Saturday, May 18, 2019

மே 18

இலங்கையில் தமிழ் மக்கள் கொல்லப்பட்ட உலகத் துயர நாள் மே 18. ஆண்டுகள் சில கடந்து விட்டன. ஆனாலும் இந்த நாள் உலகத் தமிழ் மக்களுக்கு அளித்திருக்கும் வலி மறக்க முடியாத ஒன்று.

கடந்த ஆண்டு நான் இலங்கை பயணம் சென்றிருந்தபோது யாழ்பாணத்தின் சில பகுதிகளில் பயணித்து பார்வையிட்டேன். மிகப் பெரிய அளவில் இலங்கையில் வாழ்கின்ற தமிழ் மக்களுக்கு வாழ்க்கை மேம்பாடு - அடிப்படை கல்வி, வேலை வாய்ப்பு, பொருளாதார நிலைத்தன்மை ஆகியவை இன்று தேவைப்படுவது கண்கூடு.

பலருக்கு இது காலண்டரில் ஒரு நாள். பலருக்கு இது தன் சொந்தங்களை இழந்து பரிதவித்து நின்ற நாள். அரசியல் செய்வோருக்கோ ஒரு கருத்தியல் அளவில் ஒரு சம்பவம். ஆனால் தமிழ் மக்கள் அனைவரும் நம் சொந்தங்கள் என நினைக்கும் ஒவ்வொருவருக்கும் இது வரலாற்றில் ஒரு சோக தினம்.

இலங்கை தமிழ் மக்கள் நலனுக்காகப் போராடுகின்றோம் என்ற பெயரில் தன் சுயநலத்தை மட்டும் பார்த்துக் கொண்டு தன் சொந்த பொருளாதாரத்தை வளர்த்துக் கொண்ட பல தமிழர்களும் நம்முடன் இருக்கத்தான் செய்கின்றார்கள். இன்றும் கூட தமிழ்ச்சொந்தங்களை ஏனைய இனத்தவர்களைவிட தமிழர்களே பலிகடாவாக்கும் செய்திகளும் அடிக்கடி பார்க்கின்றோம்.

மே 18 - இலங்கையில் போரில் மாண்டவர்களை நினைத்து இன்றைய நாளில் மலர் தூவி விளக்கேற்றிச் செல்வது மட்டுமன்றி, இன்று உயிருடன் வாழ்கின்ற, இலங்கைத் தமிழ் மண்ணில் துன்பப்பட்டு வாடிக்கொண்டிருக்கும் மக்களுக்கு நலனை ஏற்படுத்தும் சிந்தனைகளும் செயல்பாடுகளும் எழவேண்டிய நாள். அந்த வகையில் போரினால் பாதிக்கப்பட்ட எம் தமிழ்ச்சொந்தங்களுக்கு தொடர்ந்து உதவி வரும் நல்லுள்ளங்களுக்கு எனது வணக்கங்களும் வாழ்த்துகளும்!
-சுபா

No comments:

Post a Comment