Wednesday, August 9, 2023

கல்வெட்டு ஆய்வாளர் புலவர் இராசு அவர்களுக்கு அஞ்சலி

 கல்வெட்டு ஆய்வாளர் புலவர் இராசு அவர்களது மறைவு பற்றிய செய்தி மிகுந்த வருத்தம் அளிக்கிறது. அவருக்கு எனது அஞ்சலிகள்.


புலவர் ராசு அவர்களோடு தமிழ் மரபு அறக்கட்டளை இரண்டு முறை இணைந்து சில ஆய்வுகளையும் மரபு நடைகளையும் ஏற்பாடு செய்திருக்கின்றோம். தமிழ்நாட்டின் மிக முக்கியமான தொல்லியல் அறிஞர்களில் ஒருவர். ஏராளமான ஆய்வு நூல்களைப் படைத்தவர். தொடர்ச்சியாக மிக நீண்ட காலமாக ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டிருந்தார்.
கொங்கு நாட்டின் விரிவான பல ஆய்வுகளை நிகழ்த்தியவர். ஏராளமான ஆய்வு நூல்களுக்குச் சொந்தக்காரர். தன் வாழ்க்கையை வரலாற்று ஆய்வுகளுக்காகவே அர்ப்பணித்தவர். இன்றைய இளம் ஆய்வாளர்களுக்கு மட்டுமல்ல இன்று ஆய்வாளர்களாகத் திகழ்ந்து கொண்டிருக்கும் பலருக்கும் வழிகாட்டியாக இருந்தவர்.
2012 ஆம் ஆண்டு புலவர் ராசு அவர்களையும் அழைத்துக் கொண்டு சித்தார்த்தா கல்லூரி மாணவர்களுடன் ஐந்து சமண பகுதிகளுக்கு கள ஆய்வுக்கு சென்றிருந்தோம். விஜயமங்கலம், சீனாபுரம் மேலும் 3 பகுதிகள். ஒவ்வொரு இடத்திலும் மாணவர்களுக்கு மிக அருமையான விளக்கங்களை வழங்கிக் கொண்டு வந்தார். சமணம் நீண்ட காலமாக தமிழ்நாட்டில் கோலோச்சிய ஒரு நெறி என்பதை விளக்கி சிதலமடைந்த கோயில்கள் பற்றிய விளக்கங்களையும் அளித்தார்.
அதற்கு மறு ஆண்டு 2013 ஆம் ஆண்டு அங்கு அவரை காணச் சென்றிருந்தபோது என்னை கலைமகள் பள்ளிக்கு அழைத்துச் சென்றிருந்தார். கலைமகள் பள்ளிக்கூடம் சிறப்பு வாய்ந்த ஒரு பள்ளிக்கூடம் ஆகும். ஏனெனில் இங்கு மிக விரிவான ஒரு அருங்காட்சியகத்தை உருவாக்கி இருக்கின்றார்கள். முதுமக்கள் தாழி, நடுகற்கள், சிற்பங்கள் கல்வெட்டுகள் என ஏராளமான சான்றுகளுடன் கூடிய மிக அருமையாகப் பாதுகாக்கப்படுகின்ற, ஏனைய பள்ளிகளுக்கும் உதாரணமாகத் திகழக்கூடிய ஓர் அருங்காட்சியகத்தைக் கொண்ட ஒரு பள்ளிக்கூடம் இது. இவற்றைப் பற்றிய பதிவுகளைத் தமிழ் மரபு அறக்கட்டளை வலைப்பக்கங்களில் காணலாம்.
ஆய்வு என்பது காலை 8 மணிக்கு ஆரம்பித்து மாலை 5 மணிக்கு முடியும் ஒரு வேலை அல்ல. பணியில் இருக்கும் வரைக்கும் தான் ஆய்வு செய்ய வேண்டும் அதற்கு பின்னால் ஆய்வு என்றாலே என்ன என்று கேட்கின்ற பலருக்கு மத்தியில் தன் வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிடத்தையும் வரலாறு, தொல்லியல், தமிழ் மொழி ஆய்வுக்கு என செலவிட்டவர் புலவர் இராசு அவர்கள்.
புலவர் ராசு அவர்கள் தமிழ் மண்ணின் வரலாற்றில் சிறப்பிடம் பெறுபவர். நான் இறுதியாக சந்தித்த காலகட்டங்களில் அவருக்குக் கேட்கும் புலன் செயலற்றுப் போயிருந்தது. அவரது வீட்டில் அமர்ந்து அவரது புகைப்பட சேகரிப்புகளைப் பார்த்துக் கொண்டிருந்தேன். ஒவ்வொரு படத்தையும் நேரமெடுத்து மிக நீண்ட நேரம் விளக்கங்கள் கொடுத்தார்.
அவரது தமிழ் பல்கலைக்கழக பணி மட்டுமல்லாது கொங்கு மண்டல பகுதியின் பல்வேறு பகுதிகளின் வரலாற்றை ஆவணப்படுத்திய பெருமை இவருக்கு உண்டு. தமிழ்நாட்டின் வரலாற்றில் புலவர் ராசு அவர்களது பெயர் என்றென்றும் நிலைத்து நிற்கும்🙏🏼
-சுபா
9.8.2023










No comments:

Post a Comment