Friday, May 17, 2019

விதவை திருமண் சட்டம்

நண்பர் மணி மணிவண்ணன் அனுப்பியிருந்த ஒரு கட்டுரையின் தொடர்பில் இந்தப் பதிவு. https://www.livehistoryindia.com/snapshort-histories/2017/07/26/marking-a-milestone---the-hindu-remarriage-act

26.ஜூலை1856 - இந்து விதவை மறுமண சட்டம் (Hindu Widows Remarriage Act) கொண்டுவரப்பட்ட நாள். இதற்கு பின்னனியில் இருந்து இச்சட்டம் வரக் காரணமாயிருந்து செயல்படுத்தியவர் கல்வியாளர் ஈஷ்வர் சந்த்ர பாண்டியோபத்யாய (வித்யாசாகர்). 19ம் நூற்றாண்டு கால பெண்களின் நிலை, அதிலும் விதவைப் பெண்களின் நிலை துயரமானது. சொத்துரிமை இல்லாத, சமூகத்திலும் ஒதுக்கப்பட்ட நிலையில் பெண்களின் முழு உலகமும் வீட்டிற்குள் அடைபட்டுக் கிடைந்த நிலை. அதிலும் கணவனை இழந்து விட்டால் அது நரக வாழ்க்கை தான்.

கல்வியாளர் வித்யாசாகர் தனது வாழ்க்கைச் சூழலில் கண்ட பெண்களின் நிலையைக் கருத்தில் கொண்டு விதவையானவர்களும் மறுமணம் செய்து கொண்டு வாழ சட்டம் வழிவகுக்க வேண்டும் எனப் போராடினார்.

1855ம் ஆண்டு அரசுக்கு விதவைப் பெண்களின் மறுமணத்தை சட்டப்படி அங்கீகரிக்கச்செய்யும் சட்டத்தை உருவாக்கக் கோரிக்கை வைத்தார். அப்போதைய மன்னர் மாத்தாப்ஜான் பகதூரும் (1832-1879) இக்கோரிக்கைக்கு ஆதரவுக் கரம் நீட்டினார்.

ஆனால் இதனை எதிர்த்து 30,000 கையெழுத்துக்களுடன் எதிர் பெட்டிஷன் அனுப்பியிருக்கின்றார்கள். விதவையானவர்கள் அப்படியே வீட்டுக்குள் முடங்கி இருந்து சாகவேண்டும் என்பது இவர்களது எதிர்பார்ப்பு. ஆனால் எல்லா எதிர்ப்புக்களையும் கடந்து இந்த கோரிக்கை சட்டமாகியது.

விதவைத் திருமணத்தைச் சட்டமாக்கினாலும் கூட சமூகத்தில் கணவனை இழந்த பெண்கள் மறு திருமணம் செய்து கொள்வது ஒரு பாவச் செயலாகவே கருதப்பட்டது. பல ஆண்டுகள் பல போராட்டங்களுக்குப் பின்னர் இன்று சமூகத்தில் பெண்கள் மறுமணம் என்பது சற்றே இயல்பான ஒன்றாக இன்று மாற்றம் கண்டுள்ளது.

தமிழ்ச்சூழலில் பெரியாரின் முயற்சிகள் சமூகத்தில் பெண்களின் சுயமரியாதை, வாழ்க்கை மேம்பாடு, விதவைப் பெண் திருமணம் ஆகியவற்றில் ஆரோக்கியமான தாக்கத்தை ஏற்படுத்தியதை நாம் அறிவோம்.

இந்தியச் சூழலில் பெண்களின் வாழ்க்கை மேம்பாட்டில் குறிப்பிடத்தக்க நல்ல மாற்றத்தை ஏற்படுத்தியவர்களை நினைவு கூர்வதும் அதனை அறிந்திருப்பதும் தேவையே.
-சுபா

No comments:

Post a Comment