Monday, November 28, 2016

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 107

சுப்பிரமணிய தேசிகர் மறைந்த சில நாட்களிலேயே அதாவது 19.1.1988ம் ஆண்டில் தியாகராச செட்டியார் மறைந்தார். ஒரு இழப்பிலிருந்து உ.வே.சா மீள்வதற்குள் அடுத்த இழப்புச் செய்தி திடீரென்று வரும் என்று உ.வே.சா நினைத்திருக்காத தருணம் அது. 

உ.வே.சாவின் கல்வி மற்றும் ஆய்வு தொடர்பான புற வாழ்க்கையில் மிக முக்கியமான மூன்று பேர் மகாவித்வான் மீனாட்சி சுந்தரம்பிள்ளை, சுப்பிரமணிய தேசிகர் அதற்கடுத்து தியாகராச செட்டியார் ஆகியோர். இவர்கள் மூவரையுமே படிப்படியாக இழக்கும் சூழல் நிகழ்ந்தது. இது இயற்கையின் விதி. இதில் சாமானிய மனிதர்கள் நாம் மாற்றுவதற்கு ஒன்றுமில்லை. மரணத்தின் வழி ஏற்படும் இழப்புக்களைத் தாங்கும் மனமும், அடுத்து அவரவர் வாழ்க்கையைச் சரியான நெறியில் தொடர்வதும் தான் உலகில் பிறந்த ஒவ்வொருவரும் ஆற்ற வேண்டிய கடமை. நமக்கு வழிகாட்டியாக சிலர் இருந்தது போல நாம் பிறருக்கு வழிகாட்டியாக வாழ்க்கையில் உயரும் நிலையை நாமே தான் உருவாக்கிக் கொள்ள வேண்டும். 

தியாகராச செட்டியாரின் பிரிவில் வாடிய உ.வே.சா அவரை நினைத்து மனம் வருந்தி சில செய்யுட்களை எழுதினார். இந்த நேரத்தில் பத்துப்பாட்டு ஆராய்ச்சி அவருக்குச் சிந்தனையை ஒருமுகப்படுத்த உதவியது. பேரிழப்புக்களினால் உண்டான வலியை ஆராய்ச்சியின் வழி மறக்கவும் மனதைத் தேற்றிக் கொள்ளவும் உ.வே.சா பழகிக்கொண்டார். ஆனாலும் நெருக்கமாக நம்முடன் பழகியவர்களின் சிந்தனை அவ்வளவு எளிதில் மறையக்கூடியதா என்ன? இதனை அவரே தம் குறிப்பில் இப்படி எழுதுகின்றார். 

"சுப்பிரமணிய தேசிகர், தியாகராச செட்டியார் என்னும் இருவர் பிரிவும் என்னை வருத்தினாலும் பத்துப் பாட்டு ஆராய்ச்சியை நிறுத்தவே இல்லை. அந்தத் துக்கத்தை ஆராய்ச்சியினால் மறக்க எண்ணினேன். இன்னும் ஏட்டுப் பிரதிகள் இருந்தால் நல்ல பாடம் கிடைக்குமென்ற எண்ணம் உண்டாகும். அச்சமயங்களில் சுப்பிரமணிய தேசிகர் இருந்தால் திருநெல்வேலிப் பக்கத்திலிருந்து பல ஏட்டுச் சுவடிகளை வருவித்துக் கொடுப்பாரென்ற நினைவும் கூடவே வரும். நல்ல பகுதிகளைக் காணும் போதெல்லாம் தியாகராச செட்டியார் கேட்டால் 
அளவில்லாத மகிழ்ச்சி கொள்வாரே என்ற ஞாபகம் உண்டாகும்." 

இப்படித்தான்.. யாரை மறக்க நினைக்கின்றோமோ அவர்களைப் பற்றிய சிந்தனைதான் நம் மனதில் அடிக்கடி வந்து நம்மைக் கலங்க வைக்கும். இதனையெல்லாம் பார்த்து கலங்கி விடாது கடந்து செல்லும் போதே நம் மனம் மேலும் உறுதி பெறும். 

பத்துப்பாட்டு ஆராய்ச்சி தொடர்ந்து கொண்டிருந்தது. சிந்தாமணி ஒரு வகையில் சவால்கள் நிறைந்த ஆய்வாக இருந்தது போலவே பத்துப்பாட்டும் எளிதாகப் புரிந்து கொள்ளக்கூடியதாக இல்லை. மேலும் பல ஏட்டுப் பிரதிகள் கிடைத்தால் பாட பேதங்களை அலசி ஆராய்ந்து நல்ல பதிப்பைக் கொண்டு வர இயலும் என்ற சிந்தனையில் இருந்தால் உ.வே.சா. இதற்குத் திருநெல்வேலி செல்வது உதவும் எனத் தோன்றவே திருவாவடுதுறையில் புதிய ஆதீனகர்த்தராகப் பதவி ஏற்றிருந்த அம்பலவாண தேசிகருடன் தன் கருத்தைத் தெரிவித்தார், அவரும் திருநெல்வேலியில் இருக்கும் திருவாவடுதுறை மடத்து ஸ்ரீசாமிநாத தம்பிரானுக்குத் தகவல் அனுப்பி உ.வே.சாவின் ஆய்வுக்குத் தேவையான உதவிகளைச் செய்யுமாறு கேட்டுக் கொண்டார். 

ஸ்ரீசாமிநாத தம்பிரான் நெல்லையில் இருந்த கவிராஜ ஈசுவரமூர்த்தி பிள்ளை என்பவரிடம் அறிமுகம் செய்து வைத்தார். இவரும் இவரது சகோதரரும் அங்குப் பெரிய செல்வந்தர்கள். அவர்களுடன் பேசிக் கொண்டிருந்தபோது மேலை வீதியில் உள்ள அவரது இல்லத்தின் புத்தக அறையை திறந்து காட்டியிருக்கின்றார். பார்த்தபோது உடல் சிலிர்த்துப் போனார் உ.வே.சா. முன்னர் தமிழ்ச்சங்கத்தில் இப்படித்தான் நூல்களை வைத்திருந்தார்களோ புலவர் பெருமக்கள் என நினைத்துக் கொண்டார். அந்தப் புத்தக அறையில் ஏட்டுச் சுவடிகள் அனைத்தும் மிக ஒழுங்காக, தூய்மையாகப் பூச்சிகள் இன்றி எடுஹ்ட்துப் பயன்படுஹ்ட்தும் வகையில் திருத்தமாக வைத்திருந்ததையும் உ.வே.சா குறிப்பிடுகின்றார். அந்த நூல்களையெல்லாம் ஒவ்வொன்றினையும் எடுத்துப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் உ.வே.சாவிற்கு எழுந்தது. 

அவற்றை ஒவோன்றாக எடுத்துப் பார்த்து பத்துப்பாட்டு இருக்கின்றதா எனத் தேடினார். ஒன்று கிடைத்தது. ஆனால் அதில் பொருநராற்றுப்படை முதல் நான்கு பாடல்கள் மட்டுமே இருந்தது. உ.வே.சாவைக் கவலை தொற்றிக் கொண்டது. இங்கே கடல் போல இத்தனை நூல்கள் உள்ளன. இங்குக் கூட கிடைக்கவில்லையென்றால் வேறு எங்குக் கிடைக்கப்போகின்றது என யோசிக்கலானார். அவரது கவலை படர்ந்த முகத்தைப் பார்த்து கவிராஜ ஈசுவரமூர்த்தி பிள்ளை காரணம் கேட்க அதற்கு உ.வே.சா, 

"சங்கப் புலவருடைய வீட்டைப்போல விளங்கும் இவ்விடத்தில் தமிழ்ச் செல்வம் முழுவதும் கிடைக்குமென்று முதலில் எண்ணினேன். நான் எதைத் தேடி வந்தேனோ அது முற்றும் கிடைக்கவில்லையே! தமிழுலகத்தில் இந்தத் தமிழாலயத்தைக் காட்டிலும் சிறந்த இடம் எங்கே இருக்கப் போகிறது! இங்கே அகப்படாதது வேறு எங்கே அகப்படும்! சங்கத்துச் சான்றோர்கள் இயற்றிய நூல்களைத் தமிழுலகம் இப்படி ஆதரவின்றிப் போக்கி விட்டதே!” என்று வருத்தத்தோடு கூறினேன். 

“இந்த வீடு ஒன்றுதான் இப்படி இருக்கிறதென்று நீங்கள் நினைக்க வேண்டாம். இங்கே இன்னும் சில வீடுகளில் பல வகையான ஏட்டுச் சுவடிகள் இருக்கின்றன. அங்கேயும் பார்க்கலாம். ஸ்ரீ வைகுண்டம் முதலிய ஊர்களில் பல கவிராயர்கள் வீடுகள் உண்டு. ஆயிரக்கணக்கான ஏடுகளை அவ்வீடுகளிற் காணலாம். ஆகையால் தாங்கள் சிறிதும் அதைரியம் அடையவேண்டாம்” என்று கவிராஜர் சொன்னார். அந்த இடத்திற் கோவில் கொண்டிருந்த தமிழ்த் தெய்வமே எனக்கு அபயங்கொடுப்பதாக எண்ணிப் பின்னும் சுவடிகளை ஆராயலானேன்." என்று மேலும் நம்பிக்கை அளித்தார் கவிராஜ ஈசுவரமூர்த்தி பிள்ளை . 

ஆயிரக்கணக்கில் ஓலைச்சுவடிகள் இருந்தன என உ.வே.சாவின் குறிப்புக்களிலிருந்து அறியும் போது, அந்த ஓலைச்சுவடிகளெல்லாம் இன்று என்ன ஆயின என்ற கேள்வி தான் என் மனதில் எழுகின்றது. இந்தப் பகுதியை வாசித்த போது இந்தப்பகுதியின் கீழ் அடிக்கோடிட்டு வைத்தேன். இவற்றில் எத்தனைப் பாதுகாக்கப்பட்டன? 
எத்தனைச் சுவடி நூல்கள் அழிந்தன? 
எத்தனைச் சுவடி நூல்கள் அறியாமையால் அழிக்கப்பட்டன? 

இவற்றிற்கு விடை தேடத்தான் வேண்டும்.

தொடரும்..
சுபா

No comments:

Post a Comment