக்காகக் காத்திருக்கின்றது என்பதை அக்கணத்தில் அவர் உணர வில்லை.

முதல் நாள் தேசிகரிடமிருந்து மட்டுமல்ல, உ.வே.சாவிடமிருந்தும் இந்த விண்ணப்பத்திற்குச் சம்மதம் கிடைக்கவில்லை. ஆயினும் தன் நம்பிக்கையை இழக்க வில்லை தியாகராஜ செட்டியார். மறுநாள் பூசைக்குப் பின்னர் மீண்டும் அவையில் வந்து தன் விண்ணப்பத்தை வைத்து  தனது கோரிக்கைக்கான காரணத்தையும் விளக்கினார்.

கும்பகோணம் காலேஜ் என்பது அப்பகுதியில் மிக முக்கிய கல்விக்கூடம் என்பதும் பிள்ளையவர்களிடம் கல்வி கற்ற ஒரு மாணவர், அதிலும் திருமடத்தோடு நல்ல தொடர்பு கொண்ட ஒருவர் அங்கு பதவியில் இருப்பது, அங்கு உருவாகும் மாணவர்களும் நல்ல தகுதியுடனும் தரத்துடனும் உருவாக்கம் பெற நல்ல வாய்ப்பைத் தரும் என்பதோடு மடத்திற்கும் காலேஜிற்கு ஒரு உறவு தொடர்வதற்கு இது துணை புரியும் என்பதையும் விளக்கினார். ஆசிரியர் அல்லவா..? அதிலும் மிகத்தேர்ந்த ஆசிரியர் தியாகராஜ செட்டியார். கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும் என்பதற்கொப்ப, இந்த விளக்கங்களைக் கேட்ட தேசிகருக்கு இது ஒரு வகையில் நல்ல யோசனையாகவே அமையும் என்ற நம்பிக்கை ஏற்படலாயிற்று 

முதல் நாள் மாலை உவே.சா தன் மனதில் "திருவாவடுதுறை மடத்தின் அன்னம் என் உடம்பில் எவ்வளவு ஊறியுள்ளதென்பதைச் செட்டியார்  நன்றாகத் தெரிந்துகொள்ளவில்லை". என மனதில் சொல்லிக் கொண்டிருந்தவர்  மறு நாள் இந்த விளக்கங்களைத் தொடர்ந்து கேட்கவும் அவர் மனம் புதிய கோணத்தில் இந்த நிகழ்வைப் பார்க்கத் தொடங்கியது. 

தனக்காக வேறொரு புதிய உலகம் காத்திருகின்றது என்பதை தன் மனத்திரையில் மெலிதாக உணர ஆரம்பித்தார் உ.வே.சா!

தொடரும்

சுபா.

No comments:

Post a Comment