Thursday, July 11, 2019

தோழர் முகிலன்

தோழர் முகிலன் கண்டுபிடிக்கப்பட்டார் என்ற செய்தி ஆறுதல் அளிக்கின்றது. ஆயினும் அதனைத் தொடர்ந்து வருகின்ற பல்வேறு செய்திகள், குறிப்பாக அவர் காவல் வாகனத்தில் ஏற்றப்படும் காட்சியும் அவர்மேல் ஒரு பெண் பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு வைத்துள்ள செய்தி ஆகியவை பற்றி யோசிக்க வேண்டியுள்ளது.

தோழர் முகிலன் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடியவர். சூழலியல் மாசு அடைவதைத் தடுக்கும் வகையில் அவரது செயல்பாடுகள் இருந்தன. அதுமட்டுமன்றி அநியாயமாக சுடப்பட்டு கொல்லப்பட்டவர்களுக்காக அவர் குரல் எழுப்பினார். இது இப்படி இருக்க திடீரென்று அவர் மேல் பாலியல் குற்றச்சாட்டு என்பது ஏன் எழுகின்றது என்பது கேள்வி எழுப்புகின்றது.

பொது சமூகவெளியில் சேவையாற்றும் பலருக்கும் ஆண்- பெண் உறவு பற்றிய புரிதல் நிச்சயம் இருக்கும். பொதுவாகவே ஒரு பாலியல் குற்றச்சாட்டு என வரும் போது சமூகம் பெண்ணையே குறை சொல்லும் போக்கு அதிகம் இருக்கின்றது. ஆயினும் இன்றைய சூழலில் ஆண்களும் பெருமளவில் பாதிக்கப்படும் நிலையும் ஏற்படுவதைக் காண்கின்றோம்.

திருமணமான ஆண்களுடன் நெருக்கமான தொடர்பு வைத்துக் கொள்ளும் பெண்களும் இருக்கின்றனர் என்பதை நாம் மறுத்து விடமுடியாது. நெருக்கமான தொடர்பினால் ஏற்படும் மன உளைச்சளோ ஏமாற்றமோ.. அதற்கு இருவருமே தான் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும். ஆணிடம் மட்டுமே பொறுப்பை தள்ளி விட்டு தப்பிப்பது என்பது போலித்தனம்; ஏமாற்றுத்தனம். ஆயினும் வலியச் சென்று பொய் வார்த்தைகள் கூறி பெண்களின் இளகிய மணதை ஏமாற்றி வஞ்சிக்கும் ஆண்களும் அதிகம் இருக்கவே செய்கின்றனர் என்பதையும் மறுப்பதற்கில்லை.

தோழர் முகிலன் விசயத்தை எடுத்துக் கொண்டால், அவர் சமூக நலனிற்காகப் பாடுபட்டுக் கொண்டிருப்பவர் என்பதில் மாற்றம் ஏதும் கிடையாது. ஆக அவரது ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டமும் கொலைக்கு எதிரான குரலுமே அதிகம் பேசப்பட வேண்டும். அவர் மேல் சாட்டப்பட்டுள்ள பாலியல் பிரச்சனையல்ல.

அப்படியே தோழர் முகிலனே குற்றம்சாட்டும் பெண்ணை ஏமாற்றியிருந்தாலும் அது தோழர் முகிலன், அந்தப் பெண் மற்றும் முகிலனின் மனைவி ஆகிய மூவருக்கும் இடையிலான ஒரு விசயம். சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேடுமென்றால் அதன் படி அதனை செய்ய வேண்டுமே தவிர இந்தப் பாலியல் விவகாரத்தை வைத்துக் கொண்டு தோழர் முகிலனின் அளப்பறிய சமூக நலன் சார்ந்த பணியை ஒதுக்கி விட்டு அவரை குறை கூறிக்கொண்டிருப்பது சமூக நீதியன்று.

மக்களுக்காகப் பணியாற்றுவோர் மிகச் சிலரே. அத்தகையோருடன் ஆதரவாக இருந்து சமூக நலனுக்காக ஒருமித்த குரல் எழுப்ப வேண்டுமே தவிர குறை கூறி அவர்களை புண்படுத்த வேண்டாம் !

இப்படிச் செய்தாராமே .. அப்படி பட்டவரா இவர்...... என்றெல்லாம் விரலை நீட்டி பிறரை குறை சொல்லும் முன் நாம் எப்படி இருக்கின்றோம் என குறை கூறும் ஒவ்வொருவரும் யோசித்து நம்மை நாமே கேள்வி கேட்டுக் கொண்டால் நன்று!

-சுபா

No comments:

Post a Comment