Wednesday, March 6, 2024

டீன் ஏஜ் காலத்து படம்

மலேசியாவில் பினாங்கில் ஒரு கருத்தரங்க நிகழ்வு. நண்பர் சுப்பாராவ் இன்று அனுப்பியிருந்தார். முன் வரிசையில் 2ஆவது .. கண்ணாடி போட்டுக்கொண்டு நான்.

கால ஓட்டத்தில் பல நிகழ்வுகள் நினைவுகளாய் மட்டும் தேங்கி விடுகின்றன.



One Page Indian Stories

 Translator: A. Basheer Ahmad Jamali

நூல் திறனாய்வு - முனைவர் க. சுபாஷிணி


ஒரு விஷயத்தை நீட்டி முழக்கி எழுதுவது ஒரு வகையில் எளிது. அதனைச் சுருக்கி ஒரு பக்கச் செய்தியாக உருவாக்குவது என்பது ஒரு சவால்தான். அதிலும் கதைகளை அப்படி உருவாக்குவது என்பது ஒரு தனி கலை.
ஒரு கதை எதைப் பற்றி பேசுகிறது? கதை மாந்தர்கள் யார்? தொடக்கம் என்ன? அதன் முடிவு என்ன? மையப் புள்ளி என்ன? அது கூற இருக்கும் நீதி அல்லது தகவல் என்ன? என்பவை அனைத்தும் அந்தக் கதைக்குள் முழுமையாக வெளிப்பட வேண்டும்.
தமிழ் வார இதழ்களிலும் நாளிதழ்களிலும் இத்தகைய ஒரு பக்கக் கதைகள் நிறையவே வந்திருக்கின்றன, வந்து கொண்டிருக்கின்றன. உடனடியாக வாசித்து விட்டு அந்தக் கதை சொல்லும் விஷயத்தைச் சற்று நேரம் யோசித்து விட்டு நமக்கு தொடர்புடையதாக இருந்தால் அதைப் பற்றி கூடுதல் நேரம் யோசிக்க வைத்து விடும். இல்லையென்றால் அதுவும் ஒரு செய்தியாக நம்மைக் கடந்து போய்விடும்.
இத்தகைய ஒரு பக்கக் கதைகளில் 50 கதைகளைத் தேர்ந்தெடுத்து அதனை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து ஒரு நூலாகக் கொண்டு வந்திருக்கின்றார் பேராசிரியர் பஷீர் அகமத் ஜமாலி. இவர் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் அரபி மொழி பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
முதலில் இந்தத் தேர்ந்தெடுக்கப்பட்ட 50 கதைகளை இவர் அரபி மொழியில் நூலாக வெளியிட்டிருக்கின்றார். அது அரபி மொழி பேசும் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றதனால் இதனை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க வேண்டும் என்ற முயற்சியில் One Page Indian Stories என்ற தலைப்பில் வெளியிட்டிருக்கின்றார்.
நூலில் இடம்பெறுகின்ற ஒவ்வொரு கதைகளுக்கும் ஒரு ஓவியம் இணைக்கப்பட்டிருக்கின்றது. அதாவது முதலில் ஓவியம் ஒரு பக்கத்தில் அடுத்த பக்கத்தில் கதை என்ற வகையில் இது வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு கதையையும் புரிந்து கொள்வதற்கு ஒரு வகையில் இந்த ஓவியங்களும் உதவுகின்றன என்று கூறலாம்.
சிறுகதைகளின் வழி சொல்லப்படுகின்ற தமிழ் பண்பாட்டுச் சூழல் ஏனைய பல மொழிகளுக்குச் செல்லும் பொழுது அம்மொழிகளைப் பேசும் மக்கள் தமிழ் பண்பாட்டுச் சூழலைப் புரிந்து கொள்வதற்கும் நல்ல ஒரு வாய்ப்பு ஏற்படுகின்றது. இந்த ஒவ்வொரு கதைகளும் இந்தச் சிறுகதைகள் வெளிவந்த காலகட்டத்தின் சூழலை வெளிப்படுத்துவதாக அமைகின்றன.
இதில் ஒரு சில கதைகள் என்னை ஈர்ப்பவையாக அமைந்திருக்கின்றன. "பிரசவத்துக்கு இலவசம்" என ஆட்டோ வண்டியின் பின் எழுதப்பட்டிருக்கும் வாசகம்.. அந்த ஆட்டோ வண்டியில் பயணித்து வரும் மகப்பேறு மருத்துவர்.. அந்த ஆட்டோ ஓட்டுனருடன் நிகழ்த்தும் கலந்துரையாடல் ஆகியவை மிக நெகிழ்வானவை.
பள்ளிக்கூடம் செல்ல வேண்டும் எனக் கூறும் தந்தையிடம் வம்பு பண்ணிக் கொண்டிருக்கும் சிறுவனிடம் கூடையில் தண்ணீரை அள்ளிக் கொண்டு வரச் சொல்லி கூடை சுத்தமாவதை விளக்கி பள்ளிக்குச் செல்வதால் அறிவு தெளிவுபடும் என விளக்கி கூறும் சிறுகதையும் நன்று.
வரதட்சணை வேண்டும் என கேட்கும் கணவன்.. அது பற்றி தனது பெற்றோரிடம் ஏதும் சொல்லாமல் காலம் கழிக்கும் பெண்.. பிறகு கணவன் வரதட்சணை கேட்டு அடிக்கத் தொடங்கியதும் போலீஸ் நிலையத்திற்கு ஓடிச் சென்று அங்குள்ள ஒரு அதிகாரியிடம் தனது கணவன் தன்னை அடித்து துன்புறுத்துவதைக் கூறுவதை வாசித்துக் கொண்டு வரும்போது.. ஆஹா பெண்கள் தைரியமாகி விட்டார்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கும் போது அடுத்த நொடியே அந்த போலீஸ் அதிகாரி அவளின் தந்தை என்பதும்.. உடனே அவர் மாப்பிள்ளைக்கு அவர் கேட்கும் காரை உடனே வாங்கி தந்து விடுகிறேன் என பல்டி அடிப்பதும்.. இன்னும் மக்கள் மனம் மாறவில்லை. வரதட்சனை என்ற பெண் கொடுமைகள் பெண் அடிமைத்தனம் இன்றும் நம் சமூகத்தில் தொடர்கின்றது என்பதை வெளிப்படுத்துகின்றது.
கட்டிடம் கட்ட நிலத்தை தோண்ட வேண்டும் என்பதற்காகப் புதைபொருள் கிடைத்திருக்கின்றது என்று சொல்லி அரசின் உதவியை நாடி அதன் வழியாக செலவை குறைக்கலாம் என நினைக்கும் ஒரு கன்ட்ராக்டர்... அரசின் தொல்லியல் துறை அந்த இடத்தை தோண்டத் தொடங்கிய பின்னர் அங்கு தற்செயலாக எலும்புக்கூடுகள் கிடைக்க.. இது வரலாற்று சிறப்புமிக்க தொல்லியல் களம் என்று அரசு அறிவிப்பு செய்து அந்தப் பகுதியைப் பெற்றுக் கொள்ளும் போது தனது பேராசையை நினைத்து காண்ட்ராக்டர் வேதனைப்படுவது சிரிப்பை வரவழைக்கிறது.
இப்படி 50 கதைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கதைக்களத்துடன் அமைந்திருக்கின்றன.
நல்ல தரமான அதே நேரத்தில் எளிமையான ஆங்கிலத்தில் இக்கதைகள் வழங்கப்பட்டிருப்பது சிறப்பு.
இந்த ஒவ்வொரு கதைகளும் வெளிவந்த பத்திரிகையின் பெயரையும் அதன் தேதியையும் நூலாசிரியர் இணைத்திருந்தால் இன்னும் சிறப்பாக அமைந்திருக்கும் என்பது என் கருத்து. மறு பதிப்பில் நூலாசிரியர் இதனை கவனத்தில் எடுத்துக் கொள்வார் என எதிர்பார்க்கிறேன்.
நூலை மொழிபெயர்ப்பு செய்து வழங்கிய பேராசிரியர் பஷீர் அகமத் ஜமாலி அவர்களுக்குப் பாராட்டுக்கள். மேலும் இத்தகைய பல நூல்கள் வெளிவர வேண்டும். உலக மொழிகளில் தமிழ் பண்பாட்டுச் சூழல் வெளிப்படும் போது அது தமிழ் சமூகவியல் பார்வையை ஏனைய சமூகங்களுகம் அறிந்து கொள்ள உதவும்.
-சுபா

Monday, March 4, 2024

தமிழர் புலப்பெயர்வு: உலகளாவிய பயணங்கள், குடியேற்றங்கள், வரலாறு

தமிழர் புலப்பெயர்வு:உலகளாவிய பயணங்கள், குடியேற்றங்கள், வரலாறு

நூலாசிரியர்: க. சுபாஷிணி
பதிப்பகம்: தமிழ் மரபு அறக்கட்டளை
பக்.370 ; ரூ.450



நூல் திறனாய்வு: முனைவர் தேமொழி

தமிழர்கள் கல்விக்காகவும் உயர்திறன் சார்ந்த பணிகளுக்காகவும் வணிகத்திற்காகவும் அயல்நாடு களுக்குப் புலம் பெயர்கிறார்கள் என்றாலும், வரலாறு நெடுகிலும் தமிழ் மக்கள் உலகின் பல்வேறு பகுதிகளுக்குத் தரை வழியாகவும் கடல் வழியாகவும் தொடர்ந்து பல தேவைகளுக்காகப் புலம்பெயர்ந்துகொண்டே இருந்தார்கள்.
புலம் பெயர்தல் பொருளியல், உளவியல் தாக்கங்களை ஏற்படுத்தி எதிர்காலம் பற்றிய நிலையற்ற தன்மையை உருவாக்குகிறது. இருப்பினும், “எத்தனையோ சிரமங்களும் துன்பங்களும் இருந்தாலும் மனிதர்கள் ஏன் புலம்பெயர்கிறார்கள்? இந்தக் கேள்விக்கு விடை தேடுகிறார்” க. சுபாஷிணி.
தமிழ் மக்களின் தொடக்கக் கால வெளிநாடுகளுக்கான பயணங்கள் பெரும்பாலும் தன் விருப்பத்துடன் பொருள் திரட்டும் நோக்கில் அமைந்தவை. வணிகப் பயணங்கள்தான் என்றாலும் சமயம் பரப்புதல், தூது, போர் போன்ற காரணங்களுக்காகவும் தமிழர்களின் பயணங்கள் தொடர்ந்தன. இதற்குச் சான்றாகத் தமிழகத்தின் பண்டைய துறைமுக நகரங்கள் சிலவற்றிலும் அவற்றைச் சுற்றியும் நிகழ்த்தப்பட்ட தொல்லியல் அகழாய்வுகள் தமிழகத்தின் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட வணிகச் சூழலை விவரிக்கும் சான்றுகளை வெளிக்கொணர்ந்துள்ளதை நூல் சுட்டிக்காட்டுகிறது.
பண்டைய தமிழ்நாட்டின் முக்கிய வணிகக் குழுக்களாக ஐயப்பொழில் ஐநூற்றுவர், திசையாயிரத்து ஐநூற்றுவர், மணிக்கிராமத்தார் இருந்துள்ளதை அறிகிறோம். தமிழர்களின் பல தடயங்கள் அயல்நாடுகளிலும் கிடைத்துள்ளமை தமிழர்களின் வணிகப் பரவலை உறுதிப்படுத்தும் சான்றுகளாகின்றன. இவை வரலாறு நெடுகிலும் பல காலகட்டங்களைச் சார்ந்தவை. இந்திய-ஐரோப்பியக் கடல்வழிப் பாதையில், இடையில் உள்ள ஓமன் நாட்டில் கிடைத்த “ணந்தை கீரன்” என்று ‘தமிழி’ எழுத்தில் கிடைத்த மட்பாண்ட ஓடு முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்த காலகட்டத்தில் கிடைக்கும் ஒரு தொல்லியல் சான்று. பொ.ஆ.3 அல்லது 4ஆக இருக்கக்கூடிய, ‘பெரும் பத்தன் கல்’ (பெரிய பொற்கொல்லனின் கல் எனப் பொருள் தரும்) கல்வெட்டு ஒன்று தென் தாய்லாந்தில் கிடைத்துள்ளது. அதன் தகுவாபா பகுதியில் கிடைத்த பொ.ஆ. 8-9ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ்க் கல்வெட்டு மூன்றாம் நந்திவர்மனின் அரசு அதிகாரி மணிக்கிராமத்தார் வணிகக் குழுவினரின் பயன்பாட்டிற்காக ஒரு குளத்தை அப்பகுதியில் வெட்டியதாகக் கூறுகிறது. இந்தோனேசியாவின் சுமத்ரா தீவின் லாபூ தோவா பகுதியில் கண்டெடுக்கப்பட்ட பொ.ஆ. 11ஆம் நூற்றாண்டுத் தமிழ்க் கல்வெட்டு திசை ஆயிரத்து ஐநூற்றுவர் பற்றிய செய்திகளைக் குறிப்பிடுகிறது. நியூசிலாந்து நாட்டின் மேற்குக் கரையோரம் கிடைத்த வெண்கல மணி ஒன்றின் உடைந்த பகுதியில் பொறிக்கப்பட்டிருக்கும் ‘முகைய்யதீன் வக்குசு உடைய கப்பல் உடைய மணி’ என்ற சொற்கள் இன்னொரு சான்று. இது பொ.ஆ. 18ஆம் நூற்றாண்டின் பழவேற்காட்டிலிருந்து இந்தோனேசியா வழியாக நியூகினியா சென்று பின்னர் நியூசிலாந்து அருகிலுள்ள சாலமன் தீவுகளுக்கும் சென்ற முகைதீன் பக்ஸ் என்பவரின் கப்பலின் மணி என்று இந்த நூலின் வழி அறிகிறோம்.
முற்காலத்தில், வணிகம் தவிர்த்துச் சமயம் தொடர்பான பணிகளுக்காகவும் தமிழர்கள் அயல்நாடுகளுக்குச் சென்றனர். ஆறாம் நூற்றாண்டில் சீனா சென்று புத்த மதம் பரப்பியவர் பல்லவ இளவரசன் போதி தர்மர் என்ற புத்த வர்மன். அசோகர் காலத்தில் தொடங்கப்பட்ட பௌத்த சமய விரிவாக்கம் தமிழ் நிலப்பகுதியிலிருந்து வணிகர்களின் உதவியால் கிழக்காசிய, தூரக்கிழக்காசிய நாடுகளுக்கும் விரிவு கண்டது. இது தமிழ் பௌத்தப் பிக்குகளின் நாடுகடந்த பயணங்களுக்கும் காரணமாகியது. இப்பயணங்கள் பெரும்பாலும் கடல்வழிப் பயணங்களாகவும் நிலவழிப் பயணங்களாகவும் அமைந்தன. போதி தர்மர்போல தென்னிந்தியாவிலிருந்து சீனாவுக்குப் பயணம் செய்த மற்றொரு தென்னிந்தியப் பௌத்த பிக்கு வஜ்ரபோதி. இவர் ஒரு பெர்ஷிய வணிகக் கப்பலில் பயணம்செய்து ஸ்ரீவிஜயப் பேரரசின் துறைமுக நகரம் ஒன்றிற்கு பொ.ஆ. 719இல் வந்துசேர்ந்தார். அதன் பின்னர் அக்கப்பல் சீனாவின் குவான்சோவ் நகருக்கு வந்தபோது அதே கப்பலில் பிக்கு வஜ்ரபோதியும் பயணம்செய்து சீனா வந்துசேர்ந்தார் என்ற அறியப்படாத தகவலையும் பெற முடிகிறது.
கிறிஸ்துவப் பணிகளில் ஐரோப்பியரோடு உள்ளூர்த் தமிழ் மக்களும் உதவியாளர்களாக ஐரோப்பாவின் பல நாடுகளுக்குச் சென்ற நிகழ்வுகளும் இக்காலகட்டங்களில் அடங்கும்.
வரலாறு முழுவதும் பல நூற்றாண்டுகளாகத் தமிழ் மக்கள் பயணம் செல்வதும் புதிய குடியிருப்புக்களை அமைத்துக்கொண்டு தங்குவதும் நிகழ்ந்தாலும்கூட பொ.ஆ. 14ஆம் நூற்றாண்டுக்குப் பிறகுதான் தமிழ் மக்களின் புலப்பெயர்வு அதிகரித்தது. அத்துடன் அவை தமிழர்கள் வணிகம் மூலம் செல்வம் திரட்டச் செல்லாமல் வாழ்வாதாரம் தேடி விரும்பியோ அல்லது விரும்பாமலோ செய்யும் பயணங்களாகவும் அமைந்தன. துருக்கியின் ஒட்டமான் பேரரசின் உச்சக்கட்ட விரிவாக்கம் காரணமாக 14ஆம் நூற்றாண்டு முதற்கொண்டு தமிழகத்துடன் ஐரோப்பிய நாடுகள் கொண்டிருந்த வணிகத் தொடர்பில் மாற்றம் ஏற்பட்டது. தென்கிழக்கு ஐரோப்பா, மேற்கு ஆசியா, வடக்கு ஆப்ரிக்கா என்று விரிந்து பரவிவிட்ட ஒட்டாமன் பேரரசு வணிக வரிகளை உயர்த்தியதால் மாற்று வணிக வழி தேடி ஸ்பெயின், போர்ச்சுக்கல் நாடுகள் இந்தியாவிற்குப் புதிய கடல்வழி தேடியதும், வாஸ்கோ-ட-காமா 16ஆம் நூற்றாண்டில் கேரளாவின் கோழிக்கோட்டில் புதிய வழிமூலம் வந்து கரை இறங்கியதும் உலக வணிக வரலாற்றில் புதிய திருப்புமுனையாகும். போர்த்துக்கீசியரைத் தொடர்ந்து மற்ற ஐரோப்பிய நாடுகளும் இந்தியாவுடன் வணிகத் தொடர்பை ஏற்படுத்திக் கடற்கரையோர நகரங்களில் தங்களின் வணிக மையங்களை உருவாக்கிக்கொண்டன.
ஐரோப்பியரின் விரிவாக்கத்தை விளக்கும் வரலாற்று ஆசிரியர்கள் அவர்களின் குறிக்கோள் “God, Gold, and Glory” என்று இருந்ததாக விளக்குவார்கள். வெடிமருந்து கொண்ட புதிய தொழில்நுட்பப் போர்க்கருவிகளும், பலமற்றுப் பிரிந்துகிடந்த உள்நாடுகளின் அரசுகளும் மற்ற நாடுகளில் ஐரோப்பியர் வணிகத் தொழிலையும் சமய வளர்ச்சியையும் விரிவாக்கும் வாய்ப்பை அவர்களுக்கு வழங்கின. உலக நாடுகளில் தாங்கள் கால்பதித்த இடங்களிலெல்லாம் உழைப்பாளர் தேவைகளுக்கு இந்தியாவின் உள்ளூர் மக்களை முதலில் அடிமைகளாகவும், அடிமை ஒழிப்புச் சட்டம் இயற்றப்பட்ட பின்னர் ஒப்பந்த உழைப்பாளர்களாகவும் அழைத்துச் சென்றனர் ஐரோப்பியர். அவ்வாறு புலம் பெயர்ந்த இடங்கள் எந்த ஐரோப்பிய நாட்டின் வணிகக் கட்டுப்பாட்டில் இருந்ததோ (இங்கிலாந்தின் பிரித்தானிய காமன்வெல்த் நாடுகள்போல) அந்தந்த நாடுகளாக அமைந்தன. அவை உழைப்பாளர் தாங்களே தேர்வுசெய்து சென்ற நாடுகள் அல்ல. இவ்வாறாக, தமிழர்கள் புலம் பெயர நேரிட்ட காரணம் தமிழகத்தில் அவ்வப்போது தோன்றிய வறட்சியும் பஞ்சங்களுமாகும். தமிழ் மக்கள் பெருமளவில் அயல் நாடுகளில் பரவுவதற்கு அவர்களின் வறுமையான சூழ்நிலை காரணமாகியது.
பஞ்சம் காரணமாக அடிமைகளாகத் தங்களை விற்றுக்கொண்டவர்கள் 17ஆம் நூற்றாண்டில் நாகப்பட்டினத்திலிருந்து மணிலாவுக்கு அனுப்பப்பட்டுப் போர்த்துக்கீசியர்களின் வணிகச் செயல்பாடுகளுக்குப் பயன்படுத்தப்பட்டனர். அவ்வாறே மணிலாவில் ஸ்பானியர் வசம் சென்ற அடிமைகளைப் பற்றி அவர்களின் ஆவணங்களும் காட்டுகின்றன. இந்தோனேசியா, மலாக்கா, மெக்சிகோ, இலங்கை, ஆப்பிரிக்கா, மொரீஷியஸ், ரீ யூனியன், டென்மார்க் என மேலும் பல நாடுகளுக்குத் தமிழர்கள் அடிமைகளாகச் சென்றனர். ஸ்பெயின், போர்த்துகல், டேனிஷ், டச்சு, பிரஞ்சு, பிரிட்டிஷ் என அனைத்து ஐரோப்பிய வணிக நிறுவனங்களும் தமிழ் அடிமைகளை விற்பதில் ஈடுபட்டிருந்ததை ஆவணங்கள் வழி அறியும்போது தலைக்குனிவும் மனக்கலக்கமும் ஏற்படுகின்றன. குறிப்பாக 1834ஆம் ஆண்டு முற்றிலும் தடைசெய்யப்படும்வரை அடிமை வணிகம் தமிழ் மக்களின் வலுக்கட்டாயமான புலப்பெயர்வுக்கு ஒரு காரணமாகியது. ஒப்பந்தத் தொழிலாளர்களாகத் தமிழ் மக்கள் புலம்பெயர்வதற்கு முன்னர் பெருமளவில் தமிழ் மக்களின் புலப்பெயர்வு அடிமை வணிகத்தின் வழிதான் நடந்தேறியது.
‘துன்பக் கேணியிலே எங்கள் பெண்கள் அழுதசொல்
மீட்டும் உரையாயோ’ என்று பிஜித் தீவின் கரும்புத் தோட்டங்களில் பணிபுரியச் சென்ற இந்தியப் பெண் தொழிலாளர்கள் சென்ற நூற்றாண்டில் எதிர்கொண்ட அல்லல் நிறைந்த வாழ்வின் அவலத்தை “பிஜித் தீவிலே ஹிந்து ஸ்திரீகள்” என்ற கவிதையாக வடித்து மனம் குமுறினார் பாரதி.
அந்தத் ‘துன்பக்கேணி’ என்ற சொல்லையே தன் சிறுகதைக்கும் தலைப்பாகத் தேர்வு செய்து, பஞ்சம் பிழைக்க இலங்கைத் தேயிலைத் தோட்டங்களில் கூலிகளாகப் பணியேற்று, கோழிக் கூடுகள் போன்று இருந்த காரைக் குடிசைகளில் வாழ்ந்து, உழைத்து ஓடாகிப்போன தமிழர்களின் துன்பநிலைமையைச் சிறுகதையாக வடித்தார் புதுமைப்பித்தன். அகிலனின் ‘பால்மரக் காட்டினிலே’ என்ற புதினம் மலேசிய இரப்பர் தோட்டத் தொழிலாளர்களின் துயர வாழ்க்கையையும் அவர்களின் போராட்டங்களையும் சித்திரித்தது. பஞ்சம் பிழைக்க அடிமைகளாக நெரிசலான அறையில் கப்பலில் அடைக்கப்பட்டவர்களும், பல மைல் தூரம் கால்நடையாகச் சென்று, சரியான உணவும் ஊதியமும் இல்லாமல் துன்பத்தில் உழன்றவர்களும் உண்டு. ஒப்பந்தத் தொழிலாளர்களாகக் கரும்பு, தேயிலை, காப்பி, ரப்பர், செம்பனைத் தோட்டங்களில் பணிபுரியச் சென்றவர்களும், ஆப்ரிக்காவிற்குச் சுரங்கத் தொழிலாளர்களாகச் சென்றவர்களும் உழைப்புச் சுரண்டலுக்கு உள்ளானவர்களே.
க. சுபாஷிணி ஒரு மலேசியத் தமிழர். மலேசியாவில் பிறந்து, அங்கும் ஆஸ்திரேலியாவிலும் ஜெர்மனியிலும் இங்கிலாந்திலும் கல்வி கற்று ஜெர்மனியில் கணினித் துறையில் பணியாற்றி வருகிறார். பணி நிமித்தம் பல்வேறு நாடுகளுக்குச் செல்லவும், அங்கு வாழும் தமிழர்களுடன் கலந்துரையாடி அவர்களின் பண்பாட்டையும் புலம்பெயர் வரலாற்றையும் அறியவும் வாய்ப்புக் கொண்டிருந்தவர். கடந்த 15 ஆண்டு காலப் புலம்பெயர் தமிழர்கள் குறித்துச் செய்த ஆய்வுகளையும் சேகரித்த குறிப்புகளையும் நூல் வடிவில் வெளிக்கொணர்வதின் இன்றியமையாத முக்கியத்துவத்தை உணர்ந்த அவர் இந்த நூலை விரிவாக எழுதியுள்ளார். பல்கலைக்கழகங்களும் அரசும் செய்ய வேண்டிய பணிகளைத் தனி ஒருவராகத் தனக்குக் கிடைத்த வாய்ப்புகளைச் செம்மையாகப் பயன்படுத்திச் செய்துள்ளது பாராட்டப்பட வேண்டிய முயற்சி.
தேமொழி: புலம்பெயர் தமிழர், சான்ஃப்ரான்சிஸ்கோ, அமெரிக்கா

Saturday, March 2, 2024

முருங்கைக்கீரைகள்

 சென்னையில் சாலிகிராமம் அருகே அருணாச்சலம் சாலையில் பெரியவர் ஒருவர் தினமும் கீரைகள் விற்கின்றார். அவரிடம் முருங்கைக்கீரைகள் வாங்குவது தற்சமயம் எனக்கு வாடிக்கையாக இருக்கின்றது. சென்னையில் இருக்கும் வரை முருங்கைக்கீரைகள் சாப்பிட்டு மகிழ்வோமே என்ற ஓர் ஆசை.



இன்றும் புதிதாக இரண்டு கட்டுகள் காலையில் வாங்கிக் கொண்டேன். எனக்கு முன்னே இன்னொரு பெண்மணி வாங்கிக் கொண்டிருந்தார். ஒரு கட்டு முருங்கைக்கீரை 30 ரூபாய். அந்தப் பெண்மணி பெரியவரிடம் வாதிட்டுக் கொண்டிருந்தார். 15 ரூபாய் தான் ஒரு கட்டுக்கு கொடுப்பேன் என்று. அந்த பெரியவருக்கு தர்ம சங்கடமாக போய்விட்டது.
"நானும் காலையிலிருந்து வேலை செய்கிறேன் எனக்கும் கொஞ்சமாவது காசு கிடைக்கணும் இல்லையா, என்று மன வருத்தத்தோடு அந்த பெண்மணியிடம் வாதிட்டுக் கொண்டிருந்தார். நான் இரண்டு கட்டுகளை எடுத்துக் கொண்டு ஒரு கட்டு முருங்கைக்காயும் எடுத்துக்கொண்டு பணத்தை அவரிடம் கொடுத்துவிட்டு நின்று பார்த்தேன்.
அதனைப் பார்த்த அந்தப் பெண்மணி ஒன்றும் சொல்லாமல் தேவையான பணத்தை கொடுத்து விட்டு நகர்ந்து செல்ல தொடங்கி விட்டார்.
சிறு வியாபாரிகள் தங்கள் வாழ்வாதாரத்தைப் பார்த்துக் கொள்ள செய்கின்ற இத்தகைய வியாபாரத்தில் பேரம் பேசுவது தேவையில்லாதது. இந்த மாதிரியான சாலையோரத்து சிறு வியாபாரிகளிடம் பேரம் பேசுபவர்கள் பெரிய பெரிய சூப்பர் மார்க்கெட் அல்லது பெரிய அங்காடிகளில் எந்த கேள்வியும் கேட்காமல் பணத்தைக் கொடுத்து விட்டு வருவது இயல்பாக நடக்கின்றது தானே.. 🙂
-சுபா

Thursday, February 29, 2024

எழுத்தாளர் ப.சிங்காரத்தின் கடலுக்கு அப்பால்

 எழுத்தாளர் ப.சிங்காரத்தின் கடலுக்கு அப்பால் என்ற நாவலை அண்மையில் ஒரு நூல் திறனாய்வு நிகழ்ச்சிக்காக வாசிக்க நேர்ந்தது. வாசித்து முடித்த பின்னரும் மனதில் பல நிகழ்ச்சிகள்.. இந்த நாவல் தொடர்பானவை.. எண்ண ஓட்டங்களாக எழுந்து கொண்டிருக்கின்றன.



கதைக்களம் 1940 காலகட்டம்..அன்றைய மலாயா.
1941 இறுதி காலகட்டத்தில் ஜப்பானியர்கள் கிழக்காசிய நாடுகளில் தங்கள் தடம் பதித்து சீனாவில் இருந்து பர்மா வரை... தெற்கே மலாயா சிங்கை என பல நாடுகளையும் தங்கள் ஆளுமைக்குள் கொண்டு வரத் தொடங்கிய காலகட்டம்.
1942 ஆம் ஆண்டு காலவாக்கில் மலாயா முழுவதுமாக ஜப்பானியர் கைவசம் வந்துவிட, இக்காலகட்டத்தில் தாய்லாந்து பகுதியில் இருந்து பர்மா... பர்மாவில் இருந்து இந்தியாவை நில வழியாக சென்றடைந்து அதனையும் கைப்பற்ற வேண்டும் என்ற பேராசையுடன் ஜப்பானியப் படைகள் சயாம்-பர்மா மரண ரயில்வே பாதை அமைக்கும் திட்டமும் தொடங்கிய காலமாகும்.
இக்காலகட்டத்தில் அதற்கு முன்பிருந்து தமிழ்நாட்டிலிருந்து லேவாதேவி பண பரிவர்த்தனை செய்யும் தொழில்.. வியாபாரிகளுக்குப் பணம் வட்டிக்குக் கொடுக்கும் தொழில் செய்யும் வயிரவன் பிள்ளை குடும்பத்தார் பற்றியும் அவர்கள் பினாங்கு மாநிலத்திற்கு வந்து அங்கு சிறப்பாகத் தங்கள் தொழிலை நடத்திக் கொண்டிருக்கும் போது அவர்களது "சாதி சனங்களையும்" வரவழைத்து அவர்களுக்குத் தொழில்முறை பயிற்சி அளித்து அவர்களும் தொழில் செய்வது என்பது போன்ற பல செய்திகள் இந்த நாவலில் இடம்பெறுகின்றன.
அப்படி வயிரவன் பிள்ளையால் கொண்டுவரப்படுபவன் தான் செல்லையா. வயிரவன் பிள்ளைக்கு வடிவேல் என்று ஒரு மகன். அவனை படிக்க வைக்க வேண்டும் என மலாயா கொண்டு வருகின்றார். படித்துக் கொண்டிருக்கும் பிள்ளை ஜப்பான் பிரிட்டிஷ் போரின் போது கொல்லப்படுகின்றான். எஞ்சி இருப்பவள் மரகதம் என்ற ஒரு பெண் மகள். தன் மகள் மரகதத்தை செல்லையாவுக்குத் திருமணம் செய்து வைக்க வேண்டும்.. தன் தொழிலையும் வழங்க வேண்டும் என வயிரவன் பிள்ளை கற்பனை கோட்டையில் இருக்கின்றார்.
ஆனால் செல்லையா இந்தக் காலகட்டத்தில் இந்தியாவிற்கும் ஒட்டு மொத்த தமிழினத்திற்கும் விடுதலை வேண்டும் என நினைத்து சுபாஷ் சந்திரபோஸ் அமைக்கின்ற இந்திய படையில் இணைகின்றான். படிப்படியாக வளர்ந்து அந்த ராணுவ அமைப்பில் பெரிய பதவிக்கு ஓராண்டிற்குள் வந்து விடுகின்றான். இது வயிரவன் பிள்ளைக்குச் சிறிதும் பிடிக்கவில்லை.
1945ஆம் ஆண்டு சுபாஷ் சந்திர போஸ் விமான விபத்தில் கொல்லப்படுவது.. அதற்குப் பிறகு ஜப்பானிய படைகள் வீழ்ச்சி என படிப்படியாக செல்லையா இந்திய ராணுவத்திலிருந்து வெளிவந்து இயல்பான குடும்பம், தொழில் என தனது வாழ்க்கையை மாற்றி பயணத்தைத் தொடர நினைக்கின்றான். ஆனால் வயிரவன் பிள்ளைக்கு செல்லையாவிற்கு மரகதத்தை திருமணம் செய்து வைக்க துளியும் விருப்பமில்லை.
மரகதமும் செல்லையாவும் காதலிக்கின்றார்கள். ஆனால் வயிரவன் பிள்ளை செல்லையாவிற்குப் பெண்ணை கொடுப்பதில்லை என உறுதியாக முடிவு செய்து தனது கடையிலேயே வேலை செய்யும் இன்னொரு ஆளுக்குத் திருமணம் செய்து வைக்க முடிவு செய்து விடுகிறார். பக்குவமாக செல்லையாவிற்கு இந்தச் செய்தியைச் சொன்னாலும் இறுதியில் செல்லையா எதிர்த்து குரல் கொடுக்கின்றான். ஆனால் மரகதத்தின் கண்ணீரும் காமாட்சியம்மாள் கண்ணீரும் செல்லையாவின் உறுதியும் வயிரவன் பிள்ளை முன்னால் எடுபடவில்லை.
குடும்பத்தாரையும் தனது கடையிலேயே வேலை செய்யும் மாப்பிள்ளையும் அழைத்துக் கொண்டு இந்தியாவுக்குச் செல்ல ஆயத்தமாகிறார் வயிரவன் பிள்ளை. செல்லையா சிங்கப்பூருக்குப் புறப்படுகிறான். இதுதான் கதையின் சாரம்.
நாவலில் ஆங்காங்கே மலாய் சொற்கள் இடம்பெறுகின்றன. பினாங்கில் எனக்கு நன்கு பரிச்சயமான டத்தோ கிராமட் சாலையில் அவர்களது வீடு இருப்பது போன்று நூலாசிரியர் குறிப்பிடுவதும் ரிக்க்ஷாகாரர்களிடம் மலாய் மொழியில் பேசுவது போன்று சொல்லாடல் உரையாடல்கள் இடம் பெறுவதும் எனக்கு மலேசியாவில் இருந்து கொண்டு ஒரு காட்சியை நேரில் பார்ப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தியது.
செட்டி ஸ்ட்ரீட் என்று சொல்லப்படுகின்ற மார்க்கெட் ஸ்ட்ரீட், சூலியா ஸ்ட்ரீட் போன்ற சாலைகளில் செட்டியார்களின் கடைகள் பற்றிய விவரங்கள்... பணம் வட்டிக்குக் கொடுக்கும் தொழில் பற்றிய விரிவான விளக்கங்கள் போன்றவை இன்றும் அங்குள்ள லிட்டல் இந்தியாவை கண் முன்னே கொண்டு வந்து நிறுத்துகின்றன.
இரண்டாம் உலகப் போர் என்றால் ஜெர்மனியர்களும் பிரிட்டிஷ் அமெரிக்கா ஃபிரான்ஸ் கூட்டுப் படைகளும் தான் என நினைக்கும் நமக்கு மீண்டும் ஒருமுறை ஜப்பானியர்களின் இரண்டாம் உலகப் போர் அட்டூழியங்கள் இந்த நாவலின் வழி வரலாற்றுப் பதிவாகவும் அமைகின்றது.
எழுத்தாளர் ப. சிங்காரம் இதே காலகட்டத்தில் இந்தோனேசியாவின் மேடான் நகருக்குத் துணி வணிகம் செய்வதற்காகச் சென்றவர். அங்கே பெண் பார்த்து திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்தி வந்தவர். பிரசவ நேரத்தில் குழந்தையும் மனைவியும் இறந்து போகவே அதற்கு பின்னர் இரண்டாம் உலகப் போர் முடிந்து தமிழ்நாடு திரும்பினார். ஆனால் அவர் பலமுறை முயற்சி செய்தும் மீண்டும் மலாயா செல்ல முடியாத சூழல் நிகழ்ந்தது. இந்திய சுதந்திரத்திற்கு முன்னர் மிக இயல்பாக தமிழ்நாட்டிலிருந்து மலாயா சென்று வந்து கொண்டிருந்தனர் பல தமிழ் வணிகர்கள். அந்தச் சூழல் சுதந்திரத்திற்குப் பின் மாறியது. பல அரசாங்க ரீதியான கட்டுப்பாடுகள் இந்தப் பயணத்திற்கு முட்டுக்கட்டையாக மாறின. நூலாசிரியர் பின்னர் தமிழ்நாட்டில் உள்ளூர் பத்திரிக்கையில் பணியாற்றி ஓய்வு பெற்று காலமானார்.
இரண்டு நாவல்களை மட்டுமே எழுதி இருந்தாலும் ப. சிங்காரத்தின் இரண்டு நாவல்களுமே வரலாற்று பொக்கிஷங்கள். அன்றைய மலாயாவின் வரலாற்றை அறிந்து கொள்ள இந்த நூல்கள் வாசகர்களுக்கு மிகச்சிறந்த ஆவணங்களாகவும் திகழ்கின்றன. வாங்கி வாசிக்க தவறாதீர்கள்.
-சுபா
27.2.2024
குறிப்பு: இந்த நூல் காலச்சுவடு பதிப்பக வெளியீடாக வந்துள்ளது.

Friday, February 9, 2024

நியண்டர்தால் மனித இனத்திற்கும் காசநோய் இருந்தது



ஒரே இடத்தில் கண்டெடுக்கப்பட்ட ஒரு நியண்டர்தால், ஒரு நவீன மனிதர் என இரண்டு எலும்புக்கூடுகளின் உயிரியக்கவியல் பகுப்பாய்வு மற்றும் உருவவியல் தொடர்பான ஆய்வுசெய்யபட்டது.  அந்த இருவருக்கும் காசநோய் இருந்ததை இந்த ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது. நியண்டர்தால்கள் சுமார் 400,000 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றி சுமார் 40,000 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துபோன ஹோமினின்களின் அழிந்துபோன இனமாகும்.  இந்த மனித இனம் ஹோமோ சேபியன்ஸுடன் நெருங்கிய  தொடர்பு கொண்ட இனமாக அறியப்படுகிறது.


1932ஆம் ஆண்டில் வடக்கு ஹங்கேரியின் சபாலியுக் குகையில் கண்டுபிடிக்கப்பட்ட எலும்புகளின் கரிம ஆய்வு (கார்பன் டேட்டிங்), மத்திய வயது கொண்ட  ஒருவர் சுமார் 37,000 முதல் 38,000 ஆண்டுகளுக்கு முன்பு இறந்ததாகவும், மூன்று அல்லது நான்கு வயது குழந்தை ஒன்றின் எலும்பு எச்சங்கள் 33,000 முதல் 34,000 ஆண்டுகளுக்கு முன்பு இறந்ததாகவும் தெரியவந்தது. 


Szeged பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர் பால்ஃபி (Gyorgy Pálfi) தலைமையிலான ஆராய்ச்சியாளர்கள், மத்திய வயது கொண்ட நியண்டர்தால் மனிதனின்  முதுகெலும்பு மற்றும் குழந்தையின் மண்டை ஓட்டின் உட்பகுதியில் காசநோய் தொற்றினால் ஏற்படும் எலும்புப் புண்களைக் கண்டறிந்தனர். ஒவ்வொரு எலும்புக்கூடுகளிலிருந்தும் எலும்பு மாதிரிகள் காசநோயை ஏற்படுத்தும் பாக்டீரியாவும் மைக்ரோபாக்டீரியாவும் காசநோய் உள்ளதா என்ற வகையில் சோதிக்கப்பட்டது. கூடுதலாக, ஆராய்ச்சியாளர்கள் ஸ்போலிகோடைப்பிங் (spoligotyping - ஒரு டிஎன்ஏ மாதிரியில் காசநோயின் மரபணு வரிசைகளை அடையாளம் காண பயன்படுத்தப்படுகின்ற முறை) மூலம்  இதனை உறுதிப்படுத்தினர்.   

பைசன் போன்ற பாதிக்கப்பட்ட விலங்குகளை வேட்டையாடுவதும் உண்பதும் போன்றவற்றால் நியாண்டர்தால் மனித இனம் காசநோயால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்றும், அந்த நோய் அவற்றின் அழிவுக்கு பங்களித்திருக்கலாம் என்றும் பால்ஃபியும் அவரது ஆய்வுக் குழுவினரும் கருதுகின்றனர். 

https://www.livescience.com/archaeology/1st-known-tuberculosis-cases-in-neanderthals-revealed-in-prehistoric-bone-anaylsis


-சுபா

9.2.2024

Thursday, September 28, 2023

ஹுவான் ரோட்ரிகுஸ் காப்ரியல்லோ - கலிபோர்னியா




 புகைப்படத்தில் இருப்பவர் 16ஆம் நூற்றாண்டின் ஸ்பெயின் பேரரசின் அதிகாரியான ஹுவான் ரோட்ரிகுஸ் காப்ரியல்லோ (Juan Rodríguez Cabrillo). இவர் இன்றைய நாளில் தான் அமெரிக்காவின் கலிபோர்னியா நகரைக் ‘கண்டுபிடித்தார்’ என ஆவணங்கள் கூறுகின்றன.
ஐரோப்பியர்கள் ஒன்றை ஆவணப்படுத்தி பெயரிட்டு கூறுவதைத் தானே வரலாறு என்று உலகே நம்பிக் கொண்டிருக்கின்றது. அந்த வகையில் இந்தக் கண்டுபிடிப்பும் அமைகிறது.
அடிப்படையில் ஹுவான் ஸ்பெயின் அரசின் ஒரு ராணுவ வீரர் என்பதோடு புதிய இடங்களுக்குச் சென்று ஆய்வு செய்பவராகவும் திகழ்ந்தார். தற்போதைய குவாட்டமாலா, எல் சல்வடோர், நிக்காராகுவா ஆகிய பகுதிகளையும் அடையாளப்படுத்தியவர் இவர் என்பது கூடுதல் தகவல். இவர் போர்த்துகல் நாட்டின் ஒரு கிராமத்தில் பிறந்தவர். அக்காலகட்டத்தில் போர்த்துகலும் ஸ்பெயின் நாடும் ஒரு பேரரசின் கீழ இருந்த காலகட்டமாகும்.
இவர் மெக்சிகோவின் கடற்கரை நகரமான நாவிடாடிலிருந்து (Navidad) 1542ஆம் ஆண்டில் இன்றைய கலிபோர்னியா பகுதியின் சான் டியாகோ பகுதியை வந்தடைந்தார்.
இன்று சான் டியாகோ நகரில் அவருக்கு ஒரு சிலை வைக்கப்பட்டுள்ளது. 1913இல் இது கட்டப்பட்டது. இவரே கலிபோர்னியாவின் இப்பகுதிக்கு வந்த முதல் ஐரோப்பியர் என்றும் அறியப்படுகின்றார்.
இவர் அனேகமாக 3 ஜனவரி 1543 காலமானார் என்றும் அது இத்தகைய ஒரு பயணத்தில் தரையிறங்கிய போது கால் அடிபட்டு நோய்வாய்ப்பட்டு காலமானார் என்றும் அறியப்படுகின்றது.
-சுபா
28.9.2023