Monday, July 1, 2013

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 54

மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் எழுதிய திருப்பெருந்துறைப் புராணம் எனது இந்த ஆண்டு தமிழகப் பயணத்தின் போது மேற்கொண்ட தேடலில் கிடைக்கவில்லை. இது எனக்கு ஏமாற்றத்தைத்  தந்த ஒரு விஷயம்.இந்த நூல் கிடைத்தால் அதனை மின்னூலாக்கி தமிழ் மரபு அறக்கட்டளை நூலகத்தில் இணைக்க வேண்டும் என நினைத்திருந்தேன். இம்முறை அது சாத்தியப்படவில்லை. பிள்ளையவர்கள் திருவாவடுதுறை மடத்தைச் சார்ந்திருந்து எழுதிய நூல்களில் இதுவும் ஒன்று என்ற சிறப்புப் பெறும் ஒரு தலபுராணம் இது. எப்போது நம் கைகளுக்கு இது கிடைக்க வேண்டும் என்பது இறையருள் சித்தமாக இருக்கின்றதோ அப்போது இது கிட்டலாம் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது.

திருப்பெருந்துறைப் புராணம் உருவான கதை பற்றிய விரிவான விளக்கங்களை அத்தியாயம் 52ல் உ.வே.சா குறிப்பிடுகின்றார்.

திருப்பெருந்துறை ஆலயத்தை நிர்மானித்து வந்த சுப்பிரமணியத் தம்பிரான் என்பவர் திருவாவடுதுறை ஆதீனகர்த்தருக்குத் தமது மேற்பார்வையில் இருக்கும் திருப்பெருந்துறை ஆலயத்திற்கு இதுகாறும் ஒரு முழுமையானத் தலபுராணும் இல்லை என்றும் அந்தக் குறை நீங்கி மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களே இந்தத் தலத்திற்கு ஒரு தல புராணம் இயற்ற வேண்டும் என்றும் கேட்டிருந்தார். இந்த நூலை சிறப்பாக பாடி அரங்கேற்றி முடித்தால் ஆலயத்தின் சார்பாக ரூபாய் இரண்டாயிரம் வழங்க சித்தமாக இருப்பதாகவும் தெரிவித்து திருப்பெருந்துறைக்குறிய ஒரு வடமொழி நூலின் தமிழ் மொழிபெயர்ப்பையும், அந்த ஆலயத்திற்கு முன்பிருந்த இரண்டு புராணங்களையும் சேர்த்து அனுப்பியிருந்தார்.

ஆதீனகர்த்தர் சுப்பிரமணிய தேசிகருக்கும் இது நல்லதொரு வாய்ப்பாக பொருளாதார உதவியாக பிள்ளையவர்களுக்கு அமையும் என்ற எண்ணம் மனதில் தோன்றியிருந்தது. அப்போது தான்  தன் புதல்வருக்குத் திருமணம் முடித்து ஏராளமானச் செலவும் அவருக்கு ஏற்பட்டிருந்தது  அது தேசிகருக்கும் தெரியும். பிள்ளையவர்களின் அந்தக் கடன் சுமைகளை ஏதாகினும் ஒரு வகையில் குறைக்க இது உதவலாமே என்ற எண்ணம் தேசிகருக்கு மனதில் இருந்தது.

இதனை நினைத்து உ.வே.சாவை அழைத்து மாயூரத்தில் இருக்கும் பிள்ளையவர்களைப் பார்த்து இந்த நல்ல செய்தியைச் சொல்லி பணியைத் தொடங்கக் கேட்டுக்கொள்ளச் சொல்லி வருமாறு கூறி அனுப்பி வைத்தார்.

இந்தப் பணியைக் கேள்விப்பட்டதுமே  பிள்ளையவர்களுக்கு மிகுந்த ஆர்வம் தோன்ற அடுத்த நாட்களிலேயே திருவாவடுதுறை மடத்திற்குப் புறப்பட்டு விட்டார். உ.வே.சாவும் இது வரை இக்கோயிலைப் பார்த்ததில்லை. ஆக நூல் அரங்கேற்றம் நிகழும் போது ஆலயத்தைக் காணும் வாய்ப்பு வருமே என்ற மகிழ்ச்சி உ.வே.சா அவர்களுக்கு உண்டாயிற்று. இதனை இப்படி உ.வே. சா குறிப்பிடுகின்றார்.

“சந்நிதானத்தின் திருவுள்ளப்படி நடப்பதுதான் எனக்கு இன்பம். நீர் திருப்பெருந்துறை பார்த்ததில்லையே?”

“இல்லை; மாணிக்கவாசகர் திருவருள் பெற்ற ஸ்தலமென்று ஐயா அவர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன்.”

“ஆமாம்; அது நல்ல ஸ்தலந்தான். ஆவுடையார் கோவிலென்று இப்போது எல்லோரும் சொல்லுவார்கள். இறைவன் திருவருளால் புராணம் அரங்கேற்ற நேர்ந்தால் எல்லாவற்றையும் நீர் பார்க்கலாம்.”

திருப்பெருந்துறையைப் பார்க்க வேண்டுமென்ற விருப்பம் எனக்குத் தோன்றியது; என் ஆசிரியர் அந்த ஸ்தல புராணத்தைப் பாட நான் அதனை எழுத வேண்டுமென்ற ஆசை அதற்குமுன் எழுந்தது.


திருவாவடுதுறை ஆதினத்திற்கு வந்தடைந்த சில நாட்களில் திருப்பெருந்துறைப் புராணம் உருவாக ஆரம்பித்தது. இத்தலத்தின் வெயிலுவந்த விநாயகனை நினைத்து முதல் பாடல் பாடி ஒரு செய்யுளமைக்க,  நூல் வடிவம் பெற ஆரம்பித்தது. பிள்ளையவர்கள் செய்யுளைச் சொல்ல சொல்ல உ.வே.சா அதனை ஓலைச் சுவடியில் எழுதி வரலானார்.

சுப்பிரமணியத் தம்பிரான் கொடுத்திருந்த இரண்டு புராண நூல்களோ ஸ்தல வரலாறுகளை வெளிப்படுத்தும் வகையில் மட்டுமே அமைந்தவையாக இருந்தன. பிள்ளையவர்கள் தான் இயற்ற ஆரம்பித்த நூலின் பொருளை மேலும் விரிவாக்கி நாட்டுச் சிறப்பு, நகரச் சிறப்பு என இணைத்து அதனை வளம் மிக்க படைப்பாக உருவாக்கி வந்தார்.

திருப்பெருந்துறைப் புராணம் இயற்றிக் கொண்டிருக்கும் போதே பிள்ளையவர்களுக்குக் கடன் சுமை அதிகரிக்க ஆரம்பித்திருந்தது. நூலை முழுமையாக எழுதி அதனை அரங்கேற்றம் செய்தால் தான் 2000 ரூபாய் கிடைக்க வாய்ப்பு என்னும் நிலை. ஆனால் திருமணத்திற்குக் கடன் கொடுத்தவர்களோ அடிக்கடி வந்து கடனைக் கேட்க ஆரம்பிக்கையிலே பிள்ளையவர்களின் மனம் மிகுந்த சஞ்சலமமும் வருத்தமும் கொண்டது. பொருளாதாரம் திடமாக இருக்க வேண்டியதும் கவனம் வைத்து செலவுகளைச் செய்ய வேண்டியதும் எவ்வளவுக்கெவ்வளவு அவசியமான ஒன்றாகின்றது என்றும் பிள்ளையவர்கள் நினைத்து நினைத்து வாடிய சமயங்கள் இவை. திருமணத்திற்கு வாங்கிய கடன் சுமையால் ஏற்பட்ட துன்பங்களும் மனக் கஷ்டங்களும் இந்தச் சமயத்தில் அவரை வாட்டத்தொடங்கியிருந்தன.

தொடரும்...

சுபா

No comments:

Post a Comment