Sunday, April 22, 2001

கைவல்யோபநிஷத்து (பாகம் 2) - மனித, இயந்திர - மந்திராயணம் (மாய உலகம்)

Date: Sun, 22 Apr 2001 12:23:17 -0700 (PDT)
From: "suba k."
Subject: Upanishad - Kaivalya Upanishad (Part 2.2)
To: meykandar@egroups.com

முதல் காண்டச் சுருக்கம்:(2)
-மாயையால் மதியிழந்த ஜீவனே சரீரத்திலிருந்து எல்லாவற்றையும் செய்கின்றான்.

-ஸ்திரீ, அன்னம், பானம் முதலிய பலவகைப்பட்ட போகங்களால் அவனே விழிப்பு நிலையில் திருப்தியை அடைகின்றான்.

-கனவு நிலையில் அந்த ஜீவன் தனது மாயையால் கல்பிக்கப்பட்ட ஜீவலோகத்தில் இன்ப துன்பங்களை அனுபவிக்கின்றான்.

-உறக்க நிலையில் அனைத்தும் ஒழிவடைந்த போது அறியாமையாகிற இருளில் ஆழ்ந்து இன்ப வடிவை எய்துகின்றான்.

-மீண்டும் முற்பிறவிகளில் செய்த வினைகளின் கூட்டுறவால் திரும்பத் திரும்ப அதே ஜீவன் தூங்கியும் விழித்தும் முப்புரங்களிலும் விளையாடுகின்றான்.

தொடர் சிந்தனை:

கைவல்யோபநிஷத்தின் இப்பகுதி மாயையின் தன்மையையும் அதனால் ஜீவன் அடைகின்ற அனுபவத்தையும் விளக்குகின்றது. இந்தப் பகுதியில் கவனிக்கப்பட வேண்டிய கருத்துக்களாக இருப்பவை இரண்டாகும். முதலாவதாக, மாயையின் தாக்கத்தினால் ஆன்மா தன்னை மறந்து வேட்கையினால் ஈர்க்கப்படுவது; அடுத்தது, ஆன்மா விழிப்பு, கனவு உறக்கம் ஆகிய மூன்று நிலைகளில் மாயையோடு கொண்டிருக்கின்ற தொடர்பு.

இந்த இரண்டு கருத்துக்களுமே மாயையினால் ஆன்மாவின் ஒவ்வொரு செயலும் பாதிக்கப்படுகின்ற தன்மையை விளக்குவதாக உள்ளது.

13ம் நூற்றாண்டில் ஆன்ம தத்துவங்களை மிக ஆழமான ஆராய்ச்சிக்குட்படுத்தி அதனை நூல் வடிவில் தந்தவர் அருள் நந்தி சிவாச்சாரியார். அவர் தனது 'இருபா இருபஃது' எனும் நூலில் மாயைக்கு விளக்கத்தினை இப்படி எழுதுகின்றார்;

அஞ்ஞானம் பொய் அயர்வே மோகம்
பைசா சூனியம் மாச்சரியம்பய
மாயவேழ் குணனும் மாயைக் கருளினை
இருத்தலுங் கிடத்தலும் இருவினை யியற்றலும்
விடுத்தலும் பரநிந்தை மெவலென் றெடுத்த


விளக்கம்:- மாயையானது அஞ்ஞானம் (பொருளல்லதனைப் பொருளென்று கொள்ளுதல்), பொய் (மன மொழி மெய்களில் செப்பமின்மை), அயர்வு (ஒன்றை மறந்தும் மயங்கியும் வருந்துதல்), மோகம் (புல்லிய பொருள்களை விரும்பி உழலுதல்), பைசாசூனியம் (ஒரு பொருளின் மேற்கொண்ட தீய வேட்கையை ஒளித்தல்), மாற்சரியம் (பிறர்பால் பகைமை பாராட்டுதல்), பயம் (அஞ்சத் தகாதனவற்றிற்கு அஞ்சுதல்)என்னும் ஏழு குணங்களையுடையது;

ஆன்மா தன்னை, தனது சுய இயல்பினை, மறந்து செயல்படுகின்ற நிலையே மாயையினால் ஏற்படுகின்ற நிலை என பொருள் கொள்ளலாம். ஒரு ஜீவன் செய்கின்ற அத்தனை செயல்களுக்கும், ஆன்ம போக்கிற்கும் மூல காரணமாக இருப்பது அந்த ஆன்மா கொண்டிருக்கின்ற ஆணவம், கன்மம், மாயை எனும் இம்முன்று பாசங்களுமாகும். அதில் மாயை எனும் இக்குணமானது உடலெடுத்து வாழ்கின்ற ஜீவனுக்கு, சிந்தனைப் போக்கில் தாக்கத்தினைக் கொடுத்து ஜீவனின் செயல்களுக்குக் காரணமாக அமைகின்றது.

மாயை என்பது இறைவனால் ஆன்மாவிற்குக் கொடுக்கப்படுவதல்ல. ஒரு ஆன்மா கொண்டிருக்கின்ற மாயை எனப்படுவது அவ்வான்மா ஈட்டி தன்னோடு சேர்த்து வைத்துள்ள ஆணவ மலத்தையும் கன்ம மலத்தையும் அடிப்படையாகக் கொண்டது. ஆணவமும் கன்மமுமே அந்த ஆன்மாவின் மாயையை தீர்மானிப்பதாக அமைகின்றன. சரி, மாயையினால் ஆன்மா எதை அனுபவிக்கின்றது என்பதைப் பார்ப்போம்;

மாயை என்பது மயக்கத்தைக் கொடுப்பது. சிந்தனைத் தெளிவைக் கெடுத்து, உடலுக்கு இன்பமளிக்கும் காரியங்களில் மனதின் நாட்டங்களை செலுத்தும் திறன் பெற்றது. சாதாரணமாக பேச்சு வழக்கில், மண் ஆசை, பெண் ஆசை, பொண் ஆசை இவை மூன்றுமே மனிதருக்கு நிம்மதியைக் கெடுத்து பேரிழப்பினைத் தரக்கூடியது எனும் கருத்து இருந்து வருகின்றது. பொருள், புகழ் காமம் போன்றவற்றில் எழுகின்ற பேராசையே கூடாத ஒன்றாகவும் அழிவினைத் தரக்கூடியதாகவும் அமைகின்றது.

மனிதர் செய்கின்ற அத்தனை செயல்களுக்கும் பின்னனியில் ஒரு வேட்கை கட்டாயமாக இருக்கும். ஒரு பொருளின் மேல் உள்ள பற்றே (ஆசை) அதனை தனதாக்கிக் கொள்ள வேண்டும் எனும் சிந்தனையைத் தூண்டுகின்றது. ஆசையே கூடாது என்று சொன்னால் அது அபத்தமாகிவிடும். ஆசைகளில் இரண்டு விதம். ஒரு வகை ஆசை, தனக்கு மட்டும் குறிப்பாக தனது உடலுக்கு இன்பமளிக்கக் கூடியது. மற்றொன்று தனது ஆன்மாவிற்கு உயர்வினை அளிக்கக் கூடியது. இதுவே பிறர் இன்பத்தையும் நிம்மதியையும் நினைத்து எழுகின்ற ஆசை. ஞானத்தை அடைய வேண்டும் என்ற உந்துதலில் படித்து வாழ்வில் உயர வேண்டும் என நினைக்கும் ஒரு மாணவி பல புத்தகங்களின் மேல் ஆசை கொண்டிருப்பாள். இதுவும் ஒருவகை ஆசைதான். அதே வேளை இன்னொரு பெண், பொருளாசை கொண்டு, பார்க்கின்ற அத்தனை தங்க நகைகளும் தனக்கு வேண்டும் என நினைப்பவளாக இருப்பாள். இது முதல் வகையைச் சேர்ந்தது. இரண்டுமே ஆசையின் நிமித்தம் தோன்றுகின்ற எண்ணங்கள் தான். ஆனால் தன்மையில் வேறுபடுபவை!

மாயை ஒரு மனிதரை மதியிழக்கச் செய்யக் கூடியது. எந்த ஒரு காரியத்தை செய்கின்ற போதும் அதன் பின் விளைவுகள் எவ்வாறு இருக்கும் என்பதை சிந்தனை தெளிவாக இருக்கும் போது ஒருவரால் உணர்ந்து கொள்ள முடியும். ஆனால், மாயை அதிகமாக ஆன்மாவில் சேர்ந்திருக்கும் போது மனிதரை சிந்தனையிழக்கச் செய்து, மனம் போகின்ற போக்கில் தனது செயல்களுக்கு நியாயம் பேசிக் கொண்டு ஆசை இழுக்கின்ற வகையில் காரியங்களில் ஈடுபட வைக்கும்.

மாயையின் தன்மையையும் அதை நீக்கும் வகையினையும் முனைவர் கி.லோகநாதன் தனது அழிவில் உண்மை விளக்கத்தில் இப்படி குறிக்கின்றார்.

சூத்திரம் 11. மாயைக் கழற்சி

மூலக்கற்றளி முட்டிமுடித்து அறிவினா திட்டான
மடைந்துமணி பூரகமுற் றிடுமாண் புடையான்மா
கண்டிடு முலகிற் கருநிலை யாடல்கள்
வென்றிடு மாய்மை வீழுமிறை யருளின்.


....... பிழையறிவுகள் பற்பல எழுவதற்கு மூலமாய இந்த மாயாமலத்தை அதனின் எழு மாய்மையை, இறையருளை ஈட்டியே ஆன்மாக்கள் தம் அகத்திலிருந்து போக்கும் என்பதாயிற்று.

meykandar e-forum: Azhivil Unmai -11 12/apr/2001


........... இனி இவ்வாறு அருளது வீழ்ச்சியே மாய்மையையும் அதன் மூலமாகிய மாயாமலத்தையும் போக்கும் என்றிருக்க, ஆன்மா "வென்றிடும் மாய்மை" எனபது என்னையோவெனின், மயக்கத்தைக் கெடுத்தல் அருளது வீழ்ச்சியின் காரணமாக நடப்பதெனினும், அதற்குப் பாத்திரமாதல் எளிதான ஒன்றல்ல ஆன்மாக்களுக்கு என்பதை உணர்த்துதல் கருதிற்று என்பதாம். பல்வேறு மயக்கவறிவுகளைத் தரும் இழுப்புகட்கு ஆளாகிக் கொண்டே இருக்கும் ஆன்மாக்கள், அவ்வழி செல்லாது அவற்றோடு பெரும் போராட்டம் நடத்தியே அந்த இழுப்புக்களை வென்று அருளது வீழ்ச்சிக்கு பாத்திரமாக நிற்க முடியும். அருள்வீழ்ச்சி இதற்குத் துணையாக நிற்க, ஆன்மாக்கள் அகத்திலே மாபெரும் போராட்டம் நடத்தியே உறுதியான வைராக்கியத்தோடு பிழையறிவு மாயத்தை, மாயமலத்தை ஒதுக்கி இறையருட்பார்வையிலேயே நிற்கமுடியும். இத்தகு மாயத்தை வெல்லல் ஓர் மாபெரும் வீரப்போராட்டம் என்பதால், "வென்றிடும் மாய்மை" என்று பகரப்படுகின்றது. ...............

meykandar e-forum: Azhivil Unmai -11 14/apr/2001


மாயையின் தாக்கம் ஆன்மா விழித்திருக்கின்ற நிலையில், கனவில், ஆழ்ந்த உறக்கத்தில் என அனைத்து நிலைகளிலும் இருப்பதாக கைவல்யோபநிஷத்து விளக்குகின்றது. சாதாரண மனிதர்களாகிய நாம் சபலங்களுக்கு அப்பாற்பட்டவர்களல்லர். பல விதமான உணவுகளை விரும்புகின்றோம். சைவ உணவென்றால் நூறு வகை. அசைவ உணவென்றால் ஆயிரம் வகை என நாக்கின் சுவைக்கு ஏற்ப உணவை சுவைத்து மகிழ்கின்றோம். உணவு என்பது உயிர் வாழ்வதற்கு எனும் நிலை மாறி உணவு போகப் பொருளாக, உண்டு மகிழ்ந்து வாழ்வதே வாழ்வு எனும் நிலையில் இருக்கின்றோம். பசி என்னும் இந்த ஆசை படுத்துகின்ற பாட்டினை ஔவை மிக அழகாக இப்படிப் பாடுகின்றாள்;

ஒருநாள் உணவை ஒழி என்றால் ஒழியாய்
இருநாளுங் கேல் என்றால் ஏலாய் - ஒரு நாளும்
என்நோ அறியாய் இடும்பைகூர் என்வயிரே!
உன்னோடு வாழ்தல் அறிது.


பட்டினியால் உலகின் பல மூலைகளில் மக்கள் வாடுகின்ற சமயத்தில் நாம் இங்கு ஒரு நாளைக்கு ஆறு முறை சாப்பிடுகின்றோமே என எனது ஆசிரியர் ஒருவர் ஒரு முறை கூறி வருந்தினார். உணவில் மாத்திரமல்ல; நமது மனம் பார்க்கின்ற அனைத்தையும் அடைய ஏங்குகின்றது. பார்க்கின்ற எல்லா பொருளும் அது அழகாக, கவர்ச்சியாக, விலை மதிப்புடையதாக இருந்தால் உடனே அதன் பக்கம் மனம் தாவுகின்றது; அதனை சொந்தமாக்கிக் கொள்ள ஏங்கின்றது.

உடல் விழிப்பு நிலையில் இருக்கின்ற போது மனம் போகங்களை நாடியே செல்கின்றது. முறையற்ற காமம் முறையற்ற ஆசையைத் தூண்டுகின்றது. ஆசை மனதை முழுமையாகப் பிடித்துக் கொள்ளும் போது மனம் அந்த சிந்தனையின் முழு ஆக்கிரமிப்பினால் ஈர்க்கப்படுகின்றது.சதா காலமும் ஈர்க்கப்பட்ட பொருளின் சிந்தனையிலேயே ஆழ்ந்து பொன்னான காலத்தை செலவழிப்பதை உணராது அதனை அடைவதிலேயே காலத்தைக் கழிக்கின்றது. ஆசைப்படுகின்ற பொருள் ஆன்ம வளர்ச்சிக்குப் பொருந்திய ஒன்றாக இருந்தால் அதனை அடைய எடுக்கின்ற முயற்சியில் ஆன்மா பக்குவத்தில் உயர வாய்ப்பிருக்கின்றது. அதனை விடுத்து, நிலையற்ற, அழியக்கூடிய பொருள்களில் நாட்டம் செல்லும் போது ஆன்மா அமைதியிழந்து பற்பல தொல்லைகளில் சிக்கி நிம்மதியிழக்க நேரிடுகின்றது.

ஆசை தருகின்ற உந்துதல் இருக்கின்ற போது ஏதாவது ஒன்றினை செய்ய வேண்டும் எனும் சிந்தனை தோன்றி மனிதரை செயல் படுத்த வைக்கின்றது. அதனால் 'ஆசை' முற்றிலும் கூடாத ஒன்று என்று கூறி விட முடியாது. எந்த ஆசையும் முறையானதாக, அளவானதாக ஆன்ம உயர்வைத் தரக்கூடியதாக இருக்கின்ற வரையில் அது ஆன்ம பக்குவத்தை முன்னேற்றக் கூடிய ஒன்றே. ஆசை பேராசையாக மாறும் போதே அது மென்மேலும் கன்மத்தை சேர்த்து, ஆணவத்தைக் கூட்டி மனிதருக்கு துன்பத்தைக் கொடுப்பதாக அமைகின்றது.

விழிப்பில் மாயை மனிதருக்கு ஆசைகளை எழுப்பவதாகக் கூறுகின்ற கைவல்யோபநிஷத், கனவில் மாயையால் கல்பிக்கப்பட்ட ஜீவ லோகத்தில் ஆன்மா இன்ப துன்பங்களை அனுபவிப்பதாகக் கூறுகின்றது. ஆக கனவு என்பதை மாயை ஏற்படுத்துகின்ற ஒரு வித்தை என்பதாக இது முடிகின்றது. இது முற்றாக ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒன்றாக இல்லை. கனவு என்பது பரம்பொருளால் மனிதருக்கு தெரிவிக்கப்படுகின்ற நிகழ்வு. கனவு பலவகைப் படும். நடந்து முடிந்த ஒன்றினை மீண்டும் ஞாபகப் படுத்துவதாக, நடக்க விருப்பதை ஏதாவது ஒரு வகையில் விளக்குவதாக, பிறரது அனுபவத்தை நாம் உணர வைப்பதாக, அல்லது எதாவது ஒரு விஷயத்தைப் பற்றி நாம் சிந்திக்க வேண்டும் என்பதற்காக என கனவு ஏற்படுவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. கனவு அதைக் காண்பவருக்கு இன்ப துன்ப உணர்வுகளைத் தரக்கூடியது என்பது ஏற்றுக்கொள்ளக்கூடிய கருத்தே. ஆனால் அவை கற்பிக்கப்படுபவை அல்ல!.

கனவு என்பது internet செயல்பாட்டினைப் போன்றது. internet தொடர்பினை ஏற்படுத்துவதற்கு client, server என இரண்டு system தேவை. இவை செயல்படுவதற்கு நிரந்தரத் தொடர்பு என்பது இல்லை. எப்போது ஒரு client ஒரு server லிருந்து சில பக்கங்களை பார்க்க தொடர்பினை ஏற்படுத்துகின்றதோ அப்போது அந்த இனைப்பு ஏற்படுகின்றது. உதாரணமாக ஜெர்மனியில் இருக்கும் நான் எனது அலுவலகத்தில் இருந்து ஆஸ்திரேலியாவிலுள்ள ஒரு server ன் ஒரு வலைப்பக்கத்திலுள்ள செய்திகளை படிக்க விரும்பும் போது அந்த URL கொடுத்து இனைப்பினை ஏற்படுத்துகின்றேன். அந்த இனைப்பு எந்த backbone வழியாகச் சென்று நான் விரும்புகின்ற செய்தி இருக்கின்ற server ஐ அடைந்தது என்பது எனக்குத் தெரிய வழியில்லை. அதைப் போலத்தான் கனவுகளும். அவை இறையினால் ஆன்மாக்களுக்கு அனுப்பப் படுகின்ற செய்திகள். கனவு நிலையில் மனம் ஒடுங்குவதால் இறைவன் தெரிவிக்கின்ற செய்திகளை ஆன்மா முழுமையாகப் பற்றிக் கொண்டு அதனை அனுபவிக்கின்றது. மனம் செயல்பட ஆரம்பிக்கும் போது கனவிற்கான தொடர்பு துண்டிக்கப்படுகின்றது. இறைவன் தனது கருணையினால் ஆன்மாக்களுக்கு உதவும் வகையில் எப்போதும் ஆன்மாக்களோடு தொடர்பு கொண்டேயிருக்கின்றார். ஆனால், பல விஷயங்களில் மனதைச் செலுத்தி சிற்றின்பத்தில் மூழ்கிக் கிடக்கும் ஆன்மாக்களுக்கு விழிப்பு நிலையில் இறைவன் சொல்கின்ற உண்மைகளை (செய்திகளை) உணர முடியாமல் போய்விடுகின்றது. ஆன்மா உறக்கத்தில் இருக்கின்ற போது மனதின் செயல்பாட்டினை இழந்து அமைதி அடைகின்ற போது, இறை உனர்த்துகின்ற உண்மைகளைக் காணக் கூடிய தன்மையைப் பெறுகின்றது. தான் என்ற சுயம் மறையும் போது இந்த நிலை சித்திக்கின்றது. ஆனால் சில வேளைகளில் னமது மனம் விழித்துக் கொள்ளும் போது, கனவுகளை அனுபவித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் அதை அப்போது நிஜம் என்று நினைத்து, திடுக்கிட்டு எழுவது, அழுவது அல்லது சிரிப்பது என்பது போன்ற அனுபவங்களும் நமக்குக் கிடைப்பதுண்டு.

விழிப்பிலும் கனவிலும் மாயையின் செயல்பாட்டினைப் பார்த்தோம். உறக்கத்தில் அதன் தாக்கம் என்ன? 'உறக்க நிலையில் அனைத்தும் ஒழிவடைந்த போது அறியாமையாகிற இருளில் ஆழ்ந்து இன்ப வடிவை எய்துகின்றான்' என கைவல்யோபநிஷத்து கூறுகின்றது. உறக்கத்தில் ஆன்மாவின் நிலை என்ன? உறக்கத்தில் இருக்கும் போது மனம் ஒடுங்கி அமைதி பெருகின்றது.ஆனால் உடல் இயங்கிக் கொண்டுதான் இருக்கின்றது. இரத்த ஓட்டம், சுவாச ஓட்டம், ஹிருதயத் துடிப்பு என்பவை நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் மூளையை இயக்குகின்ற மனம் ஒடுங்கி இருப்பதால் மூளை மிகக் குறைவான வேலைகளை மாத்திரம் கவனித்துக் கொண்டு இயங்கிக் கொண்டிருக்கும். கனினி செயல்பாட்டினை தற்காலிகமாக நிறுத்திவைக்க நினைக்கும் போது அதனை நாம் shutdown செய்வதற்கு பதிலாக standby நிலையில் வைக்கின்றோம் அல்லவா, அதைப்போலத்தான் உறக்கமும். உறக்கத்தின் போது ஆன்மா முழுதாக உடலிலிருந்து பிரிந்து விடுவதில்லை. ஆன்மா உடலுக்கும் தனக்கும் உள்ள தொடர்பினை குறைத்துக் கொள்கின்றது.அது மட்டுமே!

ஆக உறக்கம் தருகின்ற இன்பம் இருளின் அனுபவத்தினால் வருவதல்ல. மாறாக அது உடல் ஓய்விற்குப் பிறகு புத்துணர்ச்சி பெறுவதால் ஏற்படுகின்ற அனுபவம்.

இந்தக் கருத்துக்களை மேலும் மேலும் சிந்திக்கும் போது நமது அத்தனை நன்மை தீமைகளுக்கும் முழுப் பொருப்பு நாமே எனும் செய்தியை நன்றாக புரிந்து கொள்ள முடிகின்றது. மாயை தருகின்ற அல்லல்களிலிருந்து விடுபடுவதற்கு தெய்வீக நாட்டமும் மனக் கட்டுப்பாடுகளும் மிகவும் அவசியமாகின்றன. சிந்தனையில் தெளிவு தோன்றுகின்ற போது தானே நம்மை நாம் மென்மேலும் தூய்மைப்படுத்திக் கொள்ள முடியும்!!

தொடரும்.....


அன்புடன்
சுபா

No comments:

Post a Comment