Friday, May 15, 2015

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா ! - 80

திருப்பனந்தாள் மடத்தின் முதல் குருவாக அமைந்தவர் குமரகுருபர சுவாமிகள். அவர் தாம் பிறந்த நாள் முதல் தமது ஐந்து வயது வரை வாய்பேசமுடியாத நிலையில் இருந்து பின்னர் பேசும் திறனைப் பெற்றவர் என்ற குறிப்புண்டு. அவர் முதன் முதலாக இயற்றிய நூல் கந்தர் கலிவெண்பா எனும் பெயர்கொண்ட நூல்.இந்தக் கந்தர் கலிவெண்பா நூலின் இறுதி வரியில்,  தமக்கு ஆசு கவி முதல் நாற்கவியும் பாடும் வன்மை வேண்டும் என்று குமரகுருபரர் சுவாமிகள் தாம் விரும்பிக் கேட்பதை பாடல் வரிகளில் இணைத்திருக்கின்றார். இதனை வாசிப்போரும் இப்பகுதியைப் பாராயணம் செய்து வழிபாடு செய்யும் போது, இவ்வகை கவித்துவம் தமக்குக் கிட்டும் என நினைப்பது வழக்கம். இதனைக் கருத்தில் கொண்டு, தாமும் தினமும் இச்செய்யுட்களைப் பாராயணம் செய்வதைத் தொடங்கியதை உ.வெ.சா குறிப்பிடுகின்றார். தமிழ் பற்று அதிகம் கொண்டவர் உ.வெ.சா. தமக்கு நிறைந்த தமிழ் ஞானமும் கவித்துவமும் புலமையும் வேண்டும் என்று தாம் செந்திலாண்டவரை துதித்து தன் மனதில் இருந்த ஆசையை வேண்டுதலாக்கி, தமக்கு நல்ல செய்யுள் இயற்றும் திறன் வேண்டி,  தினம் கந்தர் கலிவெண்பா படித்தமை பற்றி அறிகின்றோம். இன்று நம்மில் பலர் இது வேண்டும் அது வேண்டும் என பொருளியல் விருப்பங்களையே மனம் முழுக்க நினைத்து வைத்துக் கொண்டு இறைவனை ஒரு விற்பனைத் தரகர் போல பார்க்கப் பழகி விட்டோம். இதனைச் செய்கிறேன், என் வேண்டுதலை நிறைவேற்றி  விடு, என இறையருளை வியாபாரத்தன்மையுடன் நோக்கும் சிந்தனை மிக விரிவாகப் பரவிவிட்டது என்பது நிதர்சனம். 

தேசிகரின் பாண்டி நாட்டிற்கான பயணம் முற்றுப்பெறாத நிலையிலேயே, தேசிகர் கேட்டுக் கொண்டதற்கிணங்க மகாவைத்தியநாதய்யரையும் அழைத்துக் கொண்டு உ.வெ.சா திருவாவடுதுறை சென்று இருந்து விட்டு சில தினங்களுக்குப் பிறகு மீண்டும் திருப்பெருந்துறைக்கு வரும் வகையில் திருவாவடுதுறைக்குச் திரும்புகின்றார். அங்கு அதற்குள் அப்போது மடத்தின் சின்ன காறுபாறாக (மேலாளர்) இருந்த  குமாரசாமித் தம்பிரான் மடத்தையும் அதன் சுற்றுப் புறத்தையும் மேம்படுத்தி புதுப்பொலிவுடன் திருமடத்தை புதுப்பித்து முடித்திருந்தார். அக்கால கட்டங்களில்,  தான் கந்தர் கலிவெண்பா படித்து, மனத்தில் நினைத்து முடிவெடுத்தது போலவே தினம் ஒரு செய்யுள் இயற்ற வேண்டும் என முடிவு செய்துகொண்டு ஸ்ரீகோமுத்தீசுவரர் பெயரில் தினமும் ஒரு செய்யுளை இயற்றிக் கொண்டு வந்தார் உ.வெ.சா. ஸ்ரீகோமுத்தீசுவரர் ஆலயமே திருவாவடுதுறை மடத்தின் பிரதான ஆலயம். ( குறிப்பு: எனது 2013ம் ஆண்டு பயணத்தின் போது இங்கு ஆலயத்தின் முழு பகுதியையும் பார்த்து புகைப்படம் எடுத்து தமிழ் மரபு அறக்கட்டளை பதிவாக வெளியிட்டுள்ளேன்)

மனதில் ஒரு காரியத்தை செய்ய வேண்டும் என முடிவெடுத்த பின்னர் அதனைச் செயலாற்ற வேண்டியது மிக அவசியம். நம்மில் சிலர் இதனைச் செய்வோம், பின்னர் அதனைச் செய்வோம் என திட்டமிடுகின்றோம். அதில் நம்மில் ஒரு சிலரே செய்ய நினைத்ததை ஒரு ஒழுங்குடன் செய்து படிப்படியாக முழுமையாக செய்ய நினைத்து அடைய விரும்பிய நிலையை அல்லது அடையவேண்டிய இலக்கை அடைகின்றோம். நம்மில் பலர் வேறு சில, பல காரணங்களைக் காட்டி மனதில் நினைத்ததோடு  அக்கனவுகளுக்கு மூடுவிழா செய்து விட்டு அன்றாட விசயங்களில் மூழ்கி விடுவதை வாடிக்கையாகக் கொண்டிருக்கின்றோம். மனதில் சாதிக்க நினைத்ததைச் செய்யமுடியாமல் தவிப்பதற்கு பெரும்பாலோர் வெளியில் நடக்கும் விசயங்களைக் காரணமாகக் காட்டுவதையே விரும்புகின்றோமே தவிர மனத்தின் ஒழுங்கீனத்தை அதனை ஒரு குறைபாடாக பார்க்கும் சிந்தனை போக்கு அற்றவர்களாக இருக்கின்றோம். 

எவர் ஒருவர் தமது இயலாமை என்ன என்பதை அறிகின்றாரோ, அவரால் மட்டுமே அந்த இயலாமையைச் சரி செய்து சீராக்கி நேர்படுத்தி கட்டுக்கோப்புடன்  தனது இலக்கை நோக்கிப் பயணம் செல்ல வழியமைக்க முடியும். அப்படி இல்லாதவர்கள் புறத்தே காரணத்தைத்தேடிக் கொண்டு இலக்குகளை பின்தள்ளிபோடுவதிலேயே கவனமாக இருப்பர். இதனால் வாழ்க்கையில் மேம்பாடு காணமுடியாத நிலையே அமைந்து சராசரி வாழ்க்கையே தொடர்வது அமையும்.

மாணவப் பருவத்தில் இருப்போருக்கு படிப்படியான நல்ல இலக்குகள் தேவை. அந்த இலக்கை அடைய கடமை உணர்வும், அக்கடமை உணர்வை செயலாற்ற ஒழுங்கும் மிகத் தேவை. ஒழுங்கு என்பது சாதிக்க நினைத்த ஒரு காரியத்தை சாதிக்க, நாம் மனதிற்குள்போடும் திட்டங்களை அதன் ஆரம்ப நிலையில் நமக்கிருந்த சிந்தை மாறாமல் அதே ஒழுங்குடன் செயல்படுத்திக் காட்டி இலக்கை அடையும் ஒரு தன்மையாகும். மனதில் நினைத்ததை முடிப்பது என்பது சாதாரண ஒரு விசயமல்ல. பலர், நான் இதனைச் செய்கின்றேன், அதனைச் செய்கின்றேன், எனச் சொல்வார்கள். ஆனால் பேச்சளவிலேயே இந்தச் சாதனை முற்றுப் புள்ளியை எட்டியிருக்கும். கனவு காண்பது மட்டும் போதாது. அக்கனவுகளைச் சாதித்துக் காட்டும் ஒழுங்கும் கடமை உணர்வும் வைராக்கியமும் ஒவ்வொருவருக்கும் அவசியம். செயல்படுத்தாத கனவுகள் காகிதக் கப்பலுக்குச் சமம்!

உ.வெ.சாவின் குறிப்புக்களிலிருந்து தினம் தினம் ஒரு செய்யுள் இயற்ற வேண்டும் என தாம் எடுத்துக் கொண்ட முடிவை மனதில் கொண்டு அவர் அதனை ஒரு ஒழுங்குடன் தொடர்ந்து செய்து வந்தார் என்பதை அறிய முடிகின்றது. இப்படித் தாம் இயற்றும் செய்யுட்களை தாம் குமாரசாமித் தம்பிரானுக்குப் படித்துக் காட்ட, இருவரும் அதன் பொருளை ஆய்ந்து பேசி மகிழ்வார்களாம். வார இறுதி நாட்களில் அங்கு கும்பகோணத்திலிருந்து வரும் தியாகராச செட்டியாரும் இவர்களுடன் இணைந்து கொள்ளும் போது அவர்களுக்குள்ளே தமிழைப் பற்றிய பேச்சாகவே இருக்கும்  என்றும் அறிய முடிகின்ரது. இந்த தியாகராச செட்டியார் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களது தலைமை மாணாக்கர்களில் ஒருவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

தொடரும்..
சுபா

No comments:

Post a Comment