Saturday, March 4, 2017

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 108

திருநெல்வேலியில் பத்துப்பாட்டின் முழுமையான நல்ல பிரதிகள் கிடைக்குமா என உ.வே.சா தேடித் திரிந்த செய்திகளை முந்தைய பதிவில் குறிப்பிட்டிருந்தேன். ஆயிரக்கணக்கான சுவடிகளை இந்த ஊர் கவிராயர்கள் வைத்திருந்தார்கள் என்பதனையும் அவையெல்லாம் இன்று எக்கத்தியாயின என்றும் என் அய்யத்தை எய்ழுப்பியிருந்தேன். இனி உ.வே.சாவின் பத்துப்பாட்டு தேடலுடன் நாமும் இணைந்து செல்வோம். 

திருநெல்வேலியில் அடையாளம் காணப்பட்ட கவிராயர்கள் வீடுகள் ஒவ்வொன்றிலும் ஏறிச் சென்று அறிமுகம் செய்து கொண்டு நெல்லையைப்ப கவிராயரும் உ.வே.சாவும் பத்துப் பாட்டு நூல்களைத் தேடினர். எங்கும் கிட்டவில்லை. இன்னும் ஒரு வீடுதான் இருக்கின்றது. அங்கு நிச்சயம் கிடைக்க வாய்ப்பிருக்கின்றது என்று நெல்லையப்ப கவிராயர் கூறியது சற்று உற்சாகம் அளித்தது. அவர்கள் செல்லவிருந்த வீடு அம்பலவாண கவிராயருடைய மாணாக்கர்களுள் சிறந்தவரான திருப்பாற்கடநாத கவிராயர் என்பவரது பேரனின் வீடு. முதல் நாளே சென்று தம்மை அறிமுகப்படுஹ்ட்திக் கொண்டனர் இருவரும். மறு நாள் காலையில் உ.வே.சா, நெல்லையப்ப கவிராயர் மற்றும் இந்து கல்லூரியில் தமிழாசிரியராக இருந்த அனந்த கிருஷ்ண கவிராயர் ஆகிய மூவரும் அந்த வீட்டிற்குச் சென்றனர். 

வீட்டிலுள்ள புத்தகங்களையெல்லாம் திருப்பாற்கடநாதன் எடுத்து வைத்தார். ஏறக்குறைய 500 சுவடிகள் இருந்தன. அதில் பெரும்பாலானவை அவர் பாட்டனார் திருப்பாற்கடநாத கவிராயர் எழுதியவை. அதில் பெரிய சுவடி ஒன்றை அனந்த கிருஷ்ண கவிராயர் எடுத்தார். அது திருமுருகாற்றுப்படை மற்றும் பொருநராற்றுப்படை எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. சுவடியை ஒன்றன் பின் ஒன்றாக அனைத்தையும் பார்த்தனர். பத்துப் பாட்டு முழுவதுமாக உரையுடன் இருந்தது. தேடி வந்த பத்துப்பாட்டின் நல்ல பிரதி கிடைத்ததை எண்ணி உ.வே.சாவின் அகம் மகிழ்ந்தது. இதனை உ.வே.சா இப்படிக் குறிப்பிடுகின்றார். 

"மிகவும் பழமையான ஏடு. எனக்கே அளவற்ற மகிழ்ச்சியும் பிரமையும் உண்டாயின. சுவடியின் இறுதியில், “ஸ்ரீ வைகுண்டத்திலிருக்கும் கவிராயரிடத்தே தொல்காப்பிய ஏட்டைக் கொடுத்துக் கொல்ல மாண்டு,,,,, வாங்கி வந்தேன்” என்று எழுதியிருந்தது. கணக்குப் பார்த்ததில் அது 150 வருஷங்களுக்கு முற்பட்டதென்றும் ஏடு எழுதிய காலம் அதற்கும் 200 வருஷங்களுக்கு முன்பு இருக்கலாமென்றும் தோன்றின. அப்பால் நிதானித்துக் கொண்டு மற்ற ஏடுகளைப் பார்த்ததில் சிந்தாமணியும், கொங்குவேண்மாக் கதையும், சில பிரபந்தங்களும் இருந்தன. கொங்குவேண்மாக்கதை முன்னே கூறிய பிரதியைப் பார்த்து எழுதியது. அதில் முதலுமில்லை; இறுதியுமில்லை. அப்போது 12 மணியாயிற்று. சொந்தக்காரரிடமிருந்து அந்தப் பிரதிகளை யெல்லாம் மிக்க நன்றியறிவுடன் பெற்றுக்கொண்டு ஜாகைக்கு வந்து சேர்ந்தேன். பத்துப் பாட்டு முழுவதுமுள்ள பிரதி கிடைத்ததில் என் மனம் மிக்க இன்பமடைந்தது." 

இந்தப் பத்துப்பாட்டு உரையுடன் கூடியதாக இருந்தது. மூலம் மட்டும் உள்ள பத்ஹ்டுப்பாட்டு கிடைக்குமா என தேடிப்பார்க்க வேண்டும் என்ற எண்ணம் உதிக்கவே உ.வே.சா இன்னும் சிலரது இல்லங்களுக்குச் சென்று தேட வேண்டும் என முயற்சியைத் தொடங்கினார். அப்போது கல்லாடத்துக்கு உரையெழுதிய மயிலேறும் பெருமாள் பிள்ளை என்னும் வித்துவானின் நினைவு உ.வே.சாவிற்கு வந்தது. அவரது சந்ததியினரிடம் நிச்சயம் பத்துப்பாட்டு நூல் மூலம் இருக்கலாம் என நினைத்து அவர்கள் இல்லத்தைத் தேடிச்சென்றார். 

அவர் பரம்பரையில் வந்த அதே பெயர் கொண்ட ஒருவரைக் கண்டுபிடித்தார்கள். அவரும் தாம் அந்த வித்ஹ்டுவானின் சந்ததியில் வந்தவர்தான் எனச் சொல்லி, ஆனால் தாம் ஆங்கிலப் படிப்பு படித்டு குமாஸ்தாவாகப் பணி புரிவதாகவும் சட்ட புத்தகங்கள் தாம் தம் வீட்டில் உள்ளன, தமிழ் நூல்கள் ஏதும் இல்லை எனச் சொல்லிவிட்டார். வீட்டில் நிச்சயம் எங்காகினும் இருக்கலாம் என உ.வே.சா மேலும் வற்புறுத்திக் கேட்க அவருக்கோ கோபம் வந்து விட்டது. இந்த உரையாடலை உ.வே.சா பதிந்திருக்கின்றார். 

“அப்படிச் சொல்ல வேண்டாம்; ஒன்று இரண்டாவது இருக்கலாம். தேடிப் பாருங்கள்” என்று நான் சொன்னேன். 
“நான் தான் வீட்டைச் சுத்தமாக வைத்திருக்கிறேனே. எனக்குத் தெரியாமல் எங்கே ஒளிந்து கொண்டிருக்கும், எங்கள் வீட்டிற்கு வர வேண்டாமென்று சொல்லவில்லை. வாருங்கள்; இருங்கள். தாம்பூலம் தருகிறேன். ஆனால் ஏடு என்ற பேச்சு மாத்திரம் எடுக்காதீர்கள். என்னிடம் இருந்தால் அல்லவா உங்களுக்குக் கொடுப்பேன்” என்று சொல்லி விட்டார். 
நான் மறுபடியும் ஏதோ சொல்ல வாயெடுத்தபோது, “எனக்கு வேலையிருக்கிறது; விடை கொடுங்கள், போய் வருகிறேன்” என்று சொல்லிச்சென்று விட்டார். 
“கல்லாடத்துக்கு உரை எழுதிய மயிலேறும் பெருமாள் பிள்ளை எங்கே? அவர் பரம்பரையினராகிய இந்த மயிலேறும் பெருமாள் எங்கே? இந்த வம்சம் இப்படியா ஆகவேண்டும்!” என்று நான் வருந்தினேன். 

உ.வே.சா எதிர்பார்த்ததோ வேறு. ஆனால் அங்கு நிகழ்ந்ததோ வேறு. 

தமிழறிஞர்கள் பலரது சந்ததியினர் தமிழ்ப்பற்று குறைந்து காணப்படுவதும் தமிழ் மொழிமேல் பற்றில்லாது ஆங்கில மோகம் கொண்டு செயல்படுவதும் வருத்தத்திற்குரியது. இத்தகைய பலரால் தான் பல ஏட்டுச் சுவடிகள் குப்பைகளாகப் புறக்கணிக்கப்பட்டு வீணாயின. தமிழ்க் களஞ்சியங்களின் அருமை அறியாத இத்தகையோர் தமிழுக்கு இழைத்தது பெரும் கேடு! 

தொடரும்..

சுபா

No comments:

Post a Comment