Sunday, September 3, 2017

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 131

ஒரு செயலில் நாம் ஈடுபட்டிருக்கும் போது அச்செயலுக்குத் தொடர்ச்சியான வேறு சில தேவைகள் நம் கண்முன்னே வந்து நிற்கும் போது அவற்றையும் செய்யத் தொடங்கலாமா, என்ற எண்ணம் நம் மனதில் எழுவதை நமது அனுபவங்களில் பார்த்திருப்போம். பல வேளைகளில் இப்படியானச் செயல்கள் நமது முதன்மை நோக்கத்தை நாம் அடையமுடியாமல் செய்துவிடும் அபாயமும் உண்டு. பல வேளைகளில் புதிய பாதைகள் நமக்கே ஏற்படுவதும் அதனால் நமது சுய வளர்ச்சி என்பது மிகப்படுதலுக்கான வாய்ப்புகள் அதிகரிப்பது என்ற நிலையும் ஏற்படும் சாதகமான நிலையும் ஏற்படுவது உண்டு. ஆக, எது நமக்குத் தேவை, எந்த வழியைத் தேர்ந்தெடுப்பது, எதனில் முழு கவனத்தைச் செலுத்துவது என்பதை நாம்தான் சுயமாக நமது தேவைக்கும், மனத்தின் எண்ண ஓட்டங்களுக்கும், சூழலுக்கும், ஏற்றவாறு தேர்ந்தெடுத்து செயல்படவேண்டும். 

உ.வே.சா புறநானூற்றுப் பதிப்பு வேலையைத் தொடங்கி விட்ட காலகட்டம் இது. சென்னையில் பாதி வேலையை முடித்து விட்டு கல்லூரி தொடங்கியதால் கும்பகோணத்திற்குத் திரும்பி வந்து தனது கல்லூரிப் பணிகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்த காலம் அது. புறநானூறு அச்சுப்பதிப்பில் இணைப்பதற்காகப் புறநானூற்று அகராதியை ஒன்றினைத் தயாரித்துச் செம்மை படுத்தினார், அப்போது கல்லூரியில் முதல்வராக இருந்தவர் பில்டெர்பெர்க் என்னும் ஆங்கிலேயர் ஒருவர். உ.வே.சாவின் அச்சுப்பதிப்புப் பணிகளை அறிந்திருந்தமையினால் இவர்பால் அவருக்கு நிறைந்த அன்பு இருந்தது. உ.வே.சா பதிப்பித்த சீவக சிந்தாமணி அச்சுப்பதிப்பை இங்கிலாந்தில் உள்ள கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழக நூலகத்திற்கும் ஏனைய சில கல்வி மையங்களுக்கும் அனுப்பி வைத்ததோடு அங்கிருந்து நூலைப்பெற்றுக் கொண்டமைக்கான நன்றிக்கடிதங்களையும் அவர்கள் எழுதி அனுப்பச் செய்திருக்கின்றார். 

அந்தக் காலத்தில் கல்லூரியில், கல்லூரிப் படிப்பு என்பது மட்டுமன்றி நாடக அரங்கேற்றங்களும் நடைபெற்றிருக்கின்றன. ஷேக்ஸ்பியரின் Midsummer Night's Dream என்ற நாடகத்தைத் தமிழில் மொழி பெயர்த்து நடத்தியிருக்கின்றனர். கல்லூரி ஆசிரியர்களில் ஒருவராகிய நாராயணசாமி ஐயர் என்பவர் இந்த மொழிபெயர்ப்பைச் செய்ய, அதனைத் திருத்தம் பார்த்து மேலும் சில பாடல்களையும் தாமே எழுதி இணைத்துக் கொடுக்க, நடுவேனிற் கனவு என்ற பெயரில் இந்த நாடகம் அரங்கேற்றம் கண்டது என்ற செய்தியும் உ.வே.சா குறிப்புக்களின் வழி அறியமுடிகின்றது. 

இதன் தொடர்ச்சியாக ஷேக்ஸ்பியர் எழுதிய ஆங்கில நாடகங்களை ஆங்கில மொழி தெரிந்த ஒருவர் உதவியோடு வாசித்து தமிழ் படுத்தினால் என்ன, என்ற யோசனை உவே.சாவிற்கு எழுந்தது. அதேபோல சாகுந்தலம் போன்ற நூல்களைத் தமிழ் படுத்தி எழுதலாமே என்றும் தோன்றியது. உ.வே.சாவின் நலனில் அக்கறை கொண்ட சிலரோ, புதிதாக உ.வே.சா வசன நடையில் நூல்கள் எழுதினால் கல்லூரி பாட நூலாக அமைக்கலாம் என்பதோடு நல்ல பொருளும் வரும் என்றும் ஆலோசனைக் கூறினர். இந்தச் சிந்தனைகளை உள்வாங்கிக் கொண்டு, செய்யலாமா வேண்டாமா, என யோசித்துக் கொண்டிருந்தார் உ.வே.சா. 

பழந்தமிழ் நூலாராய்ச்சியில் ஒன்றிப்போன உள்ளத்திற்கு இந்தப் புதிய சிந்தனைகள் நிலையான நிறைவைத் தராது என்றே அவரது எண்ண ஓட்டம் இருந்தது. ஆக, வேறு திசையில் செல்லாது தனது நோக்கம் கெடாது, பழந்தமிழ் நூல்களைத் தேடி ஆராய்ந்து அவற்றை அச்சுப்பணியாக்கம் செய்ய வேண்டும் என்ற ஒன்றைச் செய்வதையே தம் குறிக்கோளாக நிலையாக்கிக் கொண்டார் உ.வே.சா. 

திருத்தருப்பூண்டி நகரில் அப்போது முன்ஸீபாக இருந்த வடக்குப்பட்டு த.சுப்பிரமணிய பிள்ளை என்ற ஒருவர் ஆங்கிலப்புலமை பெற்றிருந்தாலும் தமிழ் மொழி இலக்கியங்களில் நிறைந்த ஆர்வத்தைக் கொண்டிருந்தார். அவர் முருகப்பெருமானைத் துதித்து அருணகிரிநாதர் எழுதிய திருப்புகழ் ஓலைச்சுவடிகளைத் தேடி ஆராய்ந்து கொண்டிருந்தார். பலரிடம் உள்ள சுவடிகளைப் பெற்று, பாடபேதம் கண்டு ஆராய்ந்து திருப்புகழை முழுமையான அச்சுப்பதிப்பாக கொண்டு வரவேண்டும் என்ற எண்ணம் சுப்பிரமணிய பிள்ளை அவர்களுக்கு இருந்தது. நிறைந்த உழைப்பைச் செலுத்தி இப்பணிகளை அவர் செய்து வந்தார். உ.வே.சாவிற்கு அவரது அறிமுகம் கிடைத்தது. திருப்புகழ் பதிப்புப்பணியில் அவருக்கிருந்த ஆர்வத்தைக் கண்டு அவர் பால் உ.வே.சாவிற்கு மேலும் அன்பு உண்டாயிற்று. திருப்புகழ் பணியை சுப்பிரமணிய பிள்ளை செய்து கொண்டிருக்கும் போது அச்சுப் பிரதிகளில் புருப் பார்க்கும் பணியில் உ.வே.சாவும் அவருக்கு உதவினார். புறநானூற்றுப் பதிப்புப் பணிகளும் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருந்தன. 

அவ்வேளையில் உ.வே.சாவின் மனதை வறுத்தும் துன்பகரமான நிகழ்வு ஒன்று அவர் வாழ்வில் நடந்தது.

No comments:

Post a Comment