Monday, March 6, 2017

நாவாய் - கடல்சார் வரலாற்றாய்வுகள் - பகுதி 9

தமிழ்ப்பல்கலைக்கழக வெளியீடாக வந்திருக்கும் கட்டுரைத் தொகுப்பு நூலிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சில கட்டுரைகளைப்பற்றி என் பார்வையைப் பதிகின்றேன்.

இந்த நூலில் 12வது கட்டுரையாக இடம்பெறுவது முனைவர் சொ.சாந்தலிங்கம் அவர்களின் “ காயல்பட்டினம் - ஓர் இசுலாமிய வணிகத்தலம்” என்ற கட்டுரை.

பழையகாயல், புன்னைக்காயல், காயல்பட்டினம்  என் மூன்று நகரங்களாக இன்று இருக்கும் ஊர்கள் இணைந்து ஒரே ஊராக காயல்பட்டினம் என்ற பெயரில் வழங்கப்பட்டது. இதன் அருகில் இருக்கும் கொற்கை சங்க காலத்தில் புகழ்மிக்க நகரமாக விளங்கியது. 

முதன் முதலில் அரேபிய முஸ்லிம்கள் கிபி.633ல் காயலில் வந்து குடியேறுகின்றனர்.இக்காலத்தில் கடற்கரைப்பகுதியில் ஒரு மசூதி கட்டப்பட்டது. அது கடற்கரை மசூதி என்ற பெயரில் வழங்கியது.

அரேபியர்களின் 2வது குடியேற்றம் காயலில் கிபி.842ல் எகிப்திலிருந்து வந்த இசுலாமியர்களால் நிகழ்ந்தது இவர்களால் குப்தா பெரிய பள்ளி என்னும் மசூதி கிபி 842ல் கட்டப்பட்டது.

வாசப், இபின்பதுதா, மார்க்கோபோலோ ஆகிய வெளிநாட்டுப் பயணிகள் காயல்பட்டினம் துறைமுகத்தைத் தங்கள் குறிப்பேடுகளில் சிறப்பித்துக் கூறியிருக்கின்றனர். 

காலத்தால் முந்திய கடற்கரைப் பள்ளிவாசலில் (கிபி 640) இரண்டு கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன. ஒன்று ஜடாவர்மன் கால கல்வெட்டு (கிபி1190-1216). இப்பள்ளிவாசலுக்கு வழங்கப்பட்ட நிலக்கொடை இக்கல்வெட்டில் காணப்படுகின்றது.

கிபி900-1500 வரை காயல்பட்டினத்தில் இசுலாமியர் சிறப்பான வாழ்க்கையைப் பெற்றிருந்தனர். கிபி 1530 பின்னர் போர்த்துக்கீசியர்களின் வருகை இங்கே சலசலப்பை உண்டாக்கியது. முத்துக்குளிக்கும் தொழிலில் போட்டி உருவானது.

வகுதை, வகுதாரி என்ற பெயர்களும் காயல்பட்டினத்திற்கு உண்டு.

அஞ்சுவண்ணத்தார் என்ற வணிகக்குழு, எகிப்திலிருந்து முகமது கில்ஜியுடன் கிபி 850ல் வந்து தங்கிய பக்ரி, ஹாசிம், பருக்கி, உம்மையா, போர்வீரர் குழு ஆகிய ஐந்து குழுக்களுமே ஆவர்.

முதல் தமிழ் இசுலாமிய இலக்கியம் எனப்படும் மிராஜ்மாலை ஆலிப் புலவரால் எழுதப்பட்டது. கிபி 16ன் பிற்பகுதியைச் சார்ந்தது இந்த நூல்.

வரலாற்று அடிப்படையில் பல சான்றுகள் நிறைந்த நகரம் காயல்பட்டினம் என்பதை கட்டுரை ஆசிரியர் விரிவாக இக்கட்டுரையில் வழஙியுள்ளார்.

காயல்பட்டினம் சென்று இங்கு பல வரலாற்றுச் சான்றுகளைப் பதிய வேண்டும் என்ற எண்ணம் எழுகின்றது. அடுத்த எனது தமிழகப் பயணத்தில் இந்த ஊருக்குச் செல்ல வேண்டும்!


சுபா

No comments:

Post a Comment