Tuesday, January 8, 2019

கலிலியோ

அறிவியல் துறையில் முக்கிய இடம் பிடிக்கும் கலிலியோவின் நினைவு நாள் இன்று. நிக்கோலஸ் கோப்பர்னிக்கஸின் கண்டுபிடிப்பு சூரியனையே ஏனைய கோள்கள் சுற்றிக் கொண்டிருக்கின்றன என்பதை உறுதி செய்தது. அதற்கு 60 ஆண்டுகளுக்குப் பின்னர் டச்சு விஞ்ஞானி ஹான்ஸ் லிப்பர்கேய் 1608ல் கண்டுபிடித்த டெலஸ்கோப்பை பயன்படுத்தி மேலும் அந்த தொழில்நுட்பத்தை செம்மை படுத்தி 8 மடங்கு மேலும் கூர்மையாக நோக்கக் கூடிய டெலஸ்கோப்பை கண்டுபிடித்தார் கலிலியோ. வெனிஸ் நகரின் செனட்டர்களுக்கு பூமி மையப்புள்ளியில்லை, சூரியன் தான் என தன் அறிவியல் கண்டுபிடிப்பினை உரையாக வழங்கினார் கலிலியோ. அன்றைய ரோமன் கத்தோலிக்க பேரரசின் நம்பிக்கையை அசைக்கும் இந்த அறிவியல் கண்டுபிடிப்பு சமய பீடத்திற்கு கோபத்தை உருவாக்கத்தவறவில்லை. கலிலியோ ரோமன் கத்தோலிக்க சமய பீடத்தால் எச்சரிக்கை செய்யப்பட்டார். ஆயினும் கலிலியோவின் விண்ணியல் ஆய்வு தொடர்ந்தது. 1632ல் மேலும் தனது ஆய்வை விரிவாக்கி வின்ணியல் ஆய்வு தொடர்பான தனது கருத்துக்களை வெளியிட்டார் கலிலியோ. ரோமன் கத்தோலிக்க சபை அவரை வீட்டுக்காவலில் சிறை வைத்தது.


359 ஆண்டுகளுக்குப் பின்னர் ரோமன் கத்தோலிக்க சபையின் மையமான வாட்டிக்கன் கலிலியோவின் கண்டுபிடிப்புக்கள் சரியே என 1992ம் ஆண்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்து தனது தவறை வெளிப்படையாக ஒத்துக்கொண்டு அறிக்கை வெளியிட்டது.


கலிலியோ 1642ம் ஆண்டு தனது வீட்டில் வீட்டுக்க்காவலில் இருந்தபோதே இறந்தார்.


இன்று கலிலியோவின் நினைவு நாள்.


அறிவியலைப் பற்றி அதிகம் பேசுவோம். இளையோர் மத்தியில் அறிவியல் சிந்தனைகளை விரிவாகக் கொண்டு செல்வோம். அறிவியலை விரும்பும் சமூகமாக மாறுவோம். அதுவே மூட நம்பிக்கைகளை விட்டு மனித குலம் விடுதலை பெறும் வழி!

-சுபா

No comments:

Post a Comment