Friday, October 26, 2012

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 27


வித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் சரித்திரத்தை வாசித்த போது இந்த தமிழறிஞர் இயற்றிய அனைத்து நூல்களையும் தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் தொகுப்பில் இணைத்து வைக்க முயற்சி ஆரம்பிக்க வேண்டும் என்ற எண்ணம் என் மனதில் உறுதியானது. ஆக இந்தத் தொடரை எழுதும் பொதுதே அந்தப் பணியையும் தொடங்க வேண்டும் என்ற எண்ணம் எழுந்துள்ளது. அதனை வேறொரு தனி இழையில் தொடங்கலாம் என நினைத்திருக்கின்றேன். எத்தனை நூல்கள் நமக்குக் கிடைக்க வாய்ப்புள்ளனவோ தெரியாது. சில நூல்கள அழிந்தும் இருக்கலாம். முயற்சி செய்தால் முதலில் ஒரு பட்டியலைத் தயாரித்து நூல்களைத் தேடும் பணியை நாம் தொடங்கலாம்.

சரி.. உ.வெ.சா மாணாக்கராக பிள்ளையவர்களிடம் சேர வந்த அந்த தினத்தையும் மாணாக்கராக தன்னை அவர் ஏற்றுக் கொண்ட நிகழ்வுகளையும் முந்தைய பதிவில் விவரித்திருந்தேன். அதன் தொடர்ச்சியாக இந்தப் பதிவில் வித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களைப் பற்றி சில விஷயங்களை அறிமுகப் படுத்தும் நோக்கில் குறிப்பிடலாம் என நினைக்கின்றேன்.

மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களின் தந்தையார் சிதம்பரம்பிள்ளை தமிழ்க்கல்வி கற்றவர். இவர்களது குடும்பத்தினர் சைவ வேளாளர் சமூகத்தின் நெய்தல் வாயிலுடையான் என்னும் கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள். இப்படி ஒரு கோத்திரமும் அதனைச் சார்ந்த சமூகத்தினரும் பற்றி பிள்ளையவர்கள் சரித்திரத்தை வாசிக்கும் போது தான் அறிந்து கொள்ள முடிந்தது.இவர்கள் குடும்பத்தினர் மதுரை ஸ்ரீ சோமசுந்தரக் கடவுள் கோயிலுக்குரிய முத்திரைக் கணக்கர்களுள் மீன முத்திரைப் பணிக்குரியவர்களாக இருந்தவர்கள் என்ற ஒரு செய்தியும் நமக்கு இந்த நூலில் கிடைக்கின்றது.

சிதம்பரம்பிள்ளையவர்கள் தேவார திருவாசகம், பெரிய புராணம், கம்பராமாயணம், கந்த புராணம், மேலும் பலவகையான பிரபந்தக்கள், இலக்கண நூல்கள், உரை நூல்கள் ஆகியவற்றில் சிறந்த பயிற்சியுடையவராக அக்காலத்தில் திகழ்ந்தவர்.  தன்னிடம் கற்கின்ற மாணவர்களுக்கு அன்புடன் பாடம் நடத்தும் ஆசிரியராக அறியப்பட்டவர்.அத்துடன் சிறந்த சிவபக்தியும்  கொண்டவர். ஆனால் ஏதோ ஒரு காரணத்தினால் கோயில் அதிகாரிகளுக்கும் அவருக்கும் மனஸ்தாபம் தோன்றவே கோயில் கணக்கர் பணியை விட்டு விட்டு தம் மனைவியுடன் மதுரையை விட்டுப் பிரிந்து வடக்கு நோக்கிச் சென்று திரிசிரபுரத்திற்கு மேற்கே காவிரி நதியின் தென்திசையிலுள்ள எண்ணெய்க் கிராமம் எனும் ஒரு கிராமத்தில் குடி பெயர்ந்தார்.

கல்வி கற்றோருக்குத் தான் செல்லும் இடமெல்லாம் சிறப்பாயிற்றே. எண்ணெய்க் கிராமத்து மக்கள் சிதம்பரம் பிள்ளையின் கல்வி ஞானத்தை அறிந்து அவருக்கு தங்குமிடம் தந்து உணவிற்கும் ஏற்பாடு செய்து கொடுத்து ஆதரித்தனர். அப்படி அவ்வூரில் இருக்கையிலே சிதம்பரம் பிள்ளையவர்கள் அவரிடம் வந்து சென்று பாடம் கேட்டுச் செல்பவர்களுக்குப் பிரபந்தங்களையும் தமிழ் நூல்களையும் பாடம் சொல்லி வந்தார்.

அவரது கல்விச் சிறப்பும் அவரது அன்பான குணமும் மக்களைக் கவரவே பலர் வந்து அவரிடம் பாடம் கேட்டுச் சென்ற வண்ணம் இருந்தனர். இதனால் இவரது புகழ் பக்கத்திலுள்ள ஊர்களுக்கும் பரவியது. அருகாமையில் இருந்த அதவத்தூரென்னும் ஊரிலிருந்த பெரியோர் சிலர் அவ்வூரில் சிதம்பரம் பிள்ளையவர்கள் சிலகாலம் இருந்து தமிழ்ப்பாடங்கள் நடத்த வேண்டும் என்று கேட்க,  எண்ணெய்க் கிராமத்து மக்களிடம் உடன்பாடு பெற்றுக் கொண்டு அங்கு சென்று தமிழ்ப் பாடங்கள் சொல்லி வந்தார். பாடம் சொல்லி வருவது மட்டுமன்றி அவ்வூர் குழந்தைகளுக்கும் கணக்காயராக இருந்து  வர வேண்டும் என்று அவ்வூர் மக்கள் அன்புடன் கோரிக்கை விடுக்க அதனை ஏற்று அவ்வூரிலேயே கணக்காயராக இருந்து வந்தார். கணக்காயர் என்பது ஆசிரியர் என்பதன் ஒரு பழஞ்சொல் என்றே கருதுகின்றேன்.

இப்படி சிதம்பரம் பிள்ளையவர்கள் தமது வாழ்க்கையை நடத்திக் கொண்டு வருகையிலே அவருக்கு 6-4-1815ம் ஆண்டில் ஒரு குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்குத் தம் குலதெய்வமாகிய ஸ்ரீ மீனாட்சி சுந்தரேசுரரின் நினைவாக அப்பெயரையே சூட்டி மகிழ்ந்தனர் கணக்காயர் சிதம்பரம் பிள்ளையும் அவரது மனைவியும். உ.வே.சா இப்பகுதியை எழுதும் போது இப்படிக் குறிப்பிடுகின்றார்.

“.. தமிழ்நாடு செய்த பெருந்தவத்தால்.. ஒரு புண்ணிய குமாரன் அவதரித்தார். இக்குழந்தை பிறந்த வேளையிலிருந்த கிரக நிலைகளை அறிந்து இந்தக் குமாரன் சிறந்த கல்விமானாக விளங்குவான் என்றும் இவனால் தமிழ் நாட்டிற்குப் பெரும்பயன்  விளையும் என்றும் சோதிட நூல் வல்லவர்கள் உணர்த்தவே சிதம்பரம்பிள்ளை மகிழ்ந்து ”நம் குலதெய்வமாகிய  ஸ்ரீ மீனாட்சி சுந்தரேசருடைய திருவருளினாலேயே இந்தச் செல்வப்புதல்வனை நாம் பெற்றோம்” என்றெண்ணி அக்கடவுளின் திருநாமத்தையே இவருக்கு இட்டனர்.

தொடரும்...


அன்புடன்
சுபா

No comments:

Post a Comment