Saturday, January 19, 2013

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 41


மாணவர்கள் கல்வி மற்றும் பாடங்களில் தேர்ச்சி என்பனவற்றோடு மேலும் பல திறமைகளையும் கொண்டிருக்க வேண்டியது அவசியமாகின்றது. தனது மனதில் உள்ள கருத்தைத் தெளிவுற விளக்குவதற்கும், தான் சரியென நினைக்கும் விஷயங்களை காரண காரியங்களோடு விளக்கும் திறனும் மாணவர்கள் வெற்றியுடன் செயல்பட இன்றியமையாத தேவைகளில் ஒன்றாகின்றது.

பள்ளிக் கூடங்களில் மொழி, கணிதம், பூகோளம், அறிவியல் என்பதோடு மட்டுமல்லாது மனதை பண்படுத்தும், மனதிற்குப் பயற்சியளிக்கும் சில பாட முறைகளையும் பல நாட்டு கல்வித்துறைகளும் பாடத்திட்டத்தோடு இணைத்து வைத்திருப்பதை நாம் பார்க்கின்றோம். விளையாட்டு, குழுப் பயிற்சிகள், கைவினைப் பொருட்கள் செய்யும் பயிற்சி இசை, நாடகம், நடனம் போன்றவற்றில் பயிற்சி போன்றவை மாணவர்களிடயே இயல்பாக அமைந்துள்ள கூச்ச சுபாவத்தையும் தயக்கம் தரும் போக்கினையும் போக்க வல்லவை. பல பெற்றோர்கள் இவ்வகை பயிற்சிகளால் என்ன நன்மையைத் தங்கள் குழந்தைகள் அடையப் போகின்றார்கள் என யோசித்து இவ்வகை பயிற்சிகளில் தங்கள் குழந்தைகள் ஈடுபடுவதை அவ்வளவாக ஊக்குவிப்பதில்லை. அதிலும் பெண் குழந்தைகள் என வரும் போது தமிழக சூழலில் விளையாட்டுப் பயிற்சிகளில் பெண் குழந்தைகள் ஈடுபடுவதை பெற்றோர் குறைத்தே ஊக்குவிக்கின்றனர்.

பல மாணவர்கள்  கல்லூரி படிப்பை முடித்து பணிக்குச் சென்ற பின்னரும் கூட தங்கள் மனதில் உள்ள கருத்தை முறையாகச் சொல்லத் தெரியாமல் தயங்கும் நிலை இருப்பதைக் காண முடிகின்றது. பேச்சுத் திறன், தெளிவாக விளக்கும் திறன், தலைமைத்துவம், முடிவெடுக்கும் திறன் ஆகியவை பலர் பெரியவர்களாகியும் கூட இயலாமல்  தவிப்பதைக் காண்கின்றோம். இவ்வகை நிலையை பயிற்சிகளின் வழி கொஞ்சம் கொஞ்சமாக போக்கி தைரியத்தை வளர்க்கும் கலையை மாணவர்களுக்கு வழங்க வேண்டியது பெற்றோர்கள் கடமை என்று மட்டுமில்லாது ஆசிரியர்களின் கடமையாகவும் ஆகின்றது.

என் நிலையை இவ்வேளையில் யோசித்துப் பார்க்கின்றேன். என் இளம் வயதிலேயே என் தாயார் தான் ஈடுபட்டிருந்த சமூக இயக்கங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளுக்கெல்லாம் என்னையும் தவறாமல் அழைத்துச் செல்வார். அவ்வாறு செல்லும் போது நிகழ்ச்சி நடைபெற தேவைப்படும் உதவிகளில் ஏதேனும் சிலவற்றை நான் செய்து வருவேன். இவ்வகையில் எனக்கு பலரது அறிமுகம் இளம் வயதிலேயே ஏற்பட்டது. பேராசிரியர்.ரெ.கார்த்திகேசு போன்றோரையெல்லாம் இப்படித்தான்  அறிமுகம் செய்து கொண்டேன் என் இளம் வயதில். எனக்கு இருந்த கூச்ச சுபாவம் எல்லாம் படிப்படியாக மறைந்து பேச்சுத் திறன், திட்டமிடும் திறன், பலரோடு தயங்காமல் பேசும் திறன் என்பன போன்ற திறன்கள் எனக்கு இதனால் ஏற்பட்டன என தயங்காமல் கூறுவேன். அனுபவப் பயிற்சி பல வகைகளில் நாம் திறமையுடன் செயல்பட மிக மிக உதவக் கூடியவை. கல்விப் படிப்போடு பேச்சு, முடிவெடுக்கும்  திறன், தலைமைப் பொறுப்பு ஆகியன போன்ற திறன்களும் சேரும் போது மாணவர்கள் திறமையுடன் செயல்பட்டு தங்கள் வாழ்க்கையில் மேம்பாடு காண இலகுவாக முடியும்.

உ.வே.சா அவர்களுக்கு மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் இல்லத்தில் தங்கியிருந்த அக்காலகட்டத்தில் தமிழ்ப்பாடம் என்பது மட்டுமல்லாது அக்குருகுல வாசத்தில், பல பெரியோர்களுடனான சந்திப்பு, பலர் முன்னிலையில் செய்யுள் கூறி பொருள் சொல்லும் பயிற்சி, என இவ்வகையிலும் மனதில் அச்சத்தைத் போக்கி செயல்படும் வகையில் பயிற்சி அமைந்திருந்தது என்பதை 31ம் அத்தியாயத்தில் காண்கின்றோம். பிள்ளையவர்களைப் பார்க்க வருகின்ற பெரியோர்கள், கனவான்கள், பிரபுக்கள் முன்னிலையிலேயே உ.வே.சா மற்றும் ஏனைய மாணவர்களையும் செய்யுள்கள் சொல்லச் சொல்லி பொருளும் சொல்லச் சொல்லி ஊக்குவிப்பாராம் பிள்ளையவர்கள்.

அக்காலகட்டத்தில் பல பெரியவர்களுடனான சந்திப்பு உ.வே.சா விற்கு புது உலகினைக் காட்டியது. அவரது அறிவு ஞானப் பரப்பு விரிந்ததைப் போலவே அனுபவப் பரப்பும் நாளுக்கு நாள் விரிந்து வந்தது  பிள்ளைய்வர்களுடனான குருகுல வாசத்தில்!

தொடரும்...

சுபா

No comments:

Post a Comment