Monday, July 11, 2016

அனிச்ச மலர்கள் - சிறுகதை நூல் விமர்சனம்

அனிச்ச மலர்கள் - சிறுகதை நூல் விமர்சனம்
+++++++++++++++++++++++++++++++++++++++++
முனைவர்.க.சுபாஷிணி

அங்கும் இங்கும் நகர முடியாமல் நீண்ட பயணங்கள் அமைந்து விட்டால் புத்தகங்கள் வாசிப்பது தான் ஒரே வழி.
சான் பிரான்சிச்கோவிலிருந்து சிக்காகோ விமானப்பயணத்தில் தோழி தேமொழி எழுதிய அனிச்ச மலர்கள் நூல் பயண அலுப்பை மறக்கச் செய்தது. அன்றே இந்த நூலைப் பற்றி எனது கருத்தை எழுதி இருக்கலாம். ஆயினும் இரண்டு கதைகளை முழுதாக முடிக்காததால் அதனையும் முடித்து எழுத நினைத்திருந்தேன். இன்று வாசித்து முடித்ததால் இந்த நூல் பற்றிய என் கருத்தை பதிகின்றேன்.
தமிழர்கள் தம் தாயகத்திலிருந்து புலம் பெயர்ந்த பின்னர் வாழ்க்கையைப் புதிதாகத் தொடங்கும் காலகட்டத்தில் தம் தாயகத்துடனான ஒட்டுதல் அதிகமாக இருப்பது இயற்கை. ஆனால் படிப்படியாக மனம் புலம் பெயர்ந்த நாட்டில் அதன் சூழலுக்கேற்ப தம்மை மாற்றிக் கொண்டு அங்கு வாழ்க்கை நிலைபெற்றுப் போகும் போது அந்தச் சூழலுக்கேற்ப மனித மனம் புதிய விசயங்களை ஏற்றுக் கொள்ள பழகி விடுகின்றது. அத்தகைய புதிய விசயங்களைப் பதியும் ஆவணங்களாகவே புலம்பெயர்ந்த எழுத்தாளர்களின் படைப்புக்கள் அமைந்து விடும் போது அது புதிய இலக்கிய வடிவமாக நமக்கு காட்சியளிக்கின்றது..
தமிழர் புலம் பெயர்ந்த நாடுகள் பல. அதில் அமெரிக்காவிற்கு இந்தியத் தமிழர்களின் வரவு என்பது பல ஆண்டுகளாக நிகழ்வது.
அமெரிக்க வாழ் தமிழர்களின் வாழ்க்கை நிலையை, உள்ளூர் சூழலை படம் பிடித்துக் காட்டும் வகையில்புதிய இலக்கியங்கள் படைக்கப்பட வேண்டும். தமிழகத்து சூழலை மட்டும் விவரிக்கும் இலக்கியங்கள் மட்டுமே உலகத் தமிழர்களின் பார்வையை பிரதிபலிக்கும் இலக்கியங்களாகி விட முடியாது. புலம் பெயர்ந்த தமிழர்களின் இயல்பான வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் பதிவுகளாக வெளிவரும் புனை கதைகள் அந்த விடுபட்ட இடங்களை நிரப்பும் வகை செய்ய இயலும். அந்த வகையில் இந்தச் சிறு கதைத் தொகுப்பும் அமைகின்றது.
இந்த சிறுகதைத் தொகுப்பு நூலில் ஓரிரு கதைகள் இந்தியச் சூழல் நிகழ்வுகளின் பிரதிபலிப்புக்களாக அமைந்திருக்கின்றன. பெரும்பாலானவை அமெரிக்க சூழலை கதைக் களமாகக் கொண்டிருக்கின்றன.
ஒரு வகையில் கதைகள் சாதாரண நிகழ்வுகளை பதிவது போல அமைவதால் ஆச்சரியப்பட வைக்கும் முடிவையோ திகைப்புக்குள்ளாக்கும் முடிவையோ தரவில்லை. ஓரிரு கதைகள் வாசித்து முடித்த பின்னரும் கதை மாந்தர்களைப் பற்றியும், கதைக் களத்தைப் பற்றியும் யோசிக்க வைக்கின்றன.
இதில் மிகச் சிறந்த கதைகளாக நான் பார்ப்பது நூலின் முதல் கதையான “சிலை அழுதது” என்ற தலைப்பிலான கதையும் “காசியில் பிடிச்சத விடனும்” என்ற தலைப்பிலான கதையும் எனலாம்.
இரண்டுமே வாசிக்கும் வாசகரின் மனதை வலிக்கச் செய்யும் வகையில் அமைந்திருக்கின்றன.
தேமொழி சின்ன சின்ன நுட்பமான விசயங்களையும் கதையின் ஓட்டத்தில் இணைத்து ஒவ்வொரு விசயங்களையும் வாசகர்கள் மனத்திறையில் காட்சிப்படுத்திப் பார்த்து கதைக்குள் பிரவேசித்து உலா வரும் வகையில் எழுதி இருக்கின்றார்.
மேலும் தொடர்ந்து இவர் சிறுகதைகளைப் படைக்க வேண்டும். ஏனையோர் சாதாரண விசயங்கள் என ஒதுக்கிச் செல்பனவற்றை ஒரு பொருளாக்கி, கதைக்களமாக்கி சாமான்யமான விசயங்களும் கூட முக்கியத்துவம் வாய்ந்தனவாக அமையக்கூடும் என்பதைக் காட்டும் திறனுடன் இப்படைப்பை வழங்கியிருக்கின்றார்.
நூலாசிரியர் முனைவர் தேமொழிக்கு என் பாராட்டுக்கள்!

No comments:

Post a Comment