Thursday, April 23, 2015

சாக்ரடீஸ் - ப்ளேட்டோவின் அரசியல் வழி.....! - 5

வாசிப்பின் பதிவு 5

தெய்வங்கள் பொய் சொல்வார்கள்,  அழுவார்கள், ஏமாற்று வேலை செய்வார்கள்,  அதீத கோபப்படுவார்கள் ஏமாந்து போவார்கள், தண்டனைக்கு உட்படுவார்கள்... இப்படி சில சம்பவங்கள் வழி வழியாக நாம் கேட்கின்ற சில கதைகளிலும் புராணங்களிலும் இடம்பெறுபவை தாம். இப்படி தெய்வங்களின் தெய்வீகத்தன்மையை கீழிறக்கி அவர்களை மனிதர்கள் போல உலவ விடுவதனால் ஏதாகினும் நன்மை இருக்கின்றதா என்று யோசிப்பது மிகத் தேவையான ஒன்று. இல்லை என்பதே என் முடிவு!

இறை உணர்வு,  ஆன்மீகம்,  என்பன ஒரு தனி மனிதரின் ஆன்மாவிற்கும் அந்த ஆன்மா உணரும் தெய்வீக சக்திக்கும் இடையிலான ஒரு விசயம். அவை தத்துவ விசாரனைக்கு உட்படுத்தப்பட்டு தனி மனித தேடலுடன் இணைக்கப்பட வேண்டியன. தெய்வீக உணர்வு, தெய்வீக சக்தி, இறை சக்தி, கடவுள் என்பன  ஒரு ஆன்மாவை செம்மைப் படுத்தி சீராக்கி நல்வழியில் மட்டுமே அழைத்துச் செல்லும் பண்பினை அடிப்படையாகக் கொண்டது. பற்பல சித்தாந்தங்களை வாசித்து அவை கூறும் தத்துவங்களை உள்வாங்கி அலசி ஆராய்ந்து தெளிவு கண்டு பின்னர் அதனினின்றும் விலகி மீண்டும் மீண்டும் எழும் புதுப் புது கேள்விகளுக்கு தமக்குள்ளேயே விடையளித்து  படிப்படியாக ஆன்ம ரீதியாக பக்குவத்தில் உயர்வு காண இட்டுச் செல்வது இறை சக்தி.

அந்த இறை சக்தியை தத்துவ விசாரனையின் வழி காணாது மேம்போக்காகவும் தங்கள் சுய விருப்பத்திற்காகவும் அறிவிற்கு பொருந்தாத வகையில் கதைகளை  உருவாக்கி தெயவங்களைத் தங்கள் விருப்பப்படி ஆட்டிப்படைக்கும் புராணக் கதை எழுத்தாளர்கள் சமூக நலனில் அக்கறை இல்லாதோர் என்றே எனக்கு எண்ணத் தோன்றுகின்றது.

தெய்வீக குணங்கள் அன்பும், கருணையும், அருளும் இனிமையும் நிறைந்தவை.

கடவுட் தன்மையும் இத்தகையதாகவே இருக்க வேண்டும்.

நற்சிந்தனையும்  அழகியல் உணர்வுகளும் தெய்வீகத் தன்மையை மெருகூட்டுவன. மேலும் மேலும் இந்த உயர்ந்த குணங்களை வளர்க்கும் தன்மை படைத்தவை. இப்படி நற்சிந்தனையும், வீரமும் , அழகியலும் கொண்ட கதைகளை இளம் மனதில் விதைப்பதே ஆரோக்கியமான சிந்தனையுடன் இளையோர் வளர உதவும்.

சாக்ரடீஸின் மூன்றாம் புத்தகத்தில் சில பகுதிகள் அழகியலின், அதிலும் குறிப்பாக இசையால் ஏற்படும் அழகியலைச் சுட்டிக் காட்டுகின்றன. இனிய இசையில் லயிக்கும் என் மனதிற்கு இந்த விளக்கங்கள் ஏற்புடையனவாக இருந்தன. ஒரே கோட்டில் சாக்ரடீஸுடன் பயனிப்பதாக இப்பகுதியை வாசித்த போது உணர்ந்தேன்..அப்பகுதியிலிருந்து சில வரிகள்...

சாக்: நம்மால் போற்றப்படுகின்ற தேவர்களும் வீரர்கள் முதலான மகாபுருஷர்களும் கெட்ட காரியங்களைச் செய்தார்களென்று  நமது இளைஞர்களுக்குப் போதனை செய்வோமானால், அந்த தேவர்களும் வீரர்களும் சாதாரண மனிதர்களை விட எவ்விதத்திலும் சிறந்தவர்களல்லர் என்ற எண்ணம் இளைஞர்களின் மனத்தில் உண்டாகிவிடுகின்றது. இந்த எதிரியான எண்ணத்தை உண்டு பண்ணலாமா?  தவிர இத்தகைய எண்ணங்களை நமது இளைஞர்களின் மனத்தில் பதிய வைப்போமாயின், தேவர்களும் வீரர்களுமே இப்படிச் செய்வார்களேயானால் நாம் ஏன் இப்படிச் செய்யக்கூடாது என்று கருதிக் கொண்டு விடுகிறார்கள். இதனால் தீமை செய்யலாமென்ற புத்தி இவர்களுக்கு உண்டாகின்றது.

...

சாக்: நல்லவர்களுடைய பிரதி பிம்பங்களைத்தான் தங்கள் கவிதைகளில் கொண்டு புகுத்தவேண்டுமென்று நமது ராஜ்ஜியத்திலுள்ள கவிஞர்களுக்கு நாம் வற்புறுத்திச் சொல்ல வேண்டும்.  அப்படித் தங்களால் முடியாது என்று அவர்கள் சொல்வார்களானால், நமது ராஜ்யத்திலிருந்து கொண்டு  கவிதைகள் செய்யக்கூடாதென்று அவர்களுக்கு உத்தரவு போட்டுவிட வேண்டும். இங்கணமே கெட்ட சுபாவத்தைக் கிளப்பி விடக்கூடியதும்  கீழான என்ணங்களைத் தூண்டிவிடக்கூடியதுமான சித்திரங்களை நாம் அனுமதிக்கக்கூடாது. இதற்கு கீழ்படிந்து நடக்க மறுக்கின்றவர்கள் நமது ராஜ்ஜியத்திற்குள் இருந்து கொண்டு தங்கள் தொழிலை நடத்த இடம் பெறுதல் கூடாது. அழகு இன்பம் முதலியன எங்கெங்கு இருக்கின்றனவோ அங்கெல்லாம் அவைகளைத் தேடிக்கண்டுபிடித்து தங்கள் தொழில்களில் கொண்டு புகுத்தக்கூடிய ஆற்றல்பெற்ற தொழில் நிபுணர்களே நமக்குத் தேவை. இவர்களுடைய கலை சிருஷ்டிகளின்  மத்தியில் வளர்கிர இளைஞர்கள் நாளாவட்டத்தில்  தங்களை அறியாமலேயே இயற்கையின் நண்பர்களாகி அழகிலே ஈடுபடுவார்கள். சுத்தமான காற்றோட்டமுள்ள இடத்திலே வசிக்கிற ஒருவன் எப்படி தன்னையறியாமலேயே தேக சுகத்தைப் பெறுகிறானோ அப்படியே அழகான கலைப்பொருள்களின் மத்தியில் வாழ்கிறவன் உயர்ந்த மனோனிலையை அடைகிறான். இந்த மாதிரியான கல்விப்பயிற்சியைத்தான் நமது இளைஞர்களுக்குப் புகட்ட வேண்டும்.

கிளா: இதைவிடச் சிறந்த கல்வி முறை வேறொன்று இருக்க முடியுமா?

சாக்: மேலே சொன்ன காரணங்களுக்காக, அதாவது அழகான கலைப்பொருள்கள் நிறைந்த சூழலின் மத்தியிலே நமது இளைஞர்கள் வளரவேண்டுமென்பதற்காக அவர்களுக்கு சங்கீதப்பயிற்சி அளிக்க வேண்டியது மிகவும் அவசியம் என்று உனக்குப் படுகின்றது அல்லவா? ஏனென்றால், சங்கீதத்தின் சிறப்பான அம்சங்களாக்கிய சந்த ஓசை , இசை பொருத்தம் முதலியன, அழகையும் சேர்த்துக் கொண்டு மனிதருடைய அந்தராத்மாவுக்குள் நுழைந்து அங்கே ஆழமான ஒரு முத்திரையை இட்டு விடுகின்றன. இதனால் சங்கீதத்தை ஒழுங்காக அப்பியாசிக்கின்றவன் அழகு புருஷனாகின்றான். அப்படி ஒழுங்காக அப்பியாசிக்காதவன் விகார புருஷனாகின்றான். எவனொருவன், ஒழுங்கான முறையில் சங்கீதப் பயிற்சி பெறுகின்றானோ அவன், எந்தெந்த கலை சிருஷ்டிகளில் குறைபாடுகள் நிரம்பியிருக்கின்றனவென்பதையும், எந்தெந்த இயற்கை பொருள்களில் அழகில்லையென்பதையும் சுலபமாகக் கண்டு பிடித்துவிடுவான். அவைகளை கண்டமாத்திரத்திலேயே அவனுக்கு ஒரு வித வெறுப்பு உண்டாகும். ஆனால் அழகான பொருள்களைப் பார்த்தவுடனேயே அவன் அவைகளைப் போற்றத் தொடங்குவான். அவைகளை தன் ஆத்மாவுக்குள் சந்தோஷத்தொடு வரவேற்றுப் போற்றுவான். அவற்றை இன் சுவை அமுதமெனச் சுவைப்பான். அவைகளினால் அவன் உயர்ந்தவனாகவும் நல்லவனாகவும் ஆவான்.


​​​வாசிப்பும், சிந்தனையும் கருத்துப் பதிவும் தொடரும்...!

சுபா

Sunday, April 19, 2015

சாக்ரடீஸ் - ப்ளேட்டோவின் அரசியல் வழி.....! - 4

வாசிப்பின் பதிவு 4

குழந்தைகளுக்கு எவ்வகை கதைகளைச் சொல்லிகொடுத்தால் அவர்களது மன வளர்ச்சிகு அது உதவும் எனக் குறிப்பிடும் சாக்ரடீஸ், இளைஞர்களைப் பற்றியும் சிந்திப்பதை விட்டு வைக்கவில்லை. இளைஞர்களைப் பற்றி பேசும் போது கதைகளைச் சொல்லுதல் என்பதை விட வரலாற்றைச் சொல்லுதல் இளைஞர்களின் சிந்தனை அமைப்பு நேர்பட அமைதலுக்குச் சரியானதாக அமையும் எனக் குறிப்பிடுகின்றார்.

இந்த வகையில் முதலில் அவர் தொட்டுப் பேசும் விசயம் தைரியமாயிருத்தல் என்பது பற்றியது. அடிப்படையில் மரணத்தைப் பற்றிய பயமே ஏனைய எல்லா வகை பயங்களையும் விட ஆழமானது அழுத்தமானது என்பதால் இந்த மரணபயத்தை இளைஞர்கள் ஏற்றுக்கொள்ளாமல் இருக்க வேண்டும், தைரியமாக இருக்க வேண்டும் எனக் குறிப்பிடுகின்றார். இறந்து போனோர் இப்படி இருப்பர் அப்படி இருப்பர் .. நரகத்தில் இப்படி வாழ்வர், சுவர்க்கத்தில் இப்படி வாழ்வர் என்பன போன்ற சிந்தனைகள் தேவையற்றன.

பயத்தை எப்படி விலக்கித் தள்ள வேண்டுமோ அதே போல எப்போதும் அழுது கொண்டே இருக்கும் வகையிலான கதைகளையும் இளைஞர்களுக்குச் சொல்லக்கூடாது என்றும் குறிப்பிடுகின்றார். சோகத்தைச் சொல்லி அழவைக்கும் கதைகள் மனத்தின் தைரியத்தை அழிக்கச் செய்வன. இவற்றினால் வாழ்க்கையினை தைரியமாக நேர்கொள்ளும் மன அமைப்பு இளைஞர்களுக்கு இல்லாமல் போய்விடும். எப்போதும் அழுகை தன்மை நிறைந்த கதைகள் கெட்ட பெண்களுக்கும் கோழைகளுக்கும் மட்டுமே பொருந்தும். நல்ல பெண்மணிகளும் நல்ல ஆடவரும் தைரியமான கதைகளை அதிலும் வரலாற்றுக் கதைகளைக் கேட்க வேண்டும் எனக் குறிப்பிடுகின்றார்.

தமிழ் நாட்டு தொலைகாட்சி சீரியல்களைப் பார்த்தால் அவர்கள் தயாரிக்கும் எந்த நாடகமும் இந்த வரையரைக்குள் வராது என்று தைரியமாகச் சொல்லிவிடலாம். அழவைத்து அதில் பணம் சம்பாதிக்கும் ஊடகங்கள் தான் தமிழ்ச்சமூகத்தைச் சுற்றிலும் சூழ்ந்திருக்கின்றன. மெண்மையான உணர்வுகளைத் தொட்டு உணர்ச்சி வசப்பட்டு அழுவதும், பச்சாதாபத்தை எதிர்பார்ப்பதுவும், நேரடியாக பிரச்சனைகளை எதிர்நோக்கும் பண்பினை இழக்கச் செய்பவை.

உடலிலோ உள்ளத்திலோ பலவீனமாக தன்னைக் காட்டிக் கொண்டு பச்சாதாபத்தை எதிர்பார்க்கும் சமூகமாக நமது சமூகத்தில் பலர் உருவாகிவிட்டனர் என்பதைக் காண்கின்றேன். தைரியமாக இருக்க உண்மையான உலக நிலவரத்தைக் கண்கொண்டு காண வேண்டும்.  அப்படிக் காணும் பார்வையில் எவ்வித திரையும் இன்றி நேரடியாக ஒரு பிரச்சனையை,   உள்ளவற்றை உள்ளனவாக காணும் மனப்பக்குவத்தைப் பெண்களும் ஆண்களும் பெற்றுக் கொள்ள வேண்டும்.

இத்தகைய கருத்துக்களோடு வருகின்ற உரையாடலின் ஒரு பகுதி - ப்ளேட்டோவின் அரசியல் - சாக்ரடீஸின் மூன்றாவது பகுதி.

ஸாக்: நமது இளைஞர்கள் தைரியமாயிருக்க வேண்டுமானால்  அவர்களுக்கு மரண பயம் இருக்கக் கூடாது.  அந்தப் பயம் உண்டாகாதிருக்கக்கூடிய கதைகளை அவர்களுக்குச் சொல்லிக் கொடுக்கவேண்டும். எவனொருவனுக்கு மரணபயம் இருக்கின்றதோ அவன் தைரியமுடையவனாயிருக்க முடியுமென்று நீ கருதுகிறாயா?

அடீ: முடியாதுதான்
..
சாக்: எனவே நமது நூலாசிரியர்கள் பிதிருலோகத்தை நித்தியாமல் அதனைப் பாராட்டுகின்ற விதமாகவே வரலாறுகளை எழுத வேண்டும். அப்படித்தான் எழுதவேண்டுமென்று அவர்களைக் கட்டாயப்படுத்த வேண்டும். சாதாரணமாக அவர்கள் இப்பொழுது எழுதி வருகிற வரலாறுகள் அல்லது கதைகள், உண்மையானவையுமல்ல, வீரத்தையும் உண்டு பண்ணா.

அடீ: நிரம்ப சரி

சாக்: இதே பிரகாரம், நமது கதைகளிலே சகதுக்கப்பட்டுக்கொண்டிருக்கின்ற, சதா அழுது கொண்டிருக்கின்ற பெரிய மனிதர்களைக் கொண்டு நுழைக்கக்கூடாது.
..

அடீ: சரி

சாக்: உண்மைகளுக்கு அதிகமான மதிப்பு வைக்கிற மாதிரியாக நமது இளைஞர்களுக்குக் கல்வி புகட்ட வேண்டும். கடவுளர்களுக்குப் பொய் யென்றால் பிடிக்காது. அஃது அவர்களுக்குப் பிரயோஜனமும் இல்லை. 

​​வாசிப்பும், சிந்தனையும் கருத்துப் பதிவும் தொடரும்...!

சுபா