Saturday, February 15, 2020

நூல் விமர்சனம் - கண்ணகி கோவிலும் வைகைப் பெருவெளியும்

நூல் விமர்சனம்
நூல்:கண்ணகி கோவிலும் வைகைப் பெருவெளியும்
ஆசிரியர்: பாவெல் பாரதி
பதிப்பகம்: கருத்து=பட்டறை, மதுரை






தமிழ் பண்பாட்டில் முக்கியத்துவம் பெறும் தொன்மை வழிபாட்டில் கண்ணகி வழிபாடு மிக முக்கியத்துவம் பெறும் ஒன்று. தாய் தெய்வ வழிபாட்டையே தங்கள் பண்டைய வழிபாட்டு நெறியாகக் கொண்டிருந்த தமிழ் மக்களின் வாழ்வியல் நெறியில் கொற்றவை, காளி, மற்றும் கேரளத்தில் முக்கியத்துவம் பெறும் பகவதி அம்மன், ஈழத்தில் முக்கியத்துவம் பெறும் கண்ணகை வழிபாடு என்பவை தாய்தெய்வ வழிபாட்டின் தொடர்ச்சியைச் சான்று பகர்கின்றன. கண்ணகி இலக்கியத்தின் ஊடாக நமக்கு அறிமுகம் பெறுவது சிலப்பதிகாரத்தின் வழியாக என்றாலும்கூட, வாய்மொழி இலக்கியங்கள் என்ற அடிப்படையில் நாட்டார் இலக்கியங்களாகும் கண்ணகியின் கதை தமிழ் சமூகத்தில் ஊடுருவி ஆழப் புதைந்துள்ளது. கண்ணகியின் வாழ்க்கையின் வெவ்வேறு படிநிலைகளை விவரிக்கும் பல்வேறு நூல்கள் வந்திருக்கும் சூழலில், மதுரை மாநகரில் கொலையுண்ட தன் கணவனுக்காகப் பாண்டிய மன்னனின் அவையில் நீதி கேட்டு, பின்னர் தன் கோபம் குறையாது நகரத்தை எரித்து, அங்கிருந்து புறப்பட்டு 14 நாட்கள் கடந்து ஒரு குன்றுப் பகுதிக்கு வந்து கண்ணகி தன் உயிர் நீத்த பகுதி எது, என்பதை ஆராயும் வகையில் வெளிவந்திருக்கும் நூல் ஆய்வாளர் பாவெல் பாரதி எழுதியிருக்கும் "கண்ணகி கோவில் வைகை பெருவெளியும்".

நூலின் முதல் பகுதி, சிலப்பதிகாரத்தின் மதுரை காண்டம் கூறும் 'நெடுவேள் குன்றம்' என்பது எங்கு உள்ளது, என்பதை ஆராய்கின்றது. நூலாசிரியர் இத்துறையில் இதுகாறும் முன்னோடிகளாக ஆய்வுசெய்த தொ.மு. சி.ரகுநாதன், இராகவையங்கார், கே முத்தையா, புலவர் சி கோவிந்தராசன் போன்றோரது ஆய்வுகளை ஆய்ந்து அலசி தனது கருத்துக்களையும் சேர்த்து 'நெடுவேள் குன்றம்' எங்கு இருக்கின்றது என்பதை தனது களப்பணிகளின் வழியாகவும், நூலாய்வுகளின் துணையுடனும் உறுதி செய்கிறார்.
நூலின் இரண்டாவது பகுதியானது, முதல் பகுதியில் உறுதி செய்யப்பட்ட நெடுவேள் குன்றத்தில் உள்ள மங்கலாதேவி கோட்டத்தை ஆராய்கிறது. தேனி மாவட்டம், கூடலூர் அருகே வனப்பகுதியில் கேரளாவிற்கும் தமிழ்நாட்டிற்கும் எல்லையில் அமைந்திருக்கும் வேங்கை கானல் மலைமுகட்டில் உள்ள மங்கலதேவி கோட்டமே 'கண்ணகி கோட்டம்' என்பதை குறிப்பிட்டு, சிதிலமடைந்திருக்கும் இக்கோவிலில் உள்ள 9 கல்வெட்டுகளைப் பற்றிய தகவல்களைக் கூறுகிறது.

இந்தக் கோவிலில் இரண்டடி உயரம் உள்ள பெண் தெய்வச் சிலை ஒன்று கிடைத்ததாகவும், ஆனால் தற்சமயம் இந்தச் சிலை அங்கு இல்லை என்ற செய்தியையும் நூலாசிரியர் பதிகின்றார். இது மிகுந்த அதிர்ச்சி அளிக்கும் ஒரு செய்தியாகும்.

இக்கோயில் கல்வெட்டுக்கள் இராசராச சோழன் காலத்திலும், பின்னர் பாண்டிய மன்னன் ஸ்ரீ குலசேகர பாண்டியன் காலத்தில் விரிவாக்கம் செய்யப்பட்ட போது செதுக்கப்பட்ட கல்வெட்டுகளாகும். இந்தக் கல்வெட்டுகள் மங்கல மடந்தை கண்ணகியை 'ஸ்ரீ பூரணி' என்று குறிப்பிடுகின்றன என்பதைக் காணும்போது, வைதீக சமயத்தின் தாக்கம் இக்காலகட்டத்தில் வழக்கிலிருந்தமையினால் தமிழ் பெயரிலிருந்து சமஸ்கிருத பெயருக்குக் கண்ணகி தெய்வத்தின் பெயர் மாறிய நிலையைக் காண முடிகிறது.

தமிழகத்தில் தோன்றி நிலைபெற்ற கண்ணகி வழிபாடு இலங்கையில் யாழ்ப்பாணம், மட்டக்களப்பு ஆகிய பகுதிகளில் முக்கியத்துவம் பெறும் வழிபாடாக அமைந்திருக்கின்றது. இலங்கை மலையகப் பகுதிகளிலும் கண்ணகி கூத்து வழக்கிலுள்ளது. யாழ்ப்பாணத்தில் மட்டும் கண்ணகிக்கு 75 கோயில்களும், மட்டக்களப்பில் 30 கோயில்களும் உள்ளன என்பதை நூலாசிரியர் குறிப்பிடுகிறார். தமிழ் மரபு அறக்கட்டளையின் அண்மைய பதிவான தொல்லியல் அறிஞர் மற்றும் யாழ்ப்பாண பல்கலைக்கழக வரலாற்றுப் புலத்தின் தலைவர் பேராசிரியர் புஸ்பரட்ணம் அவர்களது கண்ணகி தொன்மம் பற்றிய பேட்டியில், கண்ணகி வழிபாடு இலங்கையில் பெறுகின்ற முக்கியத்துவம் பற்றி அவரது விளக்கங்கள் கருத்தில் கொள்ளப்பட வேண்டியவை.

நூலின் மூன்றாவது பகுதி முக்கியத்துவம் பெறுகிறது. இப்பகுதியில் நூலாசிரியர் மதுரையில் தொடங்கி, நெடுவேள் குன்றம் வரை காணப்படும் கண்ணகி தொன்மத்தின் தடயங்களை ஒவ்வொன்றாக பட்டியலிட்டு அவை ஒவ்வொன்றையும் விரிவாக விளக்குகின்றார். செல்லத்தம்மன் கோயில் கண்ணகி சிலை, கோவலன் கொலையுண்டதாகக் கருதப்படும் கோவலன் பொட்டல் மேடு, விராட்டிபத்து திரும்பிப்பார்த்த அம்மன் கோயில், குன்னுவரன்கோட்டை கண்ணகி பாலம், குள்ளப்புரம் மருத காளி கோயில், கம்பம் சாமுண்டிபுரம் சாமுண்டி அம்மன் கோயில் என ஒவ்வொன்றும் கண்ணகியின் துன்பத்திற்குச் சான்று பகரும் அடையாளங்களாக அமைந்திருப்பதை ஆசிரியரின் விரிவான விளக்கம் உறுதி செய்கிறது.

பழந்தமிழர்களின் தாய்த் தெய்வக் கோயில்களான அம்மன் கோயில்கள் மிகப் பெரும்பாலும் வடக்கு நோக்கியே அமைந்திருப்பதன் காரணம், தமிழகம் முப்புறமும் கடல் சூழ்ந்த நாடாகவே இருக்கும் சூழலில், எதிரிகளின் படைகள் வட திசையிலிருந்து மட்டுமே வர முடியும் என்பதால், காக்கும் தெய்வமாகிய கொற்றவை தன் மக்களைக் காக்க ஆயுதம் ஏந்தி வடதிசை நோக்கி நிற்கும் வகையில் கோயில்கள் கட்டப்பட்டன என்ற செய்தியை நூல் பதிகின்றது.

கண்ணகி, வைகையின் வடகரை ஓரமாகவே 14 நாட்கள் நடந்து சென்று தன் உயிரை நீத்தார் என்பதைக் கூறும் வகையில் வைகை நதியின் சிற்றூர்கள் ஒவ்வொன்றின் பெயர்களும் நூலில் குறிப்பிடப்படுகின்றன.

நூலின் நான்காம் பகுதி நாட்டார் கதை மரபில் கண்ணகி தொன்மம் வெவ்வேறு கதை படிமங்களாக உருமாற்றம் பெற்றிருக்கும் செய்தியைக் கூறுகிறது. இதே பகுதி கண்ணகிக்கு வடமொழி மூலத்தைக் கற்பிக்க 'திருமாவுண்ணி' என வலம்வரும் திரிபை பற்றியும், ஈழத்தில் கண்ணகி 'கண்ணகை அம்மன்' என்று அழைக்கப்படுகின்றார் என்பதையும் குறிப்பிடுகிறது. தமிழகத்தில் வழக்கிலுள்ள கண்ணகி தொன்மம் பற்றிய சில கதைகளை நூலாசிரியர் இந்த நூலில் இணைத்திருக்கிறார். நாட்டார் மரபில் உள்ள செய்திகள் நூல் வடிவில் இதில் ஆவணப்படுத்தப்பட்டிருப்பது பாராட்டுதற்குரியது.

நூலின் இறுதிப் பகுதியில் மதுரையிலிருந்து நெடுவேள் குன்றம் கண்ணகி கோயில் வரை கண்ணகி 14 நாட்கள் நடந்து சென்ற பாதையாக அறியப்படும் வைகை நதிக்கரை சிற்றூர்களை வரைபடத்தின் வழியாக ஆசிரியர் காட்டுகின்றார். இது வரவேற்கத்தக்க ஒரு முயற்சி.

ஆய்வுத் தரம்வாய்ந்த இந்த நூலில் நூலாசிரியர் சான்றுகளைக்குறிப்பிடும் நூலின் ஒவ்வொரு பகுதியிலும் சான்றுகளைக் குறிப்பிடும்போது ஆய்வில் தான் துணைக்குறிப்புக்குப் பயன்படுத்திய நூல்களில் பெயர்களைக் குறிப்பிட்டு , பக்கங்களையும் குறிப்பிட்டு, ஒவ்வொரு பக்கங்களிலும் பின்குறிப்பு (Footnote)சேர்த்திருந்தால் நூலுக்கு ஆய்வுத்தரம் மிகுந்து சிறப்புக் கூட்டி இருக்கும். அடுத்த பதிப்பில் நூலாசிரியர் இதனைக் கவனத்தில் கொள்வார் என எதிர்பார்க்கிறேன்.

மிகுந்த ஆய்வுக் கண்ணோட்டத்துடன் மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வு நூல் வடிவம் பெற்றிருக்கிறது. தமிழக தொல்லியல் அறிஞர் முனைவர் சாந்தலிங்கம் அவர்களின் முன்னுரை நூலுக்கு வழிகாட்டுகிறது. வைகைக்கரை நாகரீகம் தமிழர் நாகரிகத்திற்கு மிகுந்த முக்கியத்துவம் கொள்ளப்படும் இக்காலகட்டத்தில் கண்ணகி பயணித்த நெடுவழிப் பாதையை ஆராயும் இந்த நூல் ஒரு நல்வரவு. நூலாசிரியருக்கு என் வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

-முனைவர்.க.சுபாஷிணி