Thursday, October 11, 2012

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 25


தற்காலத்தில் கல்லூரிகளில் இணைவதற்கும் ஒரு குறிப்பிட்ட துறையில் கல்வி கற்று பட்டம் பெறவும் அடிப்படைத் தகுதிகளை நிர்ணயம் செய்து வைத்திருக்கின்றனர். இதற்கு நேர்மாறான நிலைதான் 200 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்திருக்கின்றது

ஒரு ஆசிரியரிடம் மாணவராக இணைவதற்கு அம்மாணவர் தன்னை தகுதி படைத்தவராக தயார் படுத்தி வைத்திருக்க வேண்டும். ஆசிரியரின் நம்பிக்கையைப் பெறும் வகையில் அவரது ஒழுக்க நெறி அமைந்திருக்க வேண்டும். கல்வி ஞானம் இருப்பதுவும் கல்வியின் பால் ஆழ்ந்த வேட்கை இருப்பதையும் ஆசிரியருக்கு இம்மாணவர் நிரூபித்துக் காட்டவும் வேண்டும்.  இந்த மாணவர் உண்மையான நாட்டம் கொண்டிருக்கின்றார் என்று அறிந்த பின்னர் மட்டுமே மாணவராக ஒருவரை ஏற்றுக் கொள்வது அக்காலத்தில் வழக்கமாக இருந்திருக்கின்றது என்பதை என் சரித்திரம் நூலின் வழி தெரிந்து கொள்கின்றோம்.

முதன் முதலாகப் பார்க்கும் பொழுது, நெடுநாளாகக் காத்திருந்த உபாஸகன் போல இருந்த தனக்கு காட்சியளித்த ஆசிரியர் வித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் முகத்திலேயே உ.வெ.சா அவர்களின் முழு கவனமும் ஒன்றித்துப் போயிருந்தது என்பதை முந்தைய பதிவில் விவரித்திருந்தேன். ஆசிரியரைப் பார்த்த பின்னர் அவர் தம்மை தனது மாணாக்கர்களில் ஒருவராக ஏற்றுக் கொள்வாரா என்ற ஐயம் உ.வே.சாவுக்கு இல்லாமலில்லை.

தன்னைப் பார்க்க சில புதியவர்கள் வந்திருக்கின்றார்கள் என்பதை அறிந்து கொண்டதும் இவர்களைப் பார்க்க வருகின்றார் பிள்ளையவர்கள். வந்திருந்த இருவரையும் அவர்கள் பெயர்களைக் கேட்டறிந்து அவர்கள் வந்ததன் நோக்கம் கண்டறிந்த பின்னர்  உ.வே.சா அவர்களிடம் விசாரிக்கின்றார்.  அதனை உ.வே.இப்படிக் குறிப்பிடுகின்றார்.

”பிறகு பிள்ளையவர்கள் என்னைப் பார்த்து, “நீர் யார் யாரிடம் என்ன என்ன நூல்களைப் பாடம் கேட்டிருக்கிறீர்?” என்று வினவினர். ”

இதுவே பிள்ளையவர்கள் உ.வே.சாவிடம் பேசிய முதல் பேச்சு. அது அவருக்கு மனதில் நன்கு நிலைத்திருந்தமையால் அப்படியே என் சரித்திரம் நூலில் பதிந்திருக்கின்றார்.

தன்னை விட வயதில் சிறியவாராகினும் தன்னிடம் பாடம் கேட்க வந்திருக்கின்றார் என்று தெரிந்த பின்னரும் கூட ”நீர்” என்று குறிப்பிட்டு மரியாதையாக ஒருவரை அழைக்கும் இந்தப் பண்பு என் மனதை மகிழ்விக்கின்றது. பல ஆசிரியர்கள் தங்களிடம் கல்வி கற்கின்ற மாணவர்களை இவ்விதம் மரியாதை அளித்து மதித்து கூப்பிடும் வழக்கம் இல்லமல் இருப்பதை வழக்கத்தில் காண்கின்றோம். ஆரம்ப நிலைப்பள்ளிகள் மட்டுமில்லாது கல்லூரிகளில் கூட இந்த நிலை இருக்கின்றது.  இதனைத் தவிர்த்து மாணாக்கர்களிடம் அன்பும் நம்பிக்கையும் மரியாதையும் காட்டும் போது மாணவர்களுக்கு ஆசிரியர்களின் பால் ஏற்படும் அன்பு அளவிட முடியாதது என்பது உண்மை. முன்னர் எனது ஓராண்டு கால ஆசிரியர் பணியிலும் இந்த அன்பினை நான் அநுபவித்திருக்கின்றேன்.

தொடரும்....

சுபா

No comments:

Post a Comment