Saturday, December 22, 2012

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 37


வாசித்துக் கொண்டிருந்த சமயங்களில் என் சரித்திரம் நூலில் உள்ள ஒவ்வொரு அத்தியாயமும் என் மனதில் விதம் விதமான எண்ணங்களைத் தோற்றுவிக்கத் தவறியதில்லை. நூலில் உள்ள சில பகுதிகள் ஆழமான சிந்தனைகளைத் தோற்றுவிக்கக் கூடியவை; சில வியப்பை ஏற்படித்தக்கூடியவை; சில மகிழ்ச்சியை ஏற்படுத்தக் கூடியவை; சில சிரிக்க வைத்தவை; சில சோகத்தால் என் மனதை வாட்டியவை; சில அன்பின் ஆழத்தை நூலிலே படித்து தெரிந்து கொள்ள உதவியவை. இப்படி பல்வேறுபட்ட உணர்வுகளை வாசிப்போர் உள்ளத்தில் தோற்றுவிக்கக் கூடிய தன்மை வாய்ந்தது என் சரித்திரம் நூல்.

அப்படிப்பட இந்த நூலில் ஒரு அத்தியாயம் நான் வாசித்துக் கொண்டிருக்கும் போதே என்னை வாய்விட்டுச் சிரிக்க வைத்தது. அந்தப் பதிவினையும் அதற்கான சூழலையும் இந்தப் பதிவில் குறிப்பிடலாம் எனக் கருதுகின்றேன்.

நைடதத்தை மீனாட்சி சுந்தரம்பிள்ளையவர்களிடம் பாடங் கேட்க ஆரம்பித்திருந்தார் உ.வே.சா. ஏற்கனவே உ.வே.சா நைடதத்தைக் கற்றிருந்தமையினால் தெரியாத பகுதிகளுக்கு விளக்கம் என வரும் போது அதனை ஆழமாக விவரித்து வந்தார் பிள்ளையவர்கள். பின்னர் அப்பாடத்தை சவேரிநாதப் பிள்ளை தொடரும் படி ஏற்பாடு செய்தார் பிள்ளையவர்கள். பிள்ளையவர்களிடம் கற்று அதில் இன்புற வேண்டும் என்ற கனவுடன் இருந்து உ.வே.சாவுக்கு இதில் கவலையுண்டாயிற்று. சவேரிநாதப்பிள்ளை நன்கு போதித்தாலும் பல இடங்களில் தனக்குத் தெரிந்த விஷயங்களில் கூட சவேரிநாதப்பிள்ளைக்குத் தெளிவில்லாமை இருப்பதைக் கண்டு உ.வே.சா சற்று கலக்கம் கொண்டார். அதனால் ஆசிரியருக்கு இதனை குறிப்பால் உணர்த்தும் வகையில் ஏதேனும் செய்ய திட்டமிட்டார்.

முதலாவதாக ஆசிரியர் பாடம் நடந்து கொண்டிருக்கும் வழியே வரும் போது சவேரிநாதப் பிள்ளையை உ.வே.சா குறுக்குக் கேள்விகள் கேட்டு தனக்கு அவரை விட மேலும் தெரியும் என்பதை ஆசிரியருக்கு உணர்த்திப் பார்த்தார்.இதனால் சவேரிநாதப் பிள்ளை உ.வே.சா மேல் கோபமோ வருத்தமோ கொள்ளவே இல்லை. பிள்ளையவர்களோ இருவருக்குமாக அப்பகுதியை மீண்டும் விளக்கி விட்டுச் சென்று விடுவார். ஆனாலும் இந்த யுக்தி முழுதாகப் பலிக்கவில்லை.  இனி என்ன செய்யலாம் என யோசித்தார் உ.வே.சா. அவருக்கு இன்னொரு யோசனை தோன்றியது.

மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் தாவரங்கள், மரம், செடிகள் பால் அலாதிப் பிரியம் கொண்டவர். அவர் தானே வாங்கி குடி பெயர்ந்த அந்த மயூரம் வீட்டில் பெரிய தோட்டத்தை ஏற்பாடு செய்து வைத்திருந்ததோடு அத்தோட்டத்தில் தினம் சில மணி நேரங்களைச் செலவிடுவதில் கழித்து வந்தார். பிள்ளையவர்களுக்கு ஒவ்வொரு நாள் காலையிலும் தோட்டத்தைச் சென்று பார்த்து ஒவ்வொரு செடியையும் தானே கவனித்து அதில் ஏதேனும் பட்டுப் போய் உள்ளதா, புதிய இலைகள் தளிர்கள் தோன்றியுள்ளனவா, மலர்கள் பூத்துள்ளனவா என்று கண்காணிப்பது வழக்கம். அப்படி ஏதாகினும் செடிகள் பட்டுப் போயிருந்தால் பிள்ளையவர்கள் மனம் வாடி விடுவார். அதே சமயம் ஏதேனும் புதிய செடிகள் முளைத்திருந்தாலோ செடிகளில் புதுத் தளிர்கள் தோன்றியிருந்தாலோ அவருக்கு அளவில்லா ஆனந்தம் உண்டாகும் . மாலை வேளிகளில் தானே செடிகளுக்கு நீர் விடுவது போன்ற பணிகளையும் பிள்ளையவர்களே செய்து வந்தார். இதனை உ.வே.சா நன்கு கவனித்தார்.

இந்தச் செடிகளை வைத்தே ஆசிரியரின் மனதைக் கவர முயற்சிக்கலாமே என்று சிந்தித்து அதனைச் செயல்படுத்தி வெற்றியும் கண்டார் உ.வே.சா. என் சரித்திரம் நூலில் அத்தியாயம் 30ல் தளிர் ஆராய்ச்சி என்ற தலைப்பில் வருகின்ற செய்திகள் சுவையானவை. நீண்ட பகுதியாக இருந்தாலும் அதனை நான் ரசித்த வகையிலேயே இப்பதிவை வாசிக்கும் நீங்களும் உணர்வதற்காக அப்படியே அப்பகுதிகளை இங்கே வழங்குகின்றேன்.

"
ஒவ்வொரு நாளும் காலையிலும் மாலையிலும் என் ஆசிரியர் தோட்டத்துக்குப் போய்ச் செடிகளைப் பார்வையிடுவார். அவைகளில் ஏதாவது பட்டுப்போய் விட்டதோ என்று பார்ப்பார்; எந்தச் செடியாவது தளிர்த்திருக்கிறதாவென்று மிக்க கவனத்தோடு நோக்குவார். ஏதாவது தளிர்க்காமல் பட்டுப்போய் விட்டதாகத் தெரிந்தால் அவர் மனம் பெரிய தனத்தை இழந்ததுபோல வருத்தமடையும். ஒரு தளிரை எதிலாவது கண்டு விட்டால் அவருக்கு உண்டாகும் சந்தோஷத்திற்கு அளவே இராது. வேலைக்காரர்களிடம் அடிக்கடி அவற்றை ஜாக்கிரதையாகப் பாதுகாக்கும்படி சொல்லுவார். மாலை வேளைகளில் தம்முடைய கையாலேயே சில செடிகளுக்கு ஜலம் விடுவார்.

அவர் இவ்வாறு காலையும் மாலையும் தவறாமல் செய்து வருவதை நான் கவனித்தேன். அவருக்கு அந்தச் செடிகளிடம் இருந்த அன்பையும் உணர்ந்தேன். “இவருடைய அன்பைப் பெறுவதற்கு இச்செடிகளைத் துணையாகக் கொள்வோம்” என்று எண்ணினேன்.

மறுநாள் விடியற்காலையில் எழுந்தேன்; பல்லைக்கூடத் தேய்க்க வில்லை. நேரே தோட்டத்திற்குச் சென்றேன். அங்குள்ள செடிகளில் ஒவ்வொன்றையும் கவனித்தேன். சில செடிகளில் புதிய தளிர்கள் உண்டாகியிருந்தன. அவற்றை நன்றாகக் கவனித்து வைத்துக் கொண்டேன். சிறிது நேரத்தில் ஆசிரியர் அங்கே வந்தனர். அவர் ஒரு மரத்தின் அருகே சென்று மிக்க ஆவலோடு தளிர்கள் எங்கெங்கே உள்ளனவென்று ஆராயத் தொடங்கினார். நான் மெல்ல அருகில் சென்றேன். முன்பே அத்தளிர்களைக் கவனித்து வைத்தவனாதலின், “இக்கிளையில் இதோ தளிர் இருக்கிறது” என்றேன்.

அவர் நான் அங்கே எதற்காக வந்தேனென்று யோசிக்கவுமில்லை; என்னைக் கேட்கவுமில்லை. “எங்கே?” என்று ஆவலுடன் நான் காட்டின இடத்தைக் கவனித்தார். அங்கே தளிர் இருந்தது கண்டு சந்தோஷமடைந்தார். பக்கத்தில் ஒரு செடி பட்டுப் போய் விட்டது என்று அவர் எண்ணியிருந்தார். அச்செடியில் ஓரிடத்தில் ஒரு தளிர் மெல்லத் தன் சிறுதலையை நீட்டியிருந்தது. “இதைப் பார்த்தால் பிள்ளையவர்கள் மிக்க சந்தோஷமடைவார்கள்” என்று நான் எண்ணினேன். ஆதலின், “இதோ, இச்செடி கூடத் தளிர்த்திருக்கிறது” என்று நான் சொன்னதுதான் தாமதம்; “என்ன அதுவா? அது பட்டுப்போய் விட்டதென்றல்லவா எண்ணினேன்! தளிர்த்திருக்கிறதா? எங்கே, பார்க்கலாம்” என்று சொல்லிக் கொண்டே விரைவாக அதனருகில் வந்தார். அவர் பார்வையில் தளிர் காணப்படவில்லை. நான் அதைக் காட்டினேன். அந்த மரத்தில் தளிர்த்திருந்த அந்த ஒரு சிறிய தளிர் அவர் முகத்தில் மலர்ச்சியை உண்டாக்கியது; அம்மலர்ச்சியைக்கண்டு என் உள்ளம் பூரித்தது. “நம்முடைய முயற்சி பலிக்கும் சமயம் விரைவில் நேரும்” என்ற நம்பிக்கையும் உண்டாயிற்று. அத்தளிர்களை வாழ்த்தினேன்.

நான் அதோடு விடவில்லை. பின்னும் நான் ஆராய்ந்து கவனித்து வைத்திருந்த வேறு தளிர்களையும் ஆசிரியருக்குக் காட்டினேன். காட்டக் காட்ட அவர் பார்த்துப் பார்த்துச் சந்தோஷமடைந்தார்.

அது முதல் தினந்தோறும் காலையில் தளிர் ஆராய்ச்சியை நான் நடத்திக்கொண்டே வந்தேன். சில நாட்களில் மாலையிலே பார்த்து வைத்துக் கொள்வேன். பிள்ளையவர்களும் அவற்றைக் கண்டு திருப்தியடைந்து வந்தனர்.

ஒரு நாள் அவர் எல்லாச் செடிகளையும் பார்த்து விட்டுத் திரும்பியபோது என்னை நோக்கி, “இந்தச் செடிகளைப் பார்த்து வைக்கும்படி
யாராவது உம்மிடம் சொன்னார்களா?” என்று கேட்டார்.

“ஒருவரும் சொல்லவில்லை. நானாகவே கவனித்து வைத்தேன்” என்றேன் நான்.

“எதற்காக இப்படி கவனித்து வருகிறீர்?”

“ ஐயா அவர்கள் தினந்தோறும் கவனித்து வருவது தெரிந்தது; நான் முன்னதாகவே கவனித்துச் சொன்னால் ஐயா அவர்களுக்குச்

-       பிள்ளையவர்களை ஐயா அவர்களென்றே வழங்குவது வழக்கம் நேரில் பேசும்போது அப்படியே கூறுவோம்.

சிரமம் குறையுமென்று எண்ணி இப்படிச் செய்து வருகிறேன்” என்றேன்.  சாதாரண நிலையிலிருந்தால் இவ்வளவு தைரியமாகப் பேசியிருக்க மாட்டேன். சில நாட்களாகத் தளிரை வியாஜமாகக் கொண்டு அவரோடு நெருங்கிப் பழக நேர்ந்தமையால் தைரியம் எனக்கு உண்டாயிற்று. நாளடைவில் அவரது அன்பைப் பூரணமாகப் பெறலாமென்ற துணிவும் ஏற்பட்டது. “நல்லதுதான். இப்படியே தினந்தோறும் பார்த்து வந்தால் அனுகூலமாக இருக்கும்” என்று என் ஆசிரியர் கூறினார். நானாகத் தொடங்கிய முயற்சிக்கு அவருடைய அனுமதியும் கிடைத்துவிட்ட தென்றால் என் ஊக்கத்தைக் கேட்கவா வேண்டும்?

தினந்தோறும் காலையில் பிள்ளையவர்களை இவ்வாறு சந்திக்கும் போது அவரோடு பேசுவது எனக்கு முதல் லாபமாக இருந்தது. அவர் வர வர என் விஷயத்தில் ஆதரவு காட்டலானார். என் படிப்பு விஷயமாகவும் பேசுவது உண்டு. “இப்போது பாடம் நடக்கிறதா? எது வரையில் நடந்திருக்கிறது? நேற்று எவ்வளவு செய்யுட்கள் நடை பெற்றன?” என்ற கேள்விகளைக் கேட்பார். நான் விடை கூறுவேன்.


எங்களுடைய சம்பாஷணை வர வர எங்களிருவருக்கும் இடையே அன்பை வளர்த்து வந்தது.
"

தொடரும்...

சுபா

No comments:

Post a Comment