Friday, March 7, 2014

மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் பிரபந்தத் திரட்டு மின்னூல் வெளியீடு


திரிசிரபுரம் மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களின் பிரபந்த திரட்டு நூலின் இறுதி நூலை இன்று தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூலாக வெளியிட்டேன். அதன் தொடர்பான எனது அனுபவத்தின் ஒரு பகிர்வாக இப்பதிவு.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் இதே வேளையில் தமிழகத்தில் இருந்தேன். ​ஓராண்டு கடந்து விட்டது.

மார்ச் மாதம் மூன்றாம் நாள் மகாவித்வான் மீனாட்சி சுந்தரம்பிள்ளையின் பிரபந்தம், அந்தாதி, பிள்ளைத்தமிழ் அடங்கிய  உ.வே.சா  அவர்கள் திருவாவடுதுறை ஆதீன முதல்வர் ஸ்ரீலஸ்ரீ அம்பலவான தேசிகர் விருப்பத்தின்படி  1910ம் ஆண்டில் தொகுத்து முடித்து, பதிப்பித்த திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சி சுந்தரம்பிள்ளையவர்கள் பிரபந்தத் திரட்டு நூலினை மின்னாக்கம் செய்தது இன்றும் மறக்க முடியாத ஒரு அனுபவம்

திருவிடைமருதூர் சிற்றூரில் ஒரு அழகிய தங்கும் விடுதியில் இருந்து இரவு நேரம் இதமான அந்த வேளையில் இந்த நூலை மின்னாக்கம் செய்தது மீண்டும் ஞாபகம் வருகின்றது.

தமிழகம் செல்லும் முன் மனதில் பிள்ளையவர்களின் தலபுராணங்கள், பிள்ளைத்தமிழ் நூல்கள், அந்தாதி நூல்கள் ஆகியனவற்றை தேடி அவற்றை மின்னூலாக்க வேண்டும் என்ற அளவிட முடியாத ஆவல் மனம் முழுதும் நிறைந்திருந்தது.

இறையருள் கருணை உதவும்.. செய்ய முடியும் என்ற நம்பிக்கையும் இருந்தது.

நண்பர்களிடம் பேசி ஆங்காங்கே சில தகவல் பெற்று முடிவில் திருவாவடுதுறை மடம் சென்றால் அங்கு பிள்ளையவர்களின் படைப்புக்களைக் காணலாம்.. மின்னாக்கம் செய்து முடிக்கலாம் என யோசனை கிடைக்க அங்கு செல்லும் முயற்சியிலும் ஏடுபட்டேன்.

ஆதீனத்தில் தொடர்புள்ள நண்பர் ஒருவர் (திரு.சரவணன் - சென்னையில் ஒரு கல்லூரி விரிவுரையாளர்) ஆதீன அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு இன்ன தேதியில் அங்கு வருகின்றோம் என குறிப்பிட்டு ஏற்பாடு செய்தார்.

திருமடம்  செல்லும் போது எத்தகைய வழிமுறைகளைக் கையாள வேண்டுமோ.. என்ன சட்டதிட்டங்கள் நடைமுறையில் உள்ளனவோ என எண்ணம் மனதில் ஓடிக் கொண்டிருந்தது.

திருமடம் செல்லும் பாதையை அடையும் போதே மனதில் ஒரு குதூகலம் எழாமல் இல்லை.

என் சரித்திரம் வாசித்து முடித்திருந்தபடியால் திருவாவடுதுறை நகர், ஆதீனம் என ஓரளவு மனதில் ஒரு கற்பனை ஊர் நிழலாடியது.

வாசலில் காரை நிறுத்தி திருமடம் செல்லலாம் என நாங்கள் நெருங்க எங்களை வாசலில் வந்து வரவேற்றனர் இரண்டு தம்பிரான்கள். இருவரையும் பார்க்கும் போதே அவர்களின் சைவ நெறி ஒழுக்கம் நன்கு வெளிப்படும் வகையில் ஒரு தோற்றம். ஆனால் அதனையும் கடந்து மலர்ந்த முகத்தின் புன்னகை... அவர்களை புகைப்படம் ஏதும் நான் எடுக்கவில்லை எனினும் இப்போது நினைத்துப் பார்த்தாலும் கண் முன்னே அக்காட்சி தோன்றுகின்றது.

எங்களை வரவேற்று உபசரித்து திருநீறு வழங்கி வாசற்புற பகுதியில் அமர வைத்து அருந்த நீர் கொடுத்து உபசரித்தனர். என்ன அன்பு என வியந்து போனேன்!

அப்போதைக்கு சில தினங்களுக்கு முன்னரே ஆதீனகர்த்தர் மறைந்தமையினாலும் புதிய ஆதீனத்தலைவர் பொறுப்பேற்றுக் கொண்டிருந்தார்கள். ஆனால் நாங்கள் சென்ற சமயம் அவர்கள் பயணத்தில் இருந்ததாகவும் ஆனால் வரும் எங்களை உபசரிக்க சொல்லியிருந்ததாகவும் கேள்விப்பட்ட போது மேலும் சந்தோஷமடைந்தேன்.

நிச்சயமாக நினைத்த காரியம் நலமே நிறைவேறும் என்ற நம்பிக்கை வந்தது.

அன்றைய தினமே பிள்ளையவர்களின் சில தல புராண நூல்களை மின்னாக்கம் செய்தேன். அவை இன்னமும் வெளியிடப்படவில்லை. இனி தொடர்ந்து வரும்.

மதியம் நூலகத்தில் தேடியதில் சில தலபுராணங்களை மட்டுமே காணும் நிலை ..இன்னும் பல நூல்கள் கிடைத்தால் அவற்றையும் பதிவு செய்து விடலாமே என மனதில் ஏக்கம் நிறைந்தது. நூலகத்தில் சொல்லி வைத்து விட்டு பின்னர் எங்கள் சோழ நாட்டு கோயில் பதிவுகளைச் செய்ய புறப்பட்டு விட்டோம்.

இறைவன் திருவருள்..
இரவு நாங்கள் தங்கியிருந்த  இடத்திற்கே எங்களைத் தேடிக் கொண்டு ஆதீனப் புலவர்கள் இருவர் இந்த பிரபந்த திரட்டு நூலோடு வந்து சேர்ந்தனர்.

ஆனால் அவர்கள் கட்டளை.. மறு நாள் இந்த நூலை மறவாமல் நூலகத்தில்  ஒப்படைத்து விட வேண்டும் என்பது. மறு நாள் காலை ஆறு மணிக்கு எங்கள் சோழனாட்டு கோயில் பதிவுக்கான பயணம் திட்ட மிட்டிருந்தோம். இருந்ததோ இரவு வேளை.

அன்றே சிவராத்திரி :-)

மின்னாக்கம் செய்து முடிக்க காலை 3 மணி.

சோர்வில் உடல் அலுத்துப் போனாலும் மனதில் குதூகலம் நிறைந்திருந்தது.

இப்போது ஒரு வருடமாகிவிட்டது.

இந்த 40 நூல்களையும் மின்னாக்கம் செய்து தனித்தனியாக மின்னூலாகவும் செய்து வெளியிட்டு விட்டோம். நமது தமிழ் மரபு அறக்கடளையின் சேகரத்தில் இது இடம்பெற்றுள்ளது என்பதோடு உ.வே.சாவின் முதல் பதிப்பு இது என்னும் பெருமையுடன் வரும் இந்த நூல் நமக்குக் கிடைத்திருப்பது ஒரு சிறப்பு.

இந்தப் பணியில் முழுமையாக நான் ஈடுபட்டு செய்து முடித்தாலும் வெவ்வேறு வகைகளில் இப்பணிக்கு உதவிய சிலரை மறக்க முடியாது. அவர்களை நினைவு கூர்வது மிகத் தகும்.


  • திருவாவடுதுறை ஆதீன கர்த்தர்
  • திருவாவடுதுறை ஆதீன அலுவகத்தினர்
  • திருவாவடுதுறை ஆதீனப்புலவர்கள், குறிப்பாக திரு.குஞ்சிதபாதம்
  • திருவாவடுதுறை ஆதீன நூலகர்
  • திரு.சரவணன்,
  • டாக்டர்.மா.ராஜேந்திரன்
  • திரு.பரந்தாமன்

ஆகியோருக்கு என் நன்றி


தமிழ் மரபு அறக்கட்டளை சேகரத்தில் இருக்கும் இன்னூல்களைப் பல்கலைக்கழக ஆசிரியர்களும் மாணவர்களும் பயன்படுத்தி தமிழாய்வில் ஈடுபட வேண்டும். பிள்ளையவர்களின் தமிழின் ஆழத்தை, சிறப்பை தொடர்ந்து ஆய்வுலகம் போற்றி வர வேண்டும் என்பதே என் தனிப்பட்ட அவா!

அன்புடன்
சுபா

No comments:

Post a Comment