Tuesday, December 19, 2017

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 141

உ.வே.சா அவர்கள் சிவவழிபாட்டினைக் குடும்பப்பின்னனியாகக் கொண்டவர். அவரது ஆசிரியர் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களிடமும் பின்னர் திருவாவடுதுறை ஆதீனகர்த்தரிடமும் அவர் அடிப்படைத் தமிழ்ப் பாடங்களைக் கற்றபோது பெரும்பாலானவை தமிழ் இலக்கண, இலக்கிய நூல்களுடன் சமயம் என வரும் போது சிவ வழிபாட்டினையும் சில வைஷ்ணவ சமய சம்பந்தமான தத்துவ நூல்களையே பாடமாகக் கற்றிருந்தார்.


முதலில் சீவக சிந்தாமணிக் காப்பியத்தை அச்சுப்பதிப்பாக வெளியிட அவர் முயற்சியைத் தொடக்கியபோது சமண மதச்சார்பு கொண்ட அதனைப் புரிந்து கொள்வதில் மிகுந்த சிரமத்தை அவர் எதிர்நோக்கினார் என்பதனையும் பின்னர் பற்பல சமண அறிஞர்களின் நட்பு ஏற்பட அதன் வழி தனது ஐயங்களைப் போக்கிக் கொண்டு சமண சமய அடிப்படைத் தத்துவங்களைப் புரிந்து கொண்டு அவர் சீவக சிந்தாமணி அச்சுப்பதிப்பை வெளியிட்டார் என்பதையும் முந்தைய பதிவு ஒன்றில் குறிப்பிட்டிருந்தேன். அதே போன்ற பிரச்சனையே மணிமேகலை நூல் அச்சுப்பதிப்பு வெளியீட்டிலும் உ.வே.சா அவர்களுக்கு ஏற்பட்டது. தனக்குக் குடும்பப் பின்னனியோ அல்லது கல்விப் பின்னணியோ இல்லாத ஒரு சமயமாக புத்த சமயம் இருந்தது. மணிமேகலை ஒரு பௌத்த காவியம். ஆக அதனைச் சுவடியில் இருப்பது போல வரிக்கு வரி அப்படியே பதிப்பிக்காமல், மணிமேகலை உள்ளடக்கியுள்ள பௌத்த தத்துவங்களைப் புரிந்து கொண்டு அதன் அடிப்படையில் சொற்களின் பொருளையும் செய்யுட்களின் பொருளையும் விவரித்து எழுதி நூலை அவர் தயாரித்திருந்தார். அதில் இலங்கையிலிருந்து அவருக்குப் பௌத்த அறிஞர்கள் சிலரது உதவியும் தமிழகத்திலும் மளூர் ரங்காச்சாரியார் போன்ற அறிஞர்களின் உதவியாலும் பௌத்த சமயப் பின்னணியை அவர் புரிந்து கொள்ள நல்வாய்ப்பு கிட்டியது.


மணிமேகலை செய்யுட்களுக்கு விளக்கம் அளிப்பது போலமே அதன் வரலாற்றைக் கதையாக எழுதி இணைக்க வேண்டும் என்றும் அவர் முடிவு செய்திருந்தார். நூலில் இணைத்து வெளியிடுவதற்காகக் கதைச் சுருக்கம் ஒன்றைத் தயாரித்தார். பொதுவாக அக்காலத்துத் தமிழறிஞர்கள் மத்தியில் பௌத்த மரபுகள் வழக்கில் அருகிக் குன்றிப்போயிருந்தமையால் அவற்றை இந்த நூலின் வழி வெளிப்படுத்த வேண்டும் என்ற சிந்தனையும் அவருக்கு எழுந்தது. இதனைக் கருத்தில் கொண்டு மணிமேகலை அச்சுப்பதிப்பின் குறிப்புரையில் பௌத்த தத்துவங்களை ஆங்காங்கே தேவைப்படும் இடங்களில் இணைத்திருந்தார். ஆனாலும் தான் அறிந்து கொண்ட பௌத்த தத்துவங்களைத் தனியாக எழுதி வெளியிடவேண்டுமென்றும் அவருக்கு ஆர்வம் மேலிட்டது.

தனது கலந்துரையாடல், வாசிப்பு ஆகியவற்றிலிருந்து தொகுத்த எல்லாத் தகவல்களையும் இணைத்து உ.வே.சா ஒரு தொகுப்பாகத் தயார்படுத்திக் கொண்டிருந்தார்.

பௌத்தர்கள் மரபின் அடிப்படையில் புத்தர், பௌத்த தருமம், பௌத்த சங்கம் ஆகிய மூன்றும் மும்மணிகள் எனப் போற்றப்படுவன. தான் இதுவரை தனது மணிமேகலை ஆய்விற்காகச் சேர்த்துத் தொகுத்து வைத்திருந்த தகவல்கள் அனைத்தையும் தொகுத்து பௌத்த மும்மணிகள் பற்றி எழுதத் தொடங்கினார் உ.வே.சா. தான் எழுதி வரும் பகுதிகளை அவ்வப்போது மளூர் ரங்காச்சாரியாரிடம் காண்பித்து அதில் உள்ள கருத்துப் பிழைகளைக் கேட்டறிந்து செப்பம் செய்து வந்தார். இந்தப் பதிவில் வசன நடையுடன் செய்யுட்களையும் இணைத்திருந்தார் உ.வே.சா.

1896ம் ஆண்டு ஜூலை மாதத்தில் அச்சுக்கூடத்தில் தனது முதல் தயாரிப்பினைக் கொடுத்திருந்தார் உ.வே.சா. அதனை அடுத்து இரு ஆண்டுகள் நூலின் பிற பகுதிகளைச் செப்பனிடுவதில் அவர் கவனம் இருந்தது. நூலின் செய்யுட்களோடு மணிமேகலை நூலுக்கான முகவுரை, புத்தரின் வாழ்க்கைச் சரித்திரம், பௌத்த தர்மம், பௌத்த தத்துவங்கள், சங்கம் ஆகியவற்றோடு மணிமேகலையின் வாழ்க்கைக் கதைச் சுருக்கத்தையும் எழுதித் தயாரித்து முடித்திருந்தார். இவையனைத்தையும் முடிப்பதற்கு 2 ஆண்டுகள் ஆகின.

1898ம் ஆண்டு ஜூலை மாதம் மணிமேகலை முழுமையான அச்சுப்பதிப்பாக வெளிவந்தது.

'புத்த சரித்திரம், பெளத்த தருமம், பெளத்த சங்கம்' என்ற நூலும் இந்தக் கடும் உழைப்பால் அதே ஆண்டு வெளிவந்தது

சீத்தலை சாத்தனார் என்ற பௌத்த அறிஞர் எழுதிப் பல காலங்களாகப் பனை ஓலைச்சுவடியிலேயே பிரதி எடுத்துப் பாதுகாத்து வரப்பட்ட தமிழ்க் காவியமான மணிமேகலை தெளிவான விளக்கங்களுடன் அச்சுப்பதிப்பாக தமிழ் உலகில் மலர்ந்தது.

தொடரும்..

சுபா

No comments:

Post a Comment