Thursday, July 5, 2012

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 8


சடகோபையங்காரின் நிலையே பல தமிழ் புலவர்களுக்கும் அக்கால கட்டத்தில் பொதுவான நிலையாக இருந்தமை என் சரித்திரம் வாசிக்கும் போதே நன்கு உணர முடிகின்றது. புலமையும் வருமையும் இணைந்தே இருப்பவையோ என்ற கேள்வியும் மனதில் தோன்றி மறைகின்றது.

அனைவருக்கும் கல்வி என்ற நிலை அமைவது சுலபமான ஒன்றா என்றால் இல்லை என்பதே பதிலாக நிற்கின்றது. உ.வே.சா காலத்திலும் கூட கல்வியாகியது உயர்ந்த சாதி மக்களுக்கும் பணம் படைத்தவர்களுக்கும் கிடைக்கக் கூடிய விஷயமாக அமைந்திருந்தது என்பதனை கண்கின்றோம். கீழ்ச்சாதி மக்களின் குழந்தைகள் கல்வியறிவு பெறுவது என்பது அச்சு இயந்திரங்கள் பரவலாக வந்து கல்வி பொது மக்களுக்கும் கிடைக்கும் நிலை அரசியல் ரீதியாக மாற்றம் கண்ட பின்னரே தமிழகத்தில் ஏற்படுத்தப்பட்ட ஒன்றாக அமைந்தது. இன்றளவும் அனைவருக்கும் கல்வி என்பது முழுமையாக நடைமுறைபடுத்தப்படுகின்றதா என்பது ஐயத்திற்குட்படுத்தப்பட வேண்டியதொரு விஷயமே. இந்த சூழலில் கல்வியை வணிகமாகவும் நோக்கும் நிலையும் பரவி விட்டது. அரசாங்க பள்ளிகளை விட தனியார் பள்ளிகளின் பால் மக்களின் நாட்டம் மிக அதிகரித்து பணத்தைச் செலவழித்து குழந்தைகள் கல்வியை திட்டமிடும் நிலையில் பெற்றோர்கள் இருக்கின்றனர். நிற்க!

தொடர்ந்து சடகோபையங்கார் நிலையைப் பார்ப்போம். கல்வி.. வாசிப்பு.. பாடம் சொல்லுதல் என்பதிலேயே மனதைச் செலுத்தி அதிலேயே வாழ்ந்தவர் இவர். அரியலூர் சமஸ்தானத்தின் ஆதரவில் வாழ்ந்தவர். ஆகினும் அக்காலச் சூழலில் அரியலூர் சமஸ்தானத்தின் நிலை படிப்படியாக பொருளாதார நிலையில் சரிய ஆரம்பித்ததால் சமஸ்தானத்திலிருந்து வந்து கொண்டிருந்த பொருளாதார ஆதரவும் குறைந்து போயிற்று. இந்த நிலையில் சடகோபையங்கார் தனது சிஷ்யர்களின் உதவியைக் கொண்டே வாழ்க்கையை ஜீவித்து வந்தார்.

ஒரு சூழலை உ.வே.சா இப்படி விளக்குகின்றார். "குளிருக்குப் போர்த்திக் கொள்ளத் துப்பட்டி இல்லை. அதற்காக மல்லூர்ச் சொக்கலிங்கம் பிள்ளை என்பவருக்கு ஒரு பாட்டு எழுதி அனுப்பினார். "துப்பட்டி வாங்கித் தரவேண்டும் லிங்க துரைசிங்கமே" என்பது அதன் இறுதி அடி. அந்தக் கனவான் ஒன்றுக்கு இரண்டு துப்பட்டிகளை வாங்கி அனுப்பினார். "

வருமை புலவர்களை வாட்டிக் கொண்டிருந்தால் அவர்கள் பாடம் சொல்வது எப்படி? கவி எழுதுவது எப்படி? சிந்தனையில் ஆழ்ந்து போய் புதுமைகளைப் படைப்பது எப்படி. பொருளாதாரம் வாழ்க்கையின் அஸ்திவாரம் நிலைக்க தேவை என்றாகிவிட்ட காலகட்டத்தில் புலவர்களும் பொருளாதாரத்தைப் பார்க்கும் கண்களைப் பெற்றவர்களாக இருப்பது மிக மிக அவசியம் என்பதே உண்மை. முழுதாக பாடம் சொல்லிக் கொண்டும் ஆய்வில் இறங்கி நம்மை மறந்திருந்தால் நமது வாழ்க்கையின் அஸ்திவாரம் ஆட்டம் கண்டு விடும் என்ற விஷயமே நிதர்சனம். ஆக புலவர்களும் ஆசிரியர்களும் ஆய்விலும் பொது நலத்தொண்டிலும் ஈடுபடுபவர்களும் அடிப்படை வருமானத்தை என்றென்றும் தற்காத்துக் கொண்டேதான் ஏனைய காரியங்களில் ஈடுபட வேண்டியது நடைமுறைக்குப் பொருந்துவதாக அமைகின்றது.

வருமை வாட்டி வதைக்கும் சக்தி படைத்தது; சில வேளைகளில் சிந்தனையை முடமாக்கும் சக்தியும் படைத்தது; வருமை நீங்கிய வாழ்வே புலவர்களுக்கும் ஆய்வாளர்களுக்கும் தன்னை தன் சுய பிரச்சனைகளை மறந்து சிந்தனையில் மூழ்கி புதுமையைப் படைக்கவும், புத்தாக்கங்களை உருவாக்கவும் வல்லமையைத் தரக்கூடியது.

உ.வே.சா மேலும் இப்படிக் கூறுகின்றார். "மாலை வேளையில் அவர் கடை வீதி வழியே செல்வார். என் வஸ்திரத்தை வாங்கி மேலே போட்டுக் கொண்டு போய்விடுவார். அதுதான் அவருடைய திருவுலாவிலே அங்கவஸ்திரமாக உதவும். அவர் செல்லும் போது அவரைக் கண்டு ஒவ்வொரு கடைக்காரரும் எழுந்து மரியாதை செய்வார். அவரை அழைத்து ஆசனத்தில் இருக்கச் செய்து மரத்தட்டில் நான்கு வெற்றிலையும் இரண்டு பாக்கும் வைத்துக் கொடுப்பார். அந்த அன்புக் காணிக்கையை ஐயங்கார் அப்படியே வீட்டுக்குக் கொண்டு வருவார். எல்லாவற்றையும் சேர்த்து விற்று வேறு ஏதாவது வாங்கிக் கொள்வார். அதனால் வருவது பெரிய தொகையாக இராது. இராவிட்டால் என்ன? உப்புக்காவது ஆகாதா? இந்த நிலைக்கும் அவருடைய தமிழ் இன்பத்துக்கும் சம்பந்தமே இல்லை. அந்த உலகமே வேறு. அதில் அவர்தாம் சக்கரவர்த்தி. அங்கே பசியில்லை. வறுமையில்லை. இளைப்பில்லை. அந்த உலகத்திற்கு அவர் என்னையும் இழுத்துக் கொண்டார். "

இப்பகுதியை வாசித்து முடித்தபோது கனத்தமனத்துடன் இப்பக்கத்தில் குறிப்பெழுதி வைத்தேன். வருமை என்ற ஒன்றே ஆய்வாளர்களுக்கு, அதிலும் குறிப்பாக உண்மையாக நூல்களையும் ஆய்வையும் காதலிக்கும் நெஞ்சத்தினருக்கு வரக்கூடாது... ! வரக்கூடாது!

தொடரும்...

அன்புடன்
சுபா

No comments:

Post a Comment