Wednesday, March 25, 2015

ஜொஅன்னா ஆகிய போப்பாண்டவர் ஜோன்

ஏசு கிறிஸ்து சிலுவையில் ஏற்றப்பட்டு கொல்லப்பட்ட பின்னர் அவரது பூத உடலை சடங்குகளுடன் மண்ணில் புதைத்தனர்.   ஆனால் அவரது சிந்தனைகளும் எழுப்பிய கேள்விகளும் அவரது சீடர்கள் வழியாகவும் அவரது கருத்துக்களை ஏற்றுக் கொண்டு அக்கொள்கைகளைப் பறப்ப  செயல்பட்டோர்  பலர்.  படிப்படியாக இக்குழு ஐரோப்பா எங்கும் தம் கருத்துக்களை விரிவாக்க முயற்சிகளைத் தொடர்ந்து மேற்கொண்டது. அதில் ஒரு குழுவே பைபிளை அடிப்படையாக்கி ஏசு கிறிஸ்துவின் பெயரில் ஒரு மதத்தை நிறுவியது. 2ம் நூற்றாண்டு வாக்கில் இது மதம் என்ற நிலையிலில்லை. கருத்துக்களின் குவியல் என்பதாக மட்டுமே இருந்தது. இக்கருத்துக்களைப் பரவலாக்க நிறுவனப்படுத்துதல் அவசியம் என நினைத்த பலர் அர்ப்பணிப்புத் தன்மையோடு  தனது ஏனைய பொருளியல் அபிலாஷைகளை விடுத்து கிறிஸ்து தத்துவத்தைப் பரப்புவது ஒன்றே வாழ்க்கையின் குறிக்கோள் எனக் கொண்டு இயங்க ஆரம்பித்தது. அப்போதைய ரோமானியப் பேரரசு இந்த எண்ணத்திற்கு அடிப்படை அமைத்து தனது ராஜியத்தின் ஒரு முக்கிய நோக்கமாக இக்கொள்கைகளைப் பரப்புவதை ஏற்றுக் கொண்டது. அந்த வகையில் ரோமானியப் பேரரசு தனது எல்லைக்குட்பட்டிருந்த எல்லா இடங்களிலும் கிறிஸ்துவ மதத்தைப் பரப்பும்  வழிவகைகளை மேற்கொண்டது. அதில் மிக முக்கிய அங்கமாக தனது அரசின் ஒரு பகுதியாகிய வாட்டிக்கன் நகரை கிறிஸ்து மத்திற்கே விட்டுக் கொடுத்தது.

வாட்டிக்கன் சிட்டி ரோமானியப் பேரரசின், அதாவது இப்போதைய இத்தாலி நாட்டின்  மையத்தில் வீற்றிருக்கும் சிறு நகர். நடந்தால் ஒரு 4 மணி நேரத்திற்குள் சுற்றி வந்து விடலாம்.   1929ம் ஆண்டு முதல் தனி நாடு எனும் அங்கீகாரம் பெற்று இயங்கும் சிறப்புடையது இந்த நாடு. 44 ஏக்கர் நிலப்பரப்பும் ஏறக்குறைய 800 மக்களும் இந்த நாட்டிற்கு சொந்தம். வாட்டிக்கனின் மதத் தலைவர் என்ற பொறுப்புடன் நாட்டுத்தலைவர் என்ற பொறுப்பும் போப்பாண்டவருக்கு உண்டு.  வாட்டிகன் சிட்டிக்குத்  தனிக்கொடியும் உண்டு.

வாட்டிகன் கொடி


வாட்டிக்கன் ரோமன் கத்தோலிக்க மதத்தின் மையம்; ரோமன் கத்தோலிக்க மதம் பரவியிருக்கும் எல்லா நாடுகளுக்கும் சமயத் தலைநகரமாக விளங்குவது;  , இம்மதத்தைப் பின்பற்றும் அனைவருக்கும் சமயத் தலைவராக விளங்கும் போப் வீற்றிருக்கும் பீடமாகவும் வாட்டிகன் அமைந்துள்ளது.

வாட்டிக்கனின் உள் விவகாரங்களை விமர்சித்து சில நூல்கள் வந்தாலும் டான் ப்ரவுனின் டாவின்சி கோட் (DaVinci Code) நாவல் ஏற்படுத்திய தாக்கமும் அவரது அதனைத் தொடர்ந்த நாவலான ஏஞ்சல்ஸ் அண்ட் டீமன்ஸ் (Angels and Deamons) நாவல் ஏற்படுத்திய தாக்கமும் போல வேறெதுவும் ஏற்படுத்தியது எனச் சொல்ல முடியாது. டாவின்சி கோட்  நாவல் உண்மையுடன் கற்பனை கலந்த ஒன்று என்றாலும் அது ஏசு கிறிஸ்துவை வேறொரு பரிமாணத்தில் மக்களைப் பார்க்க வைத்தது.  இதுவரை மக்களுக்காக, மக்கள் சேவைக்காக தன் உயிர் நீத்தவர் என மட்டுமே கொண்டிருந்த பார்வையுடன் அவரும் ஒரு பெண்ணால் காதலிக்கப்பட்டதாகவும், காதலித்ததாகவும், இவர்களுக்கு வாரிசு இருந்தததாகவும் ஏசு கிறிஸ்துவின் பிம்பத்தை மாற்றும் கருத்துக்கு இடம் கொடுக்கும் அச்சந்ததியை  ரோமன் கத்தோலிக்க மத வெறியினர் கொன்று விடாமல் இருக்க நிகழ்ந்த விஷயங்களைத் தொட்டுச் செல்வதாகவும் துணிவாக தனது நாவல்களை டேன் ப்ரவுன் படைத்திருந்தார். இவரது நாவலைத் தொடர்ந்து மேலும் சில நூல்கள் இக்கருத்தை ஆராயும் பின்னனியில் வெளிவந்தன.

 இவ்வகை முயற்சிகள் வாட்டிக்கனின் புகழுக்கு எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தவே செய்தன. இதுவரை கேள்வியாக்கப்படாத சில சிந்தனைகள் கேள்விக்குட்படுத்தப்பட்டன;  தொடர்ந்து கேள்விகள் பல்வேறு வகையில் வெளிவருவதும் கருத்துப் பரிமாற்றங்கள் நடைபெறுவதும் சகஜமாகியிருப்பதையும் கடந்த் ஆண்டுகளில்  ஐரோப்பிய சூழலில் காண்கின்றேன்.

உதாரணமாக ஆப்பிரிக்காவின் பல ஏழை நாடுகளில் கத்தோலிக்க மதம் பரப்பும் செயல்பாட்டில் இறங்கியிருக்கும் பாதிரிமார்கள் எய்ட்ஸ் நோயிலிருந்து விடுபடுவதற்காக உலகச் சுகாதார நிறுவனம் வலியுறுத்தும் கருத்தடைச் சாதனங்களை எதிர்ப்பது கேள்விக்குள்ளாக்கப்பட்டது.  தொடர்ந்து ஜெர்மனி, ப்ரான்ஸ் ஆகிய நாடுகளில் தொலைகாட்சி செய்திகளில் இவை பேசப்பட்டன.

பெண் புனித அன்னையருக்கான இடம் எப்போதும் இரண்டாம் பட்ஷம் என்பதுவும் இம்மதத்தில் ஒரு பெண் தலைமைத்துவத்தை பெற முடியாது என்பது சட்டமாகவும் இருப்பது. இதுவும் கேள்விக்குறியாக்கப்பட்டு ஐரோப்பாவின் பல நாடுகளில் தொடர்ந்து விவாதிக்கப்பட்டு வரும் ஒரு விஷயமாகவே இன்றும் இருக்கின்றது.  இந்தப்  பிரச்சனைகளுக்கு எரியும் தீயில் எண்ணை ஊற்றுவது போல மேலும் ஒரு விஷயம் அமைந்தது. அதாவது போப்பாண்டவர் பட்டியலில் ஒரு பென்ணும் தலைமைப் பீடம் வகித்து சிலகாலங்கள் இருந்தார் என்பதுவும் இது மறைமுகமாக நடந்த ஒன்று என்றும் குழந்தை பிறக்கையில் அவர் இறந்தார் என்ற வகையில் அமைந்த Pope Joan என்ற திரைப்படம். இத்திரைப்படத்திற்கு ஆதாரமாக இருந்த கதை பல நூற்றாண்டுகளாக கதைகளாக உலா வந்தாலும், 13ம் நூற்றாண்டிலேயே குறிப்புக்களில் அமைந்தாலும், இந்தத் திரைப்படம் வந்த பிறகு இது உண்மையோ எனும் கேள்வி அதிகரித்திருக்கின்ற நிலையை மறுக்க முடியாது.

அமெரிக்க நாவலாசிரியர்  Donna Woolfolk Cross எழுதிய நாவலின் அடிப்படையில்  உருவாக்கப்பட்ட படம் இது. முழு விபரங்களையும் விக்கியில் இப்பகுதியில் காணலாம். http://en.wikipedia.org/wiki/Pope_Joan
நானும் இந்தப் படத்தைக் காணும் வாய்ப்பைப் பெறறபோது கதையின் தன்மை, திரைப்படம் என அனைத்தாலும் ஈர்க்கப்பட்டு ஒன்றிப்போய் பார்த்தேன். படம் பார்த்த  பிறகும்  பல நாட்கள் இக்கதை மனதை ஆக்கிரமித்துக் கொண்டுதானிருந்தது.

இக்கதையில் குறிப்பிடப்படும் ஜொஅன்னா பெண் என்று தன்னை அடையாளம் காட்டிக் கொண்டு  போப்பாண்டவர் வடிவத்தில் ஆட்சி செலுத்தவில்லை; மாறாக தன்னை ஒரு ஆணாகவே கத்தோலிக்க பள்ளியில் காட்டிக் கொண்டு கல்வி கற்று பல்வேறு காரணங்களினாலும் வாய்ப்புக்களாலும் அவரது அசையா இறை நம்பிக்கையாலும், அர்ப்பணிப்புத் தன்மையாலும் வாட்டிக்கன் நிர்வாகத்தில் இடம் பெற்று பின்னர் போப்பாண்டவர் பதவிக்கு வருவதாக கதை அமைந்திருக்கின்றது.

இந்த நாவல் மட்டுமன்றி இந்தச்செய்தியைச் சொல்லும் பல நூல்கள் வெளிவந்திருக்கின்றன. உதாரணமாக Catholic Encyclopedia, Pope Joan
The Female Pope: The Mystery of Pope Joan by Rosemary and Darroll Pardoe ஆகியவற்றில் இவரைப் பற்றிய குறிப்புக்களை காணமுடியும்.




இன்றைய ஜெர்மனி, அன்றைய ரோமானியப் பேரரசின் ஒரு பகுதியாக இருந்த சமயத்தில் நிகழ்ந்த சம்பவமாகக் கூறப்படுவது இச்சம்பவம். ஜெர்மனியின்  ஒரு சிற்றூரில் பிறந்து வளரும் ஜொஅன்னா எனும் பெண் தன் வயது இளம் பெண்களைப் போலல்லாது கல்வியில் நாட்டம் கொண்டு அதற்காக ஏங்கி தவிக்கின்றாள். அவளது தந்தையோ தீவிர பழமைவாதி. தனது மகன் மட்டும் கல்வி கற்கவேண்டும்; மகள் படிக்கக்கூடாது எனக் கடுமையாகச் சட்டம் போட்டு வைத்திருக்கின்றான்.  ஆனால் ஜொஅன்னா தனது தமையன் குருவிடம் பாடம் கற்கும் சமயத்தில் ஒளிந்திருந்து கேட்டு பாடம் படித்து தன் அறிவின் பரப்பை நாளுக்கு நாள் விரிவாக்கிக் கொண்டே வருகின்றாள்.  ஒரு நாள் தந்தைக்கு இந்த விஷயம் தெரிந்து விட கடுமையாக அடித்து தண்டனை கொடுக்கும் போது குரு ஜொஅன்னாவின் தீவிரத்தைக் கண்டு தந்தையை ஒரு வழியாகச் சமாதானப் படுத்தி ஜொஅன்னாவை குருகுல வாசத்திற்கு அழைத்துச் செல்கின்றார். இங்கிருந்து இவரது மறுபிறவி தொடங்குகின்றது.

நூல்கள் மட்டுமன்றி இணையத்திலேயே பல பக்கங்களில் போப்பாண்டவர் ஜொஅன்னா பற்றிய தகவல்களை வாசிக்க முடிகின்றது. இப்படத்தின் ட்ரெய்லர் யூடியூபில் கிடைக்கின்றது. இதனை  http://www.youtube.com/watch?v=AKF4Lmt3NsM என்ற பக்கத்தில் காணலாம்.

ஜொஅன்னா ஆகிய போப்பாண்டவர் ஜோன்  ஒரு உண்மை நிகழ்வா என நான் கூற முடியாவிட்டாலும் வாசிக்கக் கிடைக்கின்ற தகவல்கள் இல்லை என்று மறுக்க முடியாத, கேள்விக்கு விடைகாணும் முயற்சிகளுக்கு மேலும் கதவுகளைத் திறப்பதாகவே அமைந்திருக்கின்றது. மதமும் மதம் சார்ந்த விஷயங்களும் மிகக் கவனமாகக் கையாளப்பட வேண்டியவை என்ற வகையில் மட்டுமே எனது தனிப்பட்ட சிந்தனைகளைக் கிடைக்கின்ற தகவல்களின் அடிப்படையில் இக்கட்டுரையில் தந்திருக்கின்றேன். ஆய்வுலகம் பறந்தது. மேலும் பல உண்மைகள் வெளிவரலாம். அல்லது இவை போன்ற விஷயஙகள் கதைகள் தாம் என முடிவாக்கப்பட்டு  வரலாற்று நூல்களில் இடம் பெறாமலும் போகலாம்.

சுபா​

No comments:

Post a Comment