Saturday, May 18, 2019

மே 18

இலங்கையில் தமிழ் மக்கள் கொல்லப்பட்ட உலகத் துயர நாள் மே 18. ஆண்டுகள் சில கடந்து விட்டன. ஆனாலும் இந்த நாள் உலகத் தமிழ் மக்களுக்கு அளித்திருக்கும் வலி மறக்க முடியாத ஒன்று.

கடந்த ஆண்டு நான் இலங்கை பயணம் சென்றிருந்தபோது யாழ்பாணத்தின் சில பகுதிகளில் பயணித்து பார்வையிட்டேன். மிகப் பெரிய அளவில் இலங்கையில் வாழ்கின்ற தமிழ் மக்களுக்கு வாழ்க்கை மேம்பாடு - அடிப்படை கல்வி, வேலை வாய்ப்பு, பொருளாதார நிலைத்தன்மை ஆகியவை இன்று தேவைப்படுவது கண்கூடு.

பலருக்கு இது காலண்டரில் ஒரு நாள். பலருக்கு இது தன் சொந்தங்களை இழந்து பரிதவித்து நின்ற நாள். அரசியல் செய்வோருக்கோ ஒரு கருத்தியல் அளவில் ஒரு சம்பவம். ஆனால் தமிழ் மக்கள் அனைவரும் நம் சொந்தங்கள் என நினைக்கும் ஒவ்வொருவருக்கும் இது வரலாற்றில் ஒரு சோக தினம்.

இலங்கை தமிழ் மக்கள் நலனுக்காகப் போராடுகின்றோம் என்ற பெயரில் தன் சுயநலத்தை மட்டும் பார்த்துக் கொண்டு தன் சொந்த பொருளாதாரத்தை வளர்த்துக் கொண்ட பல தமிழர்களும் நம்முடன் இருக்கத்தான் செய்கின்றார்கள். இன்றும் கூட தமிழ்ச்சொந்தங்களை ஏனைய இனத்தவர்களைவிட தமிழர்களே பலிகடாவாக்கும் செய்திகளும் அடிக்கடி பார்க்கின்றோம்.

மே 18 - இலங்கையில் போரில் மாண்டவர்களை நினைத்து இன்றைய நாளில் மலர் தூவி விளக்கேற்றிச் செல்வது மட்டுமன்றி, இன்று உயிருடன் வாழ்கின்ற, இலங்கைத் தமிழ் மண்ணில் துன்பப்பட்டு வாடிக்கொண்டிருக்கும் மக்களுக்கு நலனை ஏற்படுத்தும் சிந்தனைகளும் செயல்பாடுகளும் எழவேண்டிய நாள். அந்த வகையில் போரினால் பாதிக்கப்பட்ட எம் தமிழ்ச்சொந்தங்களுக்கு தொடர்ந்து உதவி வரும் நல்லுள்ளங்களுக்கு எனது வணக்கங்களும் வாழ்த்துகளும்!
-சுபா

Friday, May 17, 2019

விதவை திருமண் சட்டம்

நண்பர் மணி மணிவண்ணன் அனுப்பியிருந்த ஒரு கட்டுரையின் தொடர்பில் இந்தப் பதிவு. https://www.livehistoryindia.com/snapshort-histories/2017/07/26/marking-a-milestone---the-hindu-remarriage-act

26.ஜூலை1856 - இந்து விதவை மறுமண சட்டம் (Hindu Widows Remarriage Act) கொண்டுவரப்பட்ட நாள். இதற்கு பின்னனியில் இருந்து இச்சட்டம் வரக் காரணமாயிருந்து செயல்படுத்தியவர் கல்வியாளர் ஈஷ்வர் சந்த்ர பாண்டியோபத்யாய (வித்யாசாகர்). 19ம் நூற்றாண்டு கால பெண்களின் நிலை, அதிலும் விதவைப் பெண்களின் நிலை துயரமானது. சொத்துரிமை இல்லாத, சமூகத்திலும் ஒதுக்கப்பட்ட நிலையில் பெண்களின் முழு உலகமும் வீட்டிற்குள் அடைபட்டுக் கிடைந்த நிலை. அதிலும் கணவனை இழந்து விட்டால் அது நரக வாழ்க்கை தான்.

கல்வியாளர் வித்யாசாகர் தனது வாழ்க்கைச் சூழலில் கண்ட பெண்களின் நிலையைக் கருத்தில் கொண்டு விதவையானவர்களும் மறுமணம் செய்து கொண்டு வாழ சட்டம் வழிவகுக்க வேண்டும் எனப் போராடினார்.

1855ம் ஆண்டு அரசுக்கு விதவைப் பெண்களின் மறுமணத்தை சட்டப்படி அங்கீகரிக்கச்செய்யும் சட்டத்தை உருவாக்கக் கோரிக்கை வைத்தார். அப்போதைய மன்னர் மாத்தாப்ஜான் பகதூரும் (1832-1879) இக்கோரிக்கைக்கு ஆதரவுக் கரம் நீட்டினார்.

ஆனால் இதனை எதிர்த்து 30,000 கையெழுத்துக்களுடன் எதிர் பெட்டிஷன் அனுப்பியிருக்கின்றார்கள். விதவையானவர்கள் அப்படியே வீட்டுக்குள் முடங்கி இருந்து சாகவேண்டும் என்பது இவர்களது எதிர்பார்ப்பு. ஆனால் எல்லா எதிர்ப்புக்களையும் கடந்து இந்த கோரிக்கை சட்டமாகியது.

விதவைத் திருமணத்தைச் சட்டமாக்கினாலும் கூட சமூகத்தில் கணவனை இழந்த பெண்கள் மறு திருமணம் செய்து கொள்வது ஒரு பாவச் செயலாகவே கருதப்பட்டது. பல ஆண்டுகள் பல போராட்டங்களுக்குப் பின்னர் இன்று சமூகத்தில் பெண்கள் மறுமணம் என்பது சற்றே இயல்பான ஒன்றாக இன்று மாற்றம் கண்டுள்ளது.

தமிழ்ச்சூழலில் பெரியாரின் முயற்சிகள் சமூகத்தில் பெண்களின் சுயமரியாதை, வாழ்க்கை மேம்பாடு, விதவைப் பெண் திருமணம் ஆகியவற்றில் ஆரோக்கியமான தாக்கத்தை ஏற்படுத்தியதை நாம் அறிவோம்.

இந்தியச் சூழலில் பெண்களின் வாழ்க்கை மேம்பாட்டில் குறிப்பிடத்தக்க நல்ல மாற்றத்தை ஏற்படுத்தியவர்களை நினைவு கூர்வதும் அதனை அறிந்திருப்பதும் தேவையே.
-சுபா

Tuesday, May 7, 2019

அட்சய திருதியை

சென்ற ஆண்டு ஏப்ரல் 18 நான் வெளியிட்ட பதிவு -

அட்சய திருதியை என்பதன் பொருள் அறியாமல் நகைக்கடைகளைத் தேடி ஓடும் நண்பர்கள் கொஞ்சம் வாசித்துப் பார்க்க இக்கட்டுரையைப் பகிர்கிறேன். நகை வாங்க விரும்புபவர்கள் .. ஆசைப்பட்டோம், தேவை இருக்கின்றது,.. என்றால் வாங்குங்கள்.

எதற்காக இல்லாத ஒரு பொய்யான கதையை வணிக உத்திக்காக வளர்த்து, ஒரு பொய்யை உண்மையாக்கும் முயற்சி ??

நம் மக்களும் எதையும் வாசிப்பதுமில்லை.. காரணம் கேட்பதுமில்லை..
தங்க வைர நகைகள், காசு.. என்று சொன்னால் ஆசைப்பட மட்டும் அறிந்திருக்கின்றனர். காரணம் கேட்க விரும்புவதில்லை. பண்டிகைகள், சடங்குகளின் பொருளறிந்து ஒவ்வொரு செயலையும் செய்வோமே!!
-சுபா

//அட்சயதிருதியின் நோக்கமே பிறருக்கு தானங்கள் கொடுக்கவேண்டும் என்பதுதான். குறிப்பாக சொல்ல வேண்டுமானால் இல்லறத்தானின் (சிராவகத்தான்) கடமைகளில் ஒன்றான துறவறத்தாரை ஆகார தானத்தால் தாங்குதல் ஆன “விருந்தோம்பலை”க் குறிப்பதாகிறது. ஆனால், அதுவே பின்னாளில் நோக்கம் மாறி தேவர்களால் பொழியப்பட்ட விலையுயர்ந்த நகைகளை மக்கள் தங்கள் வீடுகளுக்கு அள்ளி சென்றதை எடுத்துக்கொண்டு விட்டார்கள். அதன் அடிப்படையில் அன்றைய தினம் நகை வாங்கினால் செல்வம் பெருகும் என்ற நினைப்பில் செயல்பட தொடங்கிவிட்டார்கள்.பண்டிகைகளின் உண்மையான நோக்கத்தை அறிந்து, ஏழைகளுக்கு தம்மால் முடிந்ததைக் கொடுத்து உதவுங்கள். அதனால் அவர்கள் மனம் குளிர்ந்தால், தன்னாலேயே நம் செல்வம் பெருகும். அப்படி முடியாதவர்கள் ஏழை சிறுவர்களுக்கு கரும்புச் சாற்றினையாவது கொடுத்து “அட்சயதிருதியை” கொண்டாடுங்கள்.//

Saturday, May 4, 2019

சூளவம்சம் - நூல் வாசிப்பு - 7

*பகுதி 7 - தொடர்கின்றது.*

சூளவம்சம் - நூல் வாசிப்பு
நூலாசிரியர் - முனைவர்.க.குணராசா

பதிப்பு - கமலம் பதிப்பகம், யாழ்ப்பாணம்



இராஜசிங்கனின் ஆட்சிக்காலத்தில் சூரிய வம்சத்தைச் சார்ந்த ஒரு இளவரசன் கொழும்புக்கு வந்தான் என சூளவம்சம் குறிப்பிடுகிறது. அவன் எந்த நாட்டைச் சேர்ந்தவன் என்ற குறிப்பு ஏதுமில்லை. அவன் சூரியவம்சத்தைச் சார்ந்தவன் என்பது மாத்திரம் இங்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது. அவன் கொழும்பில் தங்காமல் இந்தியாவின் கோவாவுக்குச் சென்று அங்கு தங்கியிருந்து விட்டு பின் மீண்டும் இலங்கைக்கு வந்தான் என்று சூளவம்சம் குறிப்பிடுகின்றது. இராஜசிங்கன் இறந்ததும் இந்த இளவரசன் ஸ்ரீ வர்த்தனா நகரத்தில் விமலதர்மசூரியன் என்ற அரச பெயருடன் அரியணை ஏறினான். கண்டி நகரைச் சுற்றி பெரிய உயரமான மதில்களை அமைத்து 18 கோபுரங்களையும் அமைத்து பெரிய அரண்மனை அமைத்து அதில் அவன் வசித்து வந்தான். அதுமட்டுமன்றி லபுஜகம (டெலிகம) என்ற கிராமத்தில் இருந்த புனித தந்ததாதுவைத் தனது இருப்பிடத்திற்கு வரவழைத்து தனது அரண்மனைக்குப்பக்கத்தில் ஒரு கோயிலை அமைத்து அங்கே புனித தந்ததாதுவை வைத்து பாதுகாத்தான் என சூளவம்சம் சொல்கிறது..

அவனுக்கு பின்னர் செனரத்ன என்பவன் அரசனாக முடி சூடிக்கொண்டான். அந்த சமயத்தில்தான் போர்த்துக்கீசியர்கள் இலங்கைக்கு வந்திருக்கின்றனர். சூளவம்சம் சரியாக எந்த ஆண்டு என்பதை குறிப்பிடவில்லை. போர்த்துக்கீசியர்கள் பற்றி சொல்லும்போது சக்தி வாய்ந்த சில வர்த்தகர்கள் என்று குறிப்பிடுகின்றது. இந்த பரங்கியர்கள் குரூரமான மனம் கொண்டவர்கள் என்றும், சிங்கள மக்களுக்குத் தொல்லை தருபவர்கள் என்றும், பெண்களின் கற்பை சூறையாடுபவர்கள் என்றும், சிங்கள மக்களின் வீடுகளைக் கொள்ளையிடுபவர்களாகவும், கிராமங்களை அழிப்பவர்களாகவும் விளங்கியதாக சூளவம்சம் கூறுகின்றது. இவர்கள் சில பாதுகாப்பான கோட்டைகளை ஆங்காங்கு அமைத்துக் கொண்டனர் என்ற செய்தியும் இடம் பெறுகின்றது.

செனரத்ன பரங்கியர் நாசமாக்கிவிடாதவாறு புனித தந்ததாதுவைக் காடுகளில் மிக பத்திரமாக பாதுகாத்து வந்தான். அவன் தனக்கும் தனது தமையனின் மகன்களுக்கும் இலங்கை ராஜ்யத்தை எவ்வாறு பங்கிட வேண்டும் என்று மூன்று பனை ஓலைகளில் எழுதி தந்த பேழைக்குள் வைத்தான். மலைநாட்டின் பொறுப்பை தன் மகனுக்கு அளித்து இலங்கையின் அரசனாக முடி சூட்டி விட்டு இறந்தான்.

அவனுக்குப் பின்னர் மூன்று இளவரசர்களும் பரங்கியர்களுக்கு எதிராக போரிட்டனர். மூன்றாவது இளவரசனான ராஜசிங்கன் இலங்கை முழுவதற்கும் மன்னனாக முடிசூட்டிக் கொண்டான். இராஜசிங்கனை கொல்வதற்குப் பல முயற்சிகள் நடைபெற்றன. போர்த்துகீசியர்களை எதிர்த்து தொடர்ச்சியாக ராஜசிங்கன் போர் நிகழ்த்திக் கொண்டே இருக்க வேண்டிய சூழல் இருந்தது. அந்தச் சமயத்தில் கரையோரத்தில் டச்சுக்காரர்கள் வந்து தங்கி இருப்பதை அவன் கேள்விப்பட்டான். தனது மந்திரிகள் இருவரை டச்சுக்காரர்களிடம் தூது அனுப்பி ஏராளமான கப்பலுடன் தன் நாட்டிற்கு வந்து தன்னைப் பாதுகாக்கும் படி கேட்டுக் கொண்டான். போர்த்துகீசியர்களை டச்சுக்காரர்கள் எதிர்க்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டான். இலங்கையை எதிரிகளிடம் இருந்து காப்பாற்றும் பொறுப்பை ஒல்லாந்தரிடம், அதாவது டச்சுக்காரர்களிடம் ஒப்படைத்தான். பின்னர் மதுரையில் இருந்து இளவரசி ஒருத்தியை வரவழைத்து அவளை பட்டத்து ராணியாக ஆக்கிக் கொண்டான். அதன் பின்னர் 52 ஆண்டுகள் சிறப்பாக ஆட்சி செய்தான் என்று சூளவம்சம் குறிப்பிடுகிறது.

அவனுக்குப் பின்னர் ராஜசிங்கனின் மகனான விமலதர்மசூரியன் ஆட்சியைக் கையில் எடுத்தான். அவனும் மதுரையில் இருந்து ஒரு அரசகுமாரியை வரவழைத்து திருமணம் செய்து கொண்டு பட்டத்துராணி ஆக்கிக் கொண்டான். இவன் மூன்று அடுக்கில் ஒரு கோயிலைக் கட்டி (தலதா மாளிகை) அதில் தந்த தாதுவைப் பிரதிஷ்டை செய்தான். ஆண்டுதோறும் புனித தந்த தாதுவிற்கு விழா எடுத்தான். பிக்குகளைப் பராமரித்தான். இவன் 22 ஆண்டுகள் சிறப்பாக ஆட்சி புரிந்தான் என்று சூளவம்சம் குறிப்பிடுகிறது. இதில் குறிப்பிடப்படும் தலதா மாளிகையே இன்று கண்டியில் நாம் காணும் புனித மாளிகை. இங்குதான் கௌதம புத்தரின் பல் இருப்பதாக குறிப்பிடப்படுகின்றது. ஆக, இது கட்டப்பட்ட காலத்தை நோக்கும் போது அனேகமாக இந்த மன்னனின் ஆட்சி கி.பி 16ம் நூற்றாண்டு என உறுதியாகக் கூறலாம்.

அதற்குப் பின்னர் அவனது மகனான வீர பராக்கிரம நரேந்திர சிங்கன் ஆட்சிபீடம் ஏறினான். அவனும் மதுரையிலிருந்து இளவரசிகளை வரவேற்று மணந்து கொண்டான். இவனும் பௌத்த நெறிகளைப் போற்றி பாதுகாத்தான். தங்க தாது இருந்த மாளிகையின் சுவர்களில் 32 ஜாதக கதைகளையும் ஓவியமாக வரைய வைத்தான்.

விமலதர்ம சூரியனுக்குப் பின்னர் அவனது இளைய சகோதரன் ஸ்ரீ விஜய ராஜசிங்கன் அரசனானான். அவனும் மதுரையிலிருந்து அரச குலப் பெண் ஒருத்தியை அழைத்து வந்து தனது பட்டத்து ராணியாக ஆக்கிக்கொண்டான். இவனும் பௌத்த சமயத்தைச் சிறப்புடன் பேணிவந்தான். இவன் மனைவியைப் பற்றி சொல்லும்போது ”பிறப்பிலிருந்து பொய்யான சமயத்தை பின்பற்றி வந்த மகாராணியும் நேர்மையான சமயத்திற்கு மாறினார்” என்று குறிப்பிடுகிறது. அதாவது, அனேகமாக சைவ சமயத்தில் மகாராணி இருந்திருக்க வேண்டும். அதிலிருந்து பௌத்த சமயத்திற்கு மாறினார் என்பதை சூளவம்சம் இவ்வாறு குறிப்பிடுவதாக எடுத்துக் கொள்ளலாம்.

அந்தச் சமயத்தில் பரங்கியர்கள், அதாவது போர்த்துக்கீசியர்கள், இலங்கையின் பல பகுதிகளில் தொடர்ந்து வாழ்ந்து வந்திருக்கின்றனர். அதுமட்டுமன்றி அவர்கள் பணத்தாசைக் காட்டி பொதுமக்களைத் தங்களது சமயத்திற்கு மாற்றினர் என்றும் சூளவம்சம் குறிப்பிடுகிறது. அதாவது, போர்த்துகீசியர்கள் கத்தோலிக்க கிறித்தவ சமயத்திற்கு இலங்கை மக்களை மாற்றினார்கள் என்பதை சூளவம்சம் இவ்வாறு குறிப்பிடுவதாக எடுத்துக்கொள்ளலாம்.

ஸ்ரீ விஜய ராஜசிங்கன் இறந்த பிறகு அவனது மனைவியின் சகோதரன் கீர்த்தி ஸ்ரீ ராஜசிங்கன் அரசனானான்.. அந்தக் காலகட்டத்தில் டச்சுக்காரர்களும் தங்களது கிருத்துவ மதத்தை இலங்கை மக்களிடையே பரப்பும் முயற்சிகளை மேற்கொண்டதாகவும் தெரிகின்றது. அதனால் டச்சுக்காரர்களை அடக்கி வைக்க வேண்டுமென்று அவன் முயற்சி மேற்கொண்டான். அவனது படையினர் டச்சுக்காரர்களின் கோட்டைகளையும் வீடுகளையும் கைப்பற்றி அழித்தனர். ஆனால் டச்சுக்காரர்கள் இதற்கு சளைக்காமல் தமது போர் வீரர்களுடன் மலாய்க்காரர்களைச் சேர்த்துக்கொண்டு மன்னனின் படைகளைத் தாக்கினர். மன்னன் தன் மனைவி, இளவரசர்கள், ஏராளமான சொத்துக்கள் ஆகியவற்றுடன் காட்டுப்பகுதியில் ஒளிந்திருந்தான். பிறகு டச்சுக்காரர்களுடன் சமாதானம் செய்துகொண்டு மீண்டும் ஆட்சியை நடத்தினான். தந்த தாதுவைக் கோயிலில் வைத்து பௌத்த சமயத்தை பாதுகாத்தான். ஒல்லாந்தர் மன்னனுடன் அவன் சமாதானம் செய்து கொண்டான்.

கீர்த்தி ஸ்ரீ ராஜசிங்கனின் மரணத்திற்குப் பிறகு அவனது இளைய சகோதரனான ராஜாதி ராஜ சிங்கன் அரசனானான். அவன் காலத்தில் தாய்லாந்திலிருந்து உபாலி என்ற தேரரின் தலைமையில் இலங்கைக்கு பிக்குகள் சிறிவர்த்தன நகருக்கு அருகில் வந்து தங்கி இருந்ததாக சூளவம்சம் கூறுகின்றது. இந்த மன்னனுக்குப் பிறகு அவனது சகோதரியின் மகனான ஸ்ரீ விக்ரம ராஜ சிங்கன் என்பவன் அரசன் ஆனான்..அவனே சூளவம்சத்தின் வரலாறு கூறும் மன்னர்கள் பட்டியலில் இறுதியானவன். அவன் கெட்ட சிந்தனைகள் கொண்டவர்களோடு நட்புறவு பாராட்டினான் என்றும், அமைச்சர்கள் பலரையும் சிரச்சேதம் செய்தான் என்றும், இரக்கமில்லாத கொள்ளையனாக இவன் இயங்கினான் என்றும், மக்கள் இதனால் பாடுபட்டனர் என்றும் சூளவம்சம் குறிப்பிடுகிறது. இதன் காரணமாக கொழும்பு மக்களால் சிறைப்பிடிக்கப்பட்டு இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட்டான் என்றும், அதன் பின்னர் இலங்கை ராஜ்யம் ஆங்கிலேயர்களால் அபகரித்துக் கொள்ளப்பட்டது என்றும் சூளவம்சம் கூறி நிறைவு செய்கிறது.

சூளவம்சம் கூறும் செய்திகள் வரலாற்று ரீதியாக பல தகவல்களை விவரிப்பதாக இருந்தாலும், ஆங்காங்கே செய்திகள் திரிக்கப்பட்டும், தகவல்களை மிகைப்படுத்தி சார்புத்தன்மையுடன் எழுதப்பட்டும் இருப்பதாகவே சிந்திக்கத் தோன்றுகிறது. உதாரணமாக, இறுதியில் ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன் டச்சுக்காரர்களால் இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட்டான் என்ற செய்தி சூளவம்சத்தில் இல்லை. மாறாக மக்கள் நாடு கடத்தினர் என்று செய்தி குறிப்பிடப்படுகிறது. ஆக சூளவம்சம் கூறும் வரலாற்றுச் செய்திகள் பலவற்றை ஆராயும்போது, சமகாலத்து ஆவணங்கள் பலவற்றையும் அதனோடு ஒப்பிட்டுப் பார்த்து காலங்களை நிர்ணயிப்பதோடு மட்டுமல்லாது, செய்திகளில் உள்ள நம்பகத்தன்மையையும் சோதிக்க வேண்டியது அவசியமாகின்றது. எதுவாகினும், இன்று நமக்கு கிடைக்கின்ற முக்கிய இலங்கை பற்றிய ஆவணங்களில் சூளவம்சம் மிகமுக்கியமானதொரு வரலாற்றுக் களஞ்சியம் என்பதில் மறுப்பு ஏதும் இல்லை..

உலகெங்கிலும் நிகழ்ந்த பண்டைய அரசுகளின் வரலாற்றை வாசிக்கும் போது இரத்தக் கறை படிந்த அரச வாழ்க்கையின் பிரதிபலிப்பாகவே மன்னர்களின் வரலாறு அமைந்திருப்பதை காண்கின்றோம். துரோகம், கடும் தண்டனைகள், மனிதாபிமானமற்ற செயற்பாடுகள், மக்கள் அரசுகளால் பகடைக்காய்களாகப் பயன்படுத்தப்பட்ட சூழல் என்றே வரலாறு அமைந்திருப்பதைக் காண்கின்றோம். இவை அனைத்தும் பெரும்பாலும் மதங்களின் பெயர்களாலேயே மன்னர்களால் முன்னெடுக்கப்பட்டிருப்பதையும் நாம் ஒதுக்கி விடமுடியாது. இலங்கையின் வரலாறும் இதற்கு விதிவிலக்கல்ல.

இலங்கையின் பௌத்தம் வைதீக சாத்திரத்தின் ஒன்றாகிய மனு நீதியை உள்வாங்கிக் கொண்ட பௌத்தமாகவே அரசர்களால் முன்னெடுக்கப்பட்டிருப்பதை சூளவம்சம் தெளிவுடன் வெளிப்படுத்துகின்றது.

இலங்கை இனக்குழுக்களிடையே தொடர்ச்சியான சண்டைகளையும், போர்களையும், கொடூரமான வாழ்க்கை நிலையையும் சந்தித்து வந்த நாடு. துரதிஷ்டவசமாக அது இந்த நூற்றாண்டிலும் தொடர்கின்றது!

(புகைப்படக் குறிப்பு - ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கனின் மனைவி. (கி.பி. 1798 - 1815) - வேங்கட ரங்கஜம்மாள் தேவி பாண்டிய மன்னர் பரம்பரை சார்ந்த தெலுங்கு இளவரசி, கடந்த அக்ட் நான் யாழ்ப்பாணத்தில் யாழ் அருங்காட்சியகத்தில் பதிந்த புகைப்படம்)

முற்றும்
சுபா  

Thursday, May 2, 2019

சூளவம்சம் - நூல் வாசிப்பு - 6

*பகுதி 6  - தொடர்கின்றது.* 
 

சூளவம்சம் - நூல் வாசிப்பு
நூலாசிரியர் - முனைவர்.க.குணராசா

பதிப்பு - கமலம் பதிப்பகம், யாழ்ப்பாணம்



இலங்கையின் மன்னர்கள் வரலாற்றில் மகா பராக்கிரமபாகுவின் காலம் பொற்காலமாகும். நாட்டின் இயற்கை வளம் மேம்பட்டதுடன் விவசாயம் அபரிதமான வளர்ச்சியை இம்மன்னனின் காலத்தில் கண்டது. இலங்கையின் செல்வச்செழிப்பும் கலை வளர்ச்சியும் இம்மன்னனின் காலத்தில்தான் விரிவாக்கம் கண்டது அத்துடன் இலங்கையிலிருந்து கிழக்காசிய நாடுகள் பலவற்றிற்கும் பௌத்த பிக்குகள் பலர் சென்று பௌத்தம் வளர்த்தனர்.   கிழக்காசிய நாடுகளில் இலங்கையைச் சார்ந்த பௌத்த பிக்குகளின் தாக்கம் என்பது இன்றளவும் மிகத் தெளிவாக நாம் உணரக் கூடியதாக இருக்கின்றது என்பதை மறுப்பதற்கில்லை.

மகா பராக்கிரமபாகுவின் மறைவுக்குப் பின்னர் ப அரசர்கள்  இலங்கையின் ஆட்சியைத் தொடர்ந்தனர். நிலையான ஆட்சி என்பது தொடரவில்லை. அந்தக் காலகட்டத்தில், கலிங்க தேசத்தை, அதாவது இன்றைய ஒடிசா மாநிலத்திலிருந்து  கொடூர மனம் கொண்ட இளவரசன் மாகன் என்பவன் 20,000  போர் வீரர்களுடன் இலங்கைக்கு வந்து போரிட்டு இலங்கையைக் கைப்பற்றிக் கொண்டான். இவன் புத்தவிகாரைகளை சேதப்படுத்தினான் என்றும் இந்த கலிங்க மன்னன் தமிழன் என்றும் சூளவம்சம் குறிப்பிடுகிறது.

இந்தக் கலிங்க தமிழ் அரசனான மாகன்,  அந்த சமயம் இலங்கையை ஆட்சி செய்து கொண்டிருந்த பராக்கிரம பாண்டியன் என்ற மன்னனைக் கைது செய்து, அவனது கண்களைப் பிடுங்கி,  சொத்துக்களை அபகரித்து கொள்ளையிட்டான் என்றும் ,அதன் பின்னர் அவன் புலத்தி நகரில் முடி சூடிக் கொண்டு 21 வருடங்கள் கொடுங்கோலாட்சி நடத்தினான் என்று சூளவம்சம் குறிப்பிடுகிறது.

அவனது ஆட்சியின்போது சிங்கள அரசர்கள் சிலர் ஆங்காங்கே சிறிய சிற்றரசுகளை உருவாக்கிக் கொண்டிருந்தார்கள். அந்த வகையில் ஸ்ரீ சங்கபோதி, அதற்குப் பின்னர் பராக்கிரமபாகு, என ஆட்சி  தொடர்ந்தது. 

அதற்குப் பின்னர் எல்லாளன் என்ற தமிழ் மன்னன் இலங்கையை ஆண்டான் என்றும் சூவம்சம் குறிப்பிடுகின்றது எல்லாளன் பற்றி சூளவம்சம் விரிவாக வேறு எந்தத் தகவலையும் கொடுக்கவில்லை. துட்டகாமினி என்ற   பெயர் கொண்ட மன்னன்  எல்லாளனுடன் போரிட்டு இலங்கையைக் கைப்பற்றினான். அதற்குப் பிறகு வட்டகாமினி என்பவன் நாட்டை கைப்பற்றி ஆண்டான். ஆனால் பின்னர் ஐந்து தமிழ் ஆக்கிரமிப்பாளர்களிடம் அவன் நாட்டை பறிகொடுத்தான் என்றும் சூளவம்சம் குறிப்பிடுகிறது. அதன் பின்னர் தாதுசேனன் என்பவன் நாட்டைக் கைப்பற்றி சில காலம் ஆண்டுவந்தான். அந்தச் சமயம் ஆறு தமிழ் மன்னர்கள் போரிட்டு நாட்டை மீண்டும் பிடித்துக் கொண்டார்கள். அதன் பின்னர் அவர்களை விரட்டிவிட்டு விஜயபாகு என்பவன் நாட்டை ஆட்சி செய்தான்.

அதன்பின்னர் மாகன், ஜயவாகு என்ற இரண்டு தமிழ் மன்னர்களின் தலைமையில் 40 ஆயிரம் தமிழ் வீரர்களும் கேரள வீரர்களும் இருந்து மன்னர் ஆட்சி இலங்கையில் தொடர்ந்தது. இந்த மன்னர்கள் ஆட்சியில்   நாட்டின் பல இடங்களில் மேம்பாடுகளை உருவாக்கினர் என்றும் சூளவம்சம் செல்கிறது
 
ஆச்சரியமாக இன்னொரு செய்தியையும் சூளவம்சம் பதிவு செய்கிறது. 

இக்காலகட்டத்தில்  இரண்டாம் பராக்கிரமபாகு என்பவன் போரிட்டு ஆட்சியைக் கைப்பற்றிக் கொண்டான். இந்தபராக்கிரமபாகுவின் 11வது ஆண்டு காலத்தில் மலாயா நாட்டைச் சார்ந்த சந்திரபானு என்ற ஒரு இளவரசன் இலங்கை மீது படையெடுத்தான் என்றும் நாங்களும் பௌத்தர்கள் என அறிவித்து பேரிட்டான் என்றும், ஆனால் அவன் பராக்கிரமபாகுவின் வீரர்களால் துரத்தி அடிக்கப்பட்டான் என்றும் சூளவம்சம் குறிப்பிடுகிறது. இது ஏறக்குறைய கிபி 12ஆம் நூற்றாண்டு கால கட்டமாக இருக்கலாம். தோற்று ஓடிப்போன சந்திரபானு சும்மா இருக்கவில்லை.  சந்திரபானு மலாய் வீரர்களையும் பாண்டிய சோழ தமிழ் போர் வீரர்களையும் சேர்த்துக் கொண்டு மீண்டும் இலங்கை மீது போர் தொடுத்தான். ஆனால் வெற்றி பெற முடியாமல் அவன் துரத்தி அடிக்கப்பட்டான். பராக்கிரமபாகுவின் ஆட்சி தொடர்ந்தது. இவன் 35 வருடங்கள் ஆட்சி நடத்தினான். அதன்பிறகு அவது மூத்த மகன் விஜயபாகு அரியணை ஏறினான்.

விஜயபாகுவின் காலத்தில் இந்தியாவில் இருந்து பாண்டிய மன்னன் ஜடாவர்மன் குலசேகர பாண்டியன் தனது மந்திரியையும்   தளபதிகளையும் அனுப்பி இலங்கையின் மீது போர் தொடுத்தான். பாண்டியனின் படைகள் இலங்கையின் பல பகுதிகளைப் பாழாக்கி   புனித தந்ததாதுவையும் ஏராளமான சொத்துக்களையும் அபகரித்துக் கொண்டு தமிழ் நாடு திரும்பியது.

சில ஆண்டுகளுக்குப் பிறகு விஜயபாகுவின் மகன் பராக்கிரமபாகு பாண்டிய நாடு சென்று மன்னனிடம் பேசி புனித சின்னங்களை இலங்கைக்கு மீட்டு வந்தான். அவற்றைப் பொலநருவ நகரில் புனித தந்ததாது கோயிலில் பிரதிஷ்டை செய்தான். சில ஆண்டுகள் ஆட்சி செய்து பின் இறந்தான். அதன் பின்னர் மீண்டும் அடுத்தடுத்து சில மன்னர்கள் ஆட்சியில் இருந்தனர்.

இலங்கையை ஆண்ட மன்னர்களில் பெரும்பாலோர் பௌத்த மதத்தை சார்ந்தவர்களே. ஒரு சில சிங்கள மன்னர்கள் மட்டுமே சைவ நெறியையும் ஆதரித்திருக்கின்றார்கள். அதற்கு உதாரணமாக ராஜசிங்கன் என்பவனைப் பற்றி குறிப்பிடலாம். இவன் மாயாதுன்னை என்பவனின் மகன். ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்றஎண்ணத்துடன் தனது தந்தையைக் கொன்று ராஜ்யத்தைக் கைப்பற்றிக் கொண்டான். ஆனால் தன் தந்தையைக் கொலை செய்து விட்டோமே என்று பயந்து, அந்த பாவத்தை எப்படி போக்குவது என்று பௌத்த முனிவர்களிடம் கேட்க, அவர்கள் கூறிய எந்த பரிகாரமும் அவனுக்குத் திருப்தி அளிக்காத நிலையில், சிவனை வழிபடுகின்ற சைவர்களிடம் பரிகாரம் கேட்க, அவர்கள் சொன்ன பரிகாரம் அவனுக்கு மனதிற்குப் பிடிக்கவே,   அவன் சைவ சமயத்தை ஏற்றுக் கொண்டான். உடல் முழுவதும் திருநீறு பூசி சைவனாகி சிவ வழிபாடு செய்யத் தொடங்கினான்.  அதன் பின்னர் பிக்குகள் சிலரைக் கொன்றான். புனிதமான பௌத்த நூல்கள் பலவற்றை எரியூட்டினான்; பௌத்த விகாரைகளை இடித்துத் தள்ளினான்;  பௌத்த பிக்குகள் பலர் பயத்தினால் தங்கள் சின்னங்களைக்  கலைத்து விட்டு பாதுகாப்பான இடங்களுக்கு ஓடிச் சென்றனர் பழி பாவத்துக்கு அஞ்சாத ராஜசிங்கன் பௌத்த மதத்தை இவ்வாறு சீறழித்தான் என்று சூளவம்சம் குறிப்பிடுகின்றது.


தொடரும்..
சுபா