Saturday, December 8, 2012

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 34


ஒரு நல்லாசிரியர் என்பவர் அப்படி இருக்க வேண்டும் என்று சொல்ல நினைக்கையிலே மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களை ஒரு அளவு கோலாக எடுத்துக் கொள்ளலாம். மாணவர் நலன் மாணவர் கல்வி உயர்வு, மாணவர் அடிப்படை தேவைகள், மாணவர்களுக்கும் பெருமை மாணவர்களுக்கு எதிர்காலத் தொழில் அமைத்தலில் உதவி என மாணவர் நலன் மட்டுமே மனதில் கருத்தாகக் கொண்டு விளங்கிய ஒரு மாமனிதர். அவர் எழுதிக் குவித்த செய்யுட்களையெல்லாம் தேடிக் கண்டு பிடித்து அவற்றை பாதுகாக்க வேண்டுயது நமது பணி என்று என் மணம் மீண்டும் மீண்டும் வலியுறுத்துகின்றது.

மாணவர்களின் அடிப்படை தேவைகள் பூர்த்தியானால் தான் அவர்களுக்குக் கல்வி மேல் உள்ள ஆர்வமும் கற்கின்ற கல்வியில் தெளிவும் நிலைக்கும் என்பது அவர் எண்ணம். ஆகையால் தம்மிடம் படிக்கின்ற மாணவர்களின்  உணவு, திருமணம் அவர்களுக்குத் தக்க தொழில் அமைத்துக் கொடுத்தல் என எல்லா விஷயங்களிலும் அவர்களுக்கு உற்ற துணையாக இருந்து வழிகாட்டியாக இருந்து அவர்கள் நலனில் அக்கறை கொண்டிருந்தவர் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள்.

தனது ஒவ்வொரு நூல் அறங்கேற்றத்தின் போதும் கிடைக்கின்ற வருமானத்தை உடனே தனது மாணவர்களின் திருமணம், அவர்களுக்குக் குடித்தனம் செய்வதற்கான செலவுகளைப் பராமரிக்க, அவர்களுக்குத் தயங்காமல் உணவு கிடைக்க ஏற்பாடு என செய்து பார்த்துக் கொண்டவர்.  திருமணமான தனது மாணவர்கள் குடும்பத்தைப் பிரிந்து அந்தப் பிரிவின் சோகத்தில் வாடிக் கொண்டிருப்பதை அறிந்து கொண்டாறேயானால் உடனே அந்த மாணவருக்கும் கூடத் தெரிவிக்காமல் அவர்தம் குடும்பத்தாரைத் தொடர்பு கொண்டு வரச் செய்து குடும்பத்தோருட்ன் வாழ்ந்து கல்வி கற்று வருமாறு ஏற்பாடுகளைச் செய்து தரும் பரந்த மனதைக் கொண்டவராகத் திகழ்ந்திருக்கின்றார். தனது இறக்கும் தருவாயிலும் கூட தனது அணுக்கத் தொண்டராகத் திகழ்ந்த சவேரிநாதப் பிள்ளைக்குச் சில கடிதங்களைக் கொடுத்து தாம்  இறந்த பின்னர் இவர்களைச் சென்று பார்த்து அதில் குறிப்பிட்டிருக்கும் படி அவர்களிடமிருந்து பொருளுதவி பெற்று வாழ்க்கையை அமைத்துக் கொண்டு வாழும் படி செய்வித்து மறைந்தவர்.  தனக்கு கணிசமான அளவு தொகை கடன் இருக்கும் அந்த நிலையிலும் கூட அவர் மனம் தனக்குப் பிறகு தனது மாணவர்களை யாரேனும் காப்பாற்ற வேண்டும் என்ற தவிப்பில் இருந்தது என்பதை இவ்வகை விளக்கங்களை என் சரித்திரம் நூலிலும் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் பாகம் 1, 2 நூல்களில் படிக்கும் போதும் உணர்ந்து கொள்ள முடிகின்றது.

இப்படிப்பட்ட ஒரு கல்விமானிடம் தான் உ.வே.சா கல்வி பயில தன் இளம் வயதில் வந்து சேர்கின்றார்.

பிள்ளையவர்களின் மாயூர இல்லத்தில் தந்தையும் மகனுமாக வந்து நின்று பிள்ளையவர்களின் மனதில் இடம்பிடித்துக் கொண்ட பிறகு நடக்கும் நிகழ்வுகளை என் சரித்திரம் நூலில் அத்தியாயம் 28ல் காண்கின்றோம். உ.வே.சா இப்படிக் குறிப்பிடுகின்றார்.

“ “என்றைக்கு நல்ல நாளாக இருக்கிறது? பாருங்கள். சீக்கிரமே பாடம் ஆரம்பித்து விடலாம்” என்று பிள்ளையவர்கள் என் தந்தையாரிடம் கூறினார். அப்போது அவர் மனத்திலும் என்னைப் பற்றித் திருப்தியான எண்ணம் பதிந்து விட்டதென்றே தோன்றியது.

“இன்றே நல்ல நாள்; பாடமும் கேட்கத் தொடங்கி விட்டோமே” என்று நான் மனத்துக்குள் சொல்லிகொண்டேன். என் தந்தையார், “நாளைக்கு நல்ல தினமாக இருக்கிறது. பாடம் ஆரம்பிக்கலாம்” என்றார்.

“மெத்த ஸந்தோஷம். அப்படியே செய்யலாம்” என்று தம் உடன்பாட்டை அவர் தெரிவித்தார். “

உடனே பாடம் ஆரம்பித்தாலும் அந்தக் கவிஞரின் மாணவராக அமர்ந்து பாடங்கேட்க சித்தமாக இருந்த உ.வே.சாவைக் இங்கு காண்கின்றோம். கல்வி மேல் அவருக்கிருந்த அளவில்லா இன்பமும் ஆர்வம் தான் நம்மை வியக்க வைக்கின்றது.


தொடரும்...


அன்புடன்
சுபா

No comments:

Post a Comment